Wednesday, April 19, 2017

இருக்கம் தீவு.. முன்பின் பார்த்திராத நண்பர்களுடன் ஒரு த்ரில் பயணம்

ரு ட்ரிப் போகிறோம் என்றால்.. யாரோடு செல்வோம்? நமது குடும்பத்துடன்? நண்பர்களுடன்?

முன் பின் தெரியாத 25 பேருடன் ஒரு ட்ரிப் சென்றால்  எப்படி இருக்கும்?

சென்னை ட்ரெக்கிங் கிளப் பல வருடங்களாக வெற்றி கரமாக இதைத் தான் செய்து வருகிறது !!




மிக குறைந்த செலவில், ஏற்கனவே அவ்விடத்திற்கு சென்ற அனுபவ சாலிகள் guide செய்ய சென்னை ட்ரெக்கிங் கிளப் பல ட்ரெக் ஏற்பாடு செய்கிறது.

அண்மையில் - சென்னையில் இருந்து 100 கி மீ தொலைவில் உள்ள இருக்கம் தீவு என்கிற இடத்திற்கு 28 பேர் கொண்ட குழு சென்று  வந்தோம்.ஏப்ரல் 14 மதியம் துவங்கி மறுநாள் மதியம் முடிந்தது எங்களின் பயணம்

28 பேரில் யார் யாரிடம் கார் உள்ளது என விசாரித்து ஆர்கனைஸர்ஸ் - 7 பேரை காருடன் வரும்படி  கூறியிருந்தனர். மற்றவர்கள் அந்த 7 காரில் ஏறிக்கொள்ள எங்கள் பயணம் இனிதே துவங்கியது



செல்லும் ரூட் சற்று தெரியாத இடம் எனவே ஒரு சில கார்கள் வழி மாறிப்போக ஆர்கனைஸர்ஸ் அவர்களை தொடர்ந்து கண்காணித்து சரியான வழிக்கு  வரவைத்தனர்.

இரவு 8 மணியளவில் ஆரம்பாக்கம் என்கிற ஊரை அடைந்தோம். அங்கிருந்து பேக் வாட்டர்சில் ஒரு மணி நேர படகு பயணம்

28 பேருடன் படகோட்டியும் இணைந்து கொள்ள படகு சவாரி துவங்கியது. அருமையான நிலா வெளிச்சம் ... வேறு எந்த வெளிச்சமும் இல்லை.. நிலா தண்ணீரில் பட்டு நீரின் அழகை கூட்டியது.. மிக லேசாக ஆடும் நீரலைகளை ரசித்த படி பயணித்தோம்

உடன் வந்த நகுல், மினு போன்ற நண்பர்களுடன் அறிமுகமாகி அவர்கள் சென்று வந்த அருமையான பயணங்கள் பற்றி பேசத்துவங்கினோம்

27 வயதே ஆகும் நகுல் - இதுவரை தனியாக மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து - இந்தியாவில் 22 மாநிலங்களை சுற்றி வந்து  விட்டார்.சுற்றி வருவது எனில் மாநிலத்தில் கால் வைத்து விட்டு போவது  அல்ல.அங்குள்ள அனைத்து முக்கிய இடங்களையும் பார்த்து விடுவது !

சிறிது நேரம் நண்பர்களுடன் பேசிய பின் தான் உணர்ந்தேன்.. நானோ, நகுலோ மட்டுமல்ல இந்த  படகில் பயணிக்கும் ஒவ்வொரு நபரும் பயணத்தை மிக தீவிரமாக காதலிப்பவர்கள் தான் !

அடிக்கடி நான் நினைப்பதுண்டு: ஒரு மனிதன் எந்த அளவு பணம் சம்பாதித்துள்ளான் - அவன் ஸ்டேட்டஸ் என்ன ...இவையல்ல ஒரு மனிதனை  தீர்மானிப்பது. வாழும் காலத்தில் அவன் எவ்வளவு மகிழ்வோடு வாழ்ந்தான் என்பது தான் மிக மிக முக்கியமான விஷயம்.. அந்த விதத்தில் பயணத்தை காதலிக்கும் மனிதர்கள் - மிக மகிழ்வான நபர்களாய் இருப்பதை கவனித்துள்ளேன்..

ஒரு மணி நேர பயணத்துக்கு பின் நாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்து விட்டது.  மனிதர்கள் யாருமில்லாத ஒரு தீவு.. அங்கு தான் காலை வரை கழிக்க போகிறோம்..



இறங்கிய உடனே சாப்பிட்டு வேலை துவங்கி  விட்டனர். பார்பேகியூ சிக்கன் சமைக்க  ஏற்பாடுகள்  நடந்தன. சில நண்பர்கள் கற்கள் சென்று எடுத்து வர - தீ மூட்டி சமையலை ஆரம்பித்தனர்.



வெஜ் மட்டும் சாப்பிடுவோருக்கு பன்னீர் மசாலா தயார் ஆனது. சப்பாத்தி மற்றும் சிக்கன் கிரேவி சென்னையிலேயே தயாரித்து எடுத்து வந்து விட்டனர் சரவணன், விக்னேஷ் மற்றும் விஷ்ணு ஆகிய ஆர்கனைஸர்ஸ்..

சாப்பாடு தயார் ஆனதும் பிளேட் எங்கே என கேட்டால், பலரும் பிளேட் கொண்டு வரவில்லை...(எல்லோரும் தட்டு கொண்டு வர வேண்டும் என முன்பே கூறியிருந்தனர்) இருந்த சின்ன சின்ன பிளேட் வைத்து ஒரே தட்டில் பலரும் சாப்பிட்டனர்...

இந்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தே சில மணி நேரம் தான் ஆகிறது.. ஆனால் அதற்குள் ஒரே தட்டில் சாப்பிடும் சூழலை காலம் ஏற்படுத்தி தருகிறது !!

சாப்பாடு துவங்கிய நேரம் துவங்கி கேலி, கிண்டல், கலாட்டா துவங்கி விட்டது. சிலம்பரசன், விக்னேஷ், ராகவ் ஆகியோர் அடித்த இடைவிடாத ஜோக்குகளில் சிரிக்காத நபர்கள் இருக்கவே முடியாது.

பின் கேம்ப் பயர் மூட்டி அரட்டை அடித்தபடி இருந்தோம்.. சிறிது சிறிதாய் தூங்க துவங்கினர்.. ஏற்கனவே அறிமுகமான ஆர்கனைசர்கள் ஒரு ஓரமாய் சென்று அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்...



இந்த பயணம் வரும் வரை எனது மிக பெரிய பிரச்சனை .. இரவு தூக்கம் தான்... அதனாலே தான் இத்தகைய பயணத்தை பலமுறை ஒத்தி வைத்தேன்.. எப்படி ஓபன் ஸ்பேசில் தூங்குவது என்ற பயமும், தயக்கமும் மிக இருந்தது. ஆனால் ஆர்கனைஸர்ஸ் கீழே போட தார்பாய் கொண்டு .வந்திருந்தனர். மேலும் போர்த்தி கொள்ள நான் போர்வை கொண்டு சென்றிருந்தேன்.. எனவே 4-5 மணி நேரம் நிம்மதியாய் தூங்கி விட்டேன்..

காலை எழுந்ததும் பறவைகளை காண .. எங்கள் பயணம் துவங்கியது..

பல வண்ணங்களில் அழகழகான பறவைகள் .. காமிரா கொண்டு வந்தோர்.. அந்த அற்புத தருணங்களை பதிவு செய்த வண்ணம் இருந்தனர்.. பறவைகள் பற்றி தெரிந்தோர் .. அவற்றின் பெயரை அறிமுகம் செய்தனர்..




சற்று தூரம் சென்று படகை ஓரமாக நிறுத்தி விட - நான்கு பக்கமும் வண்ண வண்ண பறவைகளை கண்டு வியந்தோம்..

நாங்கள் பார்த்த பறவைகளின் பெயர்கள்:

1.     Spotted Pelican
2.     Black Headed Gull
3.     Indian Cormorant
4.     Caspian Tern
5.     Whiskered Tern
6.     River Tern
7.     Painted Stork
8.     Pacific Golden Plover
9.     Black Headed Ibis
10. Greater Flamingo
11. Red Wattled Lapwing
12. Brahminy Kite
13. Swift
14. Intermediate Egret
15. Grey Heron
16. Black Tailed Godwit
17. Red Rumped Swallow




பின் படகிலேயே இன்னொரு இடம் வந்து காலை சமையல் தயார் ஆனது. புவ்வா (உப்புமா) என்பதால் மிக சீக்கிரம் தயார் ஆகி விட, மீண்டும் ஒரே பிளேட்டில் பல பேர் சாப்பாடு...

புகைப்படம் எடுத்து கொண்டு, ஒவ்வொருவரும் பயணம் எப்படி இருந்தது என பேசிவிட்டு - படகில் ஆரம்பக்கம் நோக்கி பயணமானோம்..



மொத்த செலவை கணக்கிட்டு ஒவ்வொருவரும் 500 ரூபாய் தரவேண்டும் என்று  கூறினர்.

100 கி மீக்கு மேல் காரில் பயணம், இரு வேலை சாப்பாடு, இரு முறை ஒரு மணி நேர படகு சவாரி, இடை இடையே நொறுக்கு தீனி இப்படி எல்லாம் சேர்த்து 500 ரூபாய் தான் ஒருவருக்கு மொத்த செலவு என்பது சான்ஸே இல்லை ! நாம் குடும்பத்துடன் சென்றால் 4-5 ஆயிரமாவது குறைந்தது ஆகும் !

புது மனிதர்கள்.. அவர்கள் மூலம் தெரிய வரும் .அனுபவங்கள்.. செய்திகள் இவை இப்பயணத்தில் கிடைக்கும் இன்னொரு அற்புதமான விஷயம்..



கரையை அடைந்ததும், காரை எடுத்து கொண்டு மகிழ்வான நினைவுகளுடன் சென்னை நோக்கி பயணமானோம்.

இது சென்னை ட்ரெக்கிங் கிளப்பில் எனது முதல் பயணம்.. இத்தகைய பயணங்கள் இனி அவ்வப்போது தொடர எல்லாம் வல்ல எனது மனைவியை வேண்டி.. இப்பதிவை முடிக்கிறேன் !
***
புகைப்படங்கள்:
நன்றி

சரவணன் 
ராகவ்  
இளங்கோ
யுவராணி
***

இந்த பயணம் பற்றி உடன் பயணித்த மதுமிதா என்கிற பிளாகரின் பதிவை இங்கே வாசிக்கவும் !


7 comments:

  1. Kerala trek poga poratha U2 la post panni irunthinga ,antha trek pogalaya ??

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி ட்ரெக் போனா (வீட்டு) சாமி கண்ணை குத்திடும். வருசத்துக்கு ரெண்டு மூணு தடவை அனுமதி கிடைச்சாலே பெருசு தல !

      Delete
  2. வித்தியாசமான பயணம் ....அருமை ..

    ReplyDelete
  3. கடைசி படம் மிக அருமை.
    //எல்லாம் வல்ல எனது மனைவியை// உண்மை உண்மை.

    ReplyDelete
  4. அனுராதா
    சதீஷ்
    விஸ்வநாத்
    வரதராஜலு

    நன்றி நண்பர்களே

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...