Sunday, February 3, 2013

Student of the year ஹிந்தி படம் + சுஜாதாவின் ஒரு நடுப்பகல் மரணம் -ஒரு பார்வை

வார இறுதியில் வாசித்த ஒரு நாவல் மற்றும் பார்த்த ஒரு படம் பற்றி பகிர்கிறேன்

பார்த்த படம்: STUDENT OF THE YEAR - ஹிந்தி 


ஒரு கல்லூரி - அதில் படிக்கும் ஒரு பணக்கார மாணவன். அங்கு இன்னொரு ஏழை மாணவன் சேர்கிறான். முதல்வர் ரிஷி கபூர் ஒவ்வொரு வருடமும் கல்லூரியில் Student of the Year போட்டி நடத்துகிறார் .

பணக்கார மற்றும் ஏழை மாணவர்கள் இதில் மோதுகிறார்கள். இறுதியில் யார் வென்றனர் என்று சொல்கிற பீல் குட் படம் தான் Student of the Year.


சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவன், அலியா பட் என்ற மூவர் முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாக, பாபி புகழ் ரிஷி கபூர் முதல்வராக வருகிறார்

முக்கிய ஹீரோவான சித்தார்த் மல்ஹோத்ரா உடலில் ( 8 பேக்ஸ்) அசத்தினால், இன்னொருவர் டான்சில் அசத்துகிறார். ஹீரோயின் தான் பெரிய லெட் டவுன். எப்பவும் அதீத சிவப்பில் மிகையான லிப்ஸ்டிக் போட்டு கொண்டு இரண்டு ஹீரோக்களையும் மாறி மாறி லவ்வுகிறார் ( நீங்க எதிர்பார்க்குற மாதிரி வேற ஏதும் இல்லை :)) )

ரிஷி கபூர் பாத்திரம் சற்று வித்யாசமானது. அவரை சற்று ஹோமோ மாதிரி பூடகமாய் காட்டுகிறார்கள்

போட்டி நடக்கும் பின்பகுதி செம விறுவிறுப்பு. நான்கு வகை போட்டி அதில் ஒவ்வொருவராய் எலிமினேட் ஆவது என சுவாரஸ்யமாய் கொண்டு சென்று இறுதியில் யார் வெல்கிறார் என அறியும் போது நமக்கு அதிர்ச்சி தான்.

இரண்டு ஹீரோக்களையும் தவிர்த்து விட்டு இன்னொரு பாத்திரம்,  பட இறுதியில் முதல்வரை நாக்கை பிடுங்கிக்குற மாதிரி  நாலு கேள்வி கேட்கிறார். ஓட்ட பந்தயம், சைக்கிள் ரேஸ் இவை அனைத்தும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பங்கேற்றால், ஒரு ஆண் தானே வெல்லமுடியும் என சொல்லி கொண்டே இருந்தேன் இந்த பாத்திரம் கேட்கும் பல கேள்விகளில் அதுவும் ஒன்று !

இறுதியில் போட்டியை ஒருவர் வெல்ல, ஹீரோயினை இன்னொருத்தர் அடைகிறார் ! படத்தை நாம் எதிர்பார்ப்பதை விட அழகாய் முடித்துள்ளனர்

கரன் ஜோகர் இயக்கிய இப்படம் 2012 தீபாவளி நேரம் ரிலீஸ் ஆகி வசூலில் வெற்றிப்படம் ஆனது ( 45 கோடி பட்ஜெட்; 63 கோடி வசூல்)

படத்தில் நிச்சயம் பல உறுத்தல்கள் இல்லாமல் இல்லை; அது பள்ளியா, கல்லூரியா என்பதே செம குழப்பம் (எல்லாரும் பள்ளி என்றே சொல்கிறார்கள்; ஆனால் எந்த ஸ்கூலில் பசங்க ஆள் ஆளுக்கு 8 பேக்ஸ். 6 பேக்ஸ் வச்சிருக்காகளோ ! )

ஜாலியாக ஒரு மாலையை கழிக்க ஏற்ற பீல் குட் மூவி. இதுவரை பார்க்காவிடில் 1 முறை பாருங்கள்..
*******
ரு நடுப்பகல் மரணம் -சுஜாதா 

சுஜாதாவின் சஸ்பென்ஸ் -த்ரில்லர் சென்னையில் துவங்கி, பெங்களூருக்கும் சென்னைக்கும் மாறி மாறி பயணிக்கிறது

கதை

புதிதாய் கல்யாணமான ஜோடி (மூர்த்தி மற்றும் உமா ) பெங்களூருக்கு ஹனி மூன் செல்கிறது. அங்கு மூர்த்தி மிக கோரமான முறையில் அறையில் வெட்டி கொல்லப்படுகிறான். கொன்றது யார் என போலிஸ் விசாரிக்கிறது.

உமாவை திருமணம் செய்ய எண்ணி நடக்காமல் போன அவளது மாமா மணி

ஒரு தலையை பல வருடமாய் உமாவை காதலித்த ராகேஷ்

மூர்த்தி பெண் பார்த்து பின் மணம் முடிக்காமல் போன திவ்யா

என சந்தேகங்கள் விரிகிறது.

ஒருதலையாய் காதலித்த ராகேஷ் தான் கொன்றவன் என பாதியில் வலுவான சந்தேகம் தந்து எடுத்து சென்று கடைசி அத்தியாயத்தில் முற்றிலும் வேறொரு முடிவை தருகிறார் சுஜாதா.

                          
         
முப்பது வருஷத்துக்கு முன் எழுதிய கதை என்கிற விதத்தில் அந்த காலத்தின் சில விஷயங்களை உணர முடிகிறது. குறிப்பாய் கிரிக்கெட் எப்படி ரசித்தார்கள் போன்ற விஷயங்கள் ! டிவியே இல்லாத அந்த காலத்தில் ரேடியோவில் எப்போதும் காமண்டரி கேட்கும் ஆனந்த் பாத்திரம் சுவாரஸ்யமாய் இருக்கிறது.

கிரிக்கெட்டில் இந்தியா தோற்கும் நிலையில் இருக்கும் போது ரேடியோவை காதில் வைத்து கமண்டரி கேட்கும் ஆனந்த் " துக்க வீட்டில் இருப்பது போல் இருந்தான் " என சுஜாதா சொல்லி செல்வது செம !

80 களில் - 9-ம் வகுப்பு படிக்கையில் உடன் படிக்கும் நண்பன் சவுரி ராஜன் வகுப்பிலேயே திருட்டு தனமாய் ரேடியோ காமன்ட்டரி கேட்பான். ஒவ்வொரு பீரியட் முடிவில் அவனிடம் தான் ஸ்கோர் கேட்டு அறிவோம். அவனது நினைவு , இந்த கிரிக்கெட் ரசிகன் பாத்திரத்தை வாசிக்கும் போது வந்தது . ஒவ்வொருவரும் இத்தகைய நபர்களை சந்தித்திருக்கலாம் !

இந்த குற்றத்தை மாதவராவ் என்கிற போலிஸ் தான் துப்பறிகிறார். கணேஷ் -வசந்த் இருந்திருந்தால், அழகான ஹீரோயினுடன் வசந்த் கடலை போடுவதும் பல்பு வாங்குவதும் கதைக்கு சுவாரஸ்யம் தந்திருக்கும்

கதையில் நிச்சயம் நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கு.

தேனிலவுக்கு வந்த போது கடையில் போய் புத்தகம் வாங்க வேண்டுமென்றால் அநேகமாய் கணவன் தான் செல்வான். அதுவும் பாஷை தெரியாத ஊர் வேறு. இங்கு உமா புத்தகம் வாங்க செல்ல, அந்த நேரம் தான் கணவன் கொல்லப்படுகிறான்.

அவன் கொல்லப்படுவதற்கு சொல்லப்படும் காரணம் நிச்சயம் ரொம்ப வலுவாய் இல்லை. ஆணாய் இருக்கட்டும் பெண்ணாய் இருக்கட்டும், தான் நினைத்தவன் கிடைக்காததால், அவன் வேறு ஒருத்தியை மணந்ததால் கொலை செய்யும் அளவுக்கு போவதெல்லாம் அநேகமாய் மிக அரிது தான்

இவையெல்லாம் ஒரு புறமிருக்கட்டும். மாலை இந்த புக்கை எடுத்து படிக்க ஆரம்பித்த நான் ஒரே மூச்சில் படித்து கொண்டேயிருந்தேன். 8 மணிக்கு சாப்பிடுபவன், ஒன்பதரை ஆகியும் சாப்பிட வராததால் இன்னுமா சாப்பிடலை என ஹவுஸ் பாஸ் கோபமாய் குரல் கொடுக்க, புத்தகமும் கையுமாய் சாப்பிட்டு /படித்து முடித்தேன். சுஜாதா !

சுஜாதாவின் மிக சிறந்த நாவல்களில் ஒன்று என்றெல்லாம் சொல்ல முடியாது ஒரு நல்ல டைம் பாஸ் நாவல் !

நூலின் பெயர்: நடுப்பகல் மரணம்
ஆசிரியர்: சுஜாதா
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 280
விலை: ரூ 160
****
அண்மை பதிவு :

தொல்லை காட்சி: அரவிந்த் சாமி- மிஸ்டர் பீன்- மௌன ராகம்  

கடல் = சொதப்பல் ; விமர்சனம் 

3 comments:

  1. அருமையான பகிர்வு! இந்த சுஜாதா புத்தகம் முன் எப்போதோ வாசித்த ஞாபகம்! கிடைத்தால் மீண்டும் வாசிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  2. ஹிந்திப் பட விமர்சனத்தில் ரிஷி படம் இருக்கிறதா என்று பார்த்தேன். போண்டா மாதிரி உப்பிய கன்னங்களுடன் குடும்பப் பெருமை மாறாமல் இவரைச் சமீபத்திய டிவி பேட்டிகளில் பார்த்தது நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
  3. நீங்கள் அவதானித்த லொஜிக் மிஸ்டேக்குகளுடன் புதிதாக ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள் முடிந்தால் விடை சொல்லுங்கள்.... இந்த நாவல் வாசித்ததிலிருந்து எனது தலையை குடைந்து கொண்டிருக்கிறது..

    * கொலைச்சம்பவம் நடந்து முடிந்ததும் போலீஸ் விசாரணையில் அந்த அறையிலிருந்து ராகேஷ் இனது காலணி தடயங்கள் கிடைக்கின்றன. பின்னர் அதுவே கதையை 200 பக்கங்களை தாண்டி நகர்த்துகிறது. ஆனால் அதே அறைக்கு தானே மணி, திவ்யா, மற்றைய நபரும் வந்து கொலை செய்தார்கள்.. அவர்கள் காலடி தடயங்கள் தேடுதலில் எங்கே போனது? அது இருந்திருந்தால் 50 பக்கங்களோடு கதை குளோஸ்.. ஆனால் மாயா என்ற சொல்லில் ஒட்டு மொத்த கதையையும் திறமையாக கோர்த்து இருப்பார் சுஜாதா.. ஒரு வருடம் முன்பு வாசித்திருந்தாலும் பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பு குறையாத நாவல்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...