Friday, November 8, 2013

வானவில் -ஆல் இன் ஆல் அழகுராஜாவும் - ஸ்ரீ திவ்யாவும்

முன் குறிப்பு: இங்கு எழுதப்படும்  சில தகவல்கள் ஏற்கனவே முகநூலில் பகிரப்பட்டவை

வாக்கிங் அனுபவம் - 1


கடந்த 3 வாரங்களாக ஹவுஸ் பாசும் நானும் காலையில் வாக்கிங் செல்கிறோம். அவரவர் அலுவலகக் கதைகள், இரு குடும்ப அக்கப்போர்கள் என பலவும் பேசிக்கொண்டு 45 நிமிடம் ஒன்றாக நடப்பது செம ஜாலியாக உள்ளது.

எனக்கு ஏராள நண்பர்கள் உண்டு; எனினும் First & best friend எப்பவும் மனைவி தான் ! ஒரு மனிதனுக்கு மனைவி மிகச் சிறந்த தோழியாய் இருந்தால் மட்டும் போதும்..... வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனையையும் எளிதில் சமாளிக்கலாம் ! சமாளிக்கிறோம்

இருவராக வாக்கிங் செல்வதில் உள்ள சௌகரியம் ஒருவர் சோம்பேறித்தனமாய் இருந்தாலும் - மற்றவர் " ம் கிளம்பு " என இழுத்துக் கொண்டு கிளம்பி விடுவது தான்.. தனி நபர் எனில் தினமும் விடாமல் வாக்கிங் செல்ல ஏராள செல்ப் மோடிவேஷன் வேண்டும் !

இன்றைய வாக்கிங்கில் இரண்டு விபத்துகளை கண்டோம். ஒன்று மிக பெரிது. ஏறக்குறைய உயிர் போக வேண்டிய நிலை. இரண்டிலுமே பார்த்து விட்டு அப்படியே கடந்து போக முடியவில்லை ...

முதலில் உதவ சென்றது நான் என்றாலும் அடுத்து வந்த ஹவுஸ் பாஸ் நமக்கு மேலே பிரச்சனையில் இன்வால்வ் ஆகிட்டார்

"சினிமாவில் வர்ற விசு மாதிரி சோசியல் செர்வீசில் இறங்கிட்டோம். வீட்டுக்கு போவோம் - பொண்ணு ஸ்கூலுக்கு போகணும்" என இழுத்து கொண்டு வர வேண்டியதாய் போயிற்று

அந்த விபத்து

விபத்தில் என்ன நடந்தது என முகநூலில் விரிவாய் எழுதவில்லை இங்கு எழுதிவிடலாம்.

200 அடி சாலைக்கு நடுவே இருக்கும் டிவைடரை அவசரமாய் தாண்டி குதித்து கடந்தார் ஒரு இளைஞர். மிக வேகமாய் பைக்கில் வந்த இன்னொரு இளைஞர் இவர் க்ராஸ் செய்வதை எதிர்பார்க்கவே இல்லை. பைக் நேராக அவர் மீது மோத, இருவரும் சாலையில் உருண்டனர். பைக்குடன் சேர்த்து இருவரும் சாலையில் தேய்த்து கொண்டு போயினர். நானும் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்த இடத்திற்கு மிக மிக அருகில் எங்கள் கண் முன் இது நடந்தது.

அடுத்த நொடி பைக் ஓட்டி முகமெல்லாம் ரத்தமாக எழுந்து நின்றார். சாலையை கடந்த இளைஞர் பிரக்ஞை இன்றி விழுந்து கிடந்தார்

எங்கிருந்தோ நான்கைந்து பேர் வந்து இருவரையும் சாலை ஓரம் தூக்கி வந்தனர் ( மிக அதிக வாகனங்கள் வேகமாய் செல்லும் 200 அடி சாலை அது)

க்ராஸ் செய்தவர் மீது தான் முக்கிய தவறு எனினும் எல்லோரும் அவரையே பார்த்தோம். காரணம் - அவர் பேச்சு மூச்சின்றி இருந்தார். இதய துடிப்பு இருக்கிறதா என பார்த்து, முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை சற்று உலுக்கிய பின் லேசாக அசைந்தார். சில நிமிடங்கள் கழித்து விழித்து பார்த்து மெதுவாக நடந்து சில அடிகள் நடந்து பின் அமர்ந்தார்

பைக் ஓட்டி - ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பினார் ! இல்லா விடில் அவர் வந்து விழுந்த வேகத்துக்கு மண்டை பிளந்திருக்கும். உள்ளி மூக்கு உடைந்து ரத்தம் கொட்டி கொண்டிருந்தது. இரண்டு பற்கள் உடைந்து விட்டது. அவரை ஒரு ஆட்டோ பிடித்து காமாட்சி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தோம்

சாலையை க்ராஸ் செய்தவர் - வட இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தொழிலாளி. அவரால் காமாட்சி மருத்துவமனை போன்ற இடத்தில் மருத்துவம் பார்க்க முடியாது. ஏதேனும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் தான் உண்டு. அருகில் தான் குடியிருப்பார் போலும். அவருடன் வசிக்கும் நண்பர்கள் வந்து அவரை கூட்டி சென்றனர்

ஒவ்வொரு சாலை விபத்திலும் - அநேகமாய் இளைஞர்கள் தான் உதவுவதை காண முடிகிறது.

என்னை போன்ற 40 வயது ஆசாமிகள் - 30 - 40 கிலோ மீட்டர் ஸ்பீடில் பைக்கில் செல்வோம். பலரும் சிரிப்பார்கள். ஆனால் எதையோ யோசித்து கொண்டே வண்டி ஓட்டும் எம்மை போன்றோருக்கு இப்படி மெதுவாக வண்டி ஓட்டுவதால் விபத்துகள் நடப்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு.

அழகு கார்னர் 

படத்திலுள்ள அம்மணியை அடையாளம் தெரிகிறதா? வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா !


இவரை ஏன் பிடிக்கிறது - எதற்கு பிடிக்கிறது என்று சொல்ல தெரியலை....ஆனால் ரொம்பவே பிடிக்கிறது.

தமிழில் அடுத்து என்ன படம் நடிக்கிறார் என்று தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே !

ரீ யூனியன்

நேற்று இன்று நாளை - மூன்று நாளும் சென்னை ITC க்ராண்ட் சோழா ஹோட்டலில் கம்பனி செகரட்டரி இன்ஸ்டிடியூட்டின் வருடாந்திர மாநாடு நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் நடக்கும் இவ்விழா 8 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இம்முறை நடக்கிறது 

போனிலும் மெயிலிலும் மட்டுமே பேசிய - ஏராள நண்பர்களை இந்த 3 நாட்களில் நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு ...கூடவே ஒவ்வொரு மாதமும் சந்திக்கும் சென்னை நண்பர்கள் குழு வேறு.. காலேஜ் ரீ யூனியன் போல செம செம ஜாலியாக உள்ளது. 

ஹோட்டல் பற்றி முடிந்தால் சுருக்கமாய் பின்னர் எழுதுகிறேன் 

பார்த்த படம் - அழகு ராஜா

"பார்த்த படம்" எனபதற்கு பதில் ஒரு மணி நேரம் (மட்டும் ) பார்த்த படம் என எழுதியிருக்கணும் !

கொடுமை ! இதற்கு மேல் வேறு எந்த வார்த்தையும் சொல்ல தோணலை ! ஓகே ஓகே போன்ற படங்களை இயக்கிய ராஜேஷா இப்படி ஒரு மொக்கை போட்டது ? பெரும்பாலான நேரம் சிரிப்பே வரலை . கார்த்தி தொடர் வெற்றிக்கு பின் தொடர் தோல்வியாக தந்து கொண்டிருக்கிறார் :(

போஸ்டர் கார்னர்
முகநூலில் நண்பரால் பகிரப்பட்ட இந்த போட்டோ வேறு பல சிந்தனைகளை என்னுள் விளைவித்தது ←

42 வருட வாழ்வில் "பணம் வாழ்வின் 80 % பிரச்சனைகளை சரிய செய்ய வல்லது என்று உணர்ந்துள்ளேன் (பணம் இருந்து அதை செலவு செய்ய- நீங்கள் தயாராகவும் இருக்க வேண்டும் ! இது முக்கியம் !)

ஆனால் பணத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகளும் ஏராளம் உண்டு.←

அவற்றில் பலவற்றை கூட அன்பு, முயற்சி, பொறுமை - அனைத்துக்கும் மேலாக நேரம் போன்றவை சரி செய்யும் என்று நினைக்கிறேன் 


அய்யாசாமி தத்துவம்

ஒரு மனிதன் வளரத்துவங்கும் போது அவன் மீது கற்கள் வீசப்பட்டே தீரும். அந்த கற்களில் சில நட்பின்/ உரிமையின் பாற்பட்டு; சில பொறாமையில்; இன்னும் சில சென்ற சண்டையின் சொச்ச மிச்சம் .

இப்படி வீசப்படும் கற்களை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது நபருக்கு நபர் மாறுபடும்.

வீசப்படும் கற்களுக்கு மௌனமே சிறந்த பதில் என்று மிகத் தாமதமாய் உணர்ந்துள்ளேன்; இந்த தெளிவாவது தொடர்ந்து நீடிக்கட்டும்

ஆமென் !
Related Posts Plugin for WordPress, Blogger...