Saturday, May 6, 2017

வானவில் :நயன்தாராவின் டோரா + விஜய் டிவி மாப்பிள்ளை எனும் மெகா காவியம்

பார்த்த படம்- டோரா

நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா நடித்த த்ரில்லர் படம் ...டோரா. படத்தின் சில காட்சிகள் எங்கள் வீட்டருகே படமானது (இரண்டாவது வில்லனை காரில் துரத்தும் காட்சிகள்)

பேய் - வில்லன்களை பழி வாங்கும் வழக்கமான கதை தான். 2 வித்யாசம்.. இங்கு பேய்.. ஒரு நாய் !! மேலும் அது வந்து இறங்குவது மனிதர் மேல் அல்ல.. ஒரு காரின் மீது.

Image result for dora movie

இந்த 2 அம்சங்கள் மற்றும் காரை வைத்து கொஞ்சம் வித்யாசமாக எடுக்க முயன்றது தான் பார்க்க வைக்கிறது. மற்றபடி பெரிதாக ஈர்க்க எதுவும் இல்லை.

தம்பி ராமையா காமெடி செய்ய முயன்று மொக்கை போடுகிறார். ஸ்லிம் ஆன நயன் மட்டுமே ஆறுதல் !

தவற விடக்கூடாத படமெல்லாம் இல்லை. சனி, ஞாயிறில் ரொம்ப போர் அடிக்கிறது என்றால்... 2 மணி நேரம் சும்மா  பார்த்து வைக்கலாம்..அவ்வளவே !

ஐ. பி எல் கார்னர் 

மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே இவை தான் play off செல்லும் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இதில் மாறுதல் வர.....ஹைதராபாத், புனே இனியுள்ள அனைத்து மேட்ச்சும் தோற்கணும்..டில்லி அல்லது பஞ்சாப் இனி வரும் அனைத்து மேட்சும் ஜெயிக்கணும். இவற்றுக்கு probability கம்மி தான் !

இந்த வாரத்தின் சிறந்த ஆட்டம் டில்லி வீரர் ரிஷப் பாண்ட்   குஜராத்துக்கு எதிரே அடித்த 97 ரன்கள். சச்சின் இந்த ஆட்டத்தை இதுவரை நடந்த ஐ. பி எல்லில் ஒரு மிக சிறந்த இன்னிங்ஸ் என கூறியிருக்கிறார்.

19 வயது பையன்.. பயமின்றி வெளுத்து வாங்குகிறான்.. ஏற்கனவே 5 நாள் ரஞ்சி போட்டிகளிலும் 100 முதல் 300 வரை அடித்து விட்டான். இப்போது 20-20ல் தன்னை நிரூபித்து வருகிறான்..

Mark my words......பையன் இந்தியாவுக்கு ஆடி கலக்கப்போவது உறுதி !

போஸ்ட்டர் கார்னர்



நானே சிந்திச்சேன் 

எந்த ஒரு துயரும் .. அந்த நேரத்தில் தான் அதீத வலி தருகிறது. மனம் அதனை சுற்றியே உலாவுகிறது. ஆனால் காலம் எல்லா துயரையும் கழுவிப்போகிறது..தீராத துயரென்று எதுவும் இல்லை.

உலகின் மிகப்பெரும் துயர் என்றால் குழந்தைகயை இழப்பது தான் என நினைக்கிறேன்.ஆனால் அத்தகைய பெற்றோரும் கூட சில மாதங்களில் மெல்ல எழவும், சில வருடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பவும் ஆரம்பிக்கிறார்கள். இந்த துயரிலிருந்தே மீள முடிந்தால் மற்ற துயரெல்லாம் பெரிதா என்ன?

கவிஞர் வைரமுத்து சொன்னது போல்

விடியாதே இரவென்று எதுவும் இல்லை
முடியாத துயரென்று எதுவும் இல்லை

ரசித்த காமெடி

மறைந்த மலையாள இயக்குனர் வி எம் சி ஹனிபாவை சரியாக பயன்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். அவரது  முகபாவம்,மாடுலேஷன் எல்லாமே வித்யாசமாக  இருக்கும்.

சிவாஜி படத்தில் அவர் கத்தி குத்து வாங்கும் காட்சி ..அதற்கு பிறகு வரும் ஓரிரு நிமிடங்கள் அட்டகாச சிரிப்பு..

வயிற்றில் கத்தியால் குத்த, டாக்டர் தையல் போட்டதும் ஹனீபா கேட்கும் கேள்வி: பிரைனுக்கு ஒண்ணும் ஆகலியே?

ரஜினி கிளம்பும்போது " பாஸ் கத்தி குத்தெல்லாம் வாங்கியிருக்கேன். அந்த பணத்தை குடுக்க கூடாதா? " என பரிதாபமாக கேட்பதும், அதற்கு ரஜினி பதிலும்.. செம !




வைப்ரன்ட் வேளச்சேரியில் நடந்த சைக்கிளிங் ஈவென்ட் 

இது நடந்து இரு வாரங்கள் ஆனபோதும் நல்லொதொரு நிகழ்வு என்பதால் - தாமதமானாலும் பரவாயில்லை என பதிவு செய்கிறேன்

சென்னையில் பல ரன்னிங் மற்றும் சைக்கிளிங் குழுக்கள் உள்ளன. ஆனால் ரன்னிங் மற்றும் சைக்கிளிங் இரண்டும் இணைந்து, இரண்டிற்கும் நிறைய முக்கியத்துவம் கொடுத்து ஒரே குழுவில் செய்வது... மிக அரிது. வைப்ரன்ட் வேளச்சேரி அப்படி ஒரு அரிதான குழு.

இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சைக்கிளிங் ஈவென்ட் ஏற்பாடு செய்கிறார்கள். 50 மற்றும் 100 கிமீ சைக்கிளிங்... என இரண்டு கேட்டகரி.. இரண்டிற்குமே நுழைவு கட்டணம் ரூ 300 (வழியில் கூல் ட்ரிங்ஸ், குடி நீர், பழங்கள் மற்றும் முடியும் போது காலை உணவு இவற்றுக்கான கட்டணம் இது )

இந்த ஈவெண்ட்டில் கலந்து கொள்ள ஒரு வாரம் முன்பு தான் ஹைபிரிட் சைக்கிள் வாங்கினேன். எனவே 50 கி, மீ தூரத்தை தேர்ந்தெடுத்தேன்

நிகழ்ச்சியை அறிவித்து 36 மணி நேரத்துக்குள் 150 பேருக்கும் மேல் ரிஜிஸ்டர் செய்ய உடனே குளோஸ் ஆகி விட்டது !! (வைப்ரன்ட் வேளச்சேரி குழு மட்டுமல்ல, வெளியில் உள்ள நண்பர்களும் கலந்து கொள்ளலாம் !)

நிகழ்ச்சியன்று திரு சைலேந்திர பாபு ஐ.பி எஸ் தனது காவல் படை வீரர்களுடன் எங்களுடன் 50 கி மீ சைக்கிள் ஓட்டினார்.

நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமல்லாது ஏராள பெண்களும் கலந்து கொண்டு வெளுத்து வாங்கினர்.

100 கி மீ தூரத்தை இரண்டரை மணி தூரத்தில் ஓட்டி கடந்த அஷ்வின். அருகே வைப்ரன்ட் வேளச்சேரியை துவங்கிய திரு அனில் ஷர்மா 

வைப்ரன்ட் வேளச்சேரி வாலன்டியர்கள் பல இடங்களிலும் இருந்து உதவினர்;குறிப்பாக சைக்கிள் பஞ்சர் ஆனவர், ஓட்டும்போது வேறு பிரச்சனை வந்தவர்.. இவர்களுக்கெல்லாம் வாலன்டியர்கள் வெய்யிலை பொருட்படுத்தாமல் அற்புதமான உதவிகள் செய்த வண்ணம் இருந்தனர்.

50 கி மீ தூரத்தை நான் 2 மணி நேரம் 16 நிமிடத்தில் முடித்தேன். அவ்வப்போது 20,30 கி மீ ஏற்கனவே ஓடியதால் அதிக சிரமப்படலை. 100 கி மீ ஒட்டியிருக்கலாமே என தோன்றியது


அடுத்த முறை வைப்ரன்ட் வேளச்சேரி இந்த நிகழ்வு நடத்தும் போது நிச்சயம் 100 கி மீ ஓட்டுவேன் !

விஜய் டிவி - மாப்பிள்ளை எனும் காவிய சீரியல் 

விஜய் டிவியில் வரும் மாப்பிள்ளை எனும் மாபெரும் காவியத்தை எங்கள் இல்லத்தில் கண்டு களிக்கிறார்கள். இதனால் நானும் காண வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிறேன்.

ஹீரோவும், ஹீரோயினும்  காதலிச்சு அதை சொல்ல முடியாம, மெல்ல முடியாம பல மாசம் ஓட்டினாங்க. (இதுல ரெண்டு பேருக்குமே இன்னொருத்தங்க லவ் பண்றாங்கன்னு தெரியும்) ஒரு வழியா லவ்வை சொன்ன பிறகு ரெண்டு வீட்டுலையும் பேசி நிச்சய தார்த்தம் வந்துச்சு.

அய்யா.. நிச்சய தார்த்தம் சீனை எவ்வளவு நாள் ஓட்டுவாங்கன்னு நினைக்கிறீங்க? நாலு வாரம் !!!!!!!! ஒரே ஒரு நாள் நடக்குற நிச்சய தார்த்த சீனை நாலு வாரம் ஓட்டி நாக்கு தள்ள வச்சாங்க

இப்ப பத்திரிக்கை எடுத்துக்கிட்டு ஒவ்வொருத்தரா பாத்து கொடுத்துக்கிட்டுக்கங்க. எப்படியும் இந்த வருஷம் முடியறதுக்குள் பத்திரிக்கை கொடுத்து முடிப்பாங்கன்னு நினைக்கிறேன்..

இந்த சீரியல்ல ஒரு நல்ல விஷயம் என்னான்னா .. நீங்க சில பல வாரம் பாக்காம - மறுபடி வந்து பாத்தாலும் ஒண்ணும் மிஸ் பண்ணிருக்க மாட்டீங்க. கதை அங்கேயே தான் நின்னுக்கிட்டு இருக்கும்....

ஒரு நாள் நடக்குற நிச்சய தார்த்தத்துக்கே 4 வாரம் ஓட்டினவய்ங்க... கல்யாணத்தை எத்தனை மாசம் எடுப்பாங்கன்னு நினைச்சாதான் கொஞ்சம் கெதக்குன்னு இருக்குது....


3 comments:

  1. மாப்பிள்ளை i am also sailing in the same boat... எப்படியாவது தப்பிக்கணும்....

    ReplyDelete
  2. கலவையாக ஒரு பதிவு.. அருமை... கேரளா+கிரிக்கெட் புகைபடம் தூள்... எங்கே எடுத்தது சார்..

    ReplyDelete
  3. வெங்கட்: நீங்களுமா?? அவ்வ்வ்வ்வ்
    **

    ராஜ்கண்ணன்: தெரியலை நண்பா ; இணையத்தில் பார்த்தது

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...