Monday, August 11, 2014

சிறு வயது குறும்புகள் + சில பிறந்த நாள் நினைவுகள் ...

குறும்பு - 1

சிறு வயதில் என்னை சாப்பிட வைப்பதென்றால் படு கஷ்டம் (நம்ப முடியலே ..இல்லே??) ..  மனதில் எதாவது ஒரு பொருளை நினைத்து கொள்வேன்.. அந்த பொருளை சாப்பாடு ஊட்டுபவர் சொல்ல வேண்டும்... சரியாக சொன்னால்தான் சாப்பிடுவேன்.. இல்லா விட்டால் தரையில் புரண்டு அழுவேன்..

சென்னை வந்த போது பச்சை கலரில் ரயில் பார்த்தது ; அதனை மனதில் நினைத்து கொள்ள, சரியாக சொல்லாத போது, " பச்சை ரயிலை சொல்ல மாட்டேங்குறியே" என நீண்ட நேரம் அழுது ஆர்பாட்டம் செய்வேன். இது எங்க குடும்பத்தில்  ரொம்ப பிரபலம்.. இன்றும் யாராவது ஒருவர் " பச்சை ரயிலை சொல்ல மாட்டேங்குறியே" என்று சொல்லி கிண்டல் செய்வார்கள்..

குறும்பு - 2

ஒன்றாவது, ரெண்டாவது ( I std/ II std) படிக்கும் போதெல்லாம் அக்காவின் தோழிகள் , பக்கத்து வீட்டு பெண்கள் என என்னை விட மிக பெரிய பெண்களிடம், " என்னை கல்யாணம் பண்ணிக்கிறிங்களா? என கேட்பேன்.. (அப்போ வயசு 5 அல்லது 6 !!) இதை எப்படி ஆரம்பித்தேன்; நானாகவே கேட்டேனா; யாரும் சொல்லி கொடுத்ததா என நினைவில் இல்லை.

ஏழாவது படிக்கும் போது,  ஆசிரியை ஒருவர், " ஏன்டா சின்ன வயசில் பக்கத்து வீட்டுக்கு வரும் போது என் கிட்டே வந்து கல்யாணம் பண்ணிக்கிறியா-ன்னு கேட்டே; இப்ப பண்ணிக்கிறியா? " என வம்புக்கு கேட்க, அனைவரும் (குறிப்பாய் பெண்கள்) செமையாய் சிரித்தனர். மானம் போனது. பதில் சொல்லாமல் வழிந்து வைத்தேன்..

குறும்பு - 3

ஏழு வயது இருக்கும் போது எனது வகுப்பு மாணவன் ஒருவன் குஷியாக இருக்கையில், ஒரு குறிப்பிட்ட வார்த்தையை உபயோகிப்பான். அவனிடம் இருந்து அந்த வார்த்தை எனக்கும் தொற்றி கொண்டது. ஒரு நாள் வீட்டில் உள்ள ரேடியோ-வில் 16 வயதினிலே பாட்டு ஒன்று வைத்தனர். புது பட பாட்டு என்ற மகிழ்ச்சியில் நான் அந்த வார்த்தையை குதித்தவாறே சொன்னேன். அண்ணன் அடி பின்னி விட்டார் பின்னி.. அப்புறம் தான் தெரிந்தது அது ஒரு கெட்ட வார்த்தை என்பது.. !!!

குறும்பு - 4

தம்பு சாமி என்ற நண்பன் என் தெருவிலேயே இருந்தான். செம, செம வாலு பையன். இவன் இன்னும் சில நண்பர்களுடன் தினம் மாலை ரயில்வே ஸ்டேஷன் வரை வாக்கிங் போவான். ரயில் நிற்கும் போது, அதில் உள்ளவர்களுடன் ஜன்னல் வழியே நல்ல தனமாக பேசுவான். ஆனால் ரயில்  கிளம்ப ஆரம்பித்ததும் அதே நபர்களை கெட்ட, கெட்ட வார்த்தைகளால் திட்டுவான். அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் பார்ப்பது அவனுக்கு செம குஷி..

அவர்களது எந்த குறும்புக்கும் உதவி செய்யாத என்னை எப்படி இந்த கேங்கில் சேர்த்து வைத்திருந்தார்கள் என்பது இன்றளவும் புதிர்  தான்.
***********************

சில பிறந்த நாள் நினைவுகள் ....



நீடாமங்கலம் என்ற சிறிய ஊரில் நான்காவது (கடைசி) பிள்ளை யாய் பிறந்தாலும் ஒவ்வொரு வருடமும் சிறு வயதில் எனது பிறந்த நாள் வீட்டில் மிக சிறப்பாக கொண்டாடினார்கள்.

13 வது வயது வரை - பெரியண்ணன் தான் எனது பிறந்த நாளை முன்னின்று  கொண்டாடுவார். எங்கு படித்த போதும் வேலைக்கு சென்ற போதும் - ஆகஸ்ட் 12 அன்று நீடாமங்கலம் வந்துவிடுவார்.

முதல் நாள் இரவே வீடு முழுதும் கலர் காகிதங்கள் ஒட்டுவார். அதில் எம்.  ஜி.ஆர்.  கலைஞர்,சிவாஜி, கமல், ரஜினி ஆகியோர் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னது போல் எழுதியிருப்பார். இது கற்பனை என்றாலும் சின்ன வயதில் அது எனக்கு மிக அதிக மகிழ்ச்சியை தரும். பிறந்த நாள் முடிந்த பின்னும் ரொம்ப நாள் அந்த கலர் காகிதங்கள் காற்றில் அசைந்து கொண்டேயிருக்கும்.... ஜனவரியில் பொங்கல் வந்து வீட்டுக்கு வண்ணம் பூசும் வரை ஒரு சிலவாவது மிச்சமிருக்கும்

இன்றைக்கும் ஒவ்வொரு பிறந்த நாள் வரும் போதும் - அந்த கலர் காகிதங்கள் நினைவிலாடும்..

*************
கல்லூரியில் படிக்கும் போது ஒரு வருட பிறந்த நாளை நண்பர்கள் மறக்க முடியாத நாளாக்கினர்

அந்த வருடம் ஆகஸ்ட் துவக்கம் நீண்ட விடுமுறையில் கல்லூரி இருந்தது. நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்த போதும் - எனது பிறந்த நாளுக்காக திருச்சி வர  திட்டமிட்டனர்.என்னையும்  அழைத்தனர்.

கல்லூரியில் படித்த போது - சில ஆண்டுகளில் - பிறந்த நாளன்று ரத்த தானம் செய்வது  வழக்கம். அன்றும் அப்படி தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவ மனையில் ரத்த தானம் செய்து விட்டு - திருச்சி  சென்றேன். கல்லணையில் சந்திக்க நண்பர்கள் கூறியிருக்க.. அங்கு சென்றதும் - ஒரு அற்புதமான கேக் வெட்ட சொல்லி என்ன  அசத்தினர் நண்பர்கள். ஆளுக்கு ஒரு பரிசு தந்ததில்... இன்றும் நினைவில் இருப்பது பாலகுமாரனின் " இனிது இனிது காதல் இனிது " புத்தகம். பாலகுமாரனுக்கு எழுதிய எனது கடிதம் 3 பக்க அளவில் பிரசுரம்  ஆகியிருந்தது. அது பிரசுரம் ஆனது எனக்கு தெரியாத நிலையில், அவர்கள்  அப்புத்தகம் வாங்கி சரியாக பிறந்த நாள் அன்று தந்தது அப்பிறந்த நாளை ஸ்பெஷல் ஆக்கியது..

*************
பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஸ்பெஷல் ஆனவர் தான். ஒவ்வொருவர் பிறந்த தினம் அவருக்கு சிறப்பான + கொண்டாடப்பட வேண்டிய ஒன்று தான்....!
Related Posts Plugin for WordPress, Blogger...