Saturday, November 28, 2015

தஞ்சை லெட்சுமி சீவல் :ஒரு பார்வை

ஞ்சையில் இருந்தோர் / இருப்போர் அனைவருக்கும் தெரிந்த ஒரு நிறுவனம் லெட்சுமி சீவல். மருத்துவ கல்லூரி செல்லும் வழியில் லெட்சுமி சீவல் என்கிற பேருந்து நிறுத்தம் உண்டு. இந்த இடத்தை சுற்றி LIC நகர், ஜே ஜே நகர் என பல குடியிருப்பு நகர்கள் இருந்தாலும், இன்னும் இந்த நிறுத்தம் லெட்சுமி சீவல் என்றே அழைக்கப்படுகிறது. 

பேருந்து நிறுத்தத்தில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது இந்த நிறுவனம். எனது பெற்றோர் மற்றும் அண்ணன் குடியிருக்கும் வீடு அருகில் உள்ளதால், அடிக்கடி இந்த இடத்தில் இறங்கி செல்வேன். முதல் முறையாக நிறுவனம் உள்ளே சென்று சீவல் எப்படி தயாரிக்கிறார்கள் என பார்த்தேன். லெட்சுமி சீவல் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது


லெட்சுமி சீவல் நிறுவனம் துவங்கி 50 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து லாபகரமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மிக புகழ் பெற்ற சீவல் தயாரிப்பாளர்கள் எனில் இரு நிறுவனங்களை சொல்லலாம். ஒன்று ARR சீவல். ARR குழுமம் - சீவலுடன், ARR சுகந்த பாக்கும் தயாரிக்கிறார்கள். இன்னொரு புகழ் பெற்ற சீவல் தயாரிப்பு நிறுவனமான லெட்சுமி சீவலில், சீவல் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

மதுரையில், சின்ன பெட்டிக் கடை வியாபாரமாக துவங்கிய இவர்களது சீவல் வியாபாரம் இன்று, ஒரு பெரிய "பிராண்ட் குழுமமாக" வளர்ந்துள்ளது.

இதன் மேனேஜர் திரு கார்த்திக்குடன் பேசிய போது சீவல் தயாரிக்கும் முறையை விளக்கினார். இளைஞர் போல் தெரியும் இவர், சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடி தேவையான உத்தரவுகள் போட்டு கொண்டிருந்தார். 10 வருடங்களாக இதே நிறுவனத்தில் பணி புரிகிறாராம்.


சீவல் தயாரிப்பது மிக எளிமையான வழி முறை தான்.

நல்ல நிறுவனங்களிடமிருந்து பாக்கு வாங்கி அதனை தண்ணீரில் ஊற வைக்கிறார்கள். பின் அதனை நுணுக்கி வெயிலில் காய வைக்கின்றனர். சரியான அளவு காய வைத்ததும் சீவல் வடிவில் அது வந்து விடுகிறது. இதனை பின் கவர்களில் போட்டு விற்பனை செய்கின்றனர். அவ்வளவு தான் இங்கு நடக்கும் விஷயம் !

நிறைய பேர் செய்ய வேண்டிய வேலை, சீவலை கவர்களில் போடுவது தான். உள்ளே ஏறக்குறைய முப்பது பெண்கள் அமர்ந்து சீவலை கவரில் போட்டு கொண்டிருந்தனர்.

நான் சென்ற போது, மின்சாரம் இல்லா விட்டாலும், ஜன்னல்களை திறந்து வைத்து விட்டு, சீவல்களை கவர்களில் போட்டு கொண்டிருந்தனர். மின்சார தட்டுப்பாடு இவர்கள் தொழிலை பாதிக்கவில்லை என்பது ஆச்சரியமான, மகிழ்வான தகவல்.

இந்நிறுவனத்தை துவக்கியவர் திரு. சுப்பிரமணியம் செட்டியார். இவர் மறைவுக்கு பின் அவர் மகன் நிறுவனத்தை இப்போது நடத்தி வருகிறார்.

"சீவல் செரிமானத்துக்கு நல்லது. ஆனால் இது தஞ்சை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மட்டும் தான் பிரபலம். மதுரையில் போய் சீவல் என்று கேட்டால் தெரியாது" என்றார் நிறுவன மேனஜர் கார்த்திக். "தற்போது சீவல் வியாபாரம் சற்று டல் அடிப்பதாகவும் இதற்கு காரணம் புது தலைமுறை மக்கள் பான் பராக் போன்ற லாகிரி வஸ்துகளுக்கு பழக்கம் ஆகி விட்டது தான் " என்றும் வருத்தப்பட்டார்.

இவர்களின் நிறுவனமும் கூட புதிய மாறுதல்களுக்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டு வருகிறது. லெட்சுமி சீவலுக்கு அருகில், மெயின் ரோடிலேயே போர்டு கார் விற்பனை நிலையம் ஒன்றை துவக்கி உள்ளனர்.

சொல்லப் போனால் இப்போது லட்சுமி சீவல் நிறுவனம் உள்ளேயும் போர்டு நிறுவனம் முக்கிய சாலையிலும் வந்து விட்டது. காலத்தின் மாறுதல் !



இது மட்டுமன்றி இவர்கள் நிறுவனம் தற்போது பேப்பர் இண்டஸ்ட்ரீஸ், பிளாஸ்டிக்ஸ், டீ எஸ்டேட்ஸ், கல்வி நிறுவனங்கள், மெஷினரி, ஆட்டோமொபைல், பண்ணை எனப் பல்வேறு துறைகளில் பிரகாசிக்கிறது. தாத்தாவின் பெயரையே கொண்ட அவர் பேரன் சுப்பிரமணியம், வெளி நாட்டில் எம். பி. ஏ முடித்து விட்டு, தற்போது குடும்ப பிசினஸ்சில் இறங்கி, அனைத்து வியாபாரங்களும் இன்று கொடி கட்டி பறக்கிறது . ஆயினும் தாங்கள் துவங்கிய முதல் பிசினஸ் இது என்பதால் இதை இன்றும் தொடர்கின்றனர்.

லெட்சுமி சீவல் என்கிற பெயரை உச்சரிக்காத தஞ்சை மக்களே இருக்க மாட்டார்கள்..  ! இன்று அந்த நிறுவனம் பற்றி அறிந்து கொண்ட மகிழ்வோடு திரும்பினேன். தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள் இந்த பதிவை வாசித்தாலும், என்னைப் போலவே மகிழ்வார்கள் என்றே நம்புகிறேன்.

35 comments:

  1. சென்னை உதயம் தியேட்டர் அருகே இவங்க ஒரு பெரிய விளம்பர ஹோர்டிங் வெச்சிருந்தாங்க.. இப்போ இருக்கான்னுத் தெரியல.சீவல்க்கு இவ்வளோ பெரிய விளம்பரமான்னு நினைச்சேன்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நன்றி ees . நல்லாருக்கீங்களா?

      Delete
    2. நல்லாயிருக்கேன் சார் :)) முன்னாடியே ரிப்ளை பண்ணேன் மொபைலிலிருந்து. வரலப் போலிருக்கு.

      அப்புறம் போனவாரம் கேகே நகர் பக்கம் போனப்ப,இந்த ஹோர்டிங்கைப் பார்த்தேன். பெரிசு லாம் இல்லை. இங்க நீங்க முதல் படமா ஒண்ணுப் போட்டிருக்கீங்களே, சாட்சாத் இதே தான் சென்னையிலும் இருக்கு :))

      Delete
  2. எப்போதும் கடின உழைப்பு என்றுமே தோற்காது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டு.....உங்கள் அப்கிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. ஒரு நல்ல தகவல்.. இதுபோல பழமை வாய்ந்த தொழில்கள் கேள்விப்படும் போது ஏதோ மனதிற்கு நிறைவாக உள்ளது..நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சமீரா நன்றி

      Delete
  4. நல்லதொரு தகவல் பகிர்வு. பழைய சிறு தொழில்கள் இன்னும் நடத்தப்பட்டு வருகிறது என்பது மகிழ்சியான விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ராம்வி நன்றி

      Delete
  5. சிறு தொழில்கள் செய்வோரை ஊக்கப்படுத்த வேண்டும்...!

    ReplyDelete
    Replies
    1. மனோ அண்ணே: நன்றி ; வருக ! வணக்கம் !

      Delete
  6. முதன் முதலாக தொழில் ஆரம்பிக்கும் போது எங்களிடம் இருந்து தான் இரண்டு மூட்டை பாக்கு வாங்கி சென்றதாக எனது தாத்தா சொல்ல கேள்வி. நாங்களும் சீவல் தொழிலை சில காலம் நடத்தியவர்கள்தான். முக்கியமான விழாக்கள் இந்த குழுமத்தில் நடந்தால் பழைய நட்பின் எதிரொலியாக எங்களுக்கும் அழைப்பு வரும். ஆனால் தற்போது தொடர்பு விடுபட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சுவனப்பிரியன்? தகவலுக்கு நன்றி !

      Delete
  7. மேம்பாலத்திலிருந்து இறங்கினால் கணபதி நகர், ராஜப்பா நகர், செல்வ நகர், எல் ஐ சி காலனி, மங்களபுரம், ஈஸ்வரி நகர் மானம்பூ சாவடி இவைதான் பேருந்து நிறுத்தங்கள். குமரன் தியேட்டர் அருகில் உள்ளதோ?

    ReplyDelete
    Replies
    1. சாரி, மானம்பூ சாவடி என்று தவறாகச் சொல்லி விட்டேன். ராஜேந்திரா தியேட்டர் என்று ஒரு டெண்டுக் கொட்டகை இருந்த இடம். ஆஞ்சநேயர் கோவில், அப்புறம் ஒரு மசூதி இருக்கும். அங்கு ஒரு நிறுத்தம் இருக்கும்! இவையெல்லாம் 70 களில்!

      Delete
    2. ஸ்ரீராம் : எல்.ஐ.சி. காலனி போவதற்கான நிறுத்தம் தான் லெட்சுமி சீவல் பஸ் ஸ்டாப்.

      Delete
    3. ஸ்ரீராம்.: மேம்பாலம் தாண்டி மெடிக்கல் காலேஜ் ரோடில் செல்லும் போது ராஜப்பா நகர் மற்றும் TPS நகர் தாண்டி அடுத்த ஸ்டாபிங் லட்சுமி சீவல்


      Thanks Aathi manithan.

      Delete
  8. அதன் உற்பத்தி முறைகளின் படங்களைப்போட்டிருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.. தகவல் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உள்ளே படம் எடுக்க அனுமதிக்க வில்லை ஸ்ரீ விஜி. நன்றி

      Delete
  9. இன்னும் ஒரு தகவல் .
    லக்ஷ்மி சீவல் அருகில் உள்ள எல்.ஐ.சி. காலனியில் 1965 வாக்கில் பிள்ளையார் கோவில் கட்ட துவங்கிய காலத்தில்
    கோவில் கட்டுமான பணிகளுக்கும் கும்பாபிஷேகப் பணிகளுக்கும் பெரிதும் உதவியவர் திரு சுப்பிரமணியம்
    அவர்கள் தான்.

    நானும் அந்த பகுதியைச் சார்ந்த திருபுரசுந்தரி நகரைச் சேர்ந்தவன் தான். எங்கள் வீடு இந்தக்கோவிலுக்கு வெகு
    அருகாமையிலே உள்ளது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. அடடா சுவாரஸ்யமான தகவல்கள் சொன்னீர்கள் நன்றி ! அந்த கோவில் என் அண்ணன் வீட்டார் இப்போது தொடர்ந்து செல்லும் கோவில்

      Delete
  10. பழைய தொழிலுடன் காலத்துக்கு ஏற்ப புதிய பல தொழில்களையும் செய்துவரும் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சரியாய் சொன்னீர்கள் மாதேவி நன்றி

      Delete
  11. Itharku miga arugilthaan engal veedu ullathu...

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா? மகிழ்ச்சி. நீங்களும் பதிவரா?

      Delete
  12. சிறப்பான தகவல்கள். சிறு வயதில் இந்த சீவலை நானும் சுவைத்திருக்கிறேன் - வீட்டில் பெரியவர்களுக்கு வாங்கி வைத்ததை! :)

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  14. நல்ல தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  15. அருமையான தகவல். வாழ்த்துக்கள்! உங்களின் பதிவுக் கண்ணிலிருந்து எதுவும் தப்பமுடியாது போல் இருக்கிறதே!

    ReplyDelete
  16. லெக்ஷ்மி சீவல் நிறுவனர் வள்ளல், பாரிவேள் உயர்திரு
    திரு ஏ. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தஞ்சை நகரில் எந்த ஒரு நற்செயல் என்றாலும் முதல் ரசீது அவர் பெயரில் எழுதப்படும். தினசரி அவரிடம் நன்கொடை நாடி குறைந்தது 50 பேராவது வருவார்கள். அவரும் சளைகாமல் சிறு தொகையில் இருந்து பெருந்தொகை வரை அந்த நற்செயலின் அவசியத்தை உணர்ந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

    அவரைக் கல்விப்பணியில் ஈடுபடுத்துவதற்கு அடியேனை இறைவன் பயன் படுத்திக் கொண்டார். திருமகள் மேல் நிலைப்பள்ளியை நிறுவுவதற்கு 1985ல் பெருமளவு உதவினார். அந்தப்பள்ளி துவங்கப்பட தெய்வ சங்கல்பம் எவ்வாறு
    வெளிப்பட்டது என்று இங்கே எழுதியுள்ளேன்.
    30 ஜனவரி 2011.தலைப்பு:" நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்."
    http://classroom2007.blogspot.in/2011_01_01_archive.html

    திருமகள் பள்ளியில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, கமலாசுப்ரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைத் துவங்கினார். இன்று தஞ்சையின் ஒரு கல்வி இலக்காக இப்பள்ளி விளங்குகிறது.

    தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன் நின்று நடத்தினார்.

    தஞ்சாவூர் டெக்ஸ்டைலஸ் என்ற மில்லுக்கு அடுத்தபடியாக தஞ்சையில் அன்றைய காலகட்டத்தில் இருந்த ஒரே தொழிற்சாலை லெக்ஷ்மிசீவல் மட்டுமே.பல ஏழைப் பெண்கள் அங்கு பணிபுரிந்து முன்னுக்கு வந்தார்கள்.

    குடும்பத்தில் அவருக்குப் ப‌ல பிரச்சனைகள் இருந்தாலும், ஒன்றையும் வெளியில் காண்பிக்காமல் உற்சாகமாகச் செயல்படுவார்.

    சில ஆண்டுகள் அவருடன் இணைந்து பணியாற்றியதையும், அவ‌ருடைய சிக்கலான கால‌ கட்டத்தில் அவருக்குத் துணையாக இருந்ததையும் என்றும் மறவேன். அது ஒரு விலை மதிக்கப்பட முடியாத அனுபவம்.

    ReplyDelete
  17. என் நண்பர்கள் அருகில் உள்ள சாமியப்பா கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் படித்தபோது அவர்களை பார்க்க வந்துள்ளேன், அந்த வழியாக போயிருக்கிறேன். அருகில் உள்ள திரிபுரசுந்தரி நகரில்தான் தங்கி பயிற்சி வகுப்புக்கும் சென்று வந்தேன். ஆனாலும் இந்த தொழிற்சாலைக்குள் போனதில்லை. ஒருமுறை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையை உங்கள் கட்டுரை ஏற்படுத்திவிட்டது. உங்கள் தகவலுக்கு நன்றி.

    சேது.

    ReplyDelete
  18. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!
    சீவல் வியாபாரம் டல்...காரணம் லாகிரி வஸ்துக்கள் வந்ததினால் என்கிறார்.
    பாக்கு போடுவதால் வரும் கான்சர் பான்பரக்கிற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை....
    சுருங்க சொன்னால்...எரியற கொள்ளியில் எது நல்ல கொள்ளி?
    -------------பாக்கா இல்லை பான் பராக்கா?

    ReplyDelete
  19. அவர்கள் நிறுவனத்திற்கு தனியாக ஒரு ஓவியர் இருக்குறார். அவர் TNP சிவம்

    ReplyDelete
  20. I just happened to access this valuable information through one of my colleagues now. It is heartening to notice that adaptability is the success for any business and Lakshmi Seeval rightly caught this secret mantra. Being a Tanjorian, I am proud of this vintage institution. In fact, I was blessed in my young days since my Uncle was a close associate of Mr Subramaniam where the musical sabha meetings would be conducted and I would be assisting my Uncle inside this premises.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...