Monday, May 9, 2011

கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் !

கல்யாண சாப்பாடு செலவு குறித்த நண்பன் தேவா கட்டுரையும், அதற்கு மாற்று கருத்து ஒன்றும்...
**
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! (By தேவ குமார்)

ஒரு திருமண பந்தியில் அமர்ந்து இருக்கீர்கள். கொஞ்சம் சாதமும் சாம்பாரும் பரிமாறிவிட்டு, அவ்வளவுதான் என சொல்லி விடுகிறார்கள். ஒரு கூட்டு இல்லை, கறி இல்லை, இனிப்பு இல்லை,ஏன் ரசம், தயிர் கூட இல்லை - எப்படி இருக்கும்? மொய் பணத்தை திரும்ப வாங்கிக்கலாம் என தோன்றும் இல்லையா (என்னது, சாப்பிட்டு பார்த்து சாப்பாடு எப்படி இருந்ததோ அதுக்கு தகுந்த மாதிரி தான் மொய் வைப்பிங்களா? கை கொடுங்க!!)

சமீபத்தில் KV தாமஸ், மத்திய உணவு துறை அமைச்சர் இவ்வாறு சொன்னார் "திருமணத்தில் நிறைய உணவு வீணாவதால், ஒரு விதமான உணவு வகை மட்டுமே பரிமாற வேண்டும் ! இப்படி செய்வதால், குறைந்தது 20% -30% உணவுவீணாவதை தவிர்க்க முடியும். இதற்காக அரசாங்கம் ஒரு சட்டத்தையோ அல்லது கைட்லைன்கலையோ (Guidelines ) கொண்டு வரும்".  இப்படியாக இந்த விஷயம் ஹிந்துவும், அவுட்லுக்கும் கட்டுரை எழுதும் அளவிற்கு போய் விட்டது !!

நான் முதல் முதலில் கலந்து கொண்ட டெல்லி திருமணம் கொஞ்சம் மயக்கம் தர கூடியது. அது ஒரு Government Contractor - வீட்டு திருமணம். பெரிய விளையாட்டு திடலில் பந்தலிட்டு, 32 வகை (பஞ்சாபி, சவுத் இந்தியன், அரபிக், இட்டாலியன் இப்படி போனது லிஸ்ட்!) உணவு பரிமாற பட்டது. ஊறுகாய் கவுன்ட்டர் ஒரு ஊறுகாய் கடை மாதிரி இருந்தது. என்னை அந்த திருமண வீட்டுக்காரர் சவுத் இந்தியன் கவுன்ட்டர்க்கு கூட்டி போய், இந்த தோசை மாஸ்டர் சென்னையில் இருந்து கூட்டி வந்து இருக்கோம், தோசையை சாப்பிட்டு பார்த்து authenticக்கா இருக்கான்னு சொல்லுங்க என்றார். அந்த மாஸ்டரும் நிறைய நெய் போட்டு மசாலா தோசை தர, அந்த இரவு மசால் தோசையோடு நிறைவு பெற்று (32 வகை உணவு இருந்தும்) அந்த மாஸ்டர் என் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டி கொண்டார்.

அப்படி திருமணம் நடத்தும் ஒரு Government contractor - இடம், உங்கள் மகள் திருமணத்தில் ரொட்டியும், ஒரு சப்ஜியும் தான் பரிமாற வேண்டும் என சொன்னால்,அவருக்கு அதை புரிந்து கொள்ளவே இரண்டு நாள் ஆகும்!! அது கூட பரவாயில்லை, தமிழ் திருமணத்தில் ஒரு வகை தான் பரிமாற வேண்டும் என்றால், எதை பரிமாறுவது? இட்லி, சட்டினி? அல்லது தயிர் சாதம்? அல்லது பாயசம் மட்டும்? என்ன கொடுமை சார் இது... ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம், யாரும் சாப்பாட்டை அதிகமா குறை சொல்ல மாட்டாங்க!

ஆனால், இந்த proposal - இல் இருக்கிற கொஞ்சூண்டு காமெடியை புறம் தள்ளி வைத்து, அதில் உள்ள அடிப்படை விஷயத்தை பார்த்தால், அது அவசியமான விஷயமாகத்தான் தோன்றுகிறது... ஒரு திருமணத்தில் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? மேற்கத்திய நாடுகளில் இவ்வளவு விமரிசையாக திருமணத்தை நடத்துவது இல்லையே (ஒரு வேளை , ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை ஒருவர் செய்ய வேண்டிய சாத்தியம் இருப்பதாலோ?) நமது திருமண முறை இத்தனை நீட்டி முழக்கி இருப்பதற்கான காரணம், அந்த காலத்தில் போக்கு வரத்து இல்லை, திருமணத்துக்கு போக, வரவே சில வாரங்கள் ஆகும், எனவே "வந்தது வந்தாங்க கொஞ்ச நாள் இருந்துட்டு போகட்டுமே" என நினைத்து, திருமண சடங்குகளை நீட்டினார்கள். ஆனால், இந்த காலத்திற்கு இந்த முறை பொருந்துகிறதா? திருமண நேரத்தையும், செலவையும் இப்போதாவது சுருக்க வேண்டாமா? இவ்வளவு செலவு செய்வது சரியா? அதுவும் கடன் வாங்கி செலவு செய்பவர்களை பார்த்தால் பாவமாகவும், வீம்புக்காக இப்படி செலவு செய்கிறார்களே என வருத்தம் ஆகவும் இல்லையா?

அதற்காக நான் "அத்தான் வீட்டில் கல்யாணம்... அவரவர் வீட்டில் சாப்பாடு" என்று சொல்லவில்லை. நூறு பேருக்கு மிகாமல், ஒரு நேர விருந்தோடு திருமணத்தை நிகழ்த்துதல் நலம் இல்லையா என்பதுதான் என் கேள்வி. இரண்டு குருவிகள் இணைந்து அழகிய கூடு கட்டுவது பார்க்க எவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் இருக்குமோ அப்படி இருக்கவேண்டும் திருமணமும்... குடும்ப அந்தஸ்து, வறட்டு கௌரவம் (சானியா திருமணத்தில் நாட்டு பிரச்சனையை இழுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?) தவிர்த்து
இரண்டு இளைய உள்ளங்களின் இணைவாக அது நிகழ்ந்தால், சுகம்... !

***********
இன்னொரு மாற்று கருத்து (By மோகன் குமார்)
தேவா அவசியம் யோசிக்க வேண்டிய விஷயம் பற்றி தான் எழுதியிருக்கிறார். ஆயினும் இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

1 . நூறு பேருக்கு மட்டும் அழைப்பு என்பது இன்றைய நிலையில் மிக சிரமம். கணவன்- மனைவி இரண்டு பக்கமும் நெருங்கிய உறவினர், உடன் வேலை செய்பவர், தெருவில் உள்ளோர், சிறு வயது முதல் தொடரும் நண்பர்கள்.. இப்படி அனைவரும் அழைக்க விரும்பும் லிஸ்ட் பெரிது. இது பெண்- மாப்பிள்ளை இரண்டு வீட்டுக்கும் வேறு தனி தனியே சேர்த்தால் இன்னும் அதிகமாகும். (நூறு பேர் மட்டும் தான் அழைக்க வேண்டுமென்றால் டில்லியில் உள்ள தேவா, சென்னையிலிருக்கும் என்னை தன் பிள்ளை திருமணதிற்கு கூப்பிடுவாரா ? :))

2 . இன்று பெரும்பாலானோர் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் பெறுகின்றனர். எனவே தன் குடும்பத்தில் நடக்கும் மிக பெரிய விசேஷமான தன் குழந்தை திருமணத்தில் தெரிந்த அனைவரையும் அழைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

3 . நமது கலாசாரம் சற்று சிக்கலானது. கல்யாண நேரத்தில் உள்ள அதீத
வேலை காரணமாக கல்யாண பத்திரிக்கை தர மறந்ததால் முறிந்து போன உறவுகளும் நட்புகளும் கூட உண்டு என்பதையும் நாம் மறக்க கூடாது.

4 . இன்றைக்கும் நாம் சென்று வந்த கல்யாணத்தில் நடந்த நிகழ்வுகளை மறந்து விடுவோம். ஆனால் அந்த சாப்பாடை மட்டும் மறக்க மாட்டோம். நான் சென்று வந்த திருமணங்களில் எங்கு சாப்பாடு அற்புதமாக இருந்ததோ அதை மனதில் ஒரு Yardstick-ஆக வைத்திருப்பேன். இன்னொரு அற்புத சாப்பாடு அடுத்த சில மாதம் அல்லது வருடங்களில் வந்து தான் அதை beat செய்யும். இது பலருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

5 . ஒரே வகை உணவு எனில் இசுலாமியர் வீட்டு திருமணங்களில் செய்வது போல பிரியாணி தான் செய்ய வேண்டுமோ? அந்த திருமணங்களில் சாப்பிடுவது ஒரே வித உணவு எனினும் திருப்தி ஆக தான் வந்து விடுகிறோம். ஆனால் இந்து திருமணங்களில் அநேகமாய் நான்வெஜ் செய்வது இல்லை.

6. எனக்கென்னவோ இந்த விஷயத்தில் மக்களின் சென்சிடிவ் உணர்வுகள் காரணமாய் அரசு இப்படி ஒரு சட்டம் இயற்றாது என்றே தோன்றுகிறது. ஒரு வேளை சில கைட்லைன்கள் தரலாம். அவை எந்த அளவு பின் பற்றப்படும் என்பது கேள்வி குறிதான் .

நிற்க இவை எல்லாம் இன்னொரு பார்வை இந்த விஷயத்தில் வேண்டும் என்பதால் எழுதப்பட்டவையே.

திருமணங்களில் சாப்பாட்டில் மட்டுமல்ல, மண்டபம், பத்திரிக்கை, உடைகள் போன்ற பல விஷயத்தில் தேவைக்கு அதிகமாக செலவு செய்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருமணத்திற்கு எடுக்கிற உடைகள் கூட அதன் பின் ஒரு சில முறைக்கு மேல் நாம் போடுவதில்லை (உருவம் இருவருக்குமே ரொம்பவும் மாறி போய் உடை பற்றாமல் போய் விடுகிறது). ஆனால் இப்படி ஒரு சில முறை மட்டுமே போடப்படும் உடைக்கு எத்தனை ஆயிரம் செலவு செய்கிறோம்?

 "எவ்வளவு பவுன் நகை போடுவீர்கள்?" என்கிற கேள்வி இல்லாமல் எந்த திருமணமும் இன்றைக்கும் நடப்பது இல்லை. நகை, வரதட்சணை பெண்ணை பெற்றவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது. 

பலரும் தங்கள் வாழ் நாள் சேமிப்பு முழுக்க பெண் திருமணத்தில் செலவழித்து விட்டு பின் அவர்கள் ஓய்வு காலத்தில் கஷ்டப்படுகிறார்கள். என் வீட்டுக்கருகில் ஒரு பெரியவர் சொந்த வீட்டை விற்று, தன் ஓய்வூதியம் முழக்க செலவழித்து தன் இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்தார். இன்று வாடகை வீட்டில் இருந்து கொண்டு கடைசி காலத்தை தள்ள, 65 வயதில் வேலைக்கு போகிறார். 

சாப்பாட்டு செலவு, மண்டபம்,உடைகள் என அனைத்திலுமே நாம் செலவை குறைக்க வேண்டியது அவசியமே. இரு வீட்டாரும் பேசி ஒப்பு கொண்டு நடந்தால் மட்டுமே இது சாத்தியம் என தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

20 comments:

  1. வச்சா குடுமி - எடுத்தா மொட்டை என்கிற ரீதியில் மட்டுமே யோசிக்காமல், moderation என்ற அளவையும் மனதில் வைத்து ஆவன செய்யலாம். முதலில், பகட்டுக்காக எல்லா விஷயத்திலேயும் தகுதிக்கு மீறி செலவு செய்பவர்களையும் செலவு செய்ய தூண்டுபவர்களையும் - ஒரு மாறுதலுக்கு தயார் படுத்தணுமே .... நடக்கிற காரியமா அது! :-(

    ReplyDelete
  2. ரொம்ப சிக்கலான விஷயம் இது மோகன். நான் கூட தில்லி ரிசப்ஷன் பற்றி எழுதி இருந்தபோது ஒருவர் இதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகளைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். ஆடம்பரத்தினை குறைப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே என் கருத்தும்.

    ReplyDelete
  3. நல்லதொரு பதிவு....
    ஆடப்பரத்திற்காக விரயம் செய்வதை தவிர்க்கலாம்.ஆனால், தங்கள் தகுதியை காட்டிக்கொள்ள விரயமாக்குகிறவர்களும் இருக்கிறார்களே....

    ReplyDelete
  4. Anonymous10:55:00 AM

    ரொம்ப சிக்கலான அதே சமயம் சென்சிடிவான விஷயம் அண்ணா இது. தென் தமிழகத்தில் திருமண உணவை வைத்தே பல சண்டைகள் நடப்பது இன்றும் நாம் கேள்விப் படுகிறோம். தேவைக்கு அதிகமாக மீந்து விட்ட உணவுகளை அருகிலிருக்கும் ஆதரவற்றோர், குழந்தைகள் அல்லது முதியோர் இல்லங்களுக்கோ கொடுக்கலாம்.

    ReplyDelete
  5. அளவோடு இருத்தல் நலம் தரும். அந்த அளவு எது என்பது அவரவர் கண்ணோட்டத்தில் மாறபடவே செய்கிறது:(!

    ReplyDelete
  6. ஆடம்பரம் அவசியமில்லை.சும்மா பெருமைக்காவே இப்பொழுது திருமணங்கள் நடத்த படுகிறது. இந்த ஆடம்பரங்களில் பெண்களின் பங்கு தான் அதிகம். பெண்கள் தங்கள் மனப்பான்மையினை மாற்றும் வரை வேறு வழியில்லை.

    ReplyDelete
  7. தங்களின் ஆடம்பரத்தை காட்டுவதாக எண்ணியே இது போன்ற விரயங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது..

    ReplyDelete
  8. Nothing wrong in spending, Junior NTR spend in Crores that money is distributed to Cooks, Decorators, Saree Shops, Drivers and many people get business, it is a chain reaction. If rich people do not spend how people will get business.

    ReplyDelete
  9. தேவகுமாரின் கருத்துகளை வழிமொழிகிறேன். (விருந்தினர் எண்ணிக்கை தவிர) நிச்சயம் உணவு வீணாக்குதலைக் கட்டுப்படுத்த அரசு சட்டம் தேவை. திருமணங்களில் டில்லியில் நடக்கும் ஆடம்பரம் என்னை வாய்பிளக்க வைக்கீறது. கேரளாவிலும் இம்முறை சிறிதுசிறிதாக பரவிவருகிறது. தமிழ்நாட்டில் மேல்தட்டு மக்கள் திருமணங்களில் இருக்காலாமாயிருக்கும்.

    சமீபத்தில் ஒரு மெயில் படித்தேன். அதில் ஜெர்மனியில் ஒரு உணவகத்தில், தேவைக்கதிகமாக உணவு ஆர்டர் செய்துவிட்டு, உண்ணமுடியாமல் பின் மீதம் வைத்ததைக் கண்டித்து, உணவக உரிமையாளரின் புகாரின்பேரில் அரசு அலுவலர் அபராதம் விதித்தார் என்று. அவர் சொன்ன காரணம் “Money may be yours; but the resources are not!!". உண்மைதானே?

    எங்கள் ஊரில், பணக்காரர்-ஏழை பாகுபாடில்லாமல், திருமண விருந்து என்பது, நெய்ச்சோறு-மட்டன் குழம்பு-தாளிச்சா என்றிருக்கிறது. (ஆனால், சமீபகாலமாக சிலர் மீறிவருகின்றனர்). கல்யாண வீட்டை விடுங்கள், தினப்படி சமையலில் சிலர் வீணாக்கும் அளவைக் கண்டால் வரும் கொதிப்பு....

    ReplyDelete
  10. மிக வருத்தற்குரிய விஷயம் உணவுகளை வீணாக்குதல் அது யார் செய்தாலும் அது தவறு தான் எத்தனை பணம் கொட்டிக்குடுத்தாலும் ஒரு மூட்டை அரிசியை உருவாக்க ஒரு விவசாயி படும் பாடு எவருக்கும் தெரியாது

    ReplyDelete
  11. இரண்டு பக்கமும் பார்த்து அழகாக எழுதப்பட்ட கட்டுரை.

    ReplyDelete
  12. என்னை பொறுத்தவரையில் பணம் காசு மிதம் மிஞ்சி இருந்தால் ஆடம்பரம் ஓகே. ஏன் என்றால் அப்படியாவது பணக்காரர்களிடம் உள்ள பணம் வெளியே புழக்கத்திற்கு வரும். நாலு பேருக்கு வேலை கிடைக்கும். ஆனால் இல்லாதவர்கள் தங்கள் விரலுக்கேத்த வீக்கமாக செயல்பட வேண்டும்.

    ஹுஸைனம்மா சொன்னது போல், எனக்கு தெரிந்து லண்டனில் பபே ( buffet ) உள்ள சில ஹோட்டல்களில் நீங்கள் மீதம் வைக்கும் சாப்பாட்டை நிறுத்து அதற்கு 20 % எக்ஸ்ட்ரா சார்ஜ் பண்ணுவோம் என்ற அறிவிப்பு பலகை பார்த்திருக்கிறேன் (ஆனால் யாருக்கும் அப்படி சார்ஜ் செய்து நான் பார்த்தது கிடையாது. அதே சமயம் அப்படிப்பட்ட ஹோட்டல்களில் அதிகம் உணவு வீணாக்குவதையும் நான் பார்த்ததில்லை).

    //நான் சென்று வந்த திருமணங்களில் எங்கு சாப்பாடு அற்புதமாக இருந்ததோ அதை மனதில் ஒரு Yardstick-ஆக வைத்திருப்பேன்.//

    ம்...நான் எல்லாம் சென்று வந்த திருமணத்தையே மறந்து விட்டு, 'என்ன மாப்ளே, எப்ப உனக்கு கல்யாணம்' என கேட்கும் ரகம்.

    ReplyDelete
  13. nalla karuthu

    Nellai P. Nadesan

    NELLAI

    ReplyDelete
  14. நல்ல கருத்துள்ள பதிவு. இந்தப் பதிவுக்கு உண்மையிலேயே எழுத வேண்டுமென்றால் அது ஒரு நீண்ட பதிவாகதான் இருக்கும்.

    என்னைப் பொருத்தவரை வீண் ஆடம்பரம் கூடாது என்பதில் உறுதியுடன் இருப்பவன்.

    பெண்ணைப் பெற்றவர்கள் துன்பப்படுவதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது. அதற்கு தேவையான மாற்றத்தை நம்முடைய எழுத்து மூலம்தான் செய்ய முடியும்.
    வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் இது மாதிரி விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. திருமணம் செய்வது, செய்யாதிருப்பது, ஆடம்பரமாக செய்வது, எளிமையாக செய்வது, எத்தனை பேருக்கு அழைப்பு வைப்பது - இவையெல்லாமே தனிமனித விருப்பங்கள்.

    உணவைப் பொறுத்தவரை எப்போதும் கூடுதலாகவே சமைக்கவேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான். நல்ல ருசியாக சாப்பாடு அமைந்துவிட்டால், அதிகம் சாப்பிடவேண்டும் என்று தோன்றும். விருந்துக்கு வந்தவர் அவ்வாறு கேட்கும்போது இல்லை என்று சொல்வது நிச்சயம் தவறு என்னைப் பொறுத்தவரை.

    ஒரே விதமான சாப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை. அது சமச்சீராக இருக்காது. விருந்துக்கு வந்தவருக்கு அந்த வகை உணவு பிடிக்கவில்லை எனில் \ அல்லது மருத்துவக் காரணங்களுக்காக விருந்தினர் சாப்பிட முடியாதெனில் இன்னும் விசேஷம்:-(

    ஆனால், உணவுப் பொருள் வீணாவது குறித்த கவலை நியாயமானது. ஹுசைனம்மா கொடுத்திருக்கும் ஓட்டல உதாரணம் அருமை.

    just a wild thought, மிச்சமாகும் உணவை ஆசிரமங்களுக்கோ, சிறைக்கூடங்களுக்கோ கொடுக்கலாம். இதன் நடைமுறை சாத்தியம் பற்றித் தெரியவில்லை.

    இப்படிக்கு

    மிக எளிமையாகத் திருமணம் செய்து கொண்ட ஒரு அப்பாவி:-)

    ReplyDelete
  16. நன்றி சித்ரா. சரியாக தான் சொல்லி உள்ளீர்கள்
    **
    வெங்கட் நன்றி. சென்சிடிவ் விஷயம் தான் இது.
    **
    நன்றி வழிப்போக்கன் - யோகேஷ்
    **
    பாலாஜி said
    //தேவைக்கு அதிகமாக மீந்து விட்ட உணவுகளை அருகிலிருக்கும் ஆதரவற்றோர், குழந்தைகள் அல்லது முதியோர் இல்லங்களுக்கோ கொடுக்கலாம்.//
    உண்மை தான் பாலாஜி
    **
    நன்றி ராமலட்சுமி

    ReplyDelete
  17. அமுதா: நன்றி மேடம்.
    **
    # கவிதை வீதி # சௌந்தர்: நன்றி
    **
    மனோ: வாங்க நன்றி
    **
    Arun said
    //If rich people do not spend how people will get business.//
    வித்யாசமான சிந்தனை. நன்றி
    **
    விரிவான கருத்துக்கு நன்றி ஹுசைனம்மா
    **

    ReplyDelete
  18. நன்றி சக்தி.நீங்கள் சொல்வது உண்மையே
    **
    நன்றி ஜனா சார்
    **
    ஆதி மனிதன்: நன்றி
    **
    நன்றி நடேசன்
    **
    அமைதி அப்பா: கருத்துக்கு நன்றி
    **
    நன்றி கோபி.எல்லாம் சொல்லிட்டு கடைசி வரியில் சிரிக்க வைத்தீர்கள்

    ReplyDelete
  19. // இந்த விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? //

    அதான் அம்புட்டையும் நீங்களே சொல்லிப் புட்டீங்களே..!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...