Saturday, January 5, 2013

டிராபிக் & டயமண்ட் நெக்லஸ்- இரு அற்புத மலையாள படங்கள்- விமர்சனம்

டிராபிக் - நம் எல்லோருக்கும் தெரிந்த கதை தான். இறக்கும் தருவாயில் தன் இதயத்தை தந்த ஹிதேந்திரா - சென்னை டிராபிக்கில் இருபது நிமிடத்தில் பேய் வேகத்தில் வண்டி ஓட்டி சென்று இருதய மாற்று வெற்றிகரமாய் நடத்திய குழு.. இவர்களின் கதை தான் டிராபிக்.

கதையின் மையப்புள்ளியும் நமக்கு தெரியும். முடிவும் நமக்கு தெரியும். இருந்தும் திரைக்கதை மூலம் நகம் நடிக்க வைத்து விடுகிறார் இயக்குனர். அட்டகாசம் !
நடுவில் நம்ம ரம்யா !


ஏழெட்டு பாத்திரங்கள் அறிமுகத்துடன் படம் துவங்கும் போது நமக்கு சற்று குழப்பமாக தான் உள்ளது.ஆனால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த குழப்பம் போய் கதையில் ஒவ்வொருவருக்கும் என்ன பங்களிப்பு என புரிய ஆரம்பித்து விடுகிறது

செப்டம்பர் 16- சாலையில் ஒரு விபத்து நிகழ்கிறது. டூ வீலர் பில்லியனில் அமர்ந்து சென்ற வாலிபன் கீழே விழுந்த மண்டையில் அடிபட்டு நினைவை இழக்கிறான் அவனது தந்தையும் ஒரு மருத்துவர். ஒரே பையன் என்பதால் காப்பாற்ற சொல்லி கெஞ்சுகிறார்.

இன்னொரு புறம் பாலக்காட்டில் பிரபல நடிகர் ரகுமானின் மகளுக்கு மிக அவசரமாக இருதயம் தேவைப்படுகிறது. பெரிய இடத்து பிரஷர் எல்லாம் தந்து கேட்டாலும் பையனின் தந்தை " என் மகனை அவரசமாய் கொல்ல நான் தயார் இல்லை" என்கிறார். பின் அவர் மனம் மாறி ஒப்பு கொள்ள இருதயத்தை மூவர் அணி எடுத்து கொண்டு பயணமாகிறது

இதில் டிரைவராக செல்பவர் சீனிவாசன். போலிசாக இருந்து லஞ்சம் வாங்கி டீ ப்ரோமோஷன் ஆனவர். இதனால் அவர் பெண் கூட சரியே பேசாமல் இருக்க, இந்த விஷயத்தில் நல்ல பெயர் கிடைத்தால் தன் மேல் உள்ள கறையை அழிக்கமுடியும் என தைரியமாக இறங்குகிறார். இன்னொருவர் இறந்த பையனுக்கு ஓட்டிய நண்பன். மூன்றாம் நபர் ஒரு டாக்டர்

மிக வேகமாக செல்லும் கார் திடீரென காணாமல் போகிறது அது என்ன ஆனது சரியான நேரத்தில் இருதயம் சென்று சேர்ந்ததா என்பது க்ளைமாக்ஸ்.

படத்தில் பல பாத்திரங்கள் மனதில் நிறைகின்றன.

கார் ஓட்டி செல்லும் சீனிவாசன் பாத்திரம் மிக இயல்பாய் நம்மை வசீகரிக்கிறது. தவறு செய்யும் ஒவ்வொரு மனிதனுக்கும் திருந்தி வாழவும் மீண்டும் தன்னை நிரூபிக்கவும் வாய்ப்பு உண்டு என்பது இவர் பாத்திரம் மூலமாக சொல்லப்படுகிறது. இதனாலேயே உடன் வரும் டாக்டர் பெரும் தவறு செய்யும்போதும், அவரை மன்னித்து மீண்டும் அவருடனே பயணிக்கிறார்.

இறந்தவனுக்கு பைக் ஓட்டிய நண்பன் " என்னால் தான் நண்பன் இறந்தானா?' என்ற குற்ற உணர்வுடன், நண்பனின் இதயம் நல்லபடியாக செல்லவேண்டுமென மிக கஷ்டப்பட்டு உதவுகிறான். ஓடும் காரிலிருந்து குதித்து ஓடி டிராபிக்கை சரிசெய்வது சினிமாடிக் என்றாலும் ரசிக்க முடிகிறது

இறந்த இளைஞன் தந்தையாக வருபவர் மிக அருமையான நடிப்பு. அவனது இதயம் எடுக்கப்படும் போது மனைவியை காரில் அழைத்து கொண்டு தூரமாய் போய் விடுவதும், அவனிடம் இதயம் எடுக்கப்பட்டது என்ற தகவல் சொல்ல வரும் போனை எடுக்காமலே பேசாமல் அமர்ந்து இருப்பதும் நெகிழ்ச்சி

கமிஷனர் ஆக வரும் நபரும் அருமையாய் செய்துள்ளார்.

படத்தில் வில்லன் என்றால் அது நடிகராக வரும் ரகுமான் தான். நடிகர்களுக்கு உள்ள திமிர் "அவர்கள் இதயம் தரவில்லை" என்றதும் " என் மகள் என்று சொன்னியா?" என கேட்கும் வேகம். டிவியில் பேட்டி எடுக்கும் போது மகள் பற்றிய கேள்விகளுக்கு அவளிடமே கேட்டு பதில் சொல்லும் குள்ளநரித்தனம் ...என நம் திட்டுகளை ஒட்டு மொத்தமாய் வாங்கி கொள்கிறார்

காதல் சந்தியா, சின்ன தலைவி ரம்யா நம்பீசன் போன்றோர் சிறு பாத்திரங்களில் வந்து போகிறார்கள். நெகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வரவைக்கும் காட்சிகள் பல உண்டு. உண்மையான அன்பிற்கும், நல்ல சினிமாவை ரசிக்கவும் மொழி தேவையில்லை என மீண்டும் ஒரு முறை உணர்த்துது படம் !

நிற்க. தற்சமயம் தமிழில் ரீ மேக் ஆகும் இப்படத்தில் வாகன டிரைவராக சேரன் (ஐயய்யய்யோ !) போலிஸ் கமிஷனர் பாத்திரத்தில் சரத்குமார், நடிகராக பிரகாஷ் ராஜ், அவர் மனைவியாக ராதிகா நடிக்கிறார்கள். ராடன் டிவி படத்தை தயாரிக்கிறது ! விரைவில் தமிழிலும் வெளிவருகிறது டிராபிக் !

********
டயமண்ட் நெக்லஸ்

தமிழ் படங்களை முதல் நாள் பார்த்தால் மட்டுமே அதன் கதை என்னவென்று தெரியாமல் பார்க்க முடியும். அடுத்தடுத்த நாள் என்றால் நிச்சயம் ஏதேனும் ஒரு விமர்சனம் மூலம் கதை தெரிந்திருக்கும். 2012-ல் வெளியான இந்த மலையாள படம் ரிலீஸ் ஆகி பல மாதங்கள் கழித்து பார்த்த போதும், கதை சுத்தமாக தெரியாததால் செம சுவாரஸ்யமாக, சில நேரம் நடுக்கமாக கூட இருந்தது


கதையை சொல்லி சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்பவில்லை. சில பொதுவான விஷயங்கள் மட்டும் பகிர்கிறேன்

படம் பார்த்து முடித்து நெடுநேரம் மனதில் ஒலித்த கேள்வி : மலையாள சினிமா எப்படி இத்தகைய வித்யாசமான கருக்களை எடுக்கிறது ! ஏன் தமிழில் அது முடிவதில்லை ?

ஹீரோவே நெகடிவ் பாத்திரத்தில் வருவதும், படத்தின் ஜீவனாக இருக்கும் நான்கைந்து பெண் பாத்திரங்களும் மிக இயல்பாக இருப்பதும் அற்புதம்.

ஹீரோ இயக்குனர் பாசிலின் மகன். அந்த பாத்திரத்துக்கு செமையாக பொருந்துகிறார். ஒவ்வொரு பெண் பாத்திரமும் கதையை சுவாரஸ்யமாக்கி விடுகிறது. படம் முழுதும் தமிழில் பேசும் அந்த நர்ஸ் பாத்திரம் நமக்கு படத்தை மிக நெருக்கமாக்குகிறது. ஒரு மாறுதலுக்கு தமிழர்களை நல்லவர்களாக காட்டுகிறார்கள் !

டயமண்ட் நெக்லஸ் வைத்திருக்கும் அந்த நோயாளி பெண் பாத்திரம் அரிதான ஒரு படைப்பு.

படம் எப்படி முடியப்போகிறதோ என ஒரு பதைபதைப்பு பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இருக்க, மிக நிறைவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாய் முடிக்கிறார்கள் (இதே படத்தை நம்ம பிரபு சாலமன் இயக்கியிருந்தால் குறைஞ்சது ரெண்டு பேரை காலி பண்ணி, நெஞ்சை பிசைந்து முடிச்சிருப்பார் )

அவசியம் டயமண்ட் நெக்லசை ஒரு வித்தியாச அனுபவத்துக்காக பாருங்கள் !

17 comments:



  1. //கதையை சொல்லி சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்பவில்லை.//

    எப்படி இருந்தாலும் நாங்கள் இந்தப் படம் பார்க்கும் வாய்ப்பு மிக, மிகக் குறைவு! சொன்னால்தான் என்ன! :))

    ReplyDelete
    Replies
    1. கதையை ரொம்ப ஈசியா சொல்ல முடியாது ஸ்ரீராம் சார் ; ரொம்ப பெரிய கதை !

      வேணும்னா இங்கு படிச்சு பாருங்க

      http://en.wikipedia.org/wiki/Diamond_Necklace_(film)

      Delete
  2. diamond necklace -நிலா மலரே நிலா மலரே, கனா காணும் ....- இந்த பாடலை கவனித்தீர்களா? அருமையான மேலோடி ., அந்த பய்யன் டைரக்டர் பாசிலின் பையன் , தெரியுமோ

    ReplyDelete
    Replies
    1. ஷர்புதீன்; மலையாளம் அதிகம் புரியாது; அதனால் பாட்டை அதிகம் ரசிக்க முடியலை

      பையன் பாசில் அவர்கள் மகன் என விமர்சனத்திலேயே சொல்லிருக்கேன் பாருங்க !

      Delete
  3. மலையாளப்படங்கள் எப்பவுமே வித்தியாசமான கதைக்களன்களுடன் வந்து அசத்தும். இந்தப்படமும் வாய்ப்புக்கிடைத்தால் பார்க்கலாம். நல்ல ஒரு படத்தைபற்றிய பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பூந்தளிர்

      Delete
  4. இரண்டு நல்ல படங்களைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி .பார்ப்பதற்கு முயற்ச்சிக்கிறேன் .நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க எழில் ; நன்றி

      Delete
  5. நல்லதொரு பகிர்வு! சன் டிவியில் ட்ராபிக் ட்ரைலர் (தமிழ்)பார்த்தேன்! படம்வந்ததும் பார்த்துவிட வேண்டியதுதான்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? டிரைலர் அதற்குள் வருதா? நன்றி

      Delete
  6. // சின்ன தலைவி ரம்யா நம்பீசன்//

    ஹும்ம்ம் :)

    ReplyDelete
    Replies
    1. ரகு உங்களுக்கேன் பொறாமை? இதையாவது அப்படியே விட்டுடுங்க !

      Delete
  7. தமிழகத்தில் நடந்த ஒரு கதையை கேரளாவில் படம் எடுத்து உள்ளார்கள்.இங்கே நடந்த சம்பவத்தை காட்ட அவர்களிடம் ரீமேக் உரிமை வாங்கி தயாரிக்கிறார்கள் என்னே தமிழ் சினிமா.
    ஏன் சார் சேரன் என்றால் அவ்வளோ பயமா?

    ReplyDelete
    Replies
    1. சீன் கிரியேட்டர்: சேரன் நல்லா தான் நடிப்பார் குறிப்பா தவமாய் தவமிருந்து ரொம்ப பிடிக்கும்.

      அந்த டிரைவர் பாத்திரம் மெலோ டிராமாவாய் போக வாய்ப்பு அதிகம்; சீனிவாசன் ரொம்ப அருமையா அண்டர் பிளே செய்திருந்தார் நம்ம ஆளு ஏகப்பட்ட எக்ஸ்பிரஷன் உடன் அழுது கிட்டே வண்டி ஓட்டுவாருன்னு நினைக்கிறேன் ; அதான் பயமா இருக்கு

      Delete
  8. நான் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பார்த்த மலையாளப் படங்கள் இவை.
    1)Thatathin marayathu,2)22 female kottayam,3)Run baby Run,4)Ordinary,5)Indian Rupee,6)Masters,7)Spirit,8)Unnam 9)the king and the commissioner 10)christian brothers
    11)Diamond Necklace
    //ஒரு மாறுதலுக்கு தமிழர்களை நல்லவர்களாக காட்டுகிறார்கள் !//
    நான் மேற்சொன்னப் படங்கள் அனைத்திலும் ஒருக் காட்சியிலாவதுத் தமிழ்/தமிழர் பத்தி இருக்கு.ஆனா எந்தப் படத்திலயும் கேவலமாகக் காட்டவில்லை(என் பார்வையில்). சொல்லப் போன்னா நல்லவிதமாகத்தான் காட்டியிருக்கிறார்கள். நிலைமை மாறி வருகிறதுப் போலும்.
    Spirit,indian rupee,22 female kottayam பாத்துட்டீங்களா? இல்லை எனில் லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க. ஒருவேளை ரீமாகலிங்கல் என்று இன்னொருத் தலைவி கிடைக்கலாம் :) :)

    ReplyDelete
    Replies
    1. அடடா நிறைய நல்ல படங்கள் பரிந்துரைத்துள்ளீர்கள்; முடிந்த போது அவசியம் பார்க்கிறேன் நன்றி ees !

      Delete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...