Tuesday, September 27, 2016

நடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு

இன்று செப்டம்பர் 27..நாகேஷ் அவர்களின் பிறந்த நாள்  ! 
நான் நாகேஷ் : புத்தக விமர்சனம் 


சிரித்து வாழ வேண்டும் என்ற தலைப்பில் கல்கியில் வெளியான தொடர் " நான் நாகேஷ்" என்ற தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. நாகேஷ் பேசுவது போலவே அமைந்த இந்த புத்தகத்தை எழுதியவர் எஸ். சந்திர மவுலி.

நாகேஷ் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான ஒரு நடிகர். பொதுவாய் அதிகம் பேட்டி தராத. தன் திரை உலக வாழ்க்கை பற்றி பேசாத இவர் வாழ்க்கை குறித்து புத்தகம் என்பது ஆச்சரியமான விஷயம் தான். புத்தகம் 250 பக்கங்கள் இருந்தாலும் மிக லைட் ரீடிங் என்பதால் விறுவிறுவென்று படித்து விட முடிகிறது. அதிகம் அலட்டி கொள்ளாமல் முதல் நாள் பாதியும், மறு நாள் மீதியுமாய் படித்து விடலாம்.

புத்தகத்தில் அவர் பகிர்ந்துள்ள சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கு.:

நாகேஷ் சிறு வயதில் மிக அழகாய் இருப்பாராம். வெள்ளையாக சற்று பூசியவாறு இருக்கும் நாகேஸ்வர ராவ் (அது தான் இயற் பெயர்) பள்ளி இறுதியில் படிக்கும் போது அம்மை போட்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் அம்மை மூன்று முறை வந்ததில் உருக்குலைந்து போயிருக்கிறார். கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து கதறி அழுதிருக்கிறார். இளைத்து போய், முகமெல்லாம் அம்மை தழும்பாக, மிக விரக்தி அடைந்திருக்கிறார். இதிலிருந்து மீண்டு வர ரொம்ப நாள் பிடித்திருக்கிறது. பரீட்சை எழுத முடியாமல் போய், படிப்பு பாதியிலேயே நின்று விட்டது.

பின் அப்பா பேச்சில் கோபித்துக்கொண்டு, ஒரு நாள் அம்மாவிடம் மட்டும் சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியிருக்கிறார். அப்போது அம்மா சொன்ன வார்த்தைகள் வாழ் நாள் முழுதும் மறக்க வில்லை என்கிறார்

அந்த வரிகள் "வெளி உலகத்துக்கு போய் விட்டால் நீ நிறைய பேரை சந்திக்க வேண்டும். அவர்கள் தம் வார்த்தைகளால் உன்னை கோப படுத்தலாம். உனக்கு கோபம் வந்து விட்டால் அவர்கள் வென்று விட்டதாக அர்த்தம் "

வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ் பல வித வேலைகள் பார்த்திருக்கிறார். சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தின் வெளியே அமர்ந்து மனு எழுதி தருவது, ரேடியோ கடையில் விற்பனை பிரதிநிதி இப்படி பல வேலைகள் பார்த்து விட்டு ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கிருக்கும் போது நாடகங்களில் நடிக்க துவங்கி பின் சினிமா உலகிற்குள் நுழைந்திருக்கிறார்.

முதன் முதலாக இவர் நடித்த நாடகத்தில் வயிற்று வலி ஆசாமியாக டயலாக் ஏதும் இன்றி நடித்து அசத்தியிருக்கிறார். நாடகம் பார்க்க வந்த எம். ஜி. ஆர் இவரை பாராட்டி வெள்ளி கோப்பை பரசளித்தாராம். அதனை ரொம்ப பெருமையாக வைத்திருந்தாலும், ஒரு முறை இவருடன் தங்கியிருந்த அறை நண்பர் தனது அவசரத்திற்கு எடுத்து விற்று விட்டாராம். அதன் பின் எந்த படத்தில் வாங்கிய விருதும் தன்னை பெரிதும் கவர வில்லை, தன் வீட்டு வரவேற்பறையில் அவற்றை வைப்பதில்லை என்று கூறுகிறார்.

திரையில் நாம் பார்க்கும் நாகேஷ் போலவே நிஜ வாழ்க்கையிலும் மிக குறும்பு காரராய் இருந்திருக்கிறார். உதாரணமாய் ரயில்வேயில் இருந்த போது தன் மேலதிகாரியிடம் சொல்ல முடியாத காரணத்திற்காக லீவு வேண்டும் என்று எழுதி கேட்டுள்ளார். "அது என்ன சொல்ல முடியாத காரணம்; லீவு கிடையாது" என்று கூறப்பட, மறு நாள் அலுவலகம் வந்து விட்டு தனது உடைகளை ஸ்நூகர் விளையாடும் அறையில் கழற்றி வைத்து விட்டு பனியன், அண்டர்வேர் சகிதம் தன் சீட்டில் சென்று அமர்ந்துள்ளார். மேலதிகாரி அங்கு வர, இது தான் தன் பிரச்சனை, உடை இல்லாததால் தான் லீவு கேட்டேன் என்று கூறியுள்ளார். அவர் லீவு தந்ததும் ஸ்நூகர் விளையாடும் அறைக்கு சென்று தனது உடைகளை அணிந்து கொண்டு மகிழ்ச்சியாக ஸ்நூகர் ஆடி கொண்டிருந்திருக்கிறார். அதிகாரி அங்கு வந்து அவரை பிடித்து அவரது மேலதிகாரியிடம் கூட்டி செல்ல, அவரிடம் என்ன பேசி தப்பினார் என்பதை நான் சொல்வதை விட புத்தகத்தில் நீங்கள் படித்தால் நன்றாயிருக்கும்.

பல சுவாரஸ்ய சம்பவங்கள் சொல்லி கொண்டே போகிறார். உதாரணத்திற்கு சில:

தி.நகரில் கிளப் ஹவுஸ் எனும் இடத்தில இருந்த போது உடன் இருந்த நடிகர் ஸ்ரீ காந்த் நல்ல வேலை பார்க்க, தான் உள்ளிட்ட பலரும் அவர் சட்டை பையிலிருந்து பணம் எடுத்து செலவு செய்தது.

நடிகர் பாலாஜி அவர் மீது காட்டிய பாசம். அவர் வீட்டுக்கே கூட்டி சென்று தங்க வைத்து ராஜ உபசாரம் செய்தது

மேஜர் சுந்தர்ர்ராஜன் பல முறை தன் வீட்டுக்கு கூட்டி சென்று அருமையான சமையல் செய்து அசத்தியது ("சினிமா இல்லாட்டி நீ சமையல் செய்து பிழைச்சுப்பே.நான் என்ன பண்றது?" என்பாராம் நாகேஷ்)

அந்த காலத்தில் நடிகர்கள் ஷெவாலே கார் வைத்திருப்பதை பெருமையாக நினைப்பார்களாம். இதை கிண்டலடிக்க எம். ஆர். ராதா தனது ஷெவாலே காரில் பின் புறம் முழுதும் வைக்கோல் போரை போட்டு வண்டி ஓட்டி செல்ல, நடிகர்கள் எல்லாம் தலையில் அடித்து கொண்டனராம்.

திருவிளையாடல் தருமி காட்சி பெரும்பாலும் தானாகவே பேசி நடித்தது என்கிறார். சிவாஜிக்கு மேக் அப் செய்ய தாமதமாக, அந்த நேரத்தில் இவர் மட்டும் தனியாக " அவன் வர மாட்டான் நம்பாதே" என டயலாக் பேசி சூட் செய்தது. டப்பிங் முன் படம் பார்த்த சிவாஜி “நாகேஷ் காட்சி கொஞ்சம் கூட கட் செய்ய கூடாது” என்று இயக்குனரிடம் சொன்னது. அந்த படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு தனக்கு அழைப்பே வராதது (அது தான் திரை உலகம்)

காதலிக்க நேரமில்லை படத்தில் நாம் அனைவரும் ரசித்த, நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லும் காட்சி. இது அந்த கால இயக்குனர் தாதா மிராசி என்பவரை பார்த்து செய்ததாம். அவர் கதை சொல்லும் போது இப்படி தான் சத்தங்களை எல்லாம் சேர்த்து கதை சொல்லுவாராம். அத்துடன் இயக்குனர் ஸ்ரீதர் "கதை இருக்கிற மாதிரி இருக்கணும், ஆனா இருக்க கூடாது " என்று சொல்ல, அதை வைத்து உருவானது தான் அந்த சீன் என்று நினைவு கூர்கிறார்.

தான் மிக பிரபலமாக இருந்த நாட்களில் ஒரே நாளில் இரண்டு படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள பயன்படுத்திய டெக்னிக்குகளை மனம் திறந்து சொல்லியுள்ளார். அவற்றில் ஒன்று செட்டில் உள்ள எலக்ட்ரிசியனிடம் பணம் தந்து கரண்ட் கட் செய்து விடுவது; அந்த நேரத்தில் போய் அடுத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வது. மேலும் இப்படி ஒரே நேரம் இரண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள பல வித வழிகளை கையாண்டுள்ளார்.

அன்னை இல்லம் என்ற படத்தில் நடித்த போது சாஸ்திரி என்ற சென்சார் அதிகாரி அவரை நேரில் அழைத்து " இப்போ வர்ற படங்களில் தொண்ணூறு சதவீதம் நீ இருக்கே. நல்லா நடிக்கிறே ஆனா இந்த படத்தில் ஏன் திக்குவாய் காரனா காமெடி செஞ்சே? அது நல்லா இல்லை. திக்குவாய் காரர்களுக்கு மனம் வருத்தப்படும் இல்லையா? இனி இப்படி உடல் ஊனத்தை வைத்து காமெடி செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்; அப்போது தான் அன்னை இல்லம் படத்தை கிளியர் செய்வேன்" என நாகேஷிடம் சத்தியம் வாங்கினாராம்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் உடன் மிக நெருக்கம். ஜெயகாந்தன் எவ்வளவு வித்யாசமான நபர் என்பதற்கு ஒரு உதாரணம். ஒரு முறை காரில் சென்ற போது ரயில்வே கேட் போடப்பட்டிருக்க, "சும்மா காரில் உட்கார்ந்து என்ன செய்வது; வா ! ரயில்வே கேட் எடுக்கும் வரை பிச்சை எடுக்கலாம்" என சட்டை, வேட்டியை கழட்டி விட்டு கேட் அருகே உட்கார்ந்து பிச்சை எடுத்தனராம். அதிலும் ஜெயகாந்தனுக்கு தான் அதிகம் சில்லறை கிடைத்தது என்கிறார் குறும்புடன்.

***
இப்படி எத்தனையோ சுவாரஸ்ய சம்பவங்கள் .. கடைசி சில பகுதிகளில் கமல் பற்றி ஒரு அத்தியாயம், பின் அடுத்தது ரஜினி பற்றி என சம்பிரதாயமாக செல்வது தான் சற்று அலுப்பூட்டுகிறது.

நாகேஷை மட்டுமல்ல, சிவாஜி, எம். ஜி. ஆர் படங்களை பார்த்த மக்கள் நிச்சயம் ரசிக்க கூடிய புத்தகம் இது. நாகேஷ் திரை உலக வாழ்க்கையை மட்டுமல்லாது, அந்த கால கட்ட சினிமா உலகையும் அறிய முடிகிறது

**திண்ணை செப்டம்பர் 17-தேதியிட்ட இதழில் பிரசுரமான விமர்சனம்

நூலின் பெயர்:  : " நான் நாகேஷ் ":
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர்: எஸ். சந்திர மவுலி
விலை: ரூ. 175

Sunday, September 25, 2016

வானவில் : ஆண்டவன் கட்டளை விமர்சனம்- சென்னை மெட்ரோ ரயில்

ஆண்டவன் கட்டளை 

காக்கா முட்டை, குற்றமே தண்டனை என பரீட்சார்த்த படங்கள் எடுத்த இயக்குனர் மணிகண்டனுக்கு முதல் கமர்ஷியல் படம். விஜய் சேதுபதி, ரித்திகா என இயல்பாக நடிக்க தெரிந்த ஹீரோ - ஹீரோயின் - வித்தியாச கதை களன் இவற்றின் பின்னணியில் நின்று ஆடியிருக்கிறார் மணிகண்டன்

வெளிநாடு செல்லும் ஆசை கொண்ட ஹீரோ - அதற்காக படும் சிரமங்களும் - அது நிறைவேறியதா என்பதும் தான் கதை.

இடையில் பாஸ்போர்ட் ஆபிஸ் துவங்கி, ப்ரோக்கர்கள் உள்ளிட்ட நமது சிஸ்டம் எப்படி இருக்கிறது என அங்கத்துடன் சொல்லி போகிறார்

விஜய் சேதுபதி - ஏமாற்றம், புன்னகை என அனைத்தையும் அளவோடு செய்துள்ளார் .ரித்திகாவிற்கு சென்று படத்திலிருந்து மிக வேறுபட்ட பாத்திரம்; வருகிற நேரம் குறைவு எனினும் - நடிக்க தெரிந்த நடிகை என நிரூபிக்கிறார்.

சின்ன பாத்திரங்களில் வரும் பலரும் இயல்பான நடிப்பை தருகின்றனர்

குறை என்று பார்த்தால் - பாடல்கள் சுமார்; மற்றும் படம் மெதுவாக (சில நேரம் இழுவை) யாக செல்கிறது

எல்லா பக்கமும் நல்ல ரிவியூ பெற்று கொண்டிருக்கும் இப்படம் கையை கடிக்காமல் ஓடி விடும்   !

அழகு கார்னர் 

Dhansika (aka) Dansika #1

மொபைலை மறந்த கதை 

அண்மையில் அலுவலகம் விட்டு ஒரு விழாவிற்கு கிளம்பினேன்; வாகனத்தை அலுவலகத்தில் விட்டுவிட்டு பஸ்ஸில்  செல்ல,  பாதி தூரம்  சென்ற பின்தான் மொபைல் - அலுவலகத்தில் வைத்து விட்டு வந்தேன் என  புரிந்தது;என்ன செய்வது !!

ஆபிசில் எனது டிப்பார்ட்மெண்ட் நண்பர்கள் கிளம்பியிருக்க மாட்டார்கள்.. ஆனால் ஒருவர் நம்பரும் நினைவுக்கு வரலை ! குடும்பத்தினர் தொலை பேசி எண் மட்டும் தான் நினைவில் இருக்கிறது; மற்றவர்களுக்கு போனில் இருந்து நேரே அடிப்பதால் நினைவே வரலை.

அருகில் இருப்பவரிடம் ரிக்வஸ்ட் செய்து அவர் போன் வாங்கி அலுவலகம் - லேண்ட் லைனுக்கு போன் செய்து, நண்பரை பிடித்தேன்..  போனை எடுத்து வைத்து கொள்ளுங்கள் என்று சொன்ன பின் தான் நிம்மதி.

இந்த சம்பவத்துக்கு பின் - அவசரமாய் தேவைப்படும் சில நம்பர்களை பேப்பரில் எழுதி பர்சில் வைத்து கொண்டேன்.. போன் எடுக்காமல் போவது  என்றில்லை;போன் சார்ஜ் காலியானால் கூட நம்பர்  வேண்டுமல்லவா?

பஸ்ஸில் இறங்கிய பின் வீட்டுக்கு P C O -வில் இருந்து போன் செய்யலாம் என பார்த்தால் ஒரு கடையும் இல்லை ! பஸ்ஸில் திரும்பி வரும்போதும் எந்த பப்லிக் பூத்தும் கண்ணில்  படவில்லை;எல்லோர் கையிலும் மொபைல் வந்த பின் P C O - என்பதே மிக மிக  அரிதாகவும்,ஏறக்குறைய வழக்கொழிந்தும் வருகிறது !

போஸ்டர் கார்னர் 



சென்னையில் இரண்டாவது மெட்ரோ ரயில் சர்வீஸ் 

சென்னையில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரை செல்லும் மெட்ரோ ஒரு வருடமாக இயங்கி வருகிறது.

தற்போது மெட்ரோ சைதை - லிட்டில் மவுண்ட்டில் இருந்து விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் சேவை துவங்கி உள்ளது. இது முதல் பாதைக்கு மாறானது.

முதல் பாதை ஆலந்தூரில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல், அஷோக் நகர்,   வடபழனி வழியே கோயம்பேடு வரை செல்லும்.

தற்போது இயங்கும் இரண்டாம் ரயில் லிட்டில் மவுண்ட்டில் இருந்து கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர்  வழியே விமான நிலையத்துக்கு செல்கிறது.

இரண்டு இடங்களுக்கும் பொதுவான ஸ்டேஷன்  ஆலந்தூர் தான். சைதையில் இருந்து ஒருவர் கோயம்பேடு செல்ல வேணுமெனில் ஆலந்தூர் வரை ஒரு ரயில் - பின் அங்கிருந்து மாறி கோயம்பேடு செல்லவேண்டும்

இம்முறை நல்ல விஷயம் - டிக்கெட் கட்டணம் ஓரளவு கட்டு படுத்தி உள்ளனர். விமான நிலையம் முதல் கோயம்பேடு செல்ல 50 ரூபாய் கட்டணம். 50 ரூபாய் என்பதை அதிக பட்சமாக வைத்துள்ளது நல்ல விஷயம்.

முழு அளவு இயங்க துவங்கினால் - பெரும் பலன் கிடைக்கும் !

Monday, September 19, 2016

வானவில் - Walk விமர்சனம்- ராம்குமார் மரணம்-பஸ்ஸில் ஒரு குடிகாரர்

பார்த்த படம்: வாக் (ஆங்கிலம்)

மிக உயரமான இரட்டை கோபுரங்கள் இடையே நடந்த நபரின் கதை ! அண்மையில் வெளியான சல்லி போல இதுவும் நியூ யார்க்கில் நடந்த ஒரு உண்மை சம்பவம்..
Image result for philippe petit lying down

ஒரு மனிதன் கனவு காணும் எதையும் அடைய முடியும் என்கிற விஷயமே படத்தின் அடிநாதம்.

துவக்க காட்சிகள் - பாதிவரை ஆங்காங்கு டல் அடித்தது; தூக்கம் எட்டி பார்த்தது. ஆனால் இறுதி பகுதி அருமை.

முக்கிய பாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பு, காமிரா , இயக்கம் என அனைத்தும் அசத்துகிறது.

1974-ல் நிஜமாய் கயிற்றின் மேல் நடந்தவர் படத்தில் நடித்தவருக்கு பயிற்சி தந்து பின் அவர் நடித்தாராம் !

Image result for philippe petit
1974 -ல் நிஜமாய் நடந்த பிலிப் !
சென்ற வருடம் வெளியாகி நல்லா வரவேற்பையும் பெரும் வெற்றியையும் பெற்ற இப்படத்தை நல்ல சினிமா விரும்புவோர் அவசியம் காணுங்கள் !

நானே சிந்திச்சேன் ...

இந்த மனசு இருக்கே.....வருத்தப்பட ஏதாவது ஒரு விஷயம் கிடைக்குமான்னு தேடி பார்த்துட்டு - அதையே  பெரிசு பண்ணி யோசிக்குது. உண்மையில் நாம் பயப்படுறதில் முக்கால் வாசி நடக்க போறதே கிடையாது.

நிஜமா நம்ம மனசு என்ன பண்ணனும் .. சந்தோஷ பட என்னென்ன விஷயம் இருக்கோ.. அதை இன்னும் பெரிதாக்கி பார்க்க வேணாமா? ஆனா அதை பண்ணாமல் - வருத்தப்பட இருக்கும் சின்ன விஷயத்தை பெரிசு பண்ணி யோசிக்கிறது சரியா???

இந்த விஷயம் புரிஞ்சாலே நம்ம செய்ற இந்த தப்பு ஓரளவு குறையலாம் இல்லையா ?

வித்யாச நிகழ்ச்சி : ஜெயா டிவியில் அன்கட் வெர்ஷன் 

சினிமாவில் இடம்பெறாத - நேரம் காரணமாக கட் செய்யப்பட காட்சிகளில் தேர்ந்தெடுத்து நல்ல சீன்களை ஒளி பரப்புகிறார்கள். பசங்க -2 படத்தில் இருந்து இடம் பெறாத சில காட்சிகள்.. அவற்றில் பல ரசிக்கும் படியே இருந்தது !

என்னா பாட்டுடே - பூக்களே சற்று ஓய்வெடுங்கள் 

டிபிக்கல் ரகுமான் பாட்டு ! சில பாடல்களை கேட்டாலே இது ராஜா பாட்டு என சொல்லி விடலாம்.. போலவே சில ரகுமான் பாடல்களும்..

இத்தனை மெலடியை தர நிறையவே தைரியம் வேண்டும் ! அருமையான மெட்டு, ஷங்கரின் படமாக்கம் என ரசிக்கும்படி பல விஷயங்கள் !


பஸ்ஸை விட்டு இறங்க மறுத்த குடிகாரர்

அண்மையில் அம்பத்தூருக்கு ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு பஸ்ஸில் வரும்போது நடந்த சம்பவம் இது. அம்பத்தூர் பஸ் டெர்மினஸில்  நடத்துனர் ஏறி டிக்கெட் போட ஆரம்பித்தார். ஒரு மனிதர் தூங்குற மாதிரி அமர்ந்திருந்தார். அவரிடம் " எங்கே போகணும் ?" என்பதை நடத்துனர் பல விதமாய் கேட்டு  பார்த்துட்டார்.ஒரு பதிலும் இல்லை; பின் சட்டையை பிடித்து உலுக்கி  கேட்டார்.ஊஹூம் ! மனுஷன் அசைந்து கொடுக்கலை.

அப்புறம் தான் அவர் "தண்ணி வண்டி " என கண்டக்டருக்கு புரிந்தது. பிடித்து இழுத்து வெளியே விட பார்த்தால் மனிதர் கம்பியை இறுக  பற்றி கொண்டு இழுக்க விட மாட்டேன் என்கிறார் !!

அதே ரூட்டில் செல்லும் அடுத்த பஸ் பின்னே நின்று கொண்டு கிளம்புங்க என ஹாரன் அடிக்கிறார் !

பின் 3 பேர் வலுக்கட்டாயமாய் இழுத்து கொண்டு சென்று கீழே தரையில் போட்டனர் ! அவரது செருப்புகள் சிதறி கிடக்க - அவற்றை தூக்கி எறிந்து விட்டு பஸ் விரைந்தது..

குடிக்க வேண்டியது தான் ... அதற்குன்னு இந்த அளவுக்கா !!

ராம்குமார் மரணம்

சுவாதி இறந்த  சில நாட்கள் மனம்  மிக  வருந்தியது; பெண்ணை பெற்ற ஒரு அப்பனின் கவலை  அது; ரயில் நிலையம் ஒன்றில் பட்டப்பகல் இவ்வளவு கொடூர கொலையா என மனம்  அரற்றியது.

நான் அடிக்கடி செல்லும் ரயில் நிலையம் அது. அடுத்த முறை செல்லும்போது மனது என்னவோ  செய்தது;மற்றவர்கள் எந்த சலனமும் இன்றி சென்று  கொண்டிருந்தனர்.

ராம்குமாரை கைது செய்த போது சற்றே நிம்மதி; ஆனால் இப்போது ராம்குமார் இறந்துள்ள விதம் மிக மிக சந்தேகிக்கும் வண்ணம் உள்ளது. இதற்கு முன் சிலர் ராம்குமார் சுவாதியை கொல்லவில்லை என  எழுதியபோது அதனை நான் சிறிதும் நம்ப தயாராய்  இல்லை;ஆனால் சிறையில் மின் கம்பியை கடித்து இறந்தார் என்பது தான் நம்ப சிரமமாக உள்ளது. யாரோ ஒருவர் செய்த கொலையை ராம்குமார் தலையில் சுமத்தி விட்டு,  இப்போது அவர் கதையை அவரசமாய் முடித்திருக்க கூடும் என்கிற ஊகம் நிச்சயம் எழுகிறது.

மின் கம்பியை தொட்டாலே இறந்து விடுவோமே ! அதெப்படி தொட்டு வாயில் வைக்க முடியும் ! அதனை தொடும் விதத்தில் ஏன் வைக்க வேண்டும்? சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரி உடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டாரா ?

இதற்கு முன் சிறையில் இந்த விதத்தில் யாரும் இறந்திருப்பார்களா தெரிய வில்லை .. மீடியா கள்ள மௌனம் சாதிக்கிறது ... இணைய நண்பர்கள் மட்டுமே இதனை எதிர்த்து குரல் கொடுத்து கொண்டுள்ளனர்..

ராம்குமார் தான் சுவாதியை கொன்றவர் எனில் அவர் தூக்கில் இடப்படவேண்டியவர்.. ஆனால் அது உறுதி செய்யப்படாத நிலையில் இப்படி நடந்துள்ளது பெரும் வருத்தம் தருகிறது.. சுவாதி கொலை போல இதுவும் ஒரு கொலை என்றே சந்தேகிக்க  வேண்டியுள்ளது. சுவாதியின் நடத்தை பற்றி எழுந்த கேள்விகளுக்கும் விடையே இன்றி போய் விட்டது

இந்த மரணத்துக்கு நீதி விசாரணை நிச்சயம் தேவை.

போஸ்டர் கார்னர்   

கீழே உள்ள போஸ்டர் சொல்லும் செய்தி எவ்வளவு கொடூரமானது !!




Sunday, September 18, 2016

உயில் - FAQ

உயில் என்பது என்ன ?

ஒரு மனிதர் - தனது வாழ் நாளுக்கு பின் தனது சொத்து  மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட அனைத்தும் யார் யாருக்கு தர வேண்டும் என விரும்புகிறாரோ - அதனை எழுதி வைப்பது தான் உயில். உயிருடன் இருக்கும் போது எழுதப்படும் இந்த தனி மனிதரின் விருப்பம் - அவரது மறைவுக்கு பின் தான் அமல் படுத்தப்படும்.



சுய  சம்பாத்தியத்தில் வந்தவை மட்டும் தான் உயில் எழுத முடியுமா ?

சுய  சம்பாத்தியத்தில் வந்தவை மற்றும் தனது பெற்றோர் மூலம் - சட்டப்படி ஒருவருக்கு வந்த சொத்துக்கள் இவற்றை உயில் மூலம் மாற்றம் செய்ய முயும்.

வயதானவர்கள் மட்டும் தான் உயில் எழுதுவது அவசியமா ?

அப்படி இல்லை. மரணம் எப்போது வேண்டுமானாலும், எந்த வடிவிலும் ஒருவருக்கு வரக்கூடும் என்பதால் - மத்திய வயதில் இருப்போரும் கூட உயில் எழுதி வைப்பது நல்லது. உயில் எழுதாத பட்சத்தில் - உங்கள் உறவினர்களில் - நீங்கள் விரும்பாத  சிலருக்கு கூட உங்கள் சொத்தில் ஒரு பகுதி செல்லக்கூடும். மாறாக நீங்கள் சம்பாதித்த சொத்தை நீங்கள் விரும்பினால் - ஒரே ஒரு  நபருக்கு கூட செல்லுமாறு உயில் மூலம் செய்யலாம்.  மேலும் உங்கள் சொத்தில் ஒரு பங்கை உங்கள் காலத்துக்கு பின் Charity - க்கு செல்ல வேண்டுமென நினைத்தால் - அது உயில் எழுதி வைத்தால் தான் சாத்தியமாகும். இல்லாவிடில் வாரிசு தாரர்கள் மட்டுமே சொத்தை பிரித்து கொள்வர்.

ஒரு உயில் எப்படி எழுதப்பட வேண்டும் ? அதனை ரிஜிஸ்தர் செய்வது எப்படி ?

உயில் ஒரு மனிதனின் விருப்பம் என்ற அளவில் - எப்படி /  எந்த format -ல்  வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

உயிலை ரிஜிஸ்தர் செய்வது சட்டப்படி கட்டாயம் இல்லை. ஆயினும் - அதன் நம்பகத்தன்மையை சிலர் சந்தேகிக்கலாம் என்ற அளவில் - ரிஜிஸ்தர் செய்வது நல்லது.

தனது உயிலை ஒருவர் எழுதி முடித்து விட்டு தனது கையொப்பம் இட்டபின் - கட்டாயம் இருவர் சாட்சி கையெழுத்திட வேண்டும். இப்படி சாட்சி கையெழுத்திடுவோர் - தங்கள் முன் உயிலை எழுதியவர் கையொப்பம் இட்டார் என்பதற்கு மட்டுமே கையெழுத்து இடுகிறார்கள். உயிலை முழுவதும் அவர்கள் வாசிக்க வேண்டுமென்று அவசியம் இல்லை.

இதன் பின் உயில் சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் ரிஜிஸ்தர் செய்யலாம். உயிலை ரிஜிஸ்தர் செய்ய மிக மிக குறைந்த கட்டணமே (அதிக பட்சம் ரூ. 500 ) வாங்கப்படுகிறது.

நாம் ஒரு  முறை எழுதிய உயிலை மாற்றி எழுத முடியுமா ? ஒருவர் பல உயில் எழுதினால் - எது எடுத்து கொள்ளப்படும் ?

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் உயிலை மாற்றி எழுதலாம். எந்த உயில் கடைசியாக ஒருவரால் எழுதப்பட்டதோ, அதுவே  அவரின் இறுதி உயிலாக எடுத்து கொள்ளப்படும்

உயிலை முழுவதும் மாற்றி எழுதாமல் சில பகுதிகளை மட்டும் மாற்ற முடியுமா ?

முடியும். குறிப்பாக ஒருவர் உயில் எழுதிய பின்  புதிதாக வேறு சொத்துகள் வாங்கியிருக்கலாம். அல்லது ஏற்கனவே எழுதிய ஒரு சொத்தை - இன்னொருவருக்கு மாற்றி எழுதலாம். இந்நேரங்களில் உயிலின் ஒரு பகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்படும். அல்லது புதிதாக உள்ள சொத்து யாருக்கு சேரவேண்டும் என எழுதப்படலாம். இதற்கு "Codicil " என்று பெயர். உயில் மற்றும் Codicil இரண்டும் சேர்ந்து ஒருவரின் உயிலாக கொள்ளப்படும்

ஒருவருக்கு உயில் மூலம் எழுதி வைத்த சொத்தை, உயில் எழுதியவர் பின்னர் விற்க முடியுமா ?

உயில் என்பது ஓருவரின் இறப்புக்கு பின் தான் நடைமுறைக்கு வருகிறது. எனவே - அவர் இறக்கும் வரை அந்த சொத்தை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனை அவர் தாரளாமாக பிறருக்கு விற்கலாம். அல்லது வேறு யாருக்கேனும் கூட மாற்றி எழுதலாம்

இஸ்லாமியர்கள் தங்கள் சொத்து முழுமையும் உயில் மூலம் எழுத முடியுமா ?

முடியாது. ஒரு இஸ்லாமியர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே உயில் மூலம் எழுத முடியும். மீதமுள்ள 2/3 பங்கு - அவரது வாரிசு தாரகளுக்கு இஸ்லாமிய சட்டத்தின் படி தான் சென்று சேரும்.

உயிலை நடைமுறைப்படுத்த கோர்ட் அனுமதி பெறவேண்டுமா ?

உயிலில் உள்ள விஷயங்களை கோர்ட் ஒரு முறை அங்கீகரிக்கும் வழக்கம் இந்தியாவில் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களுக்கு மட்டும்  அவசியமாகும். போலவே இந்த 3 நகரங்களிலும் இருந்தபடி ஒருவர் உயில் எழுதினர் எனில் - அவர் உயில் மூலம் எழுதும் சொத்து வேறு ஊரில் இருந்தாலும் கூட கோர்ட் அப்ரூவல் பெறுவது அவசியமாகிறது. இந்த நடைமுறையை ப்ரொபேட் என்று அழைப்பார்கள்.

ப்ரொபேட் தேவைப்படும் நேரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு விண்ணப்பித்து ப்ரொபேட் பெற்றபின் தான் சொத்து - சட்டப்படி அவருக்கு வந்து சேரும்

Executor மற்றும் Beneficiary என்பவர்கள் யார்?

தனது சொத்துக்களை உயில் மூலம் எழுதி வைக்கும்  நபர் Testator எனப்படுவார்.

சொத்தில் யார் யாருக்கெல்லாம் உரிமை/ பங்கு உள்ளதாக அவர் குறிப்பிடுகிறாரோ அவர்கள் Beneficiary எனப்படுவர்.

ஒருவர் எழுதிய உயிலை அவரது மரணத்துக்கு பின் நிர்வகித்து அனைவருக்கும் உயிலில் உள்ளபடி சொத்துக்கள் சென்று சேரும்படி நடவடிக்கை எடுப்பவர்  Executor என அழைக்கப்படுவார்.

ஒருவர் தனது உயிலிலேயே - Executor யார் என குறிப்பிடுவது மிகவும் நல்லது

நாம் எழுதும் உயில் யாருக்கும் தெரியாமல் இருக்குமாறு பார்த்து கொள்ளும் வசதி உள்ளதா ?

ஆம்; அப்படியொரு வசதி இருக்கிறது. எந்த சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் உயிலை நாம் பதிவு செய்கிறோமோ, அங்கேயே குறிப்பிட்ட தொகை செலுத்தினால், சப் ரிஜிஸ்தர் அதனை பத்திரமாக பாதுகாப்பார். அவர் ரீசீப்ட்- டை நமது வாரிசு தாரர்களிடம்  தந்து வைத்து விடலாம். நமது இறப்பிற்கு பின் அந்த ரீசீப்ட் மற்றும் நமது இறப்பிற்கான சான்று காட்டி - நமது வாரிசு தாரர்கள் நமது உயிலை பெற்று கொள்ளலாம்

சட்டத்தில் இப்படி ஒரு வசதி இருந்தாலும், இதனை நமது மக்கள் அதிகம் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்ப்பிட வேண்டும்.
***************


 உங்களின் வசதிக்காக - மாதிரி உயில் (Draft Will) கீழே தரப்பட்டுள்ளது


WILL

This is the last will and testament executed on this 20th day of December, 2013 by me Mr.V Ramesh, S/o Mr. Venkatram, Hindu aged 62 yrs,

Out of my own free will and in a full disposing state of mind without any coercion, undue influence from anybody

I am now aged about 42 years old and I am anxious that after my life time all my properties whether movable or immovable belonging to me should devolve smoothly according to my desires set out in this Will, so that there may not be any complications.

I acquired the properties more fully described in the schedule by way of Purchase from….& the said properties are in my exclusive enjoyment and I have been enjoying them without any interruption from any body.

I give, devise and bequeath the immovable properties property more fully described in the schedule hereunder to my wife Mrs. Geetha Ramesh Daugther of Mr…..Hindu aged about 40 years residing presently residing at …….. and the said Mrs. Geetha Ramesh shall be the absolute owner of the property after my life time.

In the event of my wife predeceasing me, I give, devise and bequeath the said property to my son Mr. Ganesh absolutely.

I possess a fixed deposit of Rs. ………in Indian Bank, Guindy branch. I give, devise and bequeath the said Fixed deposit absolutely in favor of my son Mr. Ganesh and he will have unfettered discretion to do whatever he likes with the said Fixed deposit as and when they devolve on him.

I give, devise and bequeath whatever properties movable or immovable wherever situated and which are not specifically set out in this Will to be taken absolutely by both of son and wife equally.

I appoint my son Mr. Ganesh to be the Executor and Trustee of this Will.

This Will shall come into effect after my death.


I reserve my right to alter or revoke this Will.

Thus I have executed this Will as set out above out of my own free Will and with a full disposing state of mine.

Signed by the TESTATOR and acknowledged by him to be his last Will and Testament in the presence of us, both of us being present at the same time, who at his request, in his presence and in the presence of each other, have subscribed out names as witnesses.


WITNESSES:                                                          
TESTATOR                 

Saturday, September 17, 2016

வானவில்- ABCD 2 சினிமா- தாம்பரம் சேட் பிரியாணி-ரயிலில் ஒரு பாட்டு

பார்த்த படம் - ABCD பார்ட் 2 (ஹிந்தி)

அதிசயமாய் முதல்  பார்ட்டை  விட நல்லதாக இரண்டாம் பார்ட் அமைந்த ஒரு படம் !

சுமாராய் ஆடும் ஒரு க்ரூப்பை - பயிற்சியாளர் (பிரபு தேவா) - எப்படி பரிமளிக்க வைக்கிறார் என்ற அதே கதை தான். முடிவில் அவர்கள் கோப்பை வெல்லாமல் போவது மட்டும் சற்று வித்யாசம்

படம் முழுக்க முழுக்க பாடல் மற்றும் டான்சில் தான்  நகர்கிறது; நாங்கள் சப் டைட்டில் இன்றி பார்த்தோம். இருந்தும் எந்த பிரச்னையும்  இல்லை.

டான்ஸ் ஒவ்வொன்றும் பிச்சு உதறிடுறாங்க...! படத்தை பார்க்க வைப்பது டான்ஸ் தான்.

சென்ற வருடம் வந்த இப்படம் வசூல் ரீதியிலும் ஹிட் ஆகியுள்ளது.

அழகு கார்னர் 



ரயிலில் ஒரு பாட்டு 

ரயிலில் மாலை ஏறும்போதே பாட்டு சத்தம் தூள் கிளப்பியது; கல்லூரி மாணவர்களாய் இருக்கும் என பார்த்தால் நிறுவனம் ஒன்றில் பணி புரிபவர்கள். யூனிபார்மில் அமர்ந்த படி, ரயிலில் தாளமிட்டபடி பாடி கொண்டிருந்தனர். பாட்டுகள் நிஜமாகவே நன்றாய் இருந்தன ! அதிக சத்தம் - அதனால் தொந்தரவு இவையும் இல்லை. பயண நேரத்தையும் பாடல்களையும் ரொம்ப மகிழ்வுடன் அனுபவித்து கொண்டிருந்தனர் அந்த 5 பேரும் ....

அமர்ந்த படி யோசித்தேன். அநேகமாய் தொலை தூரம் பயணம் செய்பவர்களாய் இருக்கும். போர் அடிக்காமல் இருக்க இப்படி செயகிறார்கள்..

முதல் விஷயம்... குழுவாய் இருப்பதால் தான் இது சாத்தியமாகிறது . தனியாய் பாடியபடி வந்தால் வேறு மாதிரி பார்ப்பார்கள்.

அடுத்து .. தினம் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் வீணாகிறது என புலம்பாமல்  அதையும் இனிமையாய் கழிக்கிறார்கள்..

வாழ்க்கை தானாக இனிமையாகாது.. அதை இனிமையாக்கி கொள்வது பல நேரம் நம் கையில் தான் இருக்கிறது .. இல்லையா?

டிவி  பக்கம்: சானல் 7-ல் 100 செய்திகள் 

சானல் 7 தமிழில் இயங்கி வரும் ஒரு நல்ல சானல். இதில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள்  100 செய்திகள் தொகுத்து வழங்குகிறார்கள். நிச்சயம் அருமையான  முயற்சி;தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு, சினிமா என அனைத்தும் கலந்த கலவை. அன்றைய நாளின் அணைத்து முக்கிய விஷயங்களும் தெரிந்து கொள்ளலாம்.

100 செய்திகள் என்பதால் மிக வேகமாக பேசுகிறார்கள். அது ஒன்று தான் சற்று குறை; தொடர்ந்து நாம் பார்த்தால் பழகி விடும் என நினைக்கிறேன்

என்னா பாட்டுடே : நான் போகிறேன் மேலே மேலே 

நாணயம் படத்தின் "நான் போகிறேன் மேலே மேலே ".. அட்டகாசமான மெலடி !

இசை, SPB குரல், படமாக்கம்  என  அனைத்தும் ரசிக்கும் படி ஒரு பாட்டு !



ஆமாம்.. SPB தற்போது ரிட்டையர் ஆகி விட்டாரா என்ன .. தமிழில் அவர் பாடல்கள் அநேகமாய் வருவதில்லையே !

போஸ்ட்டர் கார்னர் 


சாப்பாட்டு கடை - E சேட் பிரியாணி, தாம்பரம்

E சேட் பிரியாணி பற்றி முன்பே கேள்விப்பட்டுள்ளோம். இம்முறை தாம்பரத்தில் - பிரியாணி பார்சல் வாங்கினோம். நியாயமான விலை; நல்ல டேஸ்ட். குறிப்பிட்டு  சொல்ல வேண்டிய விஷயம்.. அளவு நிறையவே  இருக்கிறது.நாங்கள் 3 பிரியாணி வாங்கி விட்டு - ஒன்றை அப்படியே வைத்து  விட்டோம்.இரண்டிலேயே மூவருக்கு வயிறு நிரம்பி  விட்டது.

கடை - குடும்பத்துடன் சென்று அமர்ந்து சாப்பிடும்படி சுத்தமாக இல்லை; அதனால் பார்சல் வாங்கி  கொண்டு சென்று  விடலாம்;

இவர்களுக்கு மேடவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் இருக்கிறது.

பிரியாணி விரும்பிகள் அவசியம் ஒரு முறை முயல வேண்டிய கடை !

Thursday, September 15, 2016

Sully - சினிமா விமர்சனம் + ஐ மேக்ஸ் தியேட்டர் அனுபவம்

2009ல் அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவம்...

நியூ யார்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் சில நிமிடங்களிலேயே பறவைகள் மோத - 2 என்ஜின்களும் செயல் இழக்கிறது. கிளம்பி கொஞ்ச நேரமே ஆயினும் திரும்ப விமான நிலையம் வர முடியாமல் ஆற்றில் விமானத்தை இறக்குகிறார் கேப்டன் Sully.. !!

Image result for sully film

155 பேர்.. ஒருவர் கூட இறக்காமல் - அத்தனை பேரும் தப்பிக்கின்றனர்.

ஆற்றில் இறக்கியது சரியா .. ஏன் விமான தரை இறங்கும் இடத்திற்கு திரும்ப வில்லை என விசாரணை நடக்கிறது; அதன் முடிவில் ஆற்றில் இறங்கியது தான் சரியான முடிவு என தெரிய வருகிறது


கேப்டன் சல்லி பின் எழுதிய நூலை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட படம்.. இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வயது 86 !!

நடிகர் டாம் ஹாங்ஸ் கேப்டன் ஆக மிக இயல்பான நடிப்பு; சற்று இறுக்கமாக படம் முழுதும் வர வேண்டிய நிலை. மிகை இல்லாத நடிப்பு

எல்லோரும் இறங்கிய பின்னும் நம்பிக்கை இன்றி விமானத்தில் சுத்தி வருவது; 155 பேரும் தப்பி விட்டனரா என விடாமல் கேட்டு கொண்டே இருப்பது....அது தெரிந்த பின் வரும் பெரும் ரிலீப்; விசாரணை இறுதியில், சக பைலட்டிடம்  " பெரிய விஷயத்தை தான் செய்திருக்கோம்; பெருமையா இருக்கு " என சொல்வது; தன்னை எப்போதும் முன்னிறுத்தாத தன்மை என அற்புதமான பாத்திரம் !

Image result for sully film
நிஜ Captain - Sully !

விமானம் பழுதான பின் 4 நிமிடத்தில் ஆற்றில் இறங்கி விட்டது.. எனவே கதை அந்த 4 நிமிடம் மட்டுமின்றி - விசாரணை குறித்தும் சுழல்கிறது

படம் பார்க்கும்போது தோன்றா விடினும்

அப்புறம் டைட்டானிக் படத்துடன் ஒப்பிட தோன்றியது; இரண்டு படங்களும் பெரும் விபத்தை பேசினாலும் - சில முக்கிய வித்யாசங்கள் உள்ளன.

டைட்டானிக்- பாதி பேர் இறக்க, பாதி பேர் தப்புவர். இங்கு அனைவரும் தப்பிக்கின்றனர். அது பாதி கற்பனை கதை (குறிப்பாக காதல் காட்சிகள்); இது முழுக்க உண்மைக்கு அருகில்..

மெலோ டிராமா ஆக்க நிறைய வாய்ப்புகள் இருந்தும், அளவோடு நிறுத்தி கொள்கிறார்கள்.

தியேட்டர் நொறுக்ஸ் 

முதன் முறை ஐ மேக்சில் பார்த்தோம். ஒரு டிக்கெட் விலை 360 ரூபாய்; பெரும்பாலும் 3 D படங்கள் தான் இங்கு திரையிடப்படும்; இது 3 D படம் அல்ல

Image result for sully film

மிக பெரிய திரை; அருமையான இசை அமைப்பு.. இப்படம் பொறுத்தவரை சத்யம் போன்ற எந்த நல்ல தியேட்டரிலும் காணலாம்; நாங்கள் சென்றது ஐ மேக்ஸ் அனுபவம் ஒரு முறை தெரிந்து கொள்ளவே !

Sully - நிச்சயம் திரையில் காண வேண்டிய அருமையான படம் !

Monday, September 5, 2016

ஆந்திரா கோதாவரி ஆற்று படுகையில் ஒரு பயணம்

ண்மையில் ஆகஸ்ட் 15 லீவை ஒட்டி நண்பர்களுடன் - ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்று படுகையில் ஒரு ரிசார்ட்டில் சென்று தங்கி வந்தோம். இது பற்றி ஒரு சிறு தொகுப்பு


நாங்கள் சென்ற படகு 
சென்னையில் இருந்து ஆந்திரா - ராஜ முந்திரிக்கு பல ரயில்கள் செல்கின்றன. கோதாவரி ஆற்று படுகையில் உள்ள பல ரிசார்ட்களும் - ரயில் நிலையத்தில் இருந்தே படகில் செல்ல அழைத்து செல்ல வந்து விடுகிறார்கள். நாங்கள் சென்றது புனாமி ரிசார்ட். போலவே இன்னும் பல ரிசார்ட்களும் உண்டு.

கிளம்பிய நாளன்று எனது பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் கேக் கொண்டு வந்திருந்தனர்.  கேக் வெட்டி ரயிலில் பிறந்த நாள் கொண்டாடினோம் !

ஆகஸ்ட் 15, 2016 - ஒட்டி 3 நாள் லீவ் என்பதால் பலரும் எங்காவது பயணம் சென்றனர்.. எனவே ரயில் டிக்கெட்கள் ரொம்ப முன்னரே பல ஊர்களுக்கும் புக் ஆகி விட்டது; நாங்கள் ஒண்ணரை மாதம் முன்பு திட்டமிட்டோம். 5 குடும்பங்கள் சேர்ந்து சென்றோம். சற்று சுற்றி போகும் ரயில் தான் இருந்தது; சரி எப்படியும் அரட்டை அடித்த படி செல்ல போகிறோம் -பிரச்சனை இருக்காது என நினைத்தோம் 

 நீங்கள் செல்வதாய் இருந்தால் - சுற்றி போகும் ரயிலை விடுத்து சரியான ரூட்டில் செல்லும் ரயிலை தேர்வு செய்தல் நலம். மேலும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் மட்டுமே இங்கு செல்ல பிளான் செய்யவும். காரணம் அப்போது தான் கிளைமேட்  மிக நன்றாக இருக்கும். நாங்கள் சென்ற போது வெய்யில் மற்றும் மழை கலந்து இருந்தது. நிச்சயம் நவம்பர், டிசம்பர் எனில் இன்னும் அதிகம் என்ஜாய் செய்யலாம் 


உங்கள் ரயில் ராஜமுந்திரிக்கு காலை ஏழு மணிக்குள் சென்று விட்டால் - அங்கேயே குளித்து உடை மாற்றி விட்டு பின் படகிற்கு அழைத்து போகிறார்கள். தாமதமாக செல்லும் ரயில் என்றால் குளிக்காமல் நேரே படகிற்கு செல்ல வேண்டி உள்ளது. ரயிலில் 12 மணி நேரம் - பின் தொடர்ந்து படகில் 7 மணி நேரம் எனில் டயர்ட் ஆகி விடுகிறது. இதுவும் - நீங்கள் சீக்கிரம் செல்லும் ரயிலில் செல்ல ஒரு அவசிய காரணம் 

ராஜ முந்திரியில் இருந்து படகு துறைக்கு - ஒரு மணி நேர பயணம்.. வேனில் அழைத்து போகிறார்கள். பின் படகில் மாலை வரை பயணம்; அருகில் சிற்சில கோயில்களில் நிறுத்தி விட்டு தரிசனம்.. 

கோதாவரி ஆறு மிக பெரியதாக இருக்கிறது; கடலா - ஆறா என வியக்கும் வண்ணம் பெரிது. இவ்வளவு அகண்ட ஆறுகள் நாம் தமிழகத்தில் பார்க்க முடியாது 

படகு பயணத்தின் போது நம்மை entertain  செய்ய டான்ஸ் - பாட்டு - சின்ன சின்ன போட்டிகள் என நடத்துகிறார்கள் 

படகில் நண்பர்கள் குழுவுடன் ஒரு டான்ஸ் 
மாலை நாம் தங்குமிடம் சென்று சேர்கிறோம். தங்குமிடம் பல வகைகளில் உள்ளது. கரண்ட் கூட இல்லாத ரூம்  துவங்கி - ஏசி வசதியுடன் உள்ள ரூம் வரை;  நவ ம்பர் டிசம்பர் தவிர மற்ற மாதங்கள் எனில் ஏசி அரை தேர்ந்தெடுக்கவும். டிசம்பர் எனில் தேவை இருக்காது 


ஆற்று படுகையில் நமது தங்கும் இடம்  இருக்கிறது. அகன்ற பெரிய ஆறு, மலை என இயற்கையான சூழல்.. 


இங்கு தங்கும் இடம் எதிலும் செலபோன் டவர் எதுவுமே வேலை செய்யாது.. BSNL உட்பட !

எப்போதோ சென்று ஒரு நாள் தங்கும் நம்மை விடுங்கள்.. இங்கேயே உள்ள யாருக்கும் செல் மற்றும் லேண்ட் லைன்  தொலை பேசி கூட கிடையாது !! நம்பவே சிரமமான விஷயமாய் இருந்தது.. 
நாங்கள் தங்கிய அறைகள் 
ரிசார்ட்டில் விளையாட்டு, நல்ல சாப்பாடு , ஆற்றில் குளியல் என பொழுது கழிந்தது. சாப்பாடு சற்று காரம் எனினும் - சிக்கன், மீன் என அட்டகாசமாய் இருந்தது. ஆற்று குளியல் அனைவரும் ரொம்ப என்ஜாய் செய்தனர் 



காலை ஒரு மணி நேரம் அருகிலுள்ள கிராமத்தில் நடந்து வந்தோம்.  தெலுகு மட்டுமே அனைவருக்கும் தெரிகிறது; ஆங்கிலம் அநேகமாய் தெரியாது; நண்பர்களில் ஒரு சிலருக்கு தெலுகு தெரியும் என்பதால் சமாளிக்க முடிந்தது 


திரும்பும் போது படகு பயணம் இல்லை; வேனில் 2 மணி நேர பயணத்தில் ரயில் நிலையம் அழைத்து வருகிறார்கள் 

மிக குறைந்த செலவில் (வேன் - படகு சவாரி, சாப்பாடு, தங்கும் இடம் என அனைத்திற்கும் சேர்த்து செலவுகள் சில ஆயிரம் மட்டுமே) - தங்கும் இடம் - வசதிகள் [பற்றி முன்பே கேட்டு - உங்களுக்கு வேண்டியபடி புக் செய்வது அவசியம் !

நாங்கள் எடுத்த சில புகைப்படங்கள் (பெரும்பாலானவை நண்பன் பாலா மகன் - நவீன் எடுத்தவை) 














இறுதியாக சில வரிகள் :

1. நவம்பர், டிசம்பர் மாதங்கள் மட்டுமே - பயணம் திட்டமிடவும். மிக குளிரான சூழலில் நன்கு என்ஜாய் செய்யலாம்

2. காலை சீக்கிரம் செல்லும் ரயிலில் செல்க. குளித்து உடை மாற்றி விட்டு - படகு பயணம் துவங்கவும்

3. ஒரே குடும்பம் மட்டும் சென்றால் - நிச்சயம் போர் அடிக்கும்; சில நண்பர்கள் அல்லது உறவினர் குடும்பங்கள் சேர்ந்து சென்றால் மட்டுமே சிறப்பாக இருக்கும்

4. தங்குமிடத்தில் உள்ள வசதிகள் - உங்கள் தேவைக்கேற்ப பார்த்து - முன்பே கேட்டு தேர்வு செய்வது அவசியம்.
Related Posts Plugin for WordPress, Blogger...