Saturday, January 12, 2013

பாண்டியன் மெஸ்

பாண்டியன் மெஸ் - ராஜசுந்தரராஜன்
---------------------------------------------------

தியம் 12:00 மணிக்கு “அலெக்ஸ் பாண்டியன்” படம் தொடங்கியது. முதலில் காட்டப்பட்ட முகம் அனுஷ்கா. மக்களோடு சேர்ந்து நானும் கைதட்டினேன். பிறகு அந்த முகத்தைக் காணவே இல்லை. இடைவேளையும் வந்துவிட்டது.

“வடிவேலு போதாதுன்னு கவுண்டமணியையும் காப்பி அடிக்கத் தொடங்கிவிட்டான்” என்று சந்தானத்தைத் திட்டிய குரல் ஒன்று கேட்டது. ஆனால் சந்தானத்துக்குத் தங்கைகள் என்று மூன்று புதுமுகங்களைப் போட்டது ஓர் உள்ளரங்க மார்கழிநீர்க் கொண்டாட்டத் தேவை என்றே எனக்குத் தோன்றியது.


பெங்களூருவில் இருந்து கோவாவுக்கு ரயில் வண்டியில் போனதுண்டா? அதுவும் மழைக்காலத்தில்? நெடுக, அருவிகளுக்கு ஊடாகவே வண்டி ஓடும். அந்தப் பகுதி நிலவெளிதான் கூர்க். ஷில்பா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா ஷெட்டி இவர்கள் எல்லாம் அந்தக் குறிஞ்சி மலர்வித்த கொடுப்பினைகள். அழகு என்றால் இன்னதென்று அரிச்சுவடிக் கண்ணறிவும் அற்றார் கை எட்டினால், பாவம், அந்த ரத்தினங்கள் என்ன செய்யும்?

இடைவேளைக்குப் பிறகும் அனுஷ்காவைக் காணவில்லை. பிற்பகல் 02:30க்கு மேல் அவள் தென்பட்டபோது என் உடம்பின் தெம்பில் ஆனால் ஒரு வெற்றிட வீழ்ச்சி! தாக்குப் பிடிக்க முடியுமா? அவள் ஆடுகிற அந்த ஒரே ஒரு பாட்டு 02:40க்கு வந்தது. எனக்கோ படபடப்பு! மஞ்சள் ஆடையில் குலுங்கிய கொப்பூழ், ஆடை நிறம் மாறி வருவதற்குள் திரும்பிவிடலாம் என்று வெளியே பாய்ந்தேன். கேன்டீன் அடைக்கப்பட்டு இருந்தது.

அண்ணன் சிவகுமாரின் பிள்ளைகள் படமென்றால், இப்போதெல்லாம், ஒரு கிலி பிடித்தாட்டுவதால் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூன்யம் இது. (சூர்யாவின் “மாற்றான்” படத்துக்கும் இப்படித்தான்). ‘பக்கார்டி’ ரம் ஒரு குவார்ட்டர் ஏற்றி இருந்தேன். குடற்கறி, ஈரல், காராமணிப் பயறு என்றின்ன தொடுகறிகள் தாங்கும் என்று எண்ணியது தப்புக்கணக்கு ஆகிவிட்டது. Low sugar.

தெலுங்கு எழுத்தில் எழுதி இருந்த பலகைகளைக் கூட மாற்றாமல் பட்ஜெட் மிச்சம் பிடித்திருந்தார்கள். கூடவே ‘நோக்குவர்மம்’ என்று முருகதாஸ்-சூர்யாவை நக்கல் பண்ணுவது போல் வசனம் வேறு. மகேஷ் பாபு படம் ஒன்று தமிழ் டப்பிங்கில் வருவதாக இடைவேளையில் காட்டிய ட்ரெய்லரை நினைத்துக் கொண்டேன். சாமிகளா, எல்லாத் தெலுங்குப் படங்களையும் டப் செய்து அருளினால் இந்த கார்த்தி, ரவிகளிடம் இருந்து நாங்கள் காப்பாற்றப் படுவோம் இல்லையா?

முதல் மந்திரி மகளை, தானே கடத்தி தானே காப்பாற்றுகிறாராம் ஹீரோ!

தண்ணியும் அடித்து, சர்க்கரை அளவும் கம்மியானதால் கண்ணுமண்ணு தெரியாத ஒரு போதை. வெளியேறுகையில் உள்நுழைந்த ஒரு வெள்ளைப் பேன்ட்டில் என் வண்டியின் முன் சக்கரத்தை மோதவிட்டு, ஒரு கெட்ட வார்த்தையும் போட்டேன். வளசரவாக்கம் ‘பாண்டியன் மெஸ்’ சாப்பாட்டில், கல்லாவில் இருந்தவரிடம், “கறிக்குழம்பு சுருக்குன்னு இல்லியே, மாஸ்டர் என்ன உடுப்பி ஓட்டல்ல இருந்து வந்தவரா?’ என்று கடுகடுத்தேன். நம்ம தலைவிதிக்கு அடுத்தவரை நொந்துதான் என்ன செய்ய?

ரூ. 1000 கட்டி இருக்கிறேன். கமல் என்ன செய்யக் காத்திருக்கிறாரோ!
*****
அண்மை பதிவு: 
சென்னை புத்தக கண்காட்சி: பிளஸ், மைனஸ் - ஸ்டால் & நிகழ்ச்சி விபரங்கள்

10 comments:

  1. அட கருமமே! படம் ஊத்திகினு உங்களை ஊத்திக் கொள்ளவைத்துவிட்டதா!

    ReplyDelete
  2. ///கறிக்குழம்பு சுருக்குன்னு இல்லியே, மாஸ்டர் என்ன உடுப்பி ஓட்டல்ல இருந்து வந்தவரா?’///

    சிரிக்க வைத்த வரிகள்

    ReplyDelete
  3. very impressive and different kind of comments.you have saved many bloggers from watching this movie.

    ReplyDelete
  4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

    ReplyDelete
  5. மெஸ் னு படிச்சதும் சாப்பாடு கடை பதிவுன்னு நெனெச்சேன் னே

    ReplyDelete
  6. இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அட சினிமா விமர்சனமா.... மெஸ் என்றதும் சாப்பாட்டு விஷயம்னு தான் உள்ளே வந்தேன்....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் மோகன்.

    ReplyDelete
  8. இந்தப் பக்கங்களில் என் எழுத்து வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது மாதிரியான எழுத்துகளுக்குப் பழக்கப் படாதவர்கள் இங்கே சிலர் இருக்கிறார்கள். அவர்களோடும் கைகோர்ப்பதில் ஓர் ஆனந்தம். கதையை விண்டு சொல்லாமல் ஒரு ரசிகனின் அனுபவம் வழியாகவே ஒரு கலைபடைப்பின் தரம் இன்னது என்று உணர்த்துகிற எழுத்து இது. (இதன் மேல் சில விவாதங்கள் கூகுள் ப்ளஸ்ஸிலும் முகநூலிலும் உண்டு). நன்றி, நண்பர்களே!

    ReplyDelete
  9. தமிழ் சினிமாவுக்கு ஒரு விஜய் போதும்டான்னா கேக்க மாட்டேன்றாங்களே சார்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...