Monday, November 9, 2015

வெடிக்கடை நினைவுகள்..

தீபாவளி  வந்தபின் வெடிக்கடையை நினைக்காமல் இருக்க முடியுமா? பதிவின் பிற்பகுதியில் வெடிக்கடையில் வழக்கமாய் செய்யும் சில ஏமாற்று வேலைகளை சொல்கிறேன். முதலில் வெடிக்கடை அனுபவங்கள்.....

*********
நீடாமங்கலத்தில் வருடா வருடம் வெடிக்கடை வைப்போம். தீபாவளிக்கு ஐந்து நாள் முன்தான் கடை ஆரம்பிக்கும். ஆனால் அதற்கான முன்னேற்பாடுகள் சில மாதங்கள் முன்பே துவங்கி விடுவோம். 90 % வெடிகள் சிவகாசியிலிருந்து வரும். அதனை ஆர்டர் செய்து சில வாரங்கள் கழித்து, திடீரென ஒரு நாள் அதிகாலையில் தான் வண்டி வரும்.

வீட்டிற்கு அஞ்சு மணிக்கெல்லாம் வந்து எழுப்பி " சரக்கு வந்துடுச்சு" என்பார்கள். கள்ளிபெட்டியில் போட்டு அபாரமாய் பேக் செய்து வெடிகள் அனைத்தும் வரும். கூடவே வெடிகளுக்கான பில்லும் இருக்கும். நாங்கள் ஆர்டர் செய்தது சரியாக வந்திருக்கா , பில்லில் இருப்பவை சரியா இருக்கா என முழுதும் செக் செய்து மீண்டும் கள்ளிபெட்டிக்கே அவை போய்விடும்.



தஞ்சைக்கருகே அய்யம்பேட்டை என்றொரு ஊர் உண்டு ( அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியம்பெருமாள்.. சந்திரன்.. நியாபகம் இருக்கா? அதே அய்யம்பேட்டை தான் !). இங்கே யானை வெடி, லட்சுமி வெடி, ஓலை வெடி போன்றவை அட்டகாசமாய் இருக்கும். ஒவ்வொரு வருடமும் அங்கு சென்று இத்தகைய வெடிகளை வாங்கி பஸ்ஸில் எடுத்து வருவது த்ரில்லான அனுபவம் !

துப்பாக்கி போன்றவை அருகில் உள்ள கும்பகோணத்தில் வாங்குவோம்.

இப்படி எல்லாம் வாங்கி முடித்து தீபாவளிக்கு சரியாய் ஐந்து நாள் முன்பு கடை துவங்கும். ஒரு நாற்பது பக்க நோட்டில் அனைத்து வெடிகளையும் லிஸ்ட் போட்டு, அதன் அடக்கவிலையை எங்களுக்கு மட்டும் புரிகிற மொழியில் (பணத்தை வெளிப்படையாய் சொல்லாமல் மறைமுகமாய் சொல்லும் ஒரு பிசினஸ் மொழி ஒவ்வொரு தொழிலிலும் உண்டு) எழுதி விட்டு, அதை எந்த விலைக்கு விற்கலாம் என்று லிஸ்ட் போடுவோம்.

முதல் இரண்டு நாள் கடையில் ஈ ஆடும். " இவங்க இந்த வருஷமும் கடை போட்டிருக்காங்க" என்கிற தகவல் ஊரில் அனைவருக்கும் சேர மட்டுமே சில நாள் முன்னர் கடை திறப்பது.

கிராமங்களில் 90 % வியாபாரம் கடைசி நாள் மட்டும் தான். அதற்கு முந்தைய நாள் மீதம் 10 % வியாபாரம் இருக்கும். மற்ற நாள்கள் ....ஊஹூம் ! தீபாவளிக்கு முந்தைய நாள் மட்டுமே கடை போடுவோரும் கிராமத்தில் உண்டு !

தீபாவளி- முதல் நாள் வியாபாரத்துக்கு வருவோம்.

அதற்கு முன் நாலு நாளும் கடையை ஒரே ஆள் கூட சமாளிச்சிட முடியும். ஆனால் கடைசி நாள் எத்தனை பேர் கடையில் இருந்தாலும் போறாது. கூட்டம் அம்மும். வெளியூரிலிருந்து அண்ணன்கள், மற்றும் என் நண்பர்கள் நந்து, மது, மோகன் போன்றோர் அன்று தான் கடைக்கு வருவார்கள். கடைசி நேரத்தில் வருவதால் வெடி விலை இவர்களுக்கு புரிபடாது. முதல் நாளிலிருந்து கடையில் இருக்கும் என்னிடம் மதியம் வரை விலை கேட்டு கொண்டே இருப்பார்கள்.

கடையில் இருப்போர் ஒவ்வொருவர் காதிலும் ஒரு ரூபாய் பேனா ஒன்று சொருகியிருக்கும். பெரும்பாலும் மக்கள் வாங்கும் கம்பி மத்தாப்பு பாக்கெட் ஒன்றின் பின்னால் தான் அவர்கள் வாங்கிய வெடி கணக்கு போடுவோம். நடுவில் குடிக்க டீ வரும். அதை குடிக்கவும் நேரம் இல்லாது ஆறி போகும். வியாபாரம் பிச்சு எடுக்கும்.

சில நேரம் கடைசி நாள் மழை வந்து வியாபாரத்தை கெடுத்து விடும். மழையின் போது மக்கள் யாரும் வெடி வாங்க வர மாட்டார்கள். அதற்கு இரண்டு காரணம்: ஒன்று : கடை ரோடை ஒட்டி இருக்கும். மழையில் நனைந்து கொண்டு நின்றபடி தான் வெடி வாங்கணும். அடுத்து மழையில் நனைந்தால் வெடி நமத்துடும்.

என்னதான் மழை வந்தாலும், இரண்டு மணி நேரம் மழை விட்டால் கூட, அந்த நேரத்தில் மக்கள் வெடிக்கடை மீது படையெடுத்து வெடி வாங்கி தள்ளிடுவார்கள்.

தீபாவளிக்கு முதல் நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு - வெடிகள் காலியாகும் வரை கடை இருக்கும். இரவு பத்து மணியளவில் வியாபாரத்திலிருந்து “எஸ்” ஆகி கடைக்கு உள்ளே சென்று, இருக்கிற வெடிகள் கொஞ்சம் கொஞ்சம் பதுக்க ஆரம்பித்து விடுவேன். காரணம் கடையில் வியாபாரம் பார்க்கும் நண்பர்களுக்கு நாங்கள் தருவது வெடிகள் மட்டுமே. வெடி எல்லாம் காலியாகி விட்டால், வியாபாரம் செய்த நண்பர்களுக்கு வெடி இல்லாமல் போயிடும்.

இரவு பன்னிரண்டு மணிக்கு எல்லாவற்றையும் விற்று விட்ட மகிழ்ச்சியில் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்போம். கூட்டத்தில் கத்தி கத்தி எல்லோருக்கும் தொண்டை கட்டி, குரலே மாறி போயிருக்கும்.

இந்த கடைசி நாள் வியாபாரம் - எனக்கு மட்டுமல்ல - நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் வருடா வருடம் தவற விட விரும்பாத ஜாலியான அனுபவம். அதில் கிடைக்கும் சந்தோஷம், த்ரில், எதையோ சாதித்த மாதிரி பீலிங் இவையெல்லாம் அலாதியானவை. புத்தாடை, இனிப்புகள், புது படம், வெடி வெடிப்பது இவற்றை விட வெடிக்கடையின் கடைசி நாள் வியாபாரம் தான் ஒவ்வொரு வருடமும் எங்களை தீபாவளி எப்போது வரும் என்று காத்திருக்க, எதிர்பார்க்க, ஏங்க வைத்தது.

மறுநாள் - தீபாவளி அன்று எங்கள் வீட்டில் நண்பர்கள் எல்லாரும் கூடுவர். வியாபாரத்தில் சந்தித்த வித்தியாசமான கஸ்டமர்கள், வெடி வாங்கி விட்டு - காசு தராமல் நைசாய் ஓட பார்த்த ஆள், வெடிகளுக்கு தப்பா கணக்கு போட்ட நண்பன் - என பலவற்றையும் பேசி கிண்டல் செய்து கண்ணில் நீர் வர சிரிப்போம்.

வெடிக்கடை வியாபாரம் ஒவ்வொரு அண்ணனாய் செய்து, பின் நான்
கடைசி சில ஆண்டுகள் பார்த்தேன். எனக்கு திருமணம் ஆகி, சென்னைக்கு மாப்பிள்ளையாய் அனுப்பிய பின், ஊரில் வெடி வியாபாரம் நின்று போனது. ம்ம் அது ஆச்சு 15 வருஷம் !

ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரும்போது இந்த நினைவுகள் என்னை மட்டுமல்ல, என் நண்பர்கள் நந்து, மது, மோகன் அனைவரையும் சூழ்கிறது. இன்றைக்கும் தீபாவளி வாழ்த்து போனில் சொல்லும் போது வெடிக்கடை நினைவுகள் பற்றி பேசாமல் எங்கள் உரையாடல் முடிவதில்லை.

சரி .. வெடிக்கடையில் பொதுவாய் எப்படி எல்லாம் ஏமாற்ற வாய்ப்புண்டு.. பார்க்கலாமா?

ஒவ்வொரு வெடிக்கும் பாக்ஸில் போடும் ரேட் மூன்று மடங்கு அதிகமாய் இருக்கும். உதாரணமாய் முன்னூறு ரூபாய் என்று பாக்ஸில் போட்டிருந்தால், அதனை உங்களிடம் இருநூறு ரூபாய்க்கு விற்க பார்ப்பார்கள். நீங்களும் அட இவ்ளோ டிஸ்கவுன்ட்டா என மகிழ்வீர்கள். உண்மையில் அதன் விலை நூறு ரூபாய்க்கும் குறைவாய் இருக்கும். எனவே பாக்ஸ் ரேட் பார்த்து ஏமாறாதீர்கள்

நகரத்தில் வாங்கிய வெடிகளுக்கு கணக்கு போடுவதை கணினியே செய்கிறது. இதில் தவறு நடக்க வாய்ப்பு குறைவு தான். விற்கிற நபரே வெடிக்கு கணக்கு போட்டால் கூட்டலிலேயே சற்று அதிகம் போட வாய்ப்புண்டு (குறிப்பாய் வாங்குபவர் நிறைய பார்கெயின் செய்து, விலை குறைக்க பார்த்தால், குறைக்கிற மாதிரி காட்டி விட்டு பின், பில்லில் இப்படி நைசாய் ஏற்றி விடுவார்கள்)

மேலும் ஏராள ஐட்டங்கள் வாங்கும் போது, அவற்றில் ஓரிரண்டை தராமல் கடையிலேயே வைத்து விடுவதும் நடக்கும். (இதுவும் அதிகம் பார்கெயின் செய்பவருக்கு தான் )

ஸ்டாண்டர்ட் போன்ற சில நிறுவனங்கள் தான் மிக சிறந்த வெடிகளை விற்பனை செய்யும். சில குவாலிட்டி குறைவான நிறுவனங்கள் விலை குறைவாய் வைத்து விட்டு மிக சுமாரான தரத்தில் வெடிகளை தந்து விடும். வெடிகளை வாங்கி அவை சரியாக வெடிக்காமல் புஸ் ஆனால், அக்கம் பக்கத்தில் பசங்களுக்கு அசிங்கமாகிடும் ... இது ஒரு தன்மான பிரச்சனை :)

சில நேரம் சென்ற வருடத்தில் மீதமான வெடிகளை நைசாய் சேர்த்து கொடுத்து விடுவர். இதற்கு தான் வெடிகளை வாங்கி, வெய்யிலில் காய வைத்து விட்டு வெடிப்பார்கள் சிலர்.

****
நிறைய பேசியாச்சு. உத்தரவு வாங்கிக்குறேன் !

Wish you and your family a happy & Safe Deepavali !

49 comments:

  1. வெடிக்கடை அனுபவம் சுவாரசியமா சொல்லி இருக்கீங்க!
    பட்டாசுகளை பஸ்ல கொண்டு வரக கூடாது,ட்ரெயின் ல கொண்டு வரக்கூடாது,டூ வீலர்ல கொண்டுவரக்கூடதுன்னா எப்படித் தான் கொண்டு வர்றது? தீவுத் திடல் கடைகளில் வாங்கறவங்க எப்படி வீட்டுக்கு கொண்டு போவாங்க!

    ReplyDelete
    Replies
    1. பொதுமக்கள் செல்லும் பஸ் ரயிலில் தான் கொண்டு வரக்கூடாது என நினைக்கிறேன் உங்கள் பைக் அல்லது காரில் கொண்டு வருவதை தடை செய்யவில்லை

      Delete
  2. இனிய பட்டாசு அனுபவங்கள்....

    ReplyDelete
    Replies
    1. டேங்க்ஸ் ஜீவா

      Delete
  3. நெய்வேலியில் எங்கள் வீட்டின் எதிரேயே வெடிக்கடை. நெய்வேலியில் இருந்தவரை ஒவ்வொரு வருடமும் வெடிக்கடையில் எனக்கும் சுவையான அனுபவங்கள். சிவகாசியிலிருந்து வரும் பட்டாசுகளை விற்பதில் நிறைய அனுபவங்கள். இப்போதெல்லாம் பெட்டியில் போட்டிருக்கும் விலை நான்கு மடங்கு! :(

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வெடி வியாபாரம் செஞ்சிருக்கீங்களா ரைட்டு !

      Delete
  4. பட்டாசுன்னாலே கொஞ்சம் பயம் எனக்கு அதனால நீங்க எல்லாம் வெடிங்க நான் வேடிக்கை மட்டும் பார்க்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. உங்க வீட்டு பக்கம் தான் என் மாமனார் வீடு அங்கு தான் தீபாவளிக்கு வர்றோம்

      Delete
  5. பட்டாசு கடை வியாபாரம் தெரிஞ்சிக்கிட்டதுல சந்தோசம். நான் எப்பவும் தஞ்சாவூர் கங்கா பட்டாசுக்கடை ( ரெட்டை கிளி ) வெடி வாங்குறது . அப்புறம் நமக்கு அம்மாப்பேட்டை. நீடாமங்கலம் பக்கத்துல . சென்னைல மடிப்பாக்கம்ல இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. அட உங்க சொந்த ஊர் நம்ம ஊர் பக்கம். இப்ப நான் இருப்பதும் மடிப்பாக்கமே ஒரு முறை அவசியம் சந்திப்போம்

      Delete
  6. ரசித்தேன்.

    ஹ்ம்ம் தொழில் ரகசியம் எல்லாம் இப்ப தான் வெளியே வருது.

    //எனக்கு திருமணம் ஆகி, சென்னைக்கு மாப்பிள்ளையாய் அனுப்பிய பின்//

    ?!?!?!

    ReplyDelete
    Replies
    1. ஊர்ல பாதி ஆம்பளைங்க கல்யாணம் முடிஞ்சு பொண்ணு இருக்க ஊர்ல தான் செட்டில் ஆகுறாங்க. என்னையும் சேர்த்து.

      பையனை தான் கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கிறாங்க. பெண்ணை கல்யாணம் அனுப்பி வைக்கிறது சில நேரம் தான் :)

      Delete
  7. என் மாமா வெடி கடை வைப்பார். அப்பொழுது நாங்கள் சிறுவர்கள். தீபாவளியன்று விடியற்காலை (இரவு கடையடைத்து பஸ் பிடித்து சென்னை வர வேண்டும்) எங்கள் வீட்டுக்குத்தான் மீதி இருக்கும் வெடிகளோடு வருவார். பெரும்பாலான வெடிகளில் பெயரே இருக்காது. வெறும் சிவப்பு காகிதமே சுற்றியிருக்கும். அவர் வேலை சென்னைக்கு மாற்றலானவுடன் தீபாவளி கடையும் நின்று போனது.

    எங்கள் வீட்டில் 10 நாடிகளுக்கு முன்னரே பட்டாசு வெடிப்பது துவங்கிவிடும். எங்கள் அப்பாவிற்கு மிகவும் பிடிக்கும்; தினமும் வாங்கி வருவார். அவர் ஒன்றைக் கூட வெடிக்கமாட்டார். ஆனால், நாங்கள் வெடித்து மகிழ்வதை பார்த்து ரசிப்பார். சற்று வளர்ந்த பிறகு நாங்கள் வெடிக்காமல் தொ.கா ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தால் திட்டவும் செய்வார்.

    அது ஒரு கனா காலம். அந்த நிகழ்வுகளை மீண்டும் அசைப் போடச் செய்ததற்கு நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி சீனி

      Delete
  8. வெடி வியாபாரத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா
    சரியான சமயத்தில் வந்திருக்கும் சரியான பதிவு மோகன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன் சார்

      Delete
  9. வாங்குற ஐடியா இல்லே...

    ReplyDelete
    Replies
    1. பொண்ணுக்கு வெடி வெடிக்கும் விருப்பம் இல்லியா?

      Delete
  10. ஆஹா,வியாபார காந்தமா?தொடர்ந்து வெடிக்கும் வெடி ஓசைன்னா சரி. ஒன்று ஒன்றாய் அப்பப்போ வெடிப்பது எரிச்சல் தான்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அமுதா மேடம்

      Delete
  11. வெடி அனுபவம் சுவாரசியமா இருக்கு.ஆனா இப்ப விக்கற விலையில் பட்டாசு வாங்கவே பயமாக இருக்கு.

    ReplyDelete
  12. அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியம்பெருமாள்.. சந்திரன்.. நியாபகம் இருக்கா? அதே அய்யம்பேட்டை தான் !).
    hello nanbare , KB yoda voor Nannilam pakkathula thothukudi. nannilam pakkathula oru ayyampettai irukku. so he mention this ayyampettai not that ayyampettai.varalatru pizhai. :-))))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? தகவலுக்கு நன்றி

      Delete
  13. நல்ல நினைவுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  14. வெடி அனுபவங்கள் சூப்பர்.. ஆனா அண்ணா இலங்கைல எல்லாம் பெரும்பாலும் தீபாவளிக்கு வெடி கிடையாது.. பெரும்பாலும் கிறிஸ்மஸ் தொடங்கி பொங்கல் வரை பட்டாசு பறக்கும்.. அனுபவம் கலக்கல்.. வெடி மட்டுமல்ல எல்லா உற்பத்தியும் கிட்டத்தட்ட நீங்க சொல்வதை போல தான்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ஹாரி? வருகைக்கு நன்றி

      Delete
  15. வெடிக்கடை வைத்த அனுபவங்களை சற்றே சுருக்கமாக முன்னரும் நீங்கள் பகிர்ந்த நினைவு இருக்கிறது. சுவாரஸ்யமான நினைவுகள். சுற்றுச் சூழலுக்குக் கேடு என இங்கே பள்ளிகள் வலியுறுத்துவதற்கு ஓரளவு பலன் இருக்கிறது. தென்னிந்தியர்களை விட வட இந்தியர்களே பெங்களூரில் அதிகமாக வாங்கி வெடிக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல நியாபகசக்தி உங்களுக்கு. ரெண்டு வருஷம் முன் எழுதினேன் நன்றி

      Delete
  16. பஸ் அல்லது ரயிலில் வெடி வாங்கி செல்வதை பார்த்தால், உடனே பெயிலில் வர முடியாத படி ஜெயிலுக்கு போக வேண்டியது தான் என இந்த வருஷம் திரும்ப திரும்ப டிவி செய்திகளில் சொல்கிறார்கள்.
    இவ்விஷயத்தில் கவனமாய் இருங்கள் !
    >>
    இலவச அறிவுரைக்கு நன்றி!

    ReplyDelete
  17. அப்பவே நீங்க தொழிலதிபர்ன்னு சொல்லுங்க!

    ReplyDelete
    Replies
    1. இல்லியா பின்னே?

      Delete
  18. வெடிக்கடை நினைவுகள் அற்புதம்! அருமையான பகிர்வு! ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  19. Anonymous9:09:00 PM

    வெடிக்கடை அனுபவம்...சுவாரஸ்யம் மோகன்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி ரெவரி

      Delete
  20. அழகான அனுபவங்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன் நலமா

      Delete
  21. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்.. பாதுகாப்பாக வெடி வெடித்து மகிழுங்கள்..

    வெடிக்கடை பத்தின உங்கள் நினைவூட்டல் அருமை!!! வெடி வாங்குபவர்களுக்கு நல்ல டிப்ஸ்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சமீரா மகிழ்ச்சி

      Delete
  22. வெடிக்கடை அனுபவங்கள் நன்றாக இருக்கின்றது.

    வெடி என்றாலே எனக்கு பயம். எங்கவீட்டில் பிள்ளைகள் மத்தாப்புத்தான்.

    இப்பொழுது வளர்ந்தபின் அதையும் விட்டுவிட்டார்கள்.

    ReplyDelete
  23. குடும்ப பொருளாதார நிலையின் தடுமாற்றம் காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு 50 ரூபாய்க்கு மட்டுமே வெடி வாங்கி கொடுப்பார்கள். அது போதாது நூறு ரூபாய்க்கு வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறேன். மிக அதிக வெடி வீட்டுக்கு வந்தது என்றால் அது 2010ல் மட்டும்தான். அப்போது ஒரு பிரபல நாளிதழில் பக்க வடிவமைப்பாளராக இருந்ததால் 1500 ரூபாய் MRP போட்ட பட்டாசு கிப்ட் பாக்ஸ் கிடைத்தது. ஆனால் வேலைக்கு சேர்ந்து 40 நாட்களே ஆகியிருந்ததால் சம்பளம் பெறுவதில் பெரிய போராட்டம் நிகழ்ந்து கடைசியில் தீபாவளிக்கு ஒரு பைசா அந்த நாளிதழ் நிறுவனத்தில் வாங்கவில்லை. (முதல் மாத சம்பளத்தையாவது கொடுத்திருக்கலாம்.) அதனால் அவ்வளவு வெடி இருந்தும் காசு இல்லாததால் என் சந்தோஷம் புஸ்வாணமானது.

    அந்த நாளிதழில் 4 மாதங்கள்தான் வேலை செய்தேன். ஆயுதபூஜை, தீபாவளி, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என்று முக்கியதினங்களில் அங்கே பரபரப்புடன் பணியாற்றியது மனதுக்கு நிறைவளித்ததை மறக்க முடியாது.

    திருவாரூர் சரவணன்

    ReplyDelete
    Replies
    1. திருவாரூர் சரவணன்,

      பழைய நினைவுகள். ஆனந்த் வெடிக்கடை இன்னமும் அங்கே இருக்கா??
      Let us be in touch you can email me

      Delete
  24. தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. மீள் பதிவா!? மலரும் நினைவுகள் போல!!??

    ReplyDelete
  26. saw your interview on Makkal TV, but i could watch only the finishing, about the book recommendation.

    ReplyDelete
  27. இப்போதெல்லாம் பெட்டியில் போட்டிருக்கும் விலை நான்கு மடங்கு! Boxla Rs.1199/- But actual Rs.489/-

    ReplyDelete
  28. அருமையான பதிவு. பழைய நினைவுகளை kindle செய்து விட்டீர்கள்.

    ReplyDelete
  29. எல்லா வருடமும் இந்த பழைய நினைவுகளை பகிர்ந்தாலும் ஒவ்வொரு வருடமும் புதியதாய் படிப்பதைப் போலவே இருக்கிறது.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. வெடிகளை வாங்கி அவை சரியாக வெடிக்காமல் புஸ் ஆனால், அக்கம் பக்கத்தில் பசங்களுக்கு அசிங்கமாகிடும் ... இது ஒரு தன்மான பிரச்சனை :) வெடிகளை வாங்கி அவை சரியாக வெடிக்காமல் புஸ் ஆனால், அக்கம் பக்கத்தில் பசங்களுக்கு அசிங்கமாகிடும் ... இது ஒரு தன்மான பிரச்சனை :) ஹ ஹா ஹா குசும்பு ....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...