Sunday, February 28, 2010

சுஜாதா அவார்ட்ஸ்- அறிமுக விழா

கவிஞர் மனுஷ்ய புத்திரன் சுஜாதா அவார்ட்ஸ் தர போவதாக அறிவித்துள்ளார். இதற்கான அறிமுக விழா நியூ வூட்லண்ட்ஸ் ஹோட்டலில் சுஜாதா நினைவு நாளான பிப்ரவரி 27, சனி கிழமை மாலை நடந்தது. பல வி. ஐ. பி கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு மினி தொகுப்பு இதோ:

மனுஷ்ய புத்திரன் வரவேற்று பேசினார். ஆறு பிரிவுகளில் சுஜாதா விருதுகள் தர போவதாக சொன்னார்: அவை:

சிறந்த சிறுகதை நூல்
சிறந்த கவிதை நூல்
சிறந்த கட்டுரை நூல்
சிறந்த ப்ளாக்
சிறந்த நாவல்
சிறந்த சிறு பத்திரிக்கை

மார்ச் 31, 2010 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மே மாதம் மூன்றாம் தேதி சுஜாதா பிறந்த நாள் அன்று விருதுகள் வழங்க படும் என்றும் சொன்னார். விருதுகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.10,000 பரிசு என்று சொன்னதாக நினைவு (தவறு எனில் பின்னூட்டத்தில் கூறுங்கள்)

அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். .. மனுஷ்ய புத்திரன் விருது, விழா, சாப்பாடு என நிரம்பவே செலவும் மெனக்கெடவும் செய்கிறார்!! பெரிய விஷயம் இது!!

பதிவர்கள் தங்கள் கவிதை தொகுப்பையும் ப்ளாக் பற்றிய தகவல்களையும் மார்ச் 31-க்குள் மனுஷ்ய புத்திரனுக்கு அனுப்பி வையுங்கள்..

இனி விழாவில் மற்றவர்கள் பேசியது குறித்து..

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் நடராசன்

"நான் வெளி நாடு சென்றிருந்த போது , அங்கிருந்த ஒரு புகழ் பெற்ற புத்தக கடையில் இருந்து என்ன புத்தகம் வாங்கலாம் என சுஜாதாவிற்கு தொலை பேசி மூலம் கேட்டேன்.சுஜாதா அங்கு மட்டும் கிடைக்கும் புத்தகத்தை சரியாக சொன்னார். அவற்றை வாங்கினேன். சுஜாதா குடும்பத்துடன் நான் நீண்ட கால நண்பன். சுஜாதா கிட்ட தட்ட எனது சகோதரர் போல.."


ராஜீவ் மேனன்:

"கண்டு கொண்டேன் படம் டிசம்பரில் வசனம் எழுத ஆரம்பித்தோம். காலை முழுதும் வசனம் எழுதிட்டு மாலை கர்நாடக சங்கீதம் கேட்போம். ஜனவரி மாதம் வந்ததும் சேப்பாக்கம் ஸ்டேடியம் போய் கிரிக்கெட் மேட்ச் பார்ப்போம்; பின் வசனம் எழுதுவோம்; இப்படி இயக்குனர்- வசன கர்த்தா என்றில்லாமல் ஒரு அப்பா- மகன் போல இருந்தோம்; இப்போது கூட நல்ல ராகம் கேட்கும் போது சுஜாதாவிடம் பகிர தோன்றுகிறது; சச்சின் 200 ரன் அடித்த போது சுஜாதாவிற்கு போன் செய்து பேச தோன்றுகிறது".

சந்திர சேகர் ( பெண்டா மீடியா இயக்குனர்)

"நான் கம்பெனி ஆரம்பித்த போது சுஜாதா அவசியம் அதில் இருக்க வேண்டும் என நினைத்தேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான விஷயங்களை மிக எளிதாக எழுத அவர் தான் சரியான நபர் என நினைத்தேன். எங்கள் அனைத்து அனிமேஷன் படங்களுக்கும் தமிழுக்கு மட்டுமல்ல ஆங்கிலத்துக்கும் அவர் தான் வசனம் எழுதினார். ஆங்கிலம் கூட மிக அற்புதமாக எழுதினார். நான் சினிமா, தியட்டேர் என ஆரம்பித்த போது வீட்டார் உட்பட யாரும் ஆதரிக்கலை; ஆனால் சுஜாதா மட்டும் இவ்ளோ பேர் எதிர்த்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என encourage செய்தார்"

திருமலை (சுஜாதாவின் தம்பி)

வெளி நாடுகளில் கூட பல எழுத்தாளர்கள் இருந்தாலும் சுஜாதா போல் சிறுகதை, நாவல், வசனம் என பல பிரிவுகளில் அசத்தியவர் யாரும் இருந்ததாக எனக்கு தெரியலை; அத்தோடு பல விதமாய் எழுதினால் ஆழமாய் எழுத முடியாது என்பார்கள்; ஆனால் சுஜாதா பல பிரிவுகளில் ஆழமாய் எழுதினார்; அப்படி பட்ட மனிதரை நம் மருத்துவர்களால் காப்பாற்ற முடியாதது எனக்கு வருத்தமே; குறைந்தது அந்த மூளையை எடுத்து preserve செய்திருக்க வேண்டும்!

நடிகர்/ இயக்குனர் பார்த்திபன்:

"பல பிரச்சனைகளை சுஜாதாவிடம் தான் அட்வைஸ் கேட்பேன்; கிறுக்கல்கள் புத்தகம் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பிரச்சனை ஆனபோது கூட பேச சுஜாதா இல்லையே என feel செய்தேன். இந்த விருதுகளுக்கு ஆகும் செலவில் மனுஷ்ய புத்திரனுக்கு தேவையான உதவிகள் (sponsor) செய்ய தயார்"

இயக்குனர் ஷங்கர் பேசும் போது தனது படங்களில் அவர் எழுதிய வசனங்களில் தனக்கு பிடித்த வசனங்களை ( அந்நியன், இந்தியன், சிவாஜி) பற்றி பேசினார். மேலும் ஸ்டோரி டிஸ்கஷனில் பல முறை எப்படி எடுத்து செல்வது என தடுமாறிய போது சுஜாதா எப்படி உதவினார்; எப்படி motivate செய்தார் என கூறினார். எந்திரனுக்கும் சுஜாதா வசனம் எழுதி தந்ததாகவும் அதிலிருந்து ஒரு காட்சியும் சொன்னார். ரஜினி வேலை வேலை என வீட்டை மறந்து இருப்பாராம். ரொம்ப நாள் கழித்து வீட்டுக்கு தாடியுடன் வர, அவர் அம்மா " என்னடா லீவில வந்த ரிஷி மாதிரி இருக்கே" என்பாராம் !

இயக்குனர் வசந்த் சுஜாதாவை தான் சந்தித்து பேச பல முறை முயன்று தோற்று, கடைசியில் பெங்களூரில் பார்த்து, ஒன்னரை மணி நேரம் பேசியதை நகைச்சுவையாக ஒரு சினிமா போல், சஸ்பென்ஸ் உடன் பேசினார்.

மதன் விழா இன்னும் பெரிய அளவில் நடத்தலாம் என்றும் மனுஷ்ய புத்திரன் மற்ற பிரபலங்களிடம் இதற்கான உதவிகள் கேட்டு பெறலாம் என்றார். ஜூனியர் விகடன் புத்தகத்தில் சுஜாதாவின் "ஏன் எதற்கு எப்படி" வர துவங்கிய கதையை பகிர்ந்து கொண்டார்.

மேலும் எழுத்தாளர் இந்திரா பார்த்த சாரதி, கவிஞர் ஞான கூத்தன் போன்றோரும் பேசினர்.

விழாவில் பார்த்த பதிவர்கள் :

டோண்டு ராகவன் (பெரிய சைஸ் நோட்டு வச்சி எழுதிட்டு இருந்தார்; இங்கு இல்லாத மற்ற தகவல் அங்கு நீங்கள் பாக்கலாம்)

கேபிள் (எப்படிய்யா சுஜாதாவை சீரியஸ் ரைட்டர் இல்லைன்னு சொல்லலாம் என என் சட்டையை பிடிச்சு உலுக்காத குறை தான்)

நரசிம் (நாலு நாள் தாடியில் தல வித்யாசமா இருந்தார்; கேட்டா Month end; வேலை அதிகம் என்றார்)

புது மாப்பிள்ளை அதிஷா மற்றும் லக்கி

பைத்திய காரன் (மிக சீரியஸா கவனிச்சார்)

சங்கர் (நானும் இவரும் விழா முடிந்து திரும்ப வர, வண்டி பங்கசர்; இனிமே என்னை வண்டியில் ஏத்துவார்ங்குறீங்க ?)

டம்பி மேவி (ரொம்ப சீக்கிரமே எஸ்கேப்)

சுரேஷ் கண்ணன் (முதல் தடவை பார்த்தேன் இந்த சிநேகமான மனிதரை)

மேலும் அதியமான், டாக்டர் ப்ருனோ மற்றும் பலர். அட சொல்லலையே சாரு கூட வந்திருந்தார்!!

திருமதி சுஜாதாவிடமும் , அவர் மூத்த மகனிடமும் சற்று நேரம் பேசி விட்டு நானும் சங்கரும் விடை பெற்றோம்.

ஒரு எழுத்தாளர் இறந்து இரண்டு வருடம் ஆன பின்னும் இத்தனை பேர் அவர் நினைவாக குழுமி அவரது நினைவுகளை பகிர்ந்தது, மிக நெகிழ்வான உணர்வுகளை தந்தது!!

Saturday, February 27, 2010

எழுத்தாளர் சுஜாதாவுடன்.. சில அனுபவங்கள்

இப்பதிவு யூத் விகடனின் குட் ப்லாக்ஸ் பகுதியில் இடம் பெற்றது!


*******************************************

எழுத்தாளர் சுஜாதா எழுத்தை என் அண்ணன்கள் மூலம் எட்டு வயதில் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க, வாசிக்க விருப்பமும் ஆச்சரியமும் கூடி கொண்டே தான் போனது. ஒவ்வொரு காலத்திலும் பால குமாரன், பிரபஞ்சன், தி.ஜா என favourite எழுத்தாளர்கள் மாறி கொண்டே இருந்தனர். ஆனால் சுஜாதா இறக்கும் வரை அவர் எழுதிய எதுவும் அலுக்கவே இல்லை.



சுஜாதா ஒரு முறை சொன்னார்: " நான் துணிகளை லாண்டரிக்கு போட்டு, அதன் விபரம் சீட்டில் எழுதி வைத்திருந்தால், அதை கூட எடுத்து சென்று பிரசுரம் செய்து விடுவார்கள்" என்று. உண்மை தான். இந்த மனுஷன் அந்த விவரத்தை கூட சுவாரஸ்யமாக தான் எழுதி வைத்திருப்பார் !!

வாழ் நாளில் நான் நேரில் பார்க்க விரும்பிய ஒரே பிரபலம் சுஜாதா தான்!! அவருடனான எனது சில அனுபவங்கள் குறித்து இந்த பதிவு அவரது நினைவு நாளை முன்னிட்டு...

நான் சட்ட கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது கல்கியில் மத்யமர் என்ற சிறுகதை வரிசை வந்து கொண்டிருந்தது. அதில் பல controversy ஆன கதைகள்.. இவை பற்றி பிரசுரமாகும் விமர்சனங்களுக்கு சுஜாதா கையெழுத்திட்ட மத்யமர் புத்தகம் அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தனர். சுஜாதா கையெழுத்திட்ட புத்தகம் வாங்கவே விமர்சனம் எழுதினேன். பிரசுரமும் ஆனது. புத்தகம் வந்த பின், சுஜாதாவிற்கு நன்றி சொல்லி இரு பக்க கடிதம் எழுதினேன்.

சுஜாதா பதில் எழுத மாட்டார் என்பது பொதுவாய் அனைவரும் அறிந்தது. ஆனால் நம்ப முடியாமல் சில நாளில் பதில் வந்தது.

அன்புள்ள மோகன் குமார்,

உங்கள் கடிதம்; வாசகர்களுக்கு பெரும்பாலும் நான் கடிதம் எழுதுவதில்லை; ஆனால் அதற்கான காரணங்களை ஒத்தி வைத்து விட்டு, உங்களுக்கு பதில் எழுத தூண்டியது உங்கள் கடிதத்தில் விரவியிருந்த ஸ்நேகம். நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயர் ஆனதும் மறுபடி எனக்கு எழுதுங்கள்

அன்புடன்

சுஜாதா


இந்த கடிதத்தை எத்தனை முறை வாசித்திருப்பேன்!! சில வரிகளில் பல விஷயம் உணர்த்தினார் வழக்கம் போல்..

முதல் வரியை கவனித்தீர்களா? " உங்கள் கடிதம்" அவ்வளவு தான் "கிடைத்தது" இல்லை!! வார்த்தை சிக்கனம்!!

அடுத்த வரியில் யாருக்கும் எழுதாத நான் உனக்கு எழுதுறேன் என என்னை மகிழ வைத்து விட்டார்!!

கடைசி வரி தான் மிக முக்கியம்.. "நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயர் ஆனதும் .." இப்போ படிப்பது தான் உன் வேலை என எவ்வளவு அழகாய் சொல்லிட்டார்! இது என ஆதர்சம் மூலம் வந்ததால், நான் சீரியாசாகவே எடுத்து கொண்டேன்!

ஆனால் சுஜாதா சொன்னது போல் நான் லாயர் ஆகலை.. படிக்கும் போதிலிருந்தே கம்பனிகளில் லீகல் அட்வைசர் ஆக செல்லும் எண்ணம் தான்.பின் கூடவே Company Secretary course-ம் படித்து விட்டு வேலைக்கு வந்தேன். துவக்கத்தில் இருந்த கம்பெனியிலேயே சுஜாதா ஒரு Director!!

Company Secretary-தான் Board Meeting-கள் நடத்த வேண்டும். இதற்கான நோட்டீஸ் அனுப்புவது, மீட்டிங்குகளில் எடுக்கப்படும் முடிவுகளை (Minutes) பதிவு செய்வது இவை Company Secretary வேலையில் அடங்கும். எனவே சுஜாதாவை Board Meeting-கில் அருகிலிருந்து பார்க்க போகிறேன் என ஆர்வமாக இருந்தேன். ஆனால் நான் வேலை பார்த்த கம்பனிகளில், இந்த ஒரு கம்பனியில் மட்டும் தான் Company Secretary-ஐ வெளியே வைத்து விட்டு Board meeting நடத்துவார்கள்!! நான் இல்லாத மீட்டிங்கில் என்ன நடந்தது என நான் வெளியே இருந்து Minutes எழுத வேண்டும்!!

இந்த காலங்களில் அவருடன் Board meeting குறித்து போனில் பேசியிருக்கிறேன். அவர் எங்கள் கம்பெனி வந்து, நேரே மீட்டிங் ரூம் செல்வதை பார்த்துள்ளேன். அவ்வளவு தான்.

இதே காலத்தில் நண்பன் லக்ஷ்மணன் இறந்த பின் அவனது கவிதைகளை தொகுத்து புத்தகமாக போடும் முயற்சியில் நண்பர்கள் இறங்கினோம். ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்தோம். நான் புத்தகதிற்கான முன்னுரை, அட்டை படம் போன்றவை பிரபல எழுத்தாளர்/ ஓவியர்களிடம் வாங்கும் வேலையில் இருந்தேன்.

முன்னுரைக்கு கல்யாண்ஜியை அணுகி இருந்தோம். அவரும் எழுதி தந்திருந்தார். இந்நிலையில் சுஜாதா இருக்கும் அதே flat-ல் இருந்த வெங்கடேஷ் என்ற எனது Colleague, அவரிடம் நாங்கள் நண்பன் இறந்த பிறகு அவனது கவிதைகளை தொகுத்து வெளியிடுவது பற்றி கூறியிருக்கிறார். சுஜாதா மிக ஆர்வமாகி "அந்த கவிதைகளை வாங்கி வாருங்கள்; படிக்கணும்" என கூறியிருக்கிறார். வெங்கடேஷ் மூலம் லக்ஷ்மணன் கவிதைகள் சுஜாதாவை அடைந்தன. சுஜாதா சும்மா படிக்க தான் கேட்கிறார் என நினைத்திருக்க, அவரோ அற்புதமாக இரு பக்கம் கவிதைகள் பற்றி எழுதி அனுப்பி விட்டார். ஒரு பக்கம் அதை படித்து மகிழ்ச்சி. மறு பக்கம் கல்யாண்ஜியிடம் வேறு வாங்கி உள்ளோமே என குழப்பம். கல்யாண்ஜி தந்ததை முன்னுரையாக போட்டு விட்டு சுஜாதா தந்ததை கடைசியில் வெளியிட்டோம்.

கல்யாண்ஜிக்கு அப்போது இதில் ரொம்ப வருத்தம். "சுஜாதாவிடம் முன்னுரை வாங்குவதானால் என்னிடம் ஏன் வாங்கணும்?" என கோபித்தார். "சுஜாதாவிடம் நாங்களாக போகலை; அவரே கேட்டு வாங்கி எழுதி தந்தார்" என்றால், அவர் நம்ப தயாராய் இல்லை. "உங்கள் எழுத்தை முன்பும் அவருடையதை பின்னரும் வெளியிட்டோம்; புத்தகம் துவக்கத்தில் நன்றியில் கூட உங்கள் பெயரை தான் முன்னர் போட்டோம்" என்ற போதும் அவருக்கு கோபம் குறையலை.

புத்தகத்தை நேரில் தந்து நன்றி சொல்ல சுஜாதா இல்லம் சென்றேன். சுஜாதாவை நேரில் சந்தித்து பேசியது ஒரே முறை அது தான். புத்தகம் வாங்கி கொண்டு, " இந்த வார குங்குமத்தில் லக்ஷ்மணன் கவிதைகள் பத்தி எழுதிருக்கேன்; படிங்க" என்றார். " சரி" என்றேன். சட்ட கல்லூரியில் படிக்கும் போது அவரிடிமிருந்து வந்த கடிதம், அவர் மீதான எனது பிரேமை எதுவும் சொல்ல தோன்ற வில்லை. இதற்கு முன் பால குமாரனை பார்த்து மனம் நொந்த பிறகு பிடித்த எழுத்தாளரை நேரில் பார்த்து பேச கூடாது என்ற எண்ணம் அதிகமாகி இருந்தது (இது பற்றி பின் தனியே எழுதுகிறேன்). என்றாலும் எதுவும் எதிர் பார்க்காமல் அவர் தந்த முன்னுரைக்கு நேரில் நன்றி சொல்வதே மரியாதை என்பதால் சென்றிருந்தேன்

எங்களுக்குள் பேசி கொள்ள ஏதுமில்லாதது போல் இருந்தது அந்த சில நிமிடங்கள்...உடன் கிளம்பி வந்து விட்டேன்.

சுஜாதா இறந்த போது இரு நாட்கள் திரும்ப திரும்ப மனதில் பல நினைவுகள். அவர் இல்லம் மாறி விட்டதா என தெரிய வில்லை. ஏனோ அவர் இறந்த பின் சென்று பார்க்க வில்லை.

**********
எத்தனையோ பேருக்கு ஒரு ரோல் மாடலாக இருந்தவர்.. எனக்கு தெரிந்து இவருக்கு இருந்த அளவு ரசிகர்கள், வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும் இருக்காது என நினைக்கிறேன்.

பதிவுலகம் பற்றி சுஜாதாவிற்கு ஏனோ அதிக விருப்பம் இல்லை. இதனாலேயே கூட அவர் இருக்கும் வரை நான் ப்ளாக் பக்கம் வரவேயில்லையோ என்னவோ!!

தொடக்கத்தில் இவர் வசனம் எழுதிய சினிமா படங்கள் தோல்வி அடைந்த போது நான் வருந்தியிருக்கிறேன். ஆனால் பின் தமிழின் "The Best" இயக்குனர்களான மணி ரத்னம் & ஷங்கர் தங்கள் அனைத்து படங்களுக்கும் இவரையே அணுகினர்.இவர்களுடன் சேர்ந்து திரை உலகையும் கலக்கினார் வாத்தியார்!

பல பெரிய விஷயங்களை மிக எளிதாக எழுதி செல்வார். ஜெய காந்தன், புதுமை பித்தன் போல அவர் மிக தீவிரமான எழுத்து எழுதியதில்லை. ஏனோ light reading தான் இவரது கோட்டையாக இருந்தது!ஆனால் ஒரு சமூகத்தையே தன் கை பிடித்து அழைத்து சென்றார். பல நல்ல கவிஞர்களை, எழுத்தாளர்களை அறிமுகபடுத்தினார்!

தமிழின் மீது எத்தனையோ பேருக்கு ஆர்வம் வர காரணமாக இருந்தது சுஜாதாவின் எழுத்துக்கள்!

சுஜாதா.. வாழ்க நீ எம்மான்!!

Thursday, February 25, 2010

வானவில் - OMR ரோடு ..சச்சின்!!

ஒரு நாள் கிரிக்கட்டில் ஒரு நாள் இருநூறு ரன் எடுப்பார் என்ற இமாலய எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் சச்சின்!! ஒரு quality opposition டீமுக்கு எதிரே இந்த சாதனை நிகழ்த்த பட்டுள்ளது. 147 பந்துகளில் சச்சினின் 200 ரன்கள் ஒரு chanceless இன்னிங்க்ஸ் !! பெண்கள் ஒரு நாள் கிரிக்கட்டில் பெலிண்டா கிளார்க் என்பவர் 229 ரன்கள் எடுத்துள்ளார்!! ஆனால் இந்த விஷயமே இப்போது தான் தெரிய வருகிறது!! ஆண்கள் கிரிக்கட்டும் பெண்கள் கிரிக்கட்டும் பொதுவாக ஒப்பீடு செய்ய படுவது இல்லை. எனவே சச்சினின் இந்த சாதனை எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. இதே பிப்ரவரி 24 அன்று ("ஜெ" அம்மா பொறந்த நாளுப்பா இது!!) 22 ஆண்டுகளுக்கு முன் சச்சின் - காம்ப்ளி ஜோடி 664 ரன்கள் எடுத்து உலக சாதனை செய்தது!! இதன் மூலம் தான் சச்சின் முதலில் limelight-க்கு வந்தார்!! அதே பிப்ரவரி 24 இந்த உலக சாதனையும்!!




இந்தியன் என்றும் சச்சினின் fan என்றும் சொல்லி கொள்ள பெருமை படும் நிகழ்வு இது !!


படித்ததில் பிடித்தது


** I am the Master of my fate and
    I am the Captain of my soul. - W.C.Henley (English Poet)

**We are only responsible for our sufferings and ill feelings – Tagore

சென்னை ஸ்பெஷல்

சென்னையின் OMR ரோட்டில் சமீபத்தில் பயணித்தீர்களா ? வாவ்!! அது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்!! அடையார் முதல் சிறுசேரி வரை Six way High Road அமைக்கபடுகிறது. இதற்கான பணிகள் தற்சமயம் முக்கால் வாசி தூரம் முடிந்து விட்டது என நினைக்கிறேன். குறைந்தது மூன்று பேருந்துகள் ஒரே நேரத்தில் பக்கத்துக்கு பக்கத்தில் செல்லலாம். எதிர் பக்கமும் அதே போல் மூன்று பேருந்துகள் வரலாம். (அதானே Six way lane என்கிறீர்களா? சரிங்க சாமி!!) நடுவில் முழக்க அழகான செடிகள்.. பச்சை வண்ணம் நெஞ்சை அள்ளுகிறது. சிக்னல் தவிர மற்ற இடங்களில் நிற்கும் அல்லது ஸ்பீட் குறையும் அவசியம் இல்லை. இந்தியாவின் மிக சிறந்த IT கம்பனிகள் அனைத்தும் இந்த ரோட்டில் அலுவலகம் வைத்துள்ளது. Infosys, TCS, Cognizant.. You name it, we have it. சென்னையின் முகவரியாக OMR சாலை இருக்க போகிறது !! இந்த பக்கத்தில் காலி மனை ஒன்று ஒரு கோடி ரூபாய்க்கு மேல் போய் விட்டது. இதற்கு முன் இந்த இடங்களை வைத்திருந்தவர்களில் பலர் விவசாயம் செய்தவர்கள்.. இன்றைக்கு கோடீஸ்வரர்கள் ஆகி அவ்வளவு பணம் என்ன செய்வது என்று குழம்பி, வேறு எங்கோ செட்டில் ஆகி விட்டனர் என்கிறார் என் நண்பர் ஒருவர் .!!.

இந்த வார சட்ட சொல்: Compoundable offence

சில குற்றங்கள் பெரிய அளவில் தீவிர தன்மை இல்லாத போது, தவறு செய்தவர் அதனை ஒப்பு கொண்டு பெனால்டி மட்டும் பணமாக கட்டி விட்டு வழக்கிலிருந்து விடு படலாம். இந்த வகை குற்றங்கள் Compoundable offence என அழைக்க படுகின்றன. நிறுவனம் செய்யும் தவறுகளுக்கு அதன் இயக்குனர்கள் அல்லது Company Secretary (என்னை போன்ற ஆட்கள்) மீது பொதுவாக வழக்கு தொடரப்படும். ஆயினும் இவற்றில் பெரும்பாலானவை Compoundable offence என்பது சற்றே ஆறுதலான விஷயம்!!

மனதை வருத்திய விஷயம்

கம்யுனிஸ்ட் தலைவர் திரு வரதராஜன் அவர்கள் மரணம் பல அதிர்ச்சி அலைகளையும் கேள்விகளையும் எழுப்பி செல்கிறது. இவர் பற்றி பதிவுலகிலும் பலர் எழுதி இருந்தனர். குறிப்பாய் மாதவராஜ் மற்றும் உண்மை தமிழன் ஆகியோரின் இடுகைகள் மிக உணர்ச்சி கரமாய் இவருடன் நேரில் பழகிய அனுபவங்களை பகிரும் வண்ணம் இருந்தன. திரு வரதராஜன் போன்ற highly matured person ஏன் தற்கொலை முடிவை எடுத்தார் என்பது மனதை உறுத்துகிறது. இந்த சம்பவத்தில் திரு வரதராஜன், அவர் குடும்பத்தினர், கம்யுனிஸ்ட் கட்சி என அனைவர் மீதும் கோபமும் வருகிறது. பரிதாபமாகவும் உள்ளது. எனக்கு கம்யுனிச சித்தாந்தத்தில் பெரும் ஈடு பாடு இல்லா விட்டாலும், கம்யுனிஸ்ட் தலைவர்கள் பலர் வாழும் எளிமையான வாழ்க்கை ஆச்சரியம் தரும் விதத்தில் இருக்கும். திரு வரதராஜன் ஒரு மிக சிறந்த மனிதராகவும் எளிமையான தலைவராகவும் இருந்திருக்கிறார். ஆழ்ந்த இரங்கல்களும், வருத்தங்களும்..

இன்னும் சில நாட்களில் இந்தியாவில் வேர்ல்ட் கப் ஆட்டங்கள்

அடுத்த மாதம் துவங்கும் IPL-ஐ நாம் சப்போர்ட் செய்வது இருக்கட்டும்; இன்னும் சில நாட்களில் இந்தியாவில் துவங்கும் ஹாக்கி World cup -ஐயும் ஆதரிப்போம். இது நடக்க போவதே டிவியில் சேவாக் மற்றும் பிரியங்கா சோப்ரா விளம்பரத்தில் வந்து சொல்லி தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இந்தியாவின் தேசிய விளையாட்டு உள்ளது.. ம்ம்...

அய்யா சாமி

பெட்ரோல் பங்கில் காத்து அடிச்சிருக்கீங்களா நீங்க? இதென்ன கேள்வி? யார்தான் அடிக்காம இருப்பா? பொதுவா டூ வீலரில் ரெண்டு பேருக்கு ஒரே நேரத்தில காத்து அடிப்பாங்க. இதில் ரெண்டாவது ஆள் ஓசி காஜ் மாதிரி முதல் ஆளோட சேர்ந்து சீக்கிரம் அடிச்சிட்டு போய்டுவார். நம்ம அய்யா சாமிக்கு எப்பவும் இந்த முதல் ஆளா தான் வாய்க்குது.. லேட் ஆகுது !!

இதில் ரெண்டாவது ஆள் வண்டியில் சில நேரம் சரியா காத்து வேற ஏறாம சதி பண்ணும். அய்யா சாமிக்கு இன்னும் லேட் ஆகும். என்னிக்குமே அவருக்கு இந்த ரெண்டாவது ஓசி காஜ் ஆளா இருக்க சான்ஸ் கிடைப்பதே இல்லை..

Tuesday, February 23, 2010

வேலைக்கு செல்லும் பெண்கள்..

இப்பதிவு யூத் விகடனின் குட் ப்லாக்ஸ் பகுதியில் இடம் பெற்றது!

*******
ந்த தலைப்பில் ஒரு பதிவு எழுத ரொம்ப நாளாகவே எண்ணம். இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது. என் மனைவி மற்றும் அக்கா வேலைக்கு செல்பவர்கள். மேலும் நெருங்கிய உறவுகளில் ஹவுஸ் வைப், பார்ட் டைம் வேலை பார்ப்பவர்கள் என பல  வித பெண்களையும்  கவனித்துள்ளேன்.  இப்படி கவனித்ததன் தொகுப்பே இக்கட்டுரை.
*******************************************

முதலில் ஒரு கணவன், மனைவி, குழந்தை என்ற சிறு குடும்பத்தில் அதே தலைப்புகளில் மூவரும் எப்படி பாதிக்க படுகிறார்கள் என பார்த்து விடலாம்.

கணவன்

இருவர் வேலை பார்ப்பதால் குடும்பத்துக்கு பண வரவு அதிகரிக்கிறது. சொந்த வீடு, கார் என ஒரு வசதியான வாழ்க்கை வாழ முடிகிறது.

நிறைய ஆண்களுக்கு "நம் வேலை என்றாவது போய் விட்டால்?" என்ற பயம் உண்டு. இந்நிலையில் மனைவி வேலை பார்ப்பது சற்று தைரியம் தருகிறது. வேலை போனால் கூட சில மாதம் எப்படி குடும்பம் நடத்துவது என்ற கவலை வேண்டாம் என்று !

வீட்டு வேலை அதிகரிக்கிறது. கடந்த ஜெனரேஷன் வரை சமையல் போன்றவை பெண்கள் விஷயம் என நினைத்த ஆண்கள் இன்று வீட்டு வேலை அவசியம் செய்ய வேண்டி உள்ளது. இந்த விஷயத்தில் வீட்டுக்கு வீடு பெரிதும் மாறுபடுகிறது. ஒரு பக்கம் சமையல், வீட்டு வேலை, குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருதல் போன்றவை பெண்கள் செய்ய வேண்டியது, அவர்கள் வேலைக்கு போனால் என்ன, போகாட்டால் என்ன என்ற ரீதியில் இருக்கும் ஆண்களும் உள்ளனர். (நல்ல வேலை இவர்கள் குறைவான சதவீதம் என நினைக்கிறேன்). காலை நேரத்தில் முழு சமையலும் தானே முடித்து (மனைவி குழந்தையை கிளப்பும் வேலை மட்டும் செய்வார்) மனைவிக்கு டிபன் பாக்ஸ்யில் போட்டு தந்து பின் அலுவலகம் செல்லும் ஆண்களும் உள்ளனர் (இவர்களும் மிக குறைவே). கணவன் ஓரளவு வீட்டு வேலையை பங்கிட்டாலும், பெரும்பாலான முக்கிய வேலை பெண்கள் தான் செய்கிற குடும்பங்கள் தான் நிறைய உள்ளன. (எங்கள் குடும்பம் உள்ளிட்ட பெரும்பாலான வீட்டில் இந்த கதை தான்).

முன்பு இருந்தது போல் ஆண்கள் பெண்கள் மீது அதிகாரம் (dominate)  செய்ய முடிவதில்லை. பொருளாதார சுதந்திரம் வந்த பின், பெண்களை சமமாக நடத்துவது இயல்பான ஒன்றாக ஆகி வருகிறது (இன்னும் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வில்லை என்பது வேறு விஷயம்..)

மொத்தத்தில் கணவனை பொறுத்த வரை வீட்டு வேலை ஓரளவு அதிகரிப்பது தவிர பெரிய பாதிப்பு இல்லை.

குழந்தை(கள்)

சென்ற தலை முறை குழந்தைகள் பார்க்காத விளையாட்டு பொருட்கள், உடை போன்றவை அவர்களுக்கு கிடைக்கின்றன. அவர்கள் பெரிதும் தவற விடுவது தாயின் அரவணைப்பு தான். “ஒன்று அம்மா வேலைக்கு போகிறார். வீட்டுக்கு வந்தால் அடுப்படி” , வளர்ந்த குழந்தை எனில், “ இருக்கும் கொஞ்ச நேரம் பள்ளி பாடம் பற்றி பேசுகிறார்” . நமது தலை முறையில் தாயிடம் கிடைத்த அன்பும், அரவணைப்பும் இந்த தலை முறை குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை! இது ஒரு வருத்தமான விஷயம் தான்.

அந்த குடும்பத்துடன் யாராவது ஒரு தாத்தா, பாட்டி இருந்தால் தாயிடம் கிடைக்காத அன்பும் கவனமும் தாத்தா, பாட்டியிடமிருந்து ஓரளவு கிடைக்கிறது.

ஆனால் பாதி குடும்பங்கள் தான் தாத்தா, பாட்டியை தங்கள் வீட்டிலேயோ அல்லது அவர்கள் வீட்டுக்கு அருகிலோ வசிக்கின்றனர். பலர் கிரீச் , வீட்டோடு  வேலை ஆள் என்று சமாளிக்கன்றனர்.

குழந்தைகள் இவை எல்லாவற்றுக்கும் பழகி விடுகின்றனர் என்பது தான் ஆச்சரியமான விஷயம் !!அவர்களுக்கு அம்மா வேலைக்கு போவதால் கிடைக்கும் சுகங்களும் வேண்டும், இன்னொரு பக்கம் அம்மா வீட்டோடு இருந்தால் நல்லது என்றும் பலர் நினைக்கின்றனர்.

மனைவி

மிக முக்கியமான நபர். இவரை மட்டும் பிளஸ் மைனஸ் என அலசுவோம்

பிளஸ்

அவர்களுக்கு கிடைக்கும் பொருளாதார சுதந்திரம் . (ஆனால் பல நேரம் அதனை அவர்களால் முழுதாய் அனுபவிக்க முடிகிறதா என்பது ஒரு கேள்வி குறி தான்.)

அவர்கள் படித்த படிப்பு வீணாகாமல் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

பாதி வாழ்வில் கணவன் இறந்தாலோ அல்லது மண முறிவு ஏற்பட்டாலோ சுயமாய் வாழ முடிகிறது.

வேலைக்கு போகும் பெண்கள் சற்று மூச்சு விடவும், நிம்மதியாய் மனம் விட்டு சிரிக்கவும் முடிவது அலுவலகத்தில் தான். வீட்டில் அதற்கு நேரம் இல்லை.

படித்து விட்டு வீட்டில் சும்மா இருப்பதால் சிலருக்கு வரும் மன அழுத்ததிலிருந்து தப்பிக்கிறார்கள்

மைனஸ்

முக்கிய மைனஸ்.. பெண்கள் வேலை பார்ப்பதால் அவர்கள் வேலை பளு மிக மிக மிக அதிகம் ஆகிறது. பெண் என்பதால் பெரிய சலுகை அலுவலகத்தில் கிடைப்பதில்லை. (அதிக பட்சம் அலுவலகம் முடிந்து ஓரளவு சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பலாம்; இதுவும் சில கம்பனிகளில் நடப்பதில்லை). வீட்டில் கணவன் நினைத்தால் வேலை செய்வான்; இல்லா விட்டால் டிவி பார்ப்பான்; பேப்பர் படிப்பான்; மிக தாமதமாக எழுந்து நேரே கிளம்பி செல்வான். ஆனால் பெண் மட்டும் ஒவ்வொரு நாளும் விதி விலக்கே இல்லாமல் சீக்கிரம் எழுந்து அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும். இது அவர்களுக்கு மிக பெரிய உடல் மற்றும் மன சுமையை தருகிறது.

பொதுவாகவே பெண்களுக்கு மூட்டு வலி போன்றவை நாற்பது வயதுக்கு மேல் வந்து விடுகிறது. அவர்களுக்கு கால்சியம் குறை பாடு மிக எளிதாய் வரும். இதனால் எலும்பு தேய்வு, பல பாகங்கள் வலி நிறைய பேருக்கு வருகிறது. அதீத வேலையால் சீக்கிரம் பல நோய்கள் வருவது ஒரு பெரிய பிரச்சனை

நான் கவனித்த வரை வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு செல்பவரை பார்த்து " இவரை போல் நாம் போக முடியலையே!" என ஏங்குகின்றனர். வேலைக்கு போகும் பெண்களில் சிலர் வீட்டில் இருக்கும் பெண்களை பார்த்து இவர்கள் போல் நாம் இருக்க முடியலையே என நினைக்கின்றனர்.

****** *****************

என்னை பொறுத்த வரை, வீட்டில் யாரேனும் பெரியவர்கள் இருந்தால் பெண்கள் வேலைக்கு செல்வது எளிது. பெரியவர்கள் கூட இருப்பது, இன்றைய நிலையில் பல காரணங்களால் கஷ்டமான ஒன்றாக உள்ளது. ( சில நேரம் வயதானவர்களுக்கும் சேர்த்து வேலை செய்வதால், வேலைக்கு செல்லும் பெண்ணின் வேலை இன்னும் அதிகரிக்கிறது!)

பெரியவர்கள் உடன் முடியாத நிலையில் பெண்கள் முழு நேர வேலையாக இல்லாமல் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மணி நேரங்கள் செய்ய கூடிய வேலை செய்வது பல விதங்களில் பயன் தரும். பெண்கள் வேலைக்கு செல்வதால் கிடைக்கும் பெரும்பாலான பலன்கள் கிடைத்து விடும். மேலும் அவர்களுக்கு சற்று ஓய்வும் குழந்தைகளை பார்த்து கொள்ளவும் முடியும்.

**

பெண்கள் வேலைக்கு செல்வதை தவிக்கவே முடியாத இன்றைய சூழலில், ஆண்கள் அவர்களின் வேலைகளில் முடிந்தவற்றை தாங்கள் எடுத்து உதவுவது இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்க முடியும்! இது பற்றிய புரிதலும் இதனை நோக்கிய ஆண்களின் செயல்களும் இன்றைய அவசிய தேவை !!

Saturday, February 20, 2010

பிடித்த புத்தகம்-ராபின் சர்மாவின் The Monk who sold his Ferrari

ராபின் ஷர்மா எழுதிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் வாசித்துள்ளீர்களா? அவரது bestseller புத்தகம் " The Monk who sold his Ferrari". இது நாவல் வடிவில் வெளி வந்த ஒரு சுய முன்னேற்ற நூல்.

ஜூலியன் என்ற பிரபலமான வழக்கறிஞர் ஒரு நாள் கோர்ட்டில் ஹார்ட் அட்டாக் வந்து சரிகிறான். அதன் பின் சில மாதங்கள் கழித்து ஜூலியனை சந்திக்கும் கதை சொல்லி ஆச்சரிய பட்டு போகிறான். தற்போது மிக தெளிவாக, fresh ஆக உள்ளான் ஜூலியன். இது எப்படி என ஆச்சரியப்பட்டு கேட்கிறான். தன்னுள் வந்த மாற்றத்தை ஜூலியன் ஒரு நாள் இரவு முழக்க கதை சொல்லியிடம் பகிர்கிறான். இது தான் கதை.

ஜூலியன் தான் முன்பு வாழ்ந்த வாழ்க்கைக்கும் தற்போது ஒரு புரிதல் வந்த பின் வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வித்யாசத்தையும், தான் புரிந்த விஷயங்களையும் சொல்லிச்செல்லும் போது நாமும் அறிய பல விஷயங்கள் உண்டு. இந்த புத்தகத்தில் நான் ரசித்த சில கருத்துகளை இப்போது பகிர்கிறேன். தமிழில் மொழி மாற்றம் செய்வது சிரமம் ஆகும் போது, மேஜர் சுந்தர் ராஜன் பாணியில் தமிழ் + ஆங்கிலத்தில் சொல்லி செல்வேன். பொருத்தருள்க.

**************************

** வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. ஒவ்வொரு பின்னடைவும் சில படிப் பினைகளை தருகிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலோ, அலுவலக வாழ்விலோ நாம் காணும் ஒவ்வொரு தோல்வியும் நாம் மேலும் முன்னேற உதவவே செய்கிறது.

** உங்கள் கடந்த காலத்தை எக்காரணம் கொண்டும் வெறுக்காதீர்கள். அதனை ஒரு ஆசிரியராக இணைத்து அரவணையுங்கள் (Never regret your past. Rather, embrace it as the teacher that it is")

** உங்கள் மனதில் கெட்ட, தீய எண்ணங்களுக்கு முடிந்த வரை இடம் தராதீர்கள். அவை வந்தாலும் உடனே துரத்தி விடுங்கள். ஒரு சாதாரண மனிதன் மனதில் ஒரு நாளைக்கு 60,000 எண்ணங்கள் வருகின்றன. இதில் 95% ஏற்கனவே வந்த சிந்தனைகளே!! இதில் எதிர் மறை சிந்தனைகள் திரும்ப திரும்ப வந்தால் அதனால் அவர்கள் வாழ்க்கை முறை நிச்சயம் பாதிக்க படும்.

** வாழ்க்கையில் தவறுகள் என்றே ஏதும் கிடையாது. அனைத்தும் பாடங்களே!! நெகடிவ் அனுபவம் என்று ஏதுமில்லை. ஒவ்வொன்றும் நாம் கற்று கொள்ளவும் மேலும் பலம் பெறவும் உதவுபவையே. வலியை விட சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது.

** உலகில் எந்த விஷயமும் இரு முறை உருவாகிறது. முதலில் மனிதனின் மனதில் அடுத்து நிஜத்தில். (Things are created twice, first in the workshop of the mind and then only then in the reality).

** நீங்கள் ஒரு மிக பெரிய லட்சியம் அல்லது ப்ராஜக்ட்டுக்காக ஈடுபடும் போது உங்கள் மனம் தன் எல்லைகளை தாண்டி பயணிக்கிறது. அனைத்து சக்திகளும் ஒரு முக பட, பல விஷயங்களும் உங்களுக்கு உதவ, உங்களை பற்றி, உங்கள் திறன் பற்றி நீங்கள் அப்போது தான் உணர்கிறீர்கள்.


** உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து மீண்டும் உங்கள் இளமை காலத்தை இன்னொரு முறை வாழுங்கள். வாழ்க்கையில் என்ன தான் சாதித்திருந்தாலும் உங்கள் குடும்பத்தாரோடு நீங்கள் போதுமான நேரம் செலவழிக்கா விட்டால் நீங்கள் என்ன சாதித்தும் பயன் இல்லை

** ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது நீங்கள் அன்று செய்தது என்ன, உங்கள் இலக்கு நோக்கி சரியாக செல்கிறீர்களா என்று யோசியுங்கள். இந்த நேரம் நீங்கள் கற்கும் விஷயம் நிறையவே இருக்கும்.

** சிலர் குறைவாக வேலை செய்து பிற நேரம் ஓய்வு எடுப்பதே சந்தோஷமாக இருக்கும் வழி என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையான சந்தோசம் ஒரு விஷயத்தை நாம் achieve செய்வதில் தான் உள்ளது. தொடர் மகிழ்ச்சி உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் விடாமல் பயணிப்பதில் தான் கிடைக்கும்.

** வாழ்கையில் முன்னேற தூங்கும் நேரத்தை குறைக்க வேண்டும். சராசரி மனிதனுக்கு ஆறு மணி நேர தூக்கம் போதுமானது.

** எந்த விஷயங்கள் செய்ய பயமும் தயக்கமும் கொள்கிறீர்களோ, அந்த விஷயங்களை தைரியமாக செய்ய துவங்குங்கள். கொஞ்ச காலத்தில் அந்த வேலை நன்றாகவே செய்ய துவங்கவதுடன், உங்கள் தன்னம்பிக்கையும் அதிகமாகியிருக்கும்.

************

ராபின் சர்மாவே இன்னொரு புத்தகத்தில் சொல்வது போல் சுய முன்னேற்ற புத்தகத்தில் சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களும் நாம் பின் பற்ற வேண்டும் என்பது இல்லை. ஒரு புத்தகத்தில் ஒரே ஒரு விஷயம் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ப கிடைத்தால், அதுவே கூட போதும்.

ராபின் சர்மாவின் இந்த புத்தகத்தில் ஒன்றல்ல, பல விஷயங்கள் அவ்வாறு உண்டு. Personally சொல்ல வேண்டுமெனில் இந்த புத்தகம் படிக்கும் முன் சில கடந்த கால நிகழ்வுகளுக்காக என் மீதே எனக்கு நிறைய கோபம் இருந்தது.
ஆனால் "Never regret your past. Rather, embrace it as the teacher that it is" என்ற வரிகள் படித்த பின் எனது குற்ற உணர்ச்சி பெரிதும் குறைந்தது; கடந்த காலம் என்பது ஒரு ஆசிரியர் என உணர்ந்தது இந்த புத்தகம் வாசித்த பின் தான்!!

அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். இயலும் போது வாசியுங்கள்!!

Friday, February 19, 2010

வானவில்-சூப்பர் சிங்கர் ஜூனியர் & நூறு பாலோயர்கள்!!

டிவி பக்கம்: சூப்பர் சிங்கர் ஜூனியர்

இந்த வாரம் முழுதும் சூப்பர் சிங்கர் ஜூனியரில் வாலண்டைன்ஸ் டே கொண்டாடினார்கள். இதில் காதலித்து மணமுடித்த சிலரை கூப்பிட்டு, குட்டி பசங்க முன் அவர்கள் பொன் மொழிகளை உதிர்த்தார்கள். சாருலதா மணி என்ற பாடகியும் அவர் கணவரும் அத்தனை குட்டி பசங்க முன் கட்டி பிடித்து முத்தம் குடுத்து.. ச்சே!! பசங்களுக்கு என்னென்ன கத்து குடுக்கிறது!! நான் காதலுக்கு எதிரி அல்ல.. ஆனால் எந்த வயதில் எதை செய்யணும் என்ற வரை முறை தெரியாமல் ஆடணுமா? ஆணோ பெண்ணோ 12 -13 வயதில் வயதுக்கு வந்து விடுவதால் உடனே பிள்ளை பெத்துக்க முடியுமா? அது போல் காதலும் வர வேண்டிய வயதில் வந்தால் போதும். ஏற்கனவே சின்ன பசங்களுக்கு மீடியாவில் உள்ள பல சேனல்கள் காமம் பற்றி சொல்லி தர, குழந்தைகள் நிகழ்ச்சியில் இப்படி செய்தது மனசுக்கு கஷ்டமாக இருந்தது!

பிடித்த விளம்பரம்

Airtel -க்கான விளம்பரம். Holidays -ல் செல்லும் குட்டி பையன் தன் அப்பாவின் டெலிபோன் எண்ணை நண்பர்கள் அனைவருக்கும் தரும் காட்சி.. அந்த குட்டி பையன் செம cute. நம்ம வீட்டுல உள்ள மாதிரி, விளம்பரத்தில் அப்பா ஏதும் பேசாமல் சும்மா பார்க்க மட்டும் செய்ய, அம்மாதான் பேசுவாங்க. நாக்கை ஓரமாக துருத்தி கொண்டு குட்டி பையன் குறும்பாய் ஒரு பார்வை பார்ப்பான். So nice ! பல முறை போடப்பட்டாலும் எங்கள் வீட்டில் அனைவரும் ஒரு புன்னகையோடு இந்த விளம்பரம் பார்ப்போம் !!

கொல்கத்தா - பஸ் விபத்தும், கிரிக்கட் வெற்றியும்

கொல்கத்தாவில் இந்தியா டெஸ்டில் வெற்றி பெற்ற அதே வியாழன் அன்று, மேற்கு வங்காளத்தில் ஒரு பஸ் விபத்தில் 30 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். முதல் செய்தி மகிழ்ச்சி என்றால் அடுத்த செய்தி துயரம். தமிழகத்திலேயே கூட ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்துகள் பெருகி கொண்டே போவதாக தான் நேற்று படித்த செய்தி கூட செல்கிறது. பாத்து வண்டி ஓட்டுங்க நண்பர்களே..

வாரம் ஒரு சட்ட சொல் Accused Vs Convict

Accused என்றால் ஒரு Criminal வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.
Convict எனில் நீதி மன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை பெறப்பட்டவர்.
பட்ட பகலில் ஒரு கொலை செய்தவர் ஆனாலும் கூட, நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்க படும் வரையில் அவர் Accused தான். அவரை Convict என்று சொல்ல முடியாது.

நன்றி நண்பர்களே

நமது ப்ளாகின் Followers எண்ணிக்கை நூறை தாண்டியிருக்கிறது. இது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. ஒரு வருடத்துக்கு முன்பே இந்த வலை பதிவு துவங்கினாலும், அடுத்த பத்து மாதங்களில் பத்து பதிவுகள் தான் எழுதினேன். நவம்பர் 2009-ல் தமிழ் மணம் மற்றும் தமிளிஷில் இணைத்த பின் தான் நிறைய பேர் படிக்கவும் பின்னூட்டம் இடவும் துவங்கினர். கிட்டதட்ட நூறு நாள்களில் நூறு பேர் Followers ஆகியிருக்கிறார்கள் என்றால் அது ஆச்சரியமாக தான் உள்ளது. என்னை பொறுத்த வரை ஒரு விஷயம் பிடித்தால் கட்டாயம் உடனே சொல்வேன். (பிடிக்கா விட்டால் அதே சூட்டில் சொல்வேனா என்றால் பல நேரம் இல்லை). ஒவ்வொரு மனிதனும் பாராட்டு மற்றும் recognition -க்கு ஏங்கவே செய்கிறான்.. இந்த ப்ளாகை தொடரும் அந்த 105 நண்பர்களுக்கும் பின்னோட்டம் இடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல !!

சென்னை ஸ்பெஷல்

தி, நகர் வெங்கட் நாராயணா ரோடில் " திருப்பதி திருமலா தேவஸ்தானம்" சென்றுள்ளீர்களா? திருப்பதி போக முடியாதவர்கள் இங்கு சென்று வரலாம்!! பெருமாள் பெரிய அளவில் அழகாக காட்சி தருவார். ஒரு அருமையான கோவில். சனி கிழமைகளில் கூட்டம் எக்கசக்கம்!! இங்கிருந்து திருப்பதி தரிசனத்துக்கு கூட செய்யும் வசதி இருந்தது. தற்போது உள்ளதா தெரிய வில்லை. போலவே முன்பு ஒரிஜினல் திருப்பதி லட்டு இங்கேயே கிடைத்தது. அதுவும் தற்போது உள்ளதா என தெரியலை. யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் எழுதுங்கள்..

அய்யா சாமி

அய்யா சாமி வீட்டில் பெரும்பாலும் அவர் தான் பால் காய்ச்சுவார். பாலை அடுப்பில் வச்சிட்டு பக்கத்திலேயேவாங்க அவ்ளோ நேரம் நிக்க முடியும்? அவரும் முடிஞ்ச வரை அங்கேயே தான் இருப்பார். இருந்தாலும் அவர் கொஞ்சம் நகரும் போது தான் பால் பொங்கி ஊத்தும்.. வாரத்தில் ஒரு சில நாளாவது இப்படி பால் காய்ச்சிறார் நம்மாளு.. அப்புறம்??? அவர் காய்ச்சப்படுவார்....

Wednesday, February 17, 2010

கேபிளின் ரெண்டு ஷாட் டகீலா: புத்தக விமர்சனம்

பதிவரும் நண்பருமான கேபிள் சங்கர் தன் முதல் சிறுகதை நூலை வெளியிட்டுள்ளார். சிறுகதைகள் மட்டுமின்றி ப்ளாகில் அவர் எழுதுவதும், சினிமா பார்ப்பது,  அதற்கான விமர்சனங்கள் எழுதுவது என அனைத்தும் அவர் இயக்க போகும் படத்துக்கான பயிற்சியாக தான் செய்கிறார் என நினைக்கிறேன்.






தொகுப்பில் மொத்தம் 13 கதைகள் உள்ளது. இயக்குனர் ஷண்முக பிரியன் முன்னுரை தந்துள்ளார். நூலை கேபிள் " பிரம்மாவும் குருவுமான தந்தைக்கு" சமர்பிக்கிறார்.

இனி சில கதைகள் பற்றி:

ஆண்டாள் கதை ரொம்ப அழகு. தல மூணாவதிலேயே தனது வேலைகளை ஆரம்பிச்சிருக்கார்!! ஒரு சின்ன பையன் ( Adolescent? ) சொல்கிற மாதிரி கதை சென்று அழகாய் முடிகிறது. எனக்கு பிடித்த ஓர் கதை.

ஒரு காதல் கதை இரண்டு க்ளைமாக்ஸ்.. குட்டி சினிமா காட்சி போல் உள்ளது.

ரெண்டு ஷாட் டகீலா கதையில் அந்த கடைசி வரி அதிர்ச்சி ஊட்டுகிறது. அது எப்படி அவ்ளோ தண்ணி அடிக்கும் நபருக்கு வயது அப்படி இருக்கும்?

திருமணமான பெண் இன்னொரு நபருடன் தகாத உறவு வைத்திருப்பது பற்றி ஓர் கதை (என்னை பிடிக்கலையா?). கதையின் இறுதியில் " உன் கணவன் இருக்கும் போது ஏன் என்னிடம் வந்தாய்" என அந்த நபர் கேட்க, அந்த பெண் சொல்லும் பதில் அனைத்து ஆண்களும் உணர வேண்டிய ஒரு விஷயம். ஆரம்பத்தில் மனைவியின் அழகு, ரசனை எல்லாம் ரசிக்கும் கணவன் பின் அவளை முழுதும் ignore செய்வதே இத்தகைய உறவுகளுக்கு காரணம் என சொல்லாமல் சொல்கிறார். உண்மையிலேயே இந்த கதையில் அனைவருக்கும் ஒரு மெசேஜ் இருக்கு.

நண்டு கதை நமக்கு இப்படி ஆனால் நம் குடும்பம்? என்ற கேள்வியை நம்முள் எழுப்பி செல்கிறது.

ராமி சம்பத் துப்பாக்கி டிபிகல் விறு விறு கதை. “முத்தம்” ஆச்சரியமாய் உள்ளது இப்படியும் நடக்குமா என்று !

காமம் கொல் சர்வேசன் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது என நினைவு. செம வேகமான கதை.. சுஜாதா பாணி தெரிகிறது

துரை நான் ரமேஷ் சார் கதை திரை உலகில் பெண்கள் எப்படி நடத்தபடுகிறார்கள் என அப்பட்டமாக காட்டுகிறது. அந்த பெண்ணின் மன வலி பாதியிலேயே நமக்கும் பரவுகிறது. (கடைசி பாராவில் ரமேஷ் சார் திடீரென சுந்தர் சார் ஆகியிருக்கிறார்..கவனிச்சி மாத்திருக்கலாமே கேபிள்? )

மொத்த கதைகளிலும் குறிப்பிடும் படியானது கதைகளில் உள்ள விறு விறுப்பும், சாதாரண வாசகனுக்கு எளிதில் புரிகிற விதம் உள்ளதும்!! பல கதைகளில் இறுதியில் ஒரு ட்விஸ்டும் வைத்துள்ளார்.

சில நேரம் வரிகள் ரொம்ப பெரிதாக எழுதி செல்கிறார்: " அவன் மிக கோபமாக துரத்த. இவள் வேகமாக ஓட, நடுவில் வந்த பைக் அவள் மேல் மோதும் படி வர, அதனை தாண்டி அவள் தப்பித்து செல்ல.. " என.. இது கேபிளின் எழுத்துகளில் எப்போதும் உள்ளது. எனது பத்திரிக்கை உலக நண்பர் செந்தில் சொல்லி தந்த விஷயம்: வாக்கியங்கள் சின்ன சின்னதாய் இருந்தால் தான் படிக்க சுவாரஸ்யமாய் இருக்கும் என்பது. இது கேபிளின் கவனத்துக்கு!


கள்ள உறவுகளும், செக்சும் , விலை மகளிரும் பல கதைகளில் வருகின்றனர். ஏன் இப்படி என புரிய வில்லை. இவை இல்லாமல் எழுதியிருக்கும் கதைகளான ஆண்டாள், நண்டு போன்ற கதைகளும் நன்றாகவே உள்ளன. முதல் ரக கதைகள் இன்றி இத்தகைய கதைகள் கேபிள் நிறைய எழுத வேண்டும் என்பதே என் எதிர் பார்ப்பு.

மொத்தத்தில் ரெண்டு ஷாட் டகீலா .. சுவாரஸ்யம் + விறுவிறுப்பு கலந்த ஒரு மசாலா மிக்ஸ் !!

********
நூல் பெயர்: லெமன் ட்ரீயும், ரெண்டு ஷாட் டகீலாவும்
ஆசிரியர்: சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்)
வெளியீடு: நாக ரத்னா பதிப்பகம் ( Nagarathna_publication@yahoo.in)
விலை: ரூ. 50.

இந்த புத்தகம் ஆன்லைனில் வாங்க : இங்கே செல்லவும்

Tuesday, February 16, 2010

கிரிக்கட் வீரர்கள் .. பிடித்ததும் பிடிக்காததும்

கிரிக்கட் பன்னிரண்டாவது படிக்கும் போது பித்து பிடித்து அலைய வைத்தது; என் வாழ்கையை வேறு திசைக்கு திருப்பியதில் முக்கிய பங்கு அதற்கு உண்டு; மேட்ச் பிக்சிங் போன்ற தருணங்களில் வெறுத்தாலும் பின் மீண்டும் காதல் வந்து விடுகிறது.


         எனக்கு மிக பிடித்த இரு  கிரிக்கட் வீரர்கள் : சச்சின் & கில்கிறிஸ்ட்
                                                   ****

பதிவர் வரதராஜலு கிரிக்கட் குறித்தான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறார்.

வழக்கம் போல, இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.

1. பிடித்த கிரிக்கெட் வீரர்? ஆடம் கில்க்ரிஸ்ட்
சச்சின்

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? அக்குப் ஜாவித் (பாகிஸ்தான் வீரர்..சச்சினை மற்றும் இந்தியர்கள் பற்றி மிக தவறாக எப்பவும் பேசுவார்)

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லி (மிக குறைந்த மேட்ச்களில் மிக அதிக விக்கட்டுகள் வீழ்த்தினார்)

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீ சாந்த் (சவுண்ட் இருக்கும் அளவு மேட்டர் இருப்பதில்லை)

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே
முக்கியமாய் அவரது " Never give up" attidue –க்காக)

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் முரளி கார்த்திக்

7. பிடித்த வலதுக்கை துடுப்பாட்ட வீரர் சச்சின், ரிச்சர்ட்ஸ்,ஷேவக்

8. பிடிக்காத வலதுக்கை துடுப்பாட்ட வீரர் சில நேரம் டிராவிட் (போர்!!)

9. பிடித்த இடதுக்கை துடுப்பாட்டவீரர் கில்க்ரிஸ்ட்,கம்பீர், பிரையன் லாரா

10. பிடிக்காத இடதுக்கை துடுப்பாட்ட வீரர் குறிப்பாய் யாருமில்லை

11. பிடித்த களத்தடுப்பாளர் ஜான்டி ரோட்ஸ்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் ரவி சாஸ்த்ரி (இந்தியா கேட் என்பார்கள்.. அவ்ளோ கப்பை விடுவார்)

13. பிடித்த ஆல்ரவுண்டர் கபில்தேவ், இம்ரான் கான்

14. பிடித்த நடுவர் டேவிட் ஷெபெர்ட், டிக்கிபேர்ட்

15. பிடிக்காத நடுவர் அசோகா டீ சில்வா

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் ரவிசாஸ்திரி

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் குறிப்பாய் யாருமில்லை

18. பிடித்த அணி இந்தியா, சில நேரம் ஆஸ்திரேலியா

19. பிடிக்காத அணி ஒப்புக்கு ஆடும் நாடுகள்

20. விரும்பி பார்க்கும் அணி- இந்தியா - பாகிஸ்தான்
களுக்கிடையேயான போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா

21. பிடிக்காத அணிகளுக்கி- ஆஸ்திரேலியா - பங்களாதேஷ்
டையேயான போட்டி

22. பிடித்த அணி தலைவர் ஸ்டீவ் வா, இம்ரான் கான்

23. பிடிக்காத அணித்தலைவர் சச்சின் (கேப்டன்சி சுத்த மோசம்)

24. பிடித்த போட்டி வகை (டெஸ்ட், ஒருநாள், இஇ): ஒன் டே மேட்ச் (நிறைய பார்த்து பழக்கமாயிடுச்சு)

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி சச்சின் – ஷேவக் (One day matches)


26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட் ஜோடி கவாஸ்கர் -சேட்டன் சௌஹான்

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் சச்சின், லாரா,வார்னே

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் சச்சின்


நான் அழைக்கும் பதிவர்கள்:

சங்கர் (பார்த்ததும் படித்ததும்)
அன்புடன் மணிகண்டன்

Sunday, February 14, 2010

கேபிள் சங்கர் & பரிசல் புத்தக வெளியீடு படங்கள்

கேபிள் புத்தகம் பிரமிட் நடராஜ் வெளியிட அஜயன் பாலா பெறுகிறார்


பரிசல் புத்தகம் அஜயன் பாலா வெளியிட அகநாழிகை வாசு பெறுகிறார்


பிரமிடுக்கு பொன்னாடை போர்த்துகிறார் அண்ணே அப்துல்லா


அகநாழிகை வாசு பேசுகிறார்


 
சகா கார்க்கி பேசுகிறார் பேச்சும் எழுத்து போலவே சிரிக்க வைக்கிறது




 

பதிவரும் தமிழ் பட வசனகர்த்தாவுமான சந்துரு


 

புத்தக குவியல் முன் ஷங்கர்,பப்ளிஷர் குஹன், ஜெய மார்த்தாண்டன்



ஷங்கர், அத்திரி, TV ராதா கிருஷ்ணன், உண்மை தமிழன், ரோமியோ


விழா நாயகர்கள் கேபிள் மற்றும் பரிசல்காரன்

கேபிளின் குட்டி பசங்க இருவரும் (விழா துவக்கத்திலேயே சின்ன பையன் கையில் மைக் தரப்பட அவன் " அப்பா எப்பவும் காமெடி பீஸ் தான்" என அசால்ட்டாய் ஒரு பிட்டை  போட்டான்)

புது மாப்பிள்ளை அதி பிரதாபன், ஜெய மார்த்தாண்டன், பின்னே சர்புதீன் (வெள்ளி நிலா)

ஷங்கர், சங்கர், கார்க்கி, சுரேகா(நிகழ்ச்சி தொகுப்பாளர்) , அன்புடன் மணிகண்டன்

ஷங்கர், வேஷ்டியில் நரசிம் , கார்க்கி, அன்புடன் மணிகண்டன் , காவேரி கணேஷ்

ஜ்யோவ்ராம் சுந்தர், வடகரை வேலன், சஞ்சய் காந்தி

பரிசல் , வெண்பூ, முரளிகுமார் , சொல்லரசன், ஜ்யோவ்ராம் சுந்தர்
ஒளி ஓவியர் ஆதி, ஈரவெங்காயம், சொல்லரசன், வெயிலான்

அரசியல் வாதிகளை கிழிக்கும் தண்டோரா, படங்களை கிழிக்கும் ஜெட் லி

சிவகுமார் & பட்டர்பளை சூர்யா


முன்னே கேமராவுடன் T. Shirt அணிந்து இருப்பது நான்


Wednesday, February 10, 2010

வானவில் - சச்சினும், ட்ரேட் மார்க் நரேந்திர மோடியும்

வாரம் ஒரு சட்ட சொல் இந்த வாரம் : ட்ரேட் மார்க் (Trade Mark)

ஒரு நிறுவனம் தனக்கென்று பிரத்யேகமாக வைத்திருக்கும் ஒரு பெயர் அல்லது சிம்பல் - Trade mark. இந்த சிம்பல் பார்த்தாலே ஒருவர் அந்த நிறுவனம் பெயர் சொல்லி விடுவர். உதாரணமாய் அசோக் லேலன்ட் - L என்ற எழுத்தை ஒரு குறிப்பிட்ட விதத்தில் எழுதி இருப்பார்கள். இதை பேருந்து மற்றும் பிற அசோக் லேலன்ட் வாகனங்களில் நீங்கள் கவனித்திருக்கலாம். இது ஒரு ட்ரேட் மார்க். இதனை யார் முதலில் இருந்து உபயோகிக்கிறார்களோ அவர்களுக்கே இதை தொடர்ந்து வைத்திருக்கும் உரிமை உண்டு. மேலும் இவர்கள் இதனை தங்கள் பெயரில் பதிவும் செய்து, பிறர் இதே போன்ற ட்ரேட் மார்க் உபயோகிக்காமல் தடுக்க முடியும். தற்போது Google -தன் பெயரில் சைனாவில் வர உள்ள நிறுவனத்துக்கு எதிராக குரல் கொடுப்பது இதன் அடிப்படையில் தான்..


சென்னை ஸ்பெஷல்: செருப்புக்கு ஒரு கடை: காதிம்ஸ்

சென்னையில் செருப்பு வாங்க ஒரு நல்ல கடை: காதிம்ஸ். தி. நகரிலும் மவுன்ட் ரோடிலும் உள்ளது. நிறைய மாடல்கள் கிடைக்கும்.. குறிப்பாய் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்.. (நாம் எங்கேங்க அடிக்கடி மாத்த போறோம்?) . விலை ரொம்ப reasonable-ஆகவே இருக்கும். ( Bata வை விட ரொம்பவே விலை குறைவு) . ஜப்பானியர்கள் போல் "கம்மி விலை; ஆறு மாதம் ஒரு வருடம்.. அத்தோடு தூக்கி போட்டுட்டு அடுத்ததை வாங்கு" பாலிசி பின் பற்றுகிறார்கள். இது வரை செல்லா விடில் ஒரு முறை முயற்சியுங்கள்..

கிரிக்கெட் பக்கம்

சென்ற பதிவில் எழுதியது போல் இந்தியா கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்காவிடம் தோற்று விட்டது. மிக மோசமான டீம் தேர்வு. இந்தியாவில் விளையாடும் போது squad-ல் எதற்கு 7 பவுலர் என தெரிய வில்லை! உள்ளூர் மேட்சில் ஆள் இல்லாவிட்டால், ஒப்புக்கு சப்பாணியாக பொடியனை இறக்குவது போல் சாஹா என்ற விக்கட் கீப்பர் "சிறப்பு batsman " ஆக விளையாடினார்!! நம்ம ஆட்களுக்கு genuine fastbowling என்றால் உதறல் தான். ஸ்டெய்ன் பந்து வீச்சில் சுருண்டுட்டாங்க...! விடுங்க. " இந்தியா தோத்தா என்ன.. சச்சின் செஞ்சுரி அடிச்சா போதும்" அப்படின்னு மனசை தேதிக்கிற கூட்டம் நாமெல்லாம்!!

இந்த வார நல்ல விஷயம்

உள் நாட்டு பாதுகாப்புக்கு போதிய உதவிகளை மத்திய அரசு செய்வதாகவும், சட்டம் ஒழுங்கு காக்க, நல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர்கள் மாநாட்டில் மோடி பேசியிருக்கிறார். எதிர், எதிர் அணிகளாக இருந்தாலும், பிஜேபியும் காங்கிரசும் சில விஷயங்களில் ஒத்து போவதும், ஒருவர் பிறந்த நாளுக்கு மற்ற தலைவர் வாழ்த்து சொல்வதும் தொடர்கிறது. இங்கே தமிழ் நாட்டை நினைத்தால்?? கருணாநிதி ஆகட்டும், ஜெ ஆகட்டும் ஒருவரை மற்றவர் விரோதி ஆகவே பாவிக்கின்றனர். எந்த விஷயத்துக்கும் என்றும் ஒருவரை இன்னொருவர் பாராட்டியதில்லை; ஒரே விழாக்களில் கலந்து கொள்வதும் இல்லை. அரசியல் நாகரீகம் (அப்படி ஒன்னு இருக்கா?) இவங்களுக்கு என்று தான் தெரியுமோ?

ஹெல்த் பக்கம்

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினம் ரெண்டு அல்லது மூன்று பூண்டு வில்லைகள் சாப்பிடுவது நல்லது. இது ரத்த அழுத்தம் குறைக்க பெரிதும் உதவும் என நிரூபித்துள்ளனர். இப்படி சாப்பிட சிறந்த நேரம் காலை சாப்பிட்டு முடித்த பின் தான். பூண்டு வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. இரவு சாப்பிடுவதும் நல்லதல்ல, எனவே தான் காலை உணவு சாப்பிட்ட பின் சாப்பிடுவது சிறந்தது.

பிடித்த SMS:

Being kind is more important than being right.

அய்யாசாமி

அய்யாசாமி வெளியூர் செல்ல தன் ஊர் பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்பார். அவர் எந்த ஊருக்கு போகணுமோ அதுக்கு எதிர் சைடில் தான் நிறைய பஸ் போகும். இவர் போற ஊருக்கு பஸ் வந்தா, ரொம்ப நேரம் கழிச்சு வரிசையா ரெண்டு மூணு வரும். அய்யா சாமி அடிச்சி பிடிச்சி ஏதாவது ஒன்னில் ஏறுவார்.. அவர் ஏறிய பஸ்ஸை மத்த பஸ்ஸுங்க சைடு வாங்கி தாண்டி போய்டும்னு சொல்லனுமா என்ன?

Monday, February 8, 2010

வக்கீல் படிப்பும், வேலையும்

இப்பதிவு யூத் விகடனின் குட் ப்லாக்ஸ் பகுதியில் இடம் பெற்றது!


*******************************************
வலை உலகில் எழுதுவோர் பெரும்பாலும் ஏதோ ஒரு துறையில் + நிறுவனத்தில் பணி புரிபவர்களே. இப்படி பல துறைகளில் இருப்போர் தத்தம் துறை பற்றி, என்ன படிக்க வேண்டும், அதற்கு வேலை வாய்ப்பு எப்படி என எழுதினால், நிச்சயம் பலருக்கு உபயோகமாக இருக்கும். நீண்ட நாளாகவே எனக்குள் இந்த எண்ணம். இந்த ப்ளாகை வாசிக்கும் வள்ளுவன் என்ற நண்பரும் சட்ட படிப்பு பற்றி எழுத சொல்லி பல கேள்விகளை பின்னூட்டத்தில் எழுதினார். இதோ அந்த பதிவு. இதை ஒரு தொடர் பதிவாக, இன்னும் சில நபர்களையும் அழைத்துள்ளேன் தொடர. அழைத்தவர்கள் அவசியம் தொடரவும்.

*********
இந்தியாவில் சட்ட படிப்பு இரு விதமாய் உள்ளது. ப்ளஸ் டூ முடித்து விட்டு நேரே BL படித்தால் ஐந்து வருட படிப்பு. BA, B.Sc, B.Com என ஏதேனும் ஒரு டிகிரி முடித்து விட்டு படித்தால் மூன்று வருடம். (ஆம் எந்த டிகிரி படித்தாலும், BL - மூன்று வருட படிப்பில் சேர்ந்து படிக்கலாம்). தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. சேலத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்திய அளவில் புனே மற்றும் பெங்களுருவில் சில சிறந்த சட்ட கல்லூரிகள் (National Law school) உள்ளன

தேர்வு முறை

அரசு சட்ட கல்லூரிகளில் இதற்கென நடக்கும் பிரத்யேகமான நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படியில் தான் அட்மிஷன் நடக்கிறது. ப்ளஸ் டூ மார்க் eligibility-க்கு மட்டும் தான் பயன் படுகிறது. இதுவும் மிக அதிகம் கிடையாது. 50 அல்லது 60 சதவீதம் இருந்தால் போதுமானது.

நுழைவு தேர்வு பொது அறிவு அதிகமாகவும், சட்ட அறிவு ஓரளவிற்கும் உள்ள கேள்விகளை உள்ளடக்கி உள்ளது. நுழைவு தேர்வுக்கு சில நல்ல coaching centreகள் இந்த கல்லூரிகள் உள்ள ஊர்களில் உள்ளன.

செலவு

அரசு சட்ட கல்லூரியில் படித்தால் செலவு மிக குறைவே. கல்லூரிக்கான செலவு (Term fees, exam fees, etc) வருடத்திற்கு 5000-க்குள் அடங்கி விடும். ஹாஸ்டலில் தங்கி படித்தால் அதற்கான செலவு அந்தந்த ஊர் பொறுத்து இருக்கும்.

பிற மாநில கல்லூரிகள்

முழு நேர மாணவனாக இல்லாமலே சட்டம் படிப்பதற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நிறைய கல்லூரிகள் உள்ளன. இங்கு தரபடுவது LLB என்ற பட்டம் . BL & LLB இரண்டும் சமமே. சட்ட படிப்பு தமிழகத்தில் BL என்றும், பிற மாநிலங்களில் LLB என்றும் அழைக்க படுகிறது.

ஆனால் இந்த கல்லூரிகள் தனியார் என்பதால் costly-ஆக இருக்கும்; தோராயமாக வருடத்துக்கு ருபாய் 30,000 ஆகலாம். தேர்வு எழுத நீங்கள் அந்த ஊருக்கு சென்றாக வேண்டும். (இது தொலை தூர கல்வி அல்ல என்று அறிக).

சில யூனிவர்சிட்டிகள் தொலை தூரத்தில் படிக்க BGL என்ற படிப்பு வைத்துள்ளனர். இது கோர்ட்டுக்கோ, வேலைக்கோ எந்த விதத்திலும் உதவாது. வேலைக்காக அல்லது வேலை உயர்வுக்காக படிக்கிறீர்கள் என்றால்,
இதனை படிப்பதை தயவு செய்து தவிர்க்கவும். BGL-க்கு பெரும்பாலும் நல்ல வேலை கிடைக்காது

வேலை வாய்ப்புகள்

1 . வழக்கறிஞர் ஆக Practise செய்வது:

BL முடித்தவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் கோர்ட் சென்று Practise செய்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா? இருப்பினும் BL முடித்து அதிக அளவு சதவீதத்தினர் ( 40 to 50% ) வழக்கறிஞர் தொழில் செய்கிறார்கள் என்ற அளவில் இதனை முதலில் பார்ப்போம்.

பெரும்பாலும் முதலில் யாரேனும் ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பணி புரிய வேண்டும். இது அந்தந்த ஊருக்கு ஏற்ப டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறுகிறது. டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட்டில் பெரும்பாலான ஜூனியர் வழக்கறிஞர்கள் குறைவான சம்பளமே வாங்குகின்றனர். சில ஆண்டுகள் இப்படி கஷ்ட ஜீவனம் தான். பின் தனக்குள்ள தொடர்புகளை வைத்து சுமாராக ஐந்து ஆண்டுகளில் தனியாக Practise செய்யலாம்.

நாங்கள் படித்த காலத்திலேயே " சீக்கிரம் நிறைய கேஸ் வரணும்னா தந்தை வக்கீலா இருக்கணும் இல்லாட்டி மாமனார் வக்கீலா இருக்கணும்" என்பார்கள். இது ஓரளவுக்கு உண்மை தான். முதல் தலை முறை வக்கீல்கள் தனியே சம்பாதிக்க நிறைய ஆண்டுகள் தேவை படுகிறது.

2. பெரிய Law firm களில் இணைந்து பணியாற்றுவது:

இந்தியாவில் பல சிறப்பான Law firm-கள் உள்ளன. உதாரணத்துக்கு சில: AZB & Partners, Kochar & Co, Amarchand Mangal Das. சென்னையிலேயே Fox Mandal & Associates, King & Partridege போன்றவை..

இந்த Law firm-களில் ஜூனியராக அல்லது employee ஆக சேர்ந்தால் துவக்கதிலேயே ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கும். மேலும் போக போக, நாம் செய்யும் வேலைக்கு Percentage அடிப்படையில் பணம் தருகின்றனர். இதன் மூலம் சில வருடங்களிலேயே மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கும் வக்கீல்கள் பலர் உள்ளனர்.

நல்ல Law firm-ல் நுழைய சரியான reference தேவை. அதாவது அங்கு உங்களை சேர்த்து விடும் விதமான நபரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!!

3. நிறுவனங்களில் வேலை :

இந்தியாவில் லட்சக்கணக்கான கம்பனிகள் உள்ளன. அவற்றில் பல ஆயிரக்கணக்கானவை பெரிய கம்பனிகள். இவற்றில் Law officer, Manager Legal, AGM, GM என பல்வேறு பதவிகளில் BL முடித்தவர்கள் வேலை செய்கின்றனர். துவக்க சம்பளமே ஓரளவு decent ஆக இருக்கும். போக போக நிச்சயம் சம்பளம் கூடும். ரிஸ்க் இல்லாமல் குறிப்பிட்ட வருமானம் விரும்புவோர் நிறுவனங்களில் பணி செய்யலாம்.

மேலும் தற்போது Legal Process Outsourcing என்கிற தொழிலும் அதிகரித்து வருகிறது. இது பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லீகல் வேலைகள் இங்கு Outsource செய்யபடுகின்றன ( IT Outsourcing போலவே). இதனாலும் BL-க்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.

இவை தவிர BL முடித்தோர் Civil services (குறிப்பாய் IAS, IPS, etc ) என பல இடங்களில் உள்ளனர்.

ஒரு நல்ல வக்கீலுக்கு (கோர்ட்/ அலுவலக வேலை எதுவாக இருந்தாலும்) முக்கிய தேவை எழுத்தாற்றல் (Drafting skills) மற்றும் பேச்சாற்றல்.. இப்படி எழுத்து மற்றும் பேச்சில் ஈடு பாடு இருந்தால் நிச்சயம் நீங்களோ உங்களுக்கு தெரிந்தவருக்கோ இந்த படிப்பை சிபாரிசு செய்யலாம்.

இதனை ஒரு தொடர் பதிவாக ஆக்குகிறேன்.. சில விதிகள்:

1. உங்கள் படிப்பு பற்றியும் , அதற்கு எந்த கல்லூரிகள் சிறந்தவை ( சென்னை மற்றும் இந்தியாவில்) என்றும் அவசியம் குறிப்பிடவும்.

2.இந்த படிப்பிற்கு இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து விவரமாக எழுதவும்.

3. படிப்பு மற்றும் துறையில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் தொட்டு செல்லலாம்.

4. நீங்கள் 3 - 5 பேரை தொடர அழையுங்கள். தொடர்பவர்கள் வெவ்வேறு துறை சார்ந்தவர்களாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

இந்த பதிவை எழுத சொல்லி கேட்ட வள்ளுவனுக்கு நன்றி. நீங்கள் கேட்ட கேள்விகளில் சிலவற்றுக்கு இங்கு பதில் சொல்ல வில்லை. விரும்பினால் என் EMail முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் வள்ளுவன்!! (EMail முகவரி profile-ல் உள்ளது)

நான் தொடர அழைப்போர்:

1. அதி பிரதாபன்

2. ஜெயமார்த்தாண்டன்

3. வெங்கட் நாகராஜ்

Thursday, February 4, 2010

VMC ஹனீபாவும், புத்தக வெளியீடும்

லையாள இயக்குனரும் நடிகருமான ஹனீபா மரணமடைந்தது அறிந்து ரொம்ப வருத்தம். எனக்கு பிடித்தமான காமெடி நடிகர் அவர். காமெடிக்கு முக பாவம், body language , dialogue delivery, நடிப்பு என தேவையான அனைத்தும் அவரிடம் உண்டு. பட்டாளத்தில் முழு நீள வில்லன் வேடம் ரொம்ப  அட்டகாசமாக செய்திருப்பார். டைரக்டர் ஷங்கர் அவரை முதல்வன் மற்றும் சிவாஜியில் நன்கு பயன் படுத்தியிருந்தார். எனக்கு பெரும்பாலும் அவரை திரையில் பார்த்தாலே சிரிப்பு வந்து விடும்.



சிவாஜியில் நான் ரொம்ப ரசித்த ஒரு இடம். ஹனீபா படத்தில் ஒரு corrupt மந்திரி. ரஜினி அவரை ஒரு டாக்குமெண்டில் கையெழுத்து போட சொல்லி மிரட்டுவார். போடாததால் கத்தியால் வயிற்றில் குத்தி போட வைப்பார். பின் கூடவே வந்த டாக்டர் அதே ரூமில் வைத்து அவருக்கு வயிற்றில் தையல் போடுவார். வயிற்றில் தையல் போட்டு முடிந்ததும் ஹனீபா ஒரு கேள்வி கேப்பார் பாருங்க. " மூளைக்கு ஒன்னும் ஆகலியே!" அது டிபிகல் ஹனீபா ஸ்டைல்!!

ஹனீபா இறந்தது கல்லீரல் புற்று நோயால் என்பது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். வாரத்துக்கு பல முறை சரக்கு சாப்பிடும் நண்பர்களே.. வேணாம் குறைச்சுக்குங்க.

ஹனீபா ஆத்மா சாந்தி அடையட்டும். அவர் குடும்பத்துக்கு மன தைரியத்தை ஆண்டவர் அருளட்டும் !!
***********

சென்ற வார சிறந்த ஜோக்: Ball tamperinig -ல் ஈடு பட்ட அப்ரிடி, “பந்தை நான் வாசம் தான் பார்த்தேன்” என சொன்னது.



"யப்பா.. பல்லால தான் வாசம் பாப்பீயா ராசா? நல்லா இருப்பா"

சவுத் ஆப்ரிகா உடனான டெஸ்ட் போட்டிகளில் எனக்கு என்னவோ சவுத் ஆப்ரிகா தான் ஜெயிக்கும் என தோன்றுகிறது. இந்தியா பவுலிங் ஒன்னும் அவ்ளோ ஸ்ட்ராங்கா இல்லை. மேலும் டிராவிட் இல்லாதது பெரிய இழப்பு தான். பத்ரி போன்ற புது ஆட்களுக்கு வாய்ப்பு என்றாலும் டிராவிட், லக்ஸ்மன், யுவராஜ் இல்லாதது பிரச்சனையே .. . அதுவும் சவுத் ஆப்ரிகா போன்ற ஸ்ட்ராங் டீமிடம்.. பார்க்கலாம்

***********
ந்திராவில் சொத்து தகராறில் ஒரு சிறு பெண் கொடூரமாக கொல்லப்பட்டதும் அவர் தந்தை இதனால் Heart attack -ல் இறந்ததும் மனதை தைக்கிறது. இது தோண்டினால், ரெண்டாம் மனைவி, நூறு கோடி சொத்து என எங்கெங்கோ போகும்... ஆனாலும் அந்த சிறு குழந்தையை எவ்வளவு கொடூரமாக கொன்றுள்ளனர். எப்படி தான் மனசு வருமோ? ஆசைகளில் எல்லாம் கொடுமையானது மண்ணாசை & பெண்ணாசை. அந்த தந்தைக்கு இருந்த பெண்ணாசை (ரெண்டாம் மனைவி) & கொன்றவர்களுக்கு இருந்த மண்ணாசை ரெண்டுமே இந்த சம்பவங்களுக்கு காரணம்.
***********

கேபிள் புத்தகம் வெளியிட போறார்னு ஏற்கனவே தெரிஞ்சது தான். மனுஷன் தேர்ந்தெடுத்த நாளை பாருங்க. பிப்ரவரி 14 !! என்னதான் யூத்து, யூத்துன்னு சொன்னாலும், அதை நிரூபிக்கிற மாதிரி இந்த தேதி select செய்துள்ளார். மேல் விபரங்களுக்கு இங்கே படிக்கவும்.



விழா நடப்பது சென்னை என்றாலும் இந்த தேதியால் நமக்கு ஒரு சங்கடம் பாருங்க. ஏற்கனவே கம்ப்யூடரே கதின்னு இருப்பதால் வீட்டில் நிறைய சந்தேகம். இதில் பிப்ரவரி 14 ஞாயிற்று கிழமை வெளியே போகணும்னா எப்படி ஹவுஸ் பாஸ் பெர்மிஷன் தருவாங்க? ஏகப்பட்ட கேள்விகள்.. அதுக்கு நம்ம விளக்கங்கள்…. சமாளிக்கிறேன்.. எப்படியும் வந்துடுவேன்.



கூடவே பரிசல் காரனின் புத்தகமும் வெளியிடபடுகிறது. நண்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

சென்னையில் இது ஒரு பதிவர் சந்திப்பாக அமைய போகிறது. அனைவரும் வந்துடுங்க!!

Wednesday, February 3, 2010

சிறு கவிதைகள்


மாறுதல்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமாய்
மனிதர்கள்.

********

சூரியன்

கூவத்திலும்
மிதப்பான்
சூரியன்

********


எத்துணை துயர் இருப்பினும்
சிரி....
நண்பன் முகம் கண்டதும் !

---
எழுதியது "கல்லூரி காலத்து மோகன் குமார்"

Tuesday, February 2, 2010

வானவில் - ஜக்கு பாயும், மரண தண்டனையும்

ஒரு கேள்வி:

பதிவர்கள் எல்லாரும் தமிழ் படம் அல்லது கோவாவுக்கு விமர்சனம் எழுதுறாங்க.. ஏங்க.. கூடவே ஜக்கு பாய்ன்னு ஒரு தத்துவ படம் வந்ததே.. அதை ஏங்க கண்டுக்க கூட இல்ல? அட பாத்துட்டு நல்லா இல்லைன்னு கூட எழுதிட்டு போங்க; இப்படி முழுக்க ignore பண்ணா என்ன அர்த்தம்? எல்லா படத்துக்கும் விமர்சனம் எழுதும் கேபிள், ஜெட் லி போன்றவர்கள் கூட கண்டுக்கலை.. நடிகர் சங்க தலைவர் மனசு எப்படி கஷ்ட படும்? அவர் வேற சூப்பர் ஹிட்டுன்னு விடாம விளம்பரம் செய்றார்....ஏதோ பாத்து செய்ங்க

சென்னை ஸ்பெஷல்

சென்னையில் பல ஏ.சி பஸ்கள் ஓடுகிறதே ! அதில் பிரயாணம் செய்துள்ளீர்களா? அட்டகாசமாய் இருக்கும் !! இருபது அல்லது முப்பது ரூபாய்க்கு குளிரூட்டப்பட்ட வண்டியில் உட்கார்ந்து கொண்டு மிக அருமையாக பயணம் செய்யலாம் ( Standing பெரும்பாலும் இருப்பதில்லை). சில வண்டிகளில் இனிமையாக பாடல் வேறு.. அவசியம் ஒரு முறை சென்று பாருங்கள் !!

வாரம் ஒரு சட்ட சொல் - இந்த வாரம் Capital Punishment

தண்டனைகளுக்கெல்லாம் ராஜா Capital punishment. மரண தண்டனையை தான் Capital punishment என்கிறது சட்டம். இந்தியாவில் தற்போது Capital punishment மிக மிக அரிதான வழக்குகளில் தான் ( சுப்ரீம் கோர்ட் வார்த்தைகளில் சொல்வதானால் “In rarest of rare cases”) கொடுக்க படுகிறது என்பதறிக....

ஹெல்த் பக்கம்

இது அதிகம் வெயிட் போடும் நபர்களுக்கு. பலரும் நொறுக்கு தீனி குறைக்குமாறும், பழங்கள் போன்றவை அதிகம் சாப்பிடுமாறும் advise சொல்லியிருப்பாங்க. ஒரு சின்ன உதாரணம் இப்போ படிச்சது சொல்றேன். ஒரு வடை அல்லது சமோசாவில் சுமார் 120 - 150 கலோரி உள்ளது. அதுவே ஒரு ஆப்பிளில் சுமார் 50 கலோரி மட்டுமே உள்ளது. கலோரி அதிகம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது தங்களுக்கு தெரிந்தே இருக்கும்; அதிகமான கலோரி நம் உடம்பில் கொழுப்பாக, அதிக எடையாக ஆகிறது. நானே ஒரு நொறுக்கு தீனி ஆசாமி தான். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பழங்கள் பக்கம் திரும்பி உள்ளேன். எனவே இதனை சொல்ல எனக்கு தகுதி உண்டு. நொறுக்கு தீனியை குறைச்சு பழங்கள் பக்கம் வாங்க...

பார்த்த சினிமா:

குட்டி படம் பார்த்தேன். முதல் பகுதி சற்று வித்யாசமாகவும் சிரிக்கும் படியும் உள்ளது. காதலர்கள் தந்தைக்கு பயந்து ஓட ஆரம்பித்த பின் படம் நொண்ட ஆரம்பித்து விட்டது. பாடல்கள் மற்றும் சண்டை வேக தடை. தனுஷின் நடிப்பில் சற்று maturity தெரிகிறது. நீங்கள் படம் இது வரை பார்க்க விட்டால் அவசரமில்லை.. இன்னும் சில வாரங்களில் நல்ல பிரின்ட் வந்ததும் CD -யாகவோ, அல்லது விரைவில் இந்திய தொலை காட்சியில் முதல் முறையாகவோ பார்க்கலாம்.

ரசித்த SMS:

ஒரு ஏழை தன் உணவை சம்பாதிக்க ஓடுகிறான்.
ஒரு பணக்காரன் தான் சாப்பிட்ட உணவு செரிக்க ஓடுகிறான்.

அய்யா சாமி

அய்யா சாமி வாழை பழம் வாங்கிட்டு போனா அவரு வீட்டுக்கார அம்மாவும் வாங்கிட்டு வந்திருக்காங்க. அய்யா சாமி பூ வாங்கிட்டு போனா அவங்களும் வாங்கிட்டு வந்திருக்காங்க. இதுக்கு மேலே "ம்க்கும் நான் வாங்கிட்டு வரும் போது தான் நீங்களும் வாங்குவீங்க" என வீட்டம்மா கிட்டே வாங்கி வேற கட்டிக்குறார்!! இதே கேள்வியை அவங்க கிட்டே கேக்குற அளவு தைரியம்...பாவம் .. அவருக்கு கிடையாது !!