Friday, July 6, 2018

வானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2

டிக் டிக் டிக் -விமர்சனம்

சென்னையை ஒரு asteroid தாக்கி பெரும் உயிர் சேதம் நடக்க போகிறது  - அதனை தடுக்க 5 பேர் கொண்ட குழு வானிற்கு செல்கிறது..அவர்கள் வென்றார்களா என்பதே டிக் டிக் டிக்

Image result for tik tik tik

நல்ல விஷயங்கள் முதலில்: தமிழின் முதல் ஸ்பேஸ் பிலிம் என்று தான் மார்க்கெட்டிங் செய்தனர். அவ்விதத்தில் வித்யாசமான படம். ஹீரோ - ஹீரோயின் உண்டு. அவர்களுக்குள் காதல் இல்லை- அவர்கள் ஜோடியும் இல்லை- அனாவசிய பாடல்கள் இல்லை. அங்கங்கு கிச்சு கிச்சு மூட்டும் காமெடி - சின்ன சஸ்பென்ஸ் (அதன் விடையை கிளை மாக்சிற்கு மிக முன்பே சொல்லி விடுகிறார்கள்)  ....

பிரச்சனை என்னவென்றால்- டிக் டிக் டிக் என்ற பெயருக்கேற்ப அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு சிறிதும் இன்றி மிக நிதானமாக செல்வது தான் !  விறுவிறுப்பாக இருந்திருந்தால் படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும்  !

போஸ்ட்டர் கார்னர்



பிக் பாஸ் -2 

பிக் பாஸ் -1 ஓவியா இருக்கும் வரை பார்த்தேன். இந்த சீசன் சனி, ஞாயிறு பெரும்பாலும் பார்க்கிறேன். மற்ற நாள்  -அவ்வப்போது மட்டும்....

கடந்த வார இறுதியில் விஸ்வரூபம் 2 பாடல் ஒளிபரப்பை பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே ஒரு மணி நேரம் ஓட்டி ......கொலையாய் கொன்றார்கள். கமல் - என்னை பத்தி நானே சொல்ல கூடாது - நீங்க தான் சொல்லணும் என சொல்லிச் சொல்லி - மற்றவரை பேச வைத்து அகமகிழ்ந்தார். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஆட்கள் - கமல் பட பாட்டு நன்றாக இல்லை என்றா சொல்லுவார்கள் ! ஆஹா ஓஹோ என்று அவர்கள் சொன்ன பாட்டு - எதுவும் சொல்லிக்கொள்கிற மாதிரியே இல்லை !

முதல் பார்ட்டில் வரும் "எவனென்று நினைத்தாய்" என்ன ஒரு  அட்டகாசமான பாட்டு. அதனை மறுபடி வேறு ராகத்தில் பாடுகிறேன் - என வாய்க்கு வந்த மாதிரி பாடி வைத்திருக்கிறார்கள்.

சரி பிக் பாஸுக்கு வருவோம்.

பிக் பாஸ் நினைத்தால் - யாரையும் நல்லவராக்கலாம். யாரையும் கெட்டவராக்கலாம். சென்ற வாரம் நித்யாவை வில்லி போல காட்டி விட்டு இவ்வார இறுதியில் கமல் குறும்படம் காட்டியபின் பார்வையாளர்களே  நித்யாவை நினைத்து கர்சீப் எடுத்து கண்ணை துடைக்கும் வண்ணம் செய்தனர்.

துவக்கத்தில் ஐஸ்வர்யாவின் குழந்தை தனம் ரசிக்கும்படி இருந்தது. இப்போது அந்த childishness  எங்கோ காணாமல் போய்விட்டது.

அனந்த் வைத்தியநாதன் - பொன்னம்பலம் இருவரும் பலரிடமும் ஒட்டாமல் - டாஸ்க்குகளில் கலந்து கொள்ளாமல் தள்ளி நிற்கிறார்கள். விரைவில் திரும்ப வந்து விடுவார்கள் என எதிர்பார்க்கலாம்

மஹத் தான் வாழ்கிறார் !

டேனியல் - மும்தாஸ் - யாஷிகா - ஜனனி ... இறுதி கட்டம் வரை வருவார்கள் என நினைக்கிறேன். ஓரளவு சர்ச்சை இன்றி நடப்பதும் matured ஆக பேசுவதும் டேனியல் தான். அவர் 100 நாள் இருப்பார் என்பது நிச்சயம் !

QUOTABLE QUOTE


Every one has some special talent. It is our duty to find ours and use them well.

டிவியில்  படம் - கவிக்குயில்

கவிக்குயில் என்றால் ....உடன் நினைவுக்கு வருவது பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய "சின்ன கண்ணன் அழைக்கிறான்" பாடல் தான். இப்பாடல் படத்தின் மிக முக்கிய பகுதியாக படத்தை நிறைவு செய்யும் பாடலாகவும் இருக்கிறது.

இரண்டு காதல் ஜோடிகள்.. சிவக்குமார் - ஸ்ரீதேவி மற்றும்  ரஜினி - படாபட் (கதாநாயகிகள் இருவரும் இப்போது உயிருடன் இல்லை !)

சிவக்குமார் - ஸ்ரீதேவி காதல் சற்று எல்லை மீற ஸ்ரீதேவி கர்ப்பமாகிறார். சிவகுமார் ஓர் விபத்தில் நினைவிழக்க ஸ்ரீதேவியை பார்த்து  "யார் நீ ?" என்கிறார்.

பணக்கார குடும்பங்களாக சிவகுமார் மற்றும் படாபட் பெண் பார்த்து மணமுடிக்க முடிவு செய்கிறார்கள். மண மேடையில் எங்கோ ஒலிக்கும் சின்ன கண்ணன் பாடலை கேட்டு சிவகுமாருக்கு நினைவு திரும்ப - மாலையை தூக்கி எறிந்துவிட்டு ஸ்ரீதேவி நோக்கி ஓடுகிறார்.

படாபட் அப்பா திருமணம் திடீரென நின்றதால் வேலைக்காரர் ரஜினியை படாபட்டுக்கு தாலி கட்ட சொல்கிறார்.

இரண்டு ஜோடிகளும் இணைய சுபம் !

படம் பற்றி சிறு தகவல் கூட தெரியாமல் பார்த்ததால் -ஓரிரு மணி நேரம் பார்க்க முடிந்தது.(அந்த காலத்திலேயே 2 மணி நேரத்திற்கும் குறைவாய் ஓடக்கூடிய படம் !)

ரசித்த கவிதை

எந்தக் கிளையும் இதுவரை
முறிந்ததில்லை
பறவைகளின்

எடை தாங்காமல்.- வண்ண தாசன்

நீயா நானா

நீயா நானாவில் அதிக மதிப்பெண் பெற்ற கிராமப்புற மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர். கூலி வேலை செய்பவர், விவசாயி என பல்வேறு சாதாரண மனிதர்களின் குழந்தைகள் 1200க்கு 1100க்கு மேல் வாங்கியது ஒரு புறம் இருக்கட்டும்..

இவர்களில் நீட் தேர்வில் தேர்ச்சியுற்றோர் பலர் இருந்தாலும் - மருத்துவம் கிடைக்குமளவு மார்க் வாங்கியது ஒருவர் மட்டுமே.

நீட் இல்லாவிடில் இவர்களில் குறைந்தது 15 பேராவது மருத்துவம் சேர்ந்திருப்பர்.

இதனை பற்றி எழுத்தாளர் சமஸ் மிக அழகாக பேசினார். அரசின் நடவடிக்கைகள் - அரசையே நம்பியுள்ள ஏழைகளை பாதிக்கும்  வண்ணமும், அரசின் உதவி தேவையில்லாத மக்களுக்கே உதவிகள் கிடைப்பதாகவும் அவர் கூறியது சிந்திக்க வைத்தது

இந்த பிரச்சனைக்கு தீர்வு அரசியலில் இருந்து மட்டுமே கிடைக்கும் என்று சொன்னதும் சரியே !

மறுபுறம் பேசிய இன்னொரு கெஸ்ட் - இந்தியாவிலேயே தமிழகம் தான் படிப்பில் முன்னணியில் இருப்பதாகவும் நீட்டில் அதிக பேர் தமிழகத்தில் இருந்து சேராவிடினும் கூட  தமிழகம் கல்வியில் குறைந்து விடாது என்றும் கூறினார்.

நீட் ஏற்படுத்தும் தாக்கம் நமக்கு முழுதாய் புரிய இன்னும் கொஞ்ச காலம் ஆகும் !

**********
அண்மை பதிவு:

காலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள் 

3 comments:

  1. Excellent reviews about movies.

    ReplyDelete
  2. நீண்ட காலத்திற்கு பிறகுவந்து முழுவதும் படித்தேன். சிறப்பான பதிவு, மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. நன்றி விக்னேஷ்

    அமைதி அப்பா: வணக்கம். நன்றி; மகிழ்ச்சி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...