Monday, May 19, 2014

வானவில்- 101 சோடியங்கள் - மோடி- தி. மு. க - கேஸ் லீக்

பார்த்த படம் - 101 சோடியங்கள் (மலையாளம் )

சிறுவர்கள் குறித்த படங்கள் எப்போதும் என்னை ஈர்ப்பவை...மேலும் கூகிள் பிளஸ் -சில் வடகரை வேலன் இப்படம் பற்றி பரிந்துரைத்திருந்தார்.

வித்யாசமான கதைக்களன் தான். வறுமையில் வாடும் ஒரு சிறுவனின் குடும்பம்.... தந்தை வேலை இழந்து - மீண்டும் அதனைப் பெற போராடி கொண்டிருக்கிறார்.   சிறுவனின் பள்ளி ஆசிரியர் அவனுக்கு ஒரு சிறு Project work தருகிறார்... வாழ்க்கை குறித்து 101 கேள்விகள் அவன் எழுதி கொண்டு வந்தால் - 101 ரூபாய் தருவதாக கூற, அந்த 101 கேள்விகளை தேடி அவன் செல்லும் பயணமும், சற்றே நெகிழ வைக்கும் 101 -வது கேள்வியுமே படம்..



உண்மையை முதலில் சொல்லி விடுகிறேன். படம் என்னை பெரிய அளவு கவர வில்லை. மிக மிக மெதுவாக ஒரு ஆர்ட் பிலிம் போல நகர்ந்ததும், ஆங்காங்கு தூங்க வைத்ததுமே காரணங்கள்... ரொம்ப கஷ்டப்பட்டு மீண்டும் மீண்டும் விழித்து தான் பார்க்க வேண்டியிருந்தது. படத்தின் பெரும் மைனஸ் இதுவே.

மெதுவாய் நடந்து வருவது, சும்மாய் அமர்ந்திருப்பது இவற்றையெல்லாம் ரொம்ப நேரம் காட்டும் ஆர்ட் பிலிம் வகையறாவில் லேசாக படம் சென்று சேர்ந்து கொள்கிறது

பொறுமையாய் பார்த்தால் முதலில் சொன்னபடி நிச்சயம் வேறுபட்ட கான்செப்ட் தான். சிறுவன் நன்கு நடிக்கிறான். ஆனால் நம் மனதில் சென்று மிக பெரும் தாக்கத்தை எல்லாம் ஏற்படுத்தவில்லை

சுஜாதாவின் பல கதைகளில் இளமையின் அறியாமையை தொலைத்து பெரியவர்கள் உலகில் நுழையும் தருணம் பற்றிய குறிப்புகள் இருக்கும். இப்படம் சொல்லும் செய்தியும் அதுவே !

இன்டேன் கேஸ் லீக் - எமெர்ஜென்சி !!

ஞாயிறு காலை ஹவுஸ் பாஸ் கேஸ் லீக் ஆகிறது -  இண்டேனுக்கு போன் செய்யுங்கள் என்றார். பில்லில் உள்ள எமெர்ஜென்சி நம்பருக்கு போன் செய்தால் - அது தவறான எண் என்கிறது.  இணையத்தில்,  ஜஸ்ட் டயலில் என எல்லா இடத்தையும் முயற்சித்தாலும் இன்டேன் எமெர்ஜென்சி நம்பர் கிடைக்கவே இல்லை. 

ஒரு நம்பர் இருக்கிறது - அதற்கு போன் செய்தால் நான்கு மணி நேரமாக " நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் பிசி ஆக உள்ளார் - சிறிது நேரத்துக்கு பின் தொடர்பு கொள்ளவும் " என்கிற பல்லவி தான்.. 

வெறுத்து போய் கடைசியில் லோக்கல் மெக்கானிக் கடையில் சரணடைந்து அவர் மூலம் சரியானது 

இன்டேன் எமர்ஜென்சி எண்ணை கூட மக்கள் ரீச் ஆக முடியாமல் வைத்திருப்பது ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் தருகிறது. இது ஞாயிறு என்பதாலா? மற்ற நாட்களிலும் இதே கதையா தெரிய வில்லை !

அழகு கார்னர் 


என்னா பாட்டுடே - காதல் கவிதைகள் படைத்திடும் நேரம்... 

சில பாட்டுகளை கேட்கும் போதே - அதனோடு சேர்ந்து சில இடங்கள் அல்லது சம்பவங்கள் நமக்கு நியாபகம் வந்து விடும். 

நீடாமங்கலத்தில் நண்பன் தேனுவின் வீடு. அற்புதமான மியூசிக் பிளேயர் அமைத்திருந்தான். பெரிய அறை .. அதில் தேனு, மது, கோபி, ஐயப்பன், நான் குழுமி இருப்போம். இந்த பாடலை ஒலிக்க விட்டுவிட்டு விளக்கை அணைத்து  விடுவோம்... 

அடடா ! மாஜிக் ! மாஜிக் ! இளையராஜா இசையில் வயலின்கள் இழைவது மனதை நெகிழ வைக்கும். " இந்த பாட்டை கேட்டால் எனக்கு கண்ணுல தண்ணி வந்துடும் " என்பான் தேனு. "இதுக்கெல்லாம் கண்ணுல தண்ணி வருமாடா " என சிரிப்போம் நாங்கள் ... 

படம் வரும் முன்பே இப்பாட்டை பல முறை கேட்டு விட்டோம். அந்த சில மாதங்களில் - தினமும் எத்தனையோ பாட்டுகள் கேட்டாலும், அங்கிருந்து கிளம்பும் முன் நேயர் விருப்பமாக இப்பாடலை மீண்டும் ஒரு முறை ஒலிக்க விடுவோம்.. குறிப்பாக பாடல் துவங்கும் போது வரும் ராஜாவின் மியூசிக் தான் எங்கள் அனைவரின் விருப்பமாக இருந்தது...

கோபுர வாசலிலே என்கிற இப்படத்தின் அத்தனை  பாடல்களும் சூப்பர் ஹிட் என்றாலும் படம் மரண மொக்கையாகி எங்களை எல்ல்லாம் வருந்த வைததது தனிக்கதை.. 

இன்றைக்கும் மது, கோபி அல்லது தேனுவை காணும்போது "காதல் கவிதைகள் " பாட்டு பற்றி பேச்சேடுத்தாலே  - உடன் ஒரு  புன்னகை அனைவர் முகத்திலும் மலரும்.. 



போஸ்டர் கார்னர்



மோடியின் வெற்றி... 

பா.ஜ. க வெற்றி குறித்து அனைவரும் கருத்து கூறி விட்டனர். நம் பங்குக்கு ஏதேனும் சொல்லாவிட்டால், ரவுடி என சமூகம் ஒப்பு கொள்ளாது.

இத்தேர்தலில் பா.ஜ. க வெற்றி பெற வேண்டும் என்று தான் நானும் நினைத்தேன். கோத்ரா சம்பவம் ஒன்றையே வைத்து அவர் எதிர்ப்பாளார்கள் இது நாள் வரை ஜல்லி அடித்ததை மாற்றி   இனி அவர் ஆட்சியை வைத்து குற்றம் கண்டு பிடிக்கலாம் ( இவர்கள் ஆதரவு அரசியல் வாதிகள் எல்லாம் உத்தம புத்திரர்கள் போல அவர்கள் பேசுவதை கண்டால் சிரிப்பு தான் வரும் ). கோத்ரா சம்பவத்தை பொறுத்தவரை - அதனை மோடி தூண்டி விட்டிருப்பார் என நிச்சயம் நான் கருத வில்லை; ஒரு முதல்வராக அதனை விரைவில் அவர் அடக்க  தவறினார்...

மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல என தனது ஆட்சியில் நிரூபிப்பார் என நம்புகிறேன் ( ராமர் கோவில் பற்றிய கோஷம் எதுவும் இத்தேர்தலில் கிளம்ப வில்லை  .. இல்லையா ?)

எனக்கு மிக பெரிய சந்தோஷம் பா.ஜ. க விற்கு தனிப்பெரும்பான்மை கிடைத்ததும், காங்கிரசுக்கு கிடைத்த மரண அடியும் தான்... பெரும்பான்மை இருப்பதால் முடிவுகள் தைரியமாக எடுக்கலாம் எனினும் இனி மோடியின் சவால் - உள் கட்சியை சமாளிப்பதில் உள்ளது. வெற்றி பெற்ற தினத்தன்று அத்வானி பேசிய பேச்சுக்கு அவருக்கு வட்ட செயலாளர் பதவி கூட தரக்கூடாது என்றே நினைக்கிறேன் (கஷ்டம் தான் !)

தமிழக முடிவுகளும் நிச்சயம் ஆச்சரியம் + அதிர்ச்சியை தந்தன. தி.மு.க பெரிய அளவில் சோர்வடைய வேண்டியதில்லை. சென்ற தி. மு. க ஆட்சியின் போதும் கூட  முதல் 3 ஆண்டுகள் அ .தி.மு.க கதை முடிந்தது என்று தான் பலரும் நினைத்தனர். மாரத்தான் போல கடைசி ரவுண்ட் ஓட்டம் தான் முக்கியம். இதில் முக்கிய விஷயம் அடுத்த முறை வெல்ல வேண்டுமெனில் பா. ம.க. , தே.மு. தி. க போன்ற கட்சிகளுடன் நெருங்கி சென்று கூட்டணிக்குள் கொண்டுவருவதும், விலைவாசி உயர்வு, மின் வெட்டு போன்றவற்றை  எதிர்த்து பெரும் தொடர் போராட்டங்கள் நடத்துவதும் அவசியம் செய்ய வேண்டியவை.  கலைஞர் ரிட்டையர் ஆவதும் கூட உடனடி தேவை தான் (அடுத்த தேர்தலில் அவரை முன்னிறுத்தியா தி. மு. க ஓட்டு கேட்க முடியும் ?).. ஆனால் அது நடப்பது மிக மிக சந்தேகமே !

வாசித்த புத்தகம் - சுஜாதாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் 

புகழ் பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை பிறர் தேர்ந்தெடுத்து தொகுப்பது  வழக்கம். இப்புத்தகம் - சுஜாதா தனது சிறுகதைகளில் சிறந்ததென அவரே செலெக்ட் செய்தவை. அது பற்றி ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார்.

பல வடிவங்களில் கோலோச்சிய சுஜாதாவின் எழுத்து - எல்லா வடிவிலுமே பிடிக்கும் என்றாலும் முதல் இடம் தரணும் என்றால் - அது அவரது சிறுகதைக்கு தான்.

இந்த தொகுப்பில் நான் கவனித்த விஷயம் - ஏராள கதைகளில் ஒரு சோகம் இழையோடுகிறது... குறிப்பாக முடிவு... பொதுவாக சுஜாதா எழுத்தில் இப்படிப்பட்ட உணர்வு எனக்கு என்றும் வந்ததில்லை.. ஆனால் இத்தொகுப்பில் குறைந்தது பாதி கதைக்கும் மேல் சோக உணர்வு மேலோங்கி நிற்கிறது...

இருப்பினும் சுஜாதாவின் எழுத்துக்கள் வழு வழுவென்று வழுக்கி கொண்டு ஓடுகிறது....

சுஜாதாவின் மிக புகழ் பெற்ற கதைகளான நகரம் (மதுரை மருத்துவமனை பற்றியது) பிரயாணி ( ரயிலில் நிகழும் பயணம்) அடங்கிய இத்தொகுப்பு சுஜாதா ரசிகர்களுக்கு நிரம்ப பிடிக்கும் !

நிற்க. முதன் முறையாய் எனது பெண்ணும் கூட இதில் நான்கைந்து கதைகள் வாசித்தாள் !

7 comments:

  1. வண்ண மயமான வானவில்.....

    ReplyDelete
  2. இன்டேன் கேஸ் விஷயமாக நான் கூட இன்று ஒரு தகவல் படித்தேன். சிலிண்டரில் எடை பாடப்பட்டிருக்கும் எழுத்துகளுக்கு அருகில் அதன் காலாவதி தேதி போடப்பட்டிருக்கும் என்று படித்தேன். C 2013, 2014 என்று இருக்கும். இவை பரவாயில்லை. இதற்கு முந்தைய தேதிகளாக இருந்தால் தவறு என்று படித்தேன். என் வீட்டில் இருக்கும் சிலிண்டரில் அந்த வரிகளைத் தேடித் பார்க்கிறேன்... ஊ ஹூம்! கா........ணோம்!

    ReplyDelete
  3. I also like that song very much during my college / school days..

    ReplyDelete
  4. //வெற்றி பெற்ற தினத்தன்று அத்வானி பேசிய பேச்சுக்கு அவருக்கு வட்ட செயலாளர் பதவி கூட தரக்கூடாது என்றே நினைக்கிறேன் (கஷ்டம் தான் !)//

    அத்வானிக்கு மோடியின் விஸ்வரூபம் வயிற்றெரிச்சலை கிளப்பி இருப்பது அவரது சமீப கால பாடி லாங்குவேஜில் தெளிவாக தெரிகிறது (என்னதான் கட்டிப்பிடி வைத்தியம் செய்து பாராட்டினாலும்). ஆனால் அத்வானிக்கு பாராளுமன்ற சபாநாயகர் பதவியும், சில காலம் கழித்து (ப்ரணாப் முகர்ஜிக்கு பிறகு) ஜனாதிபதி பதவியும் தந்து மோடி கௌரவிப்பார் என்பது தற்போது உலா வரும் செய்தி. Let us wait for some more time...

    ReplyDelete
  5. சிலிண்டரில் கேஸ் லீக்காவதற்கு முதன்மை காரணம் அதன் வாய் பகுதியின் உள்ளே இருக்கும் ஒரு சிறிய கேஸ்கட் போலிருக்கும் ரப்பர் வளையம்தான். ஒரு சிறிய ஸ்க்ரூ டிரைவர் உதவியால் அதை எடுத்துவிட முடியும். உங்களிடம் உள்ள காலி சிலிண்டரில் இருந்து மற்றொரு ரப்பர் வளையத்தை எடுத்து மாற்றி விட கேஸ் லீக்காவதை தடுக்கலாம்.

    ReplyDelete
  6. அய்யாச்சாமி கார்னர் எங்கே!?

    ReplyDelete
  7. Indane Emergency no situation is true . I tried the no given by my dealer , same blood i got . One number is switched off and another is not in use . Luckily my neighbor had the delivery persons phone no , we called and he attended it quickly .

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...