மீனவர் துயரத்திற்கு பதிவர்களிடம் எழுந்துள்ள எழுச்சி சேர வேண்டியவர்களிடம் சேரும் என நம்புகிறேன். பதிவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அவசியமான விஷயத்திற்கு குரல் குடுப்பது நல்ல விஷயம். இந்த விஷயத்தில் நானும் பதிவர்கள் அனைவரின் உணர்வை பிரதி பலிக்கிறேன். அரசாங்கம் மனது வைத்தால் இந்த பிரச்னையை நிச்சயம் தீர்த்திருக்கலாம். இப்போதாவது தீர்க்க வேண்டும்.
சிறுத்தை
புதிய நடிகர்களில் கன்னா பின்னாவென வளர்ச்சி அடைந்திருப்பதும், ரசிக்க வைப்பதும் கார்த்தி தான். சூர்யா முதல் ரெண்டு மூணு வருஷம் சரியான ரம்ப படங்களாக மட்டுமல்ல, அவற்றிலும் நன்கு நடிக்க தெரியாமல் இருந்தார். (இன்று அநேகமாய் ரஜினி, கமலுக்கு அடுத்து சூர்யா மார்கெட் இருக்கலாம்).
முதல் பாதி கார்த்தி & சந்தானம் அடிக்கும் லூட்டி .. சிரிச்சு மாளலை. கார்த்திக்கு முதல் படம் முதலே காமெடி மிக நன்றாக வருவது சந்தோஷமான விஷயம். கல்யாண வீட்டில் திருட்டு, சந்தானத்தை மாட்டி விடுவது, மயில் சாமியை அவர் அலுவலக டாயலட்டில் கட்டி போட்டு விட்டு அவர் பைக்கில் தமன்னாவுடன் செல்வது என கார்த்தி அடிக்கும் கொட்டம் முதல் பாதியில் நம்மை சிரித்து கொண்டே இருக்க வைக்கிறது. போலிஸ் கார்த்தி வழக்கமான சினிமா போலிஸ் தான். இவ்வளவு சீக்கிரத்தில் கார்த்தி ரெண்டு பாத்திரங்களில் வித்யாசம் காட்டுவது மட்டும் ஆச்சரியம். ராக்கெட் ராஜா கிளைமாக்சில் சந்தானத்துடன் சேர்ந்து வில்லன்களை கலாய்க்கிறார். தமன்னா வழக்கம் போல தமிழ் சினிமாவின் லூசு ஹீரோயின். பாடல்கள் சொதப்பல். கார்த்தி & சந்தானத்துக்காக ஒரு முறை பார்க்கலாம்
சொந்த வெளம்பரம்
அரிமா சங்கத்திற்காக பதிவர் ஈரோடு கதிர் நடத்தும் சுவடுகள் இதழில் நர்சிம், ராஜ சந்திரசேகர், கதிர் ஆகியோருடன் என்னுடைய இந்த கவிதையும் பிரசுரம் ஆகியுள்ளது.
எங்குமுண்டு கவிதை
கவிஞனின் வேலை
மொழி பெயர்ப்பதே
நன்றி கதிர்!
ரசித்த வரிகள்
கூட்டத்திலிருக்கும் போது பேச்சில் சிக்கனமாயிருங்கள்.
தனிமையில் இருக்கும் போது சிந்தனையில் சிக்கனமாயிருங்கள்.
புழுதி வாக்கம் பள்ளிக்கு உதவிகள்
புழுதி வாக்கம் பள்ளி பற்றி எழுதிய பதிவை வாசித்து விட்டு இது வரை பிளாக் பக்கம் நாம் பார்த்திராத சிலர் தொடர்பு கொண்டு உதவி செய்ய முன் வந்துள்ளனர். அனைத்தும் பாதி நிலையில் உள்ளது. முழுதும் முடிந்த பிறகு யார் யார், யாருக்கெல்லாம் உதவினார்கள் என நிச்சயம் பகிர்கிறேன். இப்போதைக்கு வருகிற தொலை பேசி அழைப்புகளை வைத்து ஹவுஸ் பாஸ் " என்னங்க.. இதே வேலையா இருக்கீங்க போல" என்றார் சிரித்தவாறே!! என்றாலும் என்னை அவர் தடையின்றி அனுமதிக்க காரணம் அந்த குழந்தைகளை அவர் நேரில் வந்து பார்த்தது தான். ஆம் அன்று நான் பள்ளிக்கு சென்ற போது அவரும் வந்திருந்தார். பிளாகில் வெளியிட்ட புகை படங்கள் அவர் எடுத்தது தான். நன்றி மேடம். :))
சட்ட சொல்: சம்மன்ஸ் & வாரன்ட்
(கொஞ்ச நாட்களாக வானவில்லில் சட்ட சொல் எழுத வில்லை. இனி நிச்சயம் தொடர்கிறேன்)
சம்மன்ஸ் & வாரன்ட் இரண்டுமே கோர்ட் அனுப்பும் தாகீதுகள் தான். குற்றம் சற்று சிறிதானால் அதற்கு சம்மன்ஸ்சும், பெரிதானால் வாரன்ட்டும் வழங்கப்படும். குற்றத்திற்கு ரெண்டு வருடத்துக்குள் தண்டனை இருக்க கூடும் என்றால் சம்மன்ஸ்சும், ரெண்டு வருடத்திற்கு மேல் எனில் வாரன்ட்டும் கோர்ட் அனுப்பலாம்.
வாரன்ட்டை பெயிலபிள் வாரன்ட் & நான் பெயிலபிள் வாரன்ட் என இரண்டாக சொல்வார்கள். கைது செய்த பின் பெயிலில் வெளியே வர கூடிய குற்றங்கள் பெயிலபிள் வாரன்ட் எனப்படும் . நான் பெயிலபிள் வாரன்ட் என்பது பொதுவாக பெயில் கிடைக்காத பெரிய குற்றங்கள் (அவற்றுக்கும் பெயில் வாங்கி தரும் திறமையான வழக்கறிஞர்கள் உண்டு என்பது வேறு விஷயம்)
அய்யாசாமி
அய்யாசாமியே ஒரு மாஜி குண்டர் தான். கடந்த ஒரு வருஷமா உடம்பை குறைச்சிட்டார். அவ்ளோ தான். உடம்பை இவர் குறைச்சாலும் குறைச்சார். யாரையாவது சற்று ஓவர் வெயிட்டாக பார்த்தால் "அய்யோ ! அய்யோ ! எப்படி தான் இப்படி குண்டா உடம்பை வச்சிக்கிட்டு இருக்காங்களோ" என மனசுக்குள் சிரிக்கிறார்.வேலை பளுவால் கொஞ்ச நாள் ஜிம்முக்கு போகாட்டி, அய்யாசாமி, மறுபடி பழைய குண்டர் ஆகிடுவார்னு யாராவது அவருகிட்டே சொல்லுங்க சார். இவர் பண்ற அலும்பு தாங்க முடியலை.

