Monday, December 3, 2012

தொல்லைகாட்சி: S.J..சூர்யா- சித்தீ- எஸ்.பி.முத்துராமன்

சூப்பர் சிங்கர் ட்வென்டி ட்வென்டி

கடந்த சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட 42-போட்டியாளர்கள் ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டு , ஒரு அணி இன்னொரு அணியுடன் மோதுகிறார்கள். சிவப்பு அணி, நீல அணி என அதே நிற உடை அணிந்து வருகின்றனர். ( சூப்பர் சிங்கரில் ரன்னர் ஆக வந்த ப்ரகதியை மட்டும் காணும் ! )

ஜட்ஜ்களாக  வருகிற எல்லாருமே அனைத்து பாட்டுக்கும் பாசிடிவ் காமன்ட்கள் மட்டுமே தர்றாங்க. ஏன் சார்? 

இப்போதைக்கு பொழுது போகாம தான் பார்த்து வருகிறோம். பிரியங்கா போன்றோர் பாடும் ஒரு சில பாடல்கள் மட்டுமே ஈர்க்கின்றன. போனஸ் மகிழ்ச்சி: எஸ். மதுமிதா மற்றும் ராகினிஸ்ரீயை பார்ப்பது :)

நீயா நானாவில் பாக்கெட் மணி

பாக்கெட் மணி பற்றியெல்லாம் ஒரு தலைப்பா... இதுக்கு ஒரு டிஸ்கஷனா.. என்ற தயக்கத்தோடு தான் பார்த்தேன்.

பெற்றோர் தரும் பாக்கெட் மணி பற்றவே பற்றாது என்றும் குறைந்தது இப்போ தருவதை விட இரண்டு மடங்கு பணமாவது வேண்டும் என பல மாணவ மாணவிகள் பேசினர். இன்னொரு பக்கம் பெற்றோர்கள். அதில் ஒரு அப்பா சொல்கிறார்: " என் பெண்ணை நான் சினிமா கூட்டி போவேன்;  ஷாப்பிங் கூட்டி போவேன். நண்பர்களுடன் எதற்கு அவள் வெளியே  போகணும்? ஒரு ரூபாய் கூட அவள் கையில் தர மாட்டேன் " சந்தோஷ் சுப்ரமணியம் பட அப்பா மாதிரியே இருந்தார் இவர் :)

ஒரு பெண்ணுக்கு  மாச பாக்கெட் மணி ஐம்பதாயிரம் இருந்தா நல்லாருக்குமாம். குறைஞ்சது பதினைந்தாயிரம் வேணுமாம். கொடுமை ! சராசரி இந்தியரின் மாச சம்பளமே ஐயாயிரத்துக்கு குறைவு தான் என்று சொல்லி வளர்க்காத பெற்றோரை தான் குற்றம் சொல்லணும்.

டிவி யில் பார்த்த படம்: திசை மாறிய பறவைகள்

நான் பள்ளியில் படிக்கும் போது வந்த படம்; அப்போது பார்த்ததில்லை. ஜெயா மூவிசில் பாதியிலிருந்து பார்க்க முடிந்தது

சரத்பாபு- சுமலதா காதலர்கள். காதல் கைகூடாமல் சுமலதா கன்யாஸ்திரி ஆகிறார். போலிஸ் அதிகாரியாகும் சரத் பாபு திருமணம் செய்யாமலே வாழ்வதை பார்த்து அவர் பெற்றோர் சுமலதாவை மணமுடிக்க சம்மதிக்கின்றனர். ஆனால் கன்யாஸ்திரி ஆனவரோ, இனி தனக்கு திருமணம் இல்லை என்கிறார். இடையில் சுமலதாவின் நிஜ அப்பா ஒரு கொள்ளைக்காரன் என்பதும் அவர் தன்னை பிடிக்க பார்க்கும் போலிஸ் சரத் பாபுவை கொல்ல அலைவதும் தெரிகிறது.

சரத் பாபு சுமலதாவை மணந்தாரா, கொள்ளை காரனை பிடித்தாரா என்பதை.....

நீங்க படம் பார்த்திருந்தால் சொல்லுங்க.

விட்டத்தை பார்த்தவாறே சுமலதா பேசும் தத்துவ வசனத்தில் கடுப்பான என் பொண்ணு முழு படமும் பாக்க விடலை :)

பிளாஷ்பேக்: சித்தி


இதுவரை தமிழில் வெளிவந்த சீரியல்களில் "The most popular & most viewed serial " என்றால் அது சித்தியாக தான் இருக்கும். தமிழகத்தில் டிவி இருக்கும் அனைவரும் தவறாமல் பார்த்த சீரியல் இது. இந்த சீரியலில் நடிகர் சிவகுமாரை பார்த்தாலே பற்றிக்கொண்டு வரும்.(அவரை பார்த்தால் இப்படி நமக்கு தோன்றுவது மிக அரிதான ஒன்று !)

இந்த சீரியலின் மிக பெரும் வெற்றிக்கு காரணம் - சி. ஜே. பாஸ்கர் என்கிற இயக்குனர், ராதிகா என்ற நடிகை இருவரும் ! பின்னாளில் தமிழர்களுக்கு சீரியல் பைத்தியம் பிடிக்க வைத்தது இந்த சீரியல் தான். இதற்கு பின் எந்த ஒரு சீரியலும் நான் தொடர்ந்து பார்க்க வில்லை என்பது கூடுதல் தகவல்.

நல்ல நிகழ்ச்சி : கலைஞர் டிவியில் இன்னிசை மழை

திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு கலைஞர் டிவியில் இன்னிசை மழை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தொகுத்து வழங்குவது உங்கள் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத். இசை அமைப்பாளர் அல்லது பின்னணி பாடகர்கள் சினிமாவில் வந்த பாடல்கள் பற்றியும், பாடல் எழுதும் போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்வார்கள்.

அப்துல் ஹமீதுக்கு எந்த ஒரு பாடல் குறித்தும் தெரியாத விஷயங்களே இருக்காதா என்கிற அளவில் அவர் சொல்லும் தகவல்கள் ஆச்சரியமளிக்கும் ! அங்கேயே ஒரு ஆர்கெஸ்ட்ரா வைத்து சில பாடல்களை பாடவும் செய்வார்கள்.

இதில் கேட்ட சில சுவாரஸ்ய தகவல்கள் :

- இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி,  கவிஞர் பாட்டு எழுதிய பிறகு தான் எப்போதும் மெட்டு போடுவேன் என்றார் (பொதுவாய் இதை இசை அமைப்பாளர்கள் விரும்ப மாட்டார்கள்; (மெட்டுக்கு பாட்டு எழுதுவது தான் மிக அதிகம் )

- எஸ்.பி.முத்துராமன் முதலில் ஏ.வி,எம்மில் எடிட்டிங் அசிஸ்டன்ட் ஆக வாழ்க்கையை துவங்கினார் என்பதால் அவர் பெயரில் எடிட்டிங் சூட் இருக்கிறதாம் ஏ.வி,எம்மில் !

- நாடோடிகள் படத்தில் வரும் " ஆடுங்கடா மச்சான் பாட்டு " இன்னொருவர் பாடி ரிக்கார்ட் ஆகி, பின் சசிகுமார் சொல்லி வேல்முருகனுக்கு சான்ஸ் கிடைத்ததாம் (ஒரிஜினலாய் பாடியவர் அப்புறம் சினிமாவில் பாடுவதே இல்லை என்பது ஒரு சோகம்)

ஒளிபரப்பாகும் நேரம் தான் (இரவு பத்து மணி) கொஞ்சம் லேட் ஆக உள்ளது.அதான் பிரச்சனை ! நேரம் இருந்தால் பாருங்கள் !

ஆட்டோகிராபில் எஸ். ஜே. சூர்யா

சுகாசினி தொகுத்து வழங்கும் ஆட்டோகிராபில் பேசினார் எஸ். ஜே. சூர்யா. வாலி, குஷி என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் தந்த பின் மிக சீக்கிரம் பீல்டில் fade out ஆனவர் என்பது தான் எனது கருத்து. தான் இயக்கி, நடிக்கும் படத்துக்கு இப்போது டி. ஆர் மாதிரி இசையும் அமைத்து கொண்டிருக்கும்
எஸ். ஜே. சூர்யா நிகழ்ச்சியில் இப்படி சொன்னார்:

" நடிப்புக்கும் ஸ்டைலுக்கும் பெஸ்ட் ரஜினி; இசையில் பெஸ்ட் ஏ. ஆர். ரகுமான். இயக்கம்னா அது மணிரத்னம் தான். இந்த மூணு பேரும் சேர்ந்த கலவையா, ஒரே best ஆளா - நான் வரணும்னு நினைக்கிறேன். இப்போ தான் ஆரம்பிச்சிருக்கேன். இன்னும் நிறைய போகணும்"

போலாம் .. ரைட் :))

***
டிஸ்கி: சனி, ஞாயிறு இணையம் பக்கம் வராததால் இப்பதிவு Draft -ல் கிடந்தது; இதுக்கு மேல் Draft -ல் இருந்தால் expiry ஆகிடும் என்பதால் இன்று அடுத்தடுத்து இரு பதிவு ரிலீஸ் ஆகுது. பொறுத்தருள்க !

***
அண்மை பதிவு:

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் விமர்சனம்

நீர்ப்பறவை விமர்சனம்

Related Posts Plugin for WordPress, Blogger...