Tuesday, December 31, 2019

2019- சிறந்த 10 படங்கள்

வ்வருடம்  175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம்.

இவ்வருடம் சின்ன படங்கள் - தியேட்டரும் கிடைக்காமல், வெளியானாலும் ஒரே வாரத்தில் எடுக்கப்பட்டு, பணத்தை இழந்தது மிக அதிகமாக இருந்தது. வெற்றி பெற்ற - மக்கள் வரவேற்பை கண்ட பல படங்கள் நல்ல ஸ்டார் காஸ்ட் உள்ள படங்களாக மட்டுமே உள்ளது. இவ்வருடம் LKG, ராட்சசி, 100 (அவசர உதவிக்கு நாம் கூப்பிடும் அதே 100) என வெகு சில சின்ன பட்ஜெட்  படங்கள் ரசிக்க வைத்தன.

1. அசுரன்

சந்தேகமே இன்றி இவ்வருடத்தின் மிகசிறந்த படங்களில் ஒன்று அசுரன்.


வெக்கை நாவலை படமாக்கிய வெற்றி மாறன் - தமிழின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முக்கியமானவர்.

கதை- திரைக்கதை- நடிப்பு- வசனம் - இயக்கம் என அனைத்திலும் கச்சிதமான ஒரு படைப்பு.

அசுரன் விமர்சனம் இங்கு

2. தடம்

எனக்கு இவ்வருடம் ரொம்ப பிடித்த 2 படங்கள் என்றால் தடம் மற்றும் அசுரன் இவற்றை தான் சொல்வேன்.

தடம் - ஏதேனும் ஆங்கில/ வேற்று மொழி படத்தின் தழுவலா என தெரிய வில்லை. அப்படி இல்லாமல் இருந்தால் -  இயக்குனருக்கு சல்யூட் வைக்க வேண்டும்.

எப்படி இந்த மாதிரி கதையை யோசித்துள்ளார் ! அபாரம் ! படத்தின் இறுதி பகுதியில் அனைத்து கேள்விக்கும் விடை கிடைக்கும் போது நமக்கு பல இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் இயக்குனர்.

இதுவரை பார்க்காவிடில் நிச்சயம் பார்த்து விடுங்கள் தடம் படத்தை.. அட்டகாசமான த்ரில்லர் !

********
தடம் விமர்சனம் இங்கு

3. விஸ்வாசம்

அஜீத்- சிவா காம்பினேஷனில் இன்னொரு படமா என்ற தயக்கத்துடன் பார்த்தாலும், முழுதும் திருப்தி படுத்தி அனுப்பினார் சிவா.

ரொம்ப சுமாரான முதல் பாதி- செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் சரி விகிதத்தில் கலந்த இரண்டாம் பாதி அதனை ஈடு கட்டி விடுகிறது. அஜீத்திற்கு இந்த வருடம் வந்த 2 படங்களும் நன்கு ஓடி, தல ரசிகர்கள் ரொம்ப ஹாப்பி !

4. பேட்ட

ஸ்டைலிஷ் ரஜினியை காண்பித்து ஜாலியாக கொண்டு செல்லும் படத்தை - பின் பழி வாங்கல் - ரத்தம் என சினிமா ட்ரெண்டுக்குள் கொண்டு வருகிறார் இயக்குனர்.

படத்தின் முடிவில் தன் அக்மார்க் டிவிஸ்ட் வைத்து - சிரிப்புடன் நம்மை திரும்ப அனுப்பினார்.

அனிருத் இசையில் சில பாடல்கள் - கியூட்

ரஜினிக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு ஹிட் படம் !
********

பேட்ட விமர்சனம் இங்கு

5. நேர் கொண்ட பார்வை

பிங்க் படத்தை தமிழுக்கேற்றவாறு மாற்றம் செய்து அழகாக தந்திருந்தார் இயக்குனர் வினோத். கூடவே அஜீத்தின் ஹீரோயிசத்திற்கேற்ற சில காட்சிகள் சேர்த்திருந்தார். நீட் அண்ட் க்ளீன் படம் ! வெல் டன் டீம் நேர் கொண்ட பார்வை !

****
நேர் கொண்ட பார்வை விமர்சனம் இங்கு 

6. கைதி

பிகிலுடன் நேரடியாக வெளியாகி வெல்லவும் செய்தது கைதி. ஓரிரவில் நடக்கும் கதை. பெரும்பகுதி பயணத்தில் செல்கிறது. ஏராள சண்டை காட்சிகள் - தவிர்க்க முடியாத படி கதை.

திரைக்கதையின் பெரும் சுவாரஸ்யம் - போலீஸ் ஸ்டேஷன்   காட்சிகள் தான். ஒரு சின்ன போலீஸ் காரக்டரை ஹீரோ ரேஞ்சுக்கு அமர்க்களமாய் ப்ரெசென்ட் செய்த விதம் செம அழகு.

7. பிகில்

இவ்வருடத்தின் மிக அதிக வசூல் செய்த தமிழ் படம் என்று விக்கிப்பீடியா சொல்கிறது (300 கோடி).

கால்பந்துடன்   பழி வாங்கும் கதையும் சேர்த்து அட்லீ செய்த கலவை. விஜய் ஸ்க்ரீன் ப்ரஸான்ஸால் மட்டுமே ஓடியது. தீபாவளி நேரம்- நீண்ட வீக் எண்டில் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்தது. படம் ஓஹோ இல்லை; ஓகே
*******
பிகில் விமர்சனம் இங்கு

8. கோமாளி

இவ்வருடத்தின் சர்ப்ரைஸ் ஹிட். செமையாக சிரிக்க வைத்தனர். கூடவே மெசேஜ்-ம் இறுதியில் கூறினர் . மெசேஜ் தவிர்த்து முழு நீள ஜாலியான படமாக தந்திருக்கலாம் என்பது என் கருத்து. மக்கள் படத்தை கொண்டாடவே செய்தனர்.

கோமாளி விமர்சனம் இங்கு

9. மான்ஸ்டர் 


ஈயை வைத்து "நான் ஈ" சில வருடங்கள் முன்பு வந்து ஹிட் அடித்தது. எலியை வைத்து இப்படம் செய்துள்ளார் இயக்குனர். அதிலும் நிஜ எலி வைத்து சுவாரஸ்யமாக தந்துள்ளார்கள்..வள்ளலாரின் ஜீவ காருண்ய அடிப்படையில் அமைந்த கதை மற்றும் படமாக்கல் ரசிக்க வைத்தது








10. LKG 

தமிழக அரசியல் நிலையை பகடி செய்து - நிமிடத்திற்கொரு முறை சிரிக்க வைக்க முயன்று அதில் பெரிதும் வெற்றியும் பெற்றனர் LKG படக்குழுவினர். "ஜாலியான படம். சிரிச்சுட்டு போங்க" என தெளிவான ஐடியாவுடன் வந்து சைலன்ட் வெற்றி பெற்றது LKG.
*******
2018 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே

2016 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே

2015 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே 

2012 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2011ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2010ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

2009 ஆம் ஆண்டின் சிறந்த 10 படங்கள் இங்கே !

Thursday, December 26, 2019

அஞ்சலி: சோலையப்பன் சார்

ரணங்கள் அநேகமாய் என்னை அழ வைத்ததில்லை.

" எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்" என்று துவங்கும் ஜெயந்தனின் கவிதை வரி உள்ளுக்குள் மிக ஆழ பதிந்து போன ஒன்று.

மரணம் ... மனிதர்களுக்கு அவர்களது துன்பங்களில் இருந்து ஒரு விடுதலை. இறந்தோர்க்கு துன்பமில்லை என்பர். இவையெல்லாம் உள்ளுக்குள் ஊறிய விஷயங்கள்

மேற்சொன்ன அநேக விஷயங்கள் -பொய்த்து போனது சோலையப்பன் சார் மரணத்தில்.

79 வயது பெரியவர். மிக நன்றாக வாழ்ந்து விட்டார். ஆயினும் அவர் மரணம் என்னை தனிமையில் அழ வைத்து விட்டது.

அவர் ஒரு தலைவர். நிஜமான லீடர். தமது மக்கள் மீது மாறாத அன்பும் மிகுந்த அக்கறையும்  கொண்டவர்.



சேலம் நகரில் முதன்முதலில் கம்பெனி செகரட்டரி சாப்டர் துவங்க காரணமாக இருந்த சிலருள் அவரும் ஒருவர்.

சேலம் சாப்டர் துவங்கியது முதல் இன்று வரை அதன் ஒவ்வொரு நிகழ்விலும் அவரது பங்களிப்பு பெருமளவில் இருக்கும்.

இத்தகைய சிறு ஊரில் தொடர்ந்து சாப்டர் நடத்துவது மிகப்பெரும் சவால். சேலம் சாப்டருக்கு 10 ஆண்டுக்கும் மேல் சேர்மனாக இருந்தார். அவரிடம் ட்ரைனிங் எடுத்த ஏராள மாணவர்கள் இன்று வெவ்வேறு ஊர்களில் கம்பெனி செகரட்டரி ஆக  உள்ளனர்

2014 ஆம் ஆண்டு நான் சென்னை மேற்கு ஸ்டடி சர்க்கிளில் கன்வீனர் ஆக இருந்த போது சாரை பேச அழைத்திருந்தோம். நாங்கள் பேச்சாளர்கள் குறித்த தகவல்களை PPT யில் பல்வேறு புகைப்படங்களுடன் கலர்புல் ஆக காட்டுவது வழக்கம். இதனை வெகுவாக ரசித்தார் சார். அடுத்த முறை வேறொரு நிகழ்வுக்கு சேலம் சென்ற போது பேச்சாளர் தகவல்கள் PPT மூலம் புகைப்படங்களுடன் காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தார் சார்.இந்த வயதிலும் நல்ல விஷயங்களை புதிது புதிதாக கற்று கொள்ளும் அவரது ஆர்வம் வியக்க வைத்தது   



சேலம் சென்ற போது அவரது இல்லத்தில் தங்கியிருக்கிறேன். காலை நேரம்- வெளியில் (ஹோட்டலில்) சாப்பிடுவோம். அந்த நேரம் சில கம்பெனி செகரட்டரிகளை வர சொல்லிவிடுவார். சாப்பிடும் நேரத்திலேயே நான்கைந்து நண்பர்களுடன் பேசிவிடும்படியும் செய்வது அவரது வழக்கம்

இம்முறை தென் இந்திய கம்பெனி செக்ரட்டரி அமைப்பிற்கு நான் தலைவர் ஆனபோது வாழ்த்து சொல்ல தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டவர் -சேலத்தில் நிச்சயம் இவ்வருடம் பெரிய கான்பரன்ஸ் ஒன்று நடத்த வேண்டும் என்றார். தனக்காக எப்போதும் எதுவும் கேட்டவர் அல்ல. மாறாக சேலம் சாப்டருக்காகத்தான் எப்போதும் பேசுவார்

அவர் கேட்டு கொண்டதிற்கிணங்க, தமிழக  கம்பெனி செகரெட்டரிகள் கான்பரன்ஸ் சென்ற மாதம் சேலத்தில் நடந்தது.

ரயிலில் சென்று அதிகாலை 5 மணிக்கு இறங்கியபோது  சேலத்தின் தற்போதைய சார்மன் பூபாலனுடன் எங்களை வரவேற்க .பூங்கொத்துடன் வந்து விட்டார். "சார் இவ்வளவு காலையில் நீங்க வரணுமா?" என்றால் புன்னகை மட்டுமே பதில்

அந்த புன்னகை தான் எப்போதும் அவரது அடையாளம். அந்த கான்பரன்ஸில் தான் அவரை கடைசியாக பார்த்தது.

சென்ற மாதம் கான்பரன்ஸில் கேள்வி கேட்கிறார் சார்..


டிசம்பர் 23 அதிகாலை மதுரையிலிருந்து சேலம் வந்த அவர் - சற்று அசந்து தூங்கி விட்டார். சேலத்தில் அவர்  இறங்கும் முன் ரயில் நகர  துவங்கி விட்டது. மெதுவாக ரயில் நகரும்போது அவர் இறங்க முயல, தவறி விழுந்து இறந்து விட்டார்.

எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றியவர் அவர். அவருக்கு இத்தகைய மரணமா என மனம் ஆறாமல் தவிக்கிறது

தனது இறப்பிலும் அவர் பாடம் சொல்லிக்கொடுத்து விட்டு தான் சென்றிருக்கிறார்

பேருந்தோ, ரயிலோ - ஒரு போதும் -அவசரமாக ஓடி சென்று  ஏறவோ, இறங்கவோ செய்யாதீர்கள். அடுத்த ஸ்டேஷன் வரும். அடுத்த ரயில்/ பஸ் வரும். இன்னொரு வாழ்க்கை வராது....

நூறாண்டு வாழ்வார் என்று நினைத்திருந்தேன்.. அவர் மரணம்  சேலம் கம்பெனி செகரட்டரி குழுமத்திற்கு மிகப்பெரும் இழப்பு !

*************
சோலையப்பன் சார் குறித்து அவருடன் பழகிய இன்னும் சிலரின் நினைவேந்தல் :

திரு பூபாலன், சார்மன் கம்பெனி செகரட்டரி சாப்ட்டர், சேலம்


திரு. சோலையப்பன் அவர்கள் சில நிறுவனங்களில் கம்பெனி செகரட்டரி ஆக பணியாற்றி விட்டு பின் பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தார். அவர் பிராக்டிஸ் துவங்கிய காலத்தில் நிறுவனம் துவங்கவும், அது தொடர்பான விஷயங்களுக்கும் CA முடித்த ஆடிட்டர்களை அணுகுவதே வழக்கமாக இருந்தது. இருப்பினும் சேலத்தில் அவர் ஒரு முன்னோடியாக தனது ப்ராக்டிஸை துவக்கினார்.

 சோலையப்பன் அவர்கள் எந்த வேலையை துவங்கினாலும் அதில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுபவர். மிக எளிமையான மனிதர்.. அவர் செய்யும் எந்த செயலிலும் ஒரு human touch இருப்பதை நிச்சயம் உணர முடியும்.

20 ஆண்டுகளாக சேலம் கம்பெனி செகரட்டரி சாப்ட்ருக்காக அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்கு உரியது. சேலம் சாப்டர் துவங்கியது தொடங்கி - அதன் பல்வேறு நிலைகளிலும் அவர் - சார்மன் ஆக இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி, தொடர்ந்து இயங்கினார்

அவரது மறைவு - சேலம் வாழ் கம்பெனி செகரட்டரிகளுக்கு ஒரு மிக சிறந்த வழிகாட்டியை இழந்த - பெரும் வலியை தருகிறது. சேலம் சாப்டரோ தனது மாபெரும் தூண்களில் ஒன்றை இழந்து நிற்கிறது
***********

திருமதி. பூர்ணிமா, கம்பெனி செகரட்டரி, சேலம்

சோலையப்பன் சாரை கடந்த 10 வருடங்களாக அறிவேன். எளிமையும், அடக்கமும் ஒன்று சேர்ந்தவர். எந்த வயதினராக இருந்தாலும் - இளைஞர்கள் என்றாலும் கூட எளிதில் அவர்களுடன் பழகுவார்.  கம்பெனி செகரட்டரி கோர்ஸ் படிக்க எத்தனையோ மாணவர்களுக்கு (நான் உட்பட) அவர் உந்துதல் ஆக இருந்தார். சேலம் சாப்டர் துவங்க காரணமாக இருந்தது மட்டுமல்ல, சேலத்தில் இருந்து எத்தனையோ பேர் கம்பெனி செகரட்டரி ஆனதிலும் அவர் பங்களிப்பு இருந்தது.

தொடர்ந்து இயங்க வயது ஒரு தடையில்லை என்பதை தனது செயல்களின் மூலம் நிரூபித்தவர் சோலையப்பன் சார்

திருமதி சரண்யா, கம்பெனி செகரட்டரி, சேலம்  


சோலையப்பன் சாரிடம் 15 மாதங்கள் பயிற்சி (Training) எடுத்த மாணவி நான். அவர் ஒரு வழிகாட்டி (Mentor) மட்டுமல்ல, சிறந்த குருவாகவும், எப்போதும் நமது நலனை மட்டுமே விரும்புபவராகவும் இருந்தார்

Nothing is so strong as Gentleness, and nothing is so gentle as real strength.


மேற்சொன்ன வரிக்கு சோலையப்பன் சாரை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது

தென் இந்தியாவில் இருக்கும் மிக சீனியர் கம்பெனி செகரெட்டரிகளில் ஒருவர் அவர். குறைந்தது 15 கம்பெனி செகரட்டரிகளாவது அவர் மூலம் வாழ்க்கையை துவங்கியிருப்பர். மென்மையாக பழகுதல், ஆழ்ந்த அறிவு, நல்ல நினைவாற்றல், எப்போதும் மிகுந்த உற்சாகம், சிறந்த விருந்தோம்பல்.. இவை அனைத்தும் ஒரு சேர பெற்றவராக அவர் இருந்தார்

துளசி ராமன், ப்ராக்டிஸிங் கம்பெனி செகரட்டரி,  சேலம்


கம்பெனி செக்ரட்டரி சர்க்கிளில் - சேலம் என்று சொன்னால், அடுத்து வரும் வாரத்தை- சோலையப்பன் சார், செகரட்டரி என்பதாக இருக்கும்.

எனது குருவுடன் கடந்த 10 வருடம் பழகியதில் - தொழிலில் எப்படி இருக்க வேண்டும் என்பதை மட்டுமல்ல, குடும்பத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும், பொது வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன் 

6 / 7 செப்டம்பர் 2013-ல் ஏற்காட்டில் - தென் இந்திய ப்ராக்டிஸிங் கம்பெனி செகரட்டரிகள் கான்பரன்ஸ் நடந்தது. சோலையப்பன் சார் தான் அப்போது சேலம் சாப்டர் தலைவர்.

தனது மேனேஜிங் கமிட்டி மெம்பர்களோடு பல்வேறு வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.

துரதிஷ்ட வசமாக நிகழ்வுக்கு ஓர் வாரம் முன் அவருக்கு ஹிரண்யா ஆப்பரேஷன் நடக்கிற சூழல். மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறிய போதும் எந்த வேலையும் தொய்வின்றி நடக்கும்படி  பார்த்து கொண்டார். நிகழ்ச்சிக்கு 2 நாள் முன்பே ஏற்காடு வந்த அவர் அணைத்து வேலைகளையும் முன் நின்று கவனித்தார். பல முறை மாடிப்படியில் அவர் ஏறி இறங்கியதை காண எங்களுக்கு தான் கஷ்டமாக இருந்தது

இரவு முழுதும் தூங்காத அவர் மறு நாள் காலை தன் புன்னகை குறையாமல் வந்து நின்றார். அது தான் சோலையப்பன் சார் !

அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எத்தனையோ கற்று கொள்ள முடிந்தது. கம்பெனி சட்டத்தில் தொடர்ந்து விவாதித்து-  அறிந்து கொள்ள என்னை தூண்டிய வண்ணம் இருப்பார்

தொழிலில் சின்னசின்ன விஷயத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு, சிக்கனமான வாழ்க்கை முறை, அலுவலகம், சாப்டர் என அனைத்து  நபர்களிடமும் அவர் காண்பித்த அன்பு, எந்த விழாவிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாங்கு, உதவி தேவைப்படுவோருக்கு தயங்காமல் சென்று உதவும் மனது என அவரது நற்குணங்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்

அவர் எப்போதும் ஒரு மிக சிறந்த ஆல் ரவுண்டர் ஆக இருந்தார். அவரிடம் எனது துவக்க கால பயிற்சியை கற்றதில் மிகுந்த  பெருமிதம் கொள்கிறேன்..

Related Posts Plugin for WordPress, Blogger...