Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Tuesday, October 11, 2016

சுஜாதாவின் மீண்டும் தூண்டில் கதைகள்: ஒரு பார்வை

மீண்டும் தூண்டில் கதைகள் 1995-ல் ஆனந்த விகடனில் வெளிவந்த சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு. ஒவ்வொரு வாரமும் அதன் பக்கங்களை கத்தரித்து, பத்திரமாய் எடுத்து வைத்து இன்னும் பாதுகாப்பாய் என்னிடம் பத்திரமாய் உள்ளது. சமீபத்தில் அதை மீண்டும் எடுத்து தலைவரின் மாஜிக்கை முழுமையாய் அனுபவித்தேன்.

மிக பிரசித்தி பெற்ற முதல் கதை (" கருப்பு குதிரை") - மேட்ச் பிக்சிங் பற்றியது. ஒரு அம்பயரின் பார்வையில் சொல்லப்படும் கதை ( அந்த அம்பயர் நம் வெங்கட் ராகவனை கண் முன் கொண்டு வருகிறார்). ஒரு மேட்சில் ஜெயிக்க அந்த அம்பயரை அணுக ( 50000௦௦௦ US டாலர்), அவர் மறுக்கிறார். ஆனால் இறுதியில் அங்கு விளையாடிய எதிர் அணி கேப்டன் மூலம் அதை போல இரு மடங்கு பணம் கொடுத்து மேட்ச் பிக்சிங் நடந்தது இறுதியில் தெரிகிறது ! இதன் பிறகு மேட்ச் பிக்சிங் பற்றி வேறு சில கதைகள் வந்திருக்கலாம். ஆனால் தம்ழில் இவ்வகை கதைகளுக்கு இது முன்னோடி என்று சொல்லலாம்


பெரியவர்கள் உலகம் என்கிற கதை ஒரு பள்ளி செல்லும் மாணவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. நல்ல தலைமை ஆசிரியர் மாற்றலாகி வேறு ஊருக்கு செல்ல போவதாக தெரிய வரும் மாணவர்கள் மிக அப்செட் ஆகிறார்கள்.  தலைமை ஆசிரியர் மனைவிக்கு மற்றொரு ஆசிரியருடன் உறவு இருப்பது அந்த சிறுவனுக்கு தெரிய வருகிறது. தலைமை ஆசிரியர் மாற்றலாகி போவதே இந்த தவறான உறவிலிருந்து பிரிக்கத்தான் என்றும் புரிகிறது அவனுக்கு ! இந்த விஷயம் கேள்வி பட்டதும் திடீர் பெரியவனாகி " நான் படிக்கணும்" என தான் டாவ் அடிக்கும் பெண்ணிடம் சொல்வதாக சொல்வது மட்டும் சற்று உறுத்துகிறது ! மாறுதல்கள் அவ்வளவு சீக்கிரமாய் நடக்குமா?

கார்பெட்டில் ரத்தம் முகத்தில் புன்னகை : இதுவும் கூட கணவன் இருக்கையில் இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணின் கதை. ஒரு மரணம் நிகழ்கிறது, அது கொலையா தற்கொலையா என்பது தான் கதை.

"எல்லாமே இப்பொழுதே" - கதை செம சுவாரஸ்யம் ! சாதாரண வேலையில் இருக்கும் ஒருவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவனது பணக்கார பாசும் அந்த பெண்ணை காதலிக்க, காதலன் விட்டு கொடுக்கிறான். ஒரு பணக்காரன் - ஒரு ஏழை எனும்போது அந்த பெண் பணக்காரனை தான் தேர்ந்தெடுப்பாள் என்பது யூகிக்க முடிந்தாலும் கதையின் இறுதியில் வரும் டுவிஸ்ட் அதிர வைக்கிறது. அங்கு கூட விஷயத்தை சுஜாதா முழுசாய் சொல்லாமல் நம் ஊகத்துக்கு விட்டு செல்வது அட்டகாசம் !

2887-ல் சில விலாசங்கள் என்கிற வருங்காலம் குறித்த கதை ஒன்று. செக்ஸ் என்பதே தடை செய்யப்பட காலம். ஒரு பையன் ஒரு பெண்ணின் விலாசம் தேடி போகிறான். எல்லாம் முடிகிறது. கடைசியில் தான் தெரிகிறது. அந்த பெண் கால் கேர்ள் அல்ல, வந்த பயன் தான் கால் பாய் என்பது ! இப்போதே இந்த "கால் பாய்" கலாசாரம் சென்னைக்கு வந்து விட்டது நடப்பதை சென்னையில் உள்ள பலரும் அறிவர் !

பை நிறைய பணம் - பேங்க்கில் நடக்கும் ஒரு கொள்ளையை துல்லியமாய் கண் முன் கொண்டு வருகிறது. அந்த கொள்ளையர்களை போலிஸ் மிக சீக்கிரம் பிடிக்கிறது. பிடித்த போலிஸ் ஆபிசர் பாங்க் மானேஜரிடம் " அவர்கள் திருடியதாய் சொல்லி நாம் கொஞ்சம் எடுத்தால் யாருக்கும் தெரியவா போகிறது ? " என்று கேட்க,  மேனேஜர் ஒப்பு கொண்டாரா என்பதுடன் கதை முடிகிறது. சரியான கதை ! செம நேரேஷன் !
சொல்லும் விதம் நகைச்சுவையாய் இருந்தாலும் பல கதைகளில் முடிவில் சோகம் இழையோடுகிறது.

மொத்தத்தில்:
கையில் எடுத்தால் முடித்து விட்டு தான் வைக்கிற மாதிரியான சுஜாதா ஸ்பெஷல். இதுவரை வாசிக்கா விடில் அவசியம் வாசியுங்கள் !

Saturday, October 31, 2015

சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் ஒரு அனுபவம்

ஆனந்த விகடனில் சுஜாதா பல ஆண்டுகள் எழுதிய கற்றதும் பெற்றதும் புத்தக வடிவில் வாசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது.

இதன் பல பாகங்கள் வந்துள்ளது; நான் படித்தது குறிப்பிட்ட ஒரு பாகம் மட்டுமே.

இந்த கால கட்டத்தில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்துள்ளார்.. சில இடங்களில் அரசாங்கத்தை மென்மையாகவும், சுருக் என்றும் விமர்சிக்கும் சுஜாதா வேறு பல இடங்களில் கலைஞர் என்று குறிப்பிட்டு பாராட்டவும் செய்கிறார்..



விகடனில் வாரா வாரம் வரும்போதே ஏனோ என்னால் எல்லா பத்தியும் வாசிக்க முடியாது. குறிப்பாக அறிவியல் சார்ந்து விரிவாக அவர் எழுதுவது நமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என ஜம்ப் செய்து என்று விடுவது வழக்கம். இம்முறையும் அவ்வாறே....

இதனை தாண்டியும் கற்றதும் பெற்றதும் - ஒரு நூலாக படிப்பது - இனிய அனுபவமே தந்தது. இதற்கு முக்கிய காரணம் சுஜாதாவின் நகைச்சுவை.. எதையும் சுவை பட சொல்லும் லாவகம்..

ஒவ்வொரு வாரமும் தனக்கு பிடித்த கவிதை, மேற்கோள், புத்தகம் என தேடித்தேடி அறிமுக படுத்த - இன்னொரு நல்ல மனது கிடைக்குமா? சுஜாதாவின்  மோதிர கையால் குட்டு பட்டாலே அந்த நபர் மேல் தனி வெளிச்சம் விழ துவங்கி விடும்..

சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி பற்றி சொல்லும் போது உலகம் முழுதும் பாராட்டப்பட்ட அந்த படம் - அதன் நாவலாசிரியருக்கு திருப்தி தர வில்லை என்ற தகவலை சொல்கிறார். கூடவே நீதி: வாழ்வில் எல்லோரையும் திருப்தி படுத்தி விட முடியாது.

போலிஸ் அதிகாரி கார்த்திகேயனுடன் விபசார விடுதிக்கு ஒரு முறை ரைடு சென்றதும், அங்கிருந்த ஒரு தமிழ் பெண் அந்த நேரத்திலும் அவரிடம் வந்து " உங்க புக்கெல்லாம் படிச்சிருக்கேன். ரொம்ப புடிக்கும் " என்பதில் - தான் சற்று அதிர்ந்து போனதையும் சொல்கிறார். மேலும் மறு நாள் கோர்ட்டில் நீதிபதி, அந்த பெண்கள் எல்லாருமே - இதெல்லாம் ரொம்ப சாதாரணம் அடிக்கடி நடப்பது தான் என்கிற தொனியில் பேசி பழகியதை வியப்புடன் பகிர்கிறார்..

காஷ்மீர் பிரச்சனை பற்றி .. இதற்கு ஒரே தீர்வு " எக்கேடு கெட்டு போ" என காஷ்மீரை துறந்து விடுவதே " என்று அவர் எழுத.. ஏராள எதிர்ப்புகள்.. பின் மீண்டும் தனது நிலைக்கு காரணத்தை விரிவாக, பொறுமையாக எடுத்து சொல்கிறார்..

நினைத்தாலே இனிக்கும் சினிமா உருவான நேரம் - கண்ண தாசனுடன் "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் " பாடல் உருவான விதத்தை சுவை பட சொல்கிறார்...

சுஜாதா அவார்டுகள் என்பவை - எத்தனை எத்தனை தளங்களில் இருந்துள்ளது.. எவ்வளவோ படித்து கொண்டு, எழுதி கொண்டு எப்படி கர்நாடக சங்கீதம் துவங்கி, ரேடியோ, டிவி என அனைத்து துறைகளையும் கவனித்துள்ளார் என்ற வியப்பு மேலிடுகிறது...

கற்றதும், பெற்றதும்.. Recommended For Diehard fans of Sujatha !!

Saturday, August 22, 2015

சுஜாதாவின் நைலான் கயிறு -விமர்சனம்

9எழுத்தாளர் சுஜாதாவின் மிக புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று.1960 களின் இறுதியில் குமுதத்தில் தொடராக வெளிவந்தது.



20 ஆண்டுகளுக்கு முன் முதன் முறை படித்த போது அசந்து போனேன். பின் வேறு சில முறை வாசித்துள்ளேன். தற்போது மீண்டும் ஒரு முறை !!

கதை
முதல் அத்தியாயத்தில் ஒரு கொலை நடக்கிறது. நன்கு தெரிந்த ஒருவர் - ஒரு வீட்டுக்கு சென்று அங்குள்ள இளைஞனுடன் சற்று பேசி கொண்டிருந்து விட்டு அவனை நைலான் கயிறால் நெரித்து கொல்கிறான்.

கொலை பழி அதற்கு சற்று முன் வந்து சென்ற இன்னொருவன் மேல் விழுகிறது. அவன் கணேஷை அணுக - கணேஷ் சாதுரியமாக வாதாடி வழக்கை உடைக்கிறான்.. இது முதல் ஏழெட்டு அத்தியாயங்கள்.. கணேஷ் இத்துடன் விடை பெறுகிறான் (இக்கதை எழுதும் போது வசந்த் உதயமாக வில்லை !!)

அந்த கொலையை செய்தது யார் என ரிட்டயர் ஆகும் நிலையில் உள்ள ஒரு போலிஸ் அதிகாரி துப்பு துலக்கி கடைசி அத்தியாயத்தில் கண்டறிகிறார்...
அப்படி என்ன வித்யாசம் ?
வழக்கமான ஒரு கொலை- அதை துப்பறியும் போலிஸ்.. என்பது தான் கதை எனினும் திரைக்கதை - பாணி அந்த காலத்துக்கு நிச்சயம் புதிது.

ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் சுனந்தாவின் டயரியில் இருந்து என்று ஒரு சில பத்திகள் மிக சுவாரஸ்யமாக வந்தோ கொண்டேயிருக்கும்.. நிச்சயம் இந்த பெண் இப்போது இல்லை; அவள் மரணத்துக்கு காரணமானவன் தான் முதல் அத்தியாயத்தில் கொல்லப்பட்டான் என்பது நமக்கு தெரியும். இருப்பினும் கொன்றது யார்.. என்பது ஊகிக்க முடியாத ஒன்று தான்..

மேலும் இறுதியில் அந்த போலிஸ் அதிகாரி ஐ. பி. சி க்கு வெளியே ஒரு நியாயம் நடந்திருக்கிறது; இன்றைய தினம் நான் ரிட்டயர் ஆகி விட்டேன்; உன்னை கைது செய்யவோ, போலீசிடம் மாட்டி தரவோ விரும்ப வில்லை என்று சொல்லி விட்டு செல்வது - நிச்சயம் அந்த காலத்தில் ஒரு புதிதான முடிவாக இருந்திருக்கும்.



பல விஷயங்களை சுஜாதா முயன்று பார்த்துள்ளார். இறங்கினான் என்பதை அடுத்தடுத்த வரியில் சொல்வது, சுனந்தாவின் டயரி குறிப்பு இவை எல்லாமே அவர் செய்து பார்த்த புதுமையே...

உண்மையில் 20 வருடம் முன் வாசிக்கும் போது இருந்த திகைப்பும் ரசிப்பும் இப்போது கிட்ட வில்லை என்பது உண்மை தான்...

இருப்பினும் சுஜாதா ரசிகர்கள் அனைவரும் படிக்க/ ரசிக்க வேண்டிய ஒரு புத்தகம் நைலான் கயிறு..

Thursday, November 15, 2012

சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ

ரையெல்லாம் செண்பகப்பூ .. சுஜாதாவின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று. ஆனந்த விகடனில் தொடராக வந்து பின்னர் திரைப்படமாகவும் வந்தது. இப்படம் அவ்வப்போது டிவியில் போடுவர். துரதிர்ஷ்ட வசமாய் படம்  அப்படி  போடப்படும் போதெல்லாம், பாதியிலிருந்து தான் பார்ப்பேன்.  ப்போதும் முழுமையாய் பார்த்ததில்லை.


முன்பே இக்கதை படித்திருந்தாலும் இப்போது படிக்கையில் ஒரு வித்தியாச அனுபவம் கிடைத்தது. பொதுவாக ஒரு கதையை படிக்கும் போது நமக்கு அது மனதில் ஒரு சித்திரமாக விரியும். இந்த கதையை இப்போது படிக்கையில், யார் யார் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளனரோ அவர்களை உருவகபடுத்தியவாறு படிக்க முடிந்தது.

ஹீரோவாக பிரதாப், கிராமத்து பெண் வெள்ளியாக ஸ்ரீப்ரியா, பட்டண மங்கையாக சுமலதா, ஊர் கிழவியாக மனோரமா ஆகியோர் சினிமாவாக வந்தபோது நடித்திருந்தனர்
கதை

ஹீரோ கல்யாண ராமன் நாட்டுப்புற பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகிறான். அங்கு ஒரு பழைய ஜமீன் பங்களாவில் தங்கு ம் அவன் கிராமத்து பெண் வெள்ளியை நேசிக்கிறான். ஆனால் அவள் நேசிப்பதோ அவள் மாமன் மருத முத்துவை. (முக்கோண காதல் ஸ்டார்ட்டெட்)

அந்த கிராமத்துக்கு ஜமீனின் பேத்தியாக நாகரிக பெண் சினேகலதா வருகிறாள். கல்யாணராமன் தங்கும் அதே பங்களாவில் அவள் தங்க, பின் சில மர்மமான விஷயங்கள் நடக்கின்றன. பின் ஒரு கொலையும் நிகழ்கிறது.

அந்த கொலையை செய்தது யார், ஏன் கொன்றனர் , வெள்ளி யாரை மணந்தாள்..கல்யாணராமனையா.. மாமனையா போன்ற கேள்விகளை நாவலின் கடைசி அத்தியாயம் சொல்கிறது

****
பாசஞ்சர் போனால் போகிறது என திருநிலத்தில் நின்றது என முதல் வரியிலேயே புன்னகையுடன் நம்மை கதைக்குள் அழைத்து செல்கிறார் சுஜாதா. அடுத்த பாராக்களில் அவர் அந்த ரயில் நிலையத்தை விவரிக்கும் அழகு கதை எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் பால பாடம் ! சுஜாதா பல முறை சொல்லும் விஷயம் தான்.. டீடைலிங்.. எதையும் உற்று நோக்குதல். என்னை போன்ற ஆட்களுக்கு எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் தான் இதை வாசிக்கையில் கண்ணில் நிழலாடும்.

ஏராளமான பாத்திரங்கள். ஆனால் எந்த குழப்பமும் இல்லை. ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு தெளிவான ஸ்கெட்ச்/ குணாதிசயம் உள்ளது.

பல நாட்டுப்புற பாட்டுகள் கதையில் உபயோகம் செய்துள்ளார் சுஜாதா. கிராமத்து அனுபவம் இன்றியே, கிராமத்து கதையை தொட்ட சுஜாதாவின் தைரியம் வியக்க வைக்கிறது. அதனாலேயே ஹீரோவை சுஜாதா போல ஒரு நகரத்து மனிதனாக காண்பித்து, அவன் பார்வையில் கதை விரிவதாக வைத்து கொண்டார் போலும்.

கதை முடியும் போது வெள்ளியின் பாத்திரம் மனதில் பாரமாய் பதிகிறது. பெண்களுக்கு தங்கள் திருமணத்தில்,  நினைத்ததை பேசும் சுதந்திரம் கிராமங்களில் அவ்வளவு இல்லை தான்.

நாவல் 21 அத்தியாயங்கள் மட்டுமே. வார தொடராக வந்ததால் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு செம சுவாரஸ்ய இடத்தில் கதையை நிறுத்துகிறார்.

சமீபத்தில் புயல் அடித்த நாளன்று டிவி & இணையம் இல்லாததால் இப்புத்தகத்தை கையிலெடுத்தேன். வழக்கம் போல் ஏக் தம் தான்.

நாட்டு புற பாட்டுகள் வரும் இடங்கள் தான் சற்று தொய்வு. மற்றபடி மிக சுவாரஸ்யமாக வழுக்கி கொண்டு ஓடுகிறது கதை.

சினிமாவாக வந்தபோது பெரும் தோல்வியை சந்தித்தது. அது பற்றி கூட சுஜாதா எழுதிய நியாபகம். நண்பர் பாலஹனுமான் போன்றோர் அதையும் நினைவு வைத்திருக்க கூடும் !

தல-யின் இந்த புத்தகத்தை வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாசியுங்கள் !

***
நூலின் பெயர்: கரையெல்லாம் செண்பகப்பூ
ஆசிரியர்: சுஜாதா
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 216
விலை: ரூ 100

Monday, September 10, 2012

சுஜாதாவின் மத்யமர்

சுஜாதாவின் மத்யமர் - எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்பவே ஸ்பெஷல் புத்தகம் ! என்ன ஸ்பெஷல் என்று பிறகு சொல்கிறேன். முதலில் மத்யமர்.

முன்னுரையில் சுஜாதா மத்யமர் என்கிற வர்க்கம் பற்றி இப்படி சொல்கிறார்:

" இவர்கள் இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் அல்லாடுபவர்கள். ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள் " என மிடில் கிளாஸ் மக்களை வர்ணிக்கிறார் சுஜாதா. மொத்தம் 12 கதைகள் இந்த தொகுப்பில் ! சில கதைகள் மட்டும் இங்கு பார்ப்போம்

தர்ட்டி பை பார்ட்டி

பெங்களூரில் இருக்கும் நஞ்சுண்ட ராவ் ஒரு காலி நிலம் வாங்க அல்லாடுகிறார். ஒரு வழியாய் அவருக்கு ஒரு நிலம் கிடைக்கிறது. வக்கீலிடம் கேட்டு விட்டு பணம் தந்து நிலத்தை பதிவு செய்கிறார். அப்புறம் தான் தெரிகிறது. அவருக்கு காட்டிய நிலம் வேறு. பதிவு செய்து தந்த நிலம் வேறு என்று. அவருக்கு கிடைத்த நிலம் சரியான பாறை உள்ள இடம் அங்கு வீடு கட்ட, நிலம் வாங்கிய அளவுக்கு மேல் செலவு செய்தால் தான் தரை மட்டமாக்க முடியும். ஏமாந்து போன நஞ்சுண்ட ராவ் தனக்கு நிலம் விற்றவனை தேடி போக, அவர் ஊருக்கு போனதாக தகவல் கிடைக்கிறது. சில நாட்கள் பித்து பிடித்த மாதிரி அலைகிறார். தனக்கு நிலம் விற்றவனை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லியபடி இருக்கிறார். ஒரு நாள் கடப்பாரை எடுத்து கொண்டு காணாமல் போக, மனைவி அவர் நிலம் விற்றவனை கொல்ல சென்று விட்டார் என அழுது புலம்புகிறாள்.

ஆனால் கடைசி பாராவில் திரும்பும் நஞ்சுண்ட ராவ் " நம்ம நிலத்துக்கு தான் போனேன். உடைச்சு பார்த்தேன். பாறை பேர்ந்து வருது. நீயும் வா. ரெண்டு பேரும் சேர்ந்து பாறை முழுக்க உடைசிடலாம்" என்கிறார் !

மிடில் கிளாஸ் மக்கள் என்பவர்களின் பல வித வலியை இந்த சின்ன கதையில் சொல்லி போகிறார் சுஜாதா ! இக்கதையின் பின்னால் உள்ள விமர்சன கடிதங்கள் இன்னும் பல பரிணாமத்தை காட்டுகிறது.

ஒருவர் "நிலம் வாங்கும் போதே மனைவி தடுத்தார் பாருங்க பெண்கள் எப்பவும் புத்தி சாலி தான் " என்கிறார். இன்னொருவர் "அவரை ஏமாற்றுபவனும் மத்யமனே; ஆக வில்லனும் மத்யமர் தான் " என்கிறார்.

அறிவுரை

லஞ்சம் வாங்காத ராமலிங்கம் என்கிற அரசு ஊழியர் பற்றி பேசுகிறது. அவர் மனைவியோ கூட வேலை செய்யும் நபரை காட்டி " அவர் உங்களுக்கு சமான பதவி தான். ஆனால் கார் வைத்துள்ளார்; எப்படி?" என கேட்கிறார் " அவன் லஞ்சம் வாங்குறான்மா" என்கிறார் கணவர். " நீங்களும் வாங்குங்க; ஊரே வாங்குது " என்கிறார் மனைவி.

ராமலிங்கத்தின் தந்தையும் ஒரு அரசு ஊழியர். லஞ்சம் வாங்காத அவர், மகனையும் அப்படியே வளர்த்துள்ளார். இம்முறை ராமலிங்கத்துக்கு ஒரு நல்ல பணம் கிடைக்க வாய்ப்பு. அவருக்கும் பணத்தேவை உள்ளது. சரி சேலத்தில் இருக்கும் அப்பாவை சந்தித்து பேசுவோம் என்று செல்கிறார். அவரிடம் இது பற்றி பேச, அப்பா சொல்லும் அறிவுரை அவரை மட்டுமல்ல நம்மையும் திடுக்கிட வைக்கிறது.

இந்த கதை கல்கியில் வெளியான போது கதை குறித்த எனது விமர்சன கடிதம் வெளியானது. பின் நான் சுஜாதாவிற்கு கடிதம் எழுத, அவர் தன் கைப்பட பதில் எழுதினர். மறக்க முடியாத நினைவுகள் ! (புத்தகம் ஸ்பெஷல் என்றது இதற்காகத்தான் !)

சாட்சி 

சரளா என்ற பெண் தெருவில் நடக்கும் ஒரு கொலையை நேரில் பார்த்து விடுகிறார். போலிஸ் வந்து இவரை விசாரிக்கும் என அவள் மாமனார், மாமியார் அனைவரும் கொலையை பார்த்ததை சொல்லி விடாதே; கோர்ட் போலிஸ் ஸ்டேஷன் என அலையணும் என்று சொல்ல, இறுதியில் அவள் சொன்னாளா என்பதை சுஜாதா ஸ்டைலில் சொல்கிறார்

நீலப்புடவை ரோஜாப்பூ 

 இந்த தொகுப்பில் மிக வித்யாசமான கதை. கணவன்- மனைவிக்கு இடையே சரியான உறவில்லை. இதனால் கணவன் வெளியே ஒரு பெண்ணை நாடுகிறான். பேனா நட்பில் ஒரு பெண் தெரிய வருகிறாள். இருவரும் கடிதத்தில் நிறைய பேசுகிறார்கள். இறுதியில்.. இறுதியில்... ஆம் நீங்கள் ஊகித்தது சரி தான்.. அது அவன் மனைவி தான் !

மகளின் சினிமா வாய்ப்புக்காக சோரம் போகும் ஒரு அம்மா - திருமணம் ஆகாமல் கர்பமாகும் மகளை பிரசவம் முடியும் வரை எங்கோ கொண்டு சென்று டெலிவரி பார்க்கும் இன்னொரு தாய் இப்படி சர்ச்சையை கிளப்பிய கதைகளும் உண்டு. இதை விட அதிக சர்ச்சை கிளப்பிய கதை இட ஒதுக்கீட்டை எதிர்த்து எழுதப்பட்ட கதை. உயர் சமூகத்தை சார்ந்த, புத்தி சாலி ஏழைக்கு வேலை கிடைக்காமல், அதே வேலை இட ஒதுக்கீட்டால் சராசரி அறிவுள்ள வசதியான ஒரு பெண்ணுக்கு கிடைப்பதாக ஒரு கதை. இதன் விமர்சனத்தில் பாராட்டை விட கண்டன கணைகள் அதிகம் காண முடிகிறது.

முடிவுரையில் சுஜாதா விமர்சன கடிதங்கள் பற்றி " விமர்சனம் எழுதியவர்கள் நிறைய யோசிக்கிறார்கள். இவ்வளவு சாத்தியக்கூறு எழுதும் போது நான் யோசிப்பதில்லை" என்கிறார். கதைகளில் பலரும் பிராமணர்களாக இருப்பது ஏன் என பலரும் கேட்டதாகவும், தனக்கு பரிச்சயமுள்ள மொழி என்பதால் அதை தேர்ந்தெடுத்ததாகவும், ஆனால் இதே பிரச்சனைகள் எந்த சமூகத்துக்கும் வரலாம் என்கிறார்

மொத்தத்தில் :

சிறுகதைகள -  சுஜாதாவுக்கு மிக பிடித்த கிரவுண்ட்- பிச்சு உதறி இருக்கார். வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாசியுங்கள் !

நூல் பெயர்: மத்யமர்
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 164
விலை : Rs. 65

திண்ணை ஆகஸ்ட் 5,2012 இதழில் வெளியானது
***
டிஸ்கி  ப்ளாகர் இதனை 501 -ஆவது பதிவு என்கிறது. சும்மா ஞாபகத்துக்கு இத்தகவல் பதிந்து வைக்கிறேன் !

Monday, September 3, 2012

சுஜாதாவின் நிலாநிழல் விமர்சனம்


னக்கு மிக மிக பிடித்த சுஜாதா நாவல்களில் ஒன்று...நிலாநிழல் !  இருபது வருடத்துக்கு முன் வாசித்து இந்த நாவல். தின மணி கதிரில் தொடராய்  வந்த நினைவு. எங்கள் ஊர் நூலகத்திற்கு வாரா வாரம் தவறாமல் இந்த கதை வாசிக்கவே சென்று விடுவேன்.

கதையின் நாயகன் வயது தான் இக்கதையை வாசிக்கும் போது எனக்கும் (19 அல்லது 20 ). மேலும் அவனை போல கிரிக்கெட் வெறி அந்த வயதில் இருந்தது. இதுவே கூட புத்தகம் மீது ஈர்ப்பை தந்தது எனலாம். ஆனால் அதையும் தாண்டி கிரிக்கெட் ஆட்டங்களை ஒரு நாவலில் இவ்வளவு சுவாரஸ்யமாய் யாரும் தந்ததே இல்லை. அது தான் இந்த நாவல் இன்று வரை பலராலும் நினைவு கூறப்பட காரணம் !

கதையின் முதல் வரியும் பாராவும் இன்னும் கூட எனக்கு அப்படியே நினைவு இருக்கிறது

அதிகாலை முகுந்தன் கனவு கண்டான். இன்னும் ஒரு ஓவர் இருக்கிறது. 18 ரன் அடிக்க வேண்டும். இம்ரான் கான் பந்து வீச வருகிறார். " அதெப்படி ஸ்ரீரங்கம் மேட்சில் இம்ரான்கான் பந்து வீசலாம்?" என முகுந்தன் கேட்க, "கடைசி ஓவர் யார் வேணும்னா போடலாம்னு இப்போ ரூல் வந்திடுச்சு என்கிறார்கள். முதல் மூன்று பந்து முகுந்தால் தொட முடியலை. மூணு பந்து. 18 ரன். நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தை முகுந்த் சிக்சர் அடிக்கிறான். ஆறாவது பந்தை வீச இம்ரான் ஓடிவரும்போது வேலைக்காரியால் தூக்கத்தில் இருந்து எழுப்ப படுகிறான் முகுந்தன்.

முதல் வரியிலே கனவு என்று சொல்லப்பட்ட போதும், அந்த கடைசி பந்து முடியாமல் கனவு கலைந்ததே என நாமும் வருந்துகிறோம். இங்கு துவங்கிறது முகுந்துடன் சேர்ந்த நம் பயணம்.

பதின்ம வயது பையனுக்கு இருக்கும் அதே ஆர்வங்கள், பிரச்சனைகள் முகுந்தனுக்கும் உண்டு. அவன் கிரிக்கெட், கிரிக்கெட் என சுற்றுகிறானே என திட்டுகிறார் அப்பா. (எந்த அப்பாவுக்கு தான் மகன் கிரிக்கெட் பார்ப்பது பிடித்திருக்கிறது?) அப்பாவை ஏமாற்றி விட்டு மாநில அளவில் கிரிக்கெட் ஆட பம்பாய் பயணமாகிறான் முகுந்த். துவக்கத்தில் டீம் பாலிடிக்சால் அணியில் இடம் கிடைக்கா விட்டாலும், ஒரு முறை substitute ஆக இறங்கி பீல்டிங்கில் கலக்குகிறான். பின் தொடர்ந்து ஆட ஆரம்பிக்கிறான். அதன் பின் அவனது ஆட்டம் அசத்துகிறது. தனது ஆட்டத்தால் அந்த டோர்னமெண்டை கலக்கி விட்டு ஸ்ரீரங்கம் வருகிறான் முகுந்த். அப்பாவுக்கு இவன் ஏமாற்றி விட்டு பம்பாய் போனது தெரிந்து விடுகிறது. அவர் என்ன செய்தார், முகுந்த் இறுதியில் என்ன முடிவெடுக்கிறான் என்பதே கதையின் இறுதி பகுதி!

சுஜாதா இந்த புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி :

"உன்னிப்பாகப் படித்தால், இந்தக் கதையின் மையக் கருத்து கிரிக்கெட் அல்ல என்பது தெரியும். நாம் எல்லோருமே வாழ்வில் பட்டென்று ஒரு கணத்தில் அறியாமை என்பது முடிந்து போய் ஒருவித அதிர்ச்சியுடன் பெரியவர்கள் உலகுக்குள் உதிர்க்கப்படுகிறோம். அந்தக் கணம் எப்போது வரும் என்பது சொல்ல இயலாது. இந்தக் கதையில் முகுந்தனின் அந்தக் கணம் என்ன என்பதை வாசகர்கள் யோசித்துப் பார்க்கலாம். அதைச் சிலர் தரிசனம் என்பார்கள், நிதரிசனம் என்பர், ஒரு விதமான அனுபவம் என்பர். ஏதாயினும் நான் முன்பு சொன்ன ‘இழப்பு‘ எப்படியும் இருந்தே தீரும். உங்கள் வாழ்க்கையையே யோசித்துப் பாருங்கள்.

எப்பொழுது நீங்கள் அறியாமையை இழந்தீர்கள், எப்போது நிஜமெனும் பூதத்தைச் சந்து மூலையில் சந்தித்தீர்கள், எப்போது கவிதைகளும், சினிமாப் பாடல்களும் அர்த்தமற்றுப் போய் போஸ்டல் ஆர்டரும், ஜெராக்ஸ் பிரதிகளும் முக்கியமாய்ப் போயின ? எப்போது உறவுகள் கொச்சைப்படுத்தப்பட்டு, வியர்வை வீச்சமும், பொதுக் கழிப்பிடங்களையும் ஒப்புக் கொள்ளத் துவங்கினீர்கள் ? எப்போது பொய், துரோகம், அன்பிழப்பு, பிறர் வாய்ப்பைப் பறித்தல் போன்ற அத்தியாவசியப் பாவங்களில் ஒன்றை முதலில் செய்தீர்கள் ?

அப்போதுதான் அந்த இழப்பு ஏற்பட்டது.
***
முகுந்தனுக்கு லவ் இண்டரெஸ்ட் ஆக லல்லி என ஒரு சொந்த கார பெண்ணும் உண்டு ! டீன் ஏஜில் வரும் காதல், மற்றும் தடுமாற்றம் இந்த பாத்திரம் ஊடாக வெளிப்படும்.

முதலிலேயே சொன்ன மாதிரி இந்த அளவு கிரிக்கெட் மேட்சை விரிவாய் சொன்ன நாவல் இதுவரை கிடையாது. மேட்சில் முகுந்தின் ஒரு ஓவரை சுஜாதாவின் வரிகளில் படியுங்கள்

புது பாட்ஸ்மன் கார்டு வாங்கிக்கொண்டு இங்குமங்கும் பார்த்துவிட்டு முகுந்தன் போட்ட நான்காவது பந்தை லெக் சைடில் ஹீக் பண்ண எண்ணிக் கோட்டை விட ஸெட்ரிக் ஓரத்தில் டைவ் அடித்து பை போகாமல் பிடித்தான். முகுந்த் நம்பிக்கையில்லாமல் ஸ்டெப் எடுத்து கர்ச்சீப்பை அடையாளம் வைத்து ஓடிவந்து கொஞ்சம் பேஸை அடக்கிப் போட்டுப்பார்த்தான். உடனே லெங்த் கிடைத்து முதல் பந்து அரைக்கால் இன்ச்சில் ஆப் ஸ்டம்பை தொடாமல் விட்டது. இரண்டாவது ஷார்ட் பிட்சாகிவிட் அதை உடனே அந்த பாட்ஸ்மேன் விளிம்புக்கு வெளியே அனுப்பிவிட்டான். அடுத்தது லெக் அண்ட் மிடிலில் பிட்சி ஆகி வில்லாக வளைந்து மட்டை விளிம்பைச் சந்தேகத்துக்கு இடமின்றித் தொட்டுவிட்டு முதல் ஸ்லிப்பில் ஷாவின் பத்திரமான கைகளுக்குப் போய்ச் சேர்ந்தது.
***
அப்பப்பா ! நம்மை அந்த கிரவுண்டுக்கே அழைத்து போய் விடுகிறார் ! என்னா டீட்டைளிங் !

கிரிக்கெட் பற்றி மட்டுமல்ல, மும்பையின் பரபர வாழ்க்கை, அங்குள்ள பயணம் எல்லாமே இந்த நாவலில் மிக அழகாய் சொல்லப்பட்டிருக்கும் !

தலைவரின் மிக சிறந்த நாவல்களில் ஒன்றான இந்த புத்தகத்தை அவசியம் வாசியுங்கள்...குறிப்பாய் கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்டோருக்கு இந்த நாவல் மிக இனிக்கும் !

***
திண்ணை ஆகஸ்ட் 19, 2012 இதழில் வெளியான கட்டுரை   

Saturday, July 14, 2012

சுஜாதாவின் அன்புள்ள அப்பா

நாவல், சிறுகதை, கட்டுரை என எல்லா பக்கமும் சிக்சராய் அடித்தவர் சுஜாதா.

அவரது கட்டுரை தொகுப்புகளுள் ஒன்று அன்புள்ள அப்பா.

பல மனிதர்கள் பற்றி அவரது நினைவுகள் இந்த தொகுப்பில் பதிவாகி உள்ளது.குறிப்பாக அவர் தந்தை குறித்த நினைவுகள் நெகிழ்ச்சி


இறக்கும் நிலையில் இருக்கும் தனது தந்தையை சென்று சந்திக்கிறார் சுஜாதா. அவர் குறித்த நினைவுகள், அப்பா சீரியஸ் சீரியஸ் என்று அடிக்கடி சுஜாதாவை வரவழைத்தது ( என் அம்மாவுக்கும் சமீபத்தில் இதே நிலை வந்தது)... எல்லாம் சொல்லி சென்று கடைசி வரியில் " தன் தகனத்துக்கு பணம் அப்பா தயாராக வைத்திருந்தார் என சுஜாதா டைப் பஞ்ச உடன் தான் இந்த கட்டுரையும் முடிக்கிறார்

துக்க வீட்டு சம்பவங்களை சுஜாதாவின் வார்த்தைகளில் வாசியுங்கள் :

"பம்பாயிலிருந்து தம்பி வர காத்திருந்து மூன்று  பேரும் சுற்றி நின்று அவர் மார்பை கண்ணீரால் நனைத்தோம்

உறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்கு போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார்.

சேலம் கடை தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும் சொம்புகளுக்கும் அலைந்தோம். எல்லாரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணை காசுக்கு வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காத்திருக்கிறார்கள். தொடர்கதையின் தலைப்பு கேட்டு எனக்கு டிரன்க் கால் வருகிறது "

மிக சுருக்கமாக ஆனால் அந்த சூழலை எப்படி கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார் பாருங்கள் !

தேர்தலில் ஒட்டு இயந்திரம் அறிமுக படுத்தியதில் சுஜாதாவின் பங்கு கணிசமானது. முதன் முதலாய் கேரளாவில் ஒரு கிராமத்தில் இதை அமல் படுத்திய போது நடந்த சம்பவங்களை தனக்கே உரித்தான பாணியில் சிறுகதை போல் சொல்லி செல்கிறார். செம சுவாரஸ்யம் !

விகடன் ஆசிரியர் பாலன் பற்றி சொல்லும் போது ஒரு முறை, சுஜாதா.சேலம் அண்ணன் வீட்டுக்கு சென்று இறங்கும்போது அங்கு அவருக்கு முன்னே ஒரு விகடன் நிருபர் அவரை பார்க்க காத்திருந்தாராம். "நான் சேலம் வருவது எனக்கே தெரியாதே ? விகடனுக்கு எப்படி தெரிந்தது?" என்கிறார் குறும்புடன் !

போலிஸ் அதிகாரி கார்த்திகேயன் பற்றி விவரிக்கும் சம்பவங்கள் சினிமா சம்பவங்கள் போலவே உள்ளன. குறிப்பாய் பல இடங்களுக்கு அவர் மாறு வேஷத்தில் சென்று குற்றங்களை கண்டு பிடிப்பதை விரிவாக சொல்லியுள்ளார் சுஜாதா. போலீஸ்காரர்களுக்கு வரும் கடிதங்களையும் பகிர்ந்துள்ளார்

சாவி இதழுக்கு ஒரு வாரம் ஆசிரியராய் இருந்தபோது சுஜாதாவுக்கு வந்த கடிதங்களில் இருந்து அவர் எடுத்து காட்டும் வரிகள் செம சிரிப்பு !

"கொஞ்சம் கதைகளில் கிராமத்து கிழவர்களும் அத்தைகளும் மறக்காமல் செத்து போகிறார்கள். ஆரம்ப எழுத்தாளர்களின் கதைகளில் கடைசி பாராவில் தூக்கத்தில் எழுந்து அவ்வளவும் கனவு தானா என்கிறார்கள். பெண்மணிகளின் கதைகளில் எல்லாம் ஆண்கள் காதலித்து ஏமாற்றுகிறார்கள். திருமதிகள் அனுப்பிய கதைகளில் பெண்கள் வரதட்சணை கொடுமையால் துன்புறுகிறார்கள்".

சுஜாதாவிடம் கேள்வி பதில்களும் உண்டு.

"படம் ஆரம்பித்ததும் சென்று சீட் தேடிய அனுபவம் உண்டா?"

"உண்டு நீல படங்களில்"

புத்தகத்தின் கடைசியில் கம்பியூட்டரை பற்றி என்ற அவரது நீண்ட கட்டுரை வாசிக்க பொறுமை இல்லை. அதை எழுதிய காலத்தில் நிச்சயம் புதிதாய் இருந்திருக்கலாம்.

அன்புள்ள அப்பா: சுஜாதா பிரியர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்

புத்தகம்: அன்புள்ள அப்பா
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்ஸ்
விலை: 30
பக்கங்கள்: 96
###
வல்லமை ஜூலை 9, 2012  இதழில் வெளியான கட்டுரை 

Friday, June 22, 2012

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நாவல் கட்டுரை சிறுகதை என பல்வேறு வடிவங்களில் சுஜாதா எழுதி இருந்தாலும், அவரது மிக சிறந்த எழுத்துக்கள் வெளிப்படுவது சிறுகதையில்  தான் என பலரும் கருதுவது உண்டு. 

சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று ஸ்ரீரங்கத்து தேவதைகள். ஒவ்வொரு முறையும் புன்னகையும், நம் இளமை காலத்தையும் கண் முன் வர வைக்கும் அற்புத சிறுகதை தொகுப்பு இது. 

ொத்தம் 14 சிறுகதைகள். அதற்குள் தான் எத்தனை மனிதர்கள் உயிரோடு வலம் வருகிறார்கள் !   

நம் சிறுவயதில ஊரில் தொடர்ந்து பார்த்த ஏதாவது ஒரு பைத்தியத்தை  இன்று வரை நம் நினைவு இடுக்குகளில் விடாது வைத்திருக்கிறோம் தானே? அப்படி ஒரு பைத்தியத்தின் கதை தான் முதல் கதையான கடவுளுக்கு ஒரு கடிதம். கோவிந்து என்கிற மனிதர் தினம் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதி போஸ்ட் செய்கிறார். மன நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு திருமணம் செய்யலாம் என பேச, (" சாந்தி முகூர்த்தம் ஆனால் எல்லாம் சரியா போயிடும்") நல்ல வேளையாக அப்படி நடக்க வில்லை. கதையின்  இறுதியில் கோவிந்துவின் தம்பியும் அதே மாதிரி ஆகி போனதாகவும், அவர் அம்மா இருவருக்காகவும் வேண்டி கொண்டு தினம் கோவிலில் விளக்கு போடுவதாகவும் முடிக்கிற  போது மனது  கனத்து போகிறது. 

இன்னொரு பைத்தியத்தின் கதை குண்டு ரமணி. இது தன் குழந்தையை மரணத்திடம் கொடுத்த ஒரு பெண், புத்தி பேதலித்து திரிவதை சொல்கிறது. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வந்து அமர்ந்து கொண்டு சாப்பாடு கொடுக்க சொல்லி வற்புறுத்துவதும், அப்படி தராவிடில் அந்த வீட்டு வாசிலிலேயே படுத்து தூங்குவதும்... இது மாதிரி பைத்தியங்களை நிச்சயம் நாம் பார்த்திருப்போம் !

சிறு வயதின் இன்னோர் வித்தியாச அனுபவம் சொல்லும் கதை "பாம்பு". சுஜாதா வீட்டில் பாம்பு வந்து விட, அவர் தங்கையை சைட் அடிக்கும் சுஜாதாவின் நண்பர் ஹீரோ மாதிரி பாம்பு பிடிக்க பார்க்கிறார். கடைசியில் பாம்பை பிடிப்பது அவர் தங்கை தான். "அது என்ன பாவம் பண்ணுச்சு விட்டுடலாம்" என அவள் சொன்னாலும் அந்த பாம்பு அடித்து கொல்லப்படுகிறது. "என் தங்கையை நான் நன்கு உணர அது ஒரு சந்தர்ப்பம்" என்கிறார் சுஜாதா. 

நம் சிறு வயதில் ஏதாவது ஒரு நண்பன் நம்மை மிக டாமினேட் செய்து கொண்டிருந்திருப்பான். பெஞ்சில் உட்காருவது முதல், விளையாட்டு  வரை இப்படி சுஜாதாவை மிக டாமினேட் செய்த ஒருவரை பற்றிய கதையை சுவாரஸ்யமாய் சொல்லி விட்டு.. இன்று அவன் "வேலை கேட்டு என் அறையின் வாசலில் அமர்ந்திருக்கிறான். வேலை கொடுக்கலாமா வேண்டாமா சொல்லுங்கள் என முடிக்கிறார் சுஜாதா !

சுஜாதா பாட்டி வீட்டில் வளர்ந்ததால், கதைகளில் பாட்டிக்கு முக்கிய இடம் இருக்கிறது. தனிமையில் சுஜாதாவை திட்டுபவராக, மற்றவர் முன்  எப்போதும் விட்டுத் தராதவராக இருக்கிறார் பாட்டி. தன் வீட்டில் வேலை செய்த பெண்மணியின் சம்பள பணத்தை  திருடிய கதையை சுஜாதா மறைக்காமல் பகிர்ந்தது நெகிழ்வாய் உள்ளது. 

போகப்போக ரங்கு கடை, ஸ்ரீரங்கத்து தெருக்கள் எல்லாமே நமக்கு பழக்க பட்ட இடமாகி விடுகிறது. கே. வி, ரங்குடு, அம்பி ஆகிய பாத்திரங்கள் (நண்பர்கள்) பல கதைகளில் வருகிறார்கள். அனைத்து சிறுவயது விளையாட்டுகளிலும்  சுஜாதா ஒப்புக்கு சப்பாணியாக இருக்கிறார். (எல்லா எழுத்தாளர்களுக்கும் இதே நிலை தானோ?)   

உள்ளூர் கிரிக்கெட் மேட்ச்கள் எப்போதும் சுவாரஸ்யம் தான். சுஜாதா தஞ்சை டீமுடன் ஆடி ஜெயித்த அனுபவத்தை மிக சுவாரஸ்யமாய் சொல்கிறார். தங்களுக்கு  சாதகமான அம்பயர் வைத்து கொள்வதும், அவர்  எல்.பி .டபிள்யூ வுக்கு அவுட் கொடுக்காததும் எல்லாருக்கும் நடந்திருக்கும் ! இந்த மேட்ச் முடிந்து அதன் செய்தி சில வரிகளில் பத்திரிகையில் வந்த  போது கிடைத்த சந்தோசம் அதன் பின் எத்தனையோ முறை பத்திரிக்கையில் தன் பெயர் வந்த போதும் கிடைத்ததில்லை என்கிறார் சுஜாதா !

கிராமத்து டிராமாவில் சுஜாதா (சாமரம் வீசும் ) பெண் வேடம் போட்டதை ஏறக்குறைய கண்ணீருடன் நம்மிடம் சொன்னாலும், நமக்கு சிரிப்பு பிய்த்து கொண்டு போகிறது. நாடகம் பார்ப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ஒரு கறவை மாடு பரிசு என்று சொல்லி விட்டு, நாடக அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மாடு ஒரு மாதிரி நெர்வசாக சுற்றி வந்து சாணி போட்டு கொண்டிருந்தது என்பது டிப்பிக்கல்  சுஜாதா ! 
ஒவ்வொரு கதையும் வாசித்து விட்டு சற்று இடை வெளி விட்டு தான் அடுத்த கதை வாசிக்க வேண்டியிருக்கிறது

தமிழில் வெளிவந்த மிக சிறந்த சிறுகதை தொகுப்புகளுள் ஒன்றான இந்த புத்தகத்தை வாசிக்க தவறாதீர்கள் !
********
கிழக்கு பதிப்பக வெளியீடான தமிழ் பேப்பரில் ஜூன் 19 வெளியான விமர்சனம்.

Monday, June 18, 2012

எழுத்தாளர் சுஜாதாவின் நில் கவனி தாக்கு

நில் கவனி தாக்கு தின மணி கதிரில் தொடராக வெளி வந்த ஜேம்ஸ் பான்ட் டைப் கதை. எழுபதுகளின் துவக்கத்தில் எழுதப்பட்ட இக்கதை இன்றைய சூழலுக்கும் பெரிதும் பொருந்துவது ஆச்சரியம் !

கதை முழுதும் இரண்டே நாளில் நடக்கிறது. அதனால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. சிட்டாய் பறக்கின்றன பக்கங்கள். ஒரு மணி நேரத்தில் முழுதும் வாசித்து விடலாம்.

கதை

ஹீரோ விமான நிலையத்தில் விஞ்ஞானி ஒருவரை  வரவேற்று அழைத்து வர போகிறான். மத்திய அரசில் வேலை செய்யும் அவனது பாஸ் (நடேசன்) அவனை அனுப்பி உள்ளார். அழைத்து வரும் போது விஞ்ஞானி கடத்தபடுகிறார். "அவரை எப்படியும் 24 மணி நேரத்தில் தேடி கண்டு பிடி; இல்லா விடில் நம் இருவருக்கும் வேலை போய் விடும்" என்கிறார் பாஸ்.

ஹீரோ மிக சிரமப்பட்டு 24 மணி நேரத்தில் அந்த விஞ்ஞானியை மீட்கிறார். ஆனால் தனது தொலை பேசி எண்ணே தன் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாதே; நம் அலுவலகத்தில் உள்ள கருப்பு ஆடு யார் என கண்டு பிடிக்க முயல்கிறார். இந்த கேள்விக்கு அவர் விடை தேடும் போது அவரது பாஸ் நடேசன் தான் வெளி நாட்டு ஆட்களுடன் கூட்டு சேர்ந்து இப்படி செய்துள்ளார் என தெரிய வருகிறது. பாஸ் கைது செய்ய படுகிறார். ஹீரோ அந்த நிறுவனத்தில் தலைவன் ஆகிறார். ஆனால் நடேசன் காவலிலிருந்து தப்பி வெளி நாடு ஓடி விடுகிறார். அவர் சென்ற மறு நாள் ஹீரோவுக்கு நடேசனிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அந்த கடிதத்தில் உள்ள விஷயங்கள் ஹீரோவுக்கு மட்டுமல்ல நமக்கும் செம ஆச்சரியம் தருகிறது. அதில் என்ன இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முயலுங்கள். சற்று நேரத்தில் சொல்கிறேன்.

நில் கவனி தாக்கு என்கிற பெயர் இந்த கதைக்கு பல விதங்களிலும் பொருந்தும். சினிமாவில் உள்ளது போல் நிறையவே சண்டை காட்சிகள் உண்டு ! கதையை சுஜாதா பிற்காலத்தில் சினிமாவிற்கு கொடுக்கலாம் என்கிற எண்ணத்தில் எழுதினாரோ என்னவோ !

ஒரு பெண்ணை பற்றி விவரிக்கும் போது இப்படி விவரிக்கறார்.

"எக்ஸ்கியூஸ் மீ என்று குரல். "அந்த எக்ஸ்கியூஸ் மீ " எனக்கு "ஆரஞ்ச் ஜூஸ் மீ" போல இனிமையாக ஒலித்தது. அவள் அழகாக இருந்தால் என்று சொன்னால் அது இந்த வருடத்தின் மிக பெரும் அண்டர் ஸ்டேட்மன்ட். பிரம்மா அல்லது அவள் பெற்றோர் தடுக்கி விழுந்த மகத்தான கலவை".

டிஸ்கோதேவில் உள்ள சூழலும் பெண்ணின் நடனம் மற்றும் அவள் ஆடைகளை களைவதை தனது பாணியில் சொல்லி செல்லும் போது அந்த இருட்டான அறைக்குள் நாமே அமர்ந்திருக்கும் உணர்வு.

விமான நிலையம் சுஜாதா வரிகளில் :

"விமான நிலையம் ஒரு வினோதமான இடம். பணக்காரர்கள் பிரியும்,  சேரும் இடம். பணக்காரர்கள் அழுவதை இங்கே தான் பார்க்கலாம். அதோ பாருங்கள் அந்த இளைஞன் நெற்றியில் குங்குமம் அணிந்து கொண்டு புது சூட்டில் பாரின் போகிறான். அவன் அவசரமாக மணந்த அந்த பெண் ஜரிகை புடவையின் நிழலில் பவுடர் கலையாமல் அழுகிறாள்".

ரேணு என்கிற பெண் திடீரென வில்லன் கூட்டத்திலிருந்து கட்சி மாறி எப்படி ஹீரோவுக்கு உதவுகிறாள் என்பதற்கு எந்த லாஜிக்கும் இல்லை. (அவள் அப்படி உதவா விடில் கதையை நகர்த்துவது சிரமம் !)  இந்த ரேணுவுக்கும் ஹீரோவுக்கும் இடையே கசமுசா காட்சியும் கடைசியில் ரிஜிஸ்தர் ஆபிசில் மாலை மாற்றி கொண்டனர் என்கிற அளவுக்கு சினிமா நாயகன் -நாயகி போல் எழுதியிருக்கிறார் சுஜாதா. ஒரு காட்சியில் கடத்தப்பட்ட ஆள் இவர்கள் இருவரையும் பார்த்து சொல்கிறார் " ஹீரோ -ஹீரோயின் ஜோடி சேர்ந்தாச்சா? என்னை மீட்டுட்டிங்க; அடுத்து என்ன உங்களுக்குள் டூயட்டா ? "

இந்த கதையில் ஹீரோ ஒரு சி. ஐ. டி மாதிரி என்பதால் தன் பெயரையே சொல்ல வில்லை. முழுக்க தன்னிலையில் ஹீரோ கதை சொல்வது போல் இருந்தாலும் மற்றவர்கள் கூட ஹீரோவை பெயர் சொல்லி அழைக்க வில்லை. நமக்கும் அது உறுத்தவில்லை.

கடைசி அத்தியாயத்துக்கு முன் வரை ஜேம்ஸ் பான்ட் படம் பார்க்கிற மாதிரியே இருந்தாலும் (புத்தகத்தின் அட்டையில் கூட ஜேம்ஸ் பான்ட் துப்பாக்கி தான் போட்டுள்ளனர்) , கடைசி அத்தியாயத்தில் உள்ள ஆச்சரியம் நம்பவே முடியாதது. இந்த அத்தியாயத்தில் கதை ஜேம்ஸ் பான்ட் தளத்திலிருந்து சுஜாதா ஸ்டைலுக்கு வந்து விடுகிறது. கடைசி அத்தியாயம் போகும் முன் சுஜாதா "இதன் கடைசி பகுதியை நீங்கள் ஊகிக்க முடிந்தால் நீங்கள் நிஜமாகவே கில்லாடி" என சவாலாகவே சொல்கிறார்!

நானும் கூட நிறுத்தி விட்டு சில பல விதமாய் யோசித்தேன். ஆனால் அவர் சொன்ன முடிவு செம வித்யாசம் !

அந்த இறுதி கடிதம் சொல்வது இது தான்: இந்திய அணுசக்தி ரகசியங்களை வெளிநாடு (சீனா) தெரிந்து கொள்ள முயல, அதற்கு நடேசன் உதவியை நாடுகின்றனர். அரசின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு ஒரு ஸ்பை போல அவர்களுடன் செல்கிறார் நடேசன்  "அவர்கள் உடன் சென்று அவர்கள் ரகசியத்தை கண்டு பிடிப்பேன். அல்லது அங்கேயே இறந்து விடுவேன்" என்று நடேசன் கடிதமும், கதையும் முடிகிறது

வில்லன் போன்ற நடேசன் கேரக்டரை ஹீரோவை விட பெரிய சைசில் நல்லவராக்கி முடிப்பது வெரி இன்டரெஸ்டிங்.

சுஜாதா இந்த கதையின் பின்புலமாய் எடுத்து கொண்ட இந்திய -சீன கோல்ட் வார் இன்றும் கூட இருக்க தானே செய்கிறது !

துப்பறியும் கதை அல்லது சுஜாதா இவ்விரண்டில் எந்த ஒன்று உங்களுக்கு பிடிக்கும் என்றாலும் நீங்கள் நில் கவனி தாக்கு நிச்சயம் படிக்கலாம் !

புத்தக பெயர்: " நில் கவனி தாக்கு "
ஆசிரியர் : சுஜாதா
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 126
விலை Rs. 75

அதீதம் ஜூன 2, 2012 இதழில் வெளியானது ! 

Thursday, June 7, 2012

விக்கி டோனாரும், சுஜாதாவின் 14 நாட்களும்

வார இறுதியில் பார்த்த ஒரு சினிமாவும், வாசித்த புத்தகமும் ஒன்றாய் பகிர்கிறேன்

விக்கி டோனார்

வித்யாசமான கதை களன். டில்லியில் குழந்தை பேறு இல்லாதோருக்கு மருத்துவம் செய்யும் டாக்டர் சந்தா புதிதாக ஸ்பேம் டோனார் தேடுகிறார் . ஹீரோ விக்கியை பார்த்து விட்டு, அவனது பரம்பரையில் நிறைய குழந்தைகள் உண்டு என அறிந்து அவனை டோனார் ஆக்க போராடி சம்மதம் வாங்குகிறார். விக்கி துவக்கத்தில் விருப்பமின்றி இறங்கினாலும் பின் நன்றாக பணம் பார்க்கிறான். இடையில் அஷிமா என்கிற பெங்காலி பெண்ணை காதலித்து மணக்கிறான். அவர்களுக்கு குழந்தை பேறு இல்லை. அஷிமாவுக்கு குழந்தை பேறுக்கு வாய்ப்பு இல்லை என தெரிகிறது.

விக்கி அவள் மீது அன்போடு இருந்தாலும் கூட,  ஒரு வாக்கு வாதத்தில் அவன் ஒரு ஸ்பேம் டோனார் என தெரிந்து விலகுகிறாள் அஷிமா. இருவரும் மீண்டும் ஒன்று சேர டாக்டரே காரணமாகிறார். பெற்றோரை விபத்தில் இழந்த   ஒரு குழந்தை இவர்கள் வசம் வர, புது வாழ்க்கை துவங்குகின்றனர்.
*********
படம் ஓஹோ என்று சொல்ல முடியாது. அதே நேரம் மிக சிக்கலான ஒரு விஷயத்தை கையாண்டமைக்கு நிச்சயம் பாராட்ட தான் வேண்டும்.

குழந்தைபேறின்மை என்பது நம் நாட்டில் உள்ள மிக பெரிய பிரச்சனை. ஆர்டிபிசியல் Insemination என்பது உயர் தட்டு மக்களிடையே நன்கு ஏற்று கொள்ள பட்டாலும், நம் மக்கள் பலரிடமும் சென்று சேரவில்லை. இத்தகைய வெகு ஜன படங்கள் மூலம் இது பற்றி ஏராளமான மக்கள் அறியமுடியும்.

படத்தின் ஹீரோ விக்கி புதுமுகம் என்பதால் நடிக்கிற மாதிரியே தெரியலை. மிக இயல்பாக இருக்கிறார்.


அஷிமாவாக வரும் ஹீரோயின் (யாமி) செம அழகு. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கிறார்.

படத்தில் சண்டைகள் இல்லை. பாடல்களும் பின்னணியில் தான் ஒலிக்கிறது. ஹீரோவின் அம்மா பாத்திரம் மற்றும் ஹீரோயின் அப்பா பாத்திரம் வித்யாசமாய் உள்ளது. பஞ்சாபிகளுக்கும் பெங்காலிகளுக்கும் இருக்கும் உரசல், கிண்டல் போன்றவை ஆங்காங்கு சுவையாய் விரவப்பட்டுள்ளது.

ஜான் ஆப்ரஹாம் என்கிற பிரபல ஹிந்தி நடிகர் தயாரித்தாலும், அவர் முன்னணி பாத்திரத்தில் நடிக்கலை. படம் முடிந்ததும் டைட்டில் ஓடும்போது ஒரு டான்ஸ் ஆடி விட்டு போகிறார். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய ஹிட் ஆகிடுச்சு.

இரண்டு மணி நேரமே ஓடும் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம் !

**************
சுஜாதாவின் 14 நாட்கள் -நாவல்

இந்தியா- பாகிஸ்தான் இடையே 1972-ல் நடந்த போரின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்.

கதை 

குமார் என்கிற விமானி தன் விமானம் மூலம் பாகிஸ்தான் விமானங்களை தாக்குகிறான். எதிரி விமானத்தால் தாக்கப்பட்டு பாராசூட் மூலம் ஒரு காட்டில் விழுந்து பாகிஸ்தான் படையிடம் சிக்குகிறான் குமார். சுல்தான் என்கிற மோசமான ஆபிசர் அவனை சிறைப்பிடித்து துன்புறுத்துகிறான். இந்திய படை அந்த இடத்தை அடைந்து, பாகிஸ்தான் படை சரணைடைகிறது. ஆனால் குமாரை காணும். இந்திய படைகள் வருவதை அறிந்த சுல்தான் அவனை ஆற்றுக்கு அருகே கூட்டி சென்று துப்பாக்கியால் சுட்டு விடுகிறான். இந்திய ராணுவம் குமாரை கண்டுபிடித்து மருத்துவம் கொடுத்து அவனை காப்பாற்றுகிறது. நாவலின் இறுதியில் குமார் இந்த முழு கதையும் கதாசிரியரான சுஜாதாவிடம் சொல்வதாக முடிகிறது.

**********
மிக விறுவிறுப்பான கதை. குமாருக்கு என்னாகுமோ என்கிற பயம் வாசிக்கும் ஒவ்வொருவரையும் தொற்றி கொள்கிறது. இடை இடையியே அவன் மனைவி-மகன் பற்றி சொல்லி கொண்டே வருகிறார் (ரோஜா கதையின் முடிச்சு இங்கிருந்து கூட எடுக்க பட்டிருக்கலாம்) விமானம் பற்றியும், வானில் பறப்பது பற்றியும், போர், துப்பாக்கி இவை பற்றியும் விரிவான விவரணைகள் ஆச்சரிய படுத்துகிறது. சுஜாதா கதையில் மருந்துக்கும் காமெடி இன்றி ஒரு கதை படித்தது இது தான் என நினைக்கிறேன். ஆனால் கதையின் களம் அது போல !

எல்லையில் நம் ராணுவ வீரர்கள் எந்த நிலையில் பணி புரிகிறார்கள், அவர்கள் குடும்பம் எந்த மன நிலையில் வாழ்கிறது போன்றவற்றை உணர இந்த நாவலை ஒரு முறை அவசியம் வாசியுங்கள் !

********
வல்லமை ஜூன் 6, 2012 இதழில் வெளியான கட்டுரை 

Tuesday, May 8, 2012

சுஜாதாவின் வஸந்த் வஸந்த் - விமர்சனம்


சுஜாதா எழுதி எண்பதுகளின் துவக்கத்தில் கல்கி வார இதழில் வந்த நாவல் வஸந்த் வஸந்த். வெளி வந்த போதே வாசித்துள்ளேன். ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் சுஜாதா வைக்கும் சஸ்பென்ஸ் செமையாக இருக்கும் ! உயிர்மை பதிப்பு நூலாக பல ஆண்டுகளுக்கு பிறகு இதனை இப்போது மீண்டும் வாசித்தேன். இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் முதலில் வாசித்த போது கிடைத்த அதே உணர்வுகள் ..! வாத்தியார் வாத்தியார் தான் !

2005-ல் எழுதிய முன்னுரையில் சுஜாதா இப்படி சொல்கிறார்:

"வஸந்த் முதலில் கதையில் தோன்றி முப்பது ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் இன்னும் கல்யாணம் ஆக வில்லை. வஸந்த் பெண்களை பார்த்தால் சற்று அசடு வழிவதோடு சரி (நாம் எல்லோருமே தானே!) "

அட ! சுஜாதாவே பெண்களை பார்த்தால் வழிவாரா என்கிற ஆச்சரியத்துடன் வாங்க கதைக்குள் போவோம்..!

கதை 

னியா என்கிற பெண்ணை காதலிக்கிறான் வஸந்த். இனியாவின் தந்தை ஒரு வரலாற்று பேராசிரியர். அவர் எழுதிய ஒரு ஆராய்ச்சி கட்டுரையை கடத்தி போகிறது ஒரு கூட்டம். அந்த கட்டுரை வேண்டும் என அவர் சொன்னதால் அதை தேடி போகின்றனர் வஸந்தும் கணேஷும்.



அந்த கட்டுரையில் ராஜராஜன் கிணறு பற்றி எழுத பட்டுள்ளது என அறிந்து அந்த கிணறு இருக்கும் உக்கல் என்கிற கிராமத்துக்கு செல்கின்றனர் கணேஷ் & வஸந்த். அங்கு வினோதமான பல அனுபவங்கள் கிட்டுகின்றன. கிணற்றில் புதையல் உண்டா, தங்க காசுகள் உண்டா என்கிற கேள்வி எல்லாம் தாண்டி, அந்த கிணற்றின் நீருக்காக தான் அவ்வளவு போராட்டம் என்பது தெரிகிறது. அப்படி என்ன அந்த நீரில் விசேஷம், அதை வைத்து என்ன செய்கிறார்கள் வில்லன்கள் என்பது கதையின் இறுதியில் தெரிகிறது.

நாவலின் இறுதியில் இனியா அமெரிக்க மாப்பிள்ளையை மணக்க சம்மதிக்க, வஸந்த் அடுத்த காதலுக்கு தயார் ஆகிறார் !

கிணறு குறித்த அந்த சஸ்பென்ஸ் செமையாக உள்ளது. அது என்ன என அறியும் ஆவலிலேயே பக்கங்கள் பறக்கின்றன. அது தெரியும் போது நமக்கே வியப்பாக தான் உள்ளது

வஸந்த் ஸ்டைல் குறும்புகள் சில :

"என்னமா எழுதிருக்கார் மகாகவி பாரதி. தலைப்பாவை விலக்கி தலையை தடவி கொடுக்கணும் போல இருக்கு பாஸ் "

" என் பேரு ரங்காச்சாரி. சமீபத்தில் தமிழ் நாட்டில் ஜாதி பேர் கூடாதுன்னதால் ரங்கா. வீட்டில் கூப்பிடுறது '...ங்கா' "

ஆங்காங்கு சுய எள்ளலும் உண்டு " வர வர சுஜாதா கதை நிறைய படிக்க ஆரம்பிசிட்டீயா நீ? ". இன்னொரு இடத்தில் " வேண்டாம் அந்த வார்த்தை சொல்லாதே தொடர் கதையை பாதியில் நிறுத்திடுவாங்க"

நூலகம், மருத்துவமனை என தான் போகும் இடமெல்லாம் பெண்களிடம் கடலை போடுவதும், தன் நகைச்சுவை பேச்சால் பெண்களை கவர்வதும் என வஸந்த் எப்போதும் போல் வசீகரிக்கிறார்.

அரிதாக இந்த கதையில் வஸந்துக்கு கல்யாணம் என்றும், பிறிதோர் இடத்தில வஸந்த் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்க போவதாகவும் சொல்கிறார். இரண்டுமே நடக்க வில்லை. (வஸந்த் இறக்க போகிற மாதிரி ஒரு வாரம் முடித்த போது " வஸந்தை கொன்று விடாதீர்கள்" என பலரும் தந்தி அடித்ததாக சுஜாதா சொன்னது.. நீங்களும் அறிந்திருக்கலாம்)

சோடியம் ஹைட்ராக்சைட் , சோடியம் மானோ சல்பேட் என அறிவியலுக்குள் சென்று விளக்கும் போதும், எளிமையாக சுவாரஸ்யமாக சொல்வதில் தான் சுஜாதா நிற்கிறார்.

26 அத்தியாயங்கள் கொண்ட இக்கதையை இரண்டரை மணி நேரத்தில் படித்து முடித்தேன். செம விறுவிறுப்பு !

கணேஷ் -வஸந்த்தின் துப்பறியும் நாவலை சுஜாதாவின் வழக்கமான பாணியில் வாசிக்க விரும்பினால் அவசியம் வாசியுங்கள் !
************
நூல்: வஸந்த் வஸந்த்
ஆசிரியர்: சுஜாதா 
வெளியீடு : உயிர்மை பதிப்பகம் 
பக்கங்கள்: 176
விலை: ரூ. 100
நன்றி : பதிவர் ரகு 
************
திண்ணை ஏப்ரல் 22 , 2012 இதழில் வெளியானது 

Thursday, March 15, 2012

எழுத்தாளர் சுஜாதாவின் பத்து செகன்ட் முத்தம்

குமுதம் இதழில் வெளியான நாவல் பத்து செகன்ட் முத்தம் !  ஓட்ட பந்தய
வீராங்கனையின் கதை. 18 அத்தியாயங்களே கொண்ட சிறிய நாவல் இது .

கதை


படம் RVS  Facebook-லிருந்து சுட்டது 
தமிழரசி (சுருக்கமாக ரசி ) ஏசியாட் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள திருச்சியில் இருந்து டில்லி வந்திருக்கிறாள். உடன் அவளது டிரைனரும், தாய் மாமாவுமான ராஜ் மோகன். பயிற்சி ஓட்டத்தில் இவளது ஓட்டத்தை கண்டு இவளை பேட்டி எடுக்க முயல்கிறான் மனோகர் என்கிற பத்திரிக்கையாளன். ஆனால் ரசியின் மாமா அவனை அவமானபடுத்தி அனுப்புகிறார்.

ரசி நூறு மீட்டரை பத்து செகண்டுகளுக்குள் கடக்க வேண்டும் என்பது அவள் மாமாவின் விருப்பம். அவளை அந்த இலக்கை நோக்கி தான் அவர் செலுத்துகிறார். ஏசியாட் போட்டியில் ரசி தங்க பரிசு வெல்கிறாள். வெற்றியை கொண்டாட அவளை மனோகர் உடன் வெளியே சென்று வர அனுமதிக்கிறார். ஒரு ஓட்டல் செல்லும் ரசி முதல் முறையாக மது அருந்தி விட்டு வீடு வருகிறாள். இதனால் கோபமாகும் மாமா அவளை அறைக்குள் போட்டு பூட்டி விடுகிறார்.

மனோகர் இதனை தெரிந்து கொண்டு கோர்ட்டில் மாமா அவளை அடைத்து வைத்திருப்பதாக வழக்கு தொடுக்கிறான். வழக்கு விசாரணையில் மாமா தன்னை தனி அறையில் அடைத்து வைத்தது உண்மை தான் என்று ரசி சொல்ல, கோர்ட் அவளை அப்படி அடைத்தது தவறு என்றும், அவள் தன் விருப்பபடி இருக்கலாம் என்றும் தீர்ப்பு கூறுகிறது.

ரசியை மனோகர் தன்னுடன் அழைத்து செல்கிறான். மாமா அவளிடம் வந்து "என்னுடன் வா" என கெஞ்சுகிறார். மனோகர் ரசியை தான் மணக்க போவதாக சொல்கிறான். ரசியும் மனோகரும் டில்லியின் பல இடங்களை சுற்றி பார்த்து கொண்டிருக்க "மாமா தற்கொலை செய்து கொண்டார்" என்கிற செய்தி அவர்களை அடைகிறது. !! அவர் எழுதிய கடைசி கடிதத்தை ரசி வாசிக்கிறாள். கடிதத்தில் அவர் ரசி மேல் கொண்ட காதலும், விளையாட்டில் அவள் சாதித்த பின் அவளை மணக்க எண்ணியிருந்ததையும் எழுதி உள்ளார். அவள் ஓட்டத்தில் பெரிதாய் சாதிக்க வேண்டும் என்கிற தன் ஆசையையும் வெளிப்படுத்தி உள்ளார்.

கடிதத்தை படித்து முடித்த ரசி, " ஓட்டத்தில் தான் சாதிப்பதே முக்கியம்" என்றும் அதன் பின் தான் நம் கல்யாணம் என்றும் மனோகரிடம் சொல்வதோடு கதை முடிகிறது.
**
சிறிய நாவல் என்பதால் ஒன்றரை மணி நேரத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். ரசி அவள் மாமா, மனோகர் மற்றும் அவன் நண்பன் (புகை படக்காரன்) ஆகிய நான்கு பாத்திரங்களை சுற்றியே கதை செல்கிறது.

ஓட்ட பந்தயத்துக்கு எப்படி எல்லாம் தயார் ஆக வேண்டும் என்பதை detailed-ஆக விளக்கி உள்ளார் சுஜாதா. அந்த மாமா மேல் கோபப்படுவதா வேண்டாமா என்று நமக்கே சற்று யோசனையாக தான் உள்ளது. கதையில் ஒரு இடத்தில் ஒரு பாத்திரம் வழியே சுஜாதா இப்படி சொல்கிறார்.

" எதையுமே, எந்த லட்சியத்தையுமே அடையலாம். அதுக்கு என்ன விலை குடுக்குறோம்கிறது தான் முக்கியம். ஆத்மாவை விற்று கிடைக்கிற எதுவும் வொர்த் இல்லை"

சுஜாதா கதையில் சொல்ல வரும் ஆதாரமான செய்தி இது தான் !

மனோகரின் நண்பனாக வரும் திரிபாத்தி என்கிற கேமரா மேன் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். ஓட்டலுக்கு போகும் போது சாப்பிட்டு முடித்து விட்டு ஸ்பூனை எடுத்து தன் பையில் போட்டு கொள்வது ஒரு உதாரணம் !

மாமா இறந்த பிறகு ரசி என்ன பேசி கொண்டே அழுகிறாள் என சுஜாதா சொல்வது செம சுவாரஸ்யம் : " என்கிட்டே நீ இல்லாட்டா செத்து போயிடுவேன்னு சொல்லி இருக்க கூடாதா மாமா?"

மாமா " என்னை எரிக்காதீர்கள். புதைத்து விடுங்கள். என்னை புதைத்த இடம் மீது யாராவது ஓடினால் நான் மகிழ்வேன்" என சொல்லும் இடம் நெகிழ்வு.

ஓட்ட பந்தயம் என்கிற வித்தியாச கதை களத்தில் சுஜாதா முத்திரையுடன் எழுதப்பட்ட இந்த நாவலை அவசியம் வாசியுங்கள் !

Monday, February 27, 2012

சுஜாதா நினைவு நாள் : சுஜாதா கையெழுத்தில் வந்த கடிதம்

பிப்ரவரி -27- இன்று - எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு நாள். அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் ப்ளாகில் பகிர்ந்திருந்தேன். மீண்டும் ஒரு முறை அந்த வரிகளை இன்று பகிர்கிறேன்.


சென்ற முறை செய்யாத ஒன்று இம்முறை செய்கிறேன். சுஜாதா கைப்பட எனக்கெழுதிய அந்த கடிதத்தை இம்முறை உங்கள் பார்வைக்கு தருகிறேன். சுஜாதா தீவிர ரசிகர்கள் இதனை மிக ரசிப்பார்கள் என நம்புகிறேன்.


*************
நான் சட்ட கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது கல்கியில் மத்யமர் என்ற சிறுகதை வரிசை வந்து கொண்டிருந்தது. அதில் பல controversy ஆன கதைகள்.. இவை பற்றி பிரசுரமாகும் விமர்சனங்களுக்கு சுஜாதா கையெழுத்திட்ட மத்யமர் புத்தகம் அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தனர். சுஜாதா கையெழுத்திட்ட புத்தகம் வாங்கவே விமர்சனம் எழுதினேன். பிரசுரமும் ஆனது. புத்தகம் வந்த பின், சுஜாதாவிற்கு நன்றி சொல்லி இரு பக்க கடிதம் எழுதினேன். 

சுஜாதா பதில் எழுத மாட்டார் என்பது பொதுவாய் அனைவரும் அறிந்தது. ஆனால் நம்ப முடியாமல் சில நாளில் பதில் வந்தது. 

அன்புள்ள மோகன் குமார்,

உங்கள் கடிதம்; வாசகர்களுக்கு நான் பெரும்பாலும் பதில்
 கடிதம் எழுதுவதில்லை; ஆனால் அதற்கான பல காரணங்களை ஒத்திப் போட்டுவிட்டு, உங்களுக்கு பதில் எழுத தூண்டியது உங்கள் கடிதத்தில் விரவியிருந்த ஸ்நேகம். நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயரானதும் எனக்கு மீண்டும் எழுதுங்கள் 

அன்புடன் 

சுஜாதா 

*******************
இந்த கடிதத்தை எத்தனை முறை வாசித்திருப்பேன்!! சில வரிகளில் பல விஷயம் உணர்த்தினார் வழக்கம் போல்..



முதல் வரியை கவனித்தீர்களா? " உங்கள் கடிதம்" அவ்வளவு தான் "கிடைத்தது" இல்லை!! வார்த்தை சிக்கனம்!!

அடுத்த வரியில் யாருக்கும் எழுதாத நான் உனக்கு எழுதுறேன் என என்னை மகிழ வைத்து விட்டார்!!

கடைசி வரி தான் மிக முக்கியம்.. "நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயர் ஆனதும் .." இப்போ படிப்பது தான் உன் வேலை என எவ்வளவு அழகாய் சொல்லிட்டார்! இது என ஆதர்சம் மூலம் வந்ததால், நான் சீரியாசாகவே எடுத்து கொண்டேன்!

ஆனால் சுஜாதா சொன்னது போல் நான் லாயர் ஆகலை.. படிக்கும் போதிலிருந்தே கம்பனிகளில் லீகல் அட்வைசர் ஆக செல்லும் எண்ணம் தான்.பின் கூடவே Company Secretary course-ம் படித்து விட்டு வேலைக்கு வந்தேன். துவக்கத்தில் இருந்த கம்பெனியிலேயே சுஜாதா ஒரு Director!!

Company Secretary-தான் Board Meeting-கள் நடத்த வேண்டும். இதற்கான நோட்டீஸ் அனுப்புவது, மீட்டிங்குகளில் எடுக்கப்படும் முடிவுகளை (Minutes) பதிவு செய்வது இவை Company Secretary வேலையில் அடங்கும். எனவே சுஜாதாவை Board Meeting-கில் அருகிலிருந்து பார்க்க போகிறேன் என ஆர்வமாக இருந்தேன். ஆனால் நான் வேலை பார்த்த கம்பனிகளில், இந்த ஒரு கம்பனியில் மட்டும் தான் Company Secretary-ஐ வெளியே வைத்து விட்டு Board meeting நடத்துவார்கள்!! நான் இல்லாத மீட்டிங்கில் என்ன நடந்தது என நான் வெளியே இருந்து Minutes எழுத வேண்டும்!!

இந்த காலங்களில் அவருடன் Board meeting குறித்து போனில் பேசியிருக்கிறேன். அவர் எங்கள் கம்பெனி வந்து, நேரே மீட்டிங் ரூம் செல்வதை பார்த்துள்ளேன். அவ்வளவு தான்.

இதே காலத்தில் நண்பன் லக்ஷ்மணன் இறந்த பின் அவனது கவிதைகளை தொகுத்து புத்தகமாக போடும் முயற்சியில் நண்பர்கள் இறங்கினோம். ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்தோம். நான் புத்தகதிற்கான முன்னுரை, அட்டை படம் போன்றவை பிரபல எழுத்தாளர்/ ஓவியர்களிடம் வாங்கும் வேலையில் இருந்தேன்.

முன்னுரைக்கு கல்யாண்ஜியை அணுகி இருந்தோம். அவரும் எழுதி தந்திருந்தார். இந்நிலையில் சுஜாதா இருக்கும் அதே flat-ல் இருந்த வெங்கடேஷ் என்ற எனது Colleague, அவரிடம் நாங்கள் நண்பன் இறந்த பிறகு அவனது கவிதைகளை தொகுத்து வெளியிடுவது பற்றி கூறியிருக்கிறார். சுஜாதா மிக ஆர்வமாகி "அந்த கவிதைகளை வாங்கி வாருங்கள்; படிக்கணும்" என கூறியிருக்கிறார். வெங்கடேஷ் மூலம் லக்ஷ்மணன் கவிதைகள் சுஜாதாவை அடைந்தன. சுஜாதா சும்மா படிக்க தான் கேட்கிறார் என நினைத்திருக்க, அவரோ அற்புதமாக இரு பக்கம் கவிதைகள் பற்றி எழுதி அனுப்பி விட்டார். ஒரு பக்கம் அதை படித்து மகிழ்ச்சி. மறு பக்கம் கல்யாண்ஜியிடம் வேறு வாங்கி உள்ளோமே என குழப்பம். கல்யாண்ஜி தந்ததை முன்னுரையாக போட்டு விட்டு சுஜாதா தந்ததை கடைசியில் வெளியிட்டோம்.

புத்தகத்தை நேரில் தந்து நன்றி சொல்ல சுஜாதா இல்லம் சென்றேன். சுஜாதாவை நேரில் சந்தித்து பேசியது ஒரே முறை அது தான். புத்தகம் வாங்கி கொண்டு, " இந்த வார குங்குமத்தில் லக்ஷ்மணன் கவிதைகள் பத்தி எழுதிருக்கேன்; படிங்க" என்றார். " சரி" என்றேன். சட்ட கல்லூரியில் படிக்கும் போது அவரிடிமிருந்து வந்த கடிதம், அவர் மீதான எனது பிரேமை எதுவும் சொல்ல தோன்ற வில்லை. இதற்கு முன் பால குமாரனை பார்த்து மனம் நொந்த பிறகு பிடித்த எழுத்தாளரை நேரில் பார்த்து பேச கூடாது என்ற எண்ணம் அதிகமாகி இருந்தது . என்றாலும் எதுவும் எதிர் பார்க்காமல் அவர் தந்த முன்னுரைக்கு நேரில் நன்றி சொல்வதே மரியாதை என்பதால் சென்றிருந்தேன்

எங்களுக்குள் பேசி கொள்ள ஏதுமில்லாதது போல் இருந்தது அந்த சில நிமிடங்கள்...உடன் கிளம்பி வந்து விட்டேன்.

சுஜாதா இறந்த போது இரு நாட்கள் திரும்ப திரும்ப மனதில் பல நினைவுகள். அவர் இல்லம் மாறி விட்டதா என தெரிய வில்லை. அவர் இறந்த நிலையில் அவரை சென்று பார்க்க மனம் விரும்ப வில்லை.
அந்த பிம்பம் என் மனதில் பதிய மனம் ஒப்பு கொள்ள வில்லை. சுஜாதா,  சுஜாதாவாகவே என்னுள் இருக்கட்டும் !   

**********
ப்ளாகில் எத்தனையோ புத்தக விமர்சனங்கள் எழுதுகிறேன். புத்தக விமர்சனம் என்றாலே ஹிட்ஸ் மிக குறைவு தான். ஆனால் சுஜாதா எப்போதோ எழுதிய நாவல்கள் குறித்து, புத்தக விமர்சனம் சமீப காலமாக எழுதுகிறேனே .. அதற்கு புது சினிமா விமர்சனத்துக்கு வாசிக்கிற மாதிரி ஏராளமான மக்கள் வாசிக்கிறார்கள் !

சுஜாதா குறித்த இப்பதிவும் மிக அதிகம் பேரால் வாசிக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதில் எனக்கு எந்த பெருமையும் இல்லை. பதிவின் உள்ளே வருவோர், வாசிப்போர் அனைவரும் சுஜாதா என்கிற மந்திர சொல்லுக்காக தான் வருகிறார்கள் !
**********
எத்தனையோ பேருக்கு ரோல் மாடலாக இருந்தவர் சுஜாதா !.. எனக்கு தெரிந்து இவருக்கு இருந்த அளவு ரசிகர்கள், வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும்  இதுவரை இருந்ததில்லை. இனி இருக்க போவதும் இல்லை  .

தமிழின் மீது எத்தனையோ பேருக்கு ஆர்வம் வர காரணமாக இருந்தது சுஜாதாவின் எழுத்துக்கள்!

தமிழ் இலக்கிய உலகம் என்றென்றும் சுஜாதாவை நினைவு கொள்ளும் !

Monday, February 20, 2012

சுஜாதாவின் விரும்பி சொன்ன பொய்கள்

விரும்பி சொன்ன பொய்கள் - என்ன அழகான தலைப்பு ! பொய்மையும் வாய்மையிடத்த என்கிற மாதிரி இருக்கிறது இந்த தலைப்பு. சுஜாதாவின் க்ரைம் த்ரில்லர் இந்த நாவல்.

கதை

ராதாகிருஷ்ணன் என்பவன் மதுரைக்கு வரும் தன் முதலாளி மனைவியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருக்கிறான். சுருக்கமாக அவன் பிளாஸ் பேக் விரிகிறது. இதற்கு முன் சர்க்கஸில் வேலை பார்த்து தான் காதலித்த பெண் மீது வேண்டுமென்றே அம்பு எய்து காயப்படுத்தியதால் ஜெயிலுக்கு போய் திரும்பியவன். அவனது பழைய கதை தெரிந்து யாரும் வேலை தராத போது இந்த நிறுவனத்தில் தான் வேலை கிடைக்கிறது.

"மதுரை வரும் தன் மனைவியை பார்த்து கொள்" என சொல்கிறார் முதலாளி. வரும் மனைவியோ புயல் மாதிரி இருக்கிறாள். அலை பாயும் மனம் கொண்ட அவளின் செயல்கள் புதிராய் இருக்கின்றன. அவள் செல்லும் இடமெல்லாம் கூட செல்ல வேண்டும் என்ற பாஸின் கட்டளையால் அப்படியே செய்கிறான் ராதாகிருஷ்ணன். ஒரு இரவில் தனிமையான பீச்சில் இருவருக்கும் உறவும் நடக்கிறது. இதன் பின் மறு நாள் அவள் சென்னை சென்று விடுகிறாள். ராதா கிருஷ்ணனோ அவள் நினைவாக பித்து பிடித்து அலைகிறான்

அவளை காண சென்னை செல்கிறான். சந்திக்கவும் செய்கிறான். சந்தித்த அன்று இரவே அவள் இறக்கிறாள். அது தற்கொலையா கொலையா என ஆராயும் போலிஸ் சொல்லும் கதை ராதா கிருஷ்ணனை மட்டுமல்ல நம்மையும் தூக்கி வாரி போடுகிறது.

ராதா கிருஷ்ணனை வந்து சந்தித்தது வேறு பெண். அவர் முதலாளி மனைவி அல்ல. ராதா கிருஷ்ணனின் past-ஐ வைத்து அவனை இந்த வலையில் விழ வைப்பதுடன் கொலை பழியும் வருகிற மாதிரி செய்தது அந்த முதலாளி தான் என்கிற ரீதியில் கேள்வி குறி மட்டும் எழுப்பி கதையை நிறைவு செய்கிறார்.

***
முடிவில் இறந்த பெண் அவர் மனைவி தானா இல்லையா? இந்த கேள்விக்கு ஆம் என்பதா இல்லை என்பதா என்று கேட்டு விட்டு, அதனை வாசகர்களே நீங்களே சொல்லுங்கள் என முடிக்கும் போது நமக்கு ஏமாற்றம் ஆகி விடுவது நிஜம்.

சர்க்கஸ் வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமாக முதல் சில பக்கங்களில் சொல்கிறார். ராதா கிருஷ்ணனின் ஜெயில் வாழ்க்கை பற்றி நீண்டு செல்லும் ஒரே வரியில் வலியை நமக்கு உணர வைப்பது டிபிகல் சுஜாதா !

கதையில் வரும் பாத்திரங்கள் பலவும் " கல்யாணம் பண்ணிக்காதே " என்கிறார்கள். (அவ்வப்போது சுஜாதாவின் பாத்திரங்கள் பிற கதைகளிலும் இந்த வரியை சொல்வதுண்டு")

சிவகங்கை அருகில் இரவு சென்று தங்கினார்கள் என கூறிவிட்டு பீச் சென்று குளிப்பதாக சொல்வது இடிக்கிறது. சிவகங்கை அருகே எங்கே பீச்?

முன்னுரையில் சுஜாதாவே " வாசகரிடம் முடிவை ஊகிக்க சொல்வது எனக்கு மிக பிடித்த உத்தி" என்கிறார்.ஆனால் இந்த கதையில் முடிவு தெரியாமல் நமக்கு சற்று என்னவோ போல் தான் உள்ளது !

விரும்பி சொன்ன பொய்கள் : Diehard Sujatha fans-க்கு மட்டும் பிடிக்கும்!

திண்ணை பிப்ரவரி 12, 2012  இதழில் வெளியான கட்டுரை

Tuesday, February 14, 2012

சுஜாதாவின் "சிவந்த கைகள்": அலுவலக பாலிடிக்ஸ் குறித்த நாவல்

ஒரு நிறுவனம்.அதன் அரசியல், பதவி உயர்வுக்கான போட்டி இவற்றை பின்புலமாக கொண்ட நாவல். செம விறுவிறுப்பான எழுத்து. படிக்க ஆரம்பித்த பின் இருந்த வேலைகளை ஒத்தி போட்டு விட்டு முடித்து விட்டு தான் மறு வேலை பார்த்தேன்

கதை

விக்ரம் என்கிற இளைஞன் இந்தியாவின் பெரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறான். சேரும் முதல் நாளே " என்றாவது ஒரு நாள் எம். டி சீட்டை பிடிக்க வேண்டும்" என்கிற அளவு வேகம் உள்ளவன். எம். பி. ஏ படிப்பிருந்தால் தான் அந்த வேலை கிடைக்கும் என்பதால் பொய் சர்டிபிகேட் தயாரித்து தந்தான் என்பது அவன் மனதை உறுத்தியவாறே இருக்கிறது.

அவனது பாஸான அசோக் - எம். டி. க்கு மிக பிரியமானவன். அசோக் அடுத்த டைரக்டர் ஆக போகிறவன் என்கிறார்கள். விக்ரம், அசோக் இருவரும் எம். டி. மகளுடன் நெருக்கமாக பழகுகிறார்கள். அசோக்கை டைரக்டர் ஆக அறிவிக்கும் முன் ஹார்ட் அட்டக் வந்து உடல்நிலை பாதிக்கப்பட, டைரக்டர் ஆகும் வாய்ப்பு விக்ரமுக்கு வருகிறது. " ஆறு மாதம் observe-செய்து விட்டு அதன் பின் டைரக்டர் ஆக்குகிறேன்" என்கிறார் எம்.டி!


அந்த ஆறு மாதத்தில் பேய் மாதிரி உழைத்து நல்ல பேர் வாங்குகிறான். ஆனால் அவன் எதற்கு பயந்தானோ அது நடந்து விடுகிறது. அலுவலகத்தில் உள்ள ஒரு வயதானவர் விக்ரம் டிகிரி பொய் என்பதை கண்டு பிடிக்கிறார். அவன் எவ்வளவோ பேசி பார்த்தும் அவர் எம்.டி இடம் சொல்வேன் என மறுபடி மறுபடி சொல்ல, ஒரு sudden provocation-ல் அவரை கொன்று விடுகிறான் விக்ரம். அதற்கு பிராயச்சித்தமாக அவர் மகளுக்கு அதே நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறான்.

என்னடா கதை சம்பிராதயமாக முடிகிறதே, அதுவும் தப்பு செய்தவன் எந்த தண்டனையும் இன்றி தப்பிக்கிறானே என நினைக்கும் போது கடைசி பக்கத்தில் சின்ன டுவிஸ்ட் வைத்து வழக்கம் போல ஒரு கேள்வி குறியுடன் முடிக்கிறார் சுஜாதா.

இதன் முடிவு பலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்க கடிதம் மேல் கடிதமாக சுஜாதாவிற்கும், நாவலை வெளியிட்ட மணியனுக்கும் எழுதித் தீர்த்தனர். எனவே ரசிகர்களின் ரசனைகேற்ப்ப இதன் இரண்டாம் பாகமாக "கலைந்த பொய்கள்" என்னும் நாவலை மணியன் மாத இதழில் எழுதினார். இதில் கதாநாயகி தந்தையைக் கொன்ற கதாநாயகனை பழிவாங்குவதாக கதையை அமைத்திருந்தார் சுஜாதா ! (தகவலுக்கு நன்றி: வாசகன் ).

***

அலுவலக அரசியல் வைத்து இத்தனை சுவாரஸ்ய கதை நிச்சயம் நான் வாசித்ததில்லை. விக்ரம் அந்த கொலை செய்யும் வரை நாம் எம்.பி ஏ என்கிற பொய்க்காக மாட்ட கூடாது என்று தான் நினைக்கிறோம். ஆனால் அந்த கொலை செய்த பின் நம் கோபம் அவன் மேல் திரும்பி விடுகிறது.

கதையின் துவக்க அத்தியாயங்களை சுஜாதா ஏனோ சிறு வாக்கியங்களிலேயே எழுதி உள்ளார். சில வாக்கியங்களில் இரண்டே வார்த்தைகள். சில நேரம் ஒரே வார்த்தை. ஆனால் இது மிக சுவாரஸ்யமாக உள்ளது.

பொய் சொல்வதற்கு சில விதிகள் என்று சொல்லி விட்டு இப்படி சொல்கிறார் சுஜாதா:

1. சின்ன விஷயங்களுக்கு பொய் சொல்லாதே.
2. குறிக்கோள் மிக முக்கியமானதாக இருந்தால் தான் பொய் சொல்ல வேண்டும்.
3. எவரும் எதிர் பாராத நேரத்தில் பொய் சொல்லு.
4. யோக்கியமாக பொய் சொல். அண்ட புளுகு புளுகாதே. நம்பும் படியாக இருத்தல் வேண்டும் உன் பொய்.

அதிசயமாய் கதையில் சில ஓட்டைகள். குறிப்பாய் விக்ரமுக்கு கார் ஓட்ட தெரியாது என்று சொல்லி விட்டு அடுத்த அத்தியாயத்தில் அவன் தனியே கார் ஓட்டி (அதுவும் ஐந்து மணி நேரம் தள்ளி உள்ள ஊருக்கு) சென்றான் என்று சொல்வது நெருடல்.

இந்த நாவல் ஒரு மாத நாவலாக மணியன் புத்தகத்தில் வந்தது என்பது ஆச்சரியம் தரும் செய்தி. இத்தனை குவாலிட்டி ஆன நாவல் மாத நாவலாக வந்துள்ளதா!! வழக்கமாய் மாத நாவல் எழுதுவோர் இந்த நாவலில் பாதி குவாலிட்டிக்கு எழுதினாலே போதும் !

விறுவிறுப்பு, நகைச்சுவை, மெசேஜ் என எல்லாம் கலந்த இந்த சுஜாதா
ஸ்டெயில் கதையை அவசியம் வாசியுங்கள் !

நாவல் பெயர்: சிவந்த கைகள்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 60

நன்றி: பதிவர் ரகு

திண்ணை பிப்ரவரி 5, 2012 தேதியிட்ட இதழில் வெளியானது

Monday, February 6, 2012

எழுத்தாளர் சுஜாதாவின் "ஆஸ்டின் இல்லம்"


"ஆஸ்டின் இல்லம்" சுஜாதாவின் குறுநாவல். பொதுவாய் சுஜாதா கதைகளில் மெசேஜ் இருக்காது என்பார்கள். அதில் பாதி உண்மை. பாதி பொய். சுஜாதா மெசேஜ் சொல்ல வேண்டும் என வலிந்து முனைவதில்லை. சில கதைகளில் நல்லதோர் மெசேஜ் இயல்பாய் இருக்கும். ஆஸ்டின் இல்லம் அப்படி இயல்பாய் மெசேஜ் அமைய பெற்ற கதை.


ஆஸ்டின் இல்லம் என்கிற பெயர் கொண்ட வீட்டில் ஒரு பெரிய கூட்டு குடும்பம் ஒன்றாக வசிக்கிறது. அந்த வீட்டின் ஓனர் " பெரியப்பா". அவரது சொந்தங்கள் பலவும் அந்த வீட்டிலும் அந்த சிறு தெருவிலும் (தெருவின் பல வீடுகளுக்கு பெரியப்பா தான் ஓனர் !) வசிக்கிறார்கள்.

ஆஸ்டின் இல்லத்தில் உள்ள முகுந்தன் என்பவருக்கு இரு மகன்கள். முதல் மகன் நிகில் அமெரிக்கா செல்ல ஆயத்தமாக இருக்கிறான்.
இவன் மணமுடிக்க ஒரு பெண் பார்த்து வைத்துள்ளனர். அடுத்த மகன் நந்து தான் கதையின் மைய இழை. பல திறமைகள் கொண்ட இந்த சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லை என டாக்டரிடம் செல்கிறார்கள். அவர் இவனை பல டெஸ்டுகளுக்கு உட்படுத்தி விட்டு அவனுக்கு எலும்பு சார்ந்த பெரிய நோய் வந்திருப்பதாகவும், இன்னும் சில வருடங்கள் தான் உயிரோடு இருப்பான் என்றும் கூறுகிறார்.

நந்துவின் தந்தையும், தாயும் மனம் உடைகிறார்கள். இன்னொரு மகனோ இவ்வளவு குழப்பம் இடையேயும் தான் அமெரிக்கா சென்றே ஆகணும் என போய் விடுகிறான்.

பெரியப்பாவின் பழைய கதை ஒன்று தெரிய வருகிறது. இந்த இடமே பெரியப்பா வேறு ஒரு ஆளை ஏமாற்றி வாங்கியதாகவும், பின் அவர் மனைவியை இவர் "சின்ன வீடாக" வைத்து கொண்டதாகவும் செய்திகள். இந்த பாவத்தால் தான் இப்படி நடக்கிறது என்றும் வீட்டை விட்டு போக வேண்டும் என்றும் நினைக்கிறார்கள் நந்துவின் பெற்றோர். அனைவரும்
இது பற்றி கேள்வி கேட்பதால் வயதான பெரியப்பா மனமுடைந்து இறக்கிறார்.

கதையின் கடைசி பக்கத்தில் நந்துவிற்கு அந்த நோய் வந்ததற்கான காரணத்தை சொல்கிறார் டாக்டர். " சொத்து கை மாறிட கூடாதுன்னு சொந்ததுக்குள்ளேயே தொடர்ந்து கல்யாணம் பண்ணது தான் இந்த நோய் வர காரணம்; நீங்க நினைக்கிற மாதிரி பாவம், புண்ணியம் ஒண்ணும் கிடையாது " என டாக்டர் சொல்வதுடன் கதை முடிகிறது.

கதையின் முதல் அத்தியாயத்தில், அந்த குடும்பத்தில் இருந்து ஏராளமான பாத்திரங்கள் அறிமுகம் ஆகும் போது நமக்கே சற்று குழப்பமாக உள்ளது. ஆனால் போக போக கதை மீது நாட்டம் வந்து பாத்திரங்கள் அதிக முக்கிய துவம் இன்றி ஆகி விடுகிறார்கள்.

வெளிநாடு போகணும் என நிற்கும் அந்த அண்ணன் , மற்றும் அவனுடன் ஈஷி கொண்டே இருக்கும் அவன் வருங்கால மனைவி ..இரண்டும் நம்மை கோபப்பட வைக்கும் பாத்திரங்கள். சுஜாதா இவர்கள் மட்டுமல்ல மனிதர்கள் அனைவரும் "selfish " தான் என போகிற போக்கில் சொல்லி போகிறார்.

பெரியப்பா பாத்திரம் மிக புதிரானது. ஆஸ்டின் இல்லத்தின் நிஜ ஓனரை பெரியப்பா கொலை கூட செய்திருக்கலாம் என பேசிக்கொள்கிறார்கள். அவ்வளவு விலை உள்ள சொத்தை ஏன் ஆயிரம் ரூபாய்க்கு அவர் விற்க வேண்டும் என கேட்கும் போது பெரியப்பா சரியான பதில் சொல்லாமல் நழுவுகிறார்.

சுஜாதா அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் தான்: " எந்த பெரிய சொத்துக்கு பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது“

ஆஸ்டின் இல்லம் "Must read " என்று சொல்ல மாட்டேன். ஆனால் சுஜாதாவின் தீவிர ரசிகர்கள் நிச்சயம் வாசிக்கலாம்

புத்தகம் பெயர்: ஆஸ்டின் இல்லம்
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் 
விலை: ரூபாய் 30

திண்ணை 29 ஜனவரி 2012 தேதியிட்ட இதழில் வெளியானது

Saturday, January 28, 2012

சுஜாதாவின் விபரீதக் கோட்பாடு

சில நேரங்களில் நாவல்களின் தலைப்புக்கும் கதைக்கும் உள்ள தொடர்பை மூளையை கசக்கி கொண்டு தேட வேண்டும். ஆனால் இந்த நாவலுக்கு இதை விட அருமையான தலைப்பு இருக்க முடியாது.

கணேஷ்- வசந்த் நாவல்கள் பெரும்பாலும் கதாசிரியர் சொல்லும் பாணியில் தான் எழுத பட்டிருக்கும். அரிதாக இந்த நாவல் கணேஷ் பார்வையில் (நான் என்று துவங்கி கதை சொல்வதாக) அமைந்துள்ளது


கணேஷை சந்திக்க வரும் ஒரு இளைஞன், காணாமல் போன தன் மனைவியை கண்டுபிடித்து அவளிடமிருந்து டைவர்ஸ் வாங்கி தர சொல்கிறான். அவர்கள் இருந்த வீட்டுக்கு கணேஷ் சென்று பார்வையிட சில தடயங்கள் கிடைக்கிறது. அதனை தொடர்ந்து அவள் ஊட்டியில் இருக்கிறாள் என தெரிந்து அவளுடன் கணேஷ் போனில் பேசுகிறான். பின் நேரில் சந்திக்க செல்ல, அவள் அதற்குள் கொலை செய்ய படுகிறாள். அந்த கொலையை செய்தது யார் என கணேஷ்- வசந்த் கண்டு பிடிப்பது தான் கதை.

நாவலை எடுத்தால் கீழே வைக்காமல் ஒரு மணி நேரத்தில் படித்து முடித்து விடலாம். அவ்வளவு விறுவிறுப்பு. நமக்கு யார் மீது சந்தேகம் உள்ளதோ அது சரியாகவே உள்ளது. ஆனால் அவள் வீட்டை விட்டு ஓடியதும், கொலைக்கான காரணங்களும் தான் நாம் நினைக்க முடியாத படி இருக்கும்.

பெண்களை வசந்த் பார்வையில் வர்ணிக்கும் சுஜாதா ஸ்டெயில் அப்படியே !! உதாரணமாய் " அவள் ஆண்பிள்ளை மாதிரி பனியன் அணிந்திருந்தாலும், பெண் என்பதற்கான அடையாளங்கள் நிறையவே தெரிந்தன.. நிறையவே" ஆண்கள் பலரும் இதனை வாசித்து சிரிப்பார்கள் என்றாலும் பெண்கள் இதனை வாசிக்கும் போது என்ன நினைப்பார்கள் என தெரியலை.

கல்யாணம் செய்து கொள்ளவே மாட்டேன் என இருப்பவனிடம் எதோ ஒரு தவறு உண்டு என அவ்வப்போது சொல்வார் சுஜாதா ! இந்த கதையிலும் அக்கருத்து அடி நாதமாக தெரிகிறது.


பெண்ணை வசியபடுத்தி படமெடுக்கும் விஷயத்தை அவர் எழுபதுகளின் துவக்கத்தில் எழுதியது ஆச்சரியமாக உள்ளது. பின்னாளில் ப்ரேமானந்தாக்களும், நித்யானந்தாக்களும் அடித்த லூட்டியை பல வருடங்களுக்கு முன்பே எழுதி விட்டார் வாத்தியார் !

ஒரு சுவாரஸ்யமான திரில்லர் கதையை சுஜாதா நடையில் கணேஷ்- வசந்த் என்கிற சுவாரஸ்யத்துடன் வாசிக்க விருப்பம் எனில் இந்த புத்தகத்தை நீங்கள் நாடலாம்.

நாவல்: விபரீத கோட்பாடு
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 60

டிஸ்கி: நாவலை வாசித்துவிட்டு எனக்கு பார்சல் செய்த நண்பர் ரகுவிற்கு நன்றி !

Monday, January 23, 2012

சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்

அழகான மனைவி அமைய பெறுவது வரமா அல்லது சாபமா? துவக்கத்தில் வரம் போல் தோன்றினாலும் பின்னாளில் சாபமாகும் வாய்ப்பும் நிறையவே உண்டு. சுஜாதாவின் "ஏறக்குறைய சொர்க்கம்" சொல்ல வருவது இதனை தான் 

குமுதம் பத்திரிக்கையில் தொடர் கதையாக வெளி வந்த போது, வாரா வாரம் கத்தரித்து பைன்ட் செய்து, யாரோ வாசித்ததை பழைய புத்தக கடையிலிருந்து கிடைக்க பெற்றேன்.

கதை 


ராம்சந்தர் என்கிற 27 இளைஞனின் பார்வையில் கதை சொல்ல படுகிறது. காமாட்சி (காமு) என்கிற பெண்ணை, பெண் பார்த்து திருமணம் செய்கிறான். திருமணமான அன்றே ராமின் தாயார் மரணமடைகிறார். "பெண் ராசி அற்றவள் " என பலரும் சொல்ல, அதையெல்லாம் காதில் வாங்காமல் அவள் அழகில் மயங்கி கிடக்கிறான் ராம். வங்கியில் பணி செய்யும் ராமின் நண்பன் சந்துரு, ராமின் மேனஜர் என பலருக்கும் காமுவின் மீது ஒரு கண். " உங்க நண்பன் சந்துரு என்னிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சித்தார்" என்கிறாள் காமு. சந்துருவை பார்க்க போனால், அவன் " உன் மனைவி நடத்தை சரியில்லை. என்னிடம் தப்பா நடந்து கொள்ள பார்த்தாள்" என்கிறான். சந்துரு சொன்ன வேறு சில விஷயங்கள் சரியாக இருக்க அவனை திட்டாமல் திரும்புகிறான் ராம்.

ராமின் மேனஜர் மூலம் ஒரு சினிமா டைரக்டர் காமுவை வந்து பார்த்து விட்டு காமுவை தன் படத்தில் நடிக்க சொல்லி அழைக்கிறார். ராம் இதை மறுக்கிறான்.

காமுவின் நடவடிக்கைகள் ராமுக்கு தொடர்ந்து சந்தேகம் தர, வேலைக்கு செல்லாமல் அவளை உளவு பார்த்து கொண்டு திரிகிறான். கர்ப்பமாகும் காமுவை அபார்ஷன் செய்ய சொல்லி விடுகிறான். இதன் பின் தன் வீட்டுக்கு போகும் காமு திரும்பவே இல்லை. நீண்ட நாள் அலைந்து காமு அவள் சித்தப்பா மூலம் சென்னை சென்று நடிகை ஆகி விட்டதை அறிகிறான். இந்நிலையில் அவன் வேலையும் இழந்து இருக்க, "எந்த தொந்தரவும் தராமல் வீட்டில் இருந்தால், உன்னை இங்கு இருக்க அனுமதிக்கிறோம்" என்கிறார்கள் சித்தப்பாவும், காமுவும். தினம் தண்ணி அடித்து கொண்டு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி ஒரு நடிகையின் கணவன் வேலையை பார்க்க துவங்குகிறான் ராம். இந்த வாழ்க்கையை பொறுத்து கொண்டால் "ஏறக்குறைய சொர்க்கம்" என ராம் சொல்வதுடன் கதை முடிகிறது

எண்பதுகளின் துவக்கத்தில் எழுதப்பட்ட நாவல் இது. ஒவ்வொரு வாரம் முடிக்கும் போதும் ஒவ்வொரு சஸ்பென்ஸ் உடன் முடிக்க, வாசகர்கள் நிச்சயம் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்கிற ஆவலுடன் இருந்திருப்பார்கள்.

கதை முழுக்க முழுக்க காமு என்கிற அழகிய பெண்ணை சுற்றியே சென்றாலும் கூட, அவள் அழகை பற்றி தான் பேசுகிறதே ஒழிய, அவள் உணர்வுகள் அல்லது அவள் என்ன நினைக்கிறாள் என்பதை எங்குமே சொல்ல வர வில்லை. சொல்ல போனால் இது தான் கதையின் மிக பெரிய புதிரே.

ராம் தன் மனைவி மேல் சந்தேகப்படும் போது நாம் எந்த நிலை எடுப்பது என தடுமாறுகிறோம். ராமுக்கு உள்ளது சந்தேகம் என்கிற நோயா அல்லது அவன் சந்தேகப்படுவதில் உண்மை இருக்குமோ என்று குழம்புகிறோம். சுஜாதா விரும்பவதும் இதையே என்று தோன்றுகிறது.

இறுதி பகுதியில் சந்துரு இப்படி சொல்கிறான்.

" யோசிச்சு பார்த்தன்னா உலகத்தில் எல்லா செயல்களும் தனிப்பட்டது; உலகத்தில் எத்தனையோ தெரிஞ்சும் தெரியாமலும் பாதங்கங்கள் நடக்குது. அது ஒவ்வொன்னையும் நம்மை பாதிக்க விட்டா நம்மால உயிர் வாழவே முடியாது".

உலகத்தில் நடக்கிற எல்லாம் உனக்கு தெரிந்தா நடக்கிறது? அதுக்கெல்லாம் கவலை பட முடியுமா என அறிவுரை சொல்கிறான் நண்பன். கடைசியில் ராம் அந்த வாழ்க்கைக்கு ஒப்பு கொள்வதும் இதன் அடிப்படையில் தான்.

இந்த நாவலை 90-களில் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். இப்போது நினைத்தாலும், ஏறக்குறைய சொர்க்கம் என்றதும் உடனே நினைவுக்கு வருவது "அழகான மனைவி- நடிகையாகும் கதை" என்பது தான்.

சுஜாதாவின் பெஸ்ட் என்று சொல்ல முடியா விட்டாலும் சுஜாதா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் இந்த நாவலை.

திண்ணை டிசம்பர் 18 இதழில் வெளியான கட்டுரை

Friday, December 9, 2011

எழுத்தாளர் சுஜாதாவின் சொர்க்கத்தீவு

சொர்க்க தீவு என்கிற சுஜாதா நாவல் சமீபத்தில் (மீண்டும்) வாசித்தேன். சுஜாதாவின் எழுத்துக்கள் என்றும் இளமையானவை. சொர்க்க தீவும் இதே விதம் தான்.

கதை


அய்யங்கார் என்கிற சென்னையை சேர்ந்த கணினி இஞ்சினீயர் சில நபர்களால் நைச்சியமாக பேசி, தனி விமானத்தில் கடத்தப்படுகிறார். அவரை கடத்தி, வெளி உலகத்துக்கு தெரியாத ஒரு தனி நாட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். அந்த நாட்டை நிர்வகிக்கும் சத்யா என்கிற நபரை அவர் சந்திக்கிறார். அவர் தங்கள் கணினி வேலை செய்ய வில்லை என்றும் அதை சரி செய்யவே அவரை அழைத்து வந்ததாகவும் சொல்கிறார். அய்யங்காருக்கு தன்னை கடத்தி வந்ததில் கோபம் இருந்தாலும் தனக்கு நன்கு தெரிந்த கணினி சரி செய்யும் வேலை என்பதாலும் தப்பி செல்ல வேறு வழி இல்லாததாலும் ஒப்பு கொள்கிறார்.

அந்த நாட்டில் பல விஷயங்கள் விநோதமாக உள்ளன. அவர்கள் தமிழ் பேசுகிறார்கள் எனினும் பல வார்த்தைகளுக்கு அவர்களுக்கு அர்த்தம் புரிய வில்லை. உதாரணமாய் செக்ஸ், அப்பா, அம்மா போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு தெரியவில்லை !

ஒரு நாள் அய்யங்கார் தங்கிய அறைக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஒரு குரல் "அவர்கள் சொல்வதை செய்யாதே" என கூறுகிறது. அப்படி பேசிய நபரை ஒரு நாள் பீச்சில் இரவில் சந்திக்கிறார் அய்யங்கார். கெளதம் என்னும் அந்த நபர் "சத்யா அனைவருக்கும் மருந்து கொடுத்து உணர்வுகளை மறக்கடிப்பதாகவும், தனக்கு குடுக்கும் மருந்தில் தவறிருந்ததால் தன் உணர்வுகள் விழித்து கொண்டன என்றும் சொல்கிறார். மேலும் இயற்கைக்கு மாறாக இவர்கள் செய்வது தவறு என்றும் அய்யங்கார் கணினியை ரிப்பேர் செய்து விட்டால், மனிதர்கள் விழித்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் இப்படி சில நபர்கள் இருப்பது சத்யாவிற்கு தெரிய வர அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். அய்யங்கார் கணினியை சரி செய்து விட்டு சென்னை கிளம்புகிறார். விமானத்தில் இருக்கும் போது கடைசியாக கதை வாசிக்கும் நமக்கு மட்டும் இப்படி சொல்கிறார்

"நான் கணினியில் ஒரு லேபிளை மாற்றி விட்டேன். அதனால் அனைத்து மக்களுக்கும் கொடுக்கிற மருந்து அடுத்த ஒரு மாதம் வேலை செய்யாது. அனைவரும் விழித்து கொள்வார்கள்" என்று!

வழக்கமான சுஜாதா கதை போல், அந்த விழிப்புணர்வு நிச்சயம் நடக்குமா, சத்யா அதை கண்டுபிடித்து சரி செய்துவிடுவாரா என்கிற யோசனையுடனும், கேள்விகளுடனும் கதையை முடிக்கிறோம் நாம்.
********
கதை எழுதப்பட்ட வருடம் 1971 ! இதை படிக்கும் மனிதர்களில் பலரும் அப்போது பிறந்திருக்க கூட மாட்டார்கள் ! அப்போதே கணினி பற்றி இவ்வளவு விரிவாகவும், கணினி ஆட்சி செய்ய போகிறது என்றும் எழுதி உள்ளார் சுஜாதா !

புத்தகத்தை கையில் எடுத்தால் அடுத்த ஓரிரு மணி நேரம் நம் அனைத்து கவலைகளையும் மறந்து விட்டு வாசித்து முடித்து விட்டு தான் கீழே வைக்கும் விதத்தில் எழுத பட்டுள்ளது.

சுஜாதா எல்லா புத்தகத்திலும் முன்னுரை அல்லது விளக்கம் தருபவரில்லை. ஆனால் முன்னுரையில் , புத்தகம் வெளி வந்த போது பலரும் ஆங்கில நாவல்களில் இருந்து எடுக்க பட்டதாக சொன்னதாகவும், அது எப்படி உண்மை இல்லை என்றும் சொல்கிறார். மேலும் தான் எழுதிய முதல் சயின்ஸ் பிக்ஷன் கதை இது தான் என்கிறார்.

அய்யங்கார் என்கிற கணினி இஞ்சினியர் பாத்திரத்துக்கு நான் சுஜாதாவை தான் கற்பனை செய்து கொண்டேன். இப்படி நினைக்க ரொம்ப வேடிக்கையாக இருந்தது.

நாவலில் சில சுவாரஸ்யங்கள்:

அந்த நாட்டில் வாழும் எல்லோருக்கும் இரு எழுத்து பெயர்கள் தான். சத்யா என்கிற தலைவருக்கு மட்டுமே மூன்றெழுத்து பெயர். இவர்களை எதிர்க்கும் புரட்சி காரர்கள் முதலில் செய்வது தங்கள் பெயரை நான்கெழுத்தாக மாற்றி கொள்வது தான் ! எதிர்ப்பை காட்ட ஒரு குறியீடு !

பிறப்பு, இறப்பு இரண்டையுமே அங்கு கண்ட்ரோல் செய்கிறார்கள். இயல்பான செக்ஸ் கிடையாது. மனிதர்களின் உணர்வுகள் மழுங்கடிக்க படுவதால் அந்த ஆசை அவர்களுக்கு இல்லை. 54 வயதானால் மனிதர்களை கொன்று விடுகிறார்கள். (நமக்கும் தூக்கி வாரி போடும் இடம் இது !)

உள் வட்டம், வெளி வட்டம் என இரு பிரிவுகள் உண்டு. சத்யா மற்றும் அவரை சார்ந்தவர்கள் உள் வட்டம். இவர்கள் புகைக்கலாம். பெண்களுடன் உடலுறவு வைத்து கொள்ளலாம். (நம்ம ஊர் அரசியல் வாதிகள் வழக்கில் கைதாகும் வரை மற்ற எந்த சட்டங்களுக்கும் உட்படாமல் இருப்பார்களே அந்த மாதிரி !!) மற்ற மக்கள் எல்லாரும் வெளி வட்டம். உள் வட்ட ஆண்கள் பிற பெண்களை தங்களுக்கு வேண்டிய படி உபயோகிக்கிறார்கள். இது குறித்து எந்த உணர்வும் இன்றி அந்த பெண்கள் சம்மதிக்கிறார்கள் !

பல இடங்கள் சுஜாதா முத்திரையுடன் வாய் விட்டு சிரிக்கும்படி இருந்தது. ஆனால் அதை இங்கே சொன்னால் நன்றாக இராது . கதையுடன் சேர்த்து படிக்க தான் சுவாரஸ்யமே !

இந்த கதையை சிலர் சினிமாவாக எடுக்க விரும்பினர் என்று சுஜாதா சொன்ன நியாபகம் ! நல்ல வேளை படமாக வில்லை !

வாய்ப்பு கிடைத்தால் இந்த வித்தியாச கதையை வாசித்து பாருங்கள் !!

திண்ணை நவம்பர் 28 தேதியிட்ட இதழில் வெளியானது. 

Sunday, February 28, 2010

சுஜாதா அவார்ட்ஸ்- அறிமுக விழா

கவிஞர் மனுஷ்ய புத்திரன் சுஜாதா அவார்ட்ஸ் தர போவதாக அறிவித்துள்ளார். இதற்கான அறிமுக விழா நியூ வூட்லண்ட்ஸ் ஹோட்டலில் சுஜாதா நினைவு நாளான பிப்ரவரி 27, சனி கிழமை மாலை நடந்தது. பல வி. ஐ. பி கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு மினி தொகுப்பு இதோ:

மனுஷ்ய புத்திரன் வரவேற்று பேசினார். ஆறு பிரிவுகளில் சுஜாதா விருதுகள் தர போவதாக சொன்னார்: அவை:

சிறந்த சிறுகதை நூல்
சிறந்த கவிதை நூல்
சிறந்த கட்டுரை நூல்
சிறந்த ப்ளாக்
சிறந்த நாவல்
சிறந்த சிறு பத்திரிக்கை

மார்ச் 31, 2010 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மே மாதம் மூன்றாம் தேதி சுஜாதா பிறந்த நாள் அன்று விருதுகள் வழங்க படும் என்றும் சொன்னார். விருதுகள் ஒவ்வொன்றுக்கும் ரூ.10,000 பரிசு என்று சொன்னதாக நினைவு (தவறு எனில் பின்னூட்டத்தில் கூறுங்கள்)

அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். .. மனுஷ்ய புத்திரன் விருது, விழா, சாப்பாடு என நிரம்பவே செலவும் மெனக்கெடவும் செய்கிறார்!! பெரிய விஷயம் இது!!

பதிவர்கள் தங்கள் கவிதை தொகுப்பையும் ப்ளாக் பற்றிய தகவல்களையும் மார்ச் 31-க்குள் மனுஷ்ய புத்திரனுக்கு அனுப்பி வையுங்கள்..

இனி விழாவில் மற்றவர்கள் பேசியது குறித்து..

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் நடராசன்

"நான் வெளி நாடு சென்றிருந்த போது , அங்கிருந்த ஒரு புகழ் பெற்ற புத்தக கடையில் இருந்து என்ன புத்தகம் வாங்கலாம் என சுஜாதாவிற்கு தொலை பேசி மூலம் கேட்டேன்.சுஜாதா அங்கு மட்டும் கிடைக்கும் புத்தகத்தை சரியாக சொன்னார். அவற்றை வாங்கினேன். சுஜாதா குடும்பத்துடன் நான் நீண்ட கால நண்பன். சுஜாதா கிட்ட தட்ட எனது சகோதரர் போல.."


ராஜீவ் மேனன்:

"கண்டு கொண்டேன் படம் டிசம்பரில் வசனம் எழுத ஆரம்பித்தோம். காலை முழுதும் வசனம் எழுதிட்டு மாலை கர்நாடக சங்கீதம் கேட்போம். ஜனவரி மாதம் வந்ததும் சேப்பாக்கம் ஸ்டேடியம் போய் கிரிக்கெட் மேட்ச் பார்ப்போம்; பின் வசனம் எழுதுவோம்; இப்படி இயக்குனர்- வசன கர்த்தா என்றில்லாமல் ஒரு அப்பா- மகன் போல இருந்தோம்; இப்போது கூட நல்ல ராகம் கேட்கும் போது சுஜாதாவிடம் பகிர தோன்றுகிறது; சச்சின் 200 ரன் அடித்த போது சுஜாதாவிற்கு போன் செய்து பேச தோன்றுகிறது".

சந்திர சேகர் ( பெண்டா மீடியா இயக்குனர்)

"நான் கம்பெனி ஆரம்பித்த போது சுஜாதா அவசியம் அதில் இருக்க வேண்டும் என நினைத்தேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான விஷயங்களை மிக எளிதாக எழுத அவர் தான் சரியான நபர் என நினைத்தேன். எங்கள் அனைத்து அனிமேஷன் படங்களுக்கும் தமிழுக்கு மட்டுமல்ல ஆங்கிலத்துக்கும் அவர் தான் வசனம் எழுதினார். ஆங்கிலம் கூட மிக அற்புதமாக எழுதினார். நான் சினிமா, தியட்டேர் என ஆரம்பித்த போது வீட்டார் உட்பட யாரும் ஆதரிக்கலை; ஆனால் சுஜாதா மட்டும் இவ்ளோ பேர் எதிர்த்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என encourage செய்தார்"

திருமலை (சுஜாதாவின் தம்பி)

வெளி நாடுகளில் கூட பல எழுத்தாளர்கள் இருந்தாலும் சுஜாதா போல் சிறுகதை, நாவல், வசனம் என பல பிரிவுகளில் அசத்தியவர் யாரும் இருந்ததாக எனக்கு தெரியலை; அத்தோடு பல விதமாய் எழுதினால் ஆழமாய் எழுத முடியாது என்பார்கள்; ஆனால் சுஜாதா பல பிரிவுகளில் ஆழமாய் எழுதினார்; அப்படி பட்ட மனிதரை நம் மருத்துவர்களால் காப்பாற்ற முடியாதது எனக்கு வருத்தமே; குறைந்தது அந்த மூளையை எடுத்து preserve செய்திருக்க வேண்டும்!

நடிகர்/ இயக்குனர் பார்த்திபன்:

"பல பிரச்சனைகளை சுஜாதாவிடம் தான் அட்வைஸ் கேட்பேன்; கிறுக்கல்கள் புத்தகம் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பிரச்சனை ஆனபோது கூட பேச சுஜாதா இல்லையே என feel செய்தேன். இந்த விருதுகளுக்கு ஆகும் செலவில் மனுஷ்ய புத்திரனுக்கு தேவையான உதவிகள் (sponsor) செய்ய தயார்"

இயக்குனர் ஷங்கர் பேசும் போது தனது படங்களில் அவர் எழுதிய வசனங்களில் தனக்கு பிடித்த வசனங்களை ( அந்நியன், இந்தியன், சிவாஜி) பற்றி பேசினார். மேலும் ஸ்டோரி டிஸ்கஷனில் பல முறை எப்படி எடுத்து செல்வது என தடுமாறிய போது சுஜாதா எப்படி உதவினார்; எப்படி motivate செய்தார் என கூறினார். எந்திரனுக்கும் சுஜாதா வசனம் எழுதி தந்ததாகவும் அதிலிருந்து ஒரு காட்சியும் சொன்னார். ரஜினி வேலை வேலை என வீட்டை மறந்து இருப்பாராம். ரொம்ப நாள் கழித்து வீட்டுக்கு தாடியுடன் வர, அவர் அம்மா " என்னடா லீவில வந்த ரிஷி மாதிரி இருக்கே" என்பாராம் !

இயக்குனர் வசந்த் சுஜாதாவை தான் சந்தித்து பேச பல முறை முயன்று தோற்று, கடைசியில் பெங்களூரில் பார்த்து, ஒன்னரை மணி நேரம் பேசியதை நகைச்சுவையாக ஒரு சினிமா போல், சஸ்பென்ஸ் உடன் பேசினார்.

மதன் விழா இன்னும் பெரிய அளவில் நடத்தலாம் என்றும் மனுஷ்ய புத்திரன் மற்ற பிரபலங்களிடம் இதற்கான உதவிகள் கேட்டு பெறலாம் என்றார். ஜூனியர் விகடன் புத்தகத்தில் சுஜாதாவின் "ஏன் எதற்கு எப்படி" வர துவங்கிய கதையை பகிர்ந்து கொண்டார்.

மேலும் எழுத்தாளர் இந்திரா பார்த்த சாரதி, கவிஞர் ஞான கூத்தன் போன்றோரும் பேசினர்.

விழாவில் பார்த்த பதிவர்கள் :

டோண்டு ராகவன் (பெரிய சைஸ் நோட்டு வச்சி எழுதிட்டு இருந்தார்; இங்கு இல்லாத மற்ற தகவல் அங்கு நீங்கள் பாக்கலாம்)

கேபிள் (எப்படிய்யா சுஜாதாவை சீரியஸ் ரைட்டர் இல்லைன்னு சொல்லலாம் என என் சட்டையை பிடிச்சு உலுக்காத குறை தான்)

நரசிம் (நாலு நாள் தாடியில் தல வித்யாசமா இருந்தார்; கேட்டா Month end; வேலை அதிகம் என்றார்)

புது மாப்பிள்ளை அதிஷா மற்றும் லக்கி

பைத்திய காரன் (மிக சீரியஸா கவனிச்சார்)

சங்கர் (நானும் இவரும் விழா முடிந்து திரும்ப வர, வண்டி பங்கசர்; இனிமே என்னை வண்டியில் ஏத்துவார்ங்குறீங்க ?)

டம்பி மேவி (ரொம்ப சீக்கிரமே எஸ்கேப்)

சுரேஷ் கண்ணன் (முதல் தடவை பார்த்தேன் இந்த சிநேகமான மனிதரை)

மேலும் அதியமான், டாக்டர் ப்ருனோ மற்றும் பலர். அட சொல்லலையே சாரு கூட வந்திருந்தார்!!

திருமதி சுஜாதாவிடமும் , அவர் மூத்த மகனிடமும் சற்று நேரம் பேசி விட்டு நானும் சங்கரும் விடை பெற்றோம்.

ஒரு எழுத்தாளர் இறந்து இரண்டு வருடம் ஆன பின்னும் இத்தனை பேர் அவர் நினைவாக குழுமி அவரது நினைவுகளை பகிர்ந்தது, மிக நெகிழ்வான உணர்வுகளை தந்தது!!
Related Posts Plugin for WordPress, Blogger...