Monday, October 31, 2011

வானவில்: விப்ரோ பிரேம்ஜியும் நிலா ரசிகனும்

சென்னை ஸ்பெஷல் :வேளச்சேரி மெக் டொனால்ட்ஸ்

வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிலையத்திற்கு சற்று தள்ளி உள்ளது மெக் டொனால்ட்ஸ். எங்கள் பெண் ரொம்ப நாளாக போகணும் என சொல்லி வந்தாள். இப்போது தான் போக முடிந்தது. மெல்லிய சவுண்ட் சிஸ்டத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் ஒலிக்க, வித்யாசமான வடிவில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து சாப்பிடுவது இனிமையான அனுபவமாக இருந்தது. வெறும் பன், பிஸ்சா போன்ற சமாச்சாரங்கள் எப்படி வயிற்றை நிரப்பும் என தயக்கம் இருந்ததால் தான் இது வரை போகாமல் இருந்தேன். ஆனால் வயிறு நன்கு நிரம்பவே செய்தது. விலை சற்றே கூடுதல் தான் !! ஆனாலும் நாக்கு (இனிய உணவு), காது (ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள்), உடல் (சில்லென ஏசி) அப்புறம் கண் (எப்புடின்னு கேட்காதீங்க; ஹவுஸ் பாஸ் ப்ளாக் படிக்குறாங்க) என எல்லா அவயங்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் மெக் டொனால்ட்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. இனி அவ்வப்போது போவோம் என நினைக்கிறேன் !

அசீம் பிரேம்ஜி துவங்கும் பள்ளிகள்


விப்ரோ சேர்மன் அசீம் பிரேம்ஜி ஏற்கனவே நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபட்டுள்ளார். இப்போது இந்தியா முழுதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு இலவச பள்ளிகள் துவக்க உள்ளார். மொத்தம் 1300 பள்ளிகள் !! முழுக்க முழுக்க அவரது சொந்த பணத்தில் துவங்க உள்ள பள்ளிகள் இவை ! அரசு பள்ளிகளுக்கு இவை நல்ல மாற்றாக இருக்கும் என கருதுகிறார்கள். மேலும் இந்த யோசனை வெற்றிகரமாக செயல் பட்டால் இன்னும் பல கார்பரேட் முதலாளிகளும் இவ்வழியை பின் தொடர்வார்கள் என்றும் நம்பலாம். இந்த நல்ல செயலுக்காக அசீம் பிரேம்ஜி அவர்களை மனதார வாழ்த்துவோம் !!

இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் டூர்


இந்தியா இங்கிலாந்தில் செம உதை வாங்கினாலும், இங்கு வந்த அவர்களை வறுத்து எடுத்து விட்டனர். 5 - ௦ 0 என்பது செம ரிசல்ட் இல்ல? ஒரே 20-20 -ல் தோற்றால் கூட, அது பெரிய விஷயம் இல்லை விடுங்க !! அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சீரிசுக்கு நிறைய இளைஞர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ஓட்டை டீம் தான். எனவே சீரிஸ் அதிக சுவாரஸ்யமாக இல்லாமல் போகலாம். ஒரே எதிர்பார்ப்பு சச்சினின் நூறாவது செஞ்சுரி! தீபாவளிக்கு வாங்கிய சரங்களில் இன்னும் சில மிச்சமிருக்கு சச்சின் உங்களுக்காக !!

ரசித்த கவிதை


பொம்மைகள் குவித்திருக்கும் அறை

பொம்மைகள் குவித்திருக்கும்
அறைக்குள் அனுமதியின்றி நுழைகிறது
மெளனம்.

ஒவ்வொரு பொம்மையிடமும் ஏதோவொன்றை
தேடுகிறது.
அறையின் மூலையில் அமர்ந்து
சிறிதுநேரம் விசும்புகிறது.
பின்,
பெண்ணாகி வெளியேறுகிறது.

மரித்த குழந்தையின் பொம்மைகளை
வேறெப்படி அணுகுவாள் அவள்? - நிலா ரசிகன்

நாட்டி கார்னர்

நாட்டியின் பல்வேறு செல்ல பெயர்களில் ஒன்று "பச்சை". நாட்டி வெளியே கரும் பச்சையாக இருக்கும். சிறகுகளுக்கு உள்புறம் வெளிர் பச்சை நிறமாக இருக்கும். இந்த வெளிர் பச்சை நிறம் தான் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். தன் சிறகுகளை அது நீவி விட்டு கொள்ளும் போது இந்த பச்சை நிறம் நன்றாக தெரியும் !

பார்த்த படம்: வெப்பம்


முடியலை. வலிக்குது. வேணாம். அழுதுடுவேன்

தப்பாய் SMS அனுப்பிய அய்யாசாமி

அய்யாசாமி தினம் மாலை தன் அலுவலகத்தில் ஜிம்முக்கு போவார். (க்கும்) எப்போதாவது போக முடியா விட்டால் ஜிம் மாஸ்டருக்கு "இன்று வரலை.." என மெசேஜ் அனுப்புவார். அப்படி ஒரு முறை மெசேஜ் அனுப்பும் போது ஜிம் மாஸ்டருக்கு அனுப்பாமல் பழக்க தோஷத்தில் தன் ஹவுஸ் பாசுக்கு அனுப்பிட்டார் !

"I am not coming today " என்று மாலை நேரத்தில் Mrs. அய்யா சாமி மெசேஜ் பார்த்ததும், "வழக்கம் போல தானே இன்னிக்கும் காலையில திட்டினோம்; கொஞ்சம் அதிகம் திட்டிடோமோ ? மனுஷன் அப்செட் ஆகிட்டார் போலருக்கே" என அய்யாசாமிக்கு போன் செய்து "ஏங்க கோபமா? வீட்டுக்கு வந்துடுங்க" என சொல்ல, அய்யாசாமி இது தான் சாக்குன்னு "போ... நீ ரொம்ப திட்டிட்டே" என செம பிகு பண்ணிக்கிட்டார். அப்புறம்? அப்புறமென்ன அப்புறம் ? கழுதை கெட்டால் குட்டி சுவரு. அய்யாசாமிக்கு ஆபிஸ் விட்டா வீடு!

Thursday, October 27, 2011

சென்னை தீபாவளி: புது ரிலீஸ்: டிவி நிகழ்ச்சிகள்- விமர்சனம்

தீபாவளி ரிலீஸ்

ஒவ்வொரு தீபாவளிக்கும் குறைந்தது ஏழெட்டு படங்கள் முன்பெல்லாம் ரிலீஸ் ஆகும் . ஒரே படத்தை ஏகப்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் புது வழக்கத்தினால் இவ்வருடம் ரெண்டே படங்கள் தான் ரிலீஸ் ஆனது. ப்ளாகர்கள் மட்டுமல்ல மற்றவர்களுடனும் பேசிய வரையில் ஏழாம் அறிவுக்கு மிக்ஸட் ரெஸ்பான்ஸ் தான் !

ஒரு சிலர் வித்யாசமான கான்செப்ட் என்றாலும், பெரும்பாலானோரின் கருத்து "படம் எதிர்பார்த்த அளவு இல்லை" என்பது தான் ! ஹிட்டா இல்லையா என்பது போக போக தெரியும் ! எப்படியும் பெரும்பாலான தியேட்டர்களில் வரும் ஞாயிறு வரை அடவான்ஸ் புக்கிங் விற்று விட்டனர். அதில் ஒரளவு காசு பார்ப்பார்கள்.

வேலாயுதம் வழக்கமான விஜய் படம் என்று தான் தெரிகிறது. விஜய் படம் சுமாராக இருந்தாலே ஓடி விடும். ஆயினும் மிக பெரிய பட்ஜெட் என்பதால் நிஜமாகவே போட்ட பணத்திற்கு மேல் வர, படம் சூப்பர் ஹிட் ஆக வேண்டும் !! இயக்குனர் ராஜாவிற்கு ஒரு கேள்வி: இயக்குனர் திருப்பதி சாமி இறந்து விட்டார் என்றாலும், அவர் எழுதிய ஆசாத் படத்தை, ரீ -மேக் உரிமை வாங்காமல் இப்படியா உருவுவது ? இணையத்தில் வேலாயுதம் விமர்சனம் படித்து விட்டு விக்கி பீடியாவில் ஆசாத் கதை படித்தால், அச்சு அசலா அப்படியே இருக்கு !!

இனிப்புகள்

சென்னையில் பலரும் தங்கள் வீடுகளில் செய்யும் இனிப்புகளை நெருங்கிய உறவினர் இல்லங்களுக்கு மட்டுமே தருகிறார்கள். தெருவில் இருப்போர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு கடைகளில் வாங்கிய இனிப்புகள் தான் விநியோகம் செய்கின்றனர். எப்படியோ தெருவில் இருக்கும் ஒவ்வொருவரும், பிறருக்கு இனிப்பு தரும் பண்டிகையாக இன்னும் தீபாவளி தான் இருக்கிறது.

அய்யா சாமி ஹவுஸ் பாஸ் செய்தது : முறுக்கு, அதிரசம், ரவா உருண்டை மற்றும் முதல் முறையாக லட்டு !! “மற்ற வீட்டு இனிப்புகளை விட நீ செய்தது தான் நல்லா இருந்தது “ என சொன்னார் அய்யா சாமி (பிழைக்க தெரிந்த மனுஷன்!)

இவை தவிர வடை, சுழியன், இட்லி, தோசை, வெங்காய சாம்பார் (இதற்கு இட்லி சாம்பார் என்றும் மறு பெயர் உண்டு) ஆகியவை தீபாவளி காலை செய்யப்பட்டன.

வெடிகள்

வெடி விலை இவ்வருடம், சென்ற தடவையை விட குறைந்தது ரெண்டு மடங்காவது உயர்ந்து விட்டது. மழை வேறு விடாது பெய்தது. கொஞ்சம் விடுகிற நேரம் அல்லது லேசாக தூறல் போடும் நேரம் பார்த்து வெடி வெடித்தனர்.

சென்னையில் இருந்தால் தீபாவளி அன்று மாமனார் (தாம்பரம்) இல்லம் செல்வோம். தாம்பரத்தில் இரவு நிறைய பேர் வைக்கிற வான வேடிக்கைகள் அப்பப்பா !! ஒவ்வொரு வருடமும் பார்த்து வியக்கிறோம் ! விதம் விதமான கலர்களில் அடுத்தடுத்து வரிசையாக வானத்தில் சென்று வெடிக்கும் வெடிகள். சில மேலே சென்று விசில் போல சத்தம் போடுகிறது. சில கை தட்டல் போல கேட்கிறது. வானில் வெடிக்கும் போது முதலில் ஒரு டிசைனும் அப்புறம் வேறு டிசைனும் காண்பிக்கிறது !

என் பெண்ணும் மச்சான் பையனும் கிட்ட தட்ட நாள் முழுதும் அலுக்காமல் வெடித்து கொண்டிருந்தார்கள் !

மழை

இந்த ஆண்டு தமிழகத்தின் பிற இடங்களில் நிறையவே மழை பெய்தாலும் சென்னையில் மிக குறைவாகவே பெய்துள்ளது. இம்முறை தீபாவளி நேரம் மழை விடாது பெய்தது. வியாபாரம் மற்றும் இன்ன பிற கொண்டாட்டங்கள் இதனால் சற்று பாதித்து விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

சாலைகளும் பயணமும்

பேருந்துகள் செல்லும் முக்கிய சாலைகளில் பெரும்பாலும் வாகனங்கள் குறைவாக தான் உள்ளது. ஆனால் பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் ஓரளவு இருக்க தான் செய்கிறது. உறவினர் இல்லங்கள் மற்றும் சினிமா செல்லும் மனிதர்கள் பேருந்தை நாடுகிறார்கள்.

நாங்கள் தாம்பரத்திலிருந்து இரவு எங்கள் வீட்டுக்கு திரும்ப Fast track கால் டேக்ஸியில் ஏற்கனவே புக் செய்திருந்தோம். கிளம்ப சற்று நேரத்திற்கு முன் கால் செய்து கேட்க, "வண்டி இல்லை. வர முடியாது" என சாதாரணமாக சொல்கிறார்கள். தாங்களாகவே கால் செய்யணும் என கூட தெரியலை சென்னையின் மிக பெரிய Fast Track கால் டேக்சி நிறுவனத்துக்கு !! வேறு சில கால் டேக்சியும் முயற்சிக்க யாரும் வர முடியாது என்று கூறி விட்டனர். பின் மச்சான் புண்ணியத்தில் எப்படியோ ஒரு கார் கிடைத்து வீடு வந்து சேர்ந்தோம்

டிவி சிறப்பு நிகழ்ச்சிகள்

பட்டாசு வெடிப்பது, தெருவில் அனைத்து வீடுகளுக்கும் விசிட், தாம்பரம் பயணம் இவற்றின் இடையே ஆங்காங்கு டிவி பார்த்த வரை இதோ ஒரு விமர்சனம் :

காலை விஜய் டிவியில் சிவகுமாரின் தவப்புதல்வர்கள் என்று சிறப்பு நிகழ்ச்சி. எப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறாங்க பாருங்க ! சிவகுமாரின் தவப்புதல்வர்கள் அப்படின்னா சூர்யா and கார்த்தி பற்றி என ஆர்வமாய் பார்ப்போமே என இப்படி வைக்கிறாங்க ! ஆனால் நிகழ்ச்சி சுதந்திரத்துக்கு போராடிய தலைவர்கள் பற்றியது. சுதந்திர போராட்ட வரலாறை கதை போல் சொல்லி சென்றார் சிவகுமார். இவரின் ஞாபக சக்தி & உழைப்பு தான் ஒவ்வொரு முறையும் ஆச்சரிய படுத்துது !

முன்பெல்லாம் பண்டிகை அன்று ஒரு படம் தான் இருக்கும், இப்போதெல்லாம் குறைந்தது ரெண்டு அல்லது 3 படங்கள் போடுகிறார்கள். விளம்பரங்கள் போட்டு, கொன்று, படத்தை நாலு மணி நேரத்துக்கு குறையாமல் ஓட்டுகிறார்கள். யாரும் ஒரு படத்தை மட்டுமே பார்த்து கொண்டு அமர்வதில்லை. விளம்பரங்களின் போது வேறு படம் சென்று விட்டு தான், அங்கிருந்து இங்கு வருகிறார்கள்.

முன்பே எழுதியது போல், பாஸ் (எ) பாஸ்கரன் மற்றும் பயணம் ஓரளவு பார்த்தோம். சிங்கமும் மிக கொஞ்சம்.

ராஜ் டிவி காலை சிறப்பு படம் வீரா !! ஏங்க எந்த காலத்தில் இருக்கீங்க?

கலைஞரில் லியோனி பட்டி மன்றம் "திரைப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் காரணம் இயக்குனரா? நடிகரா?" ஏனோ எதிர் பார்த்த அளவு இல்லை. சிரிப்பு ஆங்காங்கு தான் வந்தது.

போராளிகள் பட குழுவினர் சமுத்திர கனி மற்றும் சசிகுமார் பேட்டி கலைஞரில் வந்தது. சசிகுமார் வேஷ்டி & தாடியுடன் சண்டை போடுவதும், கத்தி கபடாவுடன் ஓடுவதும் மறுபடி மறுபடி காண்பித்தார்கள். தொடர்ந்து கேப் விடாமல் 48 மணி நேரம் ஷூட்டிங் எடுத்தார்களாம் ! படத்தை பற்றி சொன்ன முக்கய ஸ்பஷல் தகவல் இதுவே !

சன், விஜய், கலைஞர் என எல்லா சேனல்களிலும் முருகதாசும் சூரியாவும் வந்து போதி தர்மர் பற்றி பேசி கொண்டிருந்தார்கள் (இவ்வளவு ஹைப் கொடுத்தது தான் தப்போ?)

ஜெயாவில் மதியம் வேலாயுதம் சிறப்பு நிகழ்ச்சி. விஜய், இயக்குனர் ராஜா, இசை அமைப்பாளர் மற்றும் நடன இயக்குனர்கள் ஆஜர். குட்டி பசங்க சில பேர் வேலாயுதம் பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்கள். சில பாடகர்கள் படத்து பாட்டை பாடினார்கள். நிகழ்ச்சி நிச்சயம் இன்னும் சுவாரஸ்யமா இருந்திருக்கலாம்.

அலுவலக தீபாவளி

தீபாவளிக்கு ஒரே நாள் தான் லீவு ! தீபாவளிக்கு முதல் நாள் அலுவலகத்தில் அனைவரும் வேஷ்டி சட்டையில் (Ethnic wear) வரலாம் என்பதால் நானும் பட்டு வேஷ்டியில் சென்றிருந்தேன். அன்று நடந்த பல போட்டிகளுக்கு நம்மை ஒரு நடுவர் ஆக்கிட்டாங்க.

தியா மேகிங் , கேண்டில் கார்விங் (Candle Carving ), Bay Decoration, Ethnic wear ஆகிய போட்டிகள் நடந்தது.

கேண்டில் கார்விங்கில் ரெண்டு யோசனைகள் ரொம்பவே கவர்ந்தது. ஒரு டீம் எல்லா வெடிகளும் மெழுகில் செய்திருந்தனர். இன்னொரு டீம் செஸ் போர்ட் செய்து அதில் அனைத்து காய்களும் மெழுகில் செய்திருந்தனர். இவர்கள் இருவரும் தான் வென்ற அணிகள்.

அந்தந்த Floor-ல் சிறந்த உடை அணிந்த ஆண், பெண் ஒருவருக்கு பரிசு தந்தோம். அழகிய ஆண், பெண்களை தயக்கம் இன்றி நடுவர் என்கிற முறையில் ரைட் ராயலா பார்க்க முடிந்தது. HR டீம் : அடுத்த முறையும் இந்த மாதிரி போட்டிகளுக்கு நம்மை நடுவரா கூப்பிடுங்கப்பா !!

Monday, October 24, 2011

வானவில்: வந்தான் வென்றான்:செல்மா கவிதை: தீபாவளி

பார்த்த படம்: வந்தான் வென்றான்

ஜீவா மற்றும் இயக்குனர் கண்ணன் ஆகியோருக்காக பார்த்து நொந்த படம். என்னமோ ஒரு கதை !! திரைக்கதை..  ஒரு பக்கம் ஊசலாடுது. தாப்சி "One film wonder" தான் போலும். நடிப்பு வரவில்லை என்பதோடு வெள்ளையாக உள்ளதை தவிர லட்சணமாக இல்லை. இவரை வைத்து படத்தின் இறுதியில் உள்ள சஸ்பென்ஸ் மட்டுமே சற்று வித்யாசமான ஒரே விஷயம். காஞ்சன மாலா & அஞ்சனா ..  அஞ்சனா ..ரெண்டு பாடல்கள் கேட்க (மட்டும்) இனிமை. இந்த படம் வெளியான நாற்பது நாளில், இந்த தீபாவளிக்கு ஜெயாவில் போடுகிறார்கள். தப்பி தவறி பார்த்துடாதீங்க !!

ரசித்த கவிதை

யாரோடும் நின்று போவதே இல்லை இந்த உலகம்.

எவர் வாயிலும் இல்லை இவ்வுலகின் இறுதிச் சொல்.
உண்மையில் எந்த பாதையும் எங்கும் முடிவடைவதில்லை
உங்கள் பாதையிலிருந்து தப்புக
உங்கள் மந்தையிலிருந்து தப்புக

உலகம் அப்படியொன்றும் சிறியதல்ல

கூடவே
இன்னும் ஒரு துளி அதிகமாய் அன்பு செய்.
இன்னும் கொஞ்சம் இறுக்கமாய் அணைத்துக் கொள்.

இனி எல்லாம் நலமாகும். வாழ்வோம் இனி.
                                                 -செல்மா பிரியதர்ஷன்
ஜாலி போஸ்டர் 



ரசித்த டுவிட்டர்

டெலிபோன்,  EB என அரசு அலுவலகத்தில் பணி புரிபவர்கள் மத்தியான நேரத்தில் சாப்பிட போறாங்களா, சமைச்சு சாப்பிட போறாங்களா? எவ்ளோ நேரம் ஆகுது மை லார்ட் திரும்ப வர ?

தீபாவளிக்கு டிவி படங்கள்


உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இருந்தாலும் ஒரே இடத்தில படிக்கலாம் என்பதால் தருகிறேன்

சன்- சிங்கம் (6 pm ); வேட்டைக்காரன் (காலை பத்து மணி) ஆயிரத்தில் ஒருவன் (மதியம்) 

கலைஞர் - பாஸ் என்கிற பாஸ்கரன் (காலை 10.30) கச்சேரி ஆரம்பம் (மதியம் 3 மணி)

ஜெயா - வந்தான் வென்றான் &180
ராஜ் - ராவணன் ( மாலை 7 மணி)
விஜய் - அவன் இவன் (காலை 11 மணி); பயணம் (மதியம் 3 மணி)

இவற்றில் பார்ப்பதற்கு நாம் பரிந்துரைப்பது

காலை : பாஸ் என்கிற பாஸ்கரன்;
மதியம் பயணம்

நீங்கள் பார்க்க போவது என்ன படம்?

அய்யாசாமி

அய்யாசாமிக்கு சின்ன வயது முதல் வெடி வெடிப்பதென்றால் பயம் ! சங்கு சக்கரம், புதவானம் இவை தான் அவர் அதிக பட்சம் கொளுத்துவது. ஆனால் திருமணத்துக்கு பின் அவர் மனைவி வெடிகளில் புகுந்து விளையாடுவது பார்த்து காம்பிளக்ஸ் ஆகிட்டார். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வீட்டம்மா குடுத்த டிரைனிங்கில் தேறி இப்போல்லாம் வெடி வெடிக்க ஆரம்பிச்சுட்டார். இன்னிக்கும் அவர் வீடடில் தீபாவளியன்று காலையில் முதல் சரம் வெடிப்பது அவர் மனைவி தான். அய்யா சாமி ஆற்றில் முதல் முக்கு முழுங்க தயங்குவோமே அப்படி தயங்கி, தயங்கி கொஞ்ச நேரம் ஆனதும் வெடிக்க ஆரம்பிச்சிடுவார். ("ஏன்யா பயப்புடுறீர்?" என்றால் "வேற ஒண்ணும் இல்லை; ஒரு வருஷம் ஆச்சில்லையா? அதான் கொஞ்சம் டச் விட்டு போயிடுச்சு" என்பார்)

பலகாரம் (குறிப்பா முறுக்கு), டிவி நிகழ்ச்சிகள், தெருவிலிருக்கும் குட்டி பசங்களுடன் சேர்ந்து கொண்டு வெடி வெடிப்பது என அய்யா சாமி தீபாவளியன்று செம பிசி!

அய்யா சாமி சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

Wednesday, October 19, 2011

வானவில்: வாகை சூடவா - புரட்டாசி - ஷ்ரேயா கோஷல்

பார்த்த படம்: வாகை சூடவா

இந்த வருடம் வெளியான மற்றொரு அற்புதமான படம் ! ரொம்பவே ரசித்து பார்த்தேன். விமல் அப்பாவி ஆசிரியராக அசத்துகிறார். பழைய பாக்யராஜ் போலவே இவர் எப்போதும் பல்பு வாங்குவது சிரிக்கும் படி உள்ளது. (இதற்காகவே பாக்யராஜை இவருக்கு அப்பாவாக போட்டார்களோ?) ! நடிக்க தெரிந்த புது ஹீரோயின் இனியாவை பார்க்க ஆச்சரியமாக உள்ளது ! முகத்தில் பல்வேறு உணர்வுகளையும் அழகாய் காட்டுகிறார்.சின்மயி பாடிய "சாரை காத்து" பாட்டு மிக இனிமை. குட்டி பசங்க அனைவரும் சிரிக்கவும் நெகிழவும் வைக்கிறார்கள். படிப்பின் அவசியத்தை பொட்டில் அடித்த மாதிரி சொல்கிறது படம்.

இன்றைக்கு இந்த படம் relevant-ஆ என்றால். ஆம் இன்றும் relevant -தான். இன்னும் இந்தியாவில் எழுத படிக்க தெரிந்தோர் 60சதவீதம் பேர் தானே உள்ளனர்? மீதம் 40 சதவீதம் பேர் கல்வி அறிவு இல்லாதோர் தானே? அந்த மக்களுக்கு இந்த படம் சென்று சேர வேண்டும் ! படிப்பினால் உண்டாகும் மாறுதலை அழகாய் காட்டி படத்தை முடிக்கும் போது மிக நிறைவான  படம் பார்த்த திருப்தி வருகிறது.

ஒரே நேரத்தில் மனம் விட்டு சிரிக்கவும் நெகிழவும் வைக்கிற படம் ! இந்த படம் நன்கு ஓடாதது நம் ரசனை குறைவையே காட்டுகிறது !

நாட்டி கார்னர்

நாட்டியின் கூண்டுக்குள் சின்னதாய் ஒரு மண் சட்டி உண்டு. இரு பறவைகள் கூண்டுக்குள் இருந்தால், பெண் பறவை சென்று முட்டை இட்டு வைக்க இது வைக்கப்பட்டிருக்கலாம். நம்ம நாட்டி தான் தனியாக உள்ளதே ! பயம் வந்து விட்டால் இந்த மண் பானை மேல் போய் ஏறி கொள்வதை வழக்கமாய் வைத்துள்ளது நாட்டி ! அதன் கூண்டுக்குள் நாம் கை விட்டாலே பானையில் போய் ஏறி கொள்ளும். போலவே பக்கத்து வீட்டு நாய் எங்கள் வீட்டுக்குள் வந்து விட்டால், அது வெளியே போகும் வரை பானை மேல் ஏறிக்கொண்டு இறங்காது . கூண்டிற்குள் உள்ள பானை தான் ரொம்ப பாதுகாப்பான இடம் என நினைத்து கொண்டிருக்கிறது நாட்டி ! (நிற்க. இப்போதெல்லாம் கூண்டின் உள்ளேயே அநேகமாய் போவதில்லை. கூண்டின் மேலேயே தான் அமர்ந்து கொண்டு இருக்கிறது)

ஜாலி போஸ்டர் (புது பகுதி)
                 

ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர்

If you look for good, you will find good. If you look for bad, you will find bad. In life, you always find what you look for.

 ஹாப்பி பர்த்டே டு யு & Same to you

எனது பெண் மற்றும் நண்பன் தேவா இருவருக்கும் ஒரே நாள் பிறந்த நாள். தேவாவை ஏற்கனவே வீடுதிரும்பலில் எழுதிய பல கட்டுரைகள் மூலம் ( சில்க், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் -நேரடி அனுபவம்) நீங்கள் அறிந்திருப்பீர்கள். தேவா டில்லியில் இருப்பதால் எப்போதும் என் பெண்ணும் தேவாவும் "ஹாப்பி பர்த்டேடு யு" என்றும் " Same to you uncle" என்றும் சொல்லி கொள்வார்கள். அதிசயமாய் இந்த வருடம் பிறந்த நாளான அக்டோபர் 17-அன்று தேவா சென்னையில் இருந்தான் . நேரில் சந்தித்து இருவரையும் ஒன்றாக கேக் வெட்ட வைக்க திட்டமிட்டிருந்தோம். சில காரணங்களால் அது முடியாமல் போனது.

தேவா பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக (அக்டோபர் 16 ) நானும் தேவாவும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தோம். அது பற்றி தனி பதிவு பின்னர்...

பாடகிகளில் நம்ம தலைவி

பாடகிகளில் எனக்கு ரொம்ப பிடித்தமானவர் ஷ்ரேயா கோஷல். இவர் குரலுக்காக மட்டுமே இவரை பிடிக்கும் என்று சொன்னால் நம்பவா போறீங்க? "ஹீரோயினா நடிங்க" என எத்தனையோ பேர் கெஞ்சியும் கேட்காதவர் இப்போ விளம்பர படத்தில் நடிச்சிருக்கார். இதை பார்த்து ஆறுதல் அடைவோம்



புரட்டாசி மாதம்
 
ஒரு வழியா புரட்டாசி மாதம் முடிந்தது. புரட்டாசி மாதம் முழுதும் நான்வெஜ் சாப்பிட மாட்டோம். பொதுவா Nonveg வாரம் ஒரு நாள் சாப்பிடுகிற ஆள் தான். அதுவும் மிக விரும்பி எல்லாம் சாப்பிடுவதில்லை. ஆனால் வலுக்கட்டயமா ஒரு மாதம் தள்ளி வைக்கிறப்போ, அதுவும் அந்த ஒரு மாதம் முடிகிறப்போ மறுபடி நான் வெஜ் சாப்பிடும் ஆசை துளிர்க்கிறது. தலப்பாக்கட்டி... We are coming !!

Tuesday, October 18, 2011

நாகூர், வேளாங்கண்ணி : பயண கட்டுரை

திடீரென தான் முடிவானது இந்தபயணம். எங்கள் ஊரான நீடாமங்கலம் சென்று விட்டு அப்படியே நாகூர், வேளாங்கண்ணி பக்கமெல்லாம் ஒரு ரவுண்டு அடிக்க திட்டம்.

நாகூர் ஒரு பதிவாக, வேளாங்கண்ணி தனியாக , பின் நீடாமங்கலம் பற்றியும் சில தகவல்களுடன் இன்னோர் பதிவு என இந்த பயண கட்டுரை வர உள்ளது. முதலில் நாகூரை பார்ப்போமா?

*******

நாகப்பட்டினத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நாகூர். நாகப்பட்டினம் மாவட்ட தலைநகரம் என்பதை அறிவீர்கள். இங்கிருந்து நாகூருக்கு தொடர்ந்து பேருந்துகள் உண்டு.

நாகூர் ஒரு சிறிய ஊர். இங்கு பெரும்பாலும் இஸ்லாமியர்கள் தான் வசிக்கிறார்கள். ஊரின் பொருளாதாரம் தர்க்காவிற்கு வரும் டூரிஸ்டுகளை வைத்தே உள்ளது. நாகூர் தர்கா ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ளது.


இங்கு இறைவனாக வணங்கப்படும் நாகூர் ஆண்டவர் குவாலியரில் இருந்த சூஃபி ஞானி முகமது கவுது என்பவரிடம் 10 ஆண்டுகள் ஞானமார்க்கத்தில் பயிற்சி பெற்றார். அப்போது நாகூர் ஆண்டவரின் சக குருகுல மாணவராக இருந்தவர் அக்பரின் அவையில் புகழ்பெற்ற இசைக் கலைஞராக இருந்த தான்சேன்.
பல ஊர்களிலும் இருந்த நாகூர் ஆண்டவர், தனது கடைசி 28 வருடங்களை  நாகூரில் கழித்ததாக சொல்கிறார்கள். இவர் முதன் முதலில் நாகூர் வந்தது வியாழக்கிழமை என்பதால் வியாழக்கிழமைகளில் ஏராளமான பேர் வந்து வணங்குகின்றனர்.

தர்கா உள்ளே செல்வது ஒரு வித்தியாச அனுபவம். ஆங்காங்கு இஸ்லாமிய புரோகிதர்கள் போல் உள்ளவர்கள் உட்கார்ந்து, யாருக்காகவாவது மந்திரம் சொல்லி கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் சாம்பிராணி போட்டு கொண்டிருக்க அங்கு நல்ல சாம்ப்ராணி வாசனை வீசுகிறது. சுற்றி அந்த குடும்பத்தினர் அமர்ந்துள்ளனர். இப்படி ஏராளம் பேர் அந்த இடத்தில அமர்ந்து மந்திரம் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
முக்கிய பிரார்த்தனை செய்யும் இடத்தினுள் ஆண்கள் மட்டுமே செல்லலாம். பெண்களுக்கு அனுமதி இல்லை. இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்கள் உள்ளே செல்லலாமா என தயங்கி நிற்க, உள்ளே போங்க என சொல்லி அனுப்பி வைத்தார்கள். உள்ளே போனதும் " வாங்க வாங்க" என கை குடுத்து வரவேற்கிறார்கள் ! அந்த சிறு இடத்தில ஆங்காங்கு சிலர் உட்கார்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு சுற்று சுற்றி விட்டு வெளியே வந்து விட்டேன்.

எல்லா கோயில்களிலும் உள்ளது போல், பணம் பறிக்கிற வழிகள் இங்குள்ள புரோகிதர்களும் செய்கிறார்கள். அவற்றில் சிக்காமல் இருப்பது நல்லது.

நாகூரில் ஒவ்வொரு வருடமும் 14 நாட்கள் "கந்தூரி திருவிழா" நடக்கிறது. இது அநேகமாய் மே மாதத்தில் நடக்கும். இந்த நேரத்தில் இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளிலிருந்தும் பலர் இங்கு வந்து வணங்குகின்றனர்.


தர்க்காவிற்கு வெளியே நிறைய பறவைகள் உள்ள கூண்டு உள்ளது. இது எதற்கு என்று விசாரித்த போது, சிலர் பறவைகள் வாங்கி தங்கள் தலையில் வைத்து பறக்க விடுவார்களாம். இதன் மூலம் அவர்கள் கஷ்டம் குறையும் என்பது நம்பிக்கை.

தர்க்கா இருக்கும் அதே இடத்தினுள் நிறைய கடைகள் உள்ளன. அவை பெரும்பாலும் பெண்கள் ஸ்டிக்கர் போட்டு, செயின் கம்மல் போன்ற சமாச்சாரங்கள் தான் விற்கின்றனர்.

நாகூரில் பஷீர் சுவீட்ஸ் என்கிற கடையில் இனிப்புகள் வாங்கினோம். இங்கு இனிப்புகள் மட்டுமே கிடைக்கிறது. காரம் எதுவும் கிடையாது. எனக்கு இதுவே சற்று வித்யாசமாக இருந்தது. பருத்தி அல்வா மற்றும் பால் கோவா வாங்கினோம். பால் கோவா அடடா ! சான்சே இல்லை ! அந்த சுவை இன்னும் நாக்கிலேயே இருக்கு ! நீங்கள் நாகூர் சென்றால் அவசியம் இந்த கடைக்கு செல்லுங்கள்.. அப்படியே இந்த கடையை அறிமுகப்படுத்திய எனக்கும் மறக்காமல் பால் கோவா வாங்கி விடுங்கள் :))

கீழே உள்ள வீடியோ யூ டியூபில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த கட்டுரையில் உள்ள பல விஷயங்களை இந்த வீடியோவில் காணலாம். முழுதும் பார்க்க முடியாவிடில் முதல் இரு நிமிடங்களாவது பாருங்கள்:


தர்க்காவிற்கு அருகே, பத்து நிமிட நடையில் நாகூர் ரயில் நிலையம் உள்ளது. இது தான் கடைசி நிறுத்தம் என்பதால் எளிதாக ஏறி உட்கார்ந்து விடலாம். அதன் பின் நாகப்பட்டினம் போன்ற இடங்களில் வேளாங்கன்னியில் இருந்து வரும் பலர் ஏறுகின்றனர். அப்போது உட்கார இடம் கிடைக்காது. எனவே நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் செல்வீர்கள் என்றால் நாகூர் கடைசியாக சென்றால், ரயிலில் திரும்ப வர எளிதாக இருக்கும்.

"திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேரும்" என்று ஹிந்துக்கள் நம்புகிற மாதிரி " நாகூர் சென்று வந்தால் பாசிட்டிவான ஒரு பெரும் மாற்றம் நடக்கும் என்பது இஸ்லாமியர்களில் பலரின் நம்பிக்கை !

                                                                               (பயணம் தொடரும்)

Saturday, October 15, 2011

உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க போவது யார்?

இப்போது தான் சட்ட மன்ற தேர்தல் முடிந்த மாதிரி இருக்கிறது. அதற்குள் இன்னொரு தேர்தல் !! தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தலும், உள்ளாட்சி தேர்தலும் அடுத்தடுத்து வருவது வழக்கம் தான்.

உள்ளாட்சி தேர்தலில் வெல்ல போவது யார் என்கிற கேள்விக்கு பதில் தரும் முன் வேறு சில விஷயங்களை பார்த்து விடுவோம்.

கடந்த இரு வாரங்களில் நாகை, வேளாங்கண்ணி, நீடாமங்கலம், தாம்பரம், மற்றும் நாங்கள் இருக்கும் மடிப்பாக்கம்,. வேளச்சேரி போன்ற பகுதிகளில் நடக்கிற பிரசாரங்களை நேரில் கவனித்து வருகிறேன். பிரசாரம் தூள் பறக்கிறது. அனைத்து அணிகளும் தனித்தனியே நிற்பதால் ஏகப்பட்ட வாகனங்கள், ஒலி பெருக்கிகள் !!

நான் சென்ற அனைத்து இடங்களிலும் ஒரு மணிக்கு ஒரு முறை வீட்டுக்கு ஒரு வேட்பாளர் வந்து ஓட்டு கேட்கிறார். யாரும் இவர்களை வீட்டின் உள் நுழைய கூட அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூட்டிய கதவின் உள்ளிருந்தே பேசியவாறு நோட்டிசை பெற்று கொண்டு திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

நகராட்சி தேர்தலில் வேட்பாளர்கள் இவ்வளவு ஆர்வம் காட்ட காரணம் மக்கள் சேவைக்கா? இல்லிங்கோ !! மிக அதிக துட்டு புரளும் இடம் அது தான்! ரோடு போடுவது, குப்பை அள்ளுவது, தண்ணீர் சப்ளை, வீடு கட்ட ப்ளான் அனுமதி என ஒரு ஊராட்சி தலைவர் முதல் கவுன்சிலர் வரை அனைவரும் பதவி உள்ள ஐந்து வருடத்தில் சர்வ நிச்சயமாக கோடிஸ்வரன் ஆகும் வாய்ப்பு. தவற விடுவார்களா என்ன?

சென்னை வந்த 15 வருடங்களில் நாங்கள் குடியிருந்த இடங்களில் உள்ள கவுன்சிலர்களின் வளர்ச்சியை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். தேர்தலில் நிற்கும் போது சைக்கிள் வைத்திருப்போர் கூட ஜெயித்த பின் முதலில் வாங்குவது டாட்டா சுமோ !! அதன் பிறகு அவர்கள் போடும் தங்க செயின்கள், பிரேஸ்லேட்டுகள் இவை குறித்தெல்லாம் எந்த வெட்கமும் அவர்கள் படுவதில்லை. அவர்களின் மாதந்திர சம்பளம் ஐந்து இலக்கம் கூட இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பின் எப்படி வருகிறது இத்தகைய வளர்ச்சி?

ஏற்கனவே சொன்னது போல் ரோடு முதல் வீடு வரை அனைத்து அனுமதிகளுக்கும் கிடைக்கும் பணம், கட்டை பஞ்சாயத்து இவையே காரணம்.

இந்த தேர்தலில் பல இடங்களில் மக்களுக்கு பண விநியோகம் அமோகமாக நடக்கிறது. சென்னையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாய் வரை தருகிறார்கள். ஐந்து பேர் உள்ள வீட்டுக்கு பத்தாயிரம் பெற்றுள்ளனர் . இது எனக்கு மிக நெருக்கமான ஒருவர் சொன்ன ஊர்ஜிதமான தகவல்.

இத்தகைய நிலையிலும் நாம் ஒட்டு போட தான் வேண்டுமா என்கிற அலுப்பு வரலாம். நிச்சயம் இந்த நிலையில் தான் ஓட்டு போட வேண்டும். குறிப்பாக கவன்சிலர் என்பவர் நமது தெருவிலோ அடுத்த தெருவிலோ இருக்கும் மக்கள் பிரதிநிதி. பெரும்பாலும் கவுன்சிலர்கள் வெற்றி வித்யாசம் நூறு ஓட்டுக்குள் தான் இருக்கும். சில முறை ஓரிரு ஓட்டுக்களில் தோற்போரும் உண்டு. எனவே நம் தெருவில் நிற்கும் கவுன்சிலரில் கட்சி பாகுபாடின்றி சரியான நபரை தேர்வு செய்வது மிக அவசியமாகிறது. சில இடங்களில் சுயேட்சையாக நின்று வெல்லும் கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினராவது மக்களுக்கு உண்மையான உதவிகள் செய்வார்கள் !

நிற்க. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் அ. தி. மு. க அதிக இடங்களில் வெல்லும் என நினைக்கிறேன். காரணங்கள்:

1 . ஆளும் கட்சி என்பதால் பல விதத்தில் Advantage உண்டு. மக்களும் ஆளும் கட்சி வந்தால் தான் நமக்கு தேவையான திட்டங்கள் செயல் படுத்துவார்கள் என நினைக்க கூடும்.

2.ஆறு மாதத்திற்கு முன் தான் இதே மக்கள் பெரு வாரியாக அ. தி. மு. க விற்கு வாக்குகள் போட்டு தேர்ந்தெடுத்தனர். அதற்குள் அவர்கள் மனம் மாறும் அளவு பெரிய விஷயங்கள் நடந்து விடவில்லை. (சமசீர் கல்வியில் தவறான அணுகுமுறை போன்ற ஒரு சில சொதப்பல்கள் இருந்தாலும் மற்ற படி ஆட்சியில் பெரிய குறை இது வரை தென்படவில்லை).
3. விஜய் காந்த் தி,மு.க, அ.தி,மு.க விற்கு அடுத்து மூன்றாவது பெரிய அணி என்பதை ஏற்கனவே நிரூபித்து விட்டார். அவர் தனித்து நிற்பது ஆளும் கட்சிக்கு தான் எப்போதும் சாதகமாக இருக்கும். காரணம் ஆளும் ஆட்சி மேல் அதிருப்தி உள்ளோர் போடும் வாக்குகள் இவருக்கு போய் சேரும். இப்படி ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டுகளை இவர் பிரித்து விடுவது ஆளும் கட்சிக்கு (முன்பு தி,மு.க விற்கு, இப்போது அ. தி,மு.க விற்கு௦) சாதகமாக இருக்கும்.

4. சட்ட மன்ற தேர்தலில் அ. தி, முக கூட்டணியில் இருந்த பல கட்சிகள் இப்போது அதனிடம் இல்லை என்ற போதும் , தி, மு.கவிற்கும் இதே நிலை தான். மேலும் தம்ழகத்தில் அதிக வாக்குகள் கொண்ட தனி பெரும் கட்சி அ. தி, முக தான் என நினைக்கிறேன். தி.மு.க இதற்கு அடுத்து வரும்.

5. தி.மு..கவின் பெரிய தலைவர்கள் பலரும் ஜெயிலுக்குள் உள்ளனர். இருப்போரில் கூட சிலர் ஆக்டிவ் ஆக வெளியே வந்தால் கைது ஆவோமோ என்கிற பயத்தில் இருப்பதாகவும் கேள்வி. இதனால் தி,மு.க தரப்பில் பிரசாரம் பலமாக இல்லை.

****
மேலே சொன்னது என் தனிப்பட்ட கருத்து. முடிவுகள் இதற்கு மாறாகவும் இருக்கலாம்.

அ. தி. முக ஜெயிக்கும் என நான் எழுதியதை வைத்து நான் அ. தி.மு.க அபிமானி என நினைத்தால் தவறு. சட்ட மன்ற தேர்தலை பொறுத்தவரை கடந்த பல தேர்தல்களாக நான் மாறுதல் வேண்டியே (ஆளும் கட்சிக்கு எதிராக) வாக்களித்து வருகிறேன். இதற்கு முக்கிய காரணம் இரு கட்சிகளுமே நல்லாட்சி தரவில்லை என்பது தான் ! உள்ளாட்சி தேர்தலில் என் ஓட்டு நல்ல வேட்பாளர் என்பதை பொறுத்து மட்டுமே அமையும். அந்த வேட்பாளர் எந்த கட்சி என்பதை நான் பார்ப்பதே இல்லை.

இந்த தேர்தலில் தனித்து நிற்கும் காங்கிரசின் நிஜ பலம் தெரிய வரும். தேர்தல் முடிவுக்கு பின் அது பற்றி பேசி, சிரிக்க நமக்கு சரியான வாய்ப்பு காத்திருக்கிறது !

தேர்தல் நாளில் நம் முதல் வேலை ஓட்டு போடுவதாக இருக்க வேண்டும் !! ஓட்டு போட்ட பின் தான் காலை உணவே சாப்பிடுவது என்பதை நான் ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன்.

உங்கள் தொகுதியில் சரியான வேட்பாளரை..... கட்சியை மறந்து விட்டு, இருப்பதில் ஓரளவு நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுங்கள். சற்று கஷ்டம் தான்!! இருக்கிற மோசத்தில் யார் கொஞ்சம் பெட்டர் என பார்த்து அவசியம் வாக்களியுங்கள் !

Thursday, October 13, 2011

வானவில்: ஹன்சிகா-வீட்டு வரி-ஜஸ்ட் டயல்

பார்த்த படம் : எங்கேயும் காதல்


இந்த படத்திற்கு எவ்வளவு அருமையான பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ் போட்டு தந்தார் ! படம் வெளி வரும் முன்பே பாட்டெல்லாம் சூப்பர் ஹிட். ஆனால் படம்?

இந்த அளவு கூட லூசு தனமாக சினிமா எடுக்க முடியுமா ? ஹீரோ ஜெயம் ரவி- ஹீரோயின் ஹன்சிகா இவர்களை சுற்றியே தான் படம் செல்கிறது. பல பெண்களுடன் படுக்கை வரை செல்லும் ஹீரோவை பார்த்த அடுத்த நொடியில் மனதை பறி கொடுக்கிறார் ஹீரோயின் ! "மணந்தால் இவரை தான் மணப்பேன்" என உறுதி பூண்கிறார் (என்னே லட்சியம் !) ஹீரோவோ இவரையும் "யூஸ் அண்ட் த்ரோவாக" பயன்படுத்த நினைக்கிறார். இதில் தான் படமே நகர்கிறது. மாச கணக்கில் பழகியும் ஹீரோயின் பெயர் ஜெயம் ரவிக்கு தெரியாதாம் ! கடைசியில் ஹீரோ மனம் மாறி அவருக்கு "தெய்வீக காதல்" வரும் போது, நாம் பக்கத்தில் உட்கார்பவரை பிராண்டி கொண்டு இருக்கிறோம். இப்படி படம் முழுதும் ஹீரோ- ஹீரோயின் மட்டுமே வந்தும் அவர்கள் காதல் கொஞ்சம் கூட அழுத்தமில்லாமல் போவது கதாசிரியர் மட்டும் இயக்குனரின் தனி திறமையை காட்டுகிறது.

படத்தில் ரசித்தவை ரெண்டே விஷயங்கள் தான். ஒன்று பாடல்கள்/ அவற்றுக்கான நடனம். அடுத்தது ப்ரான்ஸ் (France ) லொகேஷன் . நாமெல்லாம் அங்கே போக போறோமா என்ன? இது மாதிரி படத்தில் அனைத்து இடங்களையும் பார்த்து ரசித்தால் தான் உண்டு !

சன் டிவி வெளியீடு என்பதால் மிக சீக்கிரம் டிவியில் வந்துடும் ! நீங்க சீடி கூட வாங்கி கஷ்டப்பட வேண்டாம் ! ஜஸ்ட் வெயிட் !

கிரிக்கெட் பக்கம்

சி.எல். டி டோர்னமென்ட் இனிதே முடிந்தது. எனக்கு ஐபிஎல் விட இந்த ஆட்டங்கள் பிடித்திருந்தது. இதற்கு காரணம் ஐபிஎல் ஒன்னரை மாதம் வரை இழுப்பார்கள். இது பத்து நாளில் முடிந்து விட்டது. போலவே ஐபிஎல் இரவு பன்னிரண்டு வரை கூட ஆகும் முடிய. ஆனால் சி.எல். டி ஆட்டங்கள் பதினோரு மணிக்குள் முடிந்து விட்டன. தூக்கம் பாதிக்கலை.

இந்த டோர்னமெண்டில் கடைசி பந்து வரை முடிவு என்ன ஆகுமோ என விறுவிறுப்பாக பல ஆட்டங்கள் இருந்தன சென்னை இவ்வளவு மோசமாக ஆடும் என நினைக்கவே இல்லை. மும்பை வென்றது (இந்திய அணி) சற்று ஆறுதல்.

ரசித்த கவிதை

இரவில் சூரியன்


பூதாகாரமாகத் தோன்றும்
எல்லாப் பிரச்சனைகளும்
கையோடு ஆறுதல் பரிசாக
அழகிய பூ ஒன்றை
ஏந்தியே வருகின்றன.
*
இடர்களைப் பொருட்படுத்தாமல்
இலக்கை நோக்கிப் பயணிப்பவனுக்கு
பகலில் நிலவும் இரவில் சூரியனும்
விழித்தே கிடக்கின்றன.

-ராமலக்ஷ்மி

வீட்டு  வரி: சின்ன எச்சரிக்கை !

நீங்கள் சொந்த வீட்டில் இருந்தால், உங்கள் வீட்டுக்காக நீங்க கட்டிய வீட்டு வரி, தண்ணி வரி ரசீதுகளை பத்திரமாக வைத்திருங்கள். கடைசியாக கட்டிய ரசீதின் காப்பி எடுத்து சென்றால் தான், இந்த வருடத்திற்கான வரி கட்ட முடியும். பல நகராட்சி அலுலகங்கள் இன்னும் கணினி மயமாகவில்லை. எனவே நீங்கள் போன வருட ரசீது காண்பித்தால் தான் இந்த வருட வரி போடுவார்கள். இல்லையெனில் நீங்கள் எந்த ரசீது காட்டுகிறீர்களோ, அதன் பின் உள்ள அனைத்து வருடங்களுக்கும் வரி கட்டி தண்டம் அழணும் ! எனக்கு இப்படி ஒரு அனுபவம் ஆனது ! அதனால் தான் இங்கு பகிர்கிறேன் !!

அய்யாசாமி புலம்பல்

"நாம ஒரு கடையில் பூ வாங்கிட்டு, அடுத்த கடையை தாண்டி போகும் போது தான் அங்கே பூ மலராம, நல்ல மொட்டா இருக்கிறது கண்ணில படும். இது பூவுக்கு மட்டுமில்ல, பல தடவை ஏதோ ஒண்ணு வாங்கி முடிச்ச பிறகு தான் அதை விட பெட்டர் சமாசாரம் கண்ணில படுது. இது எனக்கு மட்டுமா? உங்களுக்கும் அதே மாதிரி கதை உண்டா?"

ஜஸ்ட் டயல்

ஜஸ்ட் டயல் சேவை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு மட்டும் இந்த தகவல்.

ஜஸ்ட் டயல் என்கிற நிறுவனம் உங்கள் ஊரில் உங்களுக்கு எந்த நிறுவனம், கடை, தியேட்டர் ஆகியவற்றின் தொலை பேசி எண் மற்றும் முகவரி தேவை என்றாலும் இலவசமாக தகவல் தருகிறார்கள். நீங்கள் சென்னையிலிருந்தால் " 2888 8888" என்கிற எண்ணுக்கு தொலை பேசினால் போதும். உங்கள் மொபைல் எண்ணை பெற்று கொண்டு, உங்களுக்கு தேவையான தொலை பேசி எண் மற்றும் முகவரி அடுத்த ஒரு நிமிடத்திற்குள் அனுப்பி விடுவார்கள். உங்கள் மொபைல் எண் அவர்களிடம் ஸ்டோர் ஆன பின், நீங்கள் அதிலிருந்து கூப்பிட்டால், போனை எடுக்கும் போதே உங்கள் பெயர் சொல்லி அழைத்து, நீங்கள் கேட்ட தகவல் நேரே அனுப்பி விடுவார்கள். நான் அடிக்கடி உபயோகிக்கும் சேவை இது. இவர்கள் இதே தகவல் தங்கள் இணையம் மூலம் தந்தாலும் தொலைபேசியில் பெறுவது மிக எளிதாக உள்ளது.

நாட்டி கார்னர்

நாட்டிக்கு பறக்க வேண்டும் என்று ரொம்பவே ஆசை. ஆனால் தன் பயத்தால் மட்டுமே பறக்காமல் உள்ளது. கூண்டு பெரும்பாலான நேரம் திறந்தே தான் இருக்கும். வேண்டுகிற போது நாட்டி வெளியே வந்து உட்காரும். தனது கூண்டின் மேலே ஓரத்தில் அமர்ந்தவாறு, தனது சிறகுகளை "பட பட" வென அடித்து கொள்ளும். உடலை சற்று தாழ்த்தி கொண்டு இப்படி "பட பட" வென பலமுறை அடித்து பறக்கிற மாதிரி பாவ்லா செய்யும். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் பயத்தால் தான் பறக்காமல் இருக்கிறது. இது நம்மைத்தான் நினைவூட்டுகிறது. நாம் முன்னேறாமல், அடுத்த கட்டம் போகாமல் இருக்க காரணம் அதற்கான முயற்சிகள் எடுக்காத நாம் தானே?

அறிவிப்பு

சமீபத்தில் எங்க ஊர் நீடாமங்கலம் போய் விட்டு அப்படியே அருகில் நாகூர், வேளாங்கண்ணி சென்று வந்தோம். புகை படங்கள் & வீடியோ தயார் நிலையில் உள்ளது. "கதை வசனம்" தயார் ஆன பின் இரு வார பயண கட்டுரை வெளியாகும் ! எச்சரிக்கை!!

Tuesday, October 11, 2011

சில்க் ஸ்மிதா - வண்டி சக்கரம் மீண்டும் சுழலுகிறது

கட்டுரை : தேவா

டெல்லி, மும்பை, புனே நகர பத்திரிகைகளில் Dirty Pictures பற்றின teasers (தமிழில் இவற்றை "உசுப்பேற்றிகள்" என சொல்லலாமா?) வெளி வர ஆரம்பித்து விட்டன. யூ டியூபில் இந்த படத்தின் முன்னோட்டத்தை மட்டும் இதுவரை 9,00,000 முறை பார்த்து இருக்கிறார்கள். இந்த படத்தை பற்றின கட்டுரைகள், சில்க் ஸ்மிதாவை பற்றின சிறுசிறு செய்திகள், தற்கொலை செய்து கொண்ட நடிகைகளை பற்றின விஷயங்கள், வெளிவந்து இந்த படத்தினை பற்றிய எதிர்பார்ப்பை மக்களிடம் உசுப்பேற்றி விடுகின்றன. சில்க் ஸ்மிதா தென்னாட்டில் தான் அதிகம் நடித்தார் என்றாலும், வடநாட்டிலும் அவர் வெகுவாக அறியப்படுகிறார் (Thanks to Midnight masalas!).

இளையராஜாவின் இசை, PC ஸ்ரீராம் கேமரா, DFT படித்தவர்களின் வருகை இவைபோலதான் தமிழ் சினிமாவின் எண்பதுகளில், 90 - களின் ஆரம்பத்தில், சில்க் ஸ்மிதா ஒரு முக்கிய கூறாக இருந்தார். சில்க் ஸ்மிதா பாடல்கள் இல்லாத திரைப்படங்கள் டிஸ்டிரிபியூடர்களால் அவ்வளவாக விரும்ப படவில்லை. லயனம், தமிழ்நாட்டில் வயது வந்தவர்களுக்கான படங்களில் ஒரு benchmarking படம் என்றுதான் சொல்லவேண்டும் (ஆங்கிலத்தில் Sirocco மாதிரி). சில்க் படங்கள் ஓடிய திரையரங்குகளில் ஆண்களின் வெப்ப மூச்சு காற்று விரவி இருந்தது.

எங்கள் ஊரில் எல்லா நிகழ்வுக்கும் திரைப்பட பாடல்களை பெரிய ஸ்பிகர்களில் ஒலி பரப்புவார்கள். எழவு வீடுகளில் முதல் பாடல் "போனால் போகட்டும் போடா" என்றால் கடைசி பாடல் "சில்க்கோட கையால வாங்கிகுடி" என்பது தான், திருமண வீடுகளில் முதல் பாடல் "பூமுடிப்பாள் இந்த பூங்குழலி" என்றால் இரண்டாவது அல்லது மூன்றாவது பாடல் "சில்கின்ன கையால வாங்கிகுடி" என்பதகாத்தான் இருக்கும். நிகழ்ச்சிகள் மாறினாலும், சில்க்கின் ஆதிக்கம் மாறாது. திருவிழாவின் ரெகார்ட் டான்சில் நீங்கள் கேட்கவே வேண்டாம்... எங்கெங்கு காணினும் சில்க் மயம்தான்.

சில்கை பற்றி பேசும்போது கண்டிப்பாக மூன்றாம் பிறை, கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை போன்றவற்றை பற்றி நினைவுகொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால் அவருக்கு அந்தமாதிரியான படங்கள் அதிகம் வாய்க்கவில்லை என்பது தமிழ் திரையுலகில் பெரிய ஆச்சர்யமான விஷயம் ஒன்றும் இல்லை. சில்க், "அம்மன் கோவிலுக்கு போகலாமா"என கேட்டால் கூட அவர் "அடல்ட்ஸ் ஒன்லி போகலாமா" என்பதாகத்தான் நம் காதில் விழும்படி நம் தமிழ் சினிமா நம்மை மாற்றிவிட்டது.
சில்க் ஸ்மிதாவின் காலத்தில் டிஸ்கோ சாந்தி, பபிதா, அனுராதா போன்றவர்கள் இருந்தாலும் சில்க் ஸ்மிதா அளவிற்கு அவர்கள் பிரபலம் அடையாமல் போனதன் காரணம் அவர்களிடம் சில்கிடம் இருந்த "பட்டை சாராய" கவர்ச்சி இல்லாதுதான். அவரிடம் அடிப்படையில் ஒரு அழகிய நடிப்பு திறனும் பட்டை தீட்டாத கவர்ச்சியும் இருந்தது. அவரது ஆடைகளை அவரே வடிவமைத்து, அவரே அவரது மேக் அப்பை செய்து கொண்டது அவரை மற்ற கவர்ச்சி நடிகைகைளிடம் இருந்து வேறு படுத்தி காட்டியது.

ஆமாம், இன்றைய படங்களில் கவர்ச்சி நடனங்கள் இல்லையே, ஏன்? ஹிப்பிகள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, மதன் சொல்வார், அவர்கள் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளும் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படிதான், இந்த கவர்ச்சி நடிகைகள் எல்லோரும் ஒவ்வொரு கதாநாயகிக்குள்ளும் ஒளிந்து இருக்கிறார்கள். மேலும், இன்டர்நெட் வந்து இந்த சாப்ட் போர்ன் என்பதை கொஞ்சம் காலி செய்துவிட்டது. என்னிடம், இன்னுமொரு தியரி இருக்கிறது. இந்த கவர்ச்சி நடிகைகள் இருந்த காரணத்தால் தான், மிகச்சிறந்த நடிகைகள் நமக்கு கிடைத்தார்கள் - ஸ்ரீ வித்யா, சுஜாதா, ரேவதி, ராதிகா, ஷோபா , ரோகினி, ஊர்வசி... இதற்கு காரணம் கவர்ச்சி நடிகைகள் கவர்ச்சியை கவனித்து கொள்ள, அந்த கதாநாயகிகள் கதையையும் நடிப்பையும் கவனித்து கொண்டார்கள். இன்று...? வேண்டாம் அந்த விவாதத்தை விட்டுவிடுவோம்...


சில்க் பற்றிய என் மாயையை உடைத்தது, அனிதா பிரதாப் (வேலுப்பிள்ளை பிரபாகரனை இரண்டு முறை பேட்டி எடுத்த செய்தியாளர்) எழுதிய "In the veils of Sorrow" என்கிற செய்தி கட்டுரைதான்.

அனிதா பிரதாப்

இந்த கட்டுரை முதலில் 'சண்டே' பத்திரிகைளும் பின் அவரது "island of Blood" என்ற புத்தகத்திலும் வெளி வந்தது. இந்த கட்டுரை வந்த அந்த பத்திரிகை பத்து மடங்கு விலை போனதாம் (1 ரூபாய் பத்திரிகை 10 ரூபாய்). அந்த கட்டுரையில் அவர் ஷோபாவை பற்றியும் சில்க் ஸ்மிதாவை பற்றியும் எழுதி இருப்பார். சில்க் வந்து என் முன்னால் அமர்ந்தபோது அவர் அந்த வீட்டு வேலைக்காரி இல்லை, அவர் தான் சில்க் என்று நம்ப மிகவும் நேரம் எடுத்தது; பழுப்பேறிய சல்வார் கமீஸில், சீர்கழிகப்பட்ட, உதாசினபடுதப்பட்ட, அழுக்கான (Wan, Wasted and unwashed) பெண்ணாக சில்க் என் முன்னால் வந்து அமர்ந்தார் என்கிற அவரது எழுத்தை படிக்கிற போது நமக்கு சோகம் கவ்வுகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை தன் சாரைப் பார்வையிலும், மினுக்கும் உதடுகளிலும் கவர்ந்து வைத்து இருந்தவர் பின் எப்படி இப்படி ஆனார் என்பது இன்னுமொரு கட்டுரைக்கான விஷயம்.

Dirty Pictures வித்யா பாலன் நடிப்பில், ஏக்தா கபூர் தயாரிப்பில் வெளி வருகிற படம். நஸ்ருதீன் ஷா, துஸார் கபூர், இம்ரான் காஷ்மி ஆகியோரும் இந்த படத்தில் உள்ளார்கள். இது சில்க் சுமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாய் வைத்து எடுக்கப்படுகிற படம். மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிற இந்த படம் டிசம்பர் 2 அன்று (சில்க் சுமிதாவின் பிறந்த நாள்) வெளி வர இருக்கிறது. எனகென்னமோ வித்யா பாலனால் சில்க் சுமிதாவை திரையில் கொண்டு வரமுடியும் என தோன்றவில்லை, காரணம் சில்க் சுமிதாவை சுற்றி யாராலும் (சில்க் உட்பட) அறிந்து கொள்ள முடியாத ஒரு கவர்ச்சி காற்று இருந்ததுதான். மேலும், "கவர்ச்சியான வித்யா பாலன்" என்பதே ஒரு Oxymoron, என்னை பொறுத்த வரை. ஒரு வேளை, இந்த படத்தை சில்க் பற்றின கதை என சொல்லி விட்டு நடிகைகளை பற்றின ஒரு பொதுவான கதையாக எடுக்கிறார்களோ என்னவோ - அதுவும் சாத்தியமே, ஏனென்றால் சில்க் சுமிதாவின் கதையும் மற்ற நடிகைகளின் கதையும் வேறுவேறு அல்ல தானே! டிசம்பர் 2 வரை காத்திருப்போம்.

கட்டுரை : தேவா

Tuesday, October 4, 2011

வானவில்: எங்கேயும் எப்போதும்: வேலாயுதம் பாட்டு

பார்த்த படம்: எங்கேயும் எப்போதும் 

பலரும் பாராட்டி விட்டாலும் என் கருத்தை சுருக்கமாகவாவது பதிவு செய்ய வேண்டும். 

இந்த படம் ரொம்பவும் பிடிக்க முக்கிய காரணம் இதன் ஒரிஜினாலிட்டி. தெய்வ திருமகள், முரண் என திருடி படமெடுக்கும் இயக்குனர்களுக்கு நடுவில், நம் நாட்டில், வாழ்வில் அடிக்கடி நடக்கும் விஷயத்திலிருந்தே கதை அமைத்தமைக்கு இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

விபத்து என்பதை குறித்தே எல்லோரும் பேசுகிறார்கள். படத்தை முதல் இரு நாட்களுக்குள் பார்க்க நினைத்த நான் கூட அதனை தள்ளி போட காரணம் ஒரே அழுகையாய் இருக்குமோ என்று தான். ஆனால் அந்த கடைசி காட்சிகள் தவிர மற்றவற்றில் சோகம் இல்லை. செம செம சுவாரஸ்யமாக ரசிக்கும் படி உள்ளது படம்.

படத்தில் எனக்கு மிக பிடித்த கேரக்டர் ஜெய்யுடையது தான். அவர் உறுப்பு தானம் செய்கிறார் என்பதால் அல்ல. நிஜத்தில் இப்படி எத்தனையோ ஆண்கள் பெண்களுக்கு அடங்கி போகிறார்கள். (.க்கும்...) இதனை சுவாரஸ்யமாக
காட்சிப்படுத்தியதால் தான் அந்த கேரக்டர் மிக பிடித்தது.

ஹீரோயின்கள் அஞ்சலி மற்றும் அனன்யா: அழகிலும் சரி சொந்த குரலில் பேசி நடிப்பதிலும் சரி.. அட்டகாசம் !

புது இசை அமைப்பாளர் மூன்று பாட்டுகள் அற்புதமாக போட்டுள்ளார். பின்னணி இசையும் கூட அருமை. நிச்சயம் நல்வரவு.

இந்த வருடத்தின் சிறந்த தமிழ் படங்களில் முதல் சில இடங்களுக்குள்.. எங்கேயும்.. எப்போதும்.

சம்பவம்: ஆண்கள் ஸ்பெஷல்

ஆண்களுக்கு சில நேரம் எந்த இடத்தில் என்ன பேசுவதென்றே தெரிவதில்லை. சமீபத்தில் நண்பரொருவர் வீட்டு க்ரகப்ரவேசம் சென்றேன். அவரது இன்னொரு நண்பர் மனைவி, கை குழந்தையுடன் உள்ளே வந்தார். அவரை பார்த்ததும் நம் நண்பர் சொன்னது: "வாடா; ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நீ வந்தது. நான் பத்திரிக்கையும் அனுப்பலை. போனும் பண்ணி பேசலை. மெயில் மட்டும் தான் அனுப்ப முடிஞ்சுது. ஆனா நீ கரக்டா வந்துட்ட" இதை கேட்கும் போது புது நண்பர் மனைவியின் முகத்தை பாக்கணுமே !" யோவ். .பத்திரிகை வராத பங்க்ஷனுக்கு தான் என்னையும், கை குழந்தையும் இழுத்துட்டு வந்தியா? " என்பது போல் இருந்தது. நண்பரிடம் தனியா சொன்னால் பரவாயில்லை ! அவர் மனைவி முன்பா சொல்லணும் ? இதில் இன்னொரு பியூட்டி. இப்படி சொன்னதை அவர் மனைவியும் கேட்டுட்டு தான் இருந்தார் "ஏன் தான் இப்படி விவஸ்தை இல்லாம பேசுறீங்களோ?" என அவருக்கும் அப்புறம் மொத்து விழுந்திருக்கும் ! இப்ப இந்த பாராவின் முதல் வரியை படிங்க. கரக்டு தானே?

ரசித்த கவிதை

மறுமுறை
நன்றி தெரிவிக்கும் பொருட்டு
நீட்டப்படும் கைகளை
நன்றாகவே பற்றிக்
குலுக்கலாம் நீங்கள்
மறுமுறை வாய்க்காமலே
மறுதலிக்கப்படலாம்
மலர்ந்த முகத்தோடு பிரியும்
மற்றொரு சந்திப்பு.

               - செல்வராஜ் ஜெகதீசன்

நாட்டி கார்னர்

ஒரு நாள் அனைவருக்கும் தும்மல் ஆக உள்ளதே..நாட்டி உடலில் இருந்து பறக்கும் இறகுகளால் இருக்குமோ என ஹாலில் இருந்து வேறு அறைக்கு மாற்றினோம். அங்கு மாற்றியதும், ஆட்கள் இல்லையே என கூண்டை விட்டும், அந்த அறையை விட்டும் வெளியே வந்து விட்டது. பொதுவாய் நாட்டி தரையில் நடந்து பார்க்காத எங்களுக்கு செம வேடிக்கையாக இருந்தது. அதோடு நாட்டி எங்களை தேடுவதை அறிந்தும் ஆச்சரியம் தான் !! மெதுவாய் எங்களை நோக்கி நடந்து வந்தது. அருகில் அமர்ந்து பார்த்தது. படுத்திருந்தவர் மேல் ஏறி நடந்தது. ஹால் முழுக்க நடந்து அதன் கூண்டு வழக்கமாய் இருக்கும் இடங்களை போய் போய் பார்த்தது. கூண்டை மறுபடி ஹாலுக்கே கொண்டு வந்தும் கூட இரவு தூங்கும் போது தான் கூண்டுக்குள் சென்றது !

வேலாயுதம் : ரத்தத்தின் ரத்தமே பாட்டு

வேலாயுதம் படத்தின் ரத்தத்தின் ரத்தமே பாடல் ஆரம்பத்தில் கேட்கும் போதெல்லாம் "வழக்கமான விஜய் ஸ்டைல் பாட்டு" என்று சற்று பிடிக்காமல் இருந்தது. ஆனால் அப்புறம் அந்த பாட்டுக்கு வேறு ஒரு கோணம் புரிந்தது. ஆரம்பத்தில் உள்ள சில வரிகளை ஒதுக்கி விட்டு பார்த்தால், அது தந்தை- மகள் உறவுக்கு கூட பொருந்துகிற பாடல் தான் ! இந்த கோணத்தில் கேட்க ஆரம்பித்த பிறகு, அந்த பாடல் பிடிக்க ஆரம்பித்து விட்டது. இது தவிர இப்போது  வேலாயுதத்தில் ஓரளவு பிடிக்கிற பாட்டு, டிபிக்கல் விஜய் பாட்டு என்றாலும் "சில்லாக்ஸ் ..சில்லாக்ஸ்" தான் ! மற்றவை கேட்க கேட்க ஒரு வேளை பிடிக்கலாம்!

ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர் 

A seed while growing makes no sound. A tree when falling makes huge noise. Destruction shouts. Creation is quiet. Be quiet and achive great. 

தேன்குழலும் அய்யாசாமியும் 

ஒரு ரூபாய்க்கு கடைகளில் விற்கும் தேன்குழல் சாப்பிட்டிருக்கிறீர்களா? ரோஸ் கலரில் உருண்டையாக, உப்பலாக இருக்கும். எடுத்து வாய்க்குள் போட்டால் சாறு இனிப்பாக உள்ளிறங்கும். "ஒரு ரூபாய்க்கு என்ன குவாலிட்டியா இருக்கும்? பொண்ணுக்கு ஒத்துக்காது " என்ற லாஜிக்கில் அநேகமா வீட்டுக்கு தேன்குழல் வாங்க மாட்டார் அய்யாசாமி !ஆனாலும் ஒவ்வொரு முறை வீட்டுக்கருகிலுள்ள கடைக்கு செல்லும் போதும் தவறாமல் நடக்கும் சம்பவத்தை சொல்கிறேன்.

கடைக்காரர் பொருட்களை எடுத்து கொண்டிருப்பார். அய்யாசாமியோ அந்த நேரம் தேன்குழல் இருக்கும் பெரிய பாட்டிலினுள் நன்கு உற்று பார்த்து பெரிய தேன் குழலாக தேடி எடுப்பார். மேலே தூக்கி போட்டு வாய்க்குள் கேட்ச் பிடித்து, நின்று நிதானமாய் மென்று  சாப்பிடுவார். "என்னய்யா இந்த ஆளு சின்ன புள்ள மாதிரி இருக்கானே" என கடைக்காரர் நினைப்பாரே என அய்யாசாமி கவலைப்படுவதேயில்லை. :)) 

Sunday, October 2, 2011

காந்திஜியை பிடிக்குமா?

சமீபத்தில் காந்தி படத்தின் தமிழ் பதிப்பு Zee- தமிழ்-ல் பார்க்க முடிந்தது. (என்னதான் இருந்தாலும் ஆங்கில படங்களில் பேசபடும் ஆங்கிலம் முழுவதும் புரிய வாய்ப்பு இல்லை. இதனால் ஆங்கில படங்களை விட, அவற்றின் தமிழ் பதிப்புகள் அதிகம் கவர்கின்றன). ). காந்தி படத்தில் எத்தனை முறை, எத்தனை காட்சிகளில் மனம் நெகிழ்ந்து கண்ணீர் எட்டி பார்த்தது என கணக்கிட முடிய வில்லை.

காந்திஜி குறித்த எண்ணங்கள் சிறு வயது முதல் எப்படி எல்லாம் மாறி வந்துள்ளது!!!

ஒரு சிறுவனாக காந்திஜி குறித்த முதல் தகவல்.. " காந்தி தாத்தா.. நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தவர்.." என்பது தான்... ஒவ்வொரு ஆகஸ்ட் 15 அன்றும் பள்ளியில் இனிப்பு சாப்பிடும் போது காந்தி நினைவு வாராமல் போகாது.. மேலும் காந்தி பிறந்த அக்டோபர் 2 பள்ளிக்கு விடுமுறை என்பதனாலும் காந்தியை ரொம்ப பிடிக்கும்.இதற்கு மேல் வரலாற்று பாட புத்தகத்தில் அவரை பற்றி படித்த விஷயங்கள் எல்லாம் கூட அந்த வய்தில் அதிகம் பாதிக்க வில்லை.

கல்லூரி வந்த பிறகு காந்திஜி குறித்து நிறைய படிக்கவும் பேசவும் ,கேட்கவும் வாய்ப்பு கிடைத்தது. சட்ட கல்லூரியில் என்னுடன் படித்த, எனது roommate-ஆன சங்கர் ஒரு தீவிர காந்தி பக்தன். அவர் பிறந்த அதே அக்டோபர் 2 - (சரியாக நூற்றாண்டு தினத்தன்று) பிறந்தவன். காந்தி ஆஷ்ரம் உடன் நிறைய தொடர்பு வைத்து, All India Tour சென்று வந்தான்.

சங்கர், மறைந்த நண்பன் லக்ஷ்மன், நான் எல்லோரும் திருச்சி கல்லூரிகளில் நடக்கும் காந்தி பற்றிய quiz-ல் கலந்து கொள்வோம். காந்தி குறித்து நன்கு படித்து, ஓரளவு புரிய ஆரம்பித்தது இந்த கால கட்டத்தில் தான்.

படிப்பு முடிந்து, வேலை, திருமணம் என எவ்வளவோ காலம் கடந்த பின், இன்று காந்தியை ஒரு idol-ஆக பார்க்கிறேன். Idol - என்றதும், "அவர் போலவே " என்ற அர்த்தத்தில் இல்லை. சாதாரண மனிதன் ஆக, மிக சாதாரண வாழ்வில், காந்தியின் சில குணங்கள் எனக்கும், கூட எதோ ஒரு வகையில் உதவவே செய்கிறது.

காந்திஜியின் குணங்களில் என்னை கவர்ந்தவை என்ன என்பதுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்...

முதலில் அவரது பிடிவாத குணம். நல்ல விஷயங்களுக்காக அவர் கொண்ட உறுதி அசாத்தியமானது. இந்தியாவிற்கு சத்யாக்ரஹா போன்ற அற போராட்டம் மூலமே சுதந்திரம் கிடைக்க வேண்டும் என அவர் உறுதியாய் நம்பினார். அதனை நடத்தியும் காட்டினார்.

தான் சரி என எண்ணுவதை இந்த உலகம் முழுதும் எதிர்த்தாலும், தனது எண்ணத்தில் உறுதியாய் நின்று சாதிப்பவர்கள், சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள். ஒரு காலத்தில் இவர்கள் சொன்னதை ஏளனம் செய்தவர்கள் கூட, பின் அந்த கருத்தை ஏற்று கொள்கிறார்கள். சமூக மாற்றம் நிகழ்த்தி காட்டிய பலரது வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் இது.

இந்த குணத்தை சாதாரண மனிதர்கள் தம் வாழ்வில் எட்ட எண்ணும் நல்ல விஷயங்களில், விடா முயற்சி உடன் எட்டுவதற்கு உபயோகிக்கலாம்.

அடுத்த குணம் : கடும் உழைப்பு. மிக பெரிய விஷயங்களை சாதிக்க எண்ணுபவர்கள் எவருக்கும் இது பொருந்தும். வள்ளுவர் வரிகளில் சொல்வதானால், "மெய் வருத்தம் பாரார். பசி நோக்கார்; கண் துஞ்சார். கருமமே  கண் ஆகினார்".

எளிய மனிதர்கள் மீதும், ஏழைகள் மீதும் காந்தி கொண்ட அன்பு. ஏழைகளின் உடை என ஒரு முறை வேஷ்டி மட்டுமே அணிய ஆரம்பித்த காந்தி, இறுதி வரை அவ்வாறே இருந்தார். அடுத்த பிறவி என எனக்கு இருந்தால், அதில் scavenger-ஆக பிறந்து அவர்கள் படும் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றார் காந்தி !!

புன்னகை. எந்த சூழலிலும் அவரிடும் இருந்த சிரிப்பு. (காந்தி படத்தில் இதை மிக அழகாக capture-செய்திருந்தனர்).

புலன் அடக்கம். மிக கடுமை ஆன, சாதாரண மனிதர்களால் இயலாத அளவு புலன் அடக்கம். இது போன்ற சில குணங்கள் தான் அவரை மனிதன் என்ற நிலையில் இருந்து மகாத்மா என்ற நிலைக்கு எடுத்து சென்றது.

அடுத்ததாக பதவிக்கு ஆசை படாத தன்மை. இது இன்றளவும் எனக்கு ஆச்சரியம் ஆன ஒரு விஷயம். பொது பணி செய்வதற்கு நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே எதோ ஒரு விதத்தில் அங்கீகாரம் எதிர் பார்ப்பர். அது பல நேரம் ஒரு பதவி குறித்த எதிர் பார்ப்பாக தான் இருக்கும். ஆனால், பதவி வேண்டாம் என காந்தி இருந்தது ஆச்சரியமே!!

இறுதியாய்: காந்தி தனது சுய சரிதையை தானே எழுதியது ! சரித்திரம் படைப்பவர்களுக்கு, அதை பதிவு செய்ய நேரம் இருக்காது என்பர். ஆனால், காந்தி எவ்வளவோ போராட்டங்களுக்கு நடுவிலும், தனது சுய சரிதையில், கருப்பு பக்கங்களை கூட வெளி படையாக எழுதியது, அவர் மேல் உள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.

காந்தியை குறித்து சில எதிர் மறையான கருத்தகள் முன் வைப்போரும் உண்டு. குறிப்பாக, அவர் ஒரு நல்ல கணவன் அல்லது தந்தை ஆக இல்லை என்பர். இது ஓரளவு உண்மை ஆக கூட இருக்கலாம். நாட்டுக்காக அவர் அதிக நேரம் ஒதுக்கியதால், குடும்ப கடமைகளில் ஓரளவு தவறி இருக்கலாம். இது எந்த ஒரு பெரிய சாதனையாளருக்கும் நடக்க கூடிய ஒன்றே.

நம் இந்தியா பற்றி பெருமை பட சில விஷயங்கள் என்றும் உண்டு. அதில் ஒன்று: காந்தி ஒரு இந்தியர் ஆக பிறந்தார் என்பது. இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என நம்பவே முடியாத அளவு சம்பவங்கள் கொண்டது காந்தி வாழ்வு. அவரது சுயசரிதை மற்றும் அவர் பற்றிய படம் மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்,, பாருங்கள்.. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் தரும் அற்புதங்கள் இவை..
Related Posts Plugin for WordPress, Blogger...