Friday, February 25, 2011

வானவில்: தற்கொலை தகவல்களும் உயிலும்

தற்கொலை தகவல்கள் .. ஏன்?

தமிழ் செய்தி தாள்களில் தினம் தென்படும் விஷயம் தற்கொலை செய்திகள். எதற்கு இதனை அவசியம் வெளியிடுகிறார்கள் என புரியவில்லை. எங்கோ சென்று தற்கொலை செய்து கொண்ட யாரென்றே தெரியாத ஒரு நபர் பற்றி, அவர் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக இப்படி வெளியிடுகிறார்கள் என்றாலாவது அதில் அர்த்தம் உள்ளது. ஊரில் நடக்கும் தற்கொலைகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவது சில தவறான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில பிரச்சனைகள், குழப்பங்கள் இருக்கும்.. சற்று வீக்கான மன நிலையில் உள்ளோருக்கு இத்தகைய செய்திகள் மனதின் ஓரத்தில் போய் பதிந்து தொந்தரவு தரும் என்பதோடு, சில நேரம் அவர்களையும் அத்தகைய தவறான முடிவுக்கு யோசிக்க வைக்கும். கொலை போன்ற செய்திகளாவது அவற்றை பார்த்து நாம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கணும் என்ற விதத்தில் ஓகே. ஆனால் இத்தகைய தற்கொலை செய்திகளை பத்திரிக்கைகள் அதிகம் வெளியிடாமல் இருப்பது நல்லது. பத்திரிக்கைகளுக்கு இது பற்றி ஓர் கடிதம் எழுத எண்ணியுள்ளேன். (நாம் செய்வதை செய்து விடுவோம். அப்புறம் அவர்கள் இஷ்டம்)

மலேசியா வாசுதேவன் மறக்க முடியாத பாடல்கள்

சமீபத்தில் மறைந்த மலேசியா வாசுதேவன் பல அற்புத பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடியவற்றில் எனக்கு மிக பிடித்த மூன்று பாடல்கள்:

கோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)
அள்ளித்தந்த பூமி (நண்டு)
வா வா வசந்தமே (புது கவிதை)

இதில் "அள்ளி தந்த பூமி அன்னை அல்லவா?" பாடல் ரொம்பவே ஸ்பெஷல்.

சரணத்தில்,

சேவை செய்த காற்றே பேசாயோ? ஷேமங்கள் லாபங்கள் யாதோ?
பள்ளி சென்ற கால பாதைகளே.. பாலங்கள் மாடங்கள் ..ஆஹா.
புரண்டு ஓடும் நதி மகள்.... இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே. இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

இந்த வரிகளை கேட்கும் போதெல்லாம் நீடாமங்கலத்தின் தெருவும், பள்ளி கூடமும், ஆறும், பாலங்களும் மனதில் விரியும்.

எஸ்.பி. பி & ஜேசுதாஸ் கோலோச்சிய காலத்தில் மலேஷியா வாசுதேவன் நிறைய சாதித்தது பெரிய விஷயம் தான். நடிகராகவும் பல படங்களில் கலக்கியிருப்பார். We will miss you Malaysia Sir !

அய்யாசாமி

ஒரு முறை அய்யாசாமி மனைவி சமையல் முழுக்க முடிச்சிட்டு " தோசை மட்டும் எல்லாருக்கும்  ஊற்றி, பேக் பண்ணிடுங்க"ன்னு சொல்லிட்டு கிளம்பினாங்க. மனைவி, குழந்தை, தனக்கு என எல்லாருக்கும் நல்லா தோசை ஊத்தி முடிச்சிட்டுதான் அய்யாசாமி கிளம்பினார். சாயங்காலம் வந்து பார்த்தா, அடுப்பு "சிம்மில்" ஆப் செய்யாமலே இருக்கு. நாள் முழுக்க சிம்மில் இருந்ததால் தோசை கல் ஒரு வழியாயிடுச்சு. ஹவுஸ் பாஸ் செம ரெய்டு விட்ட பிறகு "கல் மேலே இருந்ததால், அடுப்பு ஆப் செய்யாதது தெரியலே" என பம்மினார். இப்போல்லாம் தோசை ஊற்றி முடிச்சால் முதலில் கல்லை கீழே இறக்கிடுறார் அய்யாசாமி.

கவனித்த விஷயம்

எங்கள் வீட்டுக்கருகே உள்ள ஒரு ஹோட்டலில் குழந்தைகளை கவரும் வண்ணம் விளையாட்டு கருவிகள் வெளியில் வைத்துள்ளனர். மேலும் அபூர்வ சகோதரர்கள் கமல் போல உயரம் குறைந்த ஒரு மனிதர் எப்போதும் ஒரு பபூன் உடை அணிந்து நின்று கொண்டு குழந்தைகளை பார்த்து சிரிக்கிறார். அடிக்கடி இங்கு செல்லும் போது நான் கவனித்தது குழந்தைகள் இல்லா விடில், இவர் பெண்களை மட்டும் தான் பார்த்து சிரிக்கிறார். ஆண்களை அதிகம் கண்டு கொள்வதில்லை. ஒரு சில முறை இவரை பார்த்து நான் சிரித்தும், பேச முயன்றும் முடியாமல் போக சற்று கஷ்டமாய் இருந்தது. அப்புறம் தான் நினைத்து கொண்டேன்: இவரும் ஒரு ஆண் தானே,. இங்கு தான் பெண்களை பார்க்கவும் சிரிக்கவும் அவருக்கு முடிகிறது!! சில உணர்வுகள் அனைவருக்கும் பொது!

சட்ட சொல் : ப்ரோபேட் (Probate)

ஒருவர் உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். அந்த உயில் படி அவரது சொத்துக்களை கோர்ட் பிரித்து அறிவிக்கும். அப்படி அறிவிக்கும் டாகுமென்ட் "ப்ரோபேட்" எனப்படும். அப்படியானால் உயில் மட்டும் எழுதினால் போதாதா என்றால் போதாது. அது தான் கடைசியாக எழுதப்பட்ட உயில் என்பதோடு, அவர் சுய நினைவில் எழுதினாரா போன்ற விஷயங்களை திருப்தி படுத்திகொண்ட பின் நீதி மன்றம் இந்த ப்ரோபேட்டை வழங்கும். கிட்டத்தட்ட உயிலின் காபி தான் இது. இந்த ப்ரோபேட் வைத்து தான் அவரவர் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றி கொள்ள வேண்டும்.

ரசிக்கும் விஷயம் நீர் வீழ்ச்சி

நீர் வீழ்ச்சியை பார்ப்பது ஒரு மகிழ்ச்சியென்றால், அதில் குளிப்பது அதை விட பெரிய மகிழ்ச்சி. நண்பர்கள் , குடும்பம் என யாருடன் நீர் வீழ்ச்சி சென்றாலும் முதலில் உள்ளே இறங்குவதும், கடைசியாய் மேலே ஏறுவதும் நானாகவே இருக்கும். நீர் வீழ்ச்சியில் பல வேறு ஸ்டைல்களில் குளிக்கலாம். உட்கார்ந்து, படுத்து, உள்ளே போய் கல்லில் சாய்ந்தவாறு (கிட்ட தட்ட தூங்குவது மாதிரி) என பல விதமாய் குளித்து, உடன் வந்தவர்கள் நான் எங்கே என தேடி பிடித்து இழுத்து போகும் வரை வெளியே வர மாட்டேன். சிவப்பான கண்களுடன் குளித்து முடித்து வந்ததும் நல்லா பசிக்கும் பாருங்க.புல் கட்டு கட்டலாம். சாப்பிட்டு முடித்ததும் " அடுத்து எப்ப குளிக்க போகலாம்" என்று ஆரம்பித்து விடுவேன்.. ம்ம் இதை எழுதும் போதே மறுபடி குற்றாலம் போகணும் போல இருக்கு..

Wednesday, February 23, 2011

ஆ....மீர்கான்..! அசத்திய நான்கு படங்கள்..

தற்கால நடிகர்களில் அமீர்கான் வெகுவாக கவர்கிறார். இவரது படங்களில் அன்பையும், நம்பிக்கையும் காட்டும் காட்சிகள் பல நேரம் கண்ணிலிருந்து சில துளி நீர் வர வைத்து விடுகிறது.

சமீபத்தில் பீப்ளி லைவ் படத்தின் சீடி வாங்கி வந்தேன். ஏன் இந்த படம் என ஹவுஸ் பாஸ் கேட்க "அமீர்கான் தயாரிச்சது" என்றேன். " வெறும் அமீர்கான் படம் மட்டுமே பாக்கலாம் போல.. எல்லாமே அருமையா இருக்குள்ள?" என்றார்.

டைம்ஸ் ஆப் இந்தியா சமீபத்தில் சென்ற பத்து ஆண்டின் சிறந்த பத்து படங்கள் தேர்ந்தெடுத்து வெளியிட்டது. அதில் நான்கு படங்கள் அமீர்கான் நடித்தது ! இது தவிர ஷாருக் நடித்தவை இரண்டு, வேறு எந்த நடிகர்க்கும் இரண்டு படம் கூட இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் அமீர்கானின் தாக்கத்தை இதிலிருந்தே உணரலாம்.

நான் ரசித்த நான்கு அமீர்கான் படங்களை இங்கு பகிர்கிறேன். இதில் கஜினி தவிர்த்து மற்றவை டைம்ஸ் ஆப் இந்தியா டாப் டென்னில் வந்தவையே. நான் பார்க்காத அமீர் கானின் நல்ல படங்கள் இருந்தால் நீங்கள் சொல்லுங்களேன். உங்களுக்கு நன்றி சொல்லியவாறே நிச்சயம் பார்ப்பேன்.

3 இடியட்ஸ் 


இந்த படத்தில் முதலில் நம்மை கவருவது இதன் கதை. பிறர் சொல்கிறார்களே என ஏதோ ஒரு கோர்ஸ் படிக்காமல் தனக்கு மிக ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து படிப்பதும், அதே துறையில் வாழ் நாளை கழிப்பதும் தான் வெற்றி பெற ஒரே வழி என்பதே  படம் சொன்ன சேதி. அமீர் 19 வயது இளைஞனாக நடித்தும், எந்த உறுத்தலுமின்றி ரசிக்க முடிகிறது. ஹீரோயினுடன் ஒரே ஒரு பாடல் காட்சி. இதை தவிர்த்து தேவையற்ற சண்டை, வன்முறை ஏதுமில்லை. 

அமீர் கானின் புதிரான பாத்திரமும், கடைசி அரை மணி நேரத்தில் அவர் பற்றிய முழு கதையும் விரிவதும் நம்மை ஈர்க்கிறது. அமீர், புரொபசர், மாதவன் என அற்புதமாய் கேரக்டர்கள் உருவாக்கிய கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். படம் நெடுகிலும் அமீர் சொல்லும் " ஆல் இஸ் வெல்" ...அருமை ! வெள்ளத்தின் நடுவே அமீர்கான் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். அதுவும் யாருக்கு... ஹீரோயினின் அக்காவிற்கு !!இந்த காட்சி முழுவதுமே வெரி இன்டரஸ்டிங். இந்த சீன் முடிந்து வெள்ளத்தின் நடுவே நின்று கொண்டு, புரொபசர் அமீருக்கு பேனா தருவார் பாருங்கள் கிளாஸ் !!

கஜினி

மசாலா படம் தான். தமிழில் ஏற்கனவே பார்த்தும் விட்டோம். எப்பவும் ரீமேக் படங்களை ஒரிஜினலுடன் ஒப்பிட்டு எவையெல்லாம் சரியில்லை என பட்டியலிடுவது நமக்கு வழக்கம். ஆனால் இந்த படம் பார்த்து விட்டு அப்படி ஒன்றே ஒன்று சொல்லுங்களேன் பார்க்கலாம்! சூர்யா செய்ததை விட மிக அற்புதமாக தன் அனுபவத்தின் மூலம் நடித்திருந்தார் அமீர். சூர்யா பணக்கார பிசினஸ் மேனாக ரொம்ப ஸ்டைலாக நடித்திருந்தாலும் கஜினியாக எப்போதும் திரு திருவென முழிப்பார். ஆனால் அமீர் கஜினியாகவும் உடல், முக பாவங்களில் அசத்தியிருந்தார். இதற்காக எயிட் பேக் உடல் வேறு! தமிழை விட வித்யாசமான ஆனால் ரசிக்கும் படி கிளைமாக்ஸ். அசின் தமிழிலும் ஹிந்தியிலும் கலக்கிய படம். காமெடியன் இல்லாமல் ஹீரோயினே நகைச்சுவை ஏரியாவுக்கு இன் சார்ஜ் ஆக்கிய இயக்குனருக்கு வணக்கம்! பாப் கார்ன் மசாலா படம். Fully Entertaining !! 

லகான் 
அமீரை நான் கவனிக்க ஆரம்பித்தது இந்த படத்துக்கு பின் தான். கிரிக்கெட் பிடிக்காத என் பெண் போன்றவளுக்கும் கூட இந்த படம் பிடித்தது !! சுதந்திர போராட்ட காலத்து கதையின் பின்னணியில் கிரிக்கெட் கலந்து எடுத்த கதை. பிரிட்டிஷாரிடம் வரி கட்ட முடியாது என போராடுகின்றனர் ஒரு கிராம மக்கள். பிரிட்டிஷார் ஒரு கட்டத்தில் "எங்களுடன் கிரிக்கெட் மேட்ச் ஆடி ஜெயித்தால் வரி கட்ட தேவையில்லை; தோற்றால் ரெண்டு மடங்கு வரி கட்ட வேண்டும்" என பந்தயம் கட்டுகிறார்கள். கிரிக்கட் என்றால் என்னவென்று தெரியாத கிராம மக்களை வைத்து அமீர் எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை.

இரண்டு நாட்கள் நடக்கும் அந்த கிரிக்கெட் மேட்ச் உணர்வு குவியல். கை சரியில்லாத ஒருவனை எல்லோரும் கிண்டல் செய்ய, அவனையே ஸ்பின் பவுலாரக்கி விக்கெட் அள்ளும் காட்சிகள் அட்டகாசம். அமீர் டீமில் ஆடும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யம். கடைசி பந்தில் நாலு ரன் தேவைப்பட அமீர் அடிக்கும் ஷாட்டை எதிர் அணி கேப்டன் கேட்ச் பிடித்து விடுகிறார். ஆனாலும் அமீர் அணி ஜெயிக்கிறது. எப்படி என்று கேட்டால், இதுவரை நீங்கள் படம் பார்க்க வில்லை  என்று அர்த்தம். அவசியம்  பாருங்கள் . கிரிக்கெட்டும் தேச உணர்வும் கலந்து கட்டி அடித்து ஜெயித்தார்கள். ஓடுமா ஓடாதா என சரியாக சொல்ல முடியாத, இப்படி ஒரு ரிஸ்க்கான படத்தை தயாரித்தது அமீரே தான்.

தாரே சமீன் பார்

சிறு வயது முதல் இன்று வரை நான் பார்த்த படங்களிலேயே ஒரு மிக சிறந்த படம் இது. டிஸ்லெக்சியா என்கிற நோயால் பாதிக்கப்பட்டு எதையும் புரிந்து கொள்ள சிரம படும் ஒரு சிறுவனின் கதை. படத்தின் ஹீரோ இந்த சிறுவனே ! அமீர் என்ட்ரி இடைவேளையின் போது தான்.

சிறுவனின் பள்ளிக்கு ஆசிரியராக வரும் அமீர்தான் அவனது நோயை புரிந்து கொள்ளுகிறார். அவனுக்கு ஓவியத்தில் ஆர்வம் இருப்பது தெரிந்து அதில் அவனை செலுத்துகிறார். மற்ற பாடங்களையும் வித்யாசமான முறையில் கற்று தருகிறார். சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையும் முன்னேற்றமும் பெறுகிறான். படத்தின் இறுதியில் ஒரு ஓவிய போட்டி நடக்கிறது. இதில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளுகிறார்கள். படத்தில் இந்த ஓவிய போட்டி நடக்கும் போது பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்க, காட்சிகளை பார்த்து சிரித்தவாறே இருப்போம். பாடல் முடியும் போது அமீர் வரைந்த படத்தை காட்டுவார்கள். அப்போது நம்முள் துவங்கும் ஆனந்த அழுகை படம் " End " போடும் வரை தொடரும். பல முறை பார்த்தும் ஒவ்வொரு முறையும் எனக்கு இதே அனுபவம் தான். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஆசிரியர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படம் இது. இதன் இயக்கமும் அமீர்கான் எனும் போது அவரின் மீது மதிப்பு கூடி போகிறது 

படத்தின் கடைசி ஷாட்டில் கோடை விடுமுறைக்கு, ஊருக்கு செல்லும் சிறுவன் அமீர்கானிடம் விடை பெற்று விட்டு, தன் தந்தையின் காரில் ஏற போகிறான். அப்போது தள்ளி நிற்கும் அமீரை பார்த்து விட்டு, அன்பின்  மிகுதியில் ஓடி வந்து மீண்டும் அமீரின் கைகளில் தஞ்சம் புக, அமீர் அவனை தூக்கி சிறு குழந்தை போல் சுற்றுவார்.  இத்தகைய படம் தந்ததற்காக அமீர்கானையே அப்படி தூக்கி சுற்றலாம்
                                           வெல்டன் அமீர்கான் ! கீப் இட் அப் !!

Sunday, February 20, 2011

நெகிழ்வான நட்சத்திர வார அனுபவங்கள்

தமிழ் மண நட்சத்திர வாரம் மிக நெகிழ்வான உணர்வுகளையும், புது அனுபவம் மற்றும் நண்பர்களையும் தந்து விட்டு இன்றுடன் முடிகிறது.

சொந்த கதை ஓரளவு இருந்தாலும்,  இனி நட்சத்திர பதிவர் ஆவோருக்கு  உதவும் என்ற எண்ணத்தில் இந்த பதிவு...

எந்த ஒரு பெரிய விஷயம் தனி மனிதன் திட்டமிட்டாலும், அதை செயல் படுத்த ஒரு குழு நிச்சயம் தேவைப்படுகிறது . இந்த வார பதிவுகளுக்கு பின்னால் சிறு குழு உதவி உள்ளது. அவர்களை அறிய செய்யவும் நன்றி சொல்லவும் இது ஒரு வாய்ப்பு. 

தமிழ் மணம், தனது நட்சத்திர பதிவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறது என அறியேன். ஆனால் நம் வாரம் துவங்க 15 நாட்கள் முன்பு ஒரு மெயில் அனுப்பி, நட்சத்திர பதிவராக இருக்க சம்மதமா என கேட்கின்றனர். பொதுவாய் இத்தகைய அரிய வாய்ப்புகள் வாழ்க்கையில் வந்தால், தவற விடுவதில்லை (தொலை காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டும் தற்போது "எஸ்" சொல்வது கொஞ்சம்;  "நோ" சொல்வது நிறைய ) 

தமிழ் மணம் மெயில் வந்த அன்று எனக்கு போர்ட் மீட்டிங். மேலும் அடுத்த பத்து நாட்களுக்கு என்னுடன் டிப்பார்ட்மண்டில் இருக்கும் ஒரே நபரும் விடுப்பில் செல்கிறார். இதனால் அதிக வேலை என்பதோடு தினம் வீட்டுக்கு செல்லவும் தாமதமாகும். எனவே இரு நாள் யோசித்தேன். வாய்ப்பை தவற விட வேண்டாம் என்று இரு நாளுக்கு பின் சரி சொன்னேன்.

சரி சொன்ன அன்றிலிருந்தே என்னை பொறுத்த வரை நட்சத்திர வாரம் துவங்கி விட்டது. தினம் ஒவ்வொரு பதிவாக எழுத ஆரம்பித்தேன். சனி ஞாயிறில் இன்னும் சற்று அதிக பதிவுகள் எழுதப்பட்டன. நட்சத்திர வாரம் காதலர் தினத்தில் துவங்கி உலக கோப்பை துவங்கும் நேரத்தில் முடிவது தெரிந்தது. இரண்டுக்கும் சிறப்பு பதிவுகள் தேவை என புரிந்தது.

மேலும் நட்சத்திர வாரம் துவங்கும் திங்கள் கிழமைக்கு முன் நான்கு நாட்கள் (வியாழன் முதல் ஞாயிறு வரை ) அலுவல், பின் சொந்த வேலையாக ஊரில் இருக்க மாட்டேன்.இந்த நான்கு நாட்களும் இணையம் பக்கமே வர முடியாது. இது தெரிந்து அனைத்து பதிவுகளும் மிக முன்பே தயார் செய்யப்பட்டது.

ச்சும்மா ! உங்களை குஷிப்படுத்த

தினம் ஒரு பதிவு வெளியிடுவதா, ரெண்டு பதிவு வெளியிடுவதா என சற்று குழப்பம். முந்தய நட்சத்திரங்களை பார்க்க பலர் தினம் ரெண்டு பதிவுகள் போட்டிருந்தனர். சிலர் தினம் ஒரு பதிவும் வெகு சிலர் அந்த ஒன்று கூட ஒரு சில நாட்களில் போடாமலும் இருந்தனர். சரி நாம் புதியதாய் ஏழெட்டு பதிவுகளும், பழையவனற்றில் அதிகம் வாசிக்க படாத நல்ல பதிவுகள் நான்கைந்தும் ரீ ரைட் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி கிட்ட தட்ட அனைத்து பதிவுகளும் நட்சத்திர வாரம் துவங்க நான்கு நாட்கள் முன்பே தயார்.

முதல் நாள் காதலர் தின சிறப்பு பதிவுக்கு பின்னூட்டங்கள் (வழக்கம் போல் வாழ்த்து சொல்லி) நிறைய வந்தது. மதியம் போட்ட பெண்கள் டயலாக்ஸ்க்கு அதிக பின்னூட்டங்கள் இல்லை. "சரி தினம் இரண்டு போடுவது தவறோ? ஏகப்பட்ட பதிவு எழுதுறான்" என மக்கள் வெறுக்கிறார்களோ என ஒரு எண்ணம். சரி இன்னொரு நாள் பார்க்கலாம் என நினைத்தேன். மறு நாள் பால குமாரன் பதிவுக்கு எதிர்பார்த்த படி பின்னூட்டங்கள் & ரெஸ்பான்ஸ் செம. பின்னூட்டங்கள் தவிர மெயில் & போனில் பதிவர் அல்லாத பழைய & புது நண்பர்கள் இந்த பதிவு பற்றி பேசினர். இதை விட ஆச்சரியம் இந்த ஒரு வாரத்தில் எழுதிய பதிவுகளில் மிக அதிக ஹிட்ஸ் வாங்கியது செவ்வாய் மதியம் வெளியிட்ட வேலை நீக்கம் என்கொயரி அனுபவம் பதிவு தான். இது ஓர் மீள் பதிவு!! தினம் ரெண்டு பதிவு போடலாமா, மீள் பதிவு போடலாமா என்ற ரெண்டு தயக்கங்களையும் வேலை நீக்கம் பதிவுக்கான வரவேற்பு உடைத்தது.

இந்த வாரத்தில் எனக்கு மிக பிடித்த பதிவுகள் அம்மா, சீனு சார் & பால குமாரன் சந்திப்பு ஆகியவை. நண்பர்கள் வரவேற்பு அதிகம் கிடைத்தது என்பதற்காக மட்டுமில்லாமல் "Straight from my heart " & மனதில் நீண்ட நாள் ஊறி கிடந்து பின் வெளி வந்ததாலும் பிடித்தவை.

பதிவில் மிக முக்கியமாய் கடைசி பகுதி அனைவரையும் கவரும் படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்ததும் இந்த வாரம் தான். அந்த கடைசி பாரா படிப்பவர்களை நெகிழ்த்துவதாகவோ, சிறு ஷாக் தருவதாகவோ, புன்னகை புரிய வைப்பதாகவோ இருத்தல் நலம் என உணர்ந்தேன்.

ஒரு குழுவே உதவியது என்றேன்; அவர்கள்:

நண்பன் தேவா: கல்லூரியில் எனது ஜூனியர். சில பதிவுகளை இவனுக்கு அனுப்பி கருத்து கேட்டேன். வாசித்து விட்டு உடன் சில மாற்றங்கள் சொன்னான். அவன் சொன்ன மாற்றங்கள் அனைத்தும் நண்பர்களால் பின்னூட்டங்களில் பாராட்டப்பட்டன. தில்லியில் இருந்தாலும் அநேகமாய் இந்த ஒரு வாரம் தினம் ஒரு முறை பேசி கொண்டிருந்தான். அவனால் ஒரு குறிப்பிட்ட நாள் இணையம் பக்கம் வர முடியாமல் இருந்த போதும் எஸ். எம். எஸ் அனுப்பி இன்றைக்கு ரெஸ்பான்ஸ் எப்படி என்று கேட்டான். இது போன்ற ஆதரவும் எதிர் பார்ப்பும் எழுதும் யாருக்கும் பெரிய பலம்.

பதிவர் ராம லட்சுமி : மூத்த பதிவரான இவரிடம் பல ஆலோசனைகள் பெற்றேன். மேலும் இவர்தான், கூகிளில் ஒவ்வொரு பதிவுக்கும் எவ்வளவு ஹிட்ஸ் என தெரிவதை பார்க்க சொல்லி தந்தார் (இந்த வாரம் தான் இது தெரிந்தது; இன்னும் தெரியாமல் இருப்போருக்கு: நமது டேஷ் போர்டில் நியூ போஸ்ட், எடிட் போஸ்ட் என்றெல்லாம் இருக்கும் அல்லவா? அதன் கடைசியில் Stats என்று இருக்கும் பாருங்கள். அதனை கிளிக் செய்தால் இந்த வாரம், மாதம், ஆல் டைம் பாபுலர் பதிவுகளை பார்க்கலாம்)

யூ டியூப் மூலம் வீடியோ பதிவேற்ற தெரிந்தாலும் அதை பதிவில் அப்லோட் செய்ய தெரியாமல் இருந்தேன். கேபிள் மூலம் இவ்வாரம் தான் கற்றேன் (ஆதி மனிதன் ஒரு முறை பின்னூட்டத்தில் சொன்னாலும் அப்போ புரியலை)

மாலை நேரத்து பதிவுகளை வெளியிட , தமிழ் மணம் & இன்ட்லியில் சேர்க்க உதவியது நண்பர் மாதவன்! (அலுவலகத்தில் தமிழ் மணம் & இன்ட்லி Access இல்லை). ஒவ்வொரு முறையும் மிக சரியாக நான் சொன்ன நேரத்தில் சேர்ப்பித்தார் தம்பி மாதவன். (ஒரு நாள் மட்டும் அந்த வேலையை ஈரோடு கதிர் செய்தார்!..கதிரோட சர்வீசுக்கு எல்லையே இல்லை போல )

ஆணும் பெண்ணும் கதை வெளியிடுவதற்கு முதல் நாள் தான் எழுத பட்டது. பதிவர் ரேகா ராகவன் உடனே வாசித்து விட்டு, சற்று ரீ- ரைட் செய்து தந்தார். 

மற்றும் கிரிக்கெட் பதிவுக்கு குறைந்த நேரத்தில் பதில் சொன்ன அனைத்து பதிவர்கள் ! தமிழ் மணத்தின் சங்கர பாண்டி ! இப்படி இவர்கள் அனைவரின் உதவி இல்லா விடில் உங்களின் ஆதரவும் பாராட்டும் கிடைத்திருக்காது.

நட்சத்திர பதிவர்கள் ஆக போகிறவர்களுக்கு சொல்ல விரும்புவது: தகவல் வந்ததுமே வேலை துவக்கி விடுங்கள். உங்கள் வாரம் துவங்கும் முன் அனைத்து பதிவுகளும் தயாராய் வைத்திருங்கள். கடைசி நேரத்தில் எதுவும் வைத்து கொள்ள வேண்டாம். அப்போது தான் கரன்ட் போகும்; நெட் அவ்வப்போது வேலை செய்யாது. உங்களுக்கே ஜூரம் வரும்; அலுவலகத்தில் வேலை அதிகமாகும்; குழந்தையை டாக்டரிடம் கூட்டி போக வேண்டியிருக்கும் (இவை அனைத்தும் எனக்கு நடந்தது) பதிவுகளை சற்று பாலிஷ் செய்வது & வெளியிடுவது மட்டுமே அந்த வார வேலையாக இருப்பது நலம்.

இந்த ஒரு வாரத்தில் பெற்றதும் இழந்ததும்:


பெற்றது:

புதிதாய் 13 தொடரும் நண்பர்கள்
வழக்கத்தை விட அதிகமான ஹிட்ஸ்கள் (தினம் ரெண்டு பதிவு எழுதியதாலும் இருக்கலாம்)
நெகிழ்வான பின்னூட்டங்கள்.
ஸ்டோர் செய்து என்றைக்கும் வாசிக்கும் படியான சில நேரடி மெயில்கள் 
பழைய நண்பர்கள் தொலை பேசி செய்து பேசிய நெகிழ்வான நிமிடங்கள்
சுஜாதாவிற்கு ஸ்ரீ ரங்கம் போல எனக்கு நீடாமங்கலம் என உணர்ந்தது (அவரோடு ஒப்பீடு ரொம்ப ஓவர் என எனக்கே தெரிகிறது. "சொந்த ஊர் கதைகள் " என்ற அளவில் மட்டும் இதை உணர்க. இன்னும் 10 சதவீதம் கூட எங்க ஊர் & வித்யாச மனிதர்கள் பற்றி எழுதலை. இனி எழுதணும் )

இழந்தது:

10 நாளாக பத்திரிக்கை வாசிக்கவே இல்லை
தினம் கணினியில் அதிகம் இருந்து கண்கள் சிவந்து ஓய்வுக்கு கெஞ்சியது 
ஒரு சில நாள் ஓரிரு மணி நேரம் தூக்கம் குறைந்தது  (ஆம் ஒரு சில நாள் ஓரிரு மணி நேரம் மட்டுமே !! தூக்கத்தை பெரும்பாலும் தியாகம் செய்வதில்லை)
சில நாட்கள் யோகா & ஜிம்முக்கு ரெஸ்ட்
குழந்தை பாடத்தில் சுத்தமாய் கவனம் செலுத்த வில்லை

முக்கியமாய்: ஹவுஸ் பாஸ் " ஏங்க..உங்க கூட பேசியே நாளாச்சு; ஒரு அப்பாயன்ட்மென்ட் குடுங்க" என்று கேட்கும் நிலை வந்ததால், கடைசி ரெண்டு நாட்கள் ஒரு பதிவோடு நிறுத்தி விட்டேன். வேறு இரு பதிவுகள் கிட்ட தட்ட தயாராய் இருந்தாலும், பாலிஷ் செய்கிறேன் என கணினியில் உட்கார்ந்து, வார கடைசியிலும் மனைவி & குழந்தை உடன் நேரம் செலவிடாமல் போக விரும்பலை.

நண்பர்கள் கடந்த ஒரு வார வழக்கப்படி தினம் இங்கு வந்து ஏமாறாதீர்கள். இனி முன்பு போல் அதிக பட்சம் வாரம் இரு பதிவுகள் மட்டுமே வரும். 

உங்கள் அனைவரின் அன்பிற்கும், வாசிப்பிற்கும் நெகிழ்வான நன்றி.


மற்றொரு சிறு மகிழ்வான செய்தி: தமிழ் மணத்தின் இந்த வார சிறந்த பதிவர்களில் வீடு திரும்பலுக்கு நான்காம் இடம்! மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த ஒரு வாரத்தில் நீங்கள் ரசித்த பதிவு பற்றியும்,  ஒரு வாரமாய் இந்த ப்ளாக் வாசித்திருந்தால், பொதுவாய் எப்படி இருந்தது என்றும்  ஓரிரு வரிகள் சொன்னால் ஒரு சிறு  குழந்தையை மகிழ்வித்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் ! (யப்பா பின்னூட்டம் போடுங்க என்பதை எப்படி டீசன்ட்டா கேக்குறான் பாருங்க )

கல்லூரி காலத்தில் நான் எழுதிய சிறு கவிதையுடன் இந்த நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்:

இல்லாமல் போகுமோ
சரித்திரத்தில் ஒரு சிற்றிடம்
எனக்கு?

Saturday, February 19, 2011

உலக கோப்பை யாருக்கு: 8 அணிகளை அலசும் பிரபல பதிவர்கள்

கிரிக்கெட் உலக கோப்பை இன்று துவங்குகிறது. மாணவர்கள் படிக்கும் இந்த நேரத்தில் தேர்வு துவங்குவது சரியா என ஓர் வருத்தம் இருந்தாலும், தேர்வு நேரம் என்பதால் திருவிழாவை மிஸ் பண்ண முடியுமா? இந்த முறை யார் வெல்லுவார்கள், அணிகளின் பலம், பலவீனம் என்ன இதோ பதிவர்கள் அலசுகிறார்கள். குறுகிய நேரத்தில் உடன் பதில் எழுதி தந்த அனைத்து பதிவர்களுக்கும் நன்றி!

பதில் சொன்ன பதிவர்கள் யாரும் மூணு அணிகளை கண்டுக்கலை. அவங்க என்ன பாவம் பண்ணாங்க? முதலில் அவர்களையும் பற்றி கொஞ்சம்:


நியூசிலாந்து (கடைசியா எப்ப ஜெயிச்சோமுனு அவங்களுக்கே மறந்திருக்கும்  ;  பங்களாதேஸ் கிட்டயே சொந்த ஊரில் இப்ப தான் உதை வாங்கினாங்க )

பாகிஸ்தான் (யார் கேப்டன் என்பதே கடைசி நிமிஷம் வரை முடிவு செய்யலை. முக்கிய புள்ளிகள் மூணு பேர் மேட்ச் பிக்சிங்கில் வெளியேற்றம்)

வெஸ்ட் இண்டீஸ் (இவங்க கேப்டன் யாருன்னு தெரியுமா? டேரன் சாமி !! என்ன கொடுமை சாமி! இவர் பாட்ஸ்மேனா பவுலாரான்னு அடுத்து கேட்டு கஷ்ட படுத்த விரும்பலை. பவுலர். கெயில், போலார்ட், பிராவோ, சந்தர் பால் ன்னு நாலு நல்ல வீரர்கள் இருக்காங்க. அவ்ளோ தான்)

வெறும் கேள்வி பதில் என்றால் சற்று போர் அடிக்குமே என அங்கங்கு நம்ம பின்னூட்டம் அடைப்பு குறிகளுக்குள்..

பதிவர் கார்க்கி



உலக கோப்பையை எந்த அணி ஜெயிக்கும் என நினைக்கிறீர்கள்?
ஒரு அணியை மட்டும் சொல்ல முடியாது. இந்தியா, செளத் ஆஃப்ரிக்கா, இலங்கை. இந்த மூன்றில் ஒன்று வாங்கும் என்பது என் எண்ணம். காரணம் இந்தியாவும், இலங்கையும் ஹோம் கிரவுண்டில் ஆடும் பாக்கியம் பெற்றவர்கள். பாகிஸ்தானுக்கும் ஆசியாவில் ஆடுவது நல்ல விஷயம்தான். ஆனால் அவர்களிடம் கன்ஸிஸ்டென்சி இல்லை. செளத் ஆஃப்ரிக்காவுக்கு அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இதுவரை கருணை காட்டாத உலக கோப்பையம்மன் இந்த முறை அருள் புரிய வாய்ப்பு அதிகமென நினைக்கிறேன். (உலக கோப்பையம்மன் !! டிபிகல் கார்க்கி)

இந்தியா:
பலம்: தோனியின் தலைமை, சச்சினின் பூர்த்தியாக World cup கனவு, Momentum
பலவீனம்: பவுலிங், காயங்கள்
X factor : கம்பீர், சாகீர் கான்
இலங்கை:
பலம் : பவுலிங், , Fielding.
பலவீனம் : மிடில் ஆர்டர்
X factor : மலிங்கா, சங்கக்கரா
செளத் ஆஃப்ரிக்கா:

பலம் : மொத்த டீமும், மற்றும் momentum
பலவீனம் : ஆசிய அணிகளின் ஸ்பின் அட்டாக்கை எதிர்கொள்வது,
X factor : ஆம்லா, டுமினி

எந்த அணிகள் செமி பைனல் செல்ல கூடும்?

இந்தியா, செளத் ஆஃப்ரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான்

யார் மேன் ஆப் தி சீரீஸ்?
சாகீர்கான் - இந்தியா ஜெயித்தால் இவர்தான் அதிக விக்கெட் எடுத்திருப்பார்.
ஷேன் வாட்சன் - செமி ஃபைனல் வந்தாலே போதும். ஆல் ரவுண்டர் என்பதால் நிறைய வாய்ப்பு
****
பதிவர் அன்புடன் மணிகண்டன்


மனதளவில் இந்தியா என்றாலும் தென் ஆப்பிரிக்காவிற்கும் சம வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன்.

ஏனெனில் மிகச்சிறந்த பந்துவீச்சு, அருமையான துவக்கம் தரக்கூடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள், நல்ல களத்தடுப்பாளர்கள் என்று Well Balanced அணியாக தென்னாப்ரிக்காவை சொல்ல முடியும்..

தென் ஆப்பிரிக்காவின்:

பலம்: பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங்
பலவீனம்: அதிர்ஷ்டம் இல்லாமை

X factor : டேல் ஸ்டீன் .மிரள வைக்கும் தனது வேகப் பந்தினால், ஆட்டத்தின் போக்கை வெகுவிரைவில் நிர்ணயம் செய்யக் கூடியவர்.
எந்த அணிகள் செமி பைனல் செல்ல கூடும்?
இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா..

இன்றைய தேதியில் நல்ல ஃபார்மிலும், ஏறக்குறைய தான் சந்திக்கும் போட்டிகளை வெற்றிபெறும் அளவுக்கும் வலிமை வாய்ந்த அணிகள் இவைகள் தான்..

யார் மேன் ஆப் தி சீரீஸ் ?
சேவாக் காரணம் - சிறிது நேரம் களத்தில் நின்றால் பெரிய அளவில் ரன்களை குவிக்கிறார்

ஷேன் வாட்சன் : ஆஸ்திரேலியா) - சமீப காலமாக பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பிரகாசிக்கிறார்

பதிவர் முரளி குமார் பத்மநாபன்



உலக கோப்பையை எந்த அணி ஜெயிக்கும் என நினைக்கிறீர்கள்?

இந்தியாதான்

ஏன்?

ஏன்னா நான் இந்தியாவில்தான் இன்னும் இருக்கேன் :-)

பலம்: விராத் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் அன்பிரிக்டபில் யுவி இதுபோக சுழற்பந்துவீச்சுக்கு உறுதுணையான ஆசிய ஆடுகளங்கள்

பலவீனம் : வேகப்பந்துவீச்சு, மாற்று விக்கெட் கீப்பர் இல்லாதது மற்றும் பிரவீன், ருத்ரபிரதாப்சிங் போன்ற டெக்னிகல் பெளலர்கள் இல்லாதது

X factor : கண்டிப்பாக விராத் கோலியேதான். ட்ராவிட்டையும் கங்கூலியையும் மிக்ஸ் பண்ண செம்ம்ம் ப்லெண்ட் இவன், சரியா ட்யூன் பண்ணா இந்தியாவுக்கு ஒரு ஸ்பெசலிஸ்ட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரெடி

எந்த அணிகள் செமி பைனல் செல்ல கூடும்?
தென் ஆப்ரிக்கா, இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீஸ்

தென் ஆப்ரிக்கா எல்லா வகையிலும் டேலண்டான ஒரு டீம். இலங்கை மிக வலுவான பேட்டிங் ஆர்டரும் அதைவிட ஸ்பெசலான பெளலிங் டீமும்
இந்தியா, ஒரு அருமையான டீம் செட்டாகியிருக்கிறது திறமையை கணக்கிட்டாலும் நமக்குதான் வெற்றிஎப்பொதுமில்லாதபடி ஒரு லக்கிமேனை கேப்டனாக கொண்டிருப்பதால் அதிர்ஸ்டத்தைக் கணக்கிட்டாலும் நமக்குதான் வெற்றி

யே....யே....!!!!
மேன் ஆப் தி சீரீஸ் ?

டீவில்லியர்ஸ் தென் ஆப்ரிக்கா
தில்ஷன் இலங்கை
இந்தியாவில் ஷேவாக் அல்லது ரெய்னாவிற்கு வாய்ப்புள்ளது.
****
பதிவர் மயில் ராவணன்



வாங்க மாரா; சொல்லுங்க. எந்த அணி ஜெயிக்கும்?

எந்த அணி ஜெயிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. மூன்று அணிகள் கிட்டத்தட்ட சம பலத்தில் இருக்கின்றன.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா

இந்தியா:
பலம்: பலமான பேட்டிங் ஆர்டர், திறமை சாலி ஸ்பின்னர்கள்
பலவீனம்: ஜாகிர் கானைத் தவிர ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சன் இல்லாதது

X-factor - சச்சின் டெண்டுல்கர்.
இலங்கை:

பலம்: சொந்த நாட்டில் 4 லீக் மேட்சுகள் ஆடுவது. நல்ல ஸ்பின்னர்கள்

பலவீனம்: தில்ஷானைத் தவிர அதிரடியாக ஆடக்கூடிய ஆட்டக்காரர்களும், ஆல்ரவுண்டர்கள் இல்லாததும்.

X-factor - ஏஞ்செலோ மேத்யூஸ்

தென்னாப்பிரிக்கா:

பலம்: ஸ்பின் பவுலிங் ஆடக்கூடிய ஆம்லா, டீ வில்லியர்ஸ் போன்றோர் அணியில் இருப்பது. குட் ஃபீல்டிங் யூனிட்

பலவீனம்: ப்ரஷர் மேட்ச்களில் சொதப்புவது - chokers

x-factor - ஆம்லா

மேன் ஆஃப் த சீரிஸ் - இந்திய அணி பவுலர் அஸ்வின் தான்.வேற ஆரு?!! (ரொம்ப தான் அஸ்வினை நம்புறீங்க. முதல்ல எல்லா மேட்சும் அவர் விளையாடுவாரான்னு பாக்கணும்)
***
பதிவர் சித்ரா (வாங்கம்மா நீங்க ஒரு லேடியாவது வந்தீங்களே)


இலங்கை ஜெயிக்க நிறைய வாய்ப்பு உள்ளது. ஆசிய கண்டத்து நாடுகளுக்கு பிட்சின் காரணமாய் இம்முறை சற்று advantage உள்ளது. இலங்கை அணி consistent ஆக நன்கு ஆடுகிறது

பலம்: அற்புதமான கலவையான பவுலிங் அட்டாக் & சங்ககாரா

பலவீனம்: லோயர் மிடில் ஆர்டர் பட்டிங்

X factor : மலிங்கா

எந்த அணிகள் செமி பைனல் செல்ல கூடும்?

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா & தென் ஆப்ரிகா

இவை நான்கும் தான் டாப் 4 அணிகள். இங்கிலாந்து தற்போது நன்கு ஆடினாலும் இந்தியாவில் சொதப்பும் வழக்கம் உள்ளதால் சேர்க்கவில்லை

யார் மேன் ஆப் தி சீரீஸ் வாங்க கூடும்?

தில்ஷன் A wild guess !

பதிவர் சீனா

ஐயா கலக்க போவது யாரு?

இந்தியா !

அவங்க பலம்? கடைசி வரை ஸ்ட்ராங் பேட்டிங் லைன் அப் (கடைசி வரையா? நல்லா பாத்தீங்களா? நிசமாவா சார் சொல்றீங்க?)

அப்போ வீக்நஸ்சு?: டாப் வீரர்களான சச்சின் ஜாகிர், சேவாக் இவர்களுக்கு உள்ள இஞ்ஜூரி

X Factor : டோனி & சச்சின்

Man of series?: சந்தேகமா என்ன? டோனி தான்.
***
பதிவர் மாதவன்


எந்த அணி ஜெயிக்கும்?

வீர்களின் பலம் பலவீனத்தை கொண்டு, சரியாக கணிக்கும் திறமை தோனிக்கு இருப்பதை, பல போட்டிகளில் (ஐ.பி.எல்) உட்பட கண்கூடாகப் கார்த்திருக்கிறோம்.மேலும் அவர் கூல் ஆசாமி.அதிர்ஷ்டமுள்ள ஆள் கூட...
பெரும்பாலும் சொந்த மண்.. அல்லது சப்-காண்டினென்ட் சூழல்.. இந்தியா விற்கு நல்ல வாய்ப்பு..

பலவீனம் : மோசமான பீல்டிங் ..சொல்ல போனா மிஸ் பீல்டிங், கேட்ச் கோட்டை விடுவது & ஒழுங்கா ஓடி ரன் எடுக்காதது

எந்த அணி செமி பைனல் போகும் ? ஏன்?

சவுத் ஆப்ரிக்கா : ஸ்மித் கேப்டன்சி அருமை பொதுவாக consistent ஆக ஆடுறாங்க சப் காண்டினென்ட் பிட்சுகள் தான் அவர்களுக்கு பலவீனம். அதோட முக்கிய மேட்ச்களில் அவர்களுக்கு உள்ள பேட் லக்
SriLanka : சப் காண்டினென்ட் பிட்சு இவர்களுக்கு பெரிய பலம். நல்ல பேட்டிங், பவுலிங் உள்ள அணி. எந்த வீக்னசும் தெரியலை.
இங்கிலாந்து : ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஜெயித்த சூட்டில் இருக்காங்க.

இந்த நான்கு அணிகளும் செமி பைனல் வர கூடும் (ம்ம் எதோ கொஞ்சம் மாத்தி இங்கிலாந்தை சேத்து சொன்னீங்க. டேன்க்சு)
****

பதிவர் பரிசல்காரன்



இந்தியா, ஸ்ரீலங்கா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவிற்கு கொஞ்சம் அதிகமாக.
பலம்: தற்போதைய ஃபார்ம்தான் பலம். முன் வரிசை சொதப்பினாலும், சச்சின் ஆட்டமிழந்தாலும் என எந்தச் சூழலிலும் வெற்றியைக் குறி வைக்கும் அணியாக தற்போதைய அணி திகழ்கிறது.
பலவீனம்: அணியின் மீதான எதிர்பார்ப்பு.

X factor :யூசுஃப் பதான் மற்றும் சுரேஷ் ரெய்னா. பந்து வீச்சில் அஷ்வின் பிரகாசிப்பார்!

யார் மேன் ஆப் தி சீரீஸ் வாங்க கூடும்?

யூசுஃப் பதான். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் கலக்குவார் என எதிர்பார்க்கிறேன். 1999ல் கலக்கிய லான்ஸ் க்ளூஸ்னர் போல இந்த உலகக் கோப்பையில் யூசுஃப் திகழ அதிக வாய்ப்புள்ளது.
--------------
ஒவ்வொரு அணிகளின் வெற்றி வாய்ப்பு எதைச் சார்ந்துள்ளது?

இந்தியா: சேவக்கின் துவக்கம், யூசுஃப்பின் ஆல் ரவுண்டர் திறமை.

இலங்கை: சங்ககாராவின் ஃபார்ம், மலிங்கா, அஜந்தா மெண்டீஸின் பவுலிங்.

ஆஸி: ஷேன் வாட்சனின் ஓபனிங், பாண்டிங்கின் + ப்ரட் லீஃபார்ம்

தென்னாப்பிரிகா: ஹசிம் ஆம்லாவின் துவக்கம், காலிஸின் ஆல்ரவுண்டர் திறமை.

மற்றும் பாகிஸ்தானின் - அஃப்ரிடி, யூனுஸ்கான், இலங்கையின் பீட்டர்சன், ஸ்டிராஸ், வெ.இண்டீஸின் க்கெய்ல் + பொலார்ட், நியூஸியின் ஸ்டைரிஸ், ஓரம் ஆகியோரும் அதிரடி சரவெடியை வெடிக்கத் தயாராகத்தான் உள்ளார்கள்.

லெட்ஸ் வெல்கம் த கேம்!

டிஸ்கி: இன்று மாலை பதிவு இல்லை!!

Friday, February 18, 2011

சீனு சார்

என் சிறு வயது நண்பன் நந்து.  பாலகுமாரனை பார்க்க என்னுடன் வந்தவன் என்றால் உங்களுக்கு எளிதாக புரியும் !  இவனது தந்தை சீனு சார் எனக்கு ஆறு, ஏழு, எட்டு மூன்று வருடமும் வகுப்புகள் எடுத்தார். எனது all time favourite teacher-களுள் இவர் முக்கியமானவர்.

சீனு சார் வகுப்பு என்றால் பசங்களுக்கு ரொம்ப குஷி.. அனேகமாக பசங்களை அடிக்கவே மாட்டார். நான் படித்த மூன்று வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டும் ஒரு பையன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததால்  அடி வாங்கிய ஞாபகம்...

ரொம்ப ஜாலியாக பாடம் எடுப்பார். அவருக்கு மிக பிடித்த பாடம் ஆங்கிலம். ரொம்ப நன்றாக,  எளிமையாக எடுப்பார். கிராமத்திலிருந்து படித்த பல சிறுவர்களுக்கு ஆங்கிலம் ஒரு கடினமான பாடமாயிருக்கும். ஆனால் சீனு சார் எடுத்தால், அந்த பாடம் சுவாரஸ்யமாகி விடும். 

வாரத்தில் குறைந்தது ஒரு நாள் வகுப்பு ஏதும் எடுக்க மாட்டார். எதாவது எழுதிக்கொண்டு, திருத்திக்கொண்டு இருப்பார். எங்களுக்கோ பாடம் நடத்தாமல் அரட்டை அடிக்க விடுவதில் செம குஷி...

ந்துவை பார்க்க சார் வீட்டுக்கு நான் அடிக்கடி போவேன். முதலில் போக ஆரம்பித்த காலத்தில் சீனு சாரின் தந்தை கோபால் ராவ் வாசல் அருகிலேயே இருப்பார். இவரும் ஒரு புகழ் பெற்ற தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். கோபால் ராவ் தாத்தா என்னையும் நந்துவின்  மற்ற நண்பர்களையும் பார்த்தாலே திட்டுவார். (மிக வயதானதன் விளைவு...) நாங்கள் அவர் பேசுவதை கண்டு கொள்ளாத மாதிரியும், ஆனால் சற்று பயந்தும் தான் போய் வருவோம். கோபால் ராவ் தாத்தா எனக்கு "பூனை குட்டி" என பட்ட பெயர் வைத்திருந்தார்.அவருக்கு பயந்து சத்தமே இல்லாமல் பூனை குட்டி போல் நான் வந்து போவேனாம்...!!

மாணவர்கள் பல நேரம் பேனாவிற்கு இங்க் போடாமல் வந்து விடுகிறார்கள் என்பதால் சீனு சார்  பள்ளியில் இங்க் விநியோகம் செய்தார்.

ஒவ்வொரு கிளாஸ்-க்கும் ஒரு இங்க் லீடர் இருப்பான். மேலும் ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய இங்க் லீடரும் உண்டு. பெரிய இங்க் லீடர் எல்லா வகுப்புக்கும் சென்று, யாருக்கு தேவையோ அவர்களுக்கு இங்க் போட்டு விட்டு, ஒவ்வொரு வகுப்பு இங்க் லீடரிடம் பணம் வசூலித்து வருவான். நான் மூன்று வருடமும் என் வகுப்பிற்கான இங்க் லீடர் ஆக இருந்தேன். கடைசி வருடம் நான்தான் பெரிய இங்க் லீடர் ! இது எனக்கு அப்போது பெருமையான பதவியாக இருந்தது !! சாரின் பையன், மற்றொரு வகுப்பில் இருந்தும் என்னை தான் பெரிய இங்க் லீடர் - ஆக்கினார் என ரொம்ப பெருமை. ( ஆனால் சார், தன் பையனிடம் விட்டால், வசூல் ஆன பணம் முழுக்க தன்னிடம் தராமல் பள்ளிக்கு வெளியில் விற்கிற கடலை மிட்டாய் வாங்கியே தின்னுடுவான் என்பதால் தான், என்னிடம் விட்டார் என்று பின்பு தான் தெரிந்தது)

நண்பன் நந்து

நான் பெரிய இங்க் லீடராக இருந்த போது இவ்வாறு நினைத்தேன்: "இந்த சீனு சார் பிழைக்க தெரியாதவரா இருக்கார்!  பசங்க இங்க் போட்டுட்டு காசு குடுக்காட்டி பேசாம விட்டுடறார்; நிறைய பேர் காசு கொடுக்காம சாரை ஏமாத்துறாங்க" .

இதற்கு என் வழியில் ஒரு தீர்வு கண்டேன். சார் வீட்டுக்கு நான் தான் சென்று இங்க் எடுத்து வருவேன். அப்போது காலி இங்க் பாட்டில்களில் தண்ணீர் பிடித்து சென்று, வீட்டில் உள்ள பெரிய இங்க் பாட்டிலில் கலந்து விடுவேன். இங்க் உடன் தண்ணீர் கலந்தால் பாதிபேர் பணம் தரா விட்டால் கூட சீனு சாருக்கு நஷ்டம் வராது என நினைத்தேன். இப்படி சாருக்கு தெரியாமல் இங்கில் தண்ணீர் கலந்து விற்றது ரொம்ப நாள் மனதை உறுத்தி கொண்டே இருந்தது. பல வருடங்கள் கழித்து வேலைக்கெல்லாம் சென்றபின் நான் இதனை அவரிடம் கூற, வழக்கமாய் சொல்லும் ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி, சிரித்தவாறே செல்லமாய் திட்டினார்.

சீனு சாருக்கு வகுப்பில் நான் தான் எப்பவும் செல்ல பிள்ளை. என் அண்ணன்கள் இருவரும் முன்னர் அவரிடம் படித்ததால், அவர்கள் பெயரில் எதாவது ஒன்றை சொல்லி தான் என்னை கூப்பிடுவார். எனது சரியான பெயரில் ஒரே ஒரு முறை கூட கூப்பிட்ட வரலாறே கிடையாது.

அவர் என்ன சொன்னாலும் உடனே நான் செய்து விடுவேன். இது எதோ சோப் போட வேண்டும் என்பதால் அல்ல, அவர் மேல் உள்ள அதிகப்படியான அன்பினால்தான் என அவருக்கு தெரியும். ஒரு முறை வகுப்பில் ரொம்ப குஷி மூடில் , "கோவிந்தா (என் அண்ணன் பெயர்).. இப்படி வந்து உட்கார்" என சேரில் அமர்ந்தவாறே, தனது மடியை காட்டினார். சற்றும் யோசிக்காமல் நான் சென்று அவர் மடியில் உட்கார்ந்து விட்டேன்.வகுப்பில் எல்லோரும் சிரித்த பின் தான் வெட்கமாகி ஓடி வந்தேன். அப்புறம் தான் நான் என்ன செய்கிறேன் என பார்க்கவே அவர் இப்படி சொன்னார் என புரிந்தது.

வரது பையன் நந்துவும் நானும் வெவ்வேறு வகுப்பில் படித்தோம். மூன்று வகுப்பிற்கும் சேர்த்து ஒவ்வொரு பாட தேர்வு பேப்பரையும் ஒரே சார் திருத்துவார். இவர் திருத்தும் போது எங்க ரெண்டு பேருக்கும் அந்த பேப்பரில் மட்டும் ஒரே மார்க் தான் போடுவார். இருவரையும் அருகருகில் நிற்க வைத்து கொண்டே எங்களின் பேப்பரை திருத்துவார். ஒரே மார்க் போட்டு விட்டு, "OK தானே? பிரச்சனை இல்லையே" என கேட்பார். சரி சரி என இருவரும் தலை ஆட்டுவோம்.

எங்கள் ஊரில் பிராமணர்கள் கணிசமாக உண்டு. அதில் சிலர் வீட்டு வாசல் தாண்டி கூட உள்ளே போக முடியாது. ஆனால் என்னை போன்று நன்கு பழக்கமானவர்கள்  சீனு சார்   வீட்டு அடுப்படி வரை செல்வோம். அதிகம் பழகாத கிராமத்து ஏழை மாணவர்களும் கூட சகஜமாக இவர் வீட்டினுள் வந்து போவார்கள். சீனு சார் மாணவர்களை நடத்தும் விதத்தில்   எந்த  வித்யாசமும்  பார்த்தது  இல்லை  (துரதிஷ்ட  வசமாய்  நிறைய  ஆசிரியர்கள்  அப்படி இல்லை)

ட்டாம் வகுப்பிற்கு பிறகு நான் மன்னார்குடி சென்று முதன் முறையாக ஆங்கில மீடியத்தில் படித்தேன். பத்தாவதில் 367  மார்க்குகள்  வாங்கினேன். இது மிக குறைவு என என் பெரிய அண்ணன் ஒரு வாரம் பார்க்கும் போதெல்லாம் அடிப்பதும், அவமானப்படுதுவதுமாக இருந்தார். ஒரு நாள் எங்கள் கடையில் வைத்து மார்க் குறைவு என என்னை கண்ட படி திட்டிக்கொண்டு இருந்தார். இதை கடைக்கு கீழே சைடில் நின்று கேட்டவாறே இருந்த சீனு சார், உடனே மேலே வந்து எனது அண்ணனை left and right வாங்கி விட்டார். "எட்டாவது வரை தமிழ் மீடியமில் படித்தவன் திடீரென இங்கிலிஸ் மீடியமில் படிச்சு இந்த அளவு வாங்கியேதே பெருசு. அவனை போய் ஏன் திட்டுறே?" என அண்ணனுக்கு டோஸ்  விட்டார். அதன் பின்தான் அண்ணன் என்னை திட்டுவதை குறைத்தார்.

என் திருமணத்துக்கு வெளி நாட்டில் இருந்ததால் நந்துவால்  வர முடியவில்லை. இதை போன் பண்ணி அம்மா, அப்பாவிடம் புலம்பி தீர்த்து விட்டான். சீனு சாரும், அம்மாவும் வந்திருந்து நெடு நேரம் இருந்து அனைவரையும் வரவேற்று உபசரித்தார்கள். அன்றைக்கு மண்டபத்தில் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்த சாரை பார்த்த போது நெகிழ்வாக  இருந்தது. எங்கள் ஊர் மக்கள் சீனு சார் ஏன் இவனுக்காக இவ்வளவு  மெனக்கெடுகிறார் என நினைத்திருக்க கூடும்.

கிட்டத்தட்ட 65-67 வயது வரை ரொம்ப ஆக்டிவ் ஆக இருந்த சீனு சார் கடைசி இரு ஆண்டுகளில் உடல் நலம் குன்றி விட்டார். அவர் வீட்டுக்கு எப்போது போனாலும் நின்றவாறே எதாவது வேலை செய்து கொண்டே தான் இருப்பார். அவர் சும்மா இருந்து பார்க்கவே முடியாது. அப்படிப்பட்டவரை படுக்கையில் பார்க்க கஷ்டமாக இருந்தது. புகை பழக்கம் மற்றும் டூ வீலரில் அதிகம் பயணம் செய்தது அவரது வயதான காலத்தில் படுத்தி விட்டது.

தன் கடைசி காலத்தில் அவரது விருப்பப்படி நீடாமங்கலம் வந்து, கொஞ்ச காலம் இருந்து விட்டு தன் சொந்த மண்ணில் மறைந்தார். அவர் இறந்த போது நான் ஏதோ ஒரு வேலையாக வெளியூரில் இருந்ததால் கலந்து கொள்ள முடிய வில்லை.  நந்து அடுத்த பத்து நாளும்  ஸ்ரீரங்கத்தில் தங்கி அவருக்கு காரியங்கள் செய்து கொண்டிருந்தான்.

ஒரு ஞாயிறு சென்னையிலிருந்து அவனை பார்க்க ஸ்ரீரங்கம் சென்றேன். அன்று தான் அவருக்கு பத்தாம் நாள் காரியம் என்பதே தெரியாமல், ஆனால் சரியான நாளன்று சென்று விட்டேன். அவன் அம்மா " சாருக்கு பிடிச்ச ஸ்டூடன்ட் சரியா பத்தாம் நாள் வந்துட்டே பார்" என்றும் சாரை பற்றியும் சொல்லியவாறே இருந்தார்.

நந்து சாருக்கு செய்யும் காரியங்களில் என்னையும் உடன் இருத்தி கொண்டான்.  சொந்த காரர்களில் யாரோ, நான் பிராமணன் இல்லை என்பதை முணுமுணுக்க நந்து கண்டு கொள்ளவே இல்லை. எல்லாம் முடிந்து அனைவரும் சட்டை போடாமல் பூணுலுடன் அமர்ந்து சாப்பிட உட்கார, நான் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட ரொம்பவும்  தயங்கினேன். அப்போதும் பிடித்து இழுத்து பக்கத்தில் அமர வைத்தான் நந்து. சாப்பாடு பரிமாற வந்தவர் பூணுல் இல்லாததால் என்னை சற்று வித்யாசமாய் பார்த்தார்.  " நாலு கழுதை வயசாயிடுச்சு. எப்ப தான் பூணுல் போட போறே ? எப்ப கல்யாணம் பண்ண போறே?" என்று நந்து என்னை பார்த்து கமன்ட் அடிக்க, தேவையான பதில் கிடைத்து விட்டதால் எனக்கும் சேர்த்து  உணவு பரிமாறினார் அவர்!! 

அன்றைக்கு நந்து எனக்கு சீனு சார் மாதிரி தான் தெரிந்தான். 

ஆணும் பெண்ணும் - சிறுகதை

குளிப்பதற்காக பாத் ரூமுக்குள் வாணி நுழைந்த அடுத்த நிமிடம் செல்போன் சிணுங்க ஆரம்பித்தது. கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதற்குள் நின்று விட்டது. அவசரமாய் குளிக்க ஆரம்பித்த சற்று நேரத்தில் லேண்ட் லைன் அலறியது. " அவராகத்தான் இருக்கும்!  செல்போனை எடுக்க வில்லை என்றதும் லேண்ட் லைனில் யாருடனாவது பேசிக்கிட்டிருக்கிறாளோ என செக் பண்ணியிருப்பார்".

யோசித்தவாறே குளித்து முடித்து உடை மாற்றும் போது மீண்டும் அழைத்தான் நிதின்.

" போனை கூட எடுக்காம என்ன பண்ணிக்கிட்டிருந்தே?"
"குளிச்சிக்கிட்டிருந்தேங்க"
" இப்போ அங்க மணி என்ன ?"
"பதினொன்னு"
"இப்பத் தான் குளிக்கிறியா?"
"......"
பேச்சை மாற்ற எண்ணியவள் " சாப்பிட்டீங்களா?" என்றாள்.
"ஆச்சு. சப்பாத்தி. தினமும் ரொட்டி சப்பாத்தின்னு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சு எனக்கு"
" ம்ம்... என் சமையல் அருமை தெரியணும்ல"

ஒரு சில நொடி மௌனத்திற்கு பிறகு " அடுத்த வீட்டு ரவி இன்னிக்கு எந்த ஷிப்ட் போறான் ? " என்றான்.

ரவி ஷிப்ட்டில் வேலைக்கு போவதால் இப்போ வீட்டில் இருப்பானோ, அதனால்தான் வாணி போனை எடுக்கலையோ என்று அடுத்த சந்தேகம்!

"தெரியலைங்க. அவங்க வீட்டுல யாரையும் இன்னிக்கு நான் பாக்கலை "
"அவன் உன்னை பாக்குற பார்வையே சரியில்லை. ஜாக்கிரதையா இருன்னு சொல்ல வந்தேன்.  வீட்டை பூட்டிட்டேள்ள?”

"ம்ம்"
" பிளைட் எட்டு மணிக்கு வந்துடுச்சுன்னா டின்னர் சாப்பிட வந்துடுவேன்னு நினைக்கறேன்"

அவன் பேசி முடித்ததும் அலுப்புடன் நாற்காலியில் சாய்ந்தாள். திருமணமாகி ரெண்டு வருடமாகிறது. " ஒரு வேளை குழந்தை வந்திருந்தால், இவ்வளவு தூரம் சந்தேகப்பட மாட்டானோ என்னவோ? ம்ம்... கடவுள் இன்னும் கண் திறக்கலை"  அடிக்கடி தோன்றி மறையும் எண்ணம் மறுபடி..

வேலை விஷயமாக வெளி நாடு அல்லது உள் நாட்டிலேயே எங்காவது ஒரு ஊர் என்று மாதத்திற்கு பத்து நாளாவது டூர் போவான் நிதின்.


அந்த பத்து நாளும் அவளுக்கு கொடுமையாய் இருக்கும். சமைக்கவே பிடிக்காது. ஒரு ஆளுக்காக சமையல் என்ன வேண்டியிருக்கு என்று  சோம்பேறித்தனம் வந்து விடும். கண்கள் டி.வியை பார்த்துக்  கொண்டிருந்தாலும் மனம் வேற எதையாவது நினைக்கும். எவ்வளவு தான் புலம்புவது? வயதான காலத்தில் அம்மாவை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நிறைய விஷயங்களை வாணி அவர்களிடம் சொல்வதே இல்லை.

"பி. எஸ். சி.க்கு பதில் அப்பாவிடம் சண்டை போட்டாவது இஞ்சினீரிங் படிச்சிருந்தா இப்போ வேலைக்கு போயிருக்கலாம். தப்பு பண்ணிட்டேன்" என்று அவ்வப்போது ஆட்கொள்ளும் சுய வெறுப்பு..

" இரவு என்ன சமைப்பது? ம்ம்.. தினமும் இது ஒரு பிரச்சனை.  என்ன சமைப்பது என்று யோசிப்பதே பாரமாய் ஆகி விட்டது.  மதியம் ஒரு தூக்கம் போட்டு விட்டு, மாலை காய்கறி வாங்கிகிட்டு வந்து டின்னர் ரெடி பண்ணனும்..."   யோசித்தவாறே காலை சாப்பாட்டை முடித்தாள்.

இரவு எட்டரைக்கு கார் வந்தது. வாசலை திறந்து வைக்க முடியாதபடி கொசுக்கள். ஜன்னல் வழியே பார்த்து விட்டு மகிழ்ச்சியோடு ஓடி வந்தாள். நிதின் காருக்கு பணம் தந்து விட்டு வாணியை பார்த்து சிரித்தான்.
" எப்படி இருந்துச்சு மீட்டிங்?"
"ம்ம்"
உள்ளே வந்து சாக்ஸை கழட்டியவாறு " காபி குடு" என்றான்.

காபி போட உள்ளே ஓடினாள்.  சோபாவில் அமர்ந்தவனின் கண்ணில் முதலில் பட்டது போனும், அருகிலிருந்த காலர் ஐ டியும். மெதுவாய் சென்று காலர் ஐ டியை அழுத்தி எங்கிருந்தெல்லாம் போன் வந்ததென பார்த்தான். அம்மா நம்பர், அப்பா நம்பர்,அதற்கடுத்து அவள் தோழி திவ்யாவின் நம்பர்.." பார்த்துவிட்டு மீண்டும் சோபாவிற்கு வந்து விட்டான்.

காபி குடிக்கும் போது அருகில்வந்த வாணியிடம் " இதென்ன உன்னிடமிருந்து புது ஸ்மெல்? புதுசா ஸ்ப்ரே ஏதும் வாங்கினியா " 

" நீங்க இல்லாம என்னிக்குங்க நான் அதெல்லாம் வாங்கியிருக்கேன்? குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம் " என்றாள்.

குளிக்கப் போகும் போதுதான் வாணியின் செல்போன் கண்ணில் பட்டது. கதவை மூடி விட்டு இன்கமிங் கால்களை ஆராய்ந்தான். ஏதோ ஓர் தெரியாத எண்ணிலிருந்து இரு முறை போன் வந்துள்ளதே ! சந்தேகத்துடனே குளித்தான்.

சாப்பிட்டு முடித்ததும் " டயர்டா இருக்கு படுக்கலாம்" என்றான்.

" என்னங்க ஒன்னுமே பேச மாட்டேங்கறீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு? "

படுத்த பிறகு கேட்டான். " ஏதோ ஒரு நம்பரிலிருந்து இன்னிக்கு ரெண்டு தடவை போன் வந்துருக்கே யார் அது? "

" ஐயோ ஆரம்பிசிட்டீங்களா? அது ஏதோ கிளப்பிலேந்து போன் பண்ணி மெம்பராகுங்கன்னாங்க ".

"அவங்க எதுக்கு ரெண்டு தடவை போன் செய்யணும்?"

" முதல் தடவையே " இண்டரெஸ்ட் இல்லைன்னு சொல்லிட்டேன். தெரியாம மறுபடி போன் பண்ணிட்டு சாரி கேட்டாங்க"

"இதை என்னை நம்ப சொல்றியா?"

""ஐயோ ஏங்க இப்டி பேசுறீங்க. எப்படி புரிய வைக்கிறது. நான் என்ன தப்பா நடந்துட்டேன்? எதை வச்சு ஏன் மேலே சந்தேக படுறீங்க? " பேச்சு அழுகையாக மாறியது.

நிதின் மெளனமாக படுத்திருந்தான். நாளை அந்த நம்பருக்கு போன் செய்து பார்த்திருந்தா உண்மைலேயே அது கிளப் தானான்னு தெரிஞ்சிருக்கும். ச்சே!  இவள் கிட்டே கேட்காம அதைச் செய்திருக்கலாம். இப்ப அழ ஆரம்பிச்சிட்டாளே!"

"சரி போதும் நிறுத்தறியா? நான் தூங்கணும்"

" குளவி கூட்டில கை வச்சிட்டமோ? இன்னிக்கு தூங்கின மாதிரி தான். எப்படி வரும் தூக்கம்? ம்ம்.. அந்த சைனாக் காரி என்னமா மசாஜ் பண்ணா?  சான்சே இல்ல. கடைசி நாள் தான் பார்த்தோம் அவளை. முன்னாடியே வராம போய்ட்டா " அவனுள் எண்ணங்கள் ஓடியபடியே இருக்க...

வாணியின் விசும்பல் தொடர்ந்தது.
*******

நேற்றைய பதிவுகள் :



Thursday, February 17, 2011

பரோட்டாவும் குழந்தைகளும்

"ரசிக்கும் விஷயம்" என வானவில்லில் பிடித்த சிலவற்றை ஒரு பாராவிற்கு மிகாமல் எழுதுவது வழக்கம். அப்படி ஒரு பாராவிற்குள் அடக்க முடியாத ரொம்ப ரொம்ப பிடித்த இரண்டு விஷயங்கள் இந்த பதிவில்:

1. பரோட்டா

பரோட்டோவை எனக்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப பிடிக்கும். வழக்கமாய் நடக்கும் ஒரு சம்பவம் சொன்னால் உங்களுக்கு புரியும்.

ஓட்டல்களுக்கு செல்வதென்றால், பொதுவாய் வெவ்வேறு இடங்களுக்கு செல்வோம். அப்படி எங்கு சென்றாலும் வித வித டிஷ்களை முயற்சிப்போம். ஆர்டருக்கு எல்லாம் சொல்லி முடித்து விட்டு இறுதியில் நைசாக "ஒரு பரோட்டா" என்பேன். மனைவியும் பெண்ணும் "அதானே" என்று  சிரிப்பார்கள். பரோட்டா மீதான காதல் தொடங்கியது இன்று நேற்றல்ல பள்ளி காலத்திலிருந்தே!

நீடாமங்கலத்தில் வஹாப் சார் புரோட்டா கடை இருந்தது. வஹாப் சார் எங்கள் ஊர் பள்ளியில் எங்களுக்கு கணக்கு பாடம் எடுத்தவர். ரொம்ப அருமையாக, எளிமையாக நடத்துவார். அவர் வைத்திருந்த பரோட்டா கடை தான் இது. சில நேரம் மாலையில் அவரும் கல்லாவில் அமர்ந்திருப்பார். இவர் கடை பரோட்டா சூடாகவும் செம டேஸ்டியாகவும் இருக்கும்.

ஏழாவது படித்த போது தம்பு சாமி என்ற நண்பனும் நானும் கடை தெருவில் நடந்து போகிறோம். வஹாப் சார் கடையை கடக்கும் போது எச்சில் ஊற ஆரம்பித்து விட்டது. ஒருவனிடம் பத்து காசும் மற்றொருவனிடம் பதினைந்து காசும் மட்டுமே உள்ளது. ஒரு பரோட்டா விலையே முப்பது காசு. அதுக்கே அஞ்சு காசு குறையுது. " சரி அஞ்சு காசு கடன் சொல்லிட்டு ஒரு பரோட்டா வாங்கி ரெண்டு பேரும் சாப்பிடலாம்" என முடிவு செய்தோம். கடையில் அன்றைக்கு நல்ல வேளையாக சார் இல்லை.

கல்லாவில் இருந்தவரிடம் ஐந்து காசு குறைகிற விஷயத்தை சொன்னோம். சிரித்த படி சரி என்று சொல்லி விட்டார். இவர் தான் பரோட்டாவை பிய்த்து போட்டு சாப்பிடும் பழக்கத்தை எங்களுக்கு ஏற்படுத்தினார். சுட சுட இருக்கும் பரோட்டாவை அனாயாசமாக பிய்த்து போடுவார். இப்படி பிய்த்து போட்டால் நிறைய குருமா ஊற்றி சாப்பிடலாம் என்பது மற்றொரு தொழில் ரகசியம்.

உள்ளே சென்று அமர்ந்தோம். ஒரே ஒரு பரோட்டோவை ஒரே இலையில் ரெண்டு பேரும் சாப்பிட்டோம். குருமா மட்டும் ; "ஊத்து..ஊத்து" என எக்கச்சக்கமா வாங்கினோம். சாப்பிட்டு முடித்து வெளியே வந்த போது இருந்த திருப்தி இருக்கே அடடா !! 

தஞ்சை செல்லும் போதெல்லாம் சாந்தி பரோட்டா கடையில்,பரோட்டா  சாப்பிடாமல் வருவதில்லை. டால்டாவில் செய்தது எனினும் மொறு மொறுவென்று சூப்பரா இருக்கும்.

தஞ்சையில் மற்றொரு சிறந்த பரோட்டா கிடைக்கும் இடம் சிலோன் பரோட்டா கடை. ஞானம் தியேட்டர் அருகே இருந்த இந்த ஹோட்டலில் உள்ள பரோட்டா செம பெரிதாக இருக்கும். குருமாவும் வித்யாசமாக இருக்கும். இரண்டு பரோட்டாவிற்கு மேல் சாப்பிடவே முடியாது.

பரோட்டாவை வீட்டில் செய்வது ரொம்ப கஷ்டம். செய்தாலும் சப்பாத்தி மாதிரி தான் இருக்கிறது. ஓட்டல்களில் என்ன டெக்னிக் செய்கிறார்களோ ஓட்டல் பரோட்டா தான் பெஸ்ட் ! என்ன தான் ஹவுஸ் பாஸ் " மைதா மாவு. எண்ணை நிறைய.. வெயிட் போடும்" என மிரட்டினாலும் பரோட்டா மேல் உள்ள காதல் தொடர்கிறது. தொடரும்.

2. குழந்தைகள்

சின்ன வயது முதலே சிறு குழந்தைகள் மேல் கொள்ளை பிரியம். கடைசி குழந்தையானதால் என்னை எல்லோரும் கொஞ்ச, நான் கொஞ்ச யாருமில்லாமல் போனது பெரிய ஏக்கமாய் தெரிந்தது. " எனக்கு தம்பி- தங்கச்சி வேணும்" என அம்மாவிடம் அழுவது அடிக்கடி நடக்கும். "ஆப்பரேஷன் பண்ணியாச்சு. இனிமே பிறக்காது" என்றால் புரியாமல் அழுவேன்.

பெரியண்ணனுக்கு திருமணமாகி குழந்தை பிறந்த பின்தான் நான் கொஞ்ச குட்டி பாப்பா கிடைத்தது. தங்க நிறத்தில் பொம்மை போலிருப்பான். அவனுக்கு "பொம்மு" என்று நான் வைத்த பெயர் நிலைத்து விட்டது.


" பொம்மு யார் செல்லம்? " என கேட்டு, " சித்தப்பா செல்லம்" என சொல்லி கொடுத்து அதற்கு நான் தொடர்ந்து கை தட்டி, கை தட்டி கேட்க பயல் ரொம்ப குஷியாயிட்டான். அவனது அம்மா, அப்பா யார் உருட்டி, மிரட்டி கேட்டாலும் " சித்தப்பா செல்லம்" என்றே சொல்லுவான்.

அவனுக்கு ஏழு, எட்டு வயதிருக்கும் போது அண்ணன் குடும்பம் திருச்சியிலிருந்தது . நானும் திருச்சி சட்ட கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். முதலில் சில காலம் வெளியிலும் பின் அண்ணன் வீட்டிலேயும் தங்கினேன். சில நாட்கள் தெரு கடைசியில் வரும் என்னை பார்த்து விட்டு " " சித்தப்பா ஆஆ " என கத்தியவாறு செருப்பு போடாமல் ஓடி வருவான். அவ்வளவு பிரியம்! அவனுக்கு Frooti குடிக்க ரொம்ப பிடிக்கும். கடைக்கு கூட்டி போய் Frooti வாங்கி தந்து விட்டு, " நீ குடிச்சிட்டு எனக்கு பாதி தரணும்" என்பேன். "சரி சரி" என குடிச்சிட்டு டப்பாவை குடுத்தால் கொஞ்சம் கூட மிச்சமிருக்காது. நான் ஏமாந்ததை பார்த்து மகிழ்ச்சியாய் சிரிப்பான். 

அடுத்து அக்காவிற்கு பிறந்த குழந்தைகளை கொஞ்சுவது வழக்கமானது . சிசேரியன் ஆபரேஷன் என்பதால் அக்காவும், வயதானதால் அம்மாவும் தூக்க முடியாமல் - அந்த இரு குழந்தைகளுக்கும் Vaccine போட தூக்கிச் சென்றே தலை நிற்காத சிறு குழந்தைகளை தூக்கி பழக்கமானது.

கல்யாணமானபின் குழந்தையை குளிக்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது இதிலேயே காலை பொழுதுகள் மகிழ்வுடன் கழிந்தன. அப்போது வீடியோ கேமரா வாங்குமளவு வசதி இல்லாததால் என் பெண் செய்த சேஷ்டைகளை எல்லாம் தனி நோட்டில் எழுதி வைத்தேன். அவற்றை இப்போதும் படிக்க சொல்லி கேட்டு, சிரிப்பாள் அவள் .

குழந்தை பிறந்த  அன்று அது கடவுள் போல என்பார்கள். பிறந்த அன்றே குழந்தைகளை பார்க்கவும் அன்றே கையில் தூக்கி பார்க்கவும் மிக விரும்புவேன்.

வீட்டிற்கருகே இருக்கும் சிறு குழந்தைகள் எப்போதுமே எனக்கு தோஸ்தாக இருக்கும். அரிதாக தற்போதுள்ள தெருவில் யாருமில்லை :((

உடன் படித்த வக்கீல் நண்பர்களுடன் குடும்ப சகிதம் சந்திப்பதும், வெளியூர் டூர் செல்வதும் வருடத்திற்கு சில முறை நடக்கிறது. இந்த வக்கீலுங்க அங்க வந்தும் கோர்ட்டு, ஸ்டே, ஜட்ஜ்னு அவனுங்க கதைகளை பேசிக்கிட்டு இருப்பாங்க. நான் அவர்கள் பசங்களுடன் விளையாட போயிடுவேன். பசங்க முதலில்  "அங்கிள்" என்று ஆரம்பித்து, அப்புறம் " வாடா போடா" ரேஞ்சுக்கு நம்மளை கூப்பிடுவாங்க.ஆனா  இவர்களிடம் கற்று கொள்ள எவ்வளவோ இருக்கு. :)))

நம் அனைத்து கவலைகளையும் தற்காலிகமாய் மறந்து சிரிக்க, இளமை காலத்தை மீண்டும் ஒரு முறை நாம் வாழ, உதவிடும் தருணங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நிமிடங்களே !

அம்ம்மா..மை டார்லிங்..

அம்மாவை பற்றி எங்கு எழுத ஆரம்பிப்பது?  " ப்ளாகிலே என்னென்னவோ எழுதுறியே. என்னை பத்தி எழுத மாட்டியா? " என குழந்தை மாதிரி அம்மா கேட்ட பிறகும் ஏன் ஒண்ணரை வருடமாக எழுதலை? எத்தனையோ கேள்விகளுடன் எழுத துவங்குகிறேன்

அம்மாவின் சொந்த ஊர் மன்னார்குடி. அப்பாவிற்கு கும்பகோணம். திருமணத்திற்கு பின் இருவரும் இந்த இரண்டு ஊருக்கும் நடுவில் உள்ள நீடாமங்கலத்தில் வந்து செட்டில் ஆனார்கள்.

பெற்ற ஆறு குழந்தைகளில் இரண்டு சிறு வயதிலேயே இறந்து விட்டன. நான்தான் கடைக்குட்டி. எனக்கு முன் பிறந்த குழந்தை இறந்ததால் அம்மா சோகத்திலேயே இருக்க, அதை மறக்க என்னை பெற்றதாக அப்பா சொல்லுவார். இருவரும் அவர்கள் நாற்பதுகளில் இருந்த போது பிறந்தவன் நான்.

அம்மாவின் தினசரி & முக்கிய குறிக்கோள்: பசங்க நல்லா சாப்பிடணும். நான்கு குழந்தைகள் இருந்தும் அம்மா சிம்பிளான சமையல் செய்ததில்லை. காலை & இரவு ரெண்டு வேளையும் டிபன். அதுவும் பூரி, இடியாப்பம், புட்டு, பொங்கல் என தினம் வித்யாசமாய் செய்வார். அந்த காலத்தில் கிரைண்டர், மிக்சி இல்லாமல் அம்மி கல்லிலேயே எவ்வளவு அரைத்திருப்பார்!

மிக அதிக தொந்தரவு தந்த பிள்ளை நானாக தான் இருப்பேன். ஏழு வயது வரை பால் குடித்த பையன். தெருவில் விளையாடி கொண்டிருக்கும் போது நடுவில், " இரு.. பால் குடிச்சிட்டு வந்துடுறேன்" என சொல்லிட்டு வந்து தாய் பால் குடித்துட்டு போவேன். தெருவில் யார் வீட்டிலாவது சிறு குழந்தைக்கு பால் குடுப்பதை பார்த்தால் வீட்டுக்கு வந்து எனக்கும் குடு என்று கேட்பேன். இப்படி நானாக நிறுத்தும் வரை, அவர் நிறுத்தாமல் தன் ரத்தத்தை பாலாக தந்து கொண்டு தான் இருந்தார்.

சற்று வளர்ந்ததும், பல் துலக்கி விட்டு, காலையே கதை புத்தகத்தை கையில் எடுத்து விடுவேன். (அப்போ நோ டிவி) அம்மா " குளிடா. சாப்பிடுடா" என சொல்லி கொண்டே இருப்பார். சொன்னதையே மறுபடி, மறுபடி சொல்வதால் "டேப் ரிக்கார்டர்" என அவருக்கு பெயர் வைத்தோம். "டேப்பு .. சும்மா இரு" என திட்டுவேன். டேப் நிற்காமல் பேசியதையே பேசியவாறு இருக்கும் .. வேலை முடியும் வரை.

அம்மா, அப்பா இருவருமே என்னை திட்டியதோ, அடித்ததோ இல்லை (அது பெரிய அண்ணன் டிப்பார்ட்மன்ட்). வாழ்க்கையில் என்னை அம்மா அடித்த ஒரே சம்பவத்தை மறக்க முடியாது. ACS படித்த போது " கோர்ஸ் ரொம்ப கஷ்டமாயிருக்கு. படிக்கலை. வக்கீலாகவே பிராக்டீஸ் செய்றேன்; இல்லாட்டி ஜிராக்ஸ் கடை வைக்கிறேன்" என கொஞ்ச நாள் ஊரில் வந்து உட்கார்ந்து விட்டேன். அனைவரும் ரொம்ப வற்புறுத்தி பரீட்சை எழுத வைக்க, அந்த க்ரூப் பாஸ் செய்தேன் ! அதற்கடுத்த கடைசி க்ரூப் சற்று எளிது. நானே தைரியமாக எதிர் கொண்டு கோர்ஸ் முடித்தேன்.

இந்த தகவலை போனில் சொல்லி விட்டு மகிழ்ச்சியுடன் ஊருக்கு வந்தேன். வீட்டில் அம்மா பெரிய குச்சியுடன் நின்றிருந்தார். உள்ளே நுழைந்ததும் குச்சியால் என் காலில் ஓங்கி அடித்தவாறு " படிக்க மாட்டேன்னு சொன்னியே. இப்ப பாத்தியா?  இப்ப பாத்தியா? " என செம அடி!!. நான் ஆச்சரியத்தில் சிரித்தவாறே அடி வாங்கினேன்.

அப்பா எப்போதும் கடையிலேயே இருக்க, பசங்களை நன்கு படிக்க வைத்தது அம்மா தான். என்ன ஜூரம் இருந்தாலும் பள்ளிக்கூடம் போயிடனும் என்று தான் சொல்லுவார். பள்ளியிலிருந்து வந்ததும் டாக்டரிடம் கூட்டி போய் புலம்புவார்.நான்கு பிள்ளைகளும் நன்கு படித்து, மிக நன்றாக செட்டில் ஆனதால், இன்று ஊரில் எங்கள் குடும்பத்தை தான் "அவங்களை மாதிரி படித்தால் நல்ல வேலைக்கு போகலாம்" என உதாரணமாக காட்டுவார்கள். இதன் பின்னால் அம்மாவின் உழைப்பும் தியாகமும் உள்ளது. 

"பெரிய குடும்பத்தில் கடைசி பிள்ளைங்க உருப்படாம போயிடும். நீ நல்ல நிலைமைக்கு வந்தது ஆச்சரியம் தாண்டா" என்பார்.

அம்மாவிடம் ஒரு பழக்கம். சுற்றியிருக்கும் எல்லாருக்கும் ஏதாவது வேலை குடுத்து கொண்டே இருப்பார். " நீ ஏதாவது கம்பனியில் மேனேஜராகவோ, கட்டிடம் கட்டுற மேஸ்திரியாகவோ போய்ருக்கணும். நல்லா வேலை வாங்கியிருப்பே" என்பேன். வேலை செய்பவர்கள் இல்லா விட்டால் தெருவில் நின்றவாறு ரோடில் செல்பவர் யாரையாவது கூப்பிட்டு " சித்த வாயேன். இந்த வேலையை செஞ்சு குடேன்" என்பார். அதில் சிலர் கண்டு கொள்ளாமல் போனாலும், யாரையாவது கூப்பிட்டு தன் வேலை முடியும் வரை ஓய மாட்டார். அவர்களுக்கு காபி, உணவு போன்றவை தந்ததாலும், அம்மாவின் இயல்பான Innocence-க்காகவும் அம்மாவை எல்லோருக்கும் பிடிக்கவே செய்யும். 

நான் கல்லூரியில் படிக்கும் போது அம்மாவிற்கு இருதயத்தில் பிரச்சனை வந்து உடன் கண்டு பிடித்ததால் உயிர் பிழைத்தார். 20 வருடங்களாக நோயுடனும் மாத்திரைகளுடன் தான் உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது. " நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேனோ? " என்று சொல்லியே எனக்கு 25 வயதில் திருமணம் செய்தார்கள். " அடுத்த தீபாவளிக்கு இருப்பேனான்னு தெரியாது" எனும் போதெல்லாம் " என்னோட சின்ன வயசுலேந்து இப்படி தான் சொல்றே; இருவது வருஷம் ஓடி போச்சு" என்று அவரை அடக்குவது வழக்கம்.

அம்மாவிற்கு சிறியதாக பயப்படவே தெரியாது. தலை வலி என்றாலே " பிரைன் டியூமரா இருக்குமோ? " என்று தான் கேட்பார். எனக்கும் இந்த "வியாதி" இருந்து தற்போது குறைத்து விட்டேன்.

சுஜாதா ஒரு முறை " அன்பு காட்ட நினைக்கும் போது அப்பா இல்லை" என்று எழுதி இருந்தார். இது அப்பாவிற்கு மட்டுமல்ல, அம்மாவிற்கும் பொருந்த கூடும் என புரிந்தது. வாசித்த போதே வலித்தது. அந்த நிலை எனக்கு வர கூடாது என நினைத்தேன்.

எனக்கு திருமணம் முடிந்து அம்மாவிற்கும் வயதான பின்தான் அம்மா மேல் அன்பை காட்ட ஆரம்பித்தேன். "டார்லிங்" என்று தான் கூப்பிடுவேன். ஊருக்கு செல்லும் போதெல்லாம் நான் முத்தம் குடுப்பது, கொஞ்சுவது அவருக்கு ரொம்ப சந்தோசம். "இவன் மட்டும் தான் என்னை இப்படி கொஞ்சுறான்!!".

அம்மாவிற்கு பொடி & வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் ரொம்ப வருஷம் இருந்தது. இரண்டு பழக்கங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுவதுமாய் நிறுத்தினார்.

முதல் அண்ணனுக்கு திருமணம் ஆனபோது அவர் அருகிலுள்ள ஊரில் வேலை பார்த்தாலும் அம்மா தனி குடித்தனம் வைத்தார். எங்கள் அனைவருக்குமே அப்படி தான் செய்தார். "தள்ளி இருந்தால் தான் உறவு கெடாது" என தெளிவாய் இருந்தார். 

"தவமாய் தவமிருந்து" படம் பார்த்து விட்டு "அம்மா அப்பாவை என்கூட வைத்தே தீருவேன்" என அவர்களை வற்புறுத்தி சென்னை அழைத்து வந்தேன். ஓரிரு மாதங்களில் சென்னையும், டென்ஷனில் நான் போடும் கூச்சலும் பிடிக்காமல் மீண்டும் ஊருக்கே சென்று விட்டனர்.

தற்போது அம்மா?

அம்மா தன்னுடைய இறப்பிற்காக, கடைசி நாளுக்காக காத்து கொண்டிருக்கிறார். கடந்த ரெண்டு வருடங்களாகவே அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனது. ஒரு முறை மூன்று நாள் கோமாவில் இருந்து டாக்டர்கள் கை விரித்த பின்னும், மிராக்கில் போல உயிர் பிழைத்தார்.

நடப்பது சிரமமானது. பின் உட்காருவதே சிரமமானது.தற்போது வாக்கர் பிடித்து நிற்கவும், சற்று உட்காரவும் செய்கிறார். சிறு வயதில் அம்மாவை மிக கஷ்ட படுத்திய, பல வருடங்கள் பேசாது இருந்த பெரியண்ணன் தான் இப்போது அவரை பார்த்து கொள்கிறார்.

அம்மாவை ஒரு குழந்தை போல் பார்த்து கொள்ளும், மருந்து & உணவு தரும் அப்பாவின் அன்னியோன்னியம்.. அனைவரும் வியக்கும் விஷயம். 

" நான் சீக்கிரம் சாகணும்னு வேண்டிக்கடா, முடியலை" என தற்போதெல்லாம் அடிக்கடி சொல்கிறார். "வேண்டிக்குறேம்மா; நீ கஷ்டப்படாம நல்ல படியா சாகணும்னு தினம் வேண்டிக்குறேன்; ஆனா சீக்கிரம் சாகணும்னு வேண்டிக்க முடியலை. மனசு வரலைம்மா" என்றேன்.

அடுத்த முறை தஞ்சை செல்லும் போது இந்த பதிவை பிரின்ட் அவுட் எடுத்து அம்மாவிடம் காட்டுவேன்.

டார்லிங் ஐ லவ் யூ!

Wednesday, February 16, 2011

ஹைதை ராமோஜி பிலிம்சிட்டி பயணம்:வீடியோ & படங்களுடன்

ஹைதராபாத் செல்பவர்கள் தவற விட கூடாத இடம் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி. குறிப்பாய் பள்ளி செல்லும் குழந்தைகள் மிக என்ஜாய் செய்ய கூடிய இடம் இது. காலை எட்டு மணி போல் திறக்கிறார்கள். திறக்கும் போதே சென்று மாலை ஏழு மணிக்கு மூடும் வரை இருந்து பார்த்தால் தான் பெரும்பாலான இடங்களை பார்க்க முடியும்! டிக்கட் விலை ஒரு ஆளுக்கு Rs.600 ! எனவே, முழுதும் யூடிலைஸ் செய்ய காலையே சென்று விடணும்.

எந்த வித உணவு பொருட்களும் உள்ளே அனுமதிப்பதில்லை. லாக்கர் ரூமில் வைத்து விட சொல்கிறார்கள். நாங்கள் எடுத்து சென்ற ஸ்நாக்ஸ் கூட அப்படி தான் வைக்க வேண்டியதாயிற்று.

டிக்கட் எடுத்ததும் பஸ்ஸில் நம்மை கூட்டி செல்கிறார்கள். வரிசையாக பஸ்கள் வந்த வண்ணம் மக்களை ஏற்றி சென்ற வண்ணம் உள்ளன. சனி, ஞாயிறுகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.


 ராமோஜி ராவ் என்பவர் ஆந்திராவின் பெரிய பிசினஸ் மேன். சினிமா தொழில் மட்டுமல்லாது ஈ டிவி, பேப்பர், ஹோட்டல் என பலவித வியாபாரம் வெற்றிகரமாக செய்கிறார். அவரின் பல நாள் கனவே இந்த பிலிம் சிட்டி. உங்கள் இடப்பக்கம் நீங்கள் பார்க்கும் படம் பிலிம் சிட்டி உள்ளே உள்ள அவர் வீடு.

பிலிம் சிட்டி 1666 ஏக்கர் நிலபரப்பில் உள்ளது. நாம் பஸ்ஸில் உள்ளே செல்ல இருபது நிமிடம் ஆகிறது. அவ்வளவு இடமும் மலை போல் உள்ளது.

பஸ்ஸில் ஒரு குறிப்பிட இடத்தில இறக்கி விடுகிறார்கள். இங்கு ராட்டினம் போன்ற சில விளையாட்டுகள் உள்ளன. அவற்றை முழுதும் தவிர்த்து விட்டு அருகில் குட்டி பசங்களை கவரும் வண்ணம் உள்ள ஒரு சில விஷயங்களை மட்டும் பார்த்து விட்டு அடுத்த இடம் கிளம்பினோம்.

ஒரு இடத்திலிருந்து அடுத்த இடம் செல்ல மறுபடி பஸ் தான். இம்முறை வெறும் மலைகளாக இல்லாமல் Heart of the Film city-ஐ காட்டினார்கள்.

வழி முழுவதும் நிறைய தோட்டங்கள் .. ஒவ்வொன்றுக்கும் " மொகல் கார்டன்" என்றும் மற்றும் பல்வேறு பெயர்களும் சொல்கிறார்கள். பலவற்றை இறங்கி பார்க்க நேரமில்லை. பசுமையும் மலர்களும் பார்க்க அவ்வளவு அழகு !! இங்கெல்லாம் கூட பிலிம் மற்றும் டிவி ஷூட்டிங்குகள் நடக்கும் போலும்.



திஹார் ஜெயில் செட்டிங் & வசூல் ராஜா படத்து ஹாஸ்பிடல்.                படங்களை பெரிதாய் பார்க்க படம் மேல் கிளிக் செய்து பார்க்கலாம்.

  "பாம்பே ஸ்லம் ஏரியா" , " மெட்ராஸ் ஏரியா" "திகார் ஜெயில்" " "வசூல் ராஜா படத்து ஹாஸ்பிடல்" என சொல்லியவாறே இருக்க பஸ் அவற்றையெல்லாம் விரைவில் கடக்கிறது.

குறிப்பிட்ட ஒரு தோட்டம் அருகே இறக்கி விட, அங்கு அற்புதமான பொம்மலாட்டம் நடந்தது. ஹைதை பயண கட்டுரை முதல் பதிவில் ஒரு படம் போட்டு " இங்கே என்ன நடக்குது?" என கேட்டிருந்தேன். பொம்மலாட்டம் என சரியாய் கணித்தவர்கள் உங்களுக்கு நீங்களே "ஷொட்டு" கொடுத்து கொள்ளலாம்.

பொம்மலாட்ட கலைஞர்களுடன் சிறு அளவளாவல்



இப்படி ஒவ்வொரு இடத்திலும் இறங்கி அங்கு ஒவ்வொன்றாய் பார்த்தாவறே சிறிது நடந்தால், மறுபடி வேறு பஸ், நம்மை வேறு இடத்திற்கு கூட்டி செல்ல தயாராய் நிற்கிறது.

ஹைதை பயண கட்டுரை:

முதல் பதிவு: படங்கள் மட்டும் இங்கே 

இரண்டாம் பதிவு : ரயில் பயணம் ( First ஏசி அனுபவம்) இங்கே
மூன்றாம் பதிவு: சார்மினார், சலார்ஜங், NTR பார்க் இங்கே
********
பிலிம் சிட்டியில் மாறி மாறி பார்த்த இடங்களில் குறிப்பிடத்தக்கவை:

1 . "Caves " (குகை) : நிஜமான குகைக்குள் நுழைந்தது போல் உள்ளது. ஆனால் எல்லாம் கார்ட்போடில் ஆனது. உள்ளே சில பொம்மைகள் (நாக்கை நீட்டிய படி நகரும் பாம்பு etc ) குழந்தைகளை கவரும் வண்ணம் உள்ளன. ரொம்ப ரசித்த இடம் இது.


2. ராஜா காலத்து செட்டிங்குகள். உள்ளே நுழையும் போதே சந்திரமுகி வேட்டையன் சிரிப்பு போலவும், படத்தில் வருவது போன்ற மியூஸிக்கும் போட்டு அசத்துகிறார்கள். இங்கு உள்ள அனைத்து ராஜா மண்டப செட்டிங்குகளும் தத்ரூபம்.




3.  உலகின் பல்வேறு விஷயங்களும் ஒரே இடத்தில் நகரும் பொம்மைகளாக வடிவமைத்துள்ளனர். இதனை நாம் குட்டி காரில் நகர்ந்தாவறே பார்க்கிறோம். இந்த ஐந்து நிமிடங்களும் மெய் மறந்து தான் போயிடுவோம்.

(ஒரு சில காரணங்களால் சிறு சிறு வீடியோவாக எடுத்துள்ளேன். பொருத்தருள்க)







4. "படம் எடுப்பது எப்படி?" என நிஜமாய் செய்து காட்டுகிறார்கள். உங்களில் நடிக்க யார் ரெடி என கேட்டு நம்மில் ஒருவரே ஹீரோயினாக மாற, கண் முன்னே அவர் நடிப்பதை மற்றொரு படத்துடன் இணைத்து காட்டி அசத்துகிறார்கள். இதை நேரில் பார்க்கும் போது வேறு சில சுவாரசியம் இருக்கும் என்பதால் முழுதும் சொல்லாமல் விடுகிறேன். படம் எடுக்கும் இடத்தில் ஒரே இடத்தில் ஐநூறு பேர் அமரும் அளவுக்கு மூன்று ஹால்கள் உள்ளன. முதலாவதில் தான் நடிக்க சொன்னது. அது முடிந்ததும் அடுத்த ஹால் திறக்க, அங்கே ஓடுகிறோம். அங்கு ரீ ரிக்கார்டிங் செய்வது எப்படி என முன்னர் நடித்த காட்சிக்கு நம்மில் இரு சிறுவர்களை வைத்தே ரீ ரிக்கார்டிங் செய்து காட்டுகிறார்கள். பின் அடுத்த ஹால் திறக்க, அங்கே அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து காட்டுகிறார்கள்.



என்ன ஒன்று இங்கு எல்லாவற்றையும் விளக்குபவர் பேசுவது முழுக்க ஹிந்தியில். ஹிந்தி புரியாட்டி பேய் முழி முழிக்க வேண்டியது தான்.

5. மற்றொரு இடத்தில் நிஜமான சண்டை காட்சியை நம் முன்னே நிகழ்ச்சி காட்டுகின்றனர்.   நம் தலைக்கு மேலேயே உள்ள ரோப்பை  பிடித்தவாறு  வந்து குதிக்கும் ஹீரோ வில்லன்களுடன் கை சண்டை & துப்பாக்கி  சண்டை போடுகிறார்.



6. டைட்டானிக் கப்பல் போல உள்ள செட்டின் கீழே குட்டி பசங்க  விளையாட  வீடியோ கேம்ஸ் உள்ளது.   இதற்கு சற்று தள்ளி Water gameம்  உள்ளது. அவர்களே நீச்சலுக்கு வேறு தனி உடை தருகிறார்கள். பெரும்பாலும் ஆண்களும் குழந்தைகளும் உள்ளே போய் பந்துகளை போட்டு விளையாடுகிறார்கள்.

பொதுவாய் மாலை ஆறு மணிக்கெல்லாம் மூடி விடுவார்கள் போலும். நாங்கள் சென்ற டிசம்பர் இறுதியில் ஏழரை வரை திறந்திருந்தது.


சினிமா மேல் ஆசை இல்லாத மனிதர்கள் ரொம்ப குறைவு. அப்படி ஆசை உள்ள யாரும் நிச்சயம் சென்று வர வேண்டிய இடம் பிலிம் சிட்டி.  

Tuesday, February 15, 2011

வேலை நீக்கம்: ஒரு என்கொயரி அனுபவம்

பத்து வருடத்துக்கு முன் நேர்ந்த அனுபவம் இது. இதனை வாசிக்கும் நீங்களும் ஒரு நிறுவனத்தில் பணி புரிபவர் என்ற முறையில் இந்த அனுபவம் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்.
************************
நான் வேலை செய்த அலுவலகத்தில் ஒரு அட்டண்டர் இருந்தான். எப்பவும் ரொம்ப காமெடியாக பேசுவான். அவன் பேசினால் சிரிக்காமல் யாரும் இருக்க முடியாது. கல்யாணம் ஆகி அவனுக்கு குழந்தையும் உண்டு. "வக்கீல் சார்...வக்கீல் சார்..." என்றே கூப்பிடுவான். அவனது பெயர் ராபின் (மாற்றப்பட்டுள்ளது).

திடீரென அவனை பற்றி ஒரு தகவல்.. உடன் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் அவன் தவறாக நடக்க முயன்றதாகவும், அந்த பெண் அழுது கொண்டே ஓடி போய், பெர்சனல் டிபார்ட்மன்ட்டில் புகார் தந்ததாகவும் செய்தி...(அப்போது HR டிபார்ட்மன்ட்டை பெர்சனல் டிபார்ட்மன்ட் என்பர்).ராபினை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்று நிறுவனம் முடிவெடுத்து, லீகல் டிபார்ட்மன்ட்டில் என்னிடம் இந்த வேலை வந்தது.
நிரந்தர ஊழியரை வேலையை விட்டு அனுப்புவது பற்றி விசாரிக்க, அது ரொம்ப சிரமமான நடைமுறை என்று புரிந்தது. முதலில் ஒரு ஷோ காஸ் நோட்டிஸ் அனுப்ப வேண்டும். பின் அவன் செய்த குற்றங்களை உள்ளடக்கி சார்ஜ் ஷீட் தயார் செய்ய வேண்டும். இதன் பின், ஒரு என்கொயரி நடத்தி, அதில் அவன் மீது உள்ள குற்ற சாட்டுகள் உண்மை என நிரூபணம் ஆனால் மட்டுமே அவனை வேலையை விட்டு நீக்க முடியும்.

இந்த நிலையில் ராபின் பற்றிய மற்றொரு அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது. ராபின் ஒரு எய்ட்ஸ் நோயாளி ! நாங்கள் வெளியே அனுப்புவது எய்ட்ஸ் என்பதால் என்று விஷயம் திசை மாறி விட கூடாது.உண்மையில் கம்பெனிக்கு அப்படி பட்ட எண்ணம் இல்லை. ஒரு பெண் ஊழியரிடம் தவறாக நடப்பது தவறான முன் உதாரணம் ஆகி விடக்கூடாது என்பதால் மட்டுமே ராபினை வேலையை விட்டு நீக்க முடிவு செய்தனர்.

ஷோ காஸ் நோட்டிஸ் & சார்ஜ் ஷீட் போன்ற விஷயங்கள் முடிந்து என்கொயரி வந்து விட்டது. சட்டம் படித்த நான் என்கொயரி ஆபிசரானால் அவனும், தனக்கு வக்கீல் உதவி கேட்பான் என்பதால், அலுவலகத்தில் உள்ள மற்றொரு சீனியர், என்கொயரி ஆபிசர் ஆக நியமிக்க பட்டார். ஆனால் இவர் பின்னால் என்னையும் சேர்த்து ஒரு டீமே இயங்கியது.

என்கொயரி நடந்தது. என்கொயரியில் ராபின் தானே வாதாடினான். தான் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க வில்லை என்று கூறினான். மேலும், கம்பெனி முன் வைத்த அனைத்து சாட்சிகளையும் அவனே குறுக்கு விசாரணை செய்தான். ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல் அனைத்து சாட்சிகளையும் கேள்விகளால் உடைத்தான்.

என்கொயரி நடக்கும் போதே ராபின் பல முறை என்னை நேரிலும், தொலை பேசியிலும் மிரட்டினான். என்கொயரி ஆபிசர் இருந்தாலும் அவரின் பின்னால் இயங்குவது நான் தான் என அவனுக்கு நன்றாக தெரியும்." வக்கில் சார்.. நான் சாக போறவன்... நீங்க வாழனும் . ஞாபகம் வச்சிக்குங்க." என்பான். அவனது மிரட்டல்களை நான் பொருட் படுத்த வில்லை. ஆனால் அவனை அலட்சிய படுத்தாமல், ஒதுக்காமல் பேசி வந்தேன்.

என்கொயரி ஒரு வழியாய் முடிந்தது.அந்த நேரத்தில் வந்த ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு, செக்ஸ் தொல்லை தருவதாக ஒரு பெண் ஊழியர் புகார் கூறினால், அதற்கு வேறு எந்த சாட்சியும் தேவை இல்லை என்றும், அதற்கு மிக அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியது. இதன் அடிப்படையில் ராபின் நீக்க பட்டான்.

இத்தனை விஷயங்களையும், அந்த கொடுமையான காலத்தையும் உறுதியுடன் எதிர் கொண்ட அந்த பெண்ணை நிச்சயம் பாராட்ட வேண்டும்.  

வேலை நீக்கத்தை எதிர்த்து ராபின் conciliation officer - என்ற அரசு ஊழியரிடம் அப்பீல் செய்தான். இந்த ஆபிசர் ஒரு பெண். பிரச்சனை முழுதையும் புரிந்து கொண்டு, அவர் சொன்னார்: " அவனுக்கு இழப்பீடு என எதாவது பணம் கொடுத்து கேசை இப்பவே முடிச்சிடுங்க.. இல்லா விட்டால் அவன் லேபர் கோர்ட் போவான்; விஷயம் இழுத்து கொண்டே போகும்; இங்கு பணம் வாங்கி கொண்டு அவன் ஒத்து கொண்டால், அதுக்கு மேல் அவன் அப்பீல் போக முடியாது" .

எனக்கு இதில் உடன் பாடு இல்லை. ஆனால் கம்பெனி கேசை இழுத்தடிக்காமல், உடனே முடிக்க எண்ணினர். நாம் பணம் தந்தால் நாம் செய்தது தவறு என்று ஒப்பு கொண்ட மாதிரி ஆகிடும் என வாதிட்டேன். ஆனால் நிறுவனம் ஒரு சிறு தொகை (பத்து வருடம் முன் 25,000 என நினைக்கிறேன்) தந்து பிரச்சனையை அந்த ஆபிசர் முன் முடித்தனர். அதன் பிறகு நான் அவனை பார்க்க வில்லை. அவன் எவ்வளவு நாள் உயிரோடு இருந்தானோ .. அறியேன்..

இந்த என்கொயரி மூலம் நான் அறிந்தவை:

1. ஒரு நிரந்தர ஊழியரை வேலையை விட்டு அனுப்புவது சாதாரணமான விஷயம் அல்ல. இதனால்தான் பல கம்பெனிகள் யாரையாவது வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்றால் அவர்களை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள்.

2. மேனஜர் ஆக (Supervisory cadre) உள்ள ஊழியரை வேலையை விட்டு அனுப்புவது எளிது. என்கொயரி போன்றவை தேவை இல்லை. அதே போல் பிசினஸ் சரி இல்லை என்பதால் செய்யப்படும் ரெட்ரேன்ச்மென்ட் (Retrenchment) போன்றவற்றிற்கும் என்கொயரி தேவை இல்லை.

3. லேபர் கோர்ட்டுகள் பெரும்பாலும் ஊழியர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்குகின்றன.

4. ஒரு ஊழியர் செய்யும் தவறுக்கு நிகரான தண்டனையே ஒரு கம்பெனி வழங்க வேண்டும். உதாரணமாக , ஒரு பிக் பாக்கெட் குற்றத்துக்கு எப்படி கோர்ட் மரண தண்டனை வழங்க முடியாதோ, அது போல். ஒரு சாதாரண குற்றத்திற்கு ஒரு ஊழியரை கம்பெனி வெளியே அனுப்ப முடியாது. சொல்ல போனால், வேலையை விட்டு அனுப்புவது என்பது ஒரு ஊழியருக்கு தரப்படும் மிக அதிக பட்ச தண்டனை ( மரண தண்டனைக்கு சமம்) என்றே கோர்ட்டுகள் கருதுகின்றன.
***********
நிற்க. ராபின் என்னுடன் பேசிய கடைசி வரிகள் இதோ: :

" வக்கீல் சார்.. ரொம்ப தேங்க்ஸ் சார்... இந்த கம்பெனிகாரங்க எனக்கு பணம் தர ஒத்துக்கிட்டு இருக்க மாட்டனுங்க.. நீங்க தான் அவன் பாவம்னு எனக்காக பேசி வாங்கி கொடுத்திருபீங்க.. எனக்கு தெரியும்! ரொம்ப தேங்க்ஸ் சார் !"

                                                *********

இன்றைய காலை பதிவு: பாலகுமாரனுடன் சந்திப்பு

நாளைய பதிவு: 


ஹைதை ராமோஜி பிலிம் சிட்டி ஏராளமான படம் & வீடியோக்களுடன் 

பாலகுமாரனுடன் சந்திப்பு

"பாலகுமாரனை சந்தித்தது பற்றி எழுதுகிறேன்" என பதிவுகளில் சில முறை குறிப்பிட்டு கொண்டே இருந்தாலும் இன்று வரை எழுதலை. பதிவர் பலா பட்டறை ஷங்கர் மாதிரி சிலர் , " யோவ் நீ நிஜமா பாத்தியா இல்லியா? " என சட்டையை உலுக்கி கேட்காத குறை தான். பாலகுமாரனை சந்தித்தது ஒரு முறையல்ல, மூன்று முறை; அவற்றை சுவாரஸ்யம் கருதி ரிவர்சில் பகிர்கிறேன்..

மூன்றாவது சந்திப்பு

சென்னை மயிலாப்பூரில் 2006-ல் ஒரு இலக்கிய விழா. திரு. பாண்டிய ராஜன் (Mafoi) அழைப்பில் சென்றிருந்தேன். எனது அடுத்த இருக்கையில் வெள்ளை சட்டை, வேஷ்டியில் பாலகுமாரன். அன்றைய விழாவில் அவர் இறுதியில் யாருக்கோ நினைவு பரிசு தர மட்டுமே மேடை ஏறினார். ரெண்டு மணி நேரத்திற்கும் மேல் அருகிலேயே அமர்ந்துள்ளேன். முதல் முறை மெல்லியதாய் சிரித்ததை தவிர இருவரும் எதுவும் பேசி கொள்ள வில்லை. ரொம்ப நேரம் கழித்து தான் தோன்றியது. ஒரு காலத்தில் ஆதர்சமாய் இருந்த எழுத்தாளர் அருகில், அவரை உரசியவாறு பல மணி நேரம் அமர்ந்தும் சில வார்த்தை கூட பேச தோன்ற வில்லையே ! அப்படி அமர்ந்திருப்பது எந்த மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் தர வில்லையே! ம்ம்..காலம் எத்தகைய மாற்றங்களையெல்லாம் செய்கிறது !!

இரண்டாவது சந்திப்பு

1995 என நினைவு. எங்கள் ஊர் நீடாமங்கலத்தில் ஒரு மாலை நேரத்தில் வீட்டில் படுத்தவாறே ஏதோ புத்தகம் படித்த படி இருக்க, ஊர் நண்பன் ஒருவன் ஓடி வந்து சொல்கிறான்: " சீக்கிரம்.. கடை தெருவுக்கு வா,, உன்னை பால குமாரன் கூப்பிடுறார்".

" என்னது பாலகுமாரனா? அவர் எப்படி இங்கே?"

"ஆலங்குடி கோயிலுக்கு போயிட்டு வந்தவர் நம்ம ஊரில் டிபன் சாப்பிட நின்னுருக்கார். ஓட்டல் வெளியில் வந்து நின்னவரை நாங்க பாத்து போய் பேசினோம். அப்போ எங்க ஊரில் ஒருத்தர் எழுதின லெட்டர் உங்க புக்கில வந்திருக்குன்னு சொன்னோம். அப்படியான்னு ஆச்சரியமா" அவர் இருக்காரா? பாக்க முடியுமான்னு கேட்டார்".

வீட்டிலிருந்து அந்த ஹோட்டலுக்கு நடந்த மூன்று நிமிடத்தில் முதல் சந்திப்பு ஞாபகத்தில் ஓடியது. என்னை நினைவிருக்குமா?

நீடாமங்கலத்தில் ஓட்டல் வெளியே பாலகுமாரன் நின்றிருந்த காட்சி இன்னும் நினைவில் உள்ளது. சென்று அறிமுக படுத்தி கொண்டேன். என்ன செய்கிறேன் என கேட்டார். பாலகுமாரன் அப்போது விசிறி சாமியார் உள்ளிட்ட ஆன்மீக சமாச்சாரம் நிறைய எழுத ஆரம்பித்து விட்டார். அப்போது எழுதிய சில நாவல்கள் பெயர் சொல்லி வாசித்தீர்களா என்றார். " இல்லை" என்றேன். அவர் முகம் சற்று மாறியது. அவரது நாவல்களில்  பிடித்தது என அவரது மெர்குரி பூக்கள், இரும்பு குதிரை உள்ளிட்ட சில நாவல்கள் பெயர் சொன்னேன். குடும்பத்தார் ஓட்டல் உள்ளிருந்து வந்து காரில் அமர்ந்தனர். பத்து நிமிடம் போல் பேசி விட்டு கிளம்பி விட்டார்.


முதல் சந்திப்பு


கல்லூரி காலத்தில் பாலகுமாரன் ரசிகன் என்பதை விட வெறியன் என்று தான் சொல்ல வேண்டும். பாலகுமாரனை பற்றி யாரும் தவறாக பேசினாலே கோபம் வந்து விடும். வீட்டில் வேறு யாருக்கும் பாலகுமாரன் எழுத்துக்கள் பிடிக்காது. போலவே நெருங்கிய நண்பர்களான நந்து மற்றும் மோகனும் கூட அவரை கிண்டல் செய்து என்னை வெறுப்பேற்றுவார்கள்.

பாலகுமாரன் தொடர்கள் ஒரே நேரத்தில் பாக்யா (மாலை நேரத்து மயக்கம்), சாவி (பந்தய புறா), விகடன் (பயணிகள் கவனிக்கவும்) என வந்து கொண்டிருந்தது. இவை ஒவ்வொன்றையும் வாசித்து விட்டு நான் எழுதிய கடிதங்கள் அந்தந்த புத்தகங்களில் அரை பக்க அளவில் வெளி வந்தன. ஜூனியர் விகடனில் பிரசுரமான " இனிது இனிது காதல் இனிது" தொடர் முடிந்ததும் மூன்று பக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு பதில் எழுதிய பாலகுமாரன் " உங்களது இந்த கடிதம் புத்தகத்தில் பிரசுரமாகும். சென்னை வந்தால் போன் செய்து விட்டு வீட்டிற்கு வரவும்" என எழுதி இருந்தார். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

சென்னை செல்லும் வாய்ப்பு வந்தது. அப்போது சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தான் நண்பன் நந்து. தகவல் சொன்னதும் " வா..வா. இந்த தடவையாவது என்னோட தண்ணி அடிப்பியா?"


"மாப்ளே அந்த பேச்சு பேசினே.. உன்னை பாக்கவே வரலை"

" சரிடா. விடு.. எப்ப வர்றே?"

விரைவில் வந்தேன். சென்ற வேலையை விட பாலகுமாரனை சந்திப்பதே முக்கிய வேலையென மனம் சொன்னது.  காலையே பாலகுமாரனுக்கு போன் செய்தேன். அவரது கடிதத்தை நினைவூட்ட, பகல் பதினோரு மணிக்கு வர சொன்னார். நந்துவும் நானும் சென்றோம்.

எங்களை உள்ளே அழைத்து அமர சொன்னவர் "எழுத்தாளனை எதுக்கு பாக்கனும்னு நினைக்கிறீங்க?" என்று பேச ஆரம்பித்தார். நான் சொன்ன பதில்களையும் கூடவே என் மூக்கையும் உடைத்து நொறுக்க ஆரம்பித்தார். சற்று அடி வாங்கியதும் மெள்ள "நீங்க தான் சார் லெட்டரில் "சென்னை வந்தால் போன் செய்து விட்டு வீட்டுக்கு வரவும்'னு எழுதியிருந்தீங்க. நானாக கேட்கலை"

அதன்பின் வேறு விஷயங்களுக்குள் நுழைந்தார். சட்டம் படிப்பதாக அறிந்ததும் அறிவுரை தொடங்கியது. "ஐயருங்க எல்லாம் சூப்பரா இங்கிலிஸ் பேசுவானுங்க. நீயும் இங்கிலிஸ் பேச கத்துக்கோ" நந்து எதுவும் பேசாமல் நாங்கள் இருவரும் பேசுவதை பார்த்து கொண்டிருந்தான்.

பொதுவான விஷயங்கள் பேசும் போது நான் அவரது கதை மாந்தர்கள் அல்லது அவரது கட்டுரையில் "பாலகுமாரனாக" உள்ளவரின் நிலை பாட்டை எடுத்தேன். அவர் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டில் பேசினார். அதிர்ச்சியாக இருந்தது. சாதாரண கதைகள் என்றால் சரி. அவர் அப்போது எழுதியவை எல்லாம் பெரும்பாலும் அவரின் பயோகிராபி தான். கதைகளில் மட்டுமல்ல, அதற்கு முந்தய வாரம் குமுதத்தில் கூட, தான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன போது முன் பின் தெரியாத அனைவரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பு செலுத்தியதாக எழுதி இருந்தார். நேரில் தன் ரசிகன் மீது நேச உணர்வின்றி பேசியது ஜீரணிக்க சிரமமாயிருந்தது.

அவரின் எழுத்தும் அவரும் வேறு வேறாய் இருப்பதாய் நான் சொல்ல, "ஆம் அவையெல்லாம் கதை" என்றார். அப்படியானால் கட்டுரைகள் காட்டிய பால குமாரன்?

ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவர் இல்லத்தில் அமர்ந்து பேசிய போதும் "தண்ணீர் குடிக்கிறீர்களா? " என்று கூட பேச்சுக்கு  கேட்க வில்லை. பன்னிரண்டு மணி மொட்டை வெயிலில் வெளியே வந்தோம்.

நந்துவிற்கு சிரிப்பு தாளலை. என்னை கிண்டல் செய்து சிரித்தவாறே வந்தான்.

எனது ஆதர்ச எழுத்தாளரின் பிம்பம் ஒரு மணி நேரத்தில் உடைந்து நொறுங்கிய அதிர்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாய் உள் வாங்கி கொண்டிருந்தேன்.

அந்த சம்பவத்தின் தாக்கத்தை நான் பேசிய அடுத்த ஒரு வரியில் சொல்லி விடலாம். சட்ட கல்லூரியில் நான்கு வருடமாய் படித்தும், அதுவரை எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் "பழம்" என்று நண்பர்களால் கிண்டல் செய்யப்பட்டவன், முதன் முறையாய் கேட்டேன்

" மாப்ளே தண்ணி அடிக்கலாமா?"

***

நேற்றைய பதிவுகள்



நாளைய பதிவு: 

ஹைதை ராமோஜி பிலிம் சிட்டி ஏராளமான படம் & வீடியோக்களுடன் 

Monday, February 14, 2011

காதல் ஸ்பெஷல்:பெண்கள் டயலாக்ஸ்& காதல் பாடல் வரிகள்

ரசித்த சில காதல் வரிகள்


கண்ணாடி முன்னே பேசிபார்த்தால் வார்த்தைகளெல்லாம் முண்டியடிக்கும்
முன்னாடி வந்து பேசும்போதோ வார்த்தைகளெல்லாம் நொண்டியடிக்கும்....
எந்த பேனா வாங்கும் போதும் என்னவள் பெயர் தான் எழுதி பார்க்கும்
இதற்கு பெயர் தான் காதலா
****
நீ நின்ற இடமென்றால் விலை ஏறிப்போகாதோ
நீ செல்லும் இடமெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
****
கண்கள் எழுதும்,இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே.... இதில் ஓசை இல்லையே
இதை ஏனோ தினம் படித்திட முடிகிறதே
****
காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
****
உன் கையில் சேர ஏக்கமில்லை உன் தோளில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகமில்லை என்று பொய் சொல்ல தெரியாதடி
உன் அழகாலே..உன் அழகாலே.. என் வெயில் காலம் அது மழை காலம்
****
நீங்கள் ரசித்த காதல் வரிகளை பின்னூட்டத்தில் சொல்லலாம்.
****
காதல் ஸ்பெஷல் : பெண்கள் டயலாக்ஸ்


கல்லூரியில் ஒன்றாய் படித்த இரு நண்பர்களுக்கு (தனித்தனியே) கல்யாணமாகி ஐந்து வருஷமாயிடுச்சு. இருவருக்கும் நடந்தது காதல் திருமணம் தான்.


   (படம் நன்றி: Image bazar) 

காதலியாக இருந்த போதும், பின் மனைவியாக மாறிய பின்னும், பெண்கள் பேச்சு எப்படி மாறுகிறது என பகிர்கிறார் ஒருவர்.

மற்றவரோ பேச்சு மட்டுமல்லாது பெண்கள் வாழ்க்கை முறையும் காதல் & கல்யாணத்தில் எப்படி மாறுது என டீப்பா நோட் பண்ணி சொல்கிறார். மேலே படிங்க.

VERSION - I முதல் நண்பர் சொன்னது

காதலிக்கும் போது:

"ஏன் சீக்கிரமா போனை வச்சிடீங்க? இன்னும் கொஞ்சம் பேசக் கூடாதா?"

"உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?"

"உங்க பெஸ்ட் ப்ரெண்ட் யாரு?" ("அவனை ஒழிக்கணும் முதல்லே ..")

"ரெண்டு நாள் என்னை பாக்கலை.. அதுக்குள்ளே இளைச்சி போய்டீங்க.."

 திருமணம் முடிந்த உடன் : 

"என்னோட சமையல் உங்களுக்கு பிடிச்சிருக்கா?"

"இந்த டிரஸ் எனக்கு எப்படி இருக்கு?"

"நம்ம வீட்டுக்கு அடுத்தது என்ன வாங்கலாம்?"

 இரண்டு வருடம் கழித்து: 

"உங்க குடும்பத்தில் எல்லாருமே ஒரு மாதிரி தான் இருக்கீங்க .."

"கிரிக்கெட்டையே கட்டிடுட்டு அழுங்க .."

"எங்க குடும்பத்தை கிண்டல் பண்ணலேன்னா உங்களுக்கு தூக்கம் வராது!"

ஐந்து வருடம் கழித்து: 

"எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிடோம்னு இருக்கு"

"வீட்டு நினைப்பு கொஞ்சமாவது இருக்கா?"

"என் மேல உங்களுக்கு கொஞ்சமாவது பிரியம் இருக்கா? ".

"உங்களுக்கு ஒன்னுமே தெரியாது "
-----------------**********************------------------------
VERSION - II    இரண்டாம்  நண்பர் சொன்னது

காதலிக்கும் போது:

டயலாக்:

கிப்ட் எல்லாம் ஒன்னும் வேணாம். காசு செலவு பண்ணாதீங்க

எங்க அப்பா/அம்மா-னா ரொம்ப பிடிக்கும்.

அப்பா கோவிச்சிபாறு வெளியே போக வேணாம்.

எடை (Weight) : 50 கிலோ
போன் : Reliance bol-india-bol
Movies i like : Romance
Friends : college friends
ஹோட்டல்: Pizzahut
இங்கிலீஷ்: பீட்டர்

திருமணம் முடிந்த உடன் :


டயலாக்:

இன்னிக்கி ஷாப்பிங் போலாமா

எங்க அப்பா/அம்மா-னா ரொம்ப பிடிக்கும். அதோட உங்க பேமிலியும் பிடிக்கும்

பைக்கில போகலாம்.

எடை : 55 கிலோ
போன் : Reliance prepaid
Movies i like : Action movies
Friends: பக்கத்துல புதுசா கல்யாணம் ஆகி வந்து இருக்காங்க .
ஹோட்டல் : சரவண  பவன்
இரண்டு வருடம் கழித்து: 

டயலாக்:

இது வரைக்கும் எனக்கு என்ன வாங்கி கொடுத்து இருக்கீங்க

எங்க அப்பா/அம்மா-னா ரொம்ப பிடிக்கும். நீங்க பரவா இல்ல. ஒங்க பேமிலி சரி இல்ல.

நடந்து போலாம்.

எடை: 60 கிலோ
போன்: Reliance land line
இங்கிலீஷ்: தnglish
Friends : அடுத்த தெருவுக்கு புதுசா வந்திருக்கும் பங்கஜம் மாமி
ஹோட்டல் : கை ஏந்தி பவன்

ஐந்து வருடம் கழித்து: 

டயலாக்:

கேட்டாலும் ஒன்னும் கிடைக்காது

எங்க அப்பா/அம்மா-னா ரொம்ப பிடிக்கும். நீங்க எல்லாம் சுத்த மோசம்

ஏன் போன் எடுக்கலை?
(ஹஸ்பன்ட் பதில் : மீட்டிங்கில் இருந்தேன் (Or) போன் சைலன்ட் மோடில் இருந்தது கவனிக்கலை)                     

Friends: ரோடுக்கு அந்த பக்கம் மூணாவது தெருல புதுசா குடி வந்து இருக்காங்க. (இந்த தெருவில் யாரும் சரி இல்லை)  

எடை: பார்ப்பது இல்லை
Movies I like: எந்த படமுமே நல்லா இல்ல
ஹோட்டல் : "வீட்டுக்கே பார்சல் வாங்கிட்டு வந்துடுங்க"

-----------------**********************------------------------
டிஸ்கி: இவற்றை சொன்ன அந்த ரெண்டு "தைரியசாலிகள்"  தங்கள் பெயரை சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்கிருக்காங்க.

************
நாளைய  பதிவு:     பாலகுமாரனுடன் சந்திப்பு  
Related Posts Plugin for WordPress, Blogger...