Saturday, March 5, 2016

கோவா..- ஜாலி பயணம்

முழு ஆண்டு தேர்வு முடிந்த பின் எங்கு செல்லலாம் என பல இடங்கள் யோசித்து கடைசியில் கோவா - என முடிவு செய்தோம்... (மைசூர், கூர்க், குளு , மனாலி இப்படி ஒவ்வொரு வருட முழு ஆண்டு விடுமுறைக்கும் வெளி மாநிலமே கூட்டி சென்று விட்டதால் - தமிழ் நாட்டின் இடங்கள் மகளை அதிகம் ஈர்க்க வில்லை; தமிழ் நாட்டிலேயே பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. அவை அநேகமாய் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் தான் யோசிக்கணும் போலும் )

விமானத்தில்  செல்ல தொடர்ந்து பல சலுகைகள் வந்த வண்ணம் இருந்தன. சில முறை தவற விட்டு, பின் மார்ச் மாதம் தான் முடிவெடுத்து ஏப்ரல் 11-ல் செல்ல டிக்கெட் எடுத்தோம். ஒருவருக்கு 2000 ரூபாய் என விமான டிக்கெட் விலை குறைவாக கிடைத்தது. (வழக்கமாய் இதை விட 2 மடங்கு ஆகும் என நினைக்கிறேன்; பயணத்துக்கு ஓரிரு நாள் முன்பு புக் செய்தால் இன்னும் அதிகம் )

ஹோட்டல் அதிபர் சித்தேஷ் மற்றும் பணியாளர் ஒருவருடன் 

அடுத்தது தங்கும் இடம் ; இணையத்தில் தேடி நல்ல ரிவியூ உள்ள 3-4 ஹோட்டல்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அதில் ஹவுஸ் பாசும், மகளும் பார்த்து முடிவெடுத்தது நாங்கள் தங்கிய ஹோட்டல். அன்னப்பூர்ணா விஷாராம் தாம். (Phone : 099 23 325279)

மிக நிறைவான ஒரு ஹோட்டல். ஏ சியுடன் கூடிய அறைக்கு ஒரு நாள் வாடகை - ரூ 1,800. சாப்பாடு நல்ல சுவையாகவே இருந்தது. ஒரே பிரச்சனை காலை சாப்பாடு... அநேகமாய் இங்கு மட்டுமல்ல - எங்கு போனாலும் பிரட் தான் கிடைக்கிறது. அல்லது Naan போன்ற உணவுகள்.

முதல் நாள்.. அதனால் முகம் சுழிக்காமல் சாப்பிடுறேன் 

இட்லி தோசை என்ற பேச்சே எடுக்க கூடாது. ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் கிரைண்டர் என்ற வஸ்துவே இருக்காது போலும். சப்பாத்தி கூட காலை வேளையில் கிடைப்பதில்லை. 2-3 நாள் கழித்து நாங்கள் தங்கிய ஹோட்டலில் பூரி கிடைப்பதை அறிந்து கடைசி 2 நாள் பூரி சாப்பிட்டோம்.  அப்புறம் தான் காலை சாப்பாட்டு பிரச்சனை சரியானது.

ஹோட்டலில் அற்புதமான நீச்சல் குளம் உள்ளது. தினமும் தண்ணீர் மாற்றி சுத்தம் செய்த இந்த நீச்சல் குளத்தில் தினம் 2 வேளை ஆனந்தமாய் குளித்தேன்.

ட்ரைலரில் பார்த்த சுனாமிக்கு காரண கர்த்தா ...
இந்த ஹோட்டல் புக் செய்ய மிக முக்கிய காரணம் இங்கு நிறைய செடி, கொடிகள் இருப்பது தான். (ஹவுஸ் பாசுக்கு அதை பார்த்த படியே பொழுது கழிந்து விடும் ); இப்படி இயற்கை விரும்பிகள் நாடக்கூடிய ஒரு ஹோட்டல் இது .

மொத்தம் 10 அறைகள் தான். ஹோட்டல் ஓனர் மற்றும் அவரது மகன்கள் அடுத்த பில்டிங்கில் குடியிருக்கின்றனர். நல்ல சர்வீஸ்..

அறை சுத்தம், சாப்பாடு, சுற்றுப்புறம், சர்வீஸ், ரேட் என எல்லா விதத்திலும் திருப்தி கரமாய் இருந்தது.



காலை உணவை தவிர இன்னொரு பிரச்சனை.. ஹோட்டல் அருகே இருக்கும் பீச் 3 கிலோ மீட்டர் தள்ளி உள்ளது. இங்கெல்லாம் பஸ் வசதி அந்த அளவு கிடையாது. ஆட்டோக்களும் சற்று குறைவே...

இந்த வீடியோவில் ஹோட்டலை ஒரு ரவுண்ட் அடிக்கலாம் வாங்க...



எல்லா இடத்திலும் பைக் வாடகைக்கு கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 300 ரூபாய் வாடகை ( பெட்ரோல் நம் செலவு) அரை நாள் எனில் ரூ. 200 (மிக சிலரே அறை நாளுக்கு தருவர். பலரும் தர மாட்டார்கள்) ; இப்படி பைக் எடுத்து கொண்டு செல்வது நிச்சயம் பல இடங்களை பார்க்கவும் - குறைவான செலவில் பயணிக்கவும் உதவும்.

கார் என்றால் 9 மணி நேரத்துக்கு 1500 ரூபாய் (80 கிலோ மீட்டர் தூரம் வரை) வாங்குகிறார்கள்.

அன்னப்பூர்ணாவில் தங்குவது எனில் பைக் எடுத்து கொண்டு சுற்ற அல்லது மேற்சொன்ன கார் செலவுக்கு தயாராக இருக்க வேண்டும். ஹோட்டலிலேயே பைக் மற்றும் கார் வாடகைக்கு கிடைக்கிறது

இல்லையேல் பாகா அல்லது கலங்கட் பீச் அருகே - நடந்து செல்ல கூடிய தூரத்தில் இருக்கும் ஹோட்டலை தேர்வு செய்வது நலம்.

******
நாங்கள் தங்கிய ஹோட்டல் அருகே இருந்த பீச் ஆன - அஞ்சுனா பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்..

அஞ்சுனா கடற்கரை.. வடக்கு கோவாவில் இருக்கிறது. பெரும்பாலும் வெளி நாட்டவர்கள் நாடி வரும் இடம் இது.

கோவாவில் அந்த ஊரின்/ இடத்தின் பெயர் எதுவோ, அது தான் பீச்சின் பெயராகவும் இருக்கும்.

நாங்கள் இருந்த ஹோட்டல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி அஞ்சுனா என்று அழைக்கப்பட்டது. பீச்சின் பெயரும் அதுவே.

பல பீச்களில் கரைக்கு சற்று தள்ளி ஹோட்டல்கள் இருக்கும். பீச்சுக்கு வருவோர் சாப்பிட - அங்கு அமர்ந்தவாறே பீர் அடிக்க, சாப்பிட - இப்படி பல பீச்களில் வசதி இருக்கும்..

அஞ்சுநாவில் பீச் மிக அருகே ஹோட்டல்கள் உள்ளது. அதாவது நீங்கள் பீச்சில் கால் நனைத்தவாறே  சாப்பிடலாம்.. எப்படி கரைக்கு இவ்வளவு அருகில் ஹோட்டல் இருக்கிறதோ தெரியவில்லை.

கோவாவில் நான் குளித்த ஒரே பீச் இது தான். ஆனால் செமையாக தண்ணீர் உள்ளே இழுத்தது.  மட்டுமல்ல அலைகள் மிக வேகமாக இருந்ததால் நம்மை தூக்கி வந்து கரையில் அடித்தது. எனக்கு கை, கால் எல்லாம் செம சிராய்ப்பு ..

என்னுடன் ஜெர்மனியை சேர்ந்த ஒரு வெளிநாட்டவர் குளித்தார். அவர்க்கு கடலில் குளித்து பழக்கம் உண்டு போலும். அட்டகாசமாக நீச்சல் அடித்தார்.

சற்று நேரத்தில் கோஸ்ட் கார்ட் வந்து என்னை மேலே வர சொல்லி அழைத்து விட்டார். " அவர் மட்டும் குளிக்கிறாரே?" என நான் கேட்க, " அவருக்கு கடலில் நல்லா நீந்த தெரியும்; இங்கு வெளிநாட்டவரை மட்டும் தான் குளிக்க விடுவோம்; அவர்களுக்கு நீச்சல் தெரியும் என்பதால்" என்றார்.

அதற்குள் அரை மணி நேரம் நன்கு கொட்டம் அடித்ததால்  மேலறி விட்டேன். ...
************
அடுத்த பகுதியில்..

கலங்கட் மற்றும் பாகா பீச்.... 

8 comments:

  1. காலை டிஃபனுக்கு ஃப்ரெட் ஆம்லேட்டா!? நமக்குலாம் இட்லி, தோசை, பொங்கல்ல்லாம் சாம்பார்ல நீந்த விட்டு சாப்பிட்டால்தானே திருப்தி!!

    ReplyDelete
  2. எல்லாவிதத்திலும் திருப்தி - காலை ஃடிபன் தவிர...!

    ReplyDelete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  4. சுவையாக இருக்கிறது! தொடர்கிறேன்!

    ReplyDelete
  5. பெரும்பாலான வட இந்திய தங்குமிடங்களில், காலை உணவாக பிரட், Corn Flakes, Milk, Juice, Paranthas போன்றவை தான் கிடைக்கும். இட்லி தோசை இங்கே காலையில் உண்பதில்லை! மாலைகளில் கிடைக்கும்.

    முதல் பகுதி சுவாரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது. தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. சுவாரசியத்தை படிக்க தொடருகிறேன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...