Wednesday, October 9, 2019

அசுரன் சினிமா விமர்சனம்

ழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவல் - வெற்றி மாறன்- தனுஷ் கூட்டணியில் அசுரத்தனமாக வந்துள்ளது ..

1960-70களில் நடந்த கதை. சாதி பிரச்சனை, நில மீட்பு போன்றவை பின்புறமாய் இருந்தாலும் ஒரு குடும்பத்தின் வலி நெஞ்சை தைக்கும்படி பளிச்சென்று பதிகிறது.



நாவல் வாசிக்க வில்லை; மூலக்கதை என்று தான் போடுகிறார்கள். நிச்சயம் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்து தான் தந்துள்ளார் இயக்குனர். அதனால் தான் படத்தை ரசித்து பார்க்க முடிகிறது.

இன்றைக்கும் நேற்றைக்கும் சென்று வரும் திரைக்கதை நம்மை பதை பதைக்க வைக்கிறது. தனுஷ் (சிவசாமி) குடும்பத்துடன் சேர்ந்தே நம்மை பயணிக்க வைக்கிறார் இயக்குனர்

சரியான காஸ்டிங்.. தனுஷை கல்யாண வயதில் மகன் உள்ள ஒரு தந்தையாக துவக்கத்தில் ஏற்று கொள்ள சிரமமாயிருந்தாலும் போக போக அற்புத நடிப்பால் நம்மை அசர அடிக்கிறார்...சிறிதும் மிகை படுத்தல் இன்றி அவர் தந்துள்ள நடிப்பு .. அற்புதம் !

இடைவேளையில் வரும் சண்டை காட்சி .. அமர்க்களம். இண்டெர்வெல் முடிந்து   வந்ததும் பஞ்சமி நில பிரச்சனை மற்றும் தனுஷின் குடும்பம் குறித்த பிளாஷ் பேக் நம்மை பெரிதும் தாக்குகிறது..  பிளாஷ்பேக்  முடிந்ததும் மெயின் கதைக்குள் நாம் வரவே நேரமாகிறது.. இரண்டாவது பிளாஷ் பேக் அந்த அளவு தாக்கி விடுகிறது. 



இப்படியெல்லாம் கூட நடக்குமா என்போர் பஞ்சமி நிலமீட்பு என்றும் கீழ வெண்மணி என்றும் கூகிளில் தேடி பாருங்கள். படத்தில் காண்பித்தது ஒரு துளி தான் என்று தெரிய வரும்.

மஞ்சு வாரியர் , தனுஷின் இளைய மகன், ஆடுகளம் நரேன்.. அனைவரையும் விட வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ்  அனைவரும் நேர்த்தியான நடிப்பு (படத்தில் பிரகாஷ் ராஜ்  பெயர் சேஷாத்ரி.. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாதாடும் வக்கீல் ஒரு மேல் சாதி காரர் என்பதும் ஒரு குறியீடு )

படம் எத்தனையோ விஷயங்களை சொல்லாமல் சொல்கிறது; உதாரணத்திற்கு ஒன்று: பிள்ளைகள் பல நேரம் பெற்றோர் சொல் கேட்பதே இல்லை; ஆனால் பெற்றோர் ஒவ்வொரு முறையும் அவர்களின் நல்லதற்கு மட்டுமே தான் சொல்கிறார்கள். அது அவர்களுக்கு அப்போது புரிவதே இல்லை ! போலவே பெற்றோர் தம் குழந்தைகளுக்காக எந்த வித தியாகமும் செய்வார்கள் என்பதுவும் படம் போகிற போக்கில் சொல்லி செல்கிறது..

ஜீவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை நம்மையும் இரண்டு பேரை அடிக்கலாமா என்கிற விதத்தில் உசுப்பேற்றுகிறது..

தனுஷ் வேலைக்கு சேர்க்கும் ஆள் மிக சரியாக வளர்ந்து அவருக்கே எதிராக திரும்பும் cliche,  சற்றே அதிகமான வன்முறை, மனதில் பதியாத பாடல்கள் என சிற்சில குறைகள் இருந்தாலும் - அவை யாவும் வெற்றி மாறனின் கதை சொல்லும் பாங்கு  மற்றும் அவரது அசாத்திய நேர்த்தியின் (Perfection) முன் அடிபட்டு போய்  விடுகிறது.

 இடைவேளையிலேயே என்னா மாதிரி நடிகன்யா தனுஷ்.. என்ன ஒரு அற்புத இயக்குனர்யா வெற்றிமாறன் என பிரமித்து போயிருந்தேன். படம் முடிந்து வரும்போதும் மீண்டும் அதே எண்ணம் தான் எட்டி பார்த்தது !

இறுதியில் தனுஷ் தன் மகனிடம்

"நம்ம கிட்டேர்ந்து அவங்க நிலத்தை பிடுங்கலாம். ஆனா படிப்பை பிடுங்க முடியாது; நல்லா படிச்சுக்க ; படிச்சு நீ ஒரு பதவிக்கு வந்தா - அவங்க நமக்கு பண்ண விஷயங்களை நீ பண்ணாதே " என்பதில் தேவர் மகன் சாயல் மிக லேசாக இருந்தாலும் (போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கய்யா) - படத்திற்கு அதை விட அருமையான முடிவும், செய்தியும் இருக்க முடியாது .

அசுரன் .. அசத்தல் !

3 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...