Friday, January 18, 2013

பாண்டி- மியூசியம், படகு சவாரி, காகித தொழிற்சாலை அனுபவம் -நிறைவு பகுதி

சுண்ணாம்பாறு படகு குழுமம்

பாண்டியிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுண்ணாம்பாறு படகு துறைக்கு ஒரு நாள் டூரில் அழைத்து செல்கிறார்கள். பேக் வாட்டர் படகு சவாரி எப்படி இருக்கும் என அறிய அவசியம் இதில் பயணிக்கலாம்.

இருபது நிமிட பயணம் எனில் நபருக்கு ஐம்பது ரூபாய். அதுவே நாற்பது நிமிடமெனில் நூறு ரூபாய் - ஆனால் இதில் அதிக தூரம் பயணிக்கலாம். மேலும் நடுவில் இருக்கும் மணல் திட்டில் இறக்கி விட்டு, அங்கு சற்று பேசி அலைகளில் கால் நனைத்து விட்டு பின் மறுபடி வரலாம். நாங்கள் ஒரு நாள் டூர் என்பதால், பல இடங்கள் கவர் செய்யணும் என - அனைவரும் இருபது நிமிட பயணம் தான் சென்றோம்

படகு பயணம் பல வித மனிதர்களை அவர்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை காட்டுகிறது. ஓர சீட்டுக்கு போட்டியிடும் மனிதர்கள், மனைவியை எப்போதும் போட்டோ பிடிக்கும் ஹனி மூன் கணவன், இறுகிய முகத்துடன் போட்டை இயக்கம் டிரைவர்... இப்படி..
 

கடலுக்கு நடுவே ஒரு பறவை நீரில் தலையை அமிழ்த்தி , அமிழ்த்தி வெளியே வந்த காட்சி அவ்வளவு அழகாய் இருந்தது. என்னை மறந்து ரசித்து கொண்டிருந்தேன். காமிரா கையிலிருப்பது சற்று தாமதமாய் உறைக்க , போட்டோ எடுக்கும் முன் போட்டும் நகர்ந்து விட்டது. பறவையும் காணும்.

என்னுடன் பஸ்சிலும் அந்த போட்டிலும் வந்த பத்து பேர் கேரளாவில் இருந்து வந்தவர்கள். சென்ட்ரல் எக்சைஸ் துறையில் இருப்போர் ஒரு டிரைனிங்கிற்காக வந்ததாகவும் , அப்படியே ஒரு நாள் இங்கு சுற்றி பார்ப்பதாகவும் சொன்னார்கள். டிரைனிங் இருந்த இரு நாட்களும் மாலையில் அங்கிருந்த கடைகளில் ஷாப்பிங் மற்றும் பீச் சென்று வந்துள்ளனர். கூட ஒரு நாள் தங்கி பாண்டியில் முக்கிய இடங்களை பார்த்து பின் ஊருக்கு செல்கின்றனர். 
 

பாண்டியில் சமீபமாய் ரவுடியிசம் அதிகம் ஆகி விட்டதாக சொல்லப்படுகிறது. படகு குழுமம் அருகே உள்ள இந்த பாலத்தில் தான் சமீபத்தில் பெரிய க்ரைம் சம்பவம் நடந்துள்ளது. ஒரு கைதியை ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு போலிஸ் அழைத்து செல்லும் போது இந்த பாலத்தில் தான் கையெறி குண்டு வீசி அந்த போலிஸ் ஜீப்பை தாக்கி, அந்த கைதியை கொன்றுள்ளனர் எதிர் கோஷ்டியினர்.
********
படகு குழுமம் அருகே நிறைய இளம் பெண்கள் ஓவியம் வரைந்து கொண்டிருந்தனர் என்ன என்று விசாரித்த போது, ஒரு சமூக சேவை நிறுவனம், இவர்களுக்கு ஓவிய பயிற்சி அளிப்பதாகவும், மாதம் ஒரு முறை பல டூரிஸ் ஸ்பாட்களுக்கு இவர்களை அழைத்து சென்று அந்த சூழலை இவர்கள் ஓவியம் வரைய வைப்பதாகவும் சொன்னார்கள்.
 
படகு சவாரி செய்யும் இடத்தில் மகிழ்ச்சியாக ஓவியம் வரைகிறார்கள் 

இங்கு இருந்த போது ஊரிலிருந்து ஒரு போன். பள்ளிக்கு பெண்ணுடன் பைக்கில் சென்ற மனைவி வண்டி சாவியை வண்டி பாக்சிற்குள் வைத்து பூட்டி விட்டார். வண்டி சாவியின்றி தவித்து கொண்டிருக்க, நான் தொடர்ந்து கொஞ்ச நேரம் அவர்களுக்கு போன் பேச வேண்டியதாய் இருந்தது. எனக்கு தெரிந்த ஒரு ஆட்டோ காரருக்கு அங்கிருந்தே நான் போன் செய்ய, அவர் பள்ளிக்கு சென்று, வண்டி பாக்சை எப்படியோ திறந்து சாவியை வெளியே எடுத்து தந்து உதவினார். பஸ்சிலும் பின் போட்டில் பாதி நேரமும் இதே டென்ஷனில் போனது. அங்கு பிரச்சனை சரியானது என்று தகவல் வந்ததும் தான் மனம் நிம்மதியானது. வெளியூரில் இருக்கையில் வீட்டில் பிரச்சனை என்றால் மனம் இப்படித்தான் ஆகிவிடும். யாருக்கும் இது பொதுவான உணர்வு தான்

போட்டிங் செல்லும்போது எடுத்த வீடியோ :




இந்த இடத்தில் சிறுவர்கள் விளையாட ஒரு பார்க் மற்றும் அதில் பலூன் சறுக்கல் உள்ளிட்ட பல விளையாட்டுகள் உள்ளன
*********
மியூசியம்

நான்கைந்து விதமான நாகரீகங்களின் சாம்பிள்கள் இந்த மியூசியத்தில் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்த வரை சோழர் கால நாகரிகம், பின் பாண்டியை ஆண்ட பிரன்ச்சு நாகரிகம் இவற்றை இங்கு அறிய முடிகிறது

டெர்ரகொட்டாவில் செய்த சில பொருள்கள், Beads பற்றி அறிவது எப்படி, அவற்றை படிப்பது எப்படி, அரிக்கன்மேடு என்கிற இடம் குறித்த வரலாறு, கிருஷ்ணதேவராயர் - அவரது மந்திரி அப்பாஜி ராவ் குறித்த சில தகவல்கள் - பொருட்கள், பழங்கால பிளேட்டுகள், பாத்திரங்கள், கற்கள் போன்றவை இங்கு பார்க்கலாம். நான் கவனித்தவரை வெளிநாட்டினர் தான் இத்தகைய விஷயங்களை மிக கூர்ந்து கவனித்து ரசிக்கின்றனர். அதிலும் ஒரு நாள் டூரில் நாம் சென்றால் இவற்றை காண அவர்கள் தரும் அரை மணி நேரத்தில் விரைவாக தான் சுற்றி வர முடியும்

இதற்கு மிக அருகிலேயே தான் கவர்னர் மாளிகை இருக்கிறது. சென்னையிலுள்ள கவர்னர் மாளிகையான ராஜ் பவனுடன் இதை ஒப்பிடவே முடியாது. இது வெறும் ஐயாயிரம் Sq Feet மட்டும் தான் இருக்கும் என்கிறார்கள்  

காகித தொழிற்சாலை 

அரபிந்தோ காகித தொழிற்சாலைக்கு அடுத்து நாங்கள் சென்றோம்.

தமிழ் சினிமாவில் மட்டுமே கண்ட "வேலை காலி இல்லை" என்கிற போர்டு இங்கு மாட்டப்பட்டிருபதை கண்டேன். சென்னையில் கூட எங்கும் இந்த போர்டு மாட்டி நான் பார்த்ததில்லை (அட்லீஸ்ட் நான் பாக்கலீங்கோ !)

காகிதம் தயாரிக்கப்படும் முறையை செய்து காட்டினர் : திருப்பூரில் இருந்து வரும் பனியன் மெட்டீரியலை துகள் துகளாக செய்து தண்ணீரில் ஊற வைக்கிறார்கள். பின் அதனை நன்கு கிரைனட் செய்து அங்குள்ள பெரிய டியூப் மூலம் செலுத்துகிறார்கள். இந்த mesh -ஐ ஒரு பிளேட் மேல் வைத்து ஒரே அழுத்து அழுத்தி விட்டு எடுத்து ஒரு கம்பளி தனி மேல் வைத்து காய வைக்கிறார்கள். கம்பளி மேல் வைக்கும் போது ஈரம் முழுதும் உறிஞ்சப்படுகிறது. பின் வெய்யிலில் சிறிது நேரம் காய வைக்கிறார்கள்

அடுத்த அறையில் ஒருவர் வெவ்வேறு நிற பெயிண்டுகளை பிரஷ் வைத்து தண்ணீரில் கரைக்கிறார் (ஏறக்குறைய வரைகிறார்) சென்ற அறையில் தயாரான பேப்பரை இந்த கலர் தண்ணீருள் அழுத்த அந்த வண்ணங்கள் இதில் டிசைன் ஆக ஒட்டி கொள்கிறது. பின் அது காய வைத்த பின் அந்த காகிதம் தயாராகிறது இது தான் கிப்ட் தாளாக நாம் பயன்படுத்துவது !

இங்கு தயாராகும் கிப்ட் தாள்கள் அடுத்த அறையில் ஒரு ஷூ ரூம் போல் வைத்துள்ளனர். எங்களில் சிலர் இவை கொஞ்சம் வாங்கினோம் மற்றபடி இந்தியாவில் இவை அதிகம் விற்பனை ஆவதில்லையாம். பெரும்பாலும் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இவை ஏற்றுமதி ஆகிறதாம். பொதுவாய் காகிதங்கள் மரத்தில் தயாராகும் என்றும் இங்கு தான் காட்டனில் தயாராவதால் இவை சற்று காஸ்ட்லி என்றும் கூறினர்.

****
பாண்டி - பயண துணுக்ஸ் 

## அய்யாசாமி கல்யாணம் அட்டண்ட் செய்கிறேன் என்ற பெயரில் பதிவு தேத்த போனாலும், அவர் மனைவி அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து காலை சாப்பாட்டுடன் - கணவர் கொறிக்க முறுக்கு போன்றவை சுட்டு தந்தார். இப்படிப்பட்ட "ஆதரவான" மனைவி இருக்கும் வரை அவர் தினம் மொக்கை போடுவதை தடுக்கவே முடியாது !


## சென்னையிலிருந்து பாண்டி செல்ல ECR ரோடு வழியே ஒரு ரூட்டும் , தாம்பரம் வழியே இன்னொரு ரூட்டும் உள்ளது. பலரும் ECR ரூட்டினை prefer செய்கிறார்கள். சாலை நீட்டாக இருப்பதுடன், வழியெங்கும் வேடிக்கை பார்க்கவும் ஓரளவு விஷயங்கள் உண்டு ! குறிப்பாக பாண்டிக்கு சற்று முன் ஒரு அழகிய பெரிய தென்னந்தோப்பு கண்களை கவர்கிறது. அதில் ஏராளமான தென்னை மரங்கள் ஏழு போல வளைந்திருப்பது செம சுவாரஸ்யமாய் உள்ளது !

காந்தி ரோடில் இருக்கும் அருமையான பேக்கரி; காந்தி சாலையில் இருக்கும் இக்கடையில்  சில ஸ்பெஷல் உணவு பொருட்கள் பரிந்துரைத்து வாங்கி தந்தார் நம் நண்பர் வரதராஜலு 

மேலே உள்ள பேக்கரியை ஒட்டி உள்ள தெருவில் உள்ளது இந்த அருமையான இனிப்பு கடை; இங்கு ஜிலேபி மற்றும் கை முறுக்கு மிக புகழ் பெற்றது. அவையும் வாங்கி வந்தோம் 

** சென்னை டு பாண்டி 97 ரூபா டிக்கெட். கண்டக்டர் நூறு ரூபா வாங்கிட்டு பாக்கி அப்புறம் தர்ரேன் என்றார். அய்யாசாமி உடனே ஏழு ரூபா தேடி எடுத்து கொடுத்து " பத்து ரூபா திரும்ப தாங்க" என்றார். கண்டக்டர் அதையும் வாங்கி கொண்டு " பத்து ரூபா அப்புறம் தர்றேன். சில்லறை இல்லை" என்றதும் அய்யாசாமி காண்டாகிட்டார். கண்டக்டர் இங்கும் அங்கும் சென்று வரும்போது " சார் சில்லறை பாக்கி.." என்றும் "அந்த பத்து ரூபா " என்றும் வடிவேலு மாதிரி கேட்க கண்டக்டர் ஒரு வழியா இவர் நச்சரிப்பு தாங்காம 10 ரூபா குடுத்து கணக்கை முடிச்சார். அப்புறம் தான் அவர் மேலேந்து கண்ணை எடுத்து வெளியே வேடிக்கை பார்த்தார் அய்யாசாமி !

** ஒவ்வொரு முறையும் காலை நேர பஸ் பயணம் வயிற்றை பதம் பார்த்துடுது. எதுவும் சாப்பிட்டால் குமட்டும் என சாப்பிடாமல் போனால் அதுவும் புரட்டுது. சாப்பிட்டாலும் நிச்சயம் பிரச்சனை தான் ! பஸ்ஸில் இருந்து இறங்கி சற்று நேரம் ஒரு மாதிரியா தான் இருக்கும் ! லேசா வாமிட் பண்ணிட்டா சரியா போயிடும் !

## பாண்டி செல்லும் வழியில் ஒரு பாடாவதி இடத்தில் சாப்பிட நிறுத்துகிறார்கள். அங்குள்ள டாய்லெட் மகா கேவலமாய் இருக்கு ! தண்ணீரே சுத்தமாய் இல்லை ! வழக்கமாய் வரும் மக்கள் இது தெரிந்தோ என்னவோ பஸ்ஸை விட்டே இறங்காமல் பஸ்ஸில் அமர்ந்தே இருந்தனர் அந்த ஹோட்டலில் சென்று சாப்பிட்டு வந்த இரண்டே ஜீவன்கள் - டிரைவர் & கண்டக்டர் மட்டுமே. பஸ்ஸில் இருந்து இறங்கிய சிலர் டீ மற்றும் சிகரெட்டோடு திருப்தி அடைந்து விட்டனர் !

** சென்னை டு பாண்டிச்சேரி செல்லும் வழியில் பார்த்த சில ஊர்களின் பெயர்கள்: தட்டான் சாவடி, மண்டவாய், கலப்பட்டு, !அட போகிற வழியில் தான் இப்படி என்றால் பாண்டியிலும் சில பெயர்கள் நம்மை ஆச்சரிய படுத்தியது : பொம்மையார் பாளையம், பெரிய முதலியார் குப்பம் , நெல்லி தோப்பு!

** பாண்டியில் சில சிக்னல்களில் காத்திருப்பது சென்னையை விட அதிகமாக இருக்கும் போலும். குறிப்பாக இந்திரா காந்தி சிலை அருகே இருக்கும் சிக்னலில் சர்வ சாதரணமாக மூன்று நிமிடமெல்லாம் காத்திருக்க வேண்டியுள்ளது. அங்கு சிக்னல் கிளியர் ஆகும் நேரத்தை காட்டும் கடிகாரமே 180 நொடியிலிருந்து குறைய ஆரம்பித்தை பார்த்து சற்று டென்ஷன் ஆகி போனேன் !

## காந்தி ரோடில் உள்ள பாண்டியின் புகழ் பெற்ற காபி ஷாப் இது. அருமையான ஸ்நாக்ஸ்-ம் கூட கிடைக்கிறது.


ஒரு காபி குடித்து முடித்ததும், இன்னொன்று குடிக்கணும் என்கிற ஆர்வத்தை கட்டுபடுத்தியபடி நகர்ந்தேன் (அடுத்தது குடித்தால் திகட்டிடும். ஒன்றோடு நிறுத்திக்கணும் !)

##  பாண்டியில் ரோடு முழுக்க திறந்த சாக்கடை இருக்கிறது ஒரு புறம் என்றால், சிறுவர்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து, வீட்டின் வாசலில் நின்றபடி வாசலில் ஓடும் சாக்கடையில் ஒன் பாத் ரூம் அடிப்பதை காண முடிந்தது :((
                

## பாண்டியின் புகழ் பெற்ற சண்டே மார்கெட் தான் மேலே உள்ள படத்தில் பார்க்கிறீர்கள். பாண்டியில் இருக்கும் என் தோழி " சென்னையிலிருந்தெல்லாம் சண்டே மார்கெட் வந்து பொருட்கள் வாங்கி போவார்கள் " என செம பில்ட் அப் தந்திருந்தார். விலையை பார்த்தால் அப்படியெல்லாம் இல்லை. நிச்சயம் இங்கு கிடைப்பதை விட கம்மி விலையில் சென்னையில் பொருட்கள் கிடைக்கும் என்றே தோன்றியது. துணிகள் மற்றும் பெண்களுக்கான கை பைகள் தான் இங்கு மிக அதிகம் குவிந்து கிடக்கிறது

** பாண்டி முழுதுமே விஸ்கி, பிராந்தி விற்கும் பார்கள் தவிர ஆங்காங்கு சாராய கடைகளும் நிறையவே உள்ளது. ஒரு சில இடத்தில் இந்த வரிகளுடன் போர்டு மாட்டியிருப்பதை பார்த்தேன் : " பொது இடத்தில் குடித்து விட்டு உறங்காதீர்கள் ! திருடர்கள் உங்கள் பொருட்களை திருடி விடுவார்கள் "

அப்ப எந்த ரூபாவும் இல்லாமல் குடித்து விட்டு ரோடில் உறங்கினால் பரவாயில்லீங்களா சார் ?

** நான் சென்ற திருமணத்துக்கு முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் வந்திருந்தார். ஒரு சாதாரண காரில் சுற்றிலும் எந்த உதவியாளரும் இல்லாமல் அவர் தனியாய் வந்ததை காண ஆச்சரியமாய் இருந்தது !

****
பாண்டியில் பார்க்காமல் தவற விட்ட பிற முக்கிய இடங்கள்: லைட்ஹவுஸ், லக்ஷ்மி நரசிம்மர் கோயில், சுண்ணாம்பாறு மணல்திட்டு, ஆரோவில் பீச்.

2 அல்லது 3 நாள் பாண்டிச்சேரி சென்று பொறுமையாய் அதன் அழகை ரசித்து வாருங்கள்.
*******
பதிவர் வரதராஜலு அவர்களுக்கு நன்றிகள் ..மீண்டும் !

பாண்டி பயணம் நிறைவடைந்தது !

32 comments:

  1. பாண்டியில் பார்க்க வேண்டிய இடங்கள், ரசித்த காட்சிகள், சுவைத்த உணவு, குறிப்புகள் என அசத்தலான ஒரு தொடர்.....

    அடுத்த பயணத் தொடர் எப்போ மோகன்!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. திருநெல்வேலி பயணம் பற்றி எழுத ஆரம்பிக்கணும். நேரம் இல்லை. விரைவில் துவங்கணும் நன்றி வெங்கட்

      Delete
  2. பாண்டியில் மேலும் சில இடங்களின் பெயர்கள்

    அரும்பார்த்தபுரம்
    உருவையாறு
    வில்லியனூர்
    கரிகலாம்பாகம்
    கரையான்புதூர்
    கோரிமேடு
    பில்லைதோட்டம்
    ஏம்பலம்
    கொசப்பாளையம்
    கண்டமங்கலம்
    செதாரபட்டு
    மூலகுலம்
    தவளக்குப்பம்
    கொர்காடு
    கோட்டைமேடு

    இன்னும் நிறைய இருக்கிறது



    ReplyDelete
    Replies
    1. இவைதான் சரியான பெயர்கள்

      உருவையாறு - உறுவையாறு
      கரிகலாம்பாகம் - கரிக்கலாம்பாக்கம்
      கரையான்புதூர் - கரையான்புத்தூர்
      பில்லைதோட்டம் - பிள்ளைத்தோட்டம்
      கண்டமங்கலம் - இது தமிழ்நாடு
      செதாரபட்டு - சேதராபட்டு
      மூலகுலம் - மூலகுளம்
      கொர்காடு - கோர்காடு

      Delete
    2. மிக நன்றி மகேந்திர குமார்

      Delete
  3. பயண அனுபவங்களும் படபடங்களும் ரொம்ப நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பூந்தளிர்

      Delete
  4. ஐயங்கார் பேக்கரிக்கு நாடு முழுக்க கிளைகள் இருக்குது போலிருக்கு. இங்கே நவிமும்பையிலும் எக்கச்சக்கமான கடைகள் முளைச்சுருக்குது.

    அருமையான பயணம்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி . நன்றி அமைதி சாரல்

      Delete
  5. பாண்டியில் ரசித்த இடங்களை புகைப்படத்துடன் பகிர்ந்த விதம் அழகு. ஐயங்கார்ஸ் பேக்கரியா...? அடுத்த முறை சென்று பார்த்து விடுகிறேன். அதுசரீஈஈஈ... அய்யாசாமிக்கு பாண்டியில காபி ஷாப் தான் கண்ணுல பட்டதா? வேற ஷாப்பூ எதுவும் தெரியலீங்களா...? (வூட்டமமா ப்ளாக்கை படிப்பாங்கன்னு நினைக்கிறேன்.) ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. பாலகணேஷ்; அண்ணா, சாப்பிடலை அண்ணா, நம்புங்க !

      Delete
  6. //கலப்பட்டு,//

    காலாப்பட்டு

    //பொம்மையார் பாளையம்// இது தமிழ்நாடு

    //குறிப்பாக இந்திரா காந்தி சிலை //
    ராஜீவ் காந்தி சிலை சிக்னல் - இதுவும் சிக்னல் க்ளியர் ஆக ரொம்ப நேரம் ஆகும். இது 2 மட்டும்தான் ரொம்ப டார்ச்சர் கொடுக்கும் சிக்னல். மத்தது எல்லாம் சீக்கிரம் க்ளியர் ஆயிடும்.

    //** நான் சென்ற திருமணத்துக்கு முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் வந்திருந்தார். ஒரு சாதாரண காரில் சுற்றிலும் எந்த உதவியாளரும் இல்லாமல் அவர் தனியாய் வந்ததை காண ஆச்சரியமாய் இருந்தது !//

    இது எங்களுக்கு சாதாரணம். இந்நாள் அமைச்சர்கள் கூட 2 வீலரில் போவார்கள்.

    //பாண்டியில் பார்க்காமல் தவற விட்ட பிற முக்கிய இடங்கள்: லைட்ஹவுஸ், லக்ஷ்மி நரசிம்மர் கோயில், சுண்ணாம்பாறு மணல்திட்டு, ஆரோவில் பீச்.//

    நெக்ஸ்ட் டைம் வாங்க மோகன். நல்லா சுத்தி பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. விரிவான தகவல்களுக்கு நன்றி வரதராஜலு

      Delete
  7. பாண்டியில் பீர் மற்றும் மது பானங்கள் விலை தமிழகத்தை விட கம்மியோ கம்மி. எப்படித்தான் அவங்களுக்கு மட்டும் கட்டுபடி ஆவுதோ தெரியலை. ஒரு காலத்தில் பாண்டியில் மட்டும் தான் தெருவுக்கு தெரு மதுபான கடைகள் இருக்கும். இப்போ தமிழகம் அதை பீட் செய்து விடும் போல. ஆமா, அங்கு பேருந்து நிலையம் அருகே ஒரு பேமஸான ஓட்டல் இருக்குமே அது என்ன?

    ReplyDelete
    Replies
    1. // தமிழகத்தை விட கம்மியோ கம்மி//
      நீங்க சொல்றது பழைய கதை. இப்ப அந்த அளவுக்கு விலை கம்மி இல்லை. விலை வித்தியாசம் ரொம்பவே கம்மி. அதனால் விற்பனையும் குறைந்துவிட்டது. ஆனால் வெரைட்டி அதிகம்.

      //அங்கு பேருந்து நிலையம் அருகே ஒரு பேமஸான ஓட்டல் இருக்குமே அது என்ன? //
      ஹோட்டல் மாஸ்

      Delete
    2. வாங்க ஆதி நன்றி

      Delete
  8. பாண்டியைப்பற்றி சுவாரசியமான தகவல்கள்.பாண்டியில் பார்பதற்கு இவ்வளவு இடங்களா?? நாங்கள் சென்ற போது அரபிந்தோ அஷ்ரமம், மற்றும் கடற்கரை ஆகியவற்றை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட்டோம். மறுபடியும் செல்ல வேண்டும் என்கிற எண்ணைத்தை வரவழைத்தது தங்களின் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி ராம்வி நன்றி

      Delete
  9. பாண்டிச்சேரின்னாலே வெறும் பார்கள் மட்டுமே நினைவுக்கு வரும். அங்கு பார்த்து ரசிக்க இம்புட்டு இடம் இருக்குங்களா சகோ. ஒரு முறை விசிட் அடிச்சுட வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க ராஜி நன்றி

      Delete
  10. நல்லதொரு பயணத் தொடர். அடுத்த முறை செல்லும் போது உங்கள் பயணத் தொடரை பார்த்துக் கொள்கிறேன்.

    ஐயங்கார் பேக்கரி இங்கு எங்கெங்கு பார்த்தாலும் இருக்கும். ....

    ReplyDelete
  11. //வடிவேலு மாதிரி கேட்க கண்டக்டர் ஒரு வழியா இவர் நச்சரிப்பு தாங்காம 10 ரூபா குடுத்து கணக்கை முடிச்சார். //

    தப்பே இல்ல மோகன். ஒரு ரூபாவா இருந்தாலும், அது நாம சம்பாதிக்கறது. நிறைய பேர் வறட்டு கௌரவம் பார்த்து இதை விட்டுடுவாங்க.

    //ஒவ்வொரு முறையும் காலை நேர பஸ் பயணம் வயிற்றை பதம் பார்த்துடுது. எதுவும் சாப்பிட்டால் குமட்டும் என சாப்பிடாமல் போனால் அதுவும் புரட்டுது. சாப்பிட்டாலும் நிச்சயம் பிரச்சனை தான் ! பஸ்ஸில் இருந்து இறங்கி சற்று நேரம் ஒரு மாதிரியா தான் இருக்கும் ! லேசா வாமிட் பண்ணிட்டா சரியா போயிடும் !//

    என் நண்பனுக்கும் இதே பிரச்னை இருக்கு. காலை 6 to 7 மணிக்கே கிளம்பினா, ஆயில் ஐட்டங்கள், குறிப்பா பூரி, பொங்கல், வடை மாதிரியான ஐட்டங்களை தொடாதீங்க. இட்லி மட்டுமே எந்த தொந்தரவும் தராது.

    ReplyDelete
    Replies
    1. முதல் விஷயம் நீங்க சொல்வது சரிதான் ரகு.

      ரெண்டாவது: ம்ம். அடுத்த முறை முயற்சிக்கலாம்

      Delete
  12. பாண்டிச்சேரி வழியாகப் பல முறை போய் இருக்கிறேன்.அங்கு பல இடங்களை பார்த்ததில்லை.அரவிந்தர் ஆசிரமம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இயலும்போது முழுமையாய் சுற்றி பாருங்கள் முரளி சார்

      Delete
  13. நான் ஒரு கமென்ட் போட்டேன், அதைக் காணவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. சார் தெரியலையே நம்ம ப்ளாகில் கமண்ட் மாடரேஷன் இல்லை. ப்ளாகர் ஏதாவது அந்த நேரம் மக்கர் பண்ணிருக்கும். மறுமுறை எழுதுங்கள் சார் !

      Delete
  14. பாண்டிச்சேரி பற்றி நண்பர் திரு மோகன் குமார் அவர்களின் அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிடேன்.
    நன்றி திரு மோகன் குமார்.

    ReplyDelete
  15. ஐ! எங்க ஊரு,அழகா சொல்லிருக்கீங்க,இப்பவே எங்க ஊருக்கு போகனும் போல இருக்கே ஆனா இன்னும் 6 மாசம் வரை காத்திருக்கனுமே.....பகிர்வுக்கு நன்றிங்க!!

    ReplyDelete
  16. நிறைந்த தகவல்கள்,படங்களுடன் நல்ல பயணம்.

    ReplyDelete
  17. //** பாண்டி முழுதுமே விஸ்கி, பிராந்தி விற்கும் பார்கள் தவிர ஆங்காங்கு சாராய கடைகளும் நிறையவே உள்ளது. ஒரு சில இடத்தில் இந்த வரிகளுடன் போர்டு மாட்டியிருப்பதை பார்த்தேன் : " பொது இடத்தில் குடித்து விட்டு உறங்காதீர்கள் ! திருடர்கள் உங்கள் பொருட்களை திருடி விடுவார்கள் "

    அப்ப எந்த ரூபாவும் இல்லாமல் குடித்து விட்டு ரோடில் உறங்கினால் பரவாயில்லீங்களா சார் ?//

    Not only money, sometimes, shirts and trousers will also be removed :)

    ReplyDelete
  18. எங்க ஊரு இவளோ அழகுன்னு நீங்க சொல்லும்போது தான் தெரியுது.... (ஓவியம் தீட்டும் புகைபடத்தில் இருப்பவர்கள் எங்கள் கல்லூரி மாணவிகள். மற்றும் அன்பழகன் https://www.facebook.com/anbu.azhagan.503)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...