Monday, April 12, 2010

என்னை கவர்ந்த பெண்கள்


நண்பர் ரகு இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பலரும் பத்து பெண்கள் பற்றி எழுத நான் ஆறு பேர் தான் எழுதுகிறேன். எனது கல்லூரி தோழிகள்/ உடன் பணி புரிந்த, பணி புரியும் நண்பிகள்/ பதிவர் தோழிகள் இவர்களை தவிர்த்து எழுதியுள்ளேன். இவர்களை பட்டியலிட்டால் பத்து பத்தாது!! மேலும் இவர்களில் பலரும் பதிவு படிப்பதால் சிலரை விட்டு, சிலரை எழுதிய பாவத்திற்க்குள் விழாமல் "மீ தி எஸ்கேப்".

இந்த தொடர் பதிவில்  கொடுமையான ஒரு ரூல் "சொந்த காரர்களாக இருக்க கூடாது" என்பது (யாருப்பா இந்த ரூல் போட்டது? காட்டுங்க என் கிட்டே.. ). வாழ்க்கையிலேயே எனக்கு பிடித்தவர்கள் என பட்டியிலிடும் போது மகள், மனைவி, அம்மா, அக்கா, அண்ணி என முதல் இடங்கள் அனைத்தும் பெண்களே!! (அப்பா கூட இந்த லிஸ்டில் அக்காவிற்கு பின் தான் வருவார்!!) இவர்களை பற்றி எழுதும் ஒரு வாய்ப்பு போச்சு... இருக்கட்டும்.. அவர்களை அப்புறம் பார்க்கலாம்.. முதலில் தலைப்பில் உள்ள அந்த ஆறு பெண்கள்..

கமலா டீச்சர்

ஒண்ணாம் வகுப்பு டீச்சர். மிக அன்பானவர். என்னை மிக ஊக்குவித்தவர். எனது திறமையை (!!??) இளம் வயதிலேயே கண்டு பிடித்தவர். நான் எல்.கே.ஜி எல்லாம் படிக்கலை. முதலில் ஒண்ணாம் வகுப்பு தான் படித்தேன். எழுத்துக்களே அப்போது தான் அறிமுகம் எனினும், " ர்" என்ற எழுத்து டீச்சர் எழுதும் போது, டீச்சர் " ர" போட்டு தானே மேலே புள்ளி வைக்கணும்; நீங்க "ர்" அப்படின்னு துணைக்கால் மேலே புள்ளி வைக்கிறீங்களே?" என கேட்டேன். டீச்சருக்கு பெருமை பிடிபடலை. “இத்தனை வருஷத்தில் ஒருத்தரும் என்னை இப்படி கேட்கலையே?” என சொல்லி சொல்லி ஆத்து போனார்.

பள்ளி நாடகத்தில் ஒண்ணாம் வகுப்பு முதல் நான் நடிக்க ஆரம்பிக்க டீச்சர் தான் காரணம். டீச்சரும் அவர் கணவரும் சேர்ந்து கதை, வசனம், பாட்டு, மியூசிக் எல்லாம் செய்வார்கள். பள்ளிக்கு அடுத்து வீடு அவர்களுடையது. அங்கு தான் ரிகர்சல் நடக்கும். அவர்களின் மகன் (அவனும் மோகன் குமார் தான்) அப்போது முதல் இன்று வரை முப்பது ஆண்டுகளுக்கு மேல் என் மிக நெருங்கிய நண்பனாக உள்ளான்.

ஒண்ணாம் வகுப்பு படித்த போது டீச்சர் எழுதிய நாடகத்தில் நன்றாக நடித்தேன் என ஆண்டு விழாவிற்கு வந்த Chief Guest தனக்கு போட்ட மாலையை கழட்டி எனக்கு போட்டார். அதை பெருமையாக வீடு வரை கழட்டாமல் போட்டு வந்தது இன்னும் நினைவில் உள்ளது...


டீச்சருக்கு என் மேல் எப்போதும் மிக நம்பிக்கை. பின்னாளில் சினிமா பார்க்க போகணும் என்றால் கூட நண்பனுக்காக நான் தான் போய் அவர்களிடம் பேசி அனுமதி வாங்குவேன். அவன் கேட்டால் மாட்டேன் என்பவர்கள், நான் கேட்டால், வேண்டாம் என சொல்லாது அனுப்பி வைப்பார்கள்.

அவர்கள் மகன் இன்று டிவியில் ஒரு தயாரிப்பாளராக நல்ல நிலையில் உள்ளான். அவனது வீட்டு கிரஹ பிரவேசத்திற்கு சமீபத்தில் சென்ற போது கூட என் மனைவியிடம் சொல்லி கொண்டே இருந்தார். " சின்ன வயசிலேயே ரொம்ப புத்தி சாலி பய. நல்ல பய; நல்லா பாத்துக்கமா " என..

இந்த பாராட்டு.. அன்பு இது தான் எனது துவக்கம். நீங்கள் ஊற்றிய நீர் தான் இன்று வளர்ந்து மரமாக நிற்கிறது.. நன்றி டீச்சர்.

வானதி டீச்சர்

மறக்க முடியாத மற்றொரு டீச்சர். அறிவியில் பாடத்திற்கு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வந்தார்கள். அறிவியலை எவ்வளவு அற்புதமாக நடத்துவார்கள் தெரியுமா!! எல்லோரையும் பற்றி எல்லா விஷயத்தையும் சரியாக நினைவில் வைத்திருப்பார்கள். சரியான நேரத்தில் சொல்லுவார்கள். Terrific sense of humour!!

மிக அழகாக இருப்பார்கள். புடவையில் தான் வருவார்கள், பார்க்கும் போது ரொம்ப மரியாதையான உணர்வு வரும். டீச்சருக்கு வயது ஆன பின்னும் கூட பார்க்க அப்படியே தான் இருந்தார்கள்.


இவர்களுக்கு எங்கள் ஊரின் நூலகத்தில் இருந்து நாவல், சிறுகதை எடுத்து வந்து தருவேன், பட்டுகோட்டை பிரபாகர் கதை என்றால் டீச்சருக்கு மிக பிடிக்கும் (அவர்களும் பட்டு கோட்டையில் பிறந்து வளர்ந்ததால் இருக்கலாம்). எனக்கும் நாவல் சிறுகதைகள் பழக இது ஒரு வாய்ப்பாக இருந்தது.

எனது திருமணதிற்கு டீச்சர் வரலை. ஆனால் ஊருக்கு நானும் மனைவியும் வந்ததும் உடன் தகவல் அறிந்து வீட்டில் வந்து பார்த்தார்கள். அவர்களிடம் ஆசி வாங்கிய போது ரொம்ப மன நிறைவாக இருந்தது..

டீச்சரின் கணவர் பிறகு ஒரு பஸ் விபத்தில் கால் இழந்து விட்டார். இந்த துயரை டீச்சர் மிக தைரியமாக நேர் கொண்டு வெளி வந்தார். அவர்களுக்கு ஒரே மகன். டீச்சர் தற்போது ரிட்டையர் ஆகியிருக்க கூடும். எங்கள் ஊரில் இல்லை. எந்த ஊரில் உள்ளார்களோ? ஒரு முறை பார்க்க மாட்டோமா என மனம் ஏங்குகிறது…

வழக்கறிஞர் அருள் மொழி

நான் வழக்கறிஞராக பணி புரிந்த போது எனது சீனியர். கேஸ் பற்றி மட்டுமல்லாது எந்த விஷயமும் விவாதிக்கலாம். இவர்கள் தி. க.. ஆனால் நான் எப்போதும் திருநீறு அணிந்திருப்பேன். அதனை என்றும் அவர்கள் கேட்டதில்லை. இது பற்றி சிலர் அவர்களிடம் கேட்ட போது கூட, "அது அவர் தனி பட்ட விஷயம் " என முடித்து விட்டார்.

மிக குறுகிய காலத்திலேயே சில பெரிய வழக்குகளை என்னை வாதிட அனுமதித்தார். இது மிக பெரிய வாய்ப்பு. இவ்வளவு சீக்கிரம் ஜூனியர்களுக்கு கிடைக்காது. வழக்குகளை வாதிட்டு சாதகமான தீர்ப்பு வாங்கும் சந்தோசம் அலாதியானது. அது எனக்கு கிட்ட காரணமானவர்.

சாரா ஆரோக்கிய சாமி

ACS Inter படித்து விட்டு சென்னை வந்த பின் ACS Institute-ல் இவர்களை சந்திதேன். ACS Institute-ன் Head இவர்கள். படிக்கும் மாணவர்களுக்கு பல Administrative பிரச்சனைகள் இருக்கும். இவற்றை இவர்கள் நேரடியாக தலையிட்டு சரி செய்வார்கள். எனக்கும் அப்படி தான் அறிமுகம். ஆனால் கடந்த 15 வருடங்களில் எங்கள் குடும்ப நண்பர் ஆகி விட்டார்.

என்னை ஒரு மாணவனாக, பின் கம்பெனி செக்ரட்டரி ஆக, அங்கு பாடம் எடுக்கும் ஆசிரியராக, பேப்பர் திருத்தும் examiner ஆக எனது வளர்ச்சி முழுமையும் தள்ளி இருந்து பார்த்து வருகிறார்கள். இவற்றில் பல வாய்ப்புகள் அவர்கள் தந்தது தான்.(Institute -ல் பாடம் எடுப்பது, பேப்பர் திருத்துவது, Quiz நடத்துவது, சில National level moot court போட்டிகளுக்கு Judge ஆக இருத்தல் போன்ற பல விஷயங்கள்). ஆனால் இந்த வாய்ப்புகள் அனைத்தும் தனக்கு தெரிந்தவன் என்பதால் தந்தது அல்ல; ஒவ்வொரு முறையும் அதற்கான feedback சரியாக உள்ளதா என கலந்து கொண்டர்வர்களிடம் கேட்டு கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் பலருக்கும் உதவினாலும் அவை அனைத்தும் அவர் வரையறைக்கு உட்பட்டு யாரும் கேள்வி கேட்க முடியாத நிலையில் தான் இருக்கும். ஆனால் பொது பதவிகளில் உள்ள பலர் இந்த அளவு உதவுவது இல்லை என்பது தான் வருத்தமான உண்மை.

எனது carreer-ஐ பொறுத்து நான் எடுக்கும் எந்த முக்கிய முடிவும் சாரா மேடமிடம் பேசிய பின் தான் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

என்னை பற்றி நான் இல்லாத போதும் பலரிடமும் மேடம் நல்ல விதமாக பேசுவதை பலரும் இன்று வரை சொல்லும் போது மிகுந்த மகிழ்சியாக இருக்கும் .. நன்றி மேடம் தங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும்..

லக்ஷ்மி மேனன்

எனது மனைவி வேலை பார்த்த நிறுவனத்தில் (HTL ) சேர்மன் & எம். டி ஆக இருந்தார். அப்போதே அவரை பற்றி நிறைய கேள்வி பட்டுள்ளேன். Central Government நிறுவனங்களில் மிக சிறந்த எம். டிக்கான விருது பெற்றவர். நஷ்டத்தில் உள்ள நிறுவனத்தை லாபத்திற்கு கொண்டு செல்லும் Turnaround specialist என இவரை சொல்லுவார்கள். அங்கிருந்து ரிட்டையர் ஆன பின் ஒரு புது நிறுவனத்தில் சேர்மன் ஆக இருந்தார். அப்போது அவரிடம் நேரடியாக வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. What an experience!! எவ்வளவோ விஷயங்கள் இவரிடம் கற்றேன்!! Very tough task master !

அந்த நிறுவனத்திலிருந்து நான் வேறு நல்ல வேலை கிடைத்து செல்ல முடிவெடுத்து அவரிடம் எப்படி சொல்லலாம் என தயங்கி கொண்டிருந்தேன். அப்போது வெளியில் நானும் அவரும் ஒரு மீட்டிங் சென்று விட்டு வந்தோம். மதியம் நேரே அவர் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு கூட்டி சென்று விட்டார். அவரே பரிமாற நான் " அட பாவி இவங்களை விட்டுட்டு போக போறியா?" என நெளிந்தேன். ஆயினும் மனசை திட படுத்தி கொண்டு மதியம் அவரிடம் சொல்லி விட்டேன். அவருக்கு ரொம்ப ஷாக் தான். பலரையும் விட்டு பேசி பார்த்தார். நான் மாறலை.

ஆனால் இவரிடம் வேலை பார்த்த அந்த காலத்தில் கற்றது என்றும் உதவுகிறது . மகன் போல் என்னிடம் இவர் காட்டிய அன்பு மறக்க முடியாது!!

அன்னை தெரசா

இந்த லிஸ்ட்டில் இவர் எப்படி வந்தார் என புருவம் உயர்த்த நேரிடலாம். ஆனால் எனக்கு மிக மிக பிடித்த ஒரு human being. நோயாளிகளுக்கும், துன்ப பட்டவர்களுக்கும் இவர் ஆற்றிய தொண்டு அற்புதம். A noble soul!!

*********
இன்னும் கூட எழுதலாம் ..இப்போதே பதிவு சற்று பெரிதாகி விட்டது....பொறுமையான வாசிப்புக்கு நன்றி நண்பர்களே!!

26 comments:

  1. :) நல்லாருக்குங்க தொகுப்பு. கமலா டீச்சரை ரொம்ப ரசிக்கிறேன்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு. கமலா டீச்சர் பற்றி படிக்கும் போது இன்னும் நன்றாக இருந்தது. :-)

    ReplyDelete
  3. அன்னை தெரசா ஒரு இந்த லிஸ்ட் எழுதுபவர்களின் க்ளிஷேவாகி போனதில் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது..:)

    ReplyDelete
  4. kamalaa teacher, enakku maala teacher..... mmmm :-)

    ReplyDelete
  5. ஒவ்வொருவருக்கும் மனம் கவர்ந்த டீச்சர் நிச்சயம் உண்டு. அருமை.

    ReplyDelete
  6. உங்களுக்கு ஒரு கமலா டீச்சர். எனக்கு முதல் வகுப்பு எடுத்த டீச்சர் பேர் “நாமகிரி”. அற்புதமான ஒரு மனுஷி. நல்லதொரு பதிவு.

    வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  7. அந்த‌ துணைக்கால் 'ர்' மேட்ட‌ர் ரொம்ப‌வும் ர‌சித்தேன், க‌ம‌லா டீச்ச‌ர், லக்ஷ்மி மேனன் இருவ‌ரும் நெகிழ‌ வைக்கிறார்க‌ள்

    ReplyDelete
  8. "வெவ்வேறு தொழில் செய்வபவர்களாக இருக்க வேண்டும்.." -- உங்கள் நண்பர் இந்த கண்டிஷன் போடவில்லையா, நீங்கள் இரண்டு 'டீச்சர்' சொல்லியிருக்கிறீர்களே ?


    நா கூட இதப் பத்தி எங்க வூட்டாண்ட (http://madhavan73.blogspot.com/2010/03/12.html )எழுதிருக்கேன்..
    இப்பல்லாம் எங்க வூட்டு வரதில்லையா சாமி..?

    ReplyDelete
  9. எல்லாருக்கும் ஒரு டீச்சராவது பிடிச்சவங்க லிஸ்ட்ல இருக்கத்தான் செய்யுறாங்க... அனுபவமும் பகிர்வும் நன்று....

    ReplyDelete
  10. யாரும் தன் அம்மாவச்(ஜெயலலிதா இல்லை!) சொன்னமாதிரி தெரியலயே தல.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  11. //டீச்சருக்கு பெருமை பிடிபடலை. “இத்தனை வருஷத்தில் ஒருத்தரும் என்னை இப்படி கேட்கலையே?” என சொல்லி சொல்லி ஆத்து போனார்.//

    கொடுத்து வைத்தவர் நீங்கள் இப்படி டீச்சர் கிடைத்ததற்கு!! நான் நாலாங்கிளாஸ் படிக்கும்போது ஒருமுறை இப்படி ஏதோ சொன்னதுக்கு, எனக்கு அதிகப் பிரசங்கி என்று பெயர் வைத்தார் “மேகி” என்ற டீச்சர். நல்ல ஆசிரியைகளும் கிடைத்தார்கள், ஆனால் இதை மறக்கவே முடிவதில்லை.

    ReplyDelete
  12. நன்றி விதூஷ்;
    ***
    நன்றி சித்ரா; கமலா டீச்சர் ரொம்ப ஸ்பெஷல் தான்
    ***
    நன்றி கேபிள்; அன்னை தெரசா பலரும் எழுதினார்கள் என்பதால் நான் எழுதாமல் இருக்க முடியலை; எனக்கு ரொம்ப பிடித்த ஜீவன் அது
    ***
    அப்படியா முரளி? நன்றி
    ***
    சரியா சொன்னீங்க சூர்யா; டீச்சர்கள் & அவர்கள் நினைவுகள் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு
    ****
    நன்றி வெங்கட்; டீச்சர்கள் தான் அனைவரின் மலரும் நினைவுக்கு வருகிறார்கள் போலும்

    ReplyDelete
  13. நன்றி ரகு; உங்களால் தான் இந்த பதிவு சாத்தியமாயிற்று; லக்ஷ்மி மேனன் பற்றி குறிப்பிடம்மைக்கு நன்றி!!
    ****
    நன்றி மாதவன்; விதிகள் சில நேரம் மீறபட வேண்டும்; இனி உங்கள் வீட்டு பக்கம் வர முயல்கிறேன்
    ******
    நன்றி பாலாசி; நீங்கள் சொல்வது உண்மை தான்
    ****
    ஹா ஹா நன்றி நரசிம்; சிலர் ஜெ பற்றியும் எழுதிருக்காங்க...
    ****
    நன்றி ஹுசைனம்மா.. ஆம் அத்தகைய டீச்சர்களும் பின்னர் இருந்தனர் . நல்ல வேளை.. முதல் வகுப்பு டீச்சர் அப்படி இல்லை

    ReplyDelete
  14. அதென்னங்க டீச்சர் என்றாலே......

    கமலா

    இல்லாட்டி

    மல்லிகா..?!

    ReplyDelete
  15. //பள்ளி நாடகத்தில் ஒண்ணாம் வகுப்பு முதல் நான் நடிக்க ஆரம்பிக்க டீச்சர் தான் காரணம்.//

    அவன் அவன் பொறந்ததுல இருந்தே நடிச்சிக்கிட்டிருக்கான். அண்னனுக்கு பெருமைய பாருங்களேன்..

    ReplyDelete
  16. மோகன்,

    பொறுமையா படிக்க வேண்டி இருந்தாலும், அருமையான பகிர்வு அண்ணாச்சி.

    ReplyDelete
  17. நல்லதொரு தொகுப்பு.

    60 வயதில் படித்து பாருங்கள்.
    இன்னும் மகத்துவம் தெரியும்.

    ReplyDelete
  18. நன்றி அகமது; அட..எனக்கு கூட ஒரு மல்லிகா டீச்சர் இருந்தாங்க!! :))

    *******
    சத்ரியன் said //அவன் அவன் பொறந்ததுல இருந்தே நடிச்சிக்கிட்டிருக்கான். அண்னனுக்கு பெருமைய பாருங்களேன்.. // ஹா ஹா நன்றி சத்ரியன்
    *******
    சுரேஷ் : முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    *******
    காவேரி கணேஷ்: மிக்க நன்றி. உண்மை தான்.

    ReplyDelete
  19. நீண்ட பதிவாக இருந்தாலும் இன்னும் சிலரைப் பற்றி சேர்த்து எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.

    //டீச்சர் " ர" போட்டு தானே மேலே புள்ளி வைக்கணும்; //

    விளையும் பயிர் முளையிலேத் தெரியும் என்பது இதுதான்.

    //வாழ்க்கையிலேயே எனக்கு பிடித்தவர்கள் என பட்டியிலிடும் போது மகள், மனைவி, அம்மா, அக்கா, அண்ணி என முதல் இடங்கள் அனைத்தும் பெண்களே!!//

    உங்கள் வீட்டுப் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    ReplyDelete
  20. கமலா டீச்சர் போல எத்தனை பேர்கள். இதே போன்ற தன் அனுபவத்தை என் மகனின் பள்ளி இறுதி ஆண்டு விழாவிலும் ஒருவர் பகிர்ந்து கொண்டார். தனக்கு வழிகாட்டிய டீச்சரை பல ஆண்டுகளாய் தேடிக் கண்டு பிடித்ததை அவர் விவரிக்கையில் எல்லோருக்கும் அவரவர் டீச்சர்களைப் பார்க்கும் ஆசையே வந்து விட்டது.

    இன்னும் டீச்சருடன் உங்களால் தொடர்பில் இருக்க முடிவதும் ஒரு கொடுப்பினை.

    ReplyDelete
  21. சின்ன வயசிலேயே ரொம்ப புத்தி சாலி பய

    hehe then how about now?
    (just for fun)

    ReplyDelete
  22. தங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றி அமைதி அப்பா.
    ****
    நன்றி ராம லஷ்மி;; நண்பன் தாயார் என்பதால் கமலா டீச்சரை இன்னும் பார்க்க முடிகிறது
    ****
    அட! ஏஞ்சல்!! நல்லா இருக்கியா? நன்றி

    ReplyDelete
  23. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  24. நல்ல பதிவு..எனக்கு முதல் வகுப்பு எடுத்த ஆசிரியை எல்லாம் நினைவே இல்லை...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...