Thursday, November 26, 2009

வாரம் ஒரு Blogger - இந்த வாரம் - பா. ரா

குட் பிளாக்ஸ்


வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை
விடை தேடும் பயணம்
ஈடிபஸ்
வாரம் ஒரு Blogger - இந்த வாரம் - பா. ரா
என் டைரியில் இருந்து அப்பாவின் பக்கங்கள்!

பா. ரா புண்ணியத்தில் முதல் முறை யூத் விகடனின் குட் ப்லாக்ஸ் பகுதியில்..




"பஸ்சுக்கு காசு இருக்காடா
என கேட்கும் அண்ணனிடம்
எப்படி சொல்வேன்
தங்க வந்த கதையை".

சொல்ல முடியாத வலி ஒன்று தோன்றுகிறதா பா. ரா வின் இந்த கவிதை வாசித்து? இந்த வலி தான் பா. ரா வின் எழுத்தெங்கும் விரவி கிடக்கிறது.

பா. ரா சிவகங்கையை சேர்ந்தவர். 44வயதாகும் இவர் B Sc படித்திருக்கிறார். இவரது blog பெயர் கருவேலநிழல். Blog -ல் எழுத வந்து ஆறு மாதம் கூட ஆக வில்லை. அதற்குள் 125 Followers. 75 பதிவுகளை நெருங்கி விட்டார். பெரும்பாலும் கவிதைகள் தான். சில நேரம் நண்பர்கள் தொடர் அழைப்பு அழைத்தால் கட்டுரை பாணியில் எழுதுகிறார். அது தவிர தானாகவே சில நேரம் மட்டுமே கட்டுரை எழுதுகிறார்.

15 வருடங்களுக்கும் முன் கவிதைகள் எழுதி கணையாழி உள்ளிட்ட இதழ்களில் பிரசுரம் ஆகி உள்ளது. பின் இலக்கியம் என்பதெல்லாம் மறந்து போக வேண்டிய நிலைமை ... குடும்ப சூழல் (சற்று கடன் சுமை) காரணமாக வேலை நிமித்தம் சவூதி வந்தார். கடந்த ஏழு ஆண்டுக்கும் மேலாக சவூதி வாசம்.

************

அப்பா இன்னும் வரலை
எனக்கூறும்
மகனின் பொய்யை
கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

வீட்டினுள்
இருந்தபடி.

"போயிட்டாருப்பா"
என திரும்பும்
மகனின் முகம்
காண இயலாததாய்
இருக்கிறது.

கடன்காரனாக
இருப்பதையும் விட
கொடுமையானது
சில நேரம்...

தகப்பனாய்
இருப்பது.
- பா. ரா
************
பா.ரா வை பற்றி எழுத மிக முக்கிய காரணம் இரண்டு. ஒன்று: அவரது எழுத்தில் தெரியும் அன்பு. அடுத்தது: பா.ரா blog-ல் எழுதும் விதம் நம் அனைவரை விட சுவாரஸ்யமானது.

இதனை பா. ரா வின் வரிகளிலேயே கேட்போம்: (கேள்வி பதில் முறையில் மெயிலிலேயே வாங்கப்பட்டது)
************
தங்கள் படைப்புகளை எழுதி வெளியிடுவது?

எனக்கு கணினி அறிவு சொற்பமே. தம்பியும் (பெரியப்பா மகன் கண்ணன்). தம்பியின் நண்பரும் (ரமேஷ்) கெனடாவில் பணி புரிகிறார்கள்.என் எழுத்து ஆர்வம் புரிந்து தளம் தொடங்கி இப்ப வரையில் அவர்கள்தான் பேணுகிறார்கள்.பின்னூட்டம் மட்டும் இட பழகி கொண்டேன்.

எழுதி அவர்களுக்கு மெயில் பண்ணுகிறேன்.அவர்கள் பதிகிறார்கள்.உலகம்தான் என்னவெல்லாம் விந்தை செய்கிறது.வந்த புதிதில்,ஒரு கடிதம் எழுதிவிட்டு காத்து கிடந்த காலங்கள் நினைவு வருகிறது,மோகன்...

கவிதை உங்களுக்கு எப்படி பழக்கம்? பிடித்த கவிஞர் யார்?

எல்லோரையும் போலவே காதலில் தோற்று கவிதை எழுத தொடங்கினேன். பிடித்த கவிஞர் ,கல்யாண்ஜி!

தாங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் ? இதற்கு முன் என்னென்ன வேலை பார்த்துள்ளீர்கள்?

சவுதி மன்னரின் மகனுக்கு பசியாற்றும் வேலை.(வெயிட்டர்) என் தளத்தில்"அனுபவ நீதிக்கதை"எனும் தலைப்பில் இந்த வேலை கிடைத்த கதையை சற்று புனைந்து பதிந்து இருக்கிறேன்.

20 வயதில் திருமணம் முடிந்தது. ( 20 வயதிலா? பாவம் பா. ரா நீங்கள் ) முதலில் வெங்காய கடை,காய்கறி வியாபாரம்,ஒரு வருடம் prc-(பாண்டியன் போக்கு வரத்து கழகம்)இல் பணிபுரிந்தேன், எல்.ஐ.சி. ஏஜென்ட்,போட்டோ வீடியோ,கடைசியாக சவுதி வந்தேன்.

எதிர் காலத்தில் எழுத்தில் இன்னும் என்னென்ன செய்யும் யோசனை வைத்துள்ளீர்கள்?

ப்ளாகில்-என்று எதுவும் இல்லை மக்கா. எந்த திட்டமிடலும் இல்லை. தோனுகிரதை எழுதி அனுப்புகிறேன். ரமேஷ்,கண்ணன் பதிகிறார்கள்.இன்னும் ஓட்டளிக்க தெரியவில்லை.

************
இத்தனை பேர் ரசித்து படிக்கும் பா.ரா விற்கு பதிவுகள் இடுவது, ஓட்டு போடுவது போல பல விஷயங்கள் தெரியாது என்பது தான் சுவாரஸ்யமே!! தனக்கு பின்னோட்டம் இடுவோர் பெயரை கிளிக் செய்து தான் அவர்கள் blog படிக்கிறார்!

பா. ரா அடிக்கடி உபயோகம் செய்யும் வார்த்தை: "மக்கா". (வட்டார சொல் வழக்கு என நினைக்கிறேன்) அவரை சிலர் உரிமையாக "சித்தப்பா" என்கின்றனர். சில பெண்கள் "அண்ணா" போட (அதென்னங்க அண்ணா? Safety-க்காகவா?), ஒரு அளவுக்கு மேல் "அண்ணா போஸ்ட் புல் ஆகிடுச்சு; இனி யாரும் சொல்லாதீங்க" என சொல்லும் படி ஆகிடுச்சு அவருக்கு.
************
சிலர் அனுபவத்தால் எழுதுவர். வேறு சிலரோ கற்பனையால் எழுதுவர். பா.ரா எழுதுவது பெரும்பாலும் அன்பால் தான். அன்பே இவரது எழுத்துக்களுக்கு அடி நாதமாக உள்ளது.

முதல் முறை அவரது எழுத்தை விரும்பி வாசிக்கும் நவாசுதீனை சந்தித்த கதையை சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார். வாசிக்க: புரை ஏறும் மனிதர்கள் - ஒன்று

ISD கால் போட்டு பல தமிழக நண்பர்களுக்கு பேசுகிறார். என்னோடு பேசிய போதும் ரொம்ப நாள் தெரிந்த மனிதர் மாதிரி பேசினார் . என் ஹவுஸ் பாஸ் மற்றும் குழந்தைக்கும் அன்பை சொன்னார்.

இவர் நெடுந்தொலைவில் இருப்பதால் அன்புக்காக ஏங்கி, இவ்வாறு எழுத்தில், பேச்சில் அன்பு தெரிகிறதா அல்லது எப்போதும் இப்படி தானா என தெரிய வில்லை.
************
வெளி நாட்டில் இருப்பதால் அன்புக்காக ஏங்குவது நன்றாகவே தெரிகிறது. மேலும் நேரத்தை எப்படி செலவு செய்வது என்பதும் ஒரு பிரச்சனையாக இருந்திருக்கிறது. இந்த நேரம் தான் Blog உலகம் அவருக்கு கண்ணன் மற்றும் ரமேஷ் மூலம் அறிமுகம் ஆகி இருக்கிறது. தற்போது இவர் வாங்கிய லேப் டாப் மூலம் இந்த ரெண்டு பிரச்னையும் ஓரளவு குறைந்துள்ளது.

கேபிள் ஷங்கர் தந்தை இறந்த செய்தி கேட்டு, தனது தந்தை குறித்த பதிவு ஒன்று எழுதியிருக்கிறார்.. எத்தனை நேர்மையான எழுத்து !! நேரம் கிடைக்கும் போது வாசித்து பாருங்கள். புரை ஏறும் மனிதர்கள்-இரண்டு


இவரது கவிதைகளை அகநாழிகை வாசுதேவன் தொகுத்து புத்தகமாய் கொண்டு வருகிறார். புத்தகம் அநேகமாய் வந்திருக்கும். அல்லது ஒரு சில தினங்களில் வந்து விடும். இதற்கும் அவர் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. வாசு தேவன் அவரிடம் சில முறை கேட்டு ஒப்புதல் வாங்கியிருக்கிறார்.

இணையம் பல பிரச்சனைகளை தீர்க்கிறது. பல புது உறவுகளை தருகிறது பா. ரா என்ற மனிதருக்கு தான் அது எத்தனை ஆச்சரியங்களையும், நட்பையும், அன்பையும் தந்துள்ளது!!

முடிக்கும் முன் மீண்டும் ஒரு பா. ரா கவிதை

பொட்டு சரியாவென
கேட்கிறாள்
புறப்படும் அவசரத்திலும்..
காசு தந்து
கலைத்தவனிடம். - பா. ரா


பா. ரா பற்றி அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் மேலும் பல சுவாரஸ்யமான தகவல் தரும் படி கேட்டு கொள்ள படுகிறார்கள்.

அடுத்த வாரம்: விக்னேஷ்வரி

36 comments:

ambi said...

//சில நேரம்...

தகப்பனாய்
இருப்பது//

இதே கவிதையை முதல் முறையா படித்த போதும் நெகிழ்ந்தேன், இப்போதும் தான்.(ஜ்யோவ்ராம் சுந்தரா, இல்ல வலைசரத்திலா? எங்கோ படித்த நினைவு.

நன்றி மோகன்.

உங்க முந்தைய பதிவையும் படித்து விட்டேன். :))

ambi said...

பா.ரா முழுப்பெயர்..?


//இவரது blog பெயர் "கருவேலநிழல்". //

வலைப்பூவுக்கு லிங்க் குடுங்க மோகன். :))

sarathy said...

nice post...

வி. நா. வெங்கடராமன். said...

மோகன் சார், சக பதிவரை பற்றி மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள். நன்றாக இருந்தது. ஓட்டும் போட்டாச்சு. அவரது பதிவுக்கு லிங்க் கொடுங்களேன்.

வெங்கட் நாகராஜ்.
புது தில்லி

வரதராஜலு .பூ said...

நன்றாக உள்ளது உங்களது வாரம் ஒரு ப்ளாகர் பதிவு.

நல்ல ப்ளாகர்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி

Mohan Kumar said...

நன்றி அம்பி, வெங்கட், வரதராஜலு மற்றும் சாரதி. லிங்க் கட்டுரையில் தற்போது தந்து விட்டேன்.

பா.ராஜாராம் said...

மிக்க நன்றி மோகன்.பெண் பார்க்க போன சந்தர்பம் என என் வாழ்வில் தோன்றியதில்லை.தாய்மாமன் மகள்.நேரடி கல்யாணம்தான்.பெண் பார்க்க போனது போல் சில கூச்ச தருணங்கள் ஏற்படுவது உண்டு.அப்படி இன்றும் உணர்கிறேன்.அன்பை தாங்க இயலாத கூச்ச உணர்வு.

இங்கு இரண்டு திருத்தங்கள் செய்ய விரும்புகிறேன்.

ஒன்று,நாற்பது வயதாக இருந்தது நான்கு வருடங்களுக்கு முன்பாக.

இரண்டு,நேற்று இரவு தம்பி சொல்லி கொடுத்து ஓட்டளிக்க கற்றுக்கொண்டேன்.

நிறைய அன்பும் நன்றியும் மோகன்.

வானம்பாடிகள் said...

பா.ராவின் கவிதை அறிமுகத்தில் மனதைப் பறிகொடுத்த எங்களுக்கு பா.ரா.என்ற மனிதனின் அறிமுகம் மிக அருமை. நன்றி.

தண்டோரா ...... said...

பா.ராவிற்கு நானும் பிரியமானவன்..அவரும் எனக்கு..மனம் விட்டு”பாரா”ட்ட கூடியவர். வெள்ளந்தியான நண்பர்..மீதியை நாங்கள் அடித்து கொண்டவுடன் பகிர்கிறேன்

D.R.Ashok said...

சித்தப்ஸு...சித்தப்ஸு... :)

விக்னேஷ்வரி said...

மிக அருமையான தகவல்களை அழகான வார்த்தைகளில் தொகுத்து வழங்கியதற்கு நன்றி மோகன்.

பொக்கிஷமான மனிதர் பா.ரா.

Mohan Kumar said...

நன்றி வானம்பாடிகள் சார், தண்டோரா, அசோக், விக்னேஸ்வரி.

பா. ரா உங்கள் அனைவரையும் கூட பாதித்திருப்பதை உணர முடிகிறது.

பா. ரா : உங்கள் வயதை மாற்றி விட்டேன். 44 க்கு பதில் 40-ன்னு போட்டா, Foreign-லிருந்து வரும் போது 4 சாக்லேட் வாங்கிட்டு வருவீங்கன்னு பாத்தேன் ..ம்ம்ம்.. சாக்லேட் போச்சே :)

ராமலக்ஷ்மி said...

அப்போ பா.ரா எனக்கு சக வயது:)! வாழ்த்துக்கள் பா.ரா. உங்கள் கவிதைகள் எப்போதுமே பிரமிப்பு. புத்தகம் வெளிவந்ததும் வாங்க ஆவலாக உள்ளேன்.

மோகன்குமார், பதிவுக்கு நன்றி!

ரிஷபன் said...

அது என்னமோ தெரியல சில பேர் பத்தி படிக்கச்ச மனசுக்குள்ள பூ பூக்குது உங்க பா. ரா வும் அந்த மாதிரி ஒரு மனுஷர் நன்றி மோகன் அடி மனசுல நீரோட்டம் வத்தாம பார்த்துக்கிற அற்புத பதிவுகளுக்கு

பிரியமுடன்...வசந்த் said...

பா=பாசக்காரராராட்சசன்..

ரோஸ்விக் said...

அவரு எழுத்தின் இளமைய பார்த்து...சின்ன வயசுக்காரர்னு நினைச்சேன்...இப்புடி நெஞ்சுல குண்டத் தூக்கி போட்டுட்டீகளே மக்கா....:-))

பா. ரா...அப்ப நீங்க எனக்கு அண்ணன் இல்ல...சித்தப்பா தான்...:-)

இவரைப் பற்றி எழுதியதில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு நெருங்கியவர் என்பதில் பெருமை. அவர் தொடர்ந்து எழுதவும், வாழ்வில் அனைத்து வகைகளில் வெற்றி பெறவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எழுதிய உமக்கு மிக்க நன்றி தல.....:-)

அதி பிரதாபன் said...

பா.ரா.வைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது இந்தப் பதிவு மூலம். அவருடைய சிகரெட் கவிதை எனக்கு ரொம்பப் பிடித்த கவிதை.

அருமை.
--
அதே போல பழக ஆரம்பிக்கும் முன்னாலேயே அண்ணா என்று அழைக்கும் பெண்களை எனக்குப் பிடிப்பதே இல்லை...

Mohan Kumar said...

நன்றிகள் பல
ராம லக்ஷ்மி
ரிஷபன் சார்,
ரோச்விக்,
வசந்த் மற்றும்
அதி பிரதாபன்

சென்ஷி said...

நல்லா எழுதியிருக்கீங்க தலைவரே...

ரங்கன் said...

பா.ரா வை நான் இன்னும் படித்ததில்லை..

இனிமேல் நானும் அவருக்கு வாசகன்..!!

நன்றி..மோகன்!

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த,
அம்பி,
சாரதி,
வி.நா.வெங்கடராமன்,
வரதராஜலு,
வானம்பாடிகள் சார்,
மணிஜி,
அசோக்,
விக்னேஷ்,
மோகன்,(இப்படின்னு தெரிந்திருந்தால் நான் 44 சாக்லேட் வாங்கிட்டு வந்திருப்பனே மோகன்,) :-)
ராமலக்ஷ்மி,
ரிஷபன்,
வசந்த்,
ரோஷ்விக்,
அதி பிரதாபன்,
சென்ஷி,
ரங்கன்,
நிறைய அன்பும் நன்றியும் நண்பர்களே.

மோகன்,மீண்டும் உங்களுக்கும்!

தமிழ்ப்பறவை said...

நன்றி மோகன்...

நல்ல அருமையான பகிர்வு...

தமிழ் நமக்கு 247 எழுத்துக்கள் தந்திருக்கு..
அவருக்கு 247 கவிதைகள் தந்திருக்கு போல...
அத்தனையிலும் அன்பு...
நெகிழ்கிறேன்...

கலகலப்ரியா said...

touchy...!

க.பாலாசி said...

naan virumbum kavithaigalukku sonthakkarar pa.ra. nalla pakirthal.

Mohan Kumar said...

நன்றி சென்ஷி.. முதல் முறை வந்திருக்கீங்க. நான் மிக மதிக்கும் பதிவர் நீங்க. பிடிச்ச 10௦-ல் நாகேஷ் பற்றி எழுதியதை கவனித்தீர்களா?

ரெங்கன்: நன்றி. பா. ரா கவிதை அவசியம் வாசியுங்கள்.

தமிழ் பறவை
கல கல ப்ரியா
பாலாசி

வருகைக்கும், Comments-க்கும் நன்றி.

துபாய் ராஜா said...

பா.ராஜாராம் அண்ணாச்சி பழக இனிமையானவர். வலையுலகில் அன்பால் பல உள்ளங்களை வளைத்தவர். எங்களை போல் ஊர், உறவுகளை பிரிந்து அயல்நாடுகளில்
வா(டு)ழுவோர்க்கு வலையுலகே வலி தீர்க்கும் மருந்து.

தொடரட்டும் இனிமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

Mohan Kumar said...

நீங்கள் சொல்வது உண்மை தான் துபாய் ராஜா. முதல் முறை வந்துள்ளீர்கள். அடிக்கடி வாங்க.

அகநாழிகை said...

பா.ராஜாராம் பற்றிய பதிவு நன்றாக உள்ளது. ராஜாராமின் கவிதைகளிலும், பேச்சிலும், எழுத்திலும் காணக்கிடைக்கும் முக்கியமான விஷயம் பிரியம்தான். நம்மில் பலரும் கொடுக்கத்தயங்குவதை அள்ளித்தரும் மனம் கொண்டவர். அன்பும் பாசமுமானவர். அவரைப் பற்றிய பதிவிட்ட மோகன் அவர்களுக்கு நன்றி.
பா.ரா. அவர்களின் கவிதைத் தொகுதி ‘கருவேல நிழல்‘ தயாராகி விட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் வெளியீட்டு விழா இருக்கும்.

- பொன்.வாசுதேவன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தங்கள் பதிவை இப்பொழுதுதான் படித்தேன்,மோகன்! சக பதிவரைப் பற்றி இவ்வளவு அருமையாக எழுதியுள்ளது நெகிழ வைக்கிறது.
பா.ரா. என்னுடைய வலைப்பூவின் follower என்பது பெருமையாக இருக்கிறது. தங்கள் தகவலுக்கு நன்றி!

பா.ராஜாராம் said...

தமிழ்ப்பறவை,
ககலப்ரியா,
பாலாஜி,
துபாய் ராஜா,
வாசு,
பெயர்சொல்லவிருப்பமில்லை,

மிகுந்த நன்றியும் அன்பும் எல்லோருக்கும்.

எவ்வளவு அறிமுகங்கள் மோகன்..நெகிழ்வான நன்றி!

S.A. நவாஸுதீன் said...

10 நாளா எனக்கு எப்படி தெரியாமப்போச்சு.

விகடன் குட்பிளாக்ஸல பார்த்துட்டு வந்தேன்.

பா.ரா வைப்பற்றி நான் என்னத்த சொல்ல. மனுஷனை அன்பால கட்டிப்போடும் அரக்கன்னு வேணும்னா திட்டிட்டு போறேன்.

butterfly Surya said...

வாழ்த்துகள்.

தங்கள் பணி தொடரட்டும்.

thenammailakshmanan said...

நன்றி மோகன்குமார் பாரா பற்றிய பகிர்வுக்கு
மிக அருமையாக இருந்தது

நான் வாசித்து நேசித்தவைகளையே நீங்களும் பட்டியலிட்டு இருந்தீர்கள்

சின்னச் சின்னவரிகளில் வலியமையான கருத்துக்களைக்கூறுவதே அவர் பாணி

Vidhoosh said...

///அதென்னங்க அண்ணா? Safety-க்காகவா?)////
SAFETY-யெல்லாம் ஒன்னும் இல்லை. அண்ணா சவுதிலேர்ந்து வரும் போது, எம்பொண்ணுக்கு "மாமா சீர்" செய்யும்படி கேட்டுக்கலாம் பாருங்க.. அவ்ளோதான்.
இருக்கற நிலைமையில அவருக்குத்தான் தங்கச்சிகள் கிட்டேர்ந்து SAFETY வேணும் போலருக்கே.. :))

பைத்தியக்காரன் said...

எத்தனை நண்பர்கள், எத்தனை இடுகைகளை எழுதினாலும் ராஜாராமின் பரிசுத்தமான அன்பை முழுமையாக பதிவு செய்துவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது.

என்றாலும் ஜீவநதியை யார் கையில் ஏந்தினாலும் அதை பருகிக் கொண்டுத்தான் இருக்கிறோம்.

இடுகைக்கு நன்றி மோகன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

வயதில் என்ன இருக்கிறது? எழுத்தில் அல்லவா இருக்கிறது இளமை??
பா.ரா.ஒரு வெள்ளந்தியான நண்பர்.எனக்கு மிகவும் பிடிக்கும், அவரை...அவர் எழுத்துக்களை.....

Related Posts Plugin for WordPress, Blogger...