Monday, July 25, 2011

தெய்வத்திருமகள் மற்றும் வேங்கை விமர்சனம்

தெய்வ திருமகள் 

கதை மட்டும் இன்ன பிற விஷயங்கள் நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இந்நேரம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் மட்டும் என் பார்வையில் ...

பிளஸ்

* குடும்பத்துடன் அமர்ந்து எந்த காட்சியிலும் நெளியாமல் பார்க்கிற மாதிரி ஒரு படம் நீண்ட நாள் கழித்து தந்தமைக்கு விஜய்க்கு பாராட்டு.

* குழந்தை சாரா கொள்ளை அழகு. தமிழ் புரியாது என்பது தெரியாத அளவில் மிக நல்ல நடிப்பு. (இடைவேளைக்கு பின் சாராவிற்கு வேலை மிக குறைவே)

* விக்ரம் நடிப்பை பலர் ரசித்தும், சிலர் விமர்சித்தும் ("எந்த ஐந்து வயது குழந்தை இப்படி பேசுகிறது?") எழுதுகிறார்கள். ஐந்து வயது குழந்தையின் மனநிலை என்பதை விட, மன நிலை சரியில்லாதவர் என்பது தான் சரி. அந்த விதத்தில் அவர் நடிப்பு நிச்சயம் அருமை. படத்தின் இறுதியில் விக்ரம் & குழந்தை சாரா கோர்ட் உள்ளே மற்றும் வெளியே சந்திக்கும் காட்சிகளில் அழுபவர் பலர்.. (என்னையும் சேர்த்து )

*சந்தானம் நகைச்சுவை கலக்கல். தமிழ் சினிமாவில் தற்சமயம் போட்டிக்கு ஆளே இல்லாமல் நம்பர் ஒன் ஆக இருக்கிறார் சந்தானம். இன்னும்  கொஞ்சம் இவருக்கு போர்ஷன் தந்திருக்கலாம் என்கிற அளவு கிடைக்கிற கேப்பில் எல்லாம் விளையாடுகிறார்.

* வக்கீலான சந்தானம் கோர்ட் வாசலில் நின்று கிளையன்ட் பிடிக்க அலைவது நீங்கள் சைதாப்பேட்டை அல்லது எக்மோர் கோர்ட் சென்றால் பார்த்திருக்கலாம். வாய்தாவுக்கும், ஜாமீனுக்கும் இத்தகைய வக்கீல்கள் இருக்கவே செய்கின்றனர். அனுஷ்காவின் மற்றொரு பெண் உதவியாளரை பார்த்து நாசரின் ஜூனியர் ஜொள் விடுவதும், அதை வைத்து அவர்கள் பக்கத்து விஷயங்கள் கறப்பதும் கூட சுவாரஸ்யமாய் சொல்கின்றனர்.

* அனுஷ்கா இந்த படத்திற்கு மிக பெரிய பிளஸ். அதிக மேக் அப் இன்றி இயல்பான அழகுடன் அசத்துகிறார். வெறும் அழகு மட்டுமின்றி நடிக்கவும் செய்கிறார். சொல்ல போனால் பிற்பகுதியில் விக்ரம் வீட்டுக்குள் அடைந்தே கிடக்க,  கதை அனுஷ்கா மற்றும் நாசர் இருவரின் தோள்களில் நன்றாகவே பயணம் செய்கிறது. விக்ரமிற்கு மீண்டும் கடைசி 15 நிமிடங்களில் தான் வேலை !

* "ஆரிரோ" & " ஒரே ஒரு ஊருக்குள்ளே" பாடல்களும், படமாக்கிய விதமும் அருமை. பின்னணி இசையும் உறுத்தாமல் உள்ளது

* படத்தின் கோர்ட் சீன்களும் இறுதி காட்சியும் படத்தின் நிச்சயமான ஹை லைட்ஸ்.

மைனஸ்

* ஐ யாம் சாம் படத்தின் அப்பட்ட தழுவல் என்பது நிச்சயம் உறுத்துகிறது. டைட்டானிக்கை காப்பி அடித்ததாலேயே எனக்கு மதராச பட்டினம் அதிகம் பிடிக்காமல் போனது. ஐ யாம் சாம் பார்த்ததில்லை எனினும் அந்த படம் பற்றி படிக்கும் போது, அதிலிருந்து முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை, ("பபபா.. பப்பா" பாட்டு உட்பட) எந்த அளவு உருவியுள்ளனர் என்பது தெளிவாக புரிகிறது. இது படத்திற்கு தர வேண்டிய மரியாதையை குறைத்து விடுகிறது

* படத்தின் ஆண்டி கிளைமாக்ஸ் எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. விக்ரம் தன் குழந்தையை பிரிந்து இருக்கும் போது ஒவ்வொரு பார்வையாளனும், தானும் அந்த மனநிலையில் இருந்து குழந்தை தந்தையுடன் சேர வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் குழந்தை வந்த முதல் நாள் இரவே விக்ரம் அவளை மீண்டும் தன் மாமனார் வீட்டிலேயே விடுகிறாராம் ! அப்போ தான் அவர் நல்லா படித்து "டாக்டர்" ஆவாராம் !! இது படத்தை சோகமாக முடித்தால் தான் பார்ப்பவர்கள் "சோக மனதோடு" செல்வார்கள் என்பதால் வலிந்து செய்யப்பட ஒன்று. அல்லது ஐ யாம் சாம் படத்து முடிவு இதே என்பதால் அதே போல் முடித்துள்ளார்கள்.

"டாக்டர் ஆவது இருக்கட்டும். தந்தை இன்றி அந்த குழந்தை ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இல்லாததாக காட்டுகிறார்களே. அப்படி அவள் தந்தையை பிரிந்து இருப்பது தேவையா? படித்து டாக்டர் ஆகவும் ஒரு மன நிலை வேண்டும் தானே? மனம் முழுக்க வருத்தம் இருந்தால் படிக்க முடியுமா? விக்ரமிற்கு அவளை படிக்க வைக்க பணமில்லை என்பதை காரணமாக காட்டுகிறார்கள். ஆனால் விக்ரமின் பேக்டரி ஓனரே மிக நல்லவராய் உள்ளார்.  அனுஷ்கா விக்ரம் மேல் காதல் கொண்டு பைக்கில் போகும் போதே மனதுக்குள் டூயட் எல்லாம் பாடி விட்டார். அவர்கள் படிக்க வைக்க மாட்டார்களா? இந்த முடிவு உண்மையில் செம கடுப்பை தந்தது. " நந்தவனத்தில் ஒரு ஆண்டி" பாடல் தான் நினைவுக்கு வந்தது. உடைத்தது விக்ரம் அல்ல. இயக்குனர் விஜய்.

* படத்தில் நாடக தன்மையை சற்று குறைத்திருக்கலாம். உதாரணத்திற்கு ஒரு காட்சி. உடல் நிலை சரியில்லாத நாசர் குழந்தைக்கு ஓடி சென்று மருந்து வாங்கி வருகிறார் விக்ரம். அதுவாவது பரவாயில்லை. அப்போது வீட்டுக்கு வந்த டாக்டர் " அடடா நான் மருந்து சீட்டில் எழுதிய அதே மருந்தை வாங்கிட்டு வந்திருக்கீங்களே!" என்கிறார். இது மாதிரி " சாரி கொஞ்சம் ஓவர்" காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில்

மனதை நெகிழ்த்தும் ஒரு நல்ல படம் !  ஐ யாம் சாம் பார்க்காத நாம் நிச்சயம் ரசித்து பார்க்கவே செய்வோம். விக்ரம், சந்தானம், அனுஷ்கா, நாசர். குழந்தை சாரா என நம்மை அசத்தும் நட்சதிரங்களுக்காகவே நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !

கொசுறு : வேங்கை : குட்டி விமர்சனம்

ஓரளவு நல்ல கதை. சில சுவாரஸ்யமான திருப்பங்கள்..தொடக்கத்தில் " நல்லா தானே போய் கிட்டு இருக்கு !!" என்று தான் நினைத்தேன். ஆனால் போக போக " முடியலை!!"

தனுஷ், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண் மட்டுமல்ல சார்லி, பயில்வான் ரங்கநாதன் போன்ற ஐம்பதுக்கும் அதிகமான குட்டி பாத்திரங்கள். கதையை நன்றாக எடுத்து செல்ல வாய்ப்பு இருந்தும், மோசமான திரைக்கதையால் சொதப்பி விட்டார் அருவா புகழ் ஹரி.

அருவாளை கண்டாலே அலறும் அளவுக்கு கடைசி ஒரு மணி நேரம் சோதிக்கிறது. தனுஷ் எத்தனை பேரை கொல்கிறார்! அது குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாமல் (ஒருவனை கொன்றாலே யாராலாவது நிம்மதியாய் தூங்க முடியுமா?) வலம் வருகிறார்.

தனுஷ் அருவா தூக்கும் போது நமக்கு சிரிப்பதா அழுவதா என தெரிய வில்லை. " ஒரு அருவாளே அருவாள் தூக்குகிறதே!" என விவேக் மாதிரி சொல்ல வேண்டியது தான்.

கஞ்சா கருப்பு காமெடி குமட்ட வைக்கும் அளவுக்கு அருவருப்பாக உள்ளது. சிரிப்பு என்பது மருந்துக்கும் வர வில்லை.

தமன்னா மற்றும் குடும்பத்தார் ராஜ் கிரனை கொல்வதே 15 ஆண்டுக்கும் மேலாக வாழ்க்கை லட்சியமாக கொண்டுள்ளனர். ஆனால் ராஜ் கிரண் அவர்கள் வீட்டிற்குள் வந்து " உங்க அப்பாவை நான் கொல்ல வில்லை. வேறு ஒருவன் கொன்றான்" என ரெண்டு வரிங்க. ரெண்டே ரெண்டு வரி பேசியதும், தமன்னா குடும்பமே கண்ணீர் விட்டு ராஜ் கிரண் சொல்வதை நம்பி, அவரிடம் மன்னிப்பு கேட்கிறது ! அருவா ஹரி சார் .. நல்லா இருக்குங்க இந்த சீன். செமையா தின்க் பண்ணிருக்கீங்க !

இந்த இயக்குனர் அவ்வப்போது "சாமி", " சிங்கம்" என்ற நல்ல படங்கள்  தருவார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஹரி !!
****
தெய்வ திருமகள் : நிச்சயம் பார்க்கலாம் 
வேங்கை : சன் டிவியில் வரும் போது (பொழுது போகாட்டி) பார்த்துக்கலாம்! 

Sunday, July 24, 2011

சென்னை அரசு பள்ளி: அதிரடியாய் ஒரு விழா: படங்களும் வீடியோவும்

சமீபத்தில் புழுதிவாக்கம் அரசு பள்ளியில் பத்து, பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களை பாராட்டி  அவர்களுக்கு பரிசுகள் தந்தோம். அவர்கள் ஒன்பது, பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண்களை வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பில் மட்டும் வெவ்வேறு பிரிவுகள் இருப்பதால் ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று பரிசாக ஒன்பது பரிசுகள் தரப்பட்டன.

நண்பர்கள் வழக்கறிஞர் அமுதன், காக்னிசன்ட் நிறுவனத்தில் பணி புரியும் கிருத்திகா, குமரன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணி புரியும் நண்பர் தெய்வ சிகாமணி, மற்றும் நான் விழாவிற்கு சென்றிருந்தோம்.

விழாவில் எடுத்த புகை படங்களும் சிறு வீடியோவும் உங்கள் பார்வைக்கு

                                     
                      தினசரி காலை Prayer-ல் தியானம் செய்யும் மாணவர்கள்  

    எங்களை அறிமுகபடுத்தி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பேசுகிறார்.

        நண்பர்/ வழக்கறிஞர் அமுதன் மாணவர்களிடையே பேசுகிறார்
***
நான் பேசியதன் வீடியோ வடிவம் இதோ. நம்ம குரல் விண்ணை தாண்டி வருவாயா படத்து கணேஷ் மாதிரி கர கரன்னு இருக்கும். குரல் சரியா கேட்கலைன்னா சவுண்ட் கூட வச்சி கேட்கலாம் .  




மேலே உள்ள படத்தில் ஜெயலட்சுமி பதினோராம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்தமைக்கு பரிசு வாங்குகிறார். ஜெயலட்சுமி
குறித்து சென்ற முறை எழுதி, அதனை வாசித்த அரசு என்கிற முகம் தெரியாத நண்பர், ஜெயலட்சுமிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.

இப்போதெல்லாம் காலை அலுவலகம் செல்லும் நேரங்களில் சில முறை பள்ளி சென்று கொண்டிருக்கும் ஜெயலட்சுமியை பார்ப்பேன். எப்போது என்னை பார்த்தாலும் தன் சைக்கிளை நிறுத்தி விட்டு ஆசிரியருக்கு வைப்பது  போல் ஒரு சல்யுட் வைப்பார். " சார் நல்லா இருக்கீங்களா?" என நான் பேசு முன் கேட்பார். பதிலுக்கு "நல்லா படி" என வழக்கமான அறிவுரையை சொல்லி விட்டு கிளம்புவேன்


   மாணவன் ஒருவருக்கு நண்பர் தெய்வசிகாமணி பரிசு வழங்குகிறார்.

11-ஆம் வகுப்பில் பள்ளியில் மூன்றாம் இடம் பெற்ற அருள் அரசு கிருத்திகாவிடம் பரிசு வாங்குகிறார். இவர் பேச்சு போட்டியில் மாநில அளவில் பல்வேறு பரிசுகள் பெற்றவர்.

வலது கோடியில் கையை கட்டிய படி நிற்கும் பள்ளி இயற்பியல் ஆசிரியர் திரு. ரவி அவர்கள் தான் இந்த விழா நடத்த உறுதுணையாய் இருந்தவர்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கப்படுகிறது 

குறுகிய காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டது இந்த விழா. (அப்பாடா !!அதிரடி என்கிற பதிவின் தலைப்புக்கு ஒரு காரணம் சொல்லியாச்சு. எல்லாம் உங்களை உள்ளே வர வைக்க தான்!! ) விழா முடிந்ததும் தலைமை ஆசிரியரும் ரவி சாரும் எங்களிடம் " தொடர்ந்து வந்து மாணவர்களை ஊக்குவியுங்கள்; இவர்களுக்கு இந்த encouragement தான் தேவை" என்றனர்.

வருகிற சனிக்கிழமை காக்னிசன்ட் நிறுவனத்துடன் இணைந்து இதே பள்ளியில் ஜூனியர் அச்சீவர் என்கிற நிகழ்ச்சி (தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக) ஏற்பாடு செய்துள்ளோம். ஜூனியர் அச்சீவர் பற்றி ஒரு   பதிவு படங்கள் மற்றும் வீடியோவுடன் கூடிய  விரைவில் எதிர்பாருங்கள் !

காலை நேரம். அலுவலகம் செல்ல வேண்டிய நேரம் என்பதால் அதிக நண்பர்களை அழைக்க வில்லை. வருடா வருடம் இதுபோல முதலிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என்பது ஆசை. ம்..பார்க்கலாம் !

Tuesday, July 19, 2011

செல்ல பிராணிகள் -செல்ல குழந்தைகள்:இனிய அனுபவம்


இந்த படத்தில் உள்ள பெண் தான் இந்த பதிவின் நாயகி. என் மேல் ஏறி என்ன அமர்க்களம் செய்கிறாள் என்பதை இந்த வீடியோவில் பார்த்து விடுங்கள்.


இவளது பிற கூத்துகளை பற்றி சொல்லும் முன் இன்னும் சிலரை அறிமுகம் செய்து விடலாம்.

எங்கள் பக்கத்து வீட்டில் நான்கு நாய்கள் வளர்க்கிறார்கள். அதில் வினய் என்கிற வினு பற்றிய அறிமுகம் ...






பக்கத்துக்கு வீட்டு நாய்களில் எங்கள் வீட்டின் உள்ளே உரிமையாக வந்து விளையாடுவது வினய் மட்டும் தான். பிறந்தது முதல் எங்கள் வீட்டில் அனைவருக்கும் செல்லம். ஆனால் பின் அவனை வேறு வீட்டில் எடுத்து சென்று வளர்த்தனர். அப்போது எங்களுக்கு (குறிப்பாய் என் பெண்ணுக்கு) செம ஏமாற்றம். மறுபடி அவனை இங்கேயே கூட்டி வந்து விட, அவன் அமர்க்களம் இப்போது தொடர்கிறது.

எங்கள் வீட்டில் யாரை கண்டாலும் இரண்டு காலையும் தூக்கி நின்றபடி கொஞ்சுவான். நாங்களும் நின்று பேசவேண்டும். வீட்டுக்கு வந்தாலே சாப்பிட ஏதாவது தருவோம் என ரொம்பவும் எதிர்பார்ப்பான். உணவு ஏதும் தராவிடில், இவன் கெஞ்சுவதை பார்க்க வேண்டுமே !  தரையில் படுத்து, கிட்டத்தட்ட காலில் விழுகிற மாதிரி பாவனை செய்வான். சற்று நேரத்தில் ஒண்ணும் கிடைக்கா விடில் ஓடி போய் விடுவான் (நாங்கள் உணவு தரக்கூடாது என்பது ஓனர்களின் கண்டிப்பு..)

நாங்களும் ஏதாவது வளர்ப்பு பிராணி வளர்க்கலாம் என லவ் பேர்ட்ஸ் இந்த கோடையில் வளர்க்க ஆரம்பித்தோம். நான்கு புறாக்கள். ஒவ்வொன்றுக்கும் பியூட்டி, கியூட்டி என்றெல்லாம் பெயர் வைத்து வளர்த்தாள் எங்கள் பெண். ஆண் புறாக்கள் இரண்டையும் கொஞ்ச நாளிலேயே பெண் புறாக்கள் கடித்து, கடித்து கொன்று விட்டன.




இப்படி நான்காக இருந்த பறவைகள் இரண்டாக மாறி விட்டன. இந்த இரண்டு பெண்களும் (வெள்ளை& மஞ்சள்) ஓரிரு மாதங்கள் இருந்தன. பின் கடந்த வாரத்தில் ஒரு நாள் வெள்ளை புறா எங்களை ஏமாற்றி விட்டு பறந்து விட்டது. (உடனடியாக அதனை காகம் கொத்தி சாப்பிட்டது தனி சோக கதை)




நான்கு புறாக்கள் இரண்டாக ஆன கால கட்டத்தில் தான் நண்பர் ஒருவர் மூலம் வந்து சேர்ந்தது கிளி.

வந்த ஒரு சில நாட்களிலேயே எங்கள் அனைவரையும் அழகாலும், குரலாலும் தன் வசமாக்கி விட்டது. சிறு குழந்தை வீட்டில் இருந்தால் இருக்கும் சந்தோஷம் இப்போது வீட்டில்..

காலை வெளிச்சம் வரும் வரை சத்தமின்றி இருக்கும். வெளிச்சம் வந்தும் நாங்கள் எழா விடில், "கீச் கீச்" சென்று கத்த ஆரம்பித்து விடும், போலவே எழுந்தும் நாங்கள் எங்கள் வேலையை பார்த்து கொண்டிருந்தால், அதனை பார்க்க வில்லை என கத்தும். அருகில் நாம் போய் இருந்தால் பேசாது இருக்கும். நகர்ந்தால் மறுபடி"கீ கீ". 

பிஸ்கட், அரிசி, சப்பாத்தி, தானியம், அப்பளம், கேரட் ஆகியவை நன்கு சாப்பிடும். ஒரு சில நாள் சரியாக சாப்பிடா விட்டால் நமக்கு வருத்தமாகி விடும். பின் மறு நாள் முதல் வழக்கம் போல் சாப்பிடும்.

பிஸ்கட், அப்பளம் போன்றவை சாப்பிடும் அழகு அடடா! ஒரு காலில் நின்று கொண்டு மறு காலை, கை போல் உபயோகித்து, காலால் பிடித்தவாறே சாப்பிடும். இதனை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை.

மேலே உள்ள படம் அப்படி ஒரு முறை பிஸ்கட் சாப்பிடும் போது எடுத்தது தான். பிஸ்கட் தந்தால் காலை நீட்டி வாங்கி கொள்ளும். பசி இருந்தால் உடனே சாப்பிடும். இல்லா விடில் வாங்கி விட்டு உடனே தொப்பென்று கீழே போட்டு விடும். சப்பாத்தி மட்டும் எப்போது தந்தாலும் உடனே முழுதும் சாப்பிட்டு விடும்.


அதன் கூண்டு எப்போதும் திறந்தே இருக்கும். தனக்கு வேண்டிய போது வெளியே வந்து தன் கூண்டின் மீதோ அருகிலுள்ள லவ் பேர்ட்ஸ் கூண்டின் மீதோ உட்கார்ந்து கொள்ளும். நாம் நினைக்கும் போதோ, விரும்பும் போதோ வராது. தனக்காக தோன்றினால் தான் வரும்.

தமிழ் படத்தில் " பச்சை மஞ்சள் சிகப்பு தமிழன் நான்" என ஒரு பாட்டு வரும். நாங்கள் அனைவரும் இப்போது அதிகம் பாடுவது இந்த வரியைத்தான். காரணம் கிளி இந்த மூன்று நிறங்களால் தான் ஆனது. உடல் பச்சை; வால் அருகில் மஞ்சள் நிறம், மூக்கு சிகப்பு நிறம்.

கிளிக்கு காது என்கிற ஒன்று இருக்கிற மாதிரி தெரிய வில்லை. ஒரு வேளை இறகுகள் மறைத்துள்ளதோ என்னவோ !


எங்கள் வீட்டிற்கு வெளியில் சற்றே பெரிய தொட்டிச்செடி உள்ளது. அதில் ஏற்றி விட்டால் மேலும் கீழும் போய் வந்து செம குஷி ஆகி விடும். மேலே உள்ள படத்தில் அந்த செடியில் உட்கார்ந்து கொண்டு எப்படி பார்க்கிறது பாருங்கள். அதில் ஏறி விட்டால் அப்புறம் நம்மிடம் வராது

செடியில் கிளி நடப்பதை இந்த வீடியோவில் பாருங்கள் 






கிளி நம் கைக்கு வருவது ரொம்ப கஷ்டம். நம்ம ஹவுஸ் பாஸ் தான் இதற்கான பெரும்பாலான வேலைகள் செய்வதால் அவரிடம் மட்டும் கையில் ஏறி கொள்ளும். பின் அவர் நம்மிடம் தந்தால் வாங்கி கொள்ளலாம். கைக்கு வந்த உடன் பிரேஸ்லெட், மோதிரம் அல்லது வளையல் இப்படி ஏதாவது ஒன்றை கடிக்க ஆரம்பித்து விடும். பல் வளர்கிற சிறு குழந்தை ஏதாவது கடிக்க துடிப்பது போல் கிளி கடிக்க துடிக்கும்.

காலை நேரம் கூண்டுக்குள்ளேயே மிக வேகமாக வாக்கிங் செல்லும். குறைந்த தூரமே ஆயினும் வேக வேகமாக நடப்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். காலை மட்டும் தான் இப்படி நடக்கும் .
அது குளிப்பது பார்க்க வேடிக்கையாக இருக்கும். சில நேரம் கூண்டுக்குள்ளும் சில நேரம் தண்ணீர் கூண்டின் வெளியே இருந்தால் வெளியே வந்தோ குளிக்கும். வாரம் இரு முறை குளிக்கிறது. வெள்ளிகிழமை குளித்தால் "பொம்பளை கிளி இல்ல. அதான் வெள்ளி கிழமை குளிக்குது" என கிண்டல் செய்வோம். பெரும்பாலும் நாங்கள் அனைவரும் இருக்கும் போது ஞாயிறு அன்று ஒரு முறை குளிக்கும். அப்படி எடுத்த ஒரு வீடியோ இதோ




நாட்டி என்பது இதன் பெயர். ஆனால் நட்டு, பச்சை, செல்லம், பாப்பா, அழகு, குட்டி, வாக்கிங் ராணி என்று இன்னும் என்னென்ன பெயர்களோ கூடி கொண்டே போகிறது.

நாட்டி எவ்வளவு நாள் எங்களுடன் இருப்பாளோ தெரியாது! அவள் இருக்கும் இந்த காலம் இனிமையாக உள்ளது. வளர்ப்பு பிராணி வளர்ப்பது நிச்சயம் நல்ல stress relief என உணர முடிகிறது. 

எங்கள் வாழ்வை இனிமையாக்கும் தேவதையே ...நீடூழி வாழ்க !!

டிஸ்கி: எப்போதும் எனக்காகவோ, பிற பதிவர் நண்பர்களுக்காகவோ எழுதுபவன் பெண் & மனைவிக்காக ஒரு பதிவு எழுதி உள்ளேன். அவர்களும் முதல் முறை எனது பதிவு ஒன்றை முழுவதும் வாசிப்பது இதுவாக தான் இருக்கும் !! ம்ம் என்னென்ன கமெண்ட் அவர்களிடமிருந்து வர போகுதோ !!

Thursday, July 14, 2011

காமராஜ் = கருப்பு காந்தி. திண்ணையில் வெளியான புத்தக விமர்சனம்

தமிழத்தில் பிறந்த தலைவர்களில் என்னை மிக கவர்ந்தவராக எப்போதும்  காமராஜர் இருக்கிறார். அதிகம் படிக்காமலே முதல்வர் பதவிக்கு உயர்ந்தவர், தமிழகத்தில் கல்விக்கு தந்த உத்வேகம், லஞ்ச ஊழல்களில் சிக்காத நேர்மை, இந்திய அரசியலில் அவருக்கிருந்த ஆளுமை இப்படி காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். எனக்கு விபரம் தெரியும் முன்பே காமராஜர் இறந்து விட்டார் என்றாலும் அவர் குறித்த எந்த தகவலையும் ஆர்வமாய் படிப்பேன். அப்படி வாசித்தது தான் கிழக்கு பதிப்பக வெளியீடான காமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை என்கிற புத்தகம். இதனை காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ல்  பகிர்வதில் மகிழ்கிறேன். 

காமராஜரின் இளமை பருவத்திலிருந்து துவங்குகிறது புத்தகம் . ஆறாவது வரை மட்டுமே படித்த காமராஜர் தந்தை சிறு வயதில் இறந்ததால், மாமாவின் துணி கடையில் வேலை பார்க்கும் நிலை. அப்போதே அரசியல் மீது ஈடுபாடு. சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு ஆர்வமாக உழைத்துள்ளார். 

காமராஜர்  இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த பின் தான் திருமணம் செய்து கொள்வது என உறுதியாக இருந்திருக்கிறார். விடுதலை கிடைத்த பின் ஏனோ திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை.

விடுதலை போராட்டத்தில் மூன்று முறை சிறை சென்று ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்திருக்கிறார். இதில் மூன்றாவது முறை சிறை சென்ற வரலாறு சுவாரஸ்யமானது. "வெள்ளையனே வெளியேறு" கோஷம் ஒலித்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியிருக்கிறார் காமராஜர். அப்போது காந்தி, நேரு உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டது தெரிய வர ரயில் நிலையத்தில் தலையில் முண்டாசு கட்டி, தலையில் மூட்டை வைத்து கொண்டு கிராமத்தான் மாதிரி போலிசுக்கு டிமிக்கி தந்து தப்பி சென்று  விட்டார் மாநாட்டில் எடுத்த முடிவுகளை முக்கிய காங்கிரஸ் புள்ளிகள் அனைவருக்கும் துண்டு பிரசுரம் மூலம் பல ஊர்களுக்கு சென்று சேர்த்தவர், அதன் பின் தானாகவே போலீசில் சென்று சரண் அடைந்துள்ளார். 

ராஜாஜியின் குல கல்வி திட்டம் தான் காமராஜர் முதல்வராக காரணமாக அமைந்துள்ளது. ராஜாஜி கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுதும் எதிர்ப்பு வலுக்க முதல்வரை மாற்ற வேண்டும் என்ற முடிவை காங்கிரஸ்


எடுத்துள்ளது. இது தெரிந்து ராஜாஜி தானாகவே ராஜினாமா செய்து விட்டு தன் நம்பிக்கையாளர் சி. சுப்ரமணியத்தை முன்னிறுத்தியுள்ளார். அவர் முதல்வரானால் குல கல்வி தொடரலாம் என்ற எண்ணம் இருந்ததால் அவரை எதிர்த்து யாரேனும் போட்டியிட்டாக வேண்டிய நிலை. எனவே காமராஜர் நின்று வென்று, பின் முதல்வரும் ஆகியுள்ளார். முதல்வர் ஆனபின் குல கல்வி திட்டத்தை ஒழித்து மட்டுமின்றிதனக்கு எதிராக போட்டியிட்ட சி. சுப்ரமணியத்தை கூப்பிட்டு தனது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் தந்துள்ளார். 

காமராஜருக்கு ஆங்கில அறிவு அதிகம் இல்லை என்று சொல்வார்கள். இது தவறு என்பதற்கு பல உதாரணங்கள் தருகிறார் நூல் ஆசிரியர். காமராஜர் முதல்வராக இருந்த போது "காந்திஜி படத்தை எல்லா அரசு அலுவலகங்களில் hang செய்யவும்" என எழுதி கொண்டு வந்துள்ளனர். அதில் hang     என்பதற்கு பதிலாக “install செய்யவும்"என்று மாற்றி கொண்டு வாருங்கள் என்றாராம் காமராஜர் ."Hang" என்றால் தூக்கில் தொங்க விடுவது போல் அர்த்தம்/ நினைவு வரும் என காரணம் சொன்னாராம். அதே போல சாஸ்திரி பிரதமராகவும் இவர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்த போது ஒரு சிக்கலான கேள்விக்கு பிரதமர் பதில் சொல்ல தயங்ககாமராஜர் சரளமாக ஆங்கிலத்தில் பதில் சொல்ல, சாஸ்திரி மிக சரியாக சொன்னீர்கள் என்று பாராட்டினாராம். 

மதிய உணவு திட்டம் கொண்டு வந்தது தான் தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏழை குழந்தைகள் பள்ளிக்கு வர காரணமாக அமைந்தது. இதனை துவங்கிய போது, மிக அதிக செலவாகும் என அரசு அதிகாரிகளிடமிருந்து எதிர்ப்பு வர, அவற்றை மீறி அதை நடைமுறைப்படுதியிருக்கிறார். இன்றளவும் காமராஜர் இதனால் அன்புடன் நினைவு கூறப்படுகிறார். அவரது மிக புகழ் பெற்ற திட்டம் இது தான்.

ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்த போது திருச்சி பாய்லர் தொழிற் சாலை, தஞ்சை மருத்துவ கல்லூரி துவக்கம் என தொழில் துறை, விவசாயம், மின்சாரம் என பல துறைகளிலும் தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்றது. 

நேருவின் புகழ் குறைய துவங்கிய காலத்தில் காமராஜர் கொண்டு வந்த திட்டம் தான் " கே பிளான்". இதன்படி காங்கிரசின் முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, கட்சி பணிக்கு திரும்பினர். காமராஜரும் இதனால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பிறகு  அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டார்.   காங்கிரஸ் தலைவராக இருந்த போது இரண்டு முறை பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இவரிடம் வந்துள்ளது. நேரு இறந்த போது சாஸ்திரி பிரதமரானதும், பின் அவர் மறைந்ததும் இந்திரா காந்தி பிரதமர் ஆனதும் இவர் யோசனை


மற்றும் முயற்சிகளால் தான். இதனால்தான் கிங்மேக்கர் என பெயர் பெற்றார். 

தூக்கத்தில் மிகுந்த நாட்டமுள்ளவர் காமராஜர். இரவில் படுத்த உடன் தூங்கி விடும் இவர், பெருத்த குறட்டை விடும் பழக்கமுள்ளவர் ! தினமும் மதியம் தூங்கும் வழக்கம் எப்போதும் உண்டு. இவர் உயிர் பிரிந்தது கூட மதிய தூக்கத்தின் போது தான் !!

காமராஜரை அவர் திருமலை பிள்ளை இல்லத்தில் வந்து சந்திப்பவர்களை, அவரை பேட்டி எடுப்பவர்களை  " சாப்பிடுகிறீர்களா?"   என்று கேட்கவே மாட்டாராம். காரணம் இவருக்கு உப்பு, காரம் இன்றி உணவு சமைக்கப்படுமாம். "இதனை மற்றவர்களை சாப்பிட சொல்லி எப்படி கஷ்டபடுத்துவது?"  என்று தான் இவர் சாப்பிட சொல்ல மாட்டாராம். இரவு உறங்கும் முன் " தன்னை பார்க்க வந்த எல்லாரும் போய் விட்டனாரா?" என்று கேட்பாராம். சிலர் நேரில் வந்து பேச தயங்கியபடி கூச்சத்துடன் வெளியில் இருப்பார்கள்; அப்படி பட்டவர்களையும் கடைசியாய் கூப்பிட்டு பேசி அனுப்புவாராம் . 

முதல்வராய் இருந்த போது, மாதம் 150  ரூபாய் கேட்ட தாய்க்கு 120  ரூபாய் தான் அனுப்பி வந்திருக்கிறார். " என் சம்பளத்தில் இவ்வளவு தான் அனுப்ப முடியும்" என்பாராம். அம்மாவை அடிக்கடி சென்று கூட பார்க்காது "வேலை, வேலை" என சுற்றி வந்தவர்தன்னிடம் வேலை பார்த்தவர்கள் மீதும் அவர்கள் உடல்நிலை மீதும் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்திருக்கிறார். 

நேரு பிரதமராக இருந்த காலத்தில் காமராஜருக்கு நேரு கையால் சிலை திறக்கப்பட்டுள்ளது. " உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை திறப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்றாலும் ஒரு உண்மையான மக்கள் தலைவராக காமராஜர் இருப்பதால் இதை நான் செய்கிறேன்" என்று பேசினாராம் நேரு.

அரசியலில் தன்னால் வளர்க்கப்பட்ட இந்திரா காந்தியின் பிற்கால நடவடிக்கைகள் குறிப்பாய் எமர்ஜன்சி கொண்டு வந்தது தான் இவரை மிகவும் மனதளவில் நிலை குலைய வைத்தது. இறக்கும் அன்று கூட அவரது கவலை அதுவாக தான் இருந்தது என சொல்லப்படுகிறது. 

நாட்டுக்காகவே வாழ்ந்து மறைந்த இவர் இறந்த போது அவர் சொத்து பத்து கதர் சட்டை, வேஷ்டி மற்றும் நூறு ரூபாய் பணமும் மட்டுமே !!! 

ஒரு சூரியன். ஒரு சந்திரன். ஒரு காமராஜர்! 

நூலின் பெயர்:"காமராஜ்:கருப்பு காந்தியின் வெள்ளைவாழ்க்கை 
விலை: ரூ. 60
வெளியீடு : கிழக்கு பதிப்பகம் 
ஆசிரியர்: நாகூர் ரூமி 

திண்ணை ஜூலை 2தேதியிட்ட இதழில் வெளியானது  

Monday, July 11, 2011

வானவில்:பதிவர் பதில்:பின்னூட்டமா..ஹிட்டா & சூப்பர் சிங்கர் மாளவிகா

டிவி பக்கம் :சூப்பர் சிங்கர்
சூப்பர் சிங்கரில் இவ்வாரம் பக்தி பாடல் சுற்றில் யாரையும் வெளியேற்ற வில்லை.தற்போதுள்ள கடைசி ஒன்பது பேரில் மூவர் மட்டுமே பெண்கள். இதில் இறுதி போட்டிக்கு எப்படியும் இரு பெண்களாவது வருவார்கள். அந்த இருவர் பூஜா மற்றும் மாளவிகாவாக இருக்கும் என்பது என் கணிப்பு. இந்த இருவரையும் விட அந்த மூன்றாவது பெண்ணான தன்யஸ்ரீக்கு என்ன ஒரு குரல் ! நாம் இது வரை கேட்ட எந்த பெண் குரல் போலும் இல்லாது Very very Unique Voice ! துரதிர்ஷ்ட வசமாக இவரது performance level கடந்த சில வாரங்களாக குறைந்து கொண்டே போகிறது. எப்போது வேண்டுமானாலும் வெளியேற்ற படலாம் என்கிற நிலையில் தான் உள்ளார். ஆண்களில் சத்ய பிரகாஷ் மற்றும் சாய் சரணுக்கு இறுதி கட்டம் வரை செல்ல வாய்ப்புகள் உண்டு.

தற்சமயம் நான் மாளவிகாவை ஆதரித்து கொண்டிருக்கிறேன். பாட்டோடு ஒன்றி, அனுபவித்து இவர் பாடுவதில் எவரும் impress ஆகி விடுவார்கள். சூப்பர் சிங்கர் சீனியர் டைட்டில் இதுவரை எந்த பெண்ணும் ஜெயிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம்: கிளி பேச்சு கேட்க வா

எங்கள் நண்பரின் நண்பர் ஒருவர் வேலை மாற்றம் ஆகி வெளியூர் சென்றதால் அவர் வளர்த்த கிளியை யாருக்கேனும் கொடுத்து செல்ல எண்ணினார். நாங்கள் வாங்கி வளர்க்கிறோம் என சொல்ல வீட்டுக்கு வர சொல்லியிருந்தார். குட்டி குழந்தைகள் இருக்குமே என அல்வா வாங்கி சென்றேன். இது வரை பார்க்காத தனக்கு இனிப்பு வாங்கி வந்தது குறித்து ஆச்சரியப்பட்டு பேசிக்கொண்டே இருந்தார். அவரது குடும்பம் அவருக்கு முன்பே ஊருக்கு சென்று விட, இவர் மட்டும் பொருட்களை ஏற்றி விட்டு மறு நாள் கிளம்ப ஆயத்தமாயிருந்தார். கிளி மேல் என்ன ஒரு பாசம் அவருக்கு !! ஒவ்வொரு பக்கமாய் அதனை நின்று நின்று பார்த்தார். கிளி என்னென்ன சாப்பிடும், எப்போது தூங்கும் என்ற விபரங்கள் எல்லாம் சொல்லி கொண்டே இருந்தார். கிளிக்கூண்டுடன் வீட்டுக்கு வெளியே வந்த போது அக்கம் பக்கத்து வீட்டினர் எல்லாம் வந்து கிளியை பார்த்து விட்டு சென்றனர். " நான் வளர்த்த கிளி.. போகுது " என எல்லோரிடமும் சொல்லி கொண்டேயிருந்தார். அவரை முதல் முறை பார்க்கிறேன். மறுமுறை பார்ப்பேனா என்றும் அறியேன். ஒரு அருமையான நினைவு சின்னத்தை எங்களிடம் விட்டு செல்கிறார்...என்ற நினைவுகள் மனதில் மோத, கிளியுடன் வீட்டுக்கு பயணமானேன்.

(கிளி வந்து சில வாரங்கள் ஆயிற்று. அது வந்த பின் வாழ்வு வண்ண மயமாகி விட்டது. கிளி பற்றி அடுத்த வானவில்லில்)

பார்த்த படம் : அவன் இவன்

அவன் இவன் இப்போது தான் பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் சற்று புன்னகையுடன் ரசிக்க முடிந்தது. போக போக கதையே இன்றி எவ்வளவு நேரம் தான் பார்ப்பது? காமெடி என முடிவு செய்தால் விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி பின்னி எடுக்க வேண்டும். ஆனால் இதில் பற்கள் வெளியே தெரியாத மாதிரி புன்னகைக்கிற காட்சிகள் ஆங்காங்கு உள்ளது. அவ்வளவு தான் ! விஷாலை பெண்டு நிமிர்த்தியிருக்கிறார் எனினும் அந்த கேரக்டர் செம குழப்பம். அரவாணி போல் இருக்கிறார். பின் ஒரு பெண்ணை காதலிக்கிறார். பயந்த மாதிரி அமர்ந்திருக்கிறார். பின் சண்டையில் அசத்துகிறார்.

மூன்றே காட்சியில் வர ஒரு வில்லன். முதல் காட்சியில் ஜி .கே குமாரால் போலீசிடம் மாட்டுகிறார். அடுத்த காட்சியில் ஜி. கே குமாரை பழி வாங்குகிறார். அதற்கடுத்த காட்சியில் ஹீரோக்களால் சாகிறார் ! 

சூப்பர் சிங்கர் குழந்தைகள் பாடிய பாட்டு படத்தில் இடம் பெறவில்லையென நினைக்கிறேன்.

பாலா இதுவரை எடுத்த படங்களில் கடைசி இடம் சந்தேகமே இன்றி இந்த படத்திற்கு தான் !

QUOTE HANGER

Pray as if everything depended on God and work as if everything depended on man.

ஒரு கேள்வி இரு பதில்

கேள்வி: பின்னூட்டம், ஹிட்ஸ், ஓட்டு இவை மூன்றையும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசை படுத்தி சொல்ல முடியுமா? ஒரு பதிவர் இவற்றுக்கு எந்த அளவு முக்கியத்துவம் தர வேண்டும்?


பதிவர் சங்கவி 

முதலில் பின்னூட்டம், ஹிட்ஸ், ஓட்டு என்று என் கருத்துப்படி வரிசைப்படுத்துகிறேன்.

பின்னூட்டம்

நிறைய பேர் பதிவை படிப்பார்கள் ஆனால் அவர்களது கருத்துக்களை சொல்லமாட்டார்கள், நிறைய பேர் மனதுக்கு பிடித்ததும் நிச்சயம் கருத்து சொல்வார்கள் ஒரு பதிவை 100 பேர் படித்தால் நிச்சயம் 5 பேர்தான் பின்னூட்டமிடுகின்றனர். பின்னூட்டம், எழுதுபவர்களுக்கு மிகச்சிறந்த ஊக்க மருந்து என்றால் அது மிகையாகது. ஒவ்வொரு பதிவரும் தனது சக பதிவர்களின் பதிவை படித்து அதற்கு தங்கள் கருத்தை நிச்சயம் சொல்ல வேண்டும். அப்போது தான் எழுதுபவருக்கு உற்சாகமிருக்கும்.

ஹிட்ஸ்

ஒரு பதிவர் தனது கருத்துக்களை அல்லது எண்ணங்களை பதிவு செய்யும் பொழுது அனைவரும் படிக்க வேண்டும் என்று விரும்புவார். நிறைய பேர் தனது பதிவை படிக்க படிக்க எழுதுவதற்கான ஆர்வம் அதிகமாகும். பதிவர்கள் தங்கள் படித்த மிகச்சிறந்த பதிவுகளை நண்பர்களுக்கு அனுப்பி படிக்க வைப்பதன் மூலம் பதிவின் ஹிட்ஸ் அதிகமாகும்

ஓட்டு

ஒவ்வொரு பதிவும் அனைத்து தரப்பினரையும் அதிகமான வாசகர்களையும் கவர ஓட்டு மிக அவசியமாகிறது. நிறைய மிகச்சிறந்த பதிவுகள் அதிகம் வெளியே தெரிவதில்லை. அப்பதிவுகளை படித்து ஓட்டுப்போடும்போது பதிவுகள் பிரபலமாகும் வாய்ப்பு அதிகம். பதிவர்கள் நல்ல பதிவுகளை ஊக்குவிக்க நிச்சயம் ஓட்டளிக்க வேண்டும்.

பின்னூட்டம், ஹிட்ஸ், ஓட்டு இந்த மூன்றும் ஒவ்வொரு பதிவுக்கும் நிச்சயம் அவசியமான ஒன்று. பின்னூட்டம் அதிகமாக அதிகமாக ஹிட்ஸ் அதிகமாகும், ஹிட்ஸ் அதிகமாக அதிகமாக ஓட்டுக்களும் அதிகமாகும். மிகச்சிறந்த பதிவுகளை ஊக்குவிக்க் பின்னூட்டமும், ஓட்டும் அவசியம்.

பதிவர் பவளசங்கரி

இவையனைத்தும் கொடுக்கல் வாங்கல்! மொய்க்கு மொய் ! இதற்கு முக்கியத்துவம் அவரவர் மனதைப் பொறுத்த விசயம். அவ்வளவு தான் !!

அய்யாசாமி ரசித்த ட்விட்டர் 

சிக்கலான நேரத்தில் என் மனைவி என்ன நினைக்கிறார் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிய முடியுமா? முடியல எசமான் !! 

Monday, July 4, 2011

வண்ணநிலவன்: திண்ணையில் வெளியான விமர்சனம்

முத்துக்கள் பத்து என்று பிரபல எழுத்தாளர்களின் சிறந்த பத்து படைப்புகளை அம்ருதா பதிப்பகம் தொகுத்து வெளியிட்டுள்ளது. வண்ணநிலவன் அவர்களின் சிறந்த பத்து கதைகளை எழுத்தாளர் திலகவதி தொகுத்துள்ளார்.

முன்னுரையில் திலகவதி வண்ணநிலவன் எழுத்துகள் பற்றி அழகாக சொல்லி செல்கிறார். பின் திடீரென தமிழ் இலக்கிய சூழலில் நிலவும் அரசியலுக்குள் நுழைந்து எக்கச்சக்கமாய் சொல்கிறார். (ஏனோ?)

நான் இதுவரை வாசித்த மிக சிறந்த சிறுகதைகளில் வண்ணநிலவனின் "உள்ளும் புறமும்" ஒன்று. இந்தியா டுடேயில் வெளி வந்த இந்த சிறுகதை வாசித்து 15 வருடங்கள் ஆகியும் அது ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் உள்ளது. இத்தொகுப்பில் இடம் பெறாத இந்த கதை பற்றி தனி பதிவே எழுதலாம்.

இந்த நூலில் என்னை மிக கவர்ந்தது முதல் மற்றும் கடைசி கதைகள். முதல் கதையான "மயான காண்டம்" செல்லையா என்ற வெட்டியான் பற்றியது. ஊரில் சாவு விழுந்தால் தான் இவன் வீட்டில் அடுப்பு எரியும். ஒரு வாரமாக சாவு விழாமல் இவன் குடும்பம் படும் வேதனை, மனைவியுடனான சண்டை இவற்றை சொல்லி செல்கிறார். இப்படி ஆகி விட்டால் வெட்டியான் ஊருக்கு வெளியே உள்ள கோயிலில் நின்று சங்கை எடுத்து ஊதினால், ஊர் மக்கள் வெட்டியான் குடும்பம் பட்டினியாக உள்ளதை அறிந்து தானம் செய்வார்களாம். அவ்வாறு சங்கூதும் செல்லையா கடைசியில் அந்த கோயில் உண்டியலை எடுத்து கொண்டு தன் வீட்டுக்கு நடப்பதாக கதையை முடிக்கிறார்.

தொகுப்பின் கடைசி கதை "கெட்டாலும் மேன்மக்கள்". ஒரு சோடா கம்பனியில் வேலை பார்க்கிறான் சுப்பையா. அந்த நிறுவன முதலாளி இறந்து விட அவர் மனைவி சந்திரா இரு குழந்தைகளுடன் (ஒன்று மனநிலை சரியில்லாதது) தனியே நிற்கிறாள். மற்றொரு சோடா கம்பனி காரர் அதிக சம்பளம் தருகிறேன் என்ற போதும் விசுவாசத்திற்காக இவர்களுக்கு உழைக்கிறான் சுப்பையா. அவன் அம்மா "வயசு பெண்; ஊர் தப்பா பேசும்; அங்கே வேலைக்கு போகாதே" எனும் போதும் அவன் ஒப்பு கொள்ள வில்லை. கதையின் முடிவில் தான் சந்திராவும் சுப்பையாவும் மிக கொஞ்சமாக பேசுகிறார்கள். "சுப்பையா உனக்கு வேலை அதிகமாகிடுச்சு. மத்த ஆளுங்க வேலையை விட்டு நின்னுட்டாங்க. நீ ஒரே ஆள் எல்லா வேலையும் செய்ய வேண்டியிருக்கு. அடுத்த மாசத்திலிருந்து சம்பளம் அதிகம் தாரேன்" என அந்த பெண் சொல்ல, " ஏம்மா நீ இருக்க நிலைமையில உன்கிட்டே அதிகம் சம்பளம் வாங்குனா நான் மனுஷனா என்ன? " என்ற ரீதியில் பேசி விட்டு செல்கிறான் சுப்பையா. இதனை வாசித்தால் மனம் கலங்காமல் இருக்க முடியாது. மனித நேயம் மிளிரும் எழுத்து.

பாம்பும் பிடாரனும் என்கிற கதை மிக அபூர்வமான எழுத்து நடை கொண்டது. பாம்பு பிடிக்கும் அனுபவத்தை இதை விட அருமையாக சொல்லிவிட முடியாது.

"தீவிரவாதிகள் செய்த திருக்கூத்து" என்றொரு கதை. இதில் வரும் கதை சொல்லி ஒரு நாள் பேப்பரில் "காந்திமதி நாதன் என்பவரை தீவிர வாதிகள் கடத்தி விட்டனர்" என வாசிக்கிறார். இது தன்னுடன் பள்ளியில் படித்த நண்பனாக தான் இருக்க வேண்டும் என தானாகவே நினைத்து கொள்கிறார். இதனால் நான்கைந்து நாள் தினம் பேப்பர் வாங்குகிறார். மனைவி இருக்கிற செலவில் இது வேறா என திட்டினாலும் கேட்கவில்லை. வாசலில் உட்கார்ந்து எதிர் வீட்டுக்காரன் பார்க்கிற மாதிரி பேப்பர் வாசிக்கிறார். "என் நண்பன் பெரிய ஆபிசராக்கும் அதனால் தான் அவனை கடத்தினார்கள்" என தன் குழந்தைகளிடம் பெருமை பேசுகிறார். மிக நுணுக்கமாய் உள் மன உணர்வுகளை சொல்லும் கதை இது.

புத்தக ஆக்கத்தில் சில குறைகள் உள்ளன. மழை மற்றும் பயில்வான் என இரு கதைகளும் பக்கங்கள் மாற்றி அச்சிட்டு விட்டார்கள். ஓரிரு பக்கம் மழை வாசித்ததும் சம்பந்தமே இன்றி அடுத்த சில பக்கங்கள் உள்ளது. பின் அடுத்த கதை படிக்கும் போது தான் இந்த தவறை உணர முடிகிறது. இவ்வளவு அலட்சியமாகவா அச்சிடுவார்கள் !! மேலும் முதல் பக்கத்தில் பத்து கதைகளின் பெயர்களும் பக்க எண்ணும் தந்திருக்கலாம்.

வண்ண நிலவன் கதைகளில் வருகிற மனிதர்கள் வெட்டியானாக, மளிகை கடையில் வேலை செய்பவராக, பாம்பாட்டியாக ..இப்படி மிக சாதாரண மனிதர்களாய் தான் உள்ளனர். கதை எழுதுவோரில் பலரும் தங்கள் நேரடி அனுபவங்களை எழுதுவர். இதனால் அவர்களும் கதையில் இருப்பர். ஆனால் வண்ண நிலவன் கதைகளில் அவர் இல்லை, அவர் பார்த்த எளிய மனிதர்கள் தான் கதை மாந்தர்கள். திருநெல்வேலி மொழி இவரது எழுத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது. குறிப்பாக அனைத்து கதைகளிலும் மனைவி திருநெல்வேலி தமிழில் கணவனை திட்டுவது....ஆனந்தமாக உள்ளது.

வண்ண நிலவன் என்கிற அற்புத மனிதரின் எழுத்தாளுமை அறிய அவசியம் வாசிக்கலாம்.

ஜூன் 25 தேதியிட்ட திண்ணை இதழில் வெளியான விமர்சனம்
Related Posts Plugin for WordPress, Blogger...