Friday, November 30, 2012

நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்

மீனவர் பிரச்னையை பல முறை செய்தித்தாளில் வாசிக்கிறோம். "மீனவர்களை கொல்லாதீர்" என ப்ளாகில் ஒரு ஓரத்தில் எழுதி வைத்தோம். அதையே சீனு ராமசாமி ஒரு இரண்டரை மணி நேர சினிமாவாக சொல்லியிருக்கிறார்.



மீனவர் பிரச்னை தான் கதைக்களன் என்றால் வறட்சியாக போய் விடும்; சாதாரண ரசிகன் ஏமாந்து விடுவான் என்பதால் கடைசி இருபது நிமிடத்தில் தான் அந்த விஷயத்தை ஆழமாய் தொடுகிறார்.

கதை

சரண்யா - தேவராஜ் ஆகியோரின் வளர்ப்பு மகன் விஷ்ணு (இலங்கையிலிருந்து வரும் ஒரு போட்டில் அந்த ஊருக்கு வந்ததாக பின்னர் சொல்கிறார்கள்). பெரும் குடிகாரன். சுனைனாவை காதலிக்க துவங்கி, சிறிது சிறிதாக திருந்துகிறான். சொந்தமாய் படகு வாங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழத் துவங்கும் போது, வாழ்க்கையில் பெரும் அலை அடித்து அவர்கள் குடும்பத்தை புரட்டி போடுகிறது
***
ணிரத்னம் கனமான பிரச்னையை எடுக்கும் போதெல்லாம் கையாளும் முறை தான்! ரோஜா துவங்கி, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால் என - முதல் பாதி முழுக்க ஜாலியாக வைத்துக் கொண்டு, இடைவேளைக்கு பின் சொல்லப் போகும் கனமான விஷயத்துக்கான விதையை ஆங்காங்கு தூவிய படி செல்வாரே அதே டெக்னிக் தான்.

இது சினிமா என்னும் மீடியம். முதலில் போட்ட பணத்தை தயாரிப்பாளருக்கு திரும்ப வரவைக்க வேண்டும்; படம் பார்க்கிற மக்களுக்கு ஏமாற்றம் தரக் கூடாது ; அத்தோடு சேர்த்து ஒரு மெசேஜும் இருக்கணும் என்கிற அளவில் படம் எடுத்துள்ளது தெரிகிறது.
***
முதல் பாதி ஜாலியாக செல்கிறது. ஹீரோவின் குடிப்பழக்கம், அதனால் வரும் பிரச்சனைகள், அவருக்கு தரும் ட்ரீட்மென்ட், சரியாகி மீள்வது இவை பர்ஸ்ட் ஹாபில் இருந்தாலும், தம்பி ராமையா - பிளாக் பாண்டி காமெடியால் தியேட்டர் கலகலப்பாக இருக்கிறது.

தியேட்டர் கலகலத்து சிரிக்கும் சில இடங்கள்:

ஜெயமோகன் & சீனு ராமசாமி வசனங்கள் தான் படத்துக்கு மிக பெரிய பிளஸ். பல முறை வசனம் கிளாப்ஸ் வாங்குகிறது.

மீன் ஆய்ந்தவாறே மகனுக்கு தண்ணியடிக்க காசு தரும் சரண்யா " நல்ல சரக்கா வாங்கி குடிடா; கண்ட கண்ட சரக்கை குடிச்சு உடம்பை கெடுத்துக்காதே"

பிளாக் பாண்டி திருந்திய பிறகு பாதர் " என்னப்பா ஒழுக்கமா இருக்க ஆரம்பிச்சிட்டே போலருக்கே" அதுக்கு பிளாக் பாண்டி " ஆமா பாதர்; ஆனா ஞாயித்து கிழமையானா ஒழுக்கத்துக்கு லீவு விட்டுடுவேன் பாதர் "

சுனைனா பேசும் " சாத்தானே அப்பாலே போ " டயலாக்

விஷ்ணுவும் பிளாக் பாண்டியும் பாதரிடம் பாவ மன்னிப்பு கேட்க செல்லும் இடம் ...

சுனைனாவிடம் சரண்யா " நீயாவது அவன்கிட்டே பேசி வேலைக்கு அனுப்பு; இந்த காலத்து பசங்க எல்லாம் அம்மா சொன்னா எங்கே கேட்குறானுங்க? உன்னை மாதிரி சின்ன வயசு பொண்ணு சொன்னாதான் கேக்குறானுங்க"

இயக்குனர் சீனு ராமசாமி வரும் ஒரே காட்சி: அதில் அவரும் தம்பி ராமையாவும் பேசும் டயலாக் " பாத்துய்யா ; லேடிஸ் ஸ்கூல் வேணும்னு ஆர்வமா இருக்குறே ; பாலியல் புகார் வந்துட போகுது "

கடைசி இருபது நிமிடம் தவிர்த்து மற்ற நேரத்தில் சீரியஸ் காட்சியில் கூட காமெடியை மறக்க வில்லை. சர்ச் வெளியே ஒரு பெரிய பிரச்சனை நடக்கும் போது ஒருவர் எழுந்து பேச, " யாருப்பா உன்னை வெப்பன்ஸ் உடன் இங்கே அலோ பண்ணது " என்பது ஒரு உதாரணம்

பாட்டுகள் & பின்னணி இசை

ரகுநந்தன் இசையில் பாட்டுகள் ஏற்கனவே செம ஹிட் (நீர்ப்பறவை பாடல் விமர்சனம் : இங்கு ) ; நான்கைந்து அருமையான பாட்டு இருக்கும் போது, படம் துவங்கி முப்பது நிமிடம் வரை முதல் பாட்டே வரலையே என வெயிட் பண்ண வச்சுட்டாங்க. இரு முறை ஒலிக்கும் "பரபர பறவை" தான் ஹைலைட். தேவன் மகனே பாட்டில் இருவரும் மாறி மாறி முத்த மழை பொழிவது கமர்ஷியல் கட்டாயம் ( அதில் ரொம்ப கிளாமர் எல்லாம் இல்லை; திருமணம் ஆன கணவன்- மனைவி நெருக்கமாய் அப்பாடல் வருகிறது) ; யார் வீட்டு முகமோ; ரத்த கண்ணீர் என்ற இரு பாட்டுகள் கேட்கும்போது பிடிக்கா விடினும், கதையோடு சேர்த்து பின்னணியில் வருவதால் உறுத்த வில்லை. பின்னணி இசை ஓஹோ இல்லை. ஓகே.

கிறித்துவர்கள் எதிர்ப்பால் சில பாடல் வரிகள் படத்தில் மாறி ஒலிக்கின்றன; ஆனால் சி. டி போன்றவற்றில் பழைய பாடல் வரிகள் தான் ! இசை நிகழ்ச்சி எதிலும் பாடினாலும் கூட அந்த objectionable வரிகள் தான் பாடப்படும் என நினைக்கிறேன்

நடிப்பு

மிக பெரிய நடிகர் பட்டாளம். சிலரை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.



விஷ்ணு தந்தையாய் வரும் தேவராஜ் (பூ படத்தில் ஸ்ரீகாந்த் அப்பாவாய் வருவாரே நினைவிருக்கா?) அலட்டல் இல்லாத நடிப்பு. மகன் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டதும் டாக்டர் கிளினிக் சென்று, அவர் காலில் பெரிய மீனை வைத்து விட்டு விம்மும் இடம் அழகு.


சரண்யா - அசத்தியிருக்கிறார். போதை மறக்கடிக்கும் இடத்தில் " பாத்து மெதுவா திருத்துங்கடா ; ஒரேடியா திருத்த பாக்காதீங்க; அவன் சாராயம் கேட்டா வாங்கி குடுங்கடா" என்றும், பின் " செல்லம் குடுத்து தான் கெடுத்துட்டோம்" என்று புலம்பவதும் அம்மா பாத்திரத்துக்கு இவரை விட்டால் இப்போது ஆள் இல்லை என சொல்லவைக்குது.

தேவராஜ் அல்லது சரண்யா இந்த வருட சிறந்த துணை நடிகர் நாமிநெஷனில் நிச்சயம் இருப்பார்கள் என நம்புகிறேன்.

விஷ்ணு: படத்துக்காக நிறையவே உழைத்துள்ளார். குடிகாரனாகவும், திருந்தி வாழும் போதும் இயக்குனரின் நடிகனாக இயல்பான நடிப்பு. க்ளைமாக்சில் அவர் பங்கு எதுவும் இல்லாமல் போய் விடுகிறது.

சுனைனா :கடற்கரை ஓரம் இருக்கும் எல்லாரும் கருப்பா தான் இருக்கனுமா என்ன? அதுவும் இது சினிமாதானே ? அழகு சுனைனாவை வெயிலில் நிற்க வைத்து கருக்க வைக்காமல் இயல்பான நிறத்தில் விட்டிருக்கலாம். இந்த நிறத்திலும் கூட, இரு காது அருகிலும் தொங்கும் அந்த ஒற்றை சுருள் முடியும், பற்கள் தெரியாமல் சிரிக்கும் சிரிப்பும் என்னமோ செய்கிறது. காதலை கண்ணிலேயே காட்டுவதாகட்டும், Boat தயாராகும் போது ஆசையோடு வந்து பார்ப்பதாகட்டும் சுனைனாவுக்கு இதை விட சிறந்த பாத்திரம் இன்னொரு முறை கிடைக்குமா தெரியலை

பாதராக வரும் அழகம்பெருமாள் அந்த வட்டார வழக்கை சரியே பேசுகிறார்.

சாட்டையில் மிகையான நடிப்பு என்று விமர்சிக்கப்பட்ட தம்பி ராமையா நகைச்சுவையிலும் சரி, வயதான மேக் அப் மற்றும் நடிப்பிலும் சரி நிறைவு.

தியேட்டர் கமண்ட்ஸ் :

படம் துவங்கும் முன் ஹீரோ குரலில் " குடிப்பழக்கம் நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு" எனப் பேச, அதில் "கேடு" என ஒலித்த அடுத்த நொடி " சரி நீ கொஞ்சம் மூடு" என்றார் சத்தமாய் ஒருவர் ! குடிமக்களிடம் செம சிரிப்பலை.



காதல் படம் என்கிற ரீதியில் விளம்பரப் படுத்தியதால் தியேட்டரில் 25% காதல் ஜோடிகள் தான். அதிலும் எனக்கு இரண்டு பக்கமும் ஒவ்வொரு ஜோடி உட்கார்ந்து கொண்டு பேசி தீர்த்தனர்

இடைவேளையில் இரு நண்பர்கள் :" First half செமையா இருக்குல்ல ? ; மறுபடி தேசிய விருது வாங்கிடுவாரு இந்த ஆளு"

படம் முடிந்து படிகளில் இறங்கி போகையில் ஒரு நண்பர் கூட்டம் " செம டைரக்ஷண்டா " என்றும் " நல்ல வேளை சுனைனாவை வயசான மாதிரி காட்டலை"

சீனு ராமசாமி இயக்கம்

குடிப்பழக்கம்,மீனவர் பிரச்சனை, இலங்கை தமிழர் இன்னல் என பல சமூக அவலங்கள் கதையின் ஊடே சென்றாலும் அதையெல்லாம் காமெடி மற்றும் காதல் என்கிற இனிப்பு தடவி தந்துள்ளார். "கனமான விஷயத்தை ஆழமாய் சிந்திக்கலை; விருதே இவர் நோக்கு" போன்ற விமர்சனங்கள் வரலாம். என்னை பொறுத்தவரை படம் நிச்சயம் பிடித்திருந்தது. என்னுடன் பார்த்த பலருக்கும் கூட...

சமுத்ரகனி பாத்திரம் எப்போதும் சமூக அவலம் பேசுவது, மிக மிக ஆர்டினரி இன்டர்வேல் ப்ளாக் உள்ளிட்ட சிற்சில தவறுகள் இருந்தாலும் மெசேஜ் உடன் கூடிய படத்தை முடிந்த அளவு என்டர்ட்டேயிநிங் ஆக தந்தமைக்கு பாராட்டுகள் !

மீனவர் சுட்டு கொல்லப்படும் அவலத்தை ஓர் படமாக எடுத்த நிலையில், இதுவாவது அரசாங்கத்தை யோசிக்க வைக்குமா ?

நீர்ப்பறவை - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !
****
அண்மை பதிவு:
இந்தியா ஏன் கசக்கிறது? பயமுறுத்தும் சாலைகள் -By -ஆதிமனிதன்

லட்சுமன் சுருதி ஆர்கெஸ்ட்ரா : அனுபவம்- சில தகவல்கள்

முடி திருத்துவோர் வாழ்க்கை - பேட்டி

வானவில்: நீர்ப்பறவை-நடுவுல பக்கத்தை காணும்-பூஜா

இந்தியா ஏன் கசக்கிறது - பயமுறுத்தும் சாலைகள்

இந்தியா ஏன் கசக்கிறது - பயமுறுத்தும் சாலைகள் - ஆதிமனிதன்.

சென்ற பதிவிற்கு வீடுதிரும்பல் வாசகர்கள் தந்த ஆதரவு மிகுந்த மகிழ்வை தந்தது. எல்லோருக்கும் நன்றி.

போரிஸ் பெக்கரில் தொடங்கி மேலை நாடுகளில் இருந்து யார் இந்தியா வந்தாலும், அவர்கள் பார்த்து வியக்கும், பயப்படும் ஒரே விஷயம் நம் நாட்டு சாலைகளையும் அதில் பயணிக்கும் வாகன ஓட்டிகளையும் தான் !




சில ஆண்டுகள் மேலை நாடுகளில் இருந்து விட்டு மீண்டும் தாயகம் திரும்பும் என்னைப் போல் பலருக்கும் மீண்டும் பழகிக் கொள்ள சவாலாகவுள்ள விஷயம் நம் போக்குவரத்து முறைதான். அந்த அளவிற்கு மேலை நாடுகளில் போக்குவரத்து ஒழுக்கம் மேலோங்கி இருக்கும்.

உலகில் உள்ள வாகனங்களில் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவான வாகனங்களை கொண்டுள்ள நம் நாட்டில் தான் சாலை விபத்துகள் அதிகம். இந்திய அரசின் 2010 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 2010-ல் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் விபத்துகளில் சிக்கியுள்ளனர். அதில் இறந்தவர்கள் மட்டும் 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர். அதாவது இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒருவர் விபத்தில் சிக்குகிறார்கள். ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒருவர் விபத்தில் பலியாகிறார். இவை எல்லாவற்றுக்கும் அரசை மட்டுமே குற்றம் சொல்லி பயனில்லை. மக்கள் மனம் மாறினால்தான் இம்மாதிரி விபத்துக்களை தவிர்க்க முடியும்.

நம்ம ஊரில் பெரும்பாலான இரவு நேர விபத்துக்கள் குடித்து விட்டு வண்டி ஓட்டுவதினால் ஏற்படுவதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒருவர் அளவுக்கு மீறி குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது என்பது மிகப் பெரிய குற்றம். 'Accidents are not considered as accidents always'.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு அளவுகோல் உண்டு. As per California law, 0.08 % is the maximum content of alcohol you can have it in your blood) குடித்து விட்டு வாகனம் ஓட்டி ஒருவர் மீது மோதி அவர் உயிர் இழந்து விட்டால், குடித்து விட்டு வண்டி ஓட்டியவர்க்கு கொலை குற்றத்திற்கு ஈடான தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு.

நியூ யார்க், சிக்காகோ போன்ற பெருநகரங்களில் நீங்கள் அதிகமாக குடித்தபின் உங்களால் வண்டி ஓட்ட முடியவில்லை எனில் ஒரு நம்பருக்கு அழைத்தால் போதும். அவர்கள் உங்களை வீட்டிற்கே இலவசமாக காரில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். இதற்கேன்றே அங்கு பொது நல அமைப்புகள் உண்டு. நம்ம ஊரில் இதை பற்றியெல்லாம் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. நாமாகவே தான் திருந்த வேண்டும்.

யாரோ ஒருவருக்கு தான் விபத்து நடக்கும்; நமக்கல்ல என்ற அலட்சியம் கூடாது; இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் விபத்து நமக்கும் நடக்கலாம்; ஒவ்வொரு நான்கு நிமிடத்தில் இறக்கும் நபராய் நாம் இருந்து விட்டால் குடும்பத்தின் நிலை என்ன ஆவது? இதை நினைத்தாவது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாய் தவிர்க்க வேண்டும்.

அடுத்து லேன் டிசிப்ளின். நான் முதன் முதலில் சென்னைக்கு வந்த போது அண்ணா சாலையில் 'Follow Lane Discipline' என்ற போர்டை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த டிசிப்ளினை யாரும் பின்பற்றுகிற மாதிரியே தெரிய வில்லை. ஆங்காங்கே நடக்கும் சிறு விபத்துக்கள் முதல் பெரும் விபத்துக்கள் வரை நாம் லேன் டிசிப்ளின் பின்பற்றினால் பெரும் அளவு குறைந்து விடும்.

இத்தனைக்கும் தற்போது எல்லா நெடுஞ்சாலைகளிலும் குறைந்தது இரண்டுக்கு மேற்பட்ட வழித்தடங்கள் உள்ளன. உலகில் சிறிய உயிரினமான எறும்புகள் கூட ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக தான் செல்லும். ஆனா நாம பாருங்க ரெண்டு கோட்டுக்கு நடுவுல தான் வண்டியை ஓட்டுவோம். இப்படி ஓட்டும்போது நீங்கள் எப்படி செல்ல போகிறீர்கள் என்று முன்னால் போகிறவருக்கும் தெரியாது, பின்னால் வருபவரும் குழம்பி போக வாய்ப்புண்டு.

வெளி ஊர்களில் இருந்து சென்னை திரும்புகையில், சென்னையை நெருங்குகையில் கவனித்து பாருங்கள். மூன்று லேன்களில் ஆறு வண்டிகள் அடைத்துக் கொண்டு போகும். அதனாலேயே ஆங்காங்கு வரும் டிராபிக் ஜாம். சற்று முன் தான் மேல்மருவத்தூர் அருகே வண்டியை ரெண்டு மணி நேரம் நிப்பாட்டி விட்டு சாவகசமாக எல்லோரும் சாப்பிட்டு வருவார்கள். ஆனால் ரோட்டில் வந்தவுடன் அவர்களால் சிறிது பொறுமையாக இருந்து போக முடியவில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அத்தனை மைல் வேகத்தில் (ப்ரீ வேக்களில் குறைந்தது 110 முதல் 130 கிலோமீட்டர் வேகத்தில்) வண்டிகள் தொடர்ச்சியாக சென்றாலும் விபத்துக்கள் மிகவும் குறைவே. அதற்கு முக்கிய காரணம் எல்லோரும் லேன் டிசிப்ளினை பின்பற்றுவது தான். மினசொட்டவில் நாங்கள் இருந்த நகரத்தின் அருகே உள்ள பாலத்தை தினமும் 1.5 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. ஆனால் அங்கு மூன்று வருடங்களில் ஒரு விபத்து கூட ஏற்பட்டு நான் பார்த்ததில்லை.

அடுத்ததாக சிக்னல். நம்மூரில் சிக்னலை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியே நாம் மதித்து நின்றாலும் பின்னால் உள்ளவர்கள் திட்டியோ, ஹாரன் அடித்தோ நம்மை விரட்டுவார்கள். இரண்டு நாட்களுக்கு முன் பூந்தமல்லி ஹை ரோட்டில் ஒரு சிக்னலில் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டேன். எனக்கு தெரியும் அந்த குறிப்பிட்ட சிக்னலை யாரும் மதிப்பதில்லை என்று. எங்களுக்கு பின்னால் வந்த எந்த வாகனமும் ரெட் சிக்னலில் நிற்கவில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த என் மகள் "என்னப்பா? யாருமே நிக்கல. நம்ம மட்டும் தான் நிற்கிறோம்?" என்று கூறினாள். "இப்படியே எல்லோரும் நினைத்தால் என்ன செய்வது? நாமாவது நிற்போம்" என்று கூறினேன்.

அமெரிக்காவில் சிக்னலில் வண்டியை நிறுத்தாவிட்டால் அது மிக பெரிய முற்றம். Signal jump என்று கூறுவார்கள். இரவு நடு சாமம் ஆனாலும், அங்கு ஈ, காக்கா இல்லை என்றாலும் கூட STOP சிம்பல் மற்றும் சிகப்பு சிக்னலுக்கு நீங்கள் வண்டியை நிறுத்தி தான் ஆக வேண்டும். நீங்கள் மஞ்சள் சிக்னலின் போதே வண்டியின் வேகத்தை குறைத்து விட வேண்டும். அப்படி உங்களால் பாதுகாப்பாக நிறுத்த முடியாத பட்சத்தில் தொடர்ந்து நிறுத்தாமல் சிக்னலை கடந்து விட வேண்டும். இன்டர்செக்க்ஷனில் (சாலையின் நடுவில்) வண்டியை நிறுத்த கூடாது. இங்கு நாம் பாதி ரோட்டை தாண்டி தான் அடுத்தவருக்கும் வழி விடாமல் அடைத்துக் கொண்டு நிற்கிறோம்.

அமெரிக்கர்கள் மட்டும் தான் ஒழுக்கமானவர்கள். நாம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. அங்கு மக்கள் அப்படி இருப்பதற்கு எனக்கு தெரிந்து இரு முக்கிய காரணங்கள்: ஒன்று பிறந்ததிலிருந்தே அவர்கள் அவ்வாறான ஒழுக்கத்திற்கு தங்களை பழக்கப் படுத்திக் கொண்டார்கள். இரண்டாவது அப்படி நீங்கள் ஏதும் போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில், மாட்டிக் கொண்டீர்களானால் உங்களுக்கு கிடைக்கும் தண்டனை (சிறையோ/அபராதமோ) இரண்டுமே கடுமையாக இருக்கும். அங்கு போலீசார் லஞ்சம் வாங்க மாட்டார்கள். ஆதலால் லஞ்சம் கொடுத்து எஸ்கேப் ஆகவும் முடியாது.

சாலை பாதுகாப்பு பற்றி என்னுடைய பழைய பதிவு  பதிவெழுத வந்த காலத்தில் மிகவும் ரசித்து எழுதியது. அப்போது நல்ல வரவேற்பையும் பெற்றது.

எப்படி குழந்தைகள் சின்ன வயதிலேயே கோவிலுக்கு போனால் செருப்பை கழட்டி போடவும், புத்தகத்தை மிதித்து விட்டால் தொட்டு கும்பிடவும் நாம் சொல்லி தந்ததை கடைசிவரை அவர்கள் அவர்களையும் அறியாமல் பின் பற்றுகிறார்களோ அதே போல் நம் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே போக்குவரத்து விதிமுறைகளை சொல்லி தந்து, நாமும் அவர்கள் முன் விதிகளை பின்பற்றினால் எதிர் காலத்திலாவது விபத்தில்லா ஒரு நல்ல தலைமுறை உருவாக வாய்ப்புண்டு.
*******
மெரிக்காவில் சாலை போக்குவரத்து சம்பந்தப்பட்ட சில சுவாரசிய குறிப்புகள்:

# அங்கு பெட்ரோல் பம்ப் என்று சொல்ல மாட்டார்கள். கேஸ் ஸ்டேஷன் என்று தான் அழைப்பார்கள்.

# பொதுவாக எல்லோரும் முழு டான்க்கையும் புல் செய்வார்கள். பெட்ரோல் போட யாரும் இருக்க மாட்டார்கள். நாம் தான் கீழே இறங்கி நாமே போட்டுக் கொள்ள வேண்டும்.

# சாலைகளில் ஹாரன் சத்தம் கேட்பது மிக மிக அரிது. யாரையாவது எச்சரிக்கை செய்யவோ அல்லது தவறு செய்யும் சக ஓட்டுனரை கடுமையாக திட்ட மட்டுமே ஹாரன் அடிப்பார்கள். இங்கு வந்த பிறகு குழந்தைகள் அவ்வப்போது ஹரனை அடித்து சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள்.

# ஹை பீமை நினைத்த போதெல்லாம் போட்டு ஓட்ட முடியாது. அதற்கென்று சில விதிமுறைகள் உண்டு.

# காலையும் மாலையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்/பின் ஹெட் லாம்ப் ஆன் செய்திருக்க வேண்டும். இதனாலேயே பெரும்பாலான வண்டிகளில் ஆட்டோமேடிக் லைட் ஆன் சிஸ்டம் இருக்கும்.

# ஆறு வயது வரை குழந்தைகளுக்கு பேபி சீட் அல்லது பூஸ்டர் சீட் உபயோகப் படுத்தவேண்டும். தவறினால் மிக பெரிய தண்டனை உண்டு.

# முன் இருக்கையில் அமருபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.

# பன்னிரண்டு வயதிற்கு மேல் தான் யாரும் முன் இருக்கையில் அமர்ந்து போகலாம். 


இன்னும் வரும்....

டிஸ்கி: ஞாயிறுக்குள் வீடுதிரும்பலில் இவ்வார புதுப்பட விமர்சனங்கள் 1 or 2 வெளியாகலாம் !

Thursday, November 29, 2012

லட்சுமண் ஷ்ருதி ஆர்கெஸ்ட்ரா: இனிய அனுபவம்- சில தகவல்கள்

ங்கள் கம்பனி செகரட்டரி இன்ஸ்டிடியூட் சமீபத்தில் லட்சுமண் ஷ்ருதி ஆர்கெஸ்ட்ராவிற்கு ஏற்பாடு செய்திருந்தது



கம்பனி செகரட்டரிகள் சேமநலநிதி - Company Secretaries Benovalent Fund என ஒன்று உண்டு. இந்த நிதியிலிருந்து கம்பனி செகரட்டரிகள் யாரேனும் மரணமடைந்தால் அவர்கள் குடும்பத்தினருக்கு சில லட்சம் பணம் தருவார்கள்.

இந்த சேமநல நிதிக்கு - அவ்வப்போது நிதி திரட்டும் நிகழ்ச்சி நடக்கும். சென்னையில் முதன் முறை இப்படி பெரிய விழா காமராஜர் அரங்கில் நடத்தப்பட்டது. ரூ. 250  முதல் 5,000 வரை டிக்கெட் போட்டு விற்கப்பட்டு இதன் மூலம் வரும் வருமானம் அந்த நலநிதிக்கு வழங்கப்பட்டது.

இந்த விழா நடத்த போவது முடிவானதும் எங்கள் நண்பர் ரெங்கராஜன் தான் லட்சுமண் சுருதி ஆர்கெஸ்ட்ரா வைக்கலாம் என  suggestion தந்ததுடன்  அவர்களை நேரில் சந்தித்து பேசி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து தந்தார். மேலும் ACS இன்ஸ்டிடியூட்டின் Joint Director திருமதி. சாரா அவர்கள்  ஸ்பான்சரில் துவங்கி பல்வேறு வேலைகளை திறம்பட கவனித்து நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஆணிவேராய் இருந்தார்.

இந்த விழா ஏற்பாடுகளின் போது லட்சுமண் ஷ்ருதி ஆர்கெஸ்ட்ராவுடன் பழகும் வாய்ப்பு நண்பர்களுக்கு கிடைத்தது. நிகழ்ச்சி பற்றியும், லட்சுமண் ஷ்ருதி குறித்தும் இந்த சிறு பதிவு .
*****
1987-ல் ஆரம்பிக்கப்பட்ட லட்சுமன் ஸ்ருதிக்கு இது வெள்ளி விழா ஆண்டு. ஆர்கெஸ்ட்ரா தவிர, அசோக் நகரில் இவர்கள் ஒரு மியூசிக் பள்ளியும் வைத்து பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்க கற்று தருகிறார்கள். இதன் முழு விபரம் இவர்களின் இணைய தளத்தில் கிடைக்கிறது.

எப்போதுமே விழாவை சரியாக சொன்ன நேரத்துக்கு துவங்கி விடுகிறார்கள். எங்கள் விழா ஆரம்பித்த போது, 20 சதவீதம் கூட அரங்கம் நிரம்பவில்லை. ஞாயிறு மாலை என்பதால் போக போகத்தான் அரங்கம் முழுவதுமாக நிரம்பியது அதை பற்றியெல்லாம் கவலைப்படாது சரியான நேரத்துக்கு துவங்கி விடுகின்றனர்.

முதல் இரண்டு மட்டும் தான் சாமி பாட்டுகள். அப்புறம் நேரடியே புது பாட்டுக்குள் குதித்து விடுகிறார்கள். அவ்வப்போது சில பழைய பாடல்கள் மற்றும் தெலுகு, ஹிந்தி உள்ளிட்ட ஓரிரு மாற்று மொழி பாடல்கள் பாடினாலும் பெரும்பாலும் ஹிட் ஆன சமீபத்து பாட்டுகள் தான் !

உன்னி மேனன், ஸ்ரீனிவாஸ், அனுராதா ஸ்ரீராம், மாலதி ஆகியோர்தான் அன்று முக்கிய பாடகர்கள் ( நீங்கள் ஆர்கெஸ்ட்ரா ஏற்பாடு செய்தால் லக்ஷ்மன் ஸ்ருதிக்கு தனி பேமென்ட்; பாடகர்களுக்கு அவரவர் பாப்புலாரிட்டி அடிப்படையில் தனி பேமென்ட் என்பதை அறிக ).

"ஊலலல்லா"  பாடும் மாலதி , அனுராதா ஸ்ரீராம்,  ஸ்ரீனிவாஸ், உன்னி மேனன் 
லட்சுமண் ஷ்ருதி ஆர்கெஸ்ட்ரா நான்கு பார்ட்னர்களை கொண்டது. முக்கியமான இருவர் ராமன் மற்றும் லட்சுமணன் என்னும் ட்வின் சகோதரர்கள். இதில் லட்சுமணன் மனைவி மாலதி "மன்மத ராசாவில் " துவங்கி தமிழ் படங்களில் தொடர்ந்து பாடும் பின்னணி பாடகியாகி உள்ளார்.

பொதுவாய் இவர்கள் நிகழ்ச்சி ஒன்றுக்கு பல லட்சங்கள் செலவாகும். ஆனால் இவ்விழா இறந்து போன கம்பனி செகரட்டரிகளின்  குடும்பத்துக்கு உதவும் நிகழ்ச்சி என்பதால் குறைந்த ரேட்டுக்கு ஒத்து கொண்டனர்.

தீபாவளிக்கு இரு நாளைக்கு முன் (நவம்பர் 11 - ஞாயிறு அன்று) இவ்விழா நடந்தது. அடுத்த இரு நாளில் தீபாவளி என்பதால் அனைவரும் ஹாலிடே மூடில் ஜாலியாக இருந்தனர்.

நிகழ்ச்சி துவங்கி அரை மணி கழித்து தான் பிரபல பாடகர்கள் ஒவ்வொருவராக வருகின்றனர். அதற்கு முன் லட்சுமன் சுருதி ஆர்கெஸ்ட்ராவை சேர்ந்த ஆட்கள் சில பக்தி பாடல் பாடுகிறார்கள். ஒவ்வொரு பிரபலமும் வந்து சேர, சேர உடனே அவர்களை அழைத்து பாட வைக்கிறார்கள்.

இசை கருவிகள் இசைப்பவர்கள் அனைவரும் ஆண்களே. ஒவ்வொருவரும் சட்டை- பேன்ட்- கோட் எல்லாமே வெள்ளை நிறத்தில் அணிகிறார்கள்.  இசை கருவி வாசிப்போர் தங்கள் கருவிகள் முன் அமர்ந்து விட்டால் நிகழ்ச்சி முடியும் வரை டீ, காபி குடிப்பதில்லை. தங்கள் சீட்டை விட்டு இறுதி வரை எழாமல் வாசிக்கணும் என்பது எழுதாத விதியாம் !


ஆறு மணிக்கு நிகழ்ச்சி துவங்கினால் வாத்திய கருவி வாசிப்போர் நான்கு மணிக்கே அரங்கிற்கு வந்து தங்கள் இசைகருவிகளை சரியான இடத்தில் நிறுவி, 10 நிமிடம் முன்பே அவரவர் பொசிஷனில் அமர்ந்து விடுகிறார்கள் நிகழ்ச்சிக்கு முன் அரங்கில் வந்து பயிற்சி எடுப்பதெல்லாம் இல்லை. அதற்கு முன்பே பயிற்சி எடுத்து விடுவார்கள் போலும்.

எங்கள் உறுப்பினர்களில் பலர் குடும்பத்துடன் வந்ததால் அவர்கள் குழந்தைகள் ஒரு ஓரமாய் கூடி ஜாலியாய் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர். காமிராக்கள் இவர்கள் டான்சை மட்டுமின்றி ஆங்காங்கு பெரியவர்கள் சிலர் டான்ஸ் ஆடியதையும் காமிராவில் சூம் செய்தனர்.

ஜிம்மி ஜிப் என்கிற பெரிய காமிரா அங்கும் இங்கும் நகர்ந்து முன் வரிசையில் இருப்போர் தலைக்கு மேல் சென்று சென்று வந்து படம் பிடித்து கொண்டிருந்தது.
*****
பாடகர் ஸ்ரீனிவாஸ் லேப்டாப் போன்ற கணினியில் இருந்தே பாடல்களை பார்த்து பாடுகிறார். ஒரு குறிப்பிட்ட பாட்டை பாட சொல்லி கேட்க, " அந்த பாட்டை நான் பயிற்சி பண்ணலையே " என்றாலும் பின் ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, கணினியில் பார்த்தபடி  பாடி முடித்தார்.  

அனுராதா ஸ்ரீராம் பல பாடல்கள் பேப்பரை பார்க்காமல் பாடுகிறார். கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாட்டை பாடுமுன் " யார் வேண்டுமானாலும் மேடைக்கு வந்து ஆடுங்க" என்று சொல்ல எங்கள் இன்ஸ்டிடியூட்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சேர்மன் போன்றோர் மேடை ஏறி ஆடினர்.


மேலே படத்தில் டான்ஸ் ஆடும் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். தெலுகு, மலையாளம், கன்னடம் மட்டுமே தெரிந்த 50-வயதுக்கு மேலான இவர்கள் மியூசிக்கை மட்டுமே வைத்து செமையான ஆட்டம் போட்டனர். எங்களுக்கெல்லாம் இவர்களை இப்படி பார்க்க செம ஜாலியாய் இருந்தது

இந்த பாட்டு முடிந்ததும் டிரம்ஸ் அடிக்கும் நபர் அப்படியே கண்டினியூ செய்து, தலைமுடியை விரித்து போட்டவாறு தனி ஆவர்த்தனம் செய்து அசத்தி விட்டார். டிரம்சை வாசித்தவாறே கீழே இறங்கி வந்து வாசிக்க, விழாவிற்கு வந்திருந்த பல்வேறு வயது மக்களும், அவரது துள்ளல் இசைக்கு செம ஆட்டம் போட்டனர்.

பின் அவர் மேடை ஏறி மேலும் சிலருடன் சேர்ந்து டிரம்ஸ் மழை பொழிந்தார். நிகழ்ச்சியில் பாடிய கிருத்திகா என்ற சிறுமியும் அவருடன் சேர்ந்து டிரம்ஸ் அடித்து அசத்தினாள்.


சாரே ஜகான் சே அச்சா பாடி அந்த டிரம்ஸ் மழையை நிறைவு செய்தனர். அப்போது தேசிய கொடி காட்டப்பட, அனைவரும் எழுந்து நின்றனர் ( நான் கூட ஒன்பது மணி ஆச்சே; நிகழ்ச்சி முடிய போகுதோ என நினைதேன்; சாரே ஜகான் சே அச்சா பாட்டு எப்போதும் நிகழ்ச்சி நடுவே பாடுவார்களாம்... நாட்டு பற்றை காட்டும் இப்பாடல் அவர்களின் அனைத்து முக்கிய நிகழ்வுகளில் இருக்கும் என்றனர்)

மாலை ஆறு மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி முடிய இரவு பதினோரு மணியாகிடுச்சு; டிவியில் பார்க்கும் போது  தான் விளம்பர இடைவேளை எல்லாம் ! நிஜத்தில் நான் ஸ்டாப் பாடல் மழை தான் ! இரவு பத்தரைக்கு மேல் ஒவ்வொரு பிரபலமாக கிளம்பிவிட, கடைசி வரை இருந்தது மாலதி தான்.

"ஒரு பிரபல பின்னணி பாடகர் மட்டும் பாடினாலே மூன்று மணி நேர நிகழ்ச்சி தேவைப்படும் - நான்கு பாடகர் இருப்பதால் எந்த பாட்டு தேர்வு செய்வது என்பதே பெரிய பிரச்சனை;  அதனால் தான் பதினோரு மணி வரை பாட வேண்டியிருந்தது" என்று சொன்னார் லட்சுமணன்.

பொதுவாய் நமக்கு பல முறை கேட்ட சினிமா பாட்டுகளை அப்படியே கேட்கத்தான் பிடிக்கும். அதாவது இசை, பாடும் விதம் என எல்லாம் அப்படியே இருந்து, பாடலை மறுபடி recreate செய்தால் தான் முழுதாய் ரசிக்க முடியும். இது லட்சுமண் ஸ்ருதிக்கு மிக இயல்பாய் வருகிறது. நிகழ்ச்சியில் கேட்ட எல்லா பாடல்களும், அப்படியே டிவி அல்லது ரேடியோவில் கேட்கிற மாதிரியே இருந்தது.

நாம் ஆடியோவில் மட்டும் கேட்கிற பாடல்கள் இப்படி ஆர்கெஸ்ட்ராவில் பாடி, இசை அமைப்பதை நேரில் பார்க்கும் போது தான் அதை பாடுவது எத்தனை கடினம் என்பதும், இசைக்கு பின் எவ்வளவு பேரின் உழைப்பு உள்ளது என்பதும் புரிகிறது.

லட்சுமண் சுருதி ஆர்கெஸ்ட்ரா கேட்பதும், பார்ப்பதும் ஒரு இனிய அனுபவம். வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பார்த்து, கேட்டு ரசியுங்கள்

டிஸ்கி: இந்த நிகழ்ச்சி விரைவில் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும்.
*****
அண்மை பதிவுகள்:

வானவில்: நீர்ப்பறவை-நடுவுல பக்கத்தை காணும்-பூஜா

முடி திருத்துவோர் வாழ்க்கை -பேட்டி

Wednesday, November 28, 2012

வானவில்- நீர்ப்பறவை- நடுவல பக்கத்தை காணும்- பூஜா

நீர்ப்பறவை-நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்- தலாஷ்

இவ்வாரம் வெளியாகும் இந்த மூன்று படங்களுமே மிக எதிர்பார்க்கும் படங்கள் தான்.

நீர்ப்பறவை - தென் மேற்கு பருவகாற்றில் நம் மனதை கவர்ந்து போன சீனு ராமசாமி இயக்கம் - மிக அற்புதமான பாடல்கள்- அழகு ஹீரோயின் சுனைனா - இவற்றால் எதிர்பார்க்க வைக்கிறது

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்-இந்த வருடம் தொடர்ந்து சில வெற்றிப்படங்களில் வலம்வரும் விஜய் சேதுபதி ஹீரோவாய் நடிக்கும் படம். வெளிவரும் முன்னே நல்ல talk இருக்கு. இயக்குனருக்கு நடந்த ஒரு விபத்தில் இடையில் சில மாதங்கள் நடந்த விஷயங்கள் மறந்து போனாராம். அதனை வைத்தே இக்கதை உருவாகியுள்ளது. 2012-ல் சிறு படங்கள் தான் அதிக வெற்றி என்கிற விதத்தில் எதிர்பார்க்க வைக்கிறது இப்படம்.

தலாஷ்- ஆமிர் கான் கடைசியாய் ஹீரோவாய் நடித்த படம் எது தெரியுமா? 3 இடியட்ஸ் ! மூன்று வருஷத்துக்கு பின் ஆமிர் ஹீரோவாய்/ போலிசாய் நடிக்கும் இப்படம் வெளிவருகிறது. (இந்த மூன்று வருஷத்தில் தோபி காட் போன்ற ஓரிரு படத்தில் கெஸ்ட் நடிகராய் தலை காட்டியதோடு சரி). இப்படத்துக்காக 45 வயதில் தான் நீச்சல் கற்றிருக்கிறார் ஆமிர். இப்படி பெரும் இடைவெளி விட்டு படம் நடிப்பது இவரின் வழக்கம் தான் ! ஆமிர் வீ ஆர் வெயிட்டிங்.

அழகு கார்னர்

தமிழ் பெண்ணாகவும் இருந்து, அழகாகவும் இருந்தால் நம்ம இயக்குனர்கள் ஹீரோயினாய் ஏற்று கொள்வார்களா என்ன? காதலில் சொதப்புவது எப்படியில் துக்கடா ரோல் தான் தந்தது தமிழ்த் திரை உலகம். அம்மணி இப்போ வெள்ளையாய் உருண்டையாய் ஒரு பையனை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்.


மனதை வருத்திய செய்தி

பொம்மையார் பாளையம் என்கிற ஊரில் துணை தாசில்தாராக இருந்த பெண் -சிவஞானம். ஒரு நாள் இரவு கணவருக்கும் இவருக்கும் சற்று வாக்குவாதம் வர, கணவர் மற்றும் இரு குழந்தைகள் தூங்கிய பின் தன் உடலுக்கு தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு விழித்து காப்பாற்ற போன கணவரும் தீயில் சிக்க, பின் அந்த அறையே தீக்கிரையாகி குடும்பத்தில் நால்வரும் இறந்து விட்டனர்.

இதன் பின் வந்த இன்னொரு அதிர்ச்சி தகவல்: குடும்ப சண்டையில் அவர் தீக்குளிக்க வில்லை ! மேலதிகாரிகளால் பதவியிறக்கம் செய்ததால், மனமுடைந்து அதையே சொல்லி புலம்பி கொண்டிருந்ததாகவும், அதனால் தான் இறந்தார் என உறவினர்கள், கலெக்டர் மேல் நடவடிக்கை எடுக்க சொல்லி சாலைமறியல் செய்துள்ளனர்.

இறந்த அப்பெண், தன் குடும்பம் முழுதும் இறக்கும் என நினைத்திருக்கவே மாட்டார். எவ்வளவு மடத்தனமான செயல் ! நாட்டில் வேலை கிடைக்காதோர் கோடிக்கணக்கில் இருக்க துணை தாசில்தாராய் இருந்தவர் ஏன் இப்படி செய்தார் ? கொடுமை... !

ஆனந்த் கார்னர்                 (நண்பர் ஆனந்த் அனுப்பும் SMS-ல் இருந்து)

Every great improvement comes after repeated failures. Virtually nothing comes out right first time. Never loose your confidence at any time.

வீட்டில் தீபத்தன்று எடுத்த படம்

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப வாழ்த்துகள் !



ரயிலில் காதலர்கள் 

பறக்கும் ரயிலில் எனக்கு நேர் எதிரே வந்து அமர்ந்தனர் இளம் காதலர்கள். கூடவே இன்னும் சில நண்பர்கள் - அருகில் இடமில்லாமல் சற்று தள்ளி அமர்ந்திருந்தனர். வந்தது முதல் இருவருக்கும் செம சண்டை நான் ஜன்னல் வெளியே பார்த்திருந்தாலும் காதில் அவர்கள் பேசுவது தெளிவாக கேட்டது. எதிரில் இருப்போரை பற்றி கவலையின்றி எவ்வளவு சத்தமாய் சண்டையிடுகிறார்கள் !

"ஏன் நீ செலவே பண்ணலை ? அவனையே டிக்கெட் எடுக்க விட்டே?" -

"விடு ! டிக்கெட் அவன் எடுத்தான் நான் எல்லாருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்தேன் "

" டிக்கெட் விலையும் ஐஸ்க்ரீம் விலையும் ஒண்ணா ? ஐஸ்க்ரீமுக்கு கூட என் பர்சில் இருந்து தானே காசு எடுத்து குடுத்தே?"


"........"

" எப்பவும் உன் காசை செலவே பண்ண மாட்டியா ? அசிங்கமா இருக்கு "

விவாதம் சற்று வலுக்க, " ஆமா நான் அப்படித்தான் என்று, என்னவோ சொல்லி திட்டி விட்டான். அழுகை.........

வேளச்சேரி வந்துவிட்டது. பெண் இப்போது " நமக்கு சரிப்பட்டு வராது இனி எனக்கு போன் பண்ணாதே; பேசாதே ! ரயிலில் கீழே இறங்கி என் பின்னாடி வந்தே அசிங்கமா திட்டுவேன் "...

ரயில் நிற்க, அவர்கள் இறங்கி கூட்டத்தில் மறைந்து போனார்கள்.

ஒன்றாய் போனார்களா இல்லையா.. அந்த காதல் அன்றோடு முடிந்ததா, அது வெறும் ஊடலா,, ? என்ற யோசனை ஒருபுறமிருக்க, "ஒரே காதல் ஊரில் இல்லையடா " என முணுமுணுத்தவாறே ஸ்டாண்டில் இருந்த பைக்கை எடுத்து உதைத்தேன்.

போஸ்டர் கார்னர் 


அய்யாசாமி / சென்னை ஸ்பெஷல்

அய்யாசாமிக்கு சென்னையில் மிக பிடித்த சாலை ..கிண்டியில் ரேஸ் கோர்சை ஒட்டிய ரேஸ் கோர்ஸ் இன்னர் ரிங் ரோடு ! இருபுறமும் மரங்கள் சூழ, சில இடங்களில் சூரியன் மட்டுமல்ல வானமே தெரியாமல் கிளைகளும் இலைகளும் விரிந்து கிடக்கும். அகலமான, மேடு பள்ளம் இல்லாத நீ.........ண்ட சாலை இது. சென்னை வந்த காலம் தொட்டே, இந்த சாலையில் மரங்களின் கீழே தன் காதலியுடன் பேசியவாறு நடந்து போகவேண்டும் என்பது அய்யாசாமிக்கு ஒரு கனவு. சமீபத்தில் தீபாவளி பர்ச்சேஸ் முடித்து விட்டு மனைவியை முதல் முறையாய் இச்சாலை வழியே பைக்கில் அழைத்து வந்தார். தன் கனவு பற்றி நைசாய் பேச, மனைவி " செம அழகா இருக்கே இந்த ரோடு !" என்று ரசித்தார். "வண்டியை நிறுத்திட்டு கொஞ்ச நேரம் நடந்துட்டு வருவோமா" என்றார் அய்யாசாமி கனவை நனவாக்கும் ஆசையில் !

Mrs. அய்யாசாமி. என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கிறீங்க? ஊகியுங்களேன் ... பாக்கலாம் !
***
அண்மை பதிவுகள்:

முடி திருத்துவோர் வாழ்க்கை - பேட்டி

தொல்லை காட்சி: சன் எக்ஸ்பிரசும், உங்களில் யார் பிரபுதேவா பைனலும்

Tuesday, November 27, 2012

முடி திருத்துவோர் வாழ்க்கை : அறியாத தகவல்கள்

ழக்கமாய் முடி வெட்டுபவரிடம் எப்போதுமே பல விஷயங்கள் பேசுவேன். நம்ம ஊரில் என்ன நடக்கிறது என பல தகவல்கள் அவர்கள் மூலம் தெரிய வரும். இந்த முறை முடி வெட்டியபோது இப்பேட்டிக்காக அவர் தொழில் பற்றியே பேசினேன். அவரும் தன் நிறைய விஷயம் பகிர்ந்தார். நாங்கள் பேசியதில் இருந்து :
****
இந்த வரிசை பேட்டிகள் அதீதம் இணைய இதழில் தொடர்ந்து வெளியாகிறது
******
இந்த கடை வாடகை கடையா? 

ஆமாம். வாடகை கடை தான். மாச வாடகை 2, 200. சில இடங்களில் இப்போ அட்வான்ஸ் மட்டுமே ஒரு லட்சம் கேட்கிறார்கள். இந்த கடை வைக்க அட்வான்ஸ், கார்பெண்டரி, சேர் எல்லாம் சேர்த்து 1 லட்சம் செலவாச்சு. மனைவி நகைகளை அடகு வைத்து தான் பணம் சேர்த்து கடை வைத்தேன். ரெண்டு வருஷத்தில் அந்த நகை எல்லாம் மீட்டுட்டேன் .

உங்க குடும்பத்தில் எத்தனை பேரு?

மூணு அக்கா. ஒரு அண்ணன். அண்ணன் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார். மூணு அக்காவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அவங்க மூணு பேர் புருஷனும் எங்க தொழில் தான் பண்றாங்க.

அக்கா மூணு பேருக்கும் கல்யாணம் பண்ண நிறைய கடன் வாங்கினேன் அதெல்லாம் அடைச்சிட்டு நான் கல்யாணம் பண்ணிக்க 29 வயசாகிடுச்சு. எனக்கு இப்போ கல்யாணம் ஆகி ரெண்டு பொண்ணுங்க இருக்கு . கிங்க்ஸ் மெட்ரிகுலேஷனில் படிக்கிறாங்க. நாம தான் படிக்காமல் போயிட்டோம் அதுங்களாவது நல்லா படிக்கட்டும்.

நல்லா படிச்சு நல்லா வேலைக்கு போனா அதுக்கு தகுந்த மாப்பிள்ளை பாக்கலாம். இல்லாட்டி நம்ம வசதிக்கு ஏற்ப சின்ன அளவில் மாப்பிள்ளை பார்க்க வேண்டியது தான்.



கடையில் நீங்க ஒரே ஆளா? துணைக்கு ஆள் வச்சிக்கலையா?

ஆள் வச்சிக்கலை. ஆள் வச்சா தினம் 350 ரூபா சம்பளம் கொடுக்கணும் . வேலை இருந்தாலும் இல்லாட்டியும் அந்த பணம் கொடுத்தாகணும். ஆள் இல்லாததால் தான் என்னால கடன் சீக்கிரம் அடைக்க முடிந்தது.

சனி ஞாயிறு கூட்டம் அதிகம் இருக்கும் போது சிரமமா இருக்கும். கை விரல் எல்லாம் வலி பின்னி எடுக்கும். இன்னொரு பக்கம் ஆள் வேறு காத்திருப்பாங்க. அன்னிக்கு மட்டும் ரொம்ப சீக்கிரமா முடி வெட்டுவோம். வலியை பார்க்காம வெட்டினா அன்னிக்கு நல்லா பணம் கிடைக்கும்.

முடி வெட்ட கத்து தர கோர்ஸ் ஏதும் இருக்கா?

ஆமா. நாலு அஞ்சு மாச டிரைனிங் கோர்ஸ் இருக்கு. பியூட்டி பார்லர் வைப்போர் எல்லாம் அப்படி தான் டிரைனிங் எடுத்துட்டு வைக்கிறாங்க. ஆனா கடையில் வேலை பார்த்து கத்துக்குறது இன்னொரு விதமான டிரைனிங் . நான் எல்லாம் அப்படி தான் கத்து கிட்டேன். வெறுமென அஞ்சு மாச கோர்ஸ் படிச்சிட்டு பியூட்டி பார்லர் வைப்பவர்களால் எங்களை மாதிரி முடி வெட்ட முடியாது .

கடையிலே வேலை பார்த்தா ஆறு மாசத்துக்கு தரையை கூட்டுறது, சிகரெட், டீ வாங்கி தர்றது மாதிரி வேலை தான் செய்ய சொல்வாங்க. நானெல்லாம் முதலாளி வீட்டில் பாத்திரம் தேய்ச்சு துணி எல்லாம் தோச்சு போட்டிருக்கேன். (ரெண்டு முறை இதை சொன்னார். மனதில் ரொம்ப வலி போலிருக்கு) சாமானியத்தில் தொழில் கத்து தர மாட்டாங்க.

ஆறு மாசம் கழிச்சு ஷேவிங் பண்ண விடுவாங்க. அப்புறம் சின்ன பசங்க கட்டிங்க்  பண்ண சொல்லி பார்ப்பாங்க. அது நல்லா செஞ்சா பெரிய ஆளுங்க. இப்படி கொஞ்சம் கொஞ்சமா மாறி தொழில் நல்லா கத்துக்க நீங்க ஒரு கடையில் மூணு வருஷமாவது இருந்தாகணும் 

நான் வேலை பார்த்தது அண்ணா நகரில் உள்ள ஒரு மார்வாடி சலூனில் தான். அவரு காசு வாங்குற வேலை மட்டும் தான் செய்வார். முடி வெட்டுற வேலை செய்றது எல்லாம் எங்களை மாதிரி ஆளுங்க

முன்னே இந்து நாவிதர் தான் இந்த தொழில் அதிகம் செஞ்சாங்க. இப்போ ஐயர், மார்வாடி எல்லாம் இந்த தொழில் ( பியூட்டி பார்லர் ) பண்றாங்க. இதுலே நிறைய காசு வருதுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு அதான்.

உங்களுக்குன்னு ஒரு சங்கம் இருக்குள்ள? அதுக்கு நீங்க பணம் ஏதும் கட்டணுமா?

சங்கத்துக்கு  வருடம்  250 ரூபா கட்டணும். வருஷா வருஷம் ஒரு விழா வைப்பாங்க. அதுக்கான செலவு இந்த பணத்தில் செய்வாங்க. ஒரு கிப்ட் தருவாங்க; அப்புறம் வருஷம் ஒரு தடவை டூர் கூட்டி போய் வருவாங்க. 

தலைவர், செயலாளர் எல்லாம் குறிப்பிட்ட ஆளுங்களே தான்  இருப்பாங்க. யாராவது நடவடிக்கை சரியில்லாட்டி அந்த வருஷ மீட்டிங்கில் அவரை நீக்கிட்டு வேறு ஆளை நியமிப்போம். நாங்க எல்லாம் ஓட்டு போட்டு தான் ஆள் தேர்ந்தெடுக்கணும் 

வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா  கடை மூடணுமா என்ன? 

சென்னை முழுசுக்குமே செவ்வாய் கிழமை லீவு. அந்தந்த ஏரியா சங்கத்தில் கொஞ்சம் ரூல்ஸ் மாத்திப்பாங்க. மடிப்பாக்கத்தில் செவ்வாய் கிழமை அரை நாள் திறக்கலாம்னு சொல்லிருக்காங்க. கோவிலம்பாக்கத்தில்  செவ்வாய் கிழமை முழுக்க கட்டாயம் மூடணும்னு  ரூல்ஸ் இருக்கு 

எவ்ளோ நாளைக்கு ஒரு தடவை முடி வெட்டிகிட்டா சரியா இருக்கும்?

ஒரு மாசத்துக்கு ஒரு முறை முடி  வெட்டிகிட்டா எப்பவும் ஒரே அளவு முடி இருக்குற மாதிரி, ஒரே ஹேர் ஸ்டைலில்   இருப்பது போல் பாத்துக்கலாம். 

ஷேவிங் தாங்களே பண்ணிக்கலாம்னா கூட சில பேர் எப்பவுமே கடைக்கு வந்து தான் ஷேவிங் பண்ணிக்குவாங்க. நீங்க பண்ணிகிட்டா எதிர் திசையில் தான் ஷேவ் பண்ணிக்க முடியும். நாங்க எப்பவும்  நீங்க பண்றதுக்கு ஆப்போசிட்டா பண்ணுவோம். அது தான் சரியான மெத்தட். தோல் ஹார்ட் ஆகாம சாப்ட் ஆக இருக்கும்

எத்தனை வயசு வரை இந்த தொழில் செய்ய முடியும்? 

 50 வயசுக்கு மேலே இந்த தொழில் செய்ய முடியாது. நின்னு கிட்டே முடி வெட்டுவதால் உடம்பில் உள்ள நீர் எல்லாம் காலில் போய் சேர்ந்திடுது. காலில் சின்னதா அடி பட்டாலே செமையா வீங்கிக்கும். காலையில் எழும் போதே சில நாள் காலை நகர்த்த முடியாது. நரம்பு சம்பந்தமான வியாதி எல்லாம் வர நிறைய வாய்ப்பு இருக்கு

அதோட சின்ன பசங்க " அவரு வயசானவரு- இப்போ உள்ள ஸ்டைல் அவருக்கு தெரியாது" என நினைப்பாங்க. அதனால் கூட்டம் வராது. 

வயசாகறதுக்குள் உட்கார்ந்து சாப்பிடுற அளவு பணம் சம்பாதிச்சுடனும் இல்லாட்டி நாம கடை வச்சிக்கிட்டு வேற ஆள் வச்சு வேலை வாங்கணும். "
***
நான் வந்த வேலை முடிந்து, எனக்கு போர்த்திய துண்டை உதறினார். முடி வெட்டும்போதே ஒரு பேட்டியும் கிடைத்த எண்ணத்தோடு விடைபெற்றேன்.
***
தொடர்புடைய பதிவுகள்: 
சலவை தொழிலாளி வாழ்க்கை: அறியாத தகவல்கள்
கூர்க்கா வாழ்க்கை அறியாத தகவல்கள்
பெங்களூர் ஆட்டோ காரர் பேட்டி 
மெக்கானிக் வாழ்க்கை : அறியாத தகவல்கள்
செருப்பு தைப்பவர் வாழ்க்கை-  பேட்டி

Monday, November 26, 2012

தொல்லைகாட்சி:சன் எக்ஸ்பிரசும் உங்களில் யார் பிரபுதேவா பைனலும்

சூப்பர் சிங்கர் அடுத்த சீசன்

ஒரு நிகழ்ச்சியை எப்படி பிரபலப்படுத்துவது என்று விஜய் டிவியிடம் தான் கத்துக்கணும். சூப்பர் சிங்கர் ஜூனியர் முடிந்து சிறு இடைவெளிக்கு பின் சூப்பர் சிங்கர் சீனியர் துவங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ அருமையாய் செய்துள்ளனர்.

சென்ற முறை பைனல் வரை சென்ற சந்தோஷ் சாய்சரண் உள்ளிட்டோர் இன்று திரை துறையில் பிரபலமாகி விட்டனர் என்பதை காட்டும் வண்ணம் அவர்கள் நால்வரும் பாடிய திரை பாடலை காட்டி, அது என்ன படம் என்று டைட்டிலும் போட்டு காட்டும் போது, இசையில் ஈடுபாடு கொண்டோருக்கு நாமும் பைனல் வந்தால், பின்னணி பாடகராகி விடலாம் என்று ஈர்ப்பு வருவது இயற்கை தானே ! இந்த விளம்பரத்தை சாய் சரண் பாடிய பாடலின் வரியான " நண்பா .....வா நண்பா " என்று பாடி அடுத்த சீசனுக்கு அப்ளிகேஷன் அனுப்புங்கள் என்று முடிப்பது ரசிக்கும் படி இருக்கு.



முக நூல் கைது பற்றிய விவாதம்

சன் செய்திகளில் முகநூலில் பால் தாக்கரே பற்றி எழுதி சிறைக்கு சென்ற இரு பெண்கள் பற்றிய விவாதம் நடந்தது. அதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் " லைக் பட்டனை அமுக்கியவர்களை கூட சிறையில் போடுவது சரியா? நூறு பேர் லைக் போட்டால், அந்த நூறு பேரையும் சிறையில் வைக்க முடியுமா?" என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன வழக்கறிஞர், " நூறு பேர் சட்ட மீறலான ஒரு முக நூல் செய்தியை லைக் செய்தால், அதனை சைபர் terrorism என கருதி அந்த நூறு பேரையும் கைது செய்ய முடியும் என்றார்.

எப்படியெல்லாம் மிரட்டுறாங்கப்பா !

உங்களில் யார் பிரபுதேவா 

உங்களில் யார் பிரபுதேவா பைனல் கோயம்பத்தூரில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்து, அது நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது. காலை 11 மணி முதல் மதியம் மூணரை வரை சென்ற இந்நிகழ்ச்சியை அவ்வப்போது மட்டும் பார்த்தோம். கார்த்திக் என்கிற இளைஞர் பட்டமும் நாற்பது லட்சம் வீடும் வென்றார்.





விஜய் டிவி நிகழ்ச்சி என்றால் அழுகை இல்லாமல் இருக்குமா? இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின் விபத்தில் இறந்த அஸ்வதி என்ற பெண்ணின் பெற்றோரை வரவழைத்து அவரது முழு உயர படம் தந்தனர்.

அவசர சிகிச்சை

ஜெயா டிவியில் சனி காலை ஒன்பது மணி அளவில் அறுவை சிகிச்சையை நேரடியே காட்டுகிறார்கள். சதை பிய்த்து ரத்தம் தெரிகிற நிகழ்ச்சி பார்க்க சற்று பயமாய் தான் இருக்கிறது. ஆனால் எனக்கு தெரிந்த சிலர் இந்த நிகழ்ச்சி விடாமல் பார்க்கிறார்கள். "எந்தெந்த ஆப்பரேஷன் எப்படி செய்கிறார்கள்; என்ன காம்ப்ளிகேஷன் வரலாம்; எப்படி தவிர்க்கணும்" என்ற விஷயங்கள் தெரியும் என்கிறார்கள் அவர்கள். உங்களுக்கு தைரியமான மனது இருந்தால் இந்த நிகழ்ச்சி பாருங்கள். நிச்சயம் மருத்துவ துறையில் பல விஷயம் அறியலாம் !

பிளாஷ்பேக்: பெண் - சீரியல்

டிவிகளில் முதலில் சீரியல் வர ஆரம்பித்த போது வாரம் ஒன்று என்கிற அளவில் தான் வர ஆரம்பித்தது. ஒவ்வொரு வாரமும் அரை மணிக்கு ஒரு சீரியல் இருக்கும். அதே நாள் அடுத்த வாரம் அதன் கதை தொடரும்.

பல்வேறு நடிகைகள் இயக்கிய சீரியல் பெண். ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு ஹீரோயின் இயக்கினார். அந்த வகையில் சுகாசினி, ரேவதி, ரோகினி போன்றோருக்கு இது தான் இயக்கத்தின் முதல் படி என்று சொல்லணும். இதில் வந்த சில சிறுகதைகள் மிக அருமையாய் இருந்தது. சுஜாதா கதைகளும் இரண்டோ மூன்றோ வந்த நினைவு..

டிவியில் பார்த்த படம்: பள்ளிக்கூடம்

சற்று மெலோ டிராமாவான படங்கள் தான் அதிகம் எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும், தங்கர் பச்சான் இயக்கிய படங்களில் அழகி, சொல்ல மறந்த கதை மற்றும் பள்ளிக்கூடம் ஆகிய மூன்றுமே எனக்கு பிடித்த படங்கள். சமீபத்தில் சன் டிவியில் பள்ளிக்கூடம் படம் மீண்டும் பார்த்தேன்.

நாம் படித்த பள்ளிக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற கான்செப்ட் உண்மையில் மிக அருமையான ஒன்று. படம் பார்த்து முடிக்கும் போது நமக்கும் நம் பள்ளியை பார்க்கவும், அந்த பள்ளிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால் எத்தனை பேர் அதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து போகிறோம் என்பது கேள்விக்குறியே.

தங்கர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டு, பிற நடிகர்களை வைத்து இந்த மண்ணின் கதைகளை தொடர்ந்து இயக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

லிட்டில் மாஸ்டர்ஸ்

ஜெயா டிவியில் நடக்கும் டான்ஸ் ஷோ- லிட்டில் மாஸ்டர்ஸ். நடன இயக்குனர் ரகுராம் மற்றும் நடிகை மும்தாஜ் தான் ஜட்ஜ்கள். இவர்களோடு பிரிதிவிராஜ் வேறு. நாங்கள் பார்த்த எபிசோடில் அவர் devil மாதிரி வேஷத்தில் வந்து மிரட்டினார். பிரிதிவிராஜை சாதரணமா பார்த்தாலே சற்று பயமாய் தான் இருக்கும் இதில் devil வேஷத்தில் கேட்கவே வேணாம் !

இந்த நிகழ்ச்சியில் நிஜமா ஏழு அல்லது எட்டு வயது குட்டி பசங்க தான் ஆடுறாங்க (விஜய்யில் -பதிமூணு பதினாலு வரை ஜூனியர் என்பார்கள் ). ஜட்ஜ்கள் மார்க் போடாமல் சூப்பர், சுப்ரீம், சுமார் என்று கிரேட் சொல்றாங்க

பசங்க என்னவோ நல்லா தான் ஆடுறாங்க. ஆனா ஏனோ நிகழ்ச்சி தான் விஜய் டிவி ப்ரோகிராம்கள் அளவு பாப்புலர் ஆகலை.

சன் எக்ஸ்பிரஸ் கொண்டாட்டம்

ஞாயிறு மாலை நான்கரை மணிக்கு சன் டிவியில் வரும் புதிய நிகழ்ச்சி " சன் எக்ஸ்பிரஸ் கொண்டாட்டம்". அவர்களுக்கு SMS அனுப்பும் வாசகர் வீட்டுக்கு நேரடியே செல்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பொருள் என்ன வேண்டும் என கேட்டு, அதனை அவர்கள் முன் கொண்டு வந்து இறக்குகிறார்கள். அவர்கள் கேட்கும் மூன்று கேள்விகளில் இரண்டுக்கு பதில் சொன்னால் அந்த பொருள் அவர்களுக்கே கிடைக்கிறது.

இந்த நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 25 ) நாங்கள் வருடா வருடம் பேச்சு போட்டி, பாட்டு போட்டி நடத்தும் செயின்ட் லூயிஸ் விழி இழந்தோர் பள்ளியில் நடத்தினார்கள். கலந்து கொண்ட சிறுவர்கள் எல்லாமே எங்களுக்கு நன்கு அறிமுகமானவர்களே . சிறுவர்கள் சரியே பதில் சொல்லி பள்ளிக்கு ஒரு நல்ல ஆடியோ சிஸ்டம் வென்றனர். காண மகிழ்ச்சியாய் இருந்தது

பல நேரங்களில் ஏழைகளுக்கும், உண்மையில் உதவி தேவைப்படுவோருக்கும் உதவுகிற வகையில் இந்த பரிசுகள் அமைகின்றன. தங்கள் பிரபலத்துக்கு தான் செய்கிறார்கள் என்றாலும் சன் டிவி செய்யும் இந்த நல்ல செயலை பாராட்டி தான் ஆகவேண்டும் !
****
அண்மை பதிவுகள் :


இங்க்லீஷ் விங்க்லீஷ் : தவறவிடகூடாத ஒரு படம்

மோதிப்பார்- அமெரிக்காவுக்கு எதிரான மனிதரின் கதை

தூக்கு தண்டனை தேவையா? ஒரு விவாதம்

Sunday, November 25, 2012

இங்க்லீஷ் விங்க்லீஷ் தவற விடக்கூடாத ஒரு படம்

ங்க்லீஷ் விங்க்லீஷ் படம் வெளிவந்து சில மாதங்கள் கழித்து தான் பார்த்தேன். படம் பார்க்கும் முன் தனி விமர்சனம் எழுதும் எண்ணம் சுத்தமாய் இல்லை. அதிகபட்சம் வானவில்லில் நான்கு வரி எழுதலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் பார்த்து முடித்ததும் இது நான்கு வரியில் எழுதக்கூடிய படமல்ல என்பது தெளிவாய் புரிந்து போனது.


கதை

கணவர், குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வசிக்கும் இந்திய பெண் - சஷியாக ஸ்ரீதேவி. பகுதி நேர வேலையாக லட்டு தயாரித்து வியாபாரம் செய்கிறார். கணவர், குழந்தைகள் உள்ளிட்டோர் அவரை சமைக்கவும், வீட்டு வேலை செய்யவுமே ஏற்றவர் எனக்கருதி, தங்களை அறியாமல் பல விதத்தில் காயப்படுத்துகின்றனர்.

அக்கா மகள் திருமணத்துக்கு உதவ தனியாக அமெரிக்கா செல்கிறார் ஸ்ரீதேவி. அங்கு அனைவரும் வேலைக்கு சென்ற பின் தனியே இருப்பது போர் அடிக்க ஆங்கில வகுப்புக்கு செல்ல துவங்குகிறார். திருமணத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா வரும் ஸ்ரீதேவியின் குடும்பம் அவளிடம் நடந்துள்ள மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.,

***
பிரபலமான நடிகர்கள் ஒரு பாத்திரத்தில் நடிப்பதில் மிக பெரிய பிரச்சனை: நாம் அவர்களை அந்த பிரபலமாக தான் பார்ப்போம். கமல் ஒரு பாத்திரத்தில் நடித்தால், நமக்கு கமல் என்பது நினைவில் இருந்து கொண்டே தான் இருக்கும். அதை தாண்டி அந்த பாத்திரத்தை நம் மனதில் பதிய வைப்பது பெரிய விஷயம்.

இப்படத்தில் போக போக நாம் ஸ்ரீதேவியை மறந்து விட்டு சஷியை ரசிக்க துவங்கி விடுகிறோம்.

பட துவக்கத்தில், க்ளோஸ் அப்பில் ஸ்ரீதேவியின் மூக்கு மிக உறுத்துகிறது. " சே ! ஸ்ரீதேவி ஏன் தான் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கெடுத்து கொண்டாரோ " என்ற வருத்தம் கொஞ்ச நேரம் எட்டி பார்த்தவாறே உள்ளது.

ஹீரோ ஓரியண்ட்டட் படங்களில் கூட, நான்கு சண்டைகள், பாடல்கள், ஹீரோயினின் கிளாமர், நகைச்சுவை என பல விஷயங்கள் இருக்கும். இந்த படம் முழுக்க முழுக்க ஸ்ரீதேவி என்கிற தனி மனுஷியை மட்டுமே நம்பி சுழல்கிறது. அட்டகாசம் !

ஸ்ரீதேவியை தவிர இன்னொருவரை இந்த பாத்திரத்தில் நினைத்தே பார்க்க முடியவில்லை. என்னா performance!

- பள்ளியில் ஆசிரியருடன் பேசும்போது காட்டும் மரியாதை, தயக்கம்...
- ஆட்டோவில் பெண் கோபப்படுகையில் கண் கலங்குவது, சில நொடிகளில் அவளை பார்த்து சரியாவது
- ஆங்கிலம் சற்று கற்று கொண்டதும் நடக்கிற கம்பீர நடை
- கணவர் அலட்சியப்படுத்தும் போது கூனி குறுகும் முக பாவங்கள்
- ஆங்கிலம் கற்கும் மாணவர்களுடன் காட்டும் மகிழ்வான ஒட்டுதல்
- க்ளைமாக்சில் பேசும் அமைதியான, அழகான பேச்சு ..

என முழுக்க முழுக்க இது ஒரு ஸ்ரீதேவி படம் ! Comeback-ன்னா இப்படி தான் இருக்க வேண்டும். பிச்சு உதறிட்டார். அடுத்தடுத்து இவரை ஹீரோவின் அம்மா போன்ற பாத்திரத்தில் வீணடிக்காமல் இந்தி திரை உலகம் நல்ல பாத்திரங்கள் வழங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த பாராட்டு இயக்குனர் கௌரி ஷிண்டேவுக்கு (ஒளிப்பதிவாளர் பால்கியின் மனைவி). எனக்கு அவரிடம் மிக பிடித்த விஷயம் ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளது தான் ! ஏழு வயது பையன் -ஏழு வயது பையன் செய்யும் வேலை தான் செய்கிறான். பன்னிரண்டு வயது பெண்ணின் மனநிலை -அவளது செயல்களை அப்படியே பிரதிபலிக்கிறார். ஸ்ரீதேவி கணவர் பாத்திரம் தான் போக போக சற்று நெகடிவ் ஷேட் அதிகமாகி, நாம் சற்று வெறுக்கிற அளவில் போகிறது என்றாலும், அந்த பாத்திரம் என்னையும் சேர்த்து ஒவ்வொரு ஆணின் பிரதிபலிப்பே.

அஜீத், ஸ்ரீதேவியுடன் இயக்குனர் கௌரி 

அஜித் வரும் காட்சிகளும் அழகாக உள்ளன. தல - தலயாகவே வந்து போகிறார். அமெரிக்காவில் இறங்கியதும் இம்மிக்ரேஷனில் " ஏன் அமெரிக்கா வந்தீர்கள்" கேட்க அஜீத் சொல்லும் பதில் : "ம்ம் உங்க எக்கானமியை சரி செய்ய வந்தேன்"

படத்தில் மிக மிக ரசிக்கும் பகுதி: ஸ்ரீதேவியின் ஆங்கில வகுப்பு காட்சிகள் தான்.

ஆங்கில வகுப்புக்கு தட்டு தடுமாறி வழி விசாரித்து வந்து சேரும் ஸ்ரீதேவி, முதல் நாள் வகுப்பில் அமரும் போது மற்றவர்கள் பேசும் உடைந்த ஆங்கிலத்தை கேட்டு மிக மகிழ்ச்சியாவது அழகு. அந்த நான்கு வாரத்தில் வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் அவர்கள் அன்போடு பழகுவதும், வகுப்பு தோழர்கள் போல் கூத்தடிப்பதும் கவிதை போல காட்டியுள்ளார்.


இட்லிக்காக ஏங்கும் ராமமூர்த்தி, வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து பாத்திரங்களும் சுவாரஸ்யம்.

ஸ்ரீதேவி க்ளைமாக்சில் ஆங்கிலத்தில் பேச துவங்கும் போது, ஆங்கிலம் கற்று தந்த ஆசிரியரின் டென்ஷனை காட்டுவதும், முதலில் அவர் எழுந்து கை தட்டி விட்டு, " நீ பேசியதில் சில தவறு இருந்தது. " என சிறு கேப் விட்டு " ஆனால் நீ Distinction-ல் பாஸ் செய்து விட்டாய் " என முடிப்பது டைரக்டர் டச்.

ஸ்ரீதேவியை ஒரு தலையாய் காதலிக்கும் அந்த நபரின் பாத்திரம் சினிமாவிற்கு சற்று ரொமான்ஸ் தேவையென்பதால் சேர்க்கப்பட்டதாக தோன்றுகிறது . (நிஜத்தில் இத்தகைய காதல்கள் வராது என்று அர்த்தம் இல்லை)

மிக முக்கிய விஷயத்துக்கு வருவோம்

இந்த படம் சொல்ல வரும் விஷயம் : ஆங்கிலம் கற்பதன் அவசியத்தை அல்ல. ஒவ்வொரு குடும்பமும், குடும்ப தலைவியை எப்படி நடத்துகிறது என்பதை தான்.

யோசித்து பாருங்கள்: உங்கள் வீட்டில் இருக்கும் தலையணைகளில், மோசமான தலையணையை வைத்து தினம் தூங்குவது யார்? குடும்ப தலைவி என்று யாரை சொல்கிறோமோ அவர் தானே !

இங்கு தலையணை என்பது ஒரு குறியீட்டுக்கு தான் ! பல விஷயங்களுக்கும் இது பொருந்தும். ஸ்பெஷல் டிஷ் தயாராகும் போது அது அநேகமாய் காலியான பின், கடைசியில் மிக கொஞ்சமாய் அதை உண்பதில் துவங்கி, இன்னும் எத்தனையோ விஷயம் சொல்ல முடியும். (இந்த துயர்களை மறக்கத்தான் பெண்கள் நகைகளும், புடவையும் நிறைய வாங்குகிறார்களா என கேட்கிறார் அய்யாசாமி :)) )

ஒவ்வொரு குடும்ப தலைவியாலும் எந்த விஷயத்திலும் நமக்கு சமமாக வரமுடியும் என்பதை காட்ட, இப்பட இயக்குனர் எடுத்து கொண்ட ஒரு விஷயம் ஆங்கிலம். அவ்வளவு தான் ! ஆங்கிலம் பேசுவதில் தான் நான்கு வாரத்தில் ஒரு மாறுதலை காட்ட முடியும். சினிமாவிற்கும் ஆங்கிலம் பேசுவதில் உள்ள சிரமம் சுவாரஸ்யமாக இருக்கும். மற்றபடி பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம், அவர்கள் உணர்வுகளை எப்படி மதிக்கிறோம் என்பதை பற்றிய ஒரு பார்வையே இப்படம்.

இத்தகைய படம் பார்ப்பதால் யாரும் ஒரே நாளில் மாறி விடபோவதில்லை. எனினும் படம் பார்க்கும் ஆண்களில் எங்கோ யாரோ சற்று சிந்திக்க ஆரம்பித்தால் அதுவே ஒரு வெற்றி தானே !

படத்தின் கமர்ஷியல் வெற்றி பற்றிய தகவலுடன் இப்பதிவை முடிப்போம். 15 கோடிகளில் தயாரான இப்படம் 85 கோடிகளை வசூலித்து தந்துள்ளது. நல்ல படத்தை மக்கள் என்றும் கொண்டாடவார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் !

இங்க்லீஷ் விங்க்லீஷ் - ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் அவசியம் பார்க்க வேண்டிய படம் ! தவற விடாதீர்கள் !

Saturday, November 24, 2012

மோதிப்பார்- அமெரிக்காவுக்கு எதிரான மனிதரின் கதை

வெனிசுலா நாட்டின் அதிபர் சாவேஸ் பற்றிய புத்தகம் இது. கிழக்கு பதிப்பக வெளியீடு.
 ஐக்கிய நாடுகள் சபையில் பேசுகிறார் சாவேஸ்; தனது பேச்சின் இடையே இப்படி குறிப்பிடுகிறார்

"அந்த சாத்தான் நேற்று இங்கு வந்தது. இந்த மேடையில் நின்று பேசியது. அது வந்து விட்டு போன துர்நாற்றம் இன்னும் அடிக்கிறது"

அவர் சாத்தான் என்று குறிப்பிட்டது அமெர்க்காவின் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை ! ஐக்கிய நாடுகள் சபையில் நின்று அவர் இதனை குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

சாவேஸின் ஆதர்சம் பிடல் காஸ்ட்ரோ. அவரும் அமெர்க்கர்களுக்கு சிம்ம சொப்பனம் தான். ஒரு முறை பிடல் காஸ்ட்ரோ கட்டி பிடித்து இப்படி சொன்னாராம் " உங்களை விட்டால் வெனிசூலாவுக்கு வேறு நல்ல தலைவர் கிடைக்கவே மாட்டார்"

இவருக்கு பல தென் அமெரிக்க நாடுகள் ஆதரவு தர தொடங்கியதும், அதன் பின் அமெரிக்கா என்ன செய்தது என்றும் புத்தகம் பேசுகிறது.

முதல் அத்தியாயத்திலேயே அமெரிக்காவிற்கும் இவருக்கும் உள்ள பகையை காட்டி விட்டு பின் சாவேஸ் குடும்பம், இளமை காலம், படிப்பு இவை பற்றி பேசுகிறார் நூல் ஆசிரியர். ராணுவ படிப்பு முடித்து ராணுவத்தில் துணை லெப்டிநென்ட் ஆக பணிபுரிகிறார் சாவேஸ். பின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கும் போது பல இளைஞர்களை ரகசியமாக ஒன்று சேர்த்து புரட்சி படை ஒன்று துவங்குகின்றனர். பின் அரசையே எதிர்க்கின்றனர். மிக கடுமையாக போராடும் அவர்கள் ஒரு நேரத்தில் தாங்கள் தோற்க போகிறோம் என அறிந்து சரணடைகிறார்கள். சிறை செல்கிறார்கள். இதன் பின் சாவேஸ் மீது மக்களுக்கு மதிப்பு கூடி போகிறது.

சிறையில் இருந்து வெளியே வந்து கட்சி துவங்குகிறார். தேர்தல் வருகிறது. அதில் நின்று ஜெயிக்கிறார். 1999 ஆம் ஆண்டு முதல் அதிபர் ஆனார் சாவேஸ்.



அவர் அதிபர் ஆன நேரம் பொருளாதாரம் மிக மோசமாக இருந்தது. அப்போது என்ன செய்வது என மக்களிடமே கருத்து வாங்கினார். இதற்கு அவர் பயன்படுத்தியது என்ன முறை தெரியுமா? நம் முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராய் இருக்கும் போது அர்ஜூன் செய்வாரே.. அதே தான். மக்கள் போன் செய்து பேசலாம். அதனை முழுதும் கேட்க அதிகாரிகள் பலரை தனியே அமைத்தார்.

அதை விட அவர் செய்த இன்னொரு விஷயம் ஆச்சரியமாய் இருக்கிறது. ராணுவத்தினர் அனைவரையும் மக்கள் பணிக்கு அனுப்பி யுள்ளார். ராணுவத்தினர் முழுதும் கிராமம் கிராமமாக சென்று சாலைகள் போடுவது, மருத்துவ உதவிகள் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படை, கப்பற்படை போன்றவை கூட மக்களை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளன. கோழிக்குஞ்சுகள், தட்டு முட்டு சாமான்கள், வீட்டு பொருட்கள் அனைத்தும் ஏற்றி சென்றுள்ளனர் ! ராணுவ ஆஸ்பத்திரிகள் பொது மக்களுக்கு திறந்து விடப்பட்டது.

ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில் ஏராள சாதனை செய்துள்ளார் சாவேஸ் ! அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்ற பின், பணக்கார்களிடம் இருக்கும் அதிகப்படியான நிலங்களை கைப்பற்றி ஏழைகளுக்கு கொடுக்க முயல அங்கு ஆரம்பித்தது பிரச்சனை. அவருக்கு எதிராக கழகம் வெடித்து பின் அவரை எதிரித்து தேர்தலில் நின்றோர் ஆட்சியை பிடித்து விட்டனர். ஆனால் ஒரே நாள். .. மக்கள் எழுச்சியில் அவர்கள் ஆட்சியை சாவேஸ் இடம் ஒப்படைத்து விட்டு விலகி விட்டனர் !

இவை ஒரு புறமிருக்க எண்ணெய் கூட்டமைப்பு என்கிற அமைப்பு பல நாடுகளையும் உள்ளடக்கியது. அங்கு பேசி எண்ணெய் விலையை பல மடங்கு உயர்த்த ஏற்பாடு செய்து விட்டார் சாவேஸ். இதனால் அவர் நாட்டிற்கு நல்ல வருமானம். அமெரிக்காவிற்கு பெரும் செலவு/ பாதிப்பு.

சாவேஸுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் ஆட்சி கவிழ்ப்பு இவற்றுக்கு பின்னே அமெரிக்காவின் சி. ஐ. ஏ இருந்திருக்கலாம் என்கிறார் நூல் ஆசிரியர்.

அமெரிக்கா முதலில் பிடல் காஸ்ட்ரோவை நினைத்து தான் கவலைப்பட்டது. பின் சாவேஸ், அதன் பின் பொலிவியா என பல நாடுகள் சேர்ந்து கொண்டு தலைவலி தர ஆரம்பித்து விட்டது.

" அமெரிக்கர்கள் மீது எனக்கு வெறுப்பு கிடையாது. அங்கும் மூன்று வேலை உணவு கிடைக்காமல், வீடில்லாமல் இருப்போர் உண்டு. அவர்களை பற்றி கவலைப்படாமல் ஆயுதங்கள் வாங்க பணம் செலவழிப்பது என்ன நியாயம்?" என்கிறார் சாவேஸ் !

2005 ல் அமெரிக்காவை காத்ரீனா புயல் தாக்கிய போது சாவேஸ் உதவ முன்வர, புஷ் அதனை ஏற்று கொள்ள வில்லை.

2006-ல் மூன்றாம் முறையாய் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார் சாவேஸ் என்பதுடன் இந்த புத்தகம் முடிவடைகிறது

*******
வெனிசுலா என்கிற நாடு பற்றியும், அமெரிக்கவிற்கும் - தென் அமெரிக்கா நாடுகள் சிலவற்றுக்கும் இருக்கும் பனிப்போரை இந்த புத்தகம் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. 

மருதன் எழுதி நான் வாசிக்கும் முதல் நூல் இது. மிக எளிமையான நடையில் முடிந்த அளவு சுவாரஸ்யத்துடன் பதிவு செய்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள் !
********
பெயர்: மோதிப்பார்
ஆசிரியர்: மருதன்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 126
விலை: ரூ : 60

தூக்கு தண்டனை தேவையா? ஒரு விவாதம்

ட்டக் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கையில் மாணவர்கள் அனைவரும் சனிக்கிழமைகளில் குறிப்பிட்ட தலைப்பில் விவாதம் செய்வோம். படிப்பு முடிந்து கோர்ட்டுக்கு செல்கையில், நீதிபதி முன் விவாதம் செய்ய உதவியாக இருக்கும் என்பதால், நாங்களாகவே செய்து கொண்ட ஏற்பாடு இது. ஒவ்வொரு வாரம் ஒரு மாணவன் தலைப்பு தந்து விட்டு நீதிபதி போல் அமர்ந்திருப்பான். இரு பக்க விவாதமும் கேட்டு இறுதியில் தீர்ப்பு கூறுவான். அப்படி நாங்கள் விவாதித்த தலைப்புகளுள் ஒன்று : “தூக்கு தண்டனை தேவையா? ” 20 ஆண்டுகள் கடந்தும் அதே விவாதம் தொடர்கிறது. அன்று நாங்கள் விவாதித்தது சண்டையிட்டது போல் இன்றும் இணையத்தில் நடக்கிறது. அப்போது பேசிய அதே காரணங்கள் தான் இன்றைக்கும் பேசப்படுகிறது. ஒவ்வொரு முறை இந்தியாவில் யாருக்கேனும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வந்தால் இந்த விவாதம் எழும்பும்.

இரண்டு பக்கமும் இருக்கும் நியாயத்தை முதலில் பார்த்து விடுவோம்

மரண தண்டனை தேவையில்லை என்று சொல்வோர் கூறும் காரணங்கள் :

ஒருவர் கையை இன்னொருவர் வெட்டி விட்டார் என்றால், வெட்டியவர் கையை வெட்டுகிறோமா என்ன ? உயிரை எடுத்தவர் உயிரை மட்டும் எடுப்பது ஏன்?

ஒரு அரசுக்கு ஒரு மனிதனின் உயிரை எடுக்க உரிமை இல்லை (இது மிக முக்கிய கேள்வி; உச்ச நீதிமன்றம் வரை இக்கேள்வி ஒலித்து, உச்ச நீதிமன்றம், மனித உயிர்களை காக்கும் பொறுப்பு கொண்ட அரசுக்கு, அதே உயிரை எடுக்கவும் உரிமை உண்டு என தீர்ப்பு கூறியது)

ஏராள நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மனிதன் நிச்சயம் திருந்தி விடுகிறான். அப்படி முழுதும் திருந்திய ஒருவனை கொல்வது எப்படி சரியாகும்?

மரண தண்டனை வேண்டும் என்று சொல்வோர் சொல்வது:

97 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது என்று சொன்னாலும் இன்னும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் அது இருக்கிறது தானே !

இந்தியாவை பொறுத்த வரை அரிதிலும் அரிதான வழக்கில் தான் (Rarest of rare Cases) தூக்கு தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 1983-ல் கூறியதே வேதவாக்காக இருக்கிறது. நாம் சில நாடுகள் போல பெண்களை தவறாக அணுகினாலோ, திருடினாலோ கூட தூக்கு தண்டனை தருவதில்லையே.. !
****
இதனை எழுதும் எனது நிலை என்ன என்று கேட்கிறீர்களா?

இந்தியாவில் மரண தண்டனை குறித்தான இப்போதைய நிலைப்பாடு தான் மிகச் சரி என்று கருதுகிறேன்.

கொலை, நாட்டுக்கெதிரான போர் போன்ற மிக மோசமான குற்றசாட்டுகளுக்கு தான் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த பல வருடங்களில் நிரபராதி யாரும் தூக்கிலிடப்பட்டதாக நினைவு இல்லை. மாறாக " இவருக்கு இந்த அளவு பெரிய தண்டனை தேவையில்லை- தூக்கே தேவையில்லை " என்ற குரலே எழுகிறது.

உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நான்கு நாடுகளான சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய நான்கிலுமே மரண தண்டனை ஒழிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

****

இந்தியாவில் கடந்த 18 ஆண்டுகளில் இதுவரை மூன்று பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஆட்டோ ஷங்கர் -1995 ல்
தனன்ஜய் சாட்டர்ஜி - 2004 ல்
கசாப் - 2012 ல்
(Source : http://en.wikipedia.org/wiki/Capital_punishment_in_India)
****
கசாப் வழக்கை விட்டு விடுவோம். அது மிக அசாதரணமான அரிதான வழக்கு. தனி நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு தந்தது.

ஒரு கொலை வழக்கை எடுத்து கொண்டு அதில் எப்படி தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது என்று பார்ப்போம்.

தஞ்சையை சேர்ந்த ஒருவர் குடும்ப பகை காரணமாக இன்னொரு குடும்பத்தில் ஏழு பேரை வெட்டி கொன்றார் எனில், இந்த வழக்கு முதலில் தஞ்சை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு,குற்றம் முழுமையாக நிரூபணமானால், தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. பின் சென்னை உயர் நீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்படும். அங்கும் தூக்கு உறுதியானால், உச்ச நீதி மன்றத்துக்கு வழக்கு செல்கிறது. அங்கும் உறுதி செய்தால், ஜனாதிபதி முன் கருணை மனு தாக்கல் செய்வர். உள்துறை அமைச்சம் பரிந்துரை அடிப்படையில் ஜனாதிபதி மனுவை ஏற்கிறார் அல்லது நிராகரிக்கிறார்.

இப்படி பல நிலைகளை கடந்தே தூக்கு உறுதியாகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு சொல்லும் ஒவ்வொரு நீதிபதியின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். ஒரு உயிரை எடுக்க சொல்லி, எந்த ஒரு நீதிபதியும் (அவரும் மனிதனே) அவ்வளவு எளிதில் சொல்லி விடுவதில்லை. அலட்சியமாக டீல் செய்யும் விஷயமல்ல இது.. அதன்பின் வாழ்நாள் முழுதும் அவர் குற்ற உணர்வில் புழுங்க வேண்டும். பல முறை பல விதத்திலும் யோசித்த பின் தான் தூக்கு தண்டனையை ஒரு நீதிபதி உறுதி செய்கிறார்.

மிக முக்கியமான விஷயம்: வழக்கு இப்படி ஒவ்வொரு நீதிபதியாக செல்லும் போது, ஒருவர் தூக்கை ரத்து செய்தாலும் அந்த மனிதன் பிழைக்க முடியும்..

நாமே மூன்று மாதங்களுக்கொரு முறை செஷன்ஸ் நீதிமன்றம் யாருக்கேனும் தூக்கு என தீர்ப்பு வழங்குவதை செய்தி தாளில் படிக்கிறோம். ஆனால் சராசரியாக ஆறு ஆண்டுக்கு ஒரு முறை தான் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்றால், செஷன்ஸ் கோர்ட்டால் தூக்கு விதிக்கப்பட்ட மற்றவர்கள்? அநேகமாய் அந்த வழக்கு உயர், உச்ச நீதி மன்றத்தில் ஆயுள் தண்டனையாய் மாற்றப்பட்டிருக்கும் !

தனது பதவி காலம் முடிய சற்று முன் பிரதீபா படீல் அம்மையார் ஏராள தூக்கு தண்டனை கைதிகளை ஆயுள் தண்டனையாக மாற்றினார். அப்படி அவர் மாற்றி உத்தரவிட்ட ஒருவர் - சிறுமியை கற்பழித்தவர் -அவர் ஆயுள் தண்டனையாக மாற்றும் முன்பே எயிட்ஸ் நோயால் இறந்து போயிருந்தார் !

ஐ.நா வில் ஐந்து நாடுகளுக்கு மட்டும் இருக்கும் வீட்டோ பவர் (Veto Power) போல ஒவ்வொரு நீதிபதிக்கும் அந்த வீட்டோ பவர் இருக்கிறது. அனைத்து நிலையில் உள்ள நீதிபதிகளும், உள்துறை அமைச்சகமும், ஜனாதிபதியும் ஆம் சொன்னால் மட்டுமே ஒரு மரணதண்டனை நிகழ்கிறது.

மரண தண்டனை பெறுவோரில் அநேகமாய் அனைவரும் இறுதி காலத்தில் மனம் திருந்தி விடுகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் “தான் நிச்சயம் இறக்க போகிறோம் “என்று தெரிவதால் நிகழ்கிற மாறுதல் தான் இது. மரண தண்டனை பெறாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் அந்த மனமாற்றம் நிகழுமா என்பது கேள்விக்குறியே.

தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுப்போர் சொல்லும் மற்றொரு விஷயம்: எல்லா குற்றவாளிக்கும் தண்டனை கிடைக்கிறதா? அவரை போல தவறு செய்தோர் எத்தனையோ பேர் இருக்க, அதெப்படி ஒரு சிலரை மட்டும் தூக்கில் போடலாம்?

நண்பரே, ஒருவன் திருடுகிறான். கையும் களவுமாய் மாட்டி கொள்கிறான் என்றால், அவன் உடனே " நாட்டில் திருடி விட்டு கைதாகாமல் இருக்கும் அத்தனை பேரையும் கைது செய்து விட்டு அப்புறம் என்னை கைது செய்யுங்கள் " என்று சொல்ல முடியாது. சட்டம் ஒருவன் செய்தது தவறா என்று மட்டும் தான் பார்க்குமே ஒழிய, அதே தவறு செய்து விட்டு வெளியே இருப்போரை பற்றி நினைத்தால் நாட்டில் ஒருவருக்கும் சிறு சிறை தண்டனை கூட கொடுக்க முடியாது.

மரண தண்டனை என்கிற பயம் இருப்பதால் தான் சமூகத்தில் குற்றங்கள் ஓரளவாவது கம்மியாய் இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் தூக்கு தண்டனை இல்லை என்றால் எந்த தவறும் செய்யாத ஐநூறு பேராவது ஒவ்வொரு வருடமும் அதிகமாக பலியாகக்கூடும். ஆறாண்டுக்கு ஒரு முறை சர்வநிச்சயமாக தவறு செய்த ஒருவர் தூக்கில் இடப்படுவது பரவாயில்லையா அல்லது தூக்கு தண்டனை இல்லை என்ற நிலையினால் வருடம் ஐநூறு உயிர்கள் போவது பரவாயில்லையா?

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால்: என்னை பொறுத்த வரை : யாரையும் தூக்கில் கூட போடவேண்டாம். ஆனால் தூக்கு தண்டனை என்கிற ஒன்று சட்டத்திலும், பேப்பரிலுமாவது இருக்க வேண்டும். மரண பயம் என்பது குற்றம் புரிய நினைப்போருக்கு நிச்சயம் சற்று யோசிக்க வைக்கும். (அந்த கணத்தில் கோபப்பட்டு குற்றம் புரிவோருக்கு சட்டமே தூக்கு தருவதில்லை. திட்டமிட்டு, பல நாள் குற்றம் புரியும் மனநிலையை sustain செய்வோருக்கு தான் தூக்கு கிடைக்கும்) பெண் குழந்தைகளை கற்பழிப்போர், பணத்துக்காக குழந்தைகளை கடத்தி,  கொல்வோருக்கெல்லாம் மரண தண்டனை அவசியமே !

இந்தியாவில் மரண தண்டனை விஷயத்தில் நான் விரும்பும் ஒரே மாறுதல்: மரண தண்டனை நிறைவேற்றப்படும் முறை தான் ! தூக்கில் தொங்க விட்டு ஒரு மனிதனை கொல்வதை விட, விஷ ஊசி போட்டு கொல்வது , அந்த மனிதன் அதிகம் துன்பப்படாமல் இறக்க முடியும்.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவோர் தூக்கில் போடும் நேரம் எப்படி துன்பப்படுவோம் என்பதற்கு தான் மிக அதிகம் பயப்படுவதாக, சி. ஏ பாலன் எழுதிய தூக்கு மர நிழலில் என்ற நூலில் வாசித்துள்ளேன்.

இந்தியாவில் சில பிராந்திய கட்சிகளை தவிர, காங்கிரஸ், பா. ஜ. க போன்ற முக்கிய கட்சிகள் தூக்கு தண்டனை தேவை என்றே நினைப்பதால், மக்களில் ஒரு சாரார் என்ன தான் தூக்கு தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று எழுதினாலும், பேசினாலும், அவ்வளவு சீக்கிரம் அது ஒழிக்கப்படும் என்று தோன்றவில்லை.

****
இந்த விவாதம் எவ்வளவு நாள் வேண்டுமானால் விவாதிக்கலாம். இரண்டு பக்கமும் பேச ஓராயிரம் காரணங்கள் இருக்கும். இந்த பதிவின் இறுதியில் நீங்கள் உங்கள் கருத்துகளை தாராளமாய் சொல்லலாம். ஒவ்வொன்றுக்கும் நான் பதில் விவாதம் செய்ய வேண்டும் என்று மட்டும் தயவு செய்து எதிர்பார்க்க வேண்டாம் !
**
கட்டுரையை துவங்கிய இடத்திலேயே முடிக்கலாம்.

சட்ட கல்லூரியில் அன்றைய விவாதத்தில் தூக்கு தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்று ஆணித்தரமாய் பேசிய ஒருவரை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆம்..! இந்த கட்டுரையை இன்று எழுதியது அவர் தான் !

மாறுதல் ஒன்றே மாறாத ஒன்று!

Friday, November 23, 2012

மீண்டும் இந்திய வாழ்க்கை- கசப்பும் இனிப்பும்...

திவர் ஆதிமனிதன்- தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர்; அமெரிக்காவில், குடும்பத்துடன் பல வருடங்கள் வசித்து விட்டு, தனது நிறுவனத்தின்  சென்னை கிளைக்கு மாற்றல் பெற்று வந்துள்ளார். அமெரிக்கா பற்றியும், தமிழக அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்தும் தன் தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார் ஆதிமனிதன்.

வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய பின் அவருக்கு ஏற்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு மினி தொடரை இங்கு எழுத இசைந்துள்ளார். தன் சொந்த மண்ணுக்கு திரும்பிய கதையை இவர் வீடுதிரும்பலில் எழுதுவது பொருத்தம் தானே !

********
மீண்டும் இந்திய வாழ்க்கை - கசப்பும் இனிப்பும்...

ந்தியா திரும்பி ஐந்து மாதங்கள் ஆகப் போகின்றன. இந்தியா திரும்பப் போகிறோம் என்பதில் இருந்த ஆர்வமும், ஆசையும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

என்னதான் இங்கு பிறந்து வளர்ந்திருந்தாலும் சில வருடகால அந்நிய மண்ணின் வாழ்க்கை கொஞ்சம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது போலும். அதற்கு காரணம் இந்தியாவின் இயற்கை வெட்ப நிலையோ அல்லது ஏறினால் கார் - இறங்கினால் கார் என்ற வசதி குறைவோ இல்லை. நிச்சயம் மாற முடியும் என்றாலும், மாறாத நம் இந்திய மனப்பான்மையும் இங்குள்ள அரசியல் சூழ்நிலையுமே இந்தியா மீது சலிப்பு தட்டுவதற்கு எனக்கு புரிந்த முக்கிய காரணங்கள்.

முதலாவது நம் கல்வி முறை. சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் வெள்ளைக்காரன் விட்டு சென்ற நடை முறைகளையும் பாட திட்டங்களையும் வைத்துக் கொண்டு ஏன் அழுகிறோம் என எனக்கு தெரியவில்லை. கல்வி கற்பதை ஒரு மிகப் பெரிய பாரமாக ஆக்கி வைத்திருக்கிறது நம் கல்வி முறை.

பள்ளிகளுக்கான யூனிபார்ம் ஆகட்டும், மூட்டை போல் தூக்கிக் கொண்டு போகும் நோட்டு புத்தகங்களாக இருக்கட்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு தேர்வை நடத்தி குழந்தைகளை புத்தக சாம்பிரானிகளாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அடிக்கும் வெய்யிலில் பிநோபார்ம் என்று ஒரு ஆடை வடிவம். அதை போட்டுக்கொண்டு ஒரு மணி நேரம் கூட நம்மால் இருக்க முடியாது. அதை எப்படி பெண் பிள்ளை நாள் முழுதும் அணியும்? இன்னொரு கொடுமை: பறக்கும் புழுதியில் வாரத்துக்கொருமுறை வெள்ளை நிற யூனிபார்ம் வேறு போட வேண்டுமாம்.

இதை என் நண்பர் ஒருவரிடம் சொன்னபோது " இதுக்கே இப்படி சொல்றியே ! என் பெண்ணோட பள்ளியில் நீல கலர் டாப்ஸ் ; முழு வெள்ளை பேன்ட் தான் யூனிபார்ம். வெள்ளை கலர் பேன்ட் என்பதால் எட்டாவதுக்கு மேல் உள்ள பெண்கள் ஒவ்வொரு மாசமும் படுற வேதனை கொடுமை. ஆனா எந்த பெற்றோருக்கும் இதை எதிர்த்து,  வெள்ளை கலர் பேன்ட் வேண்டாம் என சொல்லக்கூட தைரியம் இல்லை !" என்றார்.

ஒரு சில பெரிய பள்ளிகளில் கூட முழுமையான விளையாட்டு மைதானம் இல்லை. பள்ளி கட்டடத்திற்கு நடுவே உள்ள இடத்தில் மாணவர்களுக்கு இன்னமும் 'த்ரோ' பால் விளையாட்டு தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது இவர்கள் படிப்பைத் தவிர மற்றவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். அப்புறம் ஒலிம்பிக்கில் மட்டும் எப்படி தங்கத்தை அள்ளிக் கொண்டு வர முடியும்?

படம்: இணையத்திலிருந்து 

மாலை நேரத்தில் எங்கள் தெருவில் இருக்கும் பல பெற்றோர்களை ஒரே இடத்தில் சந்திக்க வேண்டுமானால் அருகே உள்ள ஸ்டேஷனரி ஷாப் சென்றால் போதும். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு 'பட சார்ட்டை' தேடிக் கொண்டு இருப்பார்கள். நாளைக்கே ஒட்டி கொண்டு வர வேண்டும் என முதல் நாள் தான் பிள்ளைகளுக்கு இம்மாதிரி வேலையை கொடுக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலானோர் வேலை முடிந்து வீடு வந்து சேரவே இரவாகி விடுகிறது. வருவதற்குள் குழந்தைகள் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே! ஏன் அதை இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிவித்தால் என்ன?

அதே போல் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை வார நாட்களில் அலுவல் நேரத்தில் வைக்கிறார்கள். எங்கள் அலுவலகம் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தாண்டி உள்ளது. எப்படி நான் நாலு மணிக்கு வந்து ஆசிரியர்களை சந்திப்பது? எங்களுக்கு இரண்டு குழந்தைகள் என்பதால் அடுத்தடுத்து இரு வேறு தினங்களில் இப்படி நான்கு மணி மீட்டிங்கிற்கு பள்ளி வர வேண்டும் ! இதே பள்ளி ஆசிரியர் மற்றும் பிரின்சிபாலின் குழந்தைகள் வேறு பள்ளியில் படித்தால் இவர்களும் லீவு போட்டு விட்டு தானே போக வேண்டும்?

அடுத்ததாக இங்குள்ள தமிழ்ப்பாடம். நான்கு ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் செய்யுளும் பழங்கால பாடல்களும். நமக்கே உச்சரிக்க முடியவில்லை. நினைவில் நிற்க மாட்டேன் என்கிறது. குழந்தைகள் எப்படி மனப்பாடம் செய்து எழுத முடியும்? சாதாரணமாக தற்போது உபயோகப்படுத்தும் சொற்களையும், இப்போதைய தமிழையும் சொல்லிக் கொடுத்தாலே போதும் ! இவர்கள் சொல்வதையெல்லாம் படித்தால், குழந்தைகளுக்கு தமிழ் மேல் வெறுப்பு தான் வரும். வரும் இல்லை ஏற்கனவே வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படி கூறுவதால் எனக்கு தமிழ் மேல் பற்றோ விருப்போ இல்லை என்று நீங்கள் கருதினால்.... அது தவறு. அமெரிக்காவில் இருந்தவரை அவர்கள் பாட திட்டத்தில் தமிழ் இல்லாத போதும் ஒவ்வொரு வருடமும் இங்கிருந்து தமிழ் பாட புத்தகங்களை வரவழைத்து அதை தினமும் என் மனைவி இரு பிள்ளைகளுக்கும் தொடர்ந்து தமிழ் கற்றுக் கொடுத்தார். இன்று, சென்னை வந்து, ஐந்தே மாதங்களில் இன்னும் நன்றாக தமிழ் பயின்று கடந்த தேர்வில் தமிழில் என் மூத்த பெண் அவளது வகுப்பில் முதல் இடம் எடுத்து உள்ளார்.

என்னைப்பொறுத்தவரை, நம் தாய் மொழியை தெரிந்து கொள்வது அவசியம் மட்டுமன்று, பெருமையும் கூட. ஆனால் ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட மேலை நாடுகளில் ப்ரைமரி வகுப்பில் சேக்ஸ்பியர் பாடம் நடத்துவதில்லை. எனவே அவர்கள் தங்கள் தாய்மொழியை கற்பதில் கஷ்டப்படுவதில்லை. மாறாக இங்கு சங்க இலக்கிய பாடல்களை சிறு வகுப்புகளில் வாசிக்கும் போது பிள்ளைகளுக்கு தமிழ் மீது வெறுப்பு வர வாய்ப்பு உண்டு.

தயவு செய்து உங்கள் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டு தமிழை எல்லாம் தமிழ் MA படிப்பவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தமிழின் மீது ஆர்வம் வருகிற மாதிரி பாடல்களையும், பாடங்களையும் பாட புத்தகத்தில் வைப்பது பற்றி அரசு யோசித்தால் நலம் !

இன்னும் வரும்...

Thursday, November 22, 2012

போடா போடி- பாக்கலாமா வேணாமா -விமர்சனம்

மேஷ் என்ற அலுவலக நண்பர் ... புதுப் படங்களை விரும்பி பார்த்து விட்டு நம்மிடம் வந்து விவாதிப்பார். தீபாவளி அன்று துப்பாக்கி டிக்கெட் கிடைக்காமல் போடா போடி பார்த்திருக்கிறார். மறுநாள் "போடா போடி பார்த்தேன் சார் நல்லா இருந்தது " என்றவரை ஏற இறங்க நான் பார்த்த பார்வையில் " நிஜமா தான் சார். நல்லாருக்கு. பாத்துட்டு சொல்லுங்க ".

இவரை இப்பதிவில் மீண்டுமொரு முறை சந்திப்போம். இப்போ போடா போடி கதை என்னான்னு பார்க்கலாம்.

கதை

லண்டனில் இருக்கும் நிஷா (தீபாவளி ரிலீஸ் படம் இரண்டிலும் ஹீரோயின் பெயர் நிஷா தான் கவனிச்சிங்களா?) - புதுமுகம் வரலட்சுமி டான்ஸ் தான் உயிர்மூச்சு என வாழ்கிறார். லண்டன் வரும் சிம்பு அவரை காதலிக்க, ஓர் கட்டத்தில் திருமணம் "ஒருவழியாய்" நடந்து முடிகிறது.

சிம்பு தன் மனைவி டான்ஸ் ஆடுவதையும், ஆண்களிடம் "ப்ரீ-யாய் பழகுவதையும் கை விடணும் என முயல்கிறார். அவர் மனைவியோ லண்டனில் நடக்கும் மிக பெரிய டான்ஸ் போட்டியில் ஜெயித்தாக வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இதில் ஜெயித்தது யார் என்பதை தைரியம் இருந்தால் வெண்திரையில் காண்க !
*********
முதலிலேயே ஒன்றை சொல்லி விடுகிறேன்: படம் ஓஹோவும் கிடையாது. நீங்க "அடப்பாவமே.. இந்த படமெல்லாம் பாக்குறியா" என துக்கம் விசாரிக்கும் அளவு மோசமும் கிடையாது.


தனக்கு பின்னால் நடிக்க வந்த ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி போன்றோர் கூட தாண்டி போய் விட சிம்புவின் காரியர் கிராப் ஏனோ மேலே போகவே மாட்டேன் என்கிறது. நன்கு டான்ஸ் ஆடவும் , நடிக்கவும் தெரிந்த இளம் நடிகர் ! கெளதம் மேனன் போன்ற நல்ல இயக்குனர்களை தேர்ந்தெடுத்து நடிப்பது அவசியம் என்பதை உணரவேண்டும்.

முதல் பாட்டில் சிக்ஸ் பாக் போல எதோ ஒன்று முயற்சி செய்துள்ளார் சிம்பு. நிஷாவை - நிசா நிசா என இவர் அழைப்பது செம சிரிப்பு. ஒரே சண்டை -அதுவும் ஓரிரு நிமிடத்தோடு முடிவது ஆறுதல்.

மிக பெரிய ஏமாற்றம் : ஹீரோயின். நெற்றி முழுதும் மறைத்து, கண்ணின் மேல் விழும் ஹேர் ஸ்டைலில் பெரும்பகுதி வருகிறார். அது அவருக்கு சுத்தமாய் செட் ஆகலை. ஆண்மை கலந்த குரல்.. கடைசியில் ஆடும் சல்சா டான்ஸ்சில் தான் அவர் உழைப்பும் நளினமும் தெரிகிறது. பிரபலமான வேறு ஹீரோயின் நடித்திருந்தால், படம் சற்று தப்பித்திருக்க கூட வாய்ப்பு உண்டு.

படத்தில் சின்ன சின்னதாய் சில விஷயங்கள் ரசிக்க வைக்கிறது :

கதையில் வரும் காதல்- கல்யாணம்- இதற்கெல்லாம் ஒவ்வொரு சாப்டர் பெயர் சொல்வது ( காதல் வந்த ஜோரு/ கல்யாணம் - கத்திரிக்காய், etc )

VT கணேஷ் அடிக்கும் சின்ன சின்ன ஜோக்குகள் (ஷகீலா படம் பார்த்து மனைவியிடம் மாட்டுவது)

கொஞ்சம் மெனக்கெட்டால் இயக்குனரால் நல்ல படம் தரமுடியும் என சொல்லும் காட்சிகள் இவை.

***
"லவ் பண்ணலாமா வேணாமா?" என சிம்பு திரும்ப திரும்ப பாட்டில் கேட்க, : "வேணாம்ப்பா; வேணாம்; லவ்வுக்கும் உனக்கும் ராசியே இல்லை" என கமன்ட் வருகிறது !

லண்டன் போன்ற காஸ்ட்லி ஊரில் சிம்பு -வரலட்சுமி இருவரும் வேலைக்கு போற மாதிரியே தெரியலை ! அப்புறம் பூவாவுக்கு எப்படி மேனேஜ் பண்றாங்களோ தெரிலை !

டான்சை முக்கியமாய் கொண்ட படத்தில் பாடல்கள் சுத்தமாய் சொதப்பி விட்டது.

கல்யாணமாகி பத்து நாள் ஹீரோ-ஹீரோயின் கட்டி பிடித்து கொண்டு தூங்குவார்களாம்; வேறு ஒண்ணும் நடக்காதாம்; சித்தப்பா " பிள்ளை பெத்துக்க; டான்ஸ் ஆட மாட்டா" என்றதும் ஹீரோயினை கர்ப்பமாக்கி விடுகிறார் சிம்பு.
இப்படத்துக்கு ஏன் வெளிநாட்டு லொகேஷன்னு தெரியலை; ஹீரோயின் ரொம்ப முற்போக்கு என்பதாலா? நம்ம ஊரிலேயே இப்படி பெண்கள் இருக்காங்களே ! (ஆனால் வெளிநாட்டை பார்ப்பது தான் படத்தில் நமக்கு பெரும் ஆறுதல்)

***
விரைவில் உலக தொலைக்காட்சிகளில் முதல் முறை சூப்பர் ஹிட் படம் போடா போடி  என போடுவார்கள். அப்போது ஒரு முறை பாருங்கள் !

டிஸ்கி:

நான் படம் பார்த்து முடித்த மறுநாள் ரமேஷ் வந்தார் " சார்  அந்த படம் சரி கிடையாது சார். கூட்டமே இல்லியாம்; நீங்க வேற அதை பாத்துட போறீங்கன்னு தான் சொல்றேன் " என்றார்.

அடபாவி.. இன்னிக்கு வந்து மாத்தி சொல்றியே ...நீ ஒரு நாள் லேட்டுய்யா !! ஒரு நாள் லேட்டு !!
***
அண்மை பதிவுகள்:


துப்பாக்கி: விமர்சனம் : இங்கு


நீர்ப்பறவை-ஏ. ஆர். ரகுமான்-விஜய் விளம்பரம் : இங்கு

Wednesday, November 21, 2012

வானவில்: புஜாரா- பாவனா- முகநூல் கைதுகள்

முகநூல் - தொடரும் கைதுகள்

பால் தாக்கரே பற்றி முகநூலில் ஸ்டேட்டஸ் எழுதியமைக்கு மகாராஷ்ட்ராவில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சி அலையை கிளப்பியுள்ளது.

துக்ளக் இதழ் ஒன்று வாங்கி தயவு செய்து வாசியுங்கள். கேள்வி பதிலில் பிரதமர், சோனியா, கலைஞர் போன்றோரை நேரடியே தாக்கி தான் எழுதுகிறார்.

சென்ற வார இதழில் இந்தியாவின் பெண் முதல்வர் ஒருவர் (தமிழக முதல்வர் அல்ல) சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறாரே என்ற கேள்விக்கு " இவர் பணியாற்றும் லட்சணத்துக்கு சம்பளம் ஒரு கேடா? இவரை வேலையை விட்டு அனுப்பாமல் இருப்பதே பெரிது" என்று பதில் கூறுகிறார்

இது அவதூறு இல்லையா? லட்சக்கணக்கில் வாசிக்கப்படும் பத்திரிக்கைகள் மேல் எல்லாம் ஏன் எந்த நடவடிக்கையும் யாரும் எடுப்பதில்லை? இணையம் மட்டும் ஏன் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது என புரியவில்லை.

இந்த விஷயம் எங்கே போய் முடியப்போகிறதோ !

அழகு கார்னர்

சித்திரம் பேசியது மூலம் பேசிய சித்திரம் - தெத்துபல்லுக்கு அடிமையாகி திரிந்த தமிழ் மக்களை மறந்து மலையாள கரையோரம் ஒதுங்கி விட்டார் ..மீண்டு(ம்) வர வேண்டுகிறோம்



இறந்தவர் பிழைத்து வந்த கதை 

பாளையங்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர் மனைவியுடன் நடந்த சண்டையில் காணாமல் போய் விட்டார். பல மாதம் தேடி பின் போலிஸ் கம்பிலேயின்ட்டும் தந்துள்ளனர். போலிஸ் கொஞ்ச நாள் தேடிவிட்டு பின் முகம் சிதைந்த ஒருவர் பிணத்தை காட்ட, பெற்றோர் உட்பட அனைவரும் அது தங்கள் மகன் பிணம் என வீட்டுக்கு எடுத்து வந்து அடக்கம் செய்து விட்டனர்.

இறந்தவருக்கு இரு பெண் குழந்தைகள். இறந்தவர் மனைவிக்கு, இறந்தவர் தம்பியையே திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். திருமணத்துக்கு இரு நாள் முன், வெடிகள் மற்றும் புது துணியுடன் இறந்தவர் வீட்டுக்கு வந்து விட்டார்.

கோபத்தில் வெளியூரில் போய் வேலை செய்ததாகவும், அனைவர் போன் நம்பரையும் தொலைத்து விட்டதாவும் சொல்லியுள்ளார். அண்ணியை கல்யாணம் செய்து கொள்ளப்போனோமே என்று கூச்சத்தில் நெளிந்த தம்பியை சமாதானம் செய்துள்ளார் பிழைத்து வந்த அண்ணன்.

சில நேரங்களில் நிஜம் - சினிமாவை விட சுவாரஸ்யமாய் இருக்கிறது !


கிரிக்கெட் கார்னர்

இந்தியா-இங்கிலாந்து இடையே நடந்த முதல் டெஸ்ட்டின் பெரும்பகுதியை இந்தியா டாமினேட் செய்தது. நான்காம் நாள் இங்கிலாந்து சற்று விழித்தெழுந்தாலும், அது டூ லேட்.

டிராவிட் ஆடும் ஒன் டவுனில் புஜாரா அசத்தி வருகிறார். ஹெல்மெட் அணிந்து முகம் தெரியாத புஜாரா - உயரம், நிற்கும் விதம், பொறுமை என டிராவிட்டை அப்படியே நினைவு படுத்துகிறார். ஆனால் அவரின் நிஜ டெஸ்ட் இந்தியாவுக்கு வெளியே தான். சச்சின் கூட டிராவிட் அளவு வெளிநாட்டு டெஸ்டில் அசத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் தல விடாமல் தொடர்ந்து ஆடிவருகிறார். இருக்கும் ரசிகர்களையும் இழப்பதற்குள் டீசன்ட்டாய் விலகி, அடுத்த இளம் வீரருக்கு வாய்ப்பளிப்பது தான் அவருக்கு அழகு. ஆனால் பணமும் புகழும் எவ்வளவு கிடைத்தாலும் அலுக்காது என்பதற்கு வாழும் உதாரணமாய் இருக்கிறார் சச்சின் :((

ப்ளாக் மூலம் கிடைத்த அய்யாசாமியின் பள்ளிக்கால நண்பர்

பதிவர்- இலக்கிய சூறாவளி கோபி ப்ளாகில் வீடுதிரும்பலுக்கு லிங்க் தந்துள்ளார். அங்கிருந்து மோகன்குமார் என்கிற பெயரை பார்த்து வீடுதிரும்பல் வந்த வேங்கடப்பன் என்கிற பள்ளிக்கால நண்பர் அய்யாசாமியை ஒரு நாள் போனில் பிடித்து விட்டார். இருபது வருடத்துக்கு பின் மீண்டும் தொடர்பு கொண்டு நண்பரிடம் பேசுவதில் இருவருக்கும் மிக மகிழ்ச்சி. பள்ளியில் தள்ளி நின்று சைட் அடித்த பெண்களின் இன்றைய நிலை பற்றி பேசி பெருமூச்சு விட்டனர் நண்பர்கள் இருவரும்.

திருநெல்வேலியில் மருத்துவராக இருக்கும் வேங்கடப்பன் அதன்பின் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். சமீபத்தில் பேசியபோது, " டேய் .. உன் ப்ளாகில் நான் ரொம்ப ரசிப்பது அய்யாசாமி பற்றி எழுதுறது தான். இப்போ எல்லாம் ஏன் அய்யாசாமி கார்னர் எழுதுறதில்லை..அவசியம் எழுதுடா" என்றார். நண்பரின் வேண்டுகோளை ஏற்று இனி அவ்வப்போது நிச்சயம் எழுதுவதாக சொல்லியுள்ளார் அய்யாசாமி !

படித்ததில் பிடித்தது - விகடனில் கி. ராஜ நாராயணன் பேட்டி

''இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா?''

''கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும். எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும். பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும். மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விஷயமாக்கிட்டோம். பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு, அந்த ஞாபகமாகவே அலையுது. நான் கேட்குறேன்... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா, அது சிக்கலா, இல்லையா? அது அவனோட சிக்கல் மட்டும்தானா... சமுதாயத்தோட சிக்கலுமா? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே, அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி, கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க. ரெண்டு பசியுமே மோசமானது. ஆனா, இங்கே எல்லாருமே மேல் வயித்தைப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம். கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம்.''

'இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா?''

''முதல் காதல்... ஹா... ஹா... பசிக்குது. அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு. உடனே கிடைச்சுட்டா, அதை ஒரு விஷயமா நெனைப்போமா? அப்படித்தான் இந்தக் காதலும். கிடைச்சுட்டா, அந்த நேரச் சாப்பாடு. கிடைக்காட்டி, அதுக்குப் பேர் காதல். கிடைக்கவே கிடைக்காட்டி, அது அமரக் காதல், காவியக் காதல். ஒரு விஷயம் சொல்லலாம். காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை. வந்துக்கிட்டே இருக்குறது.''

(நன்றி: விகடன்)

போஸ்டர் கார்னர்



முகநூல் கிறுக்கல்கள்

தீபாவளி நேரத்தில் நாம் அதிகம் இருக்க வேண்டிய இடம் : ஆபிஸ் தான் ! வீட்டில் இருந்தா தீனி திண்ணே பெருத்துடுவோம் !
***
தீபாவளி ரிலீஸ் ஒன்றுக்கு பதிவர் நண்பர்கள் யாரும் விமர்சனமே எழுதலை ! @ காசி குப்பம் !

உ. தா அண்ணே, கேபிள், சிபி: வீ ஆர் வெயிட்டிங்
****
நாகமுத்து (Nagamoottoo) மற்றும் சாமி (Sammy) யை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆடும் இன்னொரு வீரர் வீராசாமி பெருமாள் !

*****
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கார்த்தி சிதம்பரம் அவர்கள் பிறந்த நாளுக்கு சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்:

காங்கிரசின் முகவரியே வருக !

வரலாறே வருக வருக !

## யாராவது கருத்து சொல்ல விரும்புறீங்களா?
***

Tuesday, November 20, 2012

சென்னை தி. நகர்: ஒரு ரவுண்ட் அப்: என் விகடனில் வெளியானது

ன் விகடனில் வலைப்பதிவர்கள் அறிமுகம் தொடர்ந்து நடந்தது இல்லையா? அப்போது வலைப்பூவில் நாம் ஏற்கனவே எழுதியதை நம் புகைப்படத்துடன் வெளியிட்டு வந்தனர்.

இப்போது அந்த சீரிஸ் முடிந்து அடுத்த இன்னிங்க்ஸ் துவங்கியுள்ளது. இம்முறை ஒவ்வொரு வலைப்பதிவர்களாக அவர்களே தொடர்பு கொண்டு " வலைப்பதிவில் இதுவரை எழுதாத விஷயம் நேரடியே என் விகடனுக்காக எழுதி தாருங்கள்" என்று கேட்டு வருகிறார்கள். இந்த வாரம் முதல் என் விகடனின் அனைத்து எடிஷனிலும் துவங்கி உள்ள இப்பகுதியில், சென்னை பதிப்பில் வந்த நம் கட்டுரை இது...

*******
தி. நகர் ஒரு கடல். அங்கு செய்திகளும், எழுத விஷயங்களும் ஓராயிரம் உண்டு. அங்காடி தெரு என்கிற படம் தி. நகரின் சிறு பகுதியை தொட்டு சென்றது. ஆனால், இங்கு சொல்ல மறந்த கதை ஏராளம்!




சமீபத்தில் மனைவியுடன் தீபாவளி ஷாப்பிங் சென்ற போது கவனித்த மிக சில விஷயங்களைப் பகிர்கிறேன் :  
**
ரிடத்தில் வயதான பெண்மணி ஒருவர் "ஈருளி.. ஈருளி " என கூவி கூவி விற்று கொண்டிருந்தார்.

ஈருளி விற்கும் அம்மா
சென்னை போன்ற பெருநகரில் இதனை வாங்க ஆட்கள் இருப்பார்களா என்று சந்தேகம் என்னை உந்தி தள்ள " ஏம்மா டவுனு பொண்ணுங்களுக்கு ஈருளின்னா தெரியுமா?" எனக் கேட்டேன்.

" என்ன தம்பி இப்படி கேக்குறீங்க? அவங்களுக்கு எல்லாம் தெரியும். அவங்களுக்கு தெரியாதவிஷயம் ஏதாவது இருக்குமா என்னா !!" என்றார்வெற்றிலை போட்ட வாயுடன் !

*********
" சீமை பால் பத்து ரூபாய்" என கூவி கூவி விற்று கொண்டிருந்தார் ஒருவர். வீட்டம்மா வாங்கி சாப்பிடணும் என ஆசைப்பட, நானும் சாப்பிட்டு பார்த்தேன்.  கட்டி கட்டியாக மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தது சீமை பால்(!!??)

சீமை பால்  விற்கிறார் !
" எப்படி சார்.. இவ்வளவு சீமை பால் கிடைக்கும்?" என சந்தேகத்தோடு கேட்க " ஆந்திராவிலிருந்து வருது சார்" என்றார் தயாரான பதிலுடன் ! ( அங்கே மட்டும் இவ்ளோ சீமை பால் கிடைக்குமா என்ன?!!)

********
தி.நகரில் காதலர்கள் உலகமே மறந்து சுற்றி வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷனின் பெஞ்ச்கள் இவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டவை. வெயிலோ, இருளோ முகம் தெரியாதபடி மறைத்துக்கொண்டு ரகசியமான குரலில் பேசித் தீர்க்கிறார்கள். இவ்வளவு கூட்டம் இருக்கும் தி.நகரை ஜோடியாய் சுற்ற எப்படிதான் தேர்ந்தெடுக்கிறார்களோ? உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஷாப்பிங் வந்தால் பார்த்துவிட்டுச் சொல்லிவிட மாட்டார்களா?

நாங்கள் மதியம் முருகன் இட்லி கடையில் சாப்பிடும்போது எங்கள் மேஜையிலேயே ஒரு ஜோடி... ஒரு ஜிகிர்தண்டாவை வைத்துக்கொண்டு இரண்டு ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக்கொண்டு இருந்தது.

அந்தப் பெண்ணுக்கு போன் வரவும் ''அப்பா... நானா? தி.நகரிலே இருக்கேன்பா. ஃபிரெண்ட்கூட வந்திருக்கேன். லட்சுமிப்பா'' என்றார். (லட்சுமி நாராயணன்தான் லட்சுமி ஆனாரோ?)

*********
ரெங்கநாதன் தெரு : இங்கு நான் பேச்சிலர் ஆக இருந்த போது ஒரு மேன்ஷனில் சில மாதங்கள் தங்கி இருக்கிறேன். அதிகாலை மற்றும் நள்ளிரவில் வெறிச்சோடி போன நேரம் இங்கு சுற்றி வருவது எங்களுக்கெல்லாம் ஒரு பொழுது போக்கு.
துணி வாங்க இல்லை இந்த கூட்டம்.. நகை வாங்க !
சென்னை வந்த புதிதில் சிலர் ரங்கநாதன் தெருவுக்கு போனால் பெண்கள் மீது உரசலாம் என்றே செல்வதை கேள்வி பட்டுள்ளேன். இதற்கு பெயர் " உழைப்பது" என்று சொல்லப்படும் ! " வாடா தம்பி போய் உழைச்சிட்டு வருவோம்" என்று கிளம்பி போவோருக்கு, கூட்டத்தில் உரசுவதில் என்ன கிளுகிளுப்பு வருமோ தெரியலை !
*******
தி. நகரில் இப்போது விற்கும் சுவாரஸ்ய சமாசாரம் இந்த தேங்காய் பூ ! இதனை "தேங்காய் பால் கோவா " என கூவிக்கூவி விற்கிறார்கள். முப்பது அல்லது நாற்பது ரூபாய் இந்த தேங்காய் பூ.


" எப்படி இது மாதிரி பூ வருகிறது? " என விசாரித்தால் தேங்காய் உள்ளே உள்ள தண்ணீர் தான் இப்படி ஆகிடுது என்றும், வயிற்று புண்ணுக்கு மிக நல்லது என்பதால் இதனை பலர் வாங்கி போவதாகவும் சொன்னார்கள். தேங்காயை விட்டு விட்டு, அந்த பூவை மட்டும் தான் தனியாக வெட்டி கவரில் போட்டு தருகிறார்கள் !
*********
ரியான வெய்யிலில் கைகள் இழந்த ஒருவர் சட்டை அணியாமல் தரையில் படுத்து பிச்சை எடுக்கிறார். நூறு ரூபாய்க்கு இரண்டு சட்டை விற்கிறார் ஒருவர்.

நூறு ரூபாய்க்கு இரண்டு சட்டை
இன்னொரு பக்கம் பிளாஸ்டிக் தண்ணீர் குடங்களை சுமந்த டிரை சைக்கிளை ரங்கநாதன் தெரு மாதிரி இருக்கும் உஸ்மான் ரோடு கூட்டத்துக்கிடையே ஓட்டி செல்கிறார் இன்னொருவர். இப்படி தி. நகரில் சுவாரஸ்ய காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை !
*************
வீட்டம்மாவோடு தி.நகருக்கு எத்தனை ஆயிரம் எடுத்து சென்றாலும், பஸ் மூலம் திரும்ப வர மட்டுமே காசு மிஞ்சும் என்பது நம் சொந்தக்கதை... சோகக்கதை!

*************
என் விகடன் சென்னை பதிப்பிற்காக எழுதியது.
********
அண்மைய பதிவுகள் :

தொல்லை காட்சி: நீர்ப்பறவை-௦AR ரகுமான்- விஜய் விளம்பரம் : இங்கு
துப்பாக்கி -சரவெடி -விமர்சனம் : இங்கு வாசிக்கலாம் !

Monday, November 19, 2012

தொல்லைகாட்சி- நீர்பறவை-AR ரகுமான் -விஜய் விளம்பரம்

நீர்ப்பறவை சிறப்பு நிகழ்ச்சி

பலரும் மிக எதிர்பார்ப்போடு இருக்கும் படம் : நீர்ப்பறவை. சமீப  காலத்தில் பெரிதும் கவர்வது இப்பட பாடல்கள் தான் !

கலைஞர் டிவியில்  இப்படத்து பாடல்களை, பாடியவர்களே வந்து பாடிக்காட்ட, பட காட்சிகளையும் சற்று காண்பித்தனர். கடலோர கவிதைகள் போல கடலை ஒட்டி நடக்கும் ஒரு காதல் கதையாகவே தோன்றுகிறது. ரவுடி ஹீரோவை திருத்தும் பெண் - அவள் மீதான காதல் என கடலோர கவிதைகள் பார்ட் டூ தான் போலும் ! கூடவே தந்தை - மகன் பாசமும், மீனவர் பிரச்னையும் தொட்டு செல்ல கூடும். ஹீரோயின் சுனைனா செம அழகு. "மீனுக்கு சிறு மீனுக்கு"  பாடல் திரையாக்கம் செய்த விதம் லட்சக்கணக்கான சுனைனா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என தெரிகிறது. ஐ யாம் வெயிட்டிங் :)

ரகுநந்தன் இசையில், "பரபர பறவை" என்கிற அட்டகாசமான பாடலை பாடிய இசை அமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் குமார் " எல்லா மெட்டையும் கேட்டு விட்டு, இது தான் நிச்சயம் பெரிய ஹிட் ஆகும் என செலக்ட் செய்து பாடினேன் " என்றார் சிரித்தவாறே.

விஜய் நடிக்கும் விளம்பரம்


ஒரு நகைக்கடை விளம்பரத்தில் விஜய் நடிக்கிறார். முதல்முறை பார்த்த போது ரசித்தாலும், அடுத்தடுத்து பார்க்கையில் பல லாஜிக் மிஸ்டேக்ஸ் தான் கண்ணுக்கு தெரிகிறது.

விஜய் பெயர் வைக்கும் குழந்தை ஏற்கனவே காது குத்தப்பட்ட, நன்கு வளர்ந்த பெண்ணாக இருக்கிறாள். காது குத்திய குழந்தைக்கு இவ்ளோ நாள் பெயர் வைக்காமலா இருப்பார்கள் ?

பொது இடத்துக்கு என்னிக்கு விஜய் இப்படி கோட் போட்டுக்கிட்டு வந்தார் ?

இரண்டு பக்கமும் மக்கள் கூடி நின்று வாழ்த்த விஜய் ..எம் ஜி ஆரா என்ன !

ரைட்டு விடுங்க !

A.R. ரகுமான் சிறப்பு நிகழ்ச்சி

தீபாவளியன்று ஜெயா டிவி A.R. ரகுமான் பேட்டியை ஒளிபரப்பியது. பேட்டி எடுத்தது சின்மயி என்றாலும் பல முக்கிய கேள்விகளை நித்யஸ்ரீ உள்ளிட்டோர் ஏற்கனவே கேட்டு அதை வீடியோவில் போட்டு காட்டினர். பலர் " தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க " ரேஞ்சுக்கு பேசினாலும் நித்யஸ்ரீ கேட்ட கேள்வி நியாயமாய் இருந்தது " முன்பெல்லாம் கர்நாடக சங்கீத பாடல்கள் அடிப்படையில் பாட்டு வைப்பீர்களே இப்போது செய்வதே இல்லையே; பத்து படத்துக்கு ஒரு முறையாவது அத்தகைய பாடல்கள் வைக்க கூடாதா" என்றார் நித்யஸ்ரீ. ரகுமான் பதில் சொல்லும்போது, கடந்த பத்து வருடத்தில் மக்கள் என்ன மாதிரி பாடல் எதிர்பார்க்கிறார்கள் என்பது மிக மாறி விட்டதாகவும், இத்தகைய பாடல்களை இயக்குனர்கள் அதிகம் ஆதரிப்பதில்லை என்றும் சொன்னார். பேட்டி முழுதும் ரகுமானின் humility மிளிர்ந்தது.

நல்ல நிகழ்ச்சி - திருக்குறள் கதைகள்

சித்திரம் டிவியில் வருகிறது திருக்குறள் கதைகள் . ஒரு திருக்குறள் அடிப்படையில் கார்ட்டூன் பாத்திரங்களை வைத்து,  ஒவ்வொரு கதையும் செய்துள்ளனர். ரொம்ப நல்ல கான்செப்ட் ! சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட விரும்புகிற விதத்தில் உள்ளது நிகழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் !

சிவகுமாரின் நேருக்கு நேர்

தீபாவளி காலையிலேயே விஜய் டிவியில் சிவகுமாரின் நேருக்கு நேர் நிகழ்ச்சி - வெடி சத்தத்திற்கிடையே அவ்வப்போது பார்த்தோம்.

பல்வேறு தமிழக தலைவர்கள் பற்றி நெகிழ்ச்சியோடு பேசினார். கடவுள் நம்பிக்கை பற்றி சொல்லும்போது " நீங்கள் பயணம் செய்யும் ரயிலில் தீப்பற்றி விடுகிறது. பிழைப்போமா இல்லையா எனும் நிலையில் கூட கடவுள் நினைவு வராமல் போகுமா? உங்கள் குழந்தைக்கு மிக பெரிய வியாதி எனில் பிரார்த்தனை செய்யாமல் இருப்பீர்களா? அத்தகைய மனிதன் இருந்தால் காட்டுங்கள்; அவன் காலில் விழுந்து நான் வணங்குகிறேன் " என்றார் சிவகுமார்  ! (எனக்கென்னவோ அத்தகைய நாத்திகர்களும் இருப்பர் என்றே தோன்றியது)

தீபாவளி சிறப்பு படங்கள்

சன் டிவி போக்கிரி மற்றும் காளை என போட்ட படங்களே தீபாவளிக்கு போட்டு வெறுக்கடித்தது. அதிலும் காளை படத்தை ஒரு நிமிஷம் கூட பார்க்க முடியாது ! எப்படி தான்  தீபாவளியன்று  போட தீர்மானித்தனரோ?

இரவு சன்னில் போட்ட மங்காத்தா மற்றும் விஜய்யில் போட்ட நண்பனுக்கும் தான் நேரடி போட்டி. நண்பன் விளம்பரம் போட்டு நாலு மணி நேரத்துக்கும் மேல் படத்தை ஓட்டினர். விஜய் டிவி என்பதால் இனி அடிக்கடி நண்பன் படம் டிவியில் ஓடுவதை பார்க்கலாம்

உண்மையில் இந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி அதிக விளம்பரங்கள் இன்றி சில நல்ல நிகழ்சிகள் ஒளிபரப்பியது. ஆனால் எத்தனை பேர் அந்த டிவி பக்கம் சென்றோம் என்பது கேள்விக்குறியே !
****
வல்லமை இணைய இதழுக்காக எழுதப்பட்டது
****
அண்மைய பதிவு: துப்பாக்கி -சரவெடி -விமர்சனம் : இங்கு வாசிக்கலாம் 
Related Posts Plugin for WordPress, Blogger...