கிராமத்து பொங்கல் நினைவுகள்
நான் பிறந்த தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும். எங்க ஊரான நீடாமங்கலத்துக்கு தான் சுத்தியிருக்கும் பதினெட்டு பட்டி (!!!) மக்களும் பொங்கல் பொருட்கள் வாங்க வருவார்கள். அதென்னவோ ஏழைகள் தீபாவளி ஆகட்டும், பொங்கல் ஆகட்டும் முதல் நாள் தான் துணி மற்றும் முக்கிய பொருட்கள் வாங்குகிறார்கள். Interior கிராமங்களில் பொங்கல் வைப்பது தெருவிலேயே நடக்கும். பொங்கலன்று எங்க ஊர் அம்சவல்லி மற்றும் காவேரி தியேட்டரில் மூணு ஷோ சினிமா நடக்கும். கரும்பு, பொங்கல் மற்றும் வாழை பழங்களுடன் தியேட்டர் சென்று படம் பார்ப்பார்கள். படம் முடிந்ததும் கரும்பு சக்கை தியேட்டர் முழுதும் கொட்டி கிடக்கும். இதை சுத்தம் செய்து அடுத்த காட்சி ஆரம்பிக்க தாமதமாகும். போன வருட பொங்கல் or தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆன படங்கள் இப்போது தான் எங்க தியேட்டருக்கு வரும்.
காணும் பொங்கலன்று தெருவில் பலரும் ஒன்றாக சேர்ந்து மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் கிடைத்த வாகனங்களில் கூட்டமாக அருகில் உள்ள மூணாம் தலைப்பு என்னும் இடத்துக்கு செல்வார்கள். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பிக்னிக் spot அது தான் . மூன்று ஆறுகள் ஒன்றாய் கூடுமிடம்... ஒரு Mini dam போல... சுற்றி நிறைய மரங்களும், காலி இடமும் இருக்கும். கட்டு சோறு கட்டி சென்று நாள் முழுதும் அங்கு விளையாடி விட்டு வருவார்கள். சில வருடங்கள் முன்பு ஒரு காணும் பொங்கலன்று அக்கா, அண்ணன் குழந்தைகளுடன் அந்த இடம் சென்றேன். இப்போது முன்பு போல் அதிக கூட்டமில்லை. மக்கள் இந்திய தொலை காட்சிகளில் முதல் முறையாக படங்களை காண தத்தம் வீடுகளிலேயே சரணடைந்து விட்டார்கள். நமது நல்ல பழக்க வழக்கங்களில் சிலவற்றை நாம் இழந்து வருகிறோமோ என சற்று வருத்தமாக இருந்தது.
ஐயோ பாவம் அய்யாசாமி
அய்யாசாமி ஒரு சராசரி மனிதன். அவன் சந்திக்கும் பிரச்சனைகள் நீங்களும் சந்தித்திருக்கலாம். "வான வில்லில்" அவ்வபோது இவன் தோன்றுவான்.
அய்யாசாமி காய்கறி கடை சென்றால், அவன் பக்கத்தில் நிற்போருக்கே நல்ல வெங்காயமும் நல்ல தக்காளியும் கிடைக்கிறது. ஒரே நேரத்தில் பக்கத்தில் நிற்பவர்களுக்கு மட்டும் நல்ல நல்ல பீசாக கிடைக்க நம்ம ஆள் அவர்கள் வேகத்துக்கு ஈடு குடுக்க முடியாமல் தடுமாறுவான். அவர்கள் எடுத்த பின் நல்ல வெங்காயம் எல்லாம் அவங்களே எடுதிட்டாங்களே என்ற ரீதியில் முழிப்பான். எப்போதும் அவன் எடுத்து செல்லும் காய்கறிகளுக்காக வீட்டம்மாவிடம் "எங்கிருந்து தான் உங்களுக்குன்னு இப்படி கிடைக்குமோ?" என வாங்கி கட்டி கொள்வான்...
படித்ததில் பிடித்தது
" வாழ்க்கை சில கேள்விகளுக்கு பதில் தருவதே இல்லை. ஒரு குரூரமான ஜோக் போல பல கேள்விகளுக்கு அது பதில் தராமலே இருந்து விடுகிறது"
- சிறு கதை ஒன்றில் கார்த்திகா ராஜ்குமார்
இந்த வரி படித்து 20 வருடங்களுக்கும் மேலாகிறது. அப்படியே மனதில் தங்கி விட்டது. பதில் இல்லாத சில துயரமான நிகழ்வை சந்திக்கும் போதெல்லாம், இந்த வரி என் நினைவுக்கு வந்து ஆறுதலாக இருந்திருக்கிறது. படிப்பது நிச்சயம் உதவவே செய்கிறது. இல்லையா?
ஒரு பகிர்வு
பொதுவாக நான் Forward-களை ப்ளாகில் எழுதுவதில்லை. ஆனால் வாசித்த சுவாரசயமான ஒரு விஷயம் உங்களுக்கும் சிரிப்பை வரவழைக்கும் என்பதால் பகிர்கிறேன்:
இந்த விஷயம் ஐ. நா சபையில் நடந்ததாக அந்த மெயில் கூறுகிறது:
இந்திய தூதுவர் தன் பேச்சை இவ்வாறு துவக்கினார்:
"ரிஷி காஷ்யாப் என்ற காஷ்மீரை கண்டு பிடித்த மனிதர் காஷ்மிரில் ஒரு பாறையை வெட்டினார் . அதிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க தனது துணிகளை கழட்டி வைத்து விட்டு குளித்தார். குளித்து முடித்து விட்டு வந்து பார்த்தால் அவர் உடைகளை காண வில்லை. அதை ஒரு பாகிஸ்தானி திருடி சென்று விட்டார்"....
அவர் பேசுவதை இடை மறித்த பாகிஸ்தான் தூதுவர், " இது சுத்த பொய். அப்போது பாகிஸ்தானிகள் அங்கு இல்லவே இல்லை" என்றாராம்.
நமது தூதுவர், " உண்மையை ஒத்து கொண்டதற்கு நன்றி. எனக்கு தேவை அது தான்" என தொடர்ந்தாராம் !!!..
வாரம் ஒரு சட்ட சொல் : இந்த வாரம் Affidavit
மிக எளிமையாக ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் "Declaration". Declaration செய்பவர் தன்னை பற்றியோ, தனக்கு தெரிந்த சில தகவல்கள் உண்மை என்றோ எழுத்தில் தருவது தான் Affidavit . சில Affidavit நோட்டரி பப்ளிக் முன்பு தான் கையெழுத்திடவேண்டும். " நான் இந்த Affidavit தரலை; இது என் கையெழுத்து அல்ல " என பின்னர் நீங்கள் பின் வாங்காமல், Affidavit -க்கு ஓர் authenticity தரவே இந்த ஏற்பாடு.
Affidavit-களின் பயன் பாடு என்னவெனில்-வாயால் சொல்லிய ஒரு விஷயத்தை பின்னர் நீங்கள் சொல்லலை என சொல்லி விடலாம். ஆனால் எழுத்தில் நீங்கள் சொல்வது என்றைக்கும் உங்கள் மீது binding ஆகும். நீதி மன்றங்களிலும், அரசாங்க விஷயங்களில் பல இடங்களிலும் Affidavit தரவேண்டியிருக்கும்.
ஒரு சம்பவம்
சமீபத்தில் ஒரு நாள் காலை அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தேன். வேளசேரி பாலம் மீது ஒரு பெரிய கல் செல்லும் வழியில் கிடக்கிறது. வாகனங்கள் அனைத்தும் அந்த இடத்தை தவிர்த்து வளைந்து செல்கின்றன. நானும் கூட அவ்வாறே எண்ணி கொண்டு செல்லும் போது அந்த கல்லை தாண்டி போன ஒரு பெரியவர் ( 45 to 50 வயதிருக்கும்) தனது -TVS 50ஐ நிறுத்தி விட்டு அந்த கல் அருகில் வந்தார். நான் அவரை தாண்டி சென்ற பின் என் மனது பல கேள்வி எழுப்பியது. அவர் அந்த கல்லை எடுத்து போட தான் வந்தாரா? நான் ஏன் அப்படி செய்ய வில்லை? சற்று யோசித்த போது, சோம்பேறி தனம் ஒரு காரணம். மேலும் வண்டியை நிறுத்தி விட்டு நாம் எடுத்து போட்டால் எல்லோரும் நம்மையே பார்ப்பார்கள். அந்த கொஞ்ச நேரம் நம் மீது spot light அடித்து பார்ப்பது போல் கூச்சமாய் இருக்கும் என் தோன்றியது. கூடவே என் பெண் சைக்கிள் விட கற்று கொண்ட போது மட்டும் தெருவில் இருந்த அனைத்து கல் மற்றும் முள்ளை தனி ஆளாக எடுத்து போட்டு, அதற்கு மட்டும் ஒரு மணி நேரம் செலவிட்டது நினைவுக்கு வந்து இம்சை செய்தது. அப்போது மற்றவர்கள் பார்ப்பார்கள் என கொஞ்சம் கூட யோசிக்கலையே?? ஏன்??
கிசு கிசு
இணைய உலகத்துக்கு புதிதான குறும்பான பதிவர் கோடி ரூபாய் குடுத்தாலும் சனி கிழமையில் அலுவல் வேலையோ இணைய வேலையோ செய்ய மாட்டாராம். மட்டுமல்ல சனி ஞாயிறுகளில் மனிதர் காணாமல் போய் விடுகிறாராம்.. இவர் இந்த இரு நாள் எங்கே போகிறார் என கண்டறிய தனி படை அமைக்கப்பட்டுள்ளது...
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..