Monday, March 19, 2012

கலைஞரை எதிர்த்து கண்ணதாசன் எழுதிய வனவாசம்-விமர்சனம்

வனவாசம் - வானதி பதிப்பகம் மூலம் 37 பதிப்புகள் வெளியாகி, பின் 2010 முதல் கண்ணதாசன் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும் புத்தகம் !சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் கண்ணதாசன் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டதில் துவங்கி, அந்த கட்சியில் அவர் இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசி, பின் அவர் கட்சியிலிருந்து வெளிவருவதுடன் முடிகிறது. இதனாலேயே தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டோருக்கு பிடித்தமான புத்தகமாக அமைந்து விடுகிறது. கலைஞர் அபிமானிகள் இப்புத்தகத்தை அதிகம் நேசிக்க மாட்டார்கள்!

துவக்கத்தில் கண்ணதாசனுக்கு மிக வேண்டியவரான இராம. கண்ணப்பன் கண்ணதாசனின் இளமை காலம் குறித்து எழுதி உள்ளார். கண்ணதாசனின் தந்தை எந்த வேலைக்கும் போகாமல் சீட்டு ஆடக்கூடியவர். இதனால் குடும்பம் மிக வறுமையில் வாடியிருக்கிறது. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் ஊரை விட்டு வெளியேறி வெளி இடங்களில் வேலை தேடியுள்ளார். முதலில் திருச்சி பின் சென்னை என பல இடங்களில் சிறு சிறு வேலைகள். போராட்டங்கள். பல்வேறு பத்திரிக்கைகளில் வேலை பார்த்து பின் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் ஆகவும் மாறி உள்ளார். பின் தி.மு.க மீது ஈர்க்கப்பட்டு கட்சியில் சேர்ந்தது, கட்சியில் கலந்து கொண்ட போராட்டங்கள், உள் கட்சி அரசியல் என விளாவாரியாக பேசுகிறது புத்தகம்.

காந்திஜியின் சத்திய சோதனை தான் இந்த சுய சரிதை எழுத காரணம் என சொல்லும் கண்ணதாசன் , சத்திய சோதனையில் உள்ளது போல, தான் செய்த பல தவறுகளை மனம் விட்டு கூறுகிறார். உதாரணத்துக்கு

- முதல் வேலையில் "பொருட்கள் சென்று வாங்கும் போது அதற்கு விலை ஏற்றி சொல்லி கமிஷன் அடித்தது

- விலை மாதர் இல்லம் சென்றது

- பல நாள் சாப்பிடாமல் இருந்து காசு கிடைத்ததும் ஹோட்டல் சென்று ஆறு மசால் தோசை ஒரே நேரத்தில் ஆர்டர் செய்து சாப்பிட்டது

- முதல் முறை பாட்டெழுதி நூறு ரூபாய் கிடைத்ததும் விலை மாது வீடு தேடி அலைந்தது

- நிலையான வருமானம் வந்ததும் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி மூன்று மாதம் வாழ்ந்தது- ஊருக்கு சென்று திரும்பும் போது அவர் வேறு நபருடன் வாழ்வது கண்டு மனம் வெறுத்தது

இப்படி எத்தனையோ சம்பவங்கள் சொல்கிறார்.

செட்டியார் சமூகத்தில் சுவீகாரம் செய்வது குறித்து பல தகவல்கள் தெரிய வருகிறது. " ஏழைகளுக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். பணக்காரர்கள் சிலருக்கு குழந்தைகள் இருக்காது. அவர்கள் ஒரு குறிப்பிட தொகை கொடுத்து தெரிந்த உறவினரிடம் குழந்தைகள் தத்தெடுப்பர்" என்கிறார்.

வாழ முடியாதவர்கள் என்கிற தலைப்பில் கலைஞர் எழுதிய சிறுகதையை பற்றி காட்டமாக விமர்சிக்கிறார். மனைவியை இழந்த கணவன். தன் மகளுடனே உறவு கொள்கிறான் என்கிறதாம் இக்கதை. இது பற்றி இவ்வாறு சொல்கிறார் கண்ணதாசன் " வெளி நாட்டவர்கள் கூட வறுமையை சித்தரிக்கும் போது பண்பாட்டோடு எழுதினார்கள். ஆனால் மகளை கெடுத்த தந்தையை வறுமைக்கு உதாரணமாக்கினார் முற்போக்கு ஆசிரியர்"

கண்ணதாசனின் அனுபவம் ஆங்காங்கு தத்துவமாக/ கருத்தாக வெளிப்படுகிறது:
 
" தன் துயரத்தை பகிர்ந்து கொள்ள இன்னொருவர் இருந்தால் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறது. அந்த இன்னொருவர் பெண்ணாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது !"


" சில நேரங்களில் துணிவை மட்டுமே மூல தனமாக கொண்டு முன்னேற்றத்துக்கு தேவையான சந்தர்ப்பத்தை மனிதனால் ஆக்கி கொள்ள முடியும்."

" அரசியல் வாதிகளுடன் சில காலம் பழகியதிலேயே பல உண்மைகள் தெரிய ஆரம்பித்தது. தாம் கொண்ட கொள்கைகளில் யாருமே உறுதியாக இல்லை. ஜனங்கள் முட்டாள்கள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு அதை வெளியில் சொல்லாமலே அரசியல் நடத்துகிறார்கள் "
 
அரசியல் வாழ்க்கையில் பல சம்பவங்களை மிக விரிவாக விவரிக்கிறார். குறிப்பாக எம். எல். ஏ வாக ஆயிரம் விளக்கு தொகுதியில் நிற்க சொல்லி தி.மு.க சொல்ல, இவரோ தன் சொந்த ஊரான காரைக்குடி அருகே ஒரு தொகுதியில் நின்று தோற்றது ( ஆயிரம் விளக்கில் நின்றவர் வென்று விட்டாராம்)
 
சென்னை மாநாகராட்சி தேர்தலில் கண்ணதாசன் கடுமையாக தேர்தல் பணி செய்தாராம். அந்த தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெற்ற போது வேட்பாளர்கள் பலர் அவர் வீடு தேடி வந்து நன்றி கூறினாராம். ஆனால் வெற்றி விழாவில் அண்ணா கலைஞருக்கு கணையாழி குடுத்து வெற்றிக்கு காரணம் இவரே என்றாராம். இது பற்றி கண்ண தாசன் அண்ணாவிடம் கேட்க, " நீயும் அவரை போல ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தால், உனக்கும் மேடையில் அணிவிக்கிறேன்" என்றாராம் !!

டால்மியாபுரம் போராட்டம் பற்றி மிக விரிவாக சொல்கிறார். அப்போது தான் தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும் நிகழ்சிகள் நடந்தேறி உள்ளன. முதல் குருப் ஓடாத ரயில் முன் படுத்து கைதாகி விட்டது. அடுத்த குழுவிற்கு கண்ணதாசன் தலைமை ஏற்றிருக்கிறார். அந்த குழு சென்ற போது ரயில் நகர துவங்க, ஓடும் ரயில் முன் போய் விழ சொன்னார்களாம் ! ஓடும் ரயில் முன் விழுந்தால் நேரே சாக வேண்டியது தான் என கண்ணதாசன் செய்ய வில்லை. இந்த போராட்டத்தில் சிறைக்கு போய் பல மாதம் சிறையில் வாடி, குடும்பம் பணம் இன்றி கஷ்டப்பட்ட பின் தான் அரசியல் சற்று புளிக்க துவங்கி உள்ளது அவருக்கு !

கடைசி நூறு பக்கங்களில் தி.மு.கவில் அண்ணா- சம்பத் இடையே இருந்த சண்டை பற்றி விரிவாக பேசுகிறார். இவர் சம்பத் பக்கம் நின்றிருக்கிறார். அண்ணாவின் கருப்பு பக்கங்களும் இந்த புத்தகத்தில் பேச படுவது ஆச்சரியமாக உள்ளது. கலைஞரை நேரடியாக பல இடங்களிலும் " கலை ரசிகர்" என மறைமுகமாக பல இடங்களிலும் தாக்குகிறார்.

பெரிய சம்பவங்கள் அல்லது பிரச்சனைகள் முடிவுகள் எடுக்கும் போது தான் நமக்கெல்லாம் தூக்கம் பாதிக்கும். ஆனால் கண்ணதாசனோ பல முறை அத்தகைய சமபவங்கள் பற்றி சொல்லும் போதெல்லாம் அன்று இரவு நன்கு உறங்கினேன் என்று தான் முடிக்கிறார் !

வனவாசம் என அவர் சொல்லுவது தி.மு.கவில் இருந்த கால கட்டத்தை தான் ! கண்ண தாசனின் பாடல்களுக்கு ரசிகனான நான் அவர் அந்த பாடல்கள் குறித்தும் அவை எழுதிய சூழல், சில சுவையான சம்பவங்கள் எதிர் பார்த்தேன். ஆனால் இந்த நூல் எழுதிய கால கட்டத்தில் அவர் ஒரு புகழ் பெற்ற பாடலாசிரியராக இருந்தும், இந்த நூல் அவர் சுய சரிதை என்றாலும் அவர் பாடல்கள் குறித்து அதிகம் பேசாதது சற்று ஏமாற்றமே.

இது முழுக்க முழுக்க கண்ணதாசன் என்கிற தனி நபரின் தி.மு.க எதிரான நிலை பாடு ஏன் என்பதற்கான புத்தகம். கலைஞர் அல்லது அண்ணா அபிமானிகளிடம் இதற்கு நேர் எதிரான தங்கள் நிலை சார்ந்த கருத்துகள் இருக்க கூடும்.

ஒரு அரசியல் கட்சியில் உள்ளே நடக்கும் சம்பவங்களை இவ்வளவு விரிவாக பேசிய புத்தகம் என்கிற அளவில் நிச்சயம் இது ஒரு மாறுபட்ட புத்தகமே !
*******************

32 comments:

  1. // இது பற்றி கண்ண தாசன் அண்ணாவிடம் கேட்க, " நீயும் அவரை போல ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தால், உனக்கும் மேடையில் அணிவிக்கிறேன்" என்றாராம் !! //

    அட.. 'நமக்கு நாமே திட்டம்' அப்பவே இருந்திச்சா ?
    ----------
    கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் -- எனக்கு பிடித்த படைப்பு. வாழ்வில் எது தேவை.. வாழ்க்கையில் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர் பின்னி பெடலெடுத்திருப்பார்..

    ReplyDelete
  2. இப்புத்தகம் குறித்து நானெழுதிய பதிவு...

    http://www.saravanakumaran.com/2009/05/blog-post_22.html

    ReplyDelete
  3. எனக்கு பிடித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  4. \\- விலை மாதர் இல்லம் சென்றது\\ கோடம்பாக்கத்தில் நள்ளிரவில் நாங்கள் தட்டாத விபச்சாரிகள் வீடே கிடையாது. அப்போது ஒரு நாள் என் 'நண்பர்' காசு கொடுத்துவிட்டு விபச்சாரியிடம் சுகம் கண்டார். ஆனால் திருப்தியில்லை என்று சொல்லி 'வேலை' முடிந்ததும் கொடுத்த காசை திரும்ப வாங்கிக் கொண்டு வந்து விட்டார். -கண்ணதாசன். [நண்பர் யார் என்று உங்களுக்கே தெரியும்!! ஹா..ஹா..ஹா...]

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. \\ " நீயும் அவரை போல ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தால், உனக்கும் மேடையில் அணிவிக்கிறேன்" என்றாராம் !!\\ அரசியல் என்றாலே எல்லா முடிச்சவிக்கி மொள்ளமாரி வேலைகளும் செய்தால்தான் மேலே வர மடியும், அதில் கரை கண்டவர் மஞ்சள் துண்டு!!

    ReplyDelete
  7. \\- நிலையான வருமானம் வந்ததும் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி மூன்று மாதம் ஆவலுடன் வாழ்ந்தது- ஊருக்கு சென்று திரும்பும் போது அவர் வேறு நபருடன் வாழ்வது கண்டு மனம் வெறுத்தது\\ இவரு மட்டும் போற இடமெல்லாம் ஒரு பெண்டாட்டியை செட்டப்பு பண்ணு விட்டு இவருக்கு வாய்ப்பவர்கள் மட்டும் கண்ணகியா இவருக்காக காத்துகிட்டு இருக்கணும்னு எதிர் பார்த்தது ரொம்ப ஓவர்.

    ReplyDelete
  8. எனக்குப் பிடித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.,அரசியல்வாதி என்றால் சமூக சேவகர்கள் என்ற என் பிம்பம் உடைந்தது இந்த புத்தகத்தை படித்துதான்:)

    ReplyDelete
  9. //// இது பற்றி கண்ண தாசன் அண்ணாவிடம் கேட்க, " நீயும் அவரை போல ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தால், உனக்கும் மேடையில் அணிவிக்கிறேன்" என்றாராம் !! ///

    அண்ணா கொடுத்ததுன்னு அடிக்கடி ஃபிலிம் காட்டுவாரே அதெல்லாம் சும்மா தானா :)

    ReplyDelete
  10. அர்த்தமுள்ள இந்து மதம் படித்து ரசித்திருக்கிறேன். நீங்கள் சொல்லும் வனவாசம் படித்ததில்லை....

    படிக்க முயல்கிறேன்.

    ReplyDelete
  11. மாதவா: அர்த்தமுள்ள இந்து மதம் அருமையான புத்தகம் தான் நன்றி

    ***

    ReplyDelete
  12. வாசிக்கிறேன் சரவண குமரன் :நன்றி

    ***

    ReplyDelete
  13. சத்ரியன்: நன்றி

    **

    ReplyDelete
  14. ஜெயதேவ் தாஸ்: நீங்கள் சொன்ன சம்பவமும் (கோடம்பாக்கம்) இந்த புத்தகத்தில் உள்ளது என நினைக்கிறேன். நீங்களும் இப்புத்தகம் வாசித்து விட்டீர்கள் போலும் !

    இப்படி முழுதாய் படித்து விட்டு விரிவாய் கமன்ட் தருவது எழுதுவோருக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் ! நன்றி தாஸ் !

    ReplyDelete
  15. nigalkalathil siva said...அரசியல்வாதி என்றால் சமூக சேவகர்கள் என்ற என் பிம்பம் உடைந்தது இந்த புத்தகத்தை படித்துதான்:)

    **

    மிக சரியாய் சொன்னீர்கள் சிவா ! உண்மை !!

    ***

    ReplyDelete
  16. ஆனந்த்: கருத்துக்கு நன்றி. அதே அதிர்ச்சி எனக்கும் உண்டு !

    ReplyDelete
  17. வெங்கட்: நன்றி வாசிக்க முயலுங்கள் !

    ReplyDelete
  18. இப்படி ஒரு புத்தகம் கண்ணதாசன் எழுதியது இப்பொழுதான் தெரிகிறது. அவசியம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  19. இந்த புத்தகம் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை வாசித்ததில்லை.

    ReplyDelete
  20. Anonymous3:44:00 AM

    அண்மையில் நடந்த புத்தக கண்காட்சியில் இப்புத்தகத்தை வாங்கினேன். படிக்க வேண்டும். தொகுப்பிற்கு நன்றி.

    ReplyDelete
  21. ஒரு காலத்தில் குமுதம் பத்திரிகை வனவாசத்திலிருந்து குறிப்பிட்ட சில பகுதிகளைப் பிரசுரித்து வந்தது...

    ReplyDelete
  22. நன்றி அமைதி அப்பா. வாசியுங்கள்
    **

    ReplyDelete
  23. ரகு: நன்றி
    **

    ReplyDelete
  24. சிவா: அப்படியா? வாசியுங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்
    **

    ReplyDelete
  25. பால ஹனுமான்: ஆம். குமுதத்திலும் இது வெளி வந்ததாக அறிகிறேன் பால ஹனுமான்: உங்க வயசு என்ன? :))

    ReplyDelete
  26. கண்ணதாசன் ஒரு கைக் குழந்தை. யார் (அன்பாக) கூப்பிட்டாலும் அவர்களுடன் போய் விடும் குணம் அவருக்கு. அதனால் தான் தி.மு.க., காங்கிரஸ் என்று பல கட்சிகளுக்கு தாவினார்.

    அதே போல், கண்ணதாசன் ஒரு கூட்டத்தில் ஒரு கட்சியை பற்றி ஆதரித்து பேசிவிட்டு வீடு திரும்பும் முன் இன்னொரு கட்சிக்காரர்கள் அவரிடம் அனுசரணையாக/நைச்சியமாக பேசி விட்டால் போதும். அடுத்தநாளே முதல் நாள் பாராட்டிய கட்சியை இன்று தாக்கி பேச ஆரம்பித்து விடுவார். இது நான் கண்ணதாசன் பற்றி படித்தது.

    ReplyDelete
  27. நான் இதுவரை வாசித்த நூல்களிலேயே சிறந்த நூல் என்று சொல்வேன் இதை. நான் ஒன்றும் பெரிதாக வாசித்ததில்லை என்பது வேறு கதை. திராவிட இயக்க வரலாற்றைப் படித்து விருப்பு வெறுப்பின்றி நடுநிலையான ஆய்வு செய்ய விரும்பும் எவரும் இந்த நூலைப் படிக்காமல் அதன் அத்தனை பரிமாணங்களையும் அலச முடியாது.

    இன்னும் சொல்லப் போனால் கண்ணாதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்" பலரால் விரும்பிப் படிக்கப் பட்டு சிலாகிக்கப் படும் நூற்தொகுப்பு. அதை நான் படிக்க முயன்ற போதெல்லாம் எனக்குப் பெரிதாக அதில் ஈடுபாடு ஏற்படவில்லை. அதனால், கண்ணதாசனின் நூற்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்காமல் போய்விடும் என்றே முன்முடிவு செய்திருந்தேன். இதைப் படித்த பின் அப்படியே ஆடிப் போய்விட்டேன். தமிழ் என்ற சொல்லைக் கேட்டதும் நரம்புகள் புடைக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.

    ReplyDelete
  28. வாங்கிப் படித்திருக்கிறேன்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. http://simulationpadaippugal.blogspot.in/2012/01/blog-post.html

    ReplyDelete
  30. எனக்கு அரசியலைப் பொருத்து ஒரே கொள்கை; எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்; யாரும் தற்கு விதி விலக்கு கிடையாது.

    புலவனுக்கும் எழுத்தாளனுக்கும் தொழில் எப்படியாக எழுதி பணம் பண்ண வேண்டியது தான். பார் மன்னா வேந்தே! இப்படி ஆரம்பித்து இன்று....எழுத்தாளர்கள்.

    அதுவும் கண்ணதாசன். சிறு வயதில் இறந்து விட்டார். இல்லாவிட்டால் இருக்கும் எல்லா மத்கதை பற்றியும் எழுதி இருப்பார்.

    சொல்லும் ஆள் யார் என்று முதலில் பார்ப்பார்கள். It is credibility of witness and source--Of all the persons, it was from kanaadaasan. BTW, I have no party affiliation, and I don't live in India.

    ReplyDelete
  31. வனவாசம் படித்தவுடன் கண்ணதாசன் மேல் இதுவரை இருந்த மதிப்பு சரிந்தது. வெறும் காழ்புணர்ச்சியும் , கட்சியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற தன்முனைப்புமே இந்த புத்தகத்தில் இருக்கிறது.நான் மு.க அபிமானி அல்ல.

    ReplyDelete
  32. Hi frinds, I have read over this book.For every line is a red signal for those who like to enter into politics.Similarly he is a open minded to say about his bad habits in a free manner.I read over the biography of GANDHIJI and Kannadasan many times .Yhe young generation SHOULD read this book ,. DK (D.Karuppasamy.)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...