Tuesday, June 28, 2011

வானவில்: அனுஷ்காவும் பீப்ளி லைவும்

பார்த்த படம்: பீப்ளி லைவ்

விவசாயிகள் பிரச்சனையை பேசும் படம். அமீர்கான் தயாரித்தது. துவக்கத்தில் மிக மெதுவாய் துவங்குகினாலும், மீடியா மற்றும் அரசியல் வாதிகளை தோலுரித்து காட்ட துவங்கியதும் செமையாய் சூடு பிடித்து விடுகிறது. எப்போதாவது வரும் நசுருதின் ஷா தவிர மற்ற அனைவரும் தெரியாத முகங்களே ! அரசியல் வாதிகளை அம்பலப்படுத்தும் பல படங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் மீடியாவை இந்த அளவு கிழித்து காய போடும் படம் இதுவாக தான் இருக்கும். பரபரபிற்காக அவர்கள் அடிக்கும் கூத்தை காட்டியது அமர்க்களமாய் இருந்தது. என்னை பொறுத்த வரை இந்த படத்தின் ஹை லைட் இது தான்.

விவசாயிகள் பிரச்சனை என்ற சீரியஸ் விஷயத்தை, நகைச்சுவை கலந்து அருமையாய் சொல்லி உள்ளனர். நேரம் கிடைக்கும் போது பார்த்து ரசியுங்கள்.

அய்யாசாமி (தனது தலைவிகள் பற்றி) 

"சின்ன வயசில நதியாவில் துவங்கியது, அப்புறம் ரேவதி, குஷ்பூ என தலைவிகள் அடுத்தடுத்து மாறினாங்க. கடைசி மாஜி தலைவியா தமன்னா கொஞ்ச நாள் தான் இருந்தார். கடந்த ஒண்ணரை வருஷமா அனுஷ்கா இடத்தை யாராலும் பிடிக்க முடியலை. இது கொஞ்சம் லாங் இன்னிங்க்ஸா தான் இருக்கு. என்ன ஒண்ணு இந்த அனுஷ் பொண்ணு தமிழில் வருஷத்துக்கு ஒண்ணு, ரெண்டு படம் தான் நடிக்குது. மத்த நேரம் எல்லாம் டிவியில் சென்னை சில்க்ஸ், டவ் ஷாம்பூ விளம்பரத்தில் எல்லாம் அனுஷை பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதா இருக்கு. சீக்கிரம் வேறு யாராவது தலைவியா வந்து அசத்துங்கப்பா.".

வீடியோ காட்சி ஒன்று 

ஹைதராபாத் சென்ற போது எடுத்த வீடியோ இது. ராமாராவ் பார்க்கில் ஒரு ஜம்பிங் விளையாட்டு இருந்தது. பெரியவர்களே பயப்படும் இந்த விளையாட்டை ஒரு சிறு பெண் எப்படி பயமின்றி ஜாலியாக ஆடுகிறாள் பாருங்கள்


சம்பவம்

அலுவலகம் விட்டு வருகையில் மழை வலுக்கிறது. டீ கடையில் ஒதுங்குகிறேன். என்னை போலவே அங்கே இன்னும் சிலர்... . சும்மா நிற்கும் போது அங்கிருக்கும் கஜூரா எனும் தின்பண்டம் ஈர்க்கிறது. போண்டா மாதிரி ஒரு இனிப்பு பண்டம் தான் இது. போண்டாவை விட இன்னும் சற்று கடினமாக (hard) இருக்கும். ஒரு கஜூரா கடித்து சாப்பிட பத்து நிமிடம் ஆகலாம். வயிறு சீக்கிரம் நிரம்பி விடும். இதனை சாப்பிட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது. குடும்பஸ்தன் ஆனதிலிருந்து டீ கடைகள் பக்கம் வருவது குறைந்து விட்டது. ஒரு கஜூரா வாங்கி மெதுவாக சாப்பிட தொடங்குகிறேன்.

ஒரு புதிய மனிதர் டீ கடைக்குள் நுழைகிறார். மிக ஒடிசலான உருவம். முழுக்கை சட்டை, பழைய காலத்து பேன்ட். கழுத்தில் டை நெற்றியில் ஒற்றை நாமம். அவரது பேண்ட்டும், டையும் அவரை உற்று நோக்க வைத்தது. "இவர் என்ன வாங்குவார்? அநேகமாய் சிகரெட்" என நினைக்கிறேன். அவர் சிகரெட் வாங்கி விட்டு ஒதுங்குகிறார்.

 கஜூராவை நிதானமாய் அனுபவித்து சாப்பிட்டு முடிக்கிறேன். தெருவில் வாகனங்கள் நகர ஆரம்பித்திருக்கின்றன. நானும் வந்து எனது வண்டியை எடுக்க செல்ல , அருகில் நமது டை அணிந்த நபர் தன வண்டியை எடுத்து கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் ஏனோ அதிர்ச்சியுற்றார். "நம்மை தொடர்ந்து பாலோ செய்கிறானே; இவன் யார்?" என நினைத்திருப்பாரோ? இந்த நினைப்பே எனக்கு சிரிப்பை தர, புன்னகையுடன் வண்டியை எடுத்தேன். சிறு தூறலுக்கிடையே தொடர்ந்தது பயணம்.

QUOTE HANGER

He who cannot forgive others destroys the bridge over which he himself must pass.

ஒரு கேள்வி மூன்று பதில் 


கேள்வி:

தொடர்ந்து கவிதை எழுதுவது எப்படி சாத்தியமாகிறது? அத்தகைய மனதை தொடர்ந்து தக்க வைப்பது கடினமாயிற்றே?


தொடர்ந்து கவிதை எழுதுவது எப்படி என்பது புதிராகவே உள்ளது...தேவதேவன் , மனுஷ்யபுத்திரன் போன்றோர் நிறைய கவிதை எழுதுகிறார்கள் ... இந்த மன நிலை அவர்களுக்கு எப்படி வாய்க்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் தான்... அதுவும் ஒரு தரத்திற்கு மேலே இருக்கும் கவிதைகளை தொடர்ச்சியாய் எழுதுவதற்கு, நிறைய பார்க்கிறார்கள், விஷயங்களை ஒரு அணுக்கத்துடனும், அக்கறையுடனும் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் படிப்பும், மொழியார்வமும் அதை சுலபமாய் கவிதையாக்க உதவுகிறது என்பது என் எண்ணம்.

நானும் ஒரு காலத்தில் கவிதை என்ற பெயரில் நிறைய எழுதினேன். அவை கவிதையா என இப்போது யோசிக்க வேண்டியுள்ளது :))

பதிவர் தேனம்மை லட்சுமணன்

கவிதை என்பது ஒரு சம்பவம் போல என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சி., துக்கம்., சோகம்., விரக்தி, வெறுப்பு., அசூயை., கோபம்., வீரம்., தன்னம்பிக்கை ., என எல்லா நிலைகளிலும் சில உணர்வுகள் கவிதைவரிகளாய்ப் பிரசவிக்கின்றன.

உணர்வின் வீர்யம் பொறுத்தும்., ஆழம் பொறுத்தும் அது எளிதாய் நிகழ்கிறது.எப்போதோ சில சமயம் நான் கவிதைகளிடமிருந்து அந்நியப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் தாக்கும் போதெல்லாம் அதிகமாக கவிதை எழுதி இருக்கிறேன். சிலசமயம் நான் கவிதைகளைத் துரத்தியும். சில சமயம் அது என்னைத் துரத்தியும் காதல் செய்து கொண்டிருக்கிறோம். என்றென்றூம் தீராத அமிர்தமாய் அது தன்னை என்னிடம் கையளித்துக் கொண்டே இருக்கிறது. மிக ஆழமான உணர்வுகளின் போது கவிதைகளில் அவற்றைப் பகிர்ந்தபின் நிம்மதியாய்த் தூங்கி இருக்கிறேன். கடவுளிடம் என்னை ஒப்புவித்த குழந்தை போல.

எத்தனை காலமாகவோ நானும் அதுவும் தொடர்பில் இல்லை என்றாலும் தொடர்பில் திரும்ப வந்தபின் விட்டுப் பிரிவது என்பது குறுந்தகவல் காதல்களைப் போல எளிதாயில்லை. போகன் வில்லாக்களைப் போலும் குல்மோஹர் போலும் ., டேலியா., கினியா போலும் அவை விதம்விதமான நிறங்களிலும். மல்லி., முல்லை ., வாசனைகளிலும் ஒரு தாயன்பைப் போலத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிநேகிதியைப் போலும் ., குழந்தையைப்போலும் உணர்கிறேன் கவி்தைகளிடம் என்னை ஒப்புக் கொடுக்கும்போது.

என்னை மேலெடுத்துச் சென்றது, சிம்மாசனம் அளித்ததும் சேவகம் செய்வதும் அதுதானென்றாலும் நானும் அதன் சேவகியாய் இருக்கிறேன். ஓடமும் வண்டியுமாய் நானும் அதுவும் ஒருவரை ஒருவர் சுமந்துகொண்டிருக்கிறோம். ஒன்றிலொன்று உள்ளூரக் கலந்துவிட்டதால் ஓடமும் வண்டியும் என்றும் பிரிவதேயில்லை.. ஒத்த காதலர்களைப் போலிருக்கும் என்னையும் கவிதையையும் போல.

பதிவர் கனாக்காதலன்

என் பாட்டனுக்குப் புகையிலை
என் அப்பாவிற்கு சிகரெட்
எனக்கு கவிதை. 

Monday, June 27, 2011

கிளிஞ்சல்கள் பறக்கின்றன : பதிவர்கள் புத்தகவிமர்சனம்

கிளிஞ்சல்கள் பறக்கின்றன என்கிற கவிதை தொகுப்பு வித்யாசமான ஒன்று. இணையத்தில் எழுதி வரும் ஐம்பது கவிஞர்களின் கவிதைகள் ஜே. மாதவராஜ் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளி வந்திருக்கிறது. வம்சி பதிப்பக வெளியீடான இப்புத்தகத்தின் அட்டையில் வலைப்பூக்களிலிருந்து நூறு கவிதைகள் என சொல்லப்பட்டிருந்தாலும், உள்ளே இருப்பது ஐம்பது கவிதைகள் தான். (சிறு தவறு.. ஆயினும் தவிர்த்திருக்கலாம்). இந்த தொகுப்பில் உள்ள சில கவிதைகள் பற்றிய பார்வை இந்த பதிவில்..

தான் படித்த துவக்கப்பள்ளி ஒவ்வொருவர் மனதிலும் ஆழ பதிந்து விடுகிறது போலும். நீண்ட காலம் கழித்து அங்கே சென்று சில துளி கண்ணீர் விட்ட அனுபவத்தை பாலாஜி மற்றும் ஹேமா என இருவர் கவிதையாக்கியிருக்கிறார்கள்.

மழை பற்றிய பொன். வாசுதேவன் கவிதை அழகு. மழையை சிறுவர், பெண்கள், வாகன ஓட்டிகள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்று சொல்லி சென்று கடைசியில் ஒரு புன்னகையுடன் முடிக்கிறார்.

நிறைய வித்யாசமான பார்வையும் அனுபவங்களும கவிதையாகியிருக்கின்றன.

"காளை" கள் பற்றிய வடகரை வேலன் கவிதை
நகர வாழ்வும் மேலாளர் மனமும் பேசம் செல்வேந்திரன் கவிதை
"திண்ணை" குறித்த அமுதாவின் கவிதை
"காலை நேர சத்தங்கள்" பற்றிய அமிர்தவர்ஷிணி அம்மா கவிதை

இப்படி கவிதைகள் பல தளத்தில் இயங்குகின்றன.

வீட்டை விட்டு ஓடிப்போன நண்பன் திரும்ப வந்ததும் குடும்பம் மகிழ்கிறது. கவிதை எழுதும் நண்பரோ (விநாயக பெருமாள்) குறும்புடன் " நிதானமாக விசாரிக்க வேண்டும் பாதி புத்தனை" என்கிறார்.

ரயில் பயணம் குறித்தே இரு கவிதைகள் ! ரயிலின் கூட்ட நெரிசலில் வரும் வியர்வை நாற்றம் பாலமுருகன் கவிதையில் தெரிகிறது. நந்தாவின் கவிதை வார இறுதியில் வெளியூர் சென்று விட்டு திங்கள் காலை வேலைக்கு வரும் இளைஞன் ரயில் சத்தத்துடன் அலாரம் வைத்து எழுகிற அலுப்பை சொல்கிறது.

கம்பியூட்டர் இஞ்சினியர்களின் தனிமை மற்றும் வெறுமை உணர்வை எளிமையாய் பதிவு செய்கிறது ஜோ ஆனந்தின் "குகைகளில் முடியும் கனவுகள்"

ராஜாராமின் மாஜி காதலி பற்றிய "மூன்று காலங்கள்" கவிதை துவக்கத்தில் புன்னகையும் முடிவில் பெருமூச்சும் வர வைக்கிறது.

இலங்கை தமிழர் படுகொலை குறித்த ஜே. மாதவராஜ் மற்றும் தண்டோராவின் கவிதைகள் மனதை கனக்க செய்கின்றன.

தொகுப்பில் என்னை பெரிதும் கவர்ந்த கவிதைகளுள் ஒன்று யாத்ராவின் " திருவினை". தற்கொலை செய்து கொள்ள துணிந்தவனின் மன நிலையும், அவனது அந்த நேரத்து பார்வையையும் மிக சிறப்பாக வெளிப்படுத்துகிறது. கவிதையின் இறுதியில் அந்த முடிவை அவன் தொடரவில்லை என்று உணர்கிறோம்.

சில கவிதைகள் புரிபட சற்று சிரமமாகவே உள்ளது. "நினைவின் அடுக்கு" , " ஓல ரீங்காரம்" " உடையும் குமிழ்கள்" போன்ற வார்த்தைகளால் ஜல்லி அடிக்காமல் அனுபத்தை நேரே பகிர்ந்தாலே கவிஞர்களுக்கு புண்ணியமாய் போகும் !!

நிச்சயம் இந்த தொகுப்பு ஒரு வித்யாசமான அனுபவத்தை நமக்கு தருகிறது. ஒரு கவிஞரின் புத்தகம் எனில் அதில் அவரது பார்வையில் குறிப்பிட்ட அளவு விஷயங்களும் பாடுபொருள்களும் தான் இருக்க முடியும். ஐம்பது கவிஞர்கள் எனும்போது, பல விஷயங்களை வெவ்வேறு பாணியில் நாம் வாசிக்க/ ரசிக்க முடிகிறது. தொகுப்பிற்கு ஒப்புக்கொண்ட கவிஞர்களும், தொகுத்து வெளியிட்ட ஜே. மாதவராஜும், வம்சி பதிப்பகத்தாரும் அவசியம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

வல்லமை இணைய இதழில்  மே  9, 2011  அன்று வெளியான கட்டுரை

Tuesday, June 21, 2011

வானவில்: பதிவர் பதில்களும், ரிசர்வ் வங்கியும்

பார்த்த படம்: பயணம்

பயணம் இப்போது தான் பார்க்க முடிந்தது. இப்படம் பற்றி  இருவிதமான விமர்சனங்கள் வந்தன. சிலர் பாராட்டியும், சிலர் பிடிக்கவில்லை என்றும் எழுதினர். எனக்கு வித்யாசமான கதை களன் கொண்ட படம் என்ற அளவில் பிடிக்கவே செய்தது. சில நம்ப முடியாத விஷயங்களும், ஒரு சில எரிச்சல்களும் இருக்கிறது தான். ஆனால் அவை படத்தை ரசிப்பதை நிச்சயம் தடுக்க வில்லை. நாகார்ஜுனா பற்றி சொல்லியே ஆக வேண்டும். மனுஷனுக்கு ஐம்பது வயசு இருக்கும். பார்த்தால் தெரிகிறதா? உடலை மிக மிக அற்புதமாக வைத்துள்ளார். Fantastic. மெச்சூர்ட் நடிப்பு இவருடையது. இவர் போடும் திட்டங்கள் மூளைக்கு வேலையாக, செம சுறுசுறுவென்று உள்ளன. துணை நடிகர் & இயக்குனர் பாத்திரங்கள் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. க்ளைமாக்ஸ்சில் நிச்சயம் அனைவரும் தப்பிப்பார்கள் என அறிந்தாலும்  எப்படி அது நடக்கபோகிறது என சுவாரஸ்யமாக பார்க்கிறோம். நிச்சயம் இந்த வருடம் வந்த படங்களில் இது ஒரு நல்ல படம்.

வித்யாசமான சந்திப்பு

சமீபத்தில் தஞ்சைக்கு ரயிலில் சென்ற போது எங்களுக்கு நேர் எதிரே இருந்த மூன்று பெர்த்களில் இருந்த மூவரும் வித்யாசமான கலவை. ஒருவர் மிலிட்டரிகாரர். தமிழரான இவர் விடுமுறைக்கு தமிழகம் வருகிறார். அடுத்தவர் ஏர்போர்ஸ்சில் பணி புரிபவர். "தஞ்சையில் என்னங்க ஏர்போர்ஸ்?" என்றதற்கு ஏர்போர்ஸ் நிலையம் புதிதாக தஞ்சைக்கு வர உள்ளதாகவும், அதில் சேர செல்வதாகவும் சொன்னார். மூன்றாமவர் நேவியில் பணியாற்றுகிறார். நாகப்பட்டினம் செல்வதாக சொன்னார் (அங்கே தான் கடல் இருக்கே !!) இதில் கடைசி இருவரும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள். மூவரும் அந்த இரயிலில் தான் சந்தித்து கொண்டனர். நாட்டுக்காக உழைக்கும் மூவர் இப்படி அடுத்தடுத்து அமர்ந்திருப்பத்தை பார்க்க வித்யாசமாக இருந்தது. மிலிட்டரிகார தமிழரிடம் கொஞ்சம் பேசி கொண்டிருந்தேன். வருடத்திற்கு இரு முறை ஒரு மாத விடுப்பு கிடைக்கும், அதில் பாதி நாட்கள் ரயிலில் பயணிப்பதிலேயே போய் விடும் என்றார். தான் செய்கிற வேலை எத்தகையது என்பதை சொல்ல கூடாது; அது ரகசியம் என்று சொல்லிவிட்டார். எனது மகளிடம் மூவரையும் அறிமுகப்படுத்தி விட்டு " இவர்கள் தங்கள் கடமையை செய்வதால் தான் நாம் தினமும் நிம்மதியாக உறங்க முடிகிறது" என்றேன். அவர்கள் சிரித்தார்கள்.

ரசித்த கவிதை


மகளே வருகிறேன்:

அன்றாடம் போய் திரும்பும்
அலுவலக வேலையில்லை
காலையிலே டாட்டா சொல்லி
கன்னத்திலே முத்தமிட்டு
மாலையிலே பாடம் சொல்ல
மகளே நான் கூட இல்லை

உன்னை விட்டு நெடுந்தொலைவு
உள்ளுக்குள்ளே உன் நினைவு
நள்ளிரவு விழித்திருப்பேன்
கனவு போல் மனதினிலே
கண் சிமிட்டி நீ சிரிப்பாய்
நீ சிரிக்கும் நொடியில் எந்தன்
நெஞ்சினிலே பூ மலரும்

குளிரெடுக்கும் சிகரத்திலும்
கொட்டுகிற பனியிலும்
குஞ்சணைத்த கதகதப்பு
என்னுயிரை சூடேற்றும்
எத்தனை நாள்? தெரியாது.
எப்போது? தெரியாது.
பெற்றவளே உன்னை என்று
பார்ப்பேனோ ? தெரியாது.

விட்டு ஓடி வருகிற
வேலையல்ல; கடமை இது
முடித்து விட்டு திரும்பும் வரை
முத்தங்களை வைத்திரு நீ

-விகடனில் வாசித்தது. எழுதியது பாஸ்கர் சக்தி என நினைவு.

வித்யாசமான சந்திப்பு என மேலே எழுதிய மனிதர்களை, அவர்கள் வாழ்வை இந்த கவிதையுடன் சேர்த்து வாசிக்க முடிகிறது தானே?

QUOTE HANGER

If you meet your enemy don’t punish him. Do him a good turn, kill him with your kindness.

சென்னை ஸ்பெஷல் : ரிசர்வ் வங்கி நடத்திய மீட்டிங்


நமக்கு தெரிந்து ரிசர்வ் வங்கி என்னென்ன செய்யும்? பணம் பிரிண்ட் அடித்து வெளியிடும். அப்பப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இன்னும் சில கம்பனிகளில் அக்கவுண்ட்ஸ் செக்ஷனில் பணி புரிந்தால், வெளி நாடுகளுக்கு பணம் அனுப்ப, அங்கிருந்து பணம் பெற அனுமதிக்கு அவர்களை நாடுவோம் என்ற அளவில் தெரியும். இந்த கடைசி பாயிண்ட்டை ஒட்டி ரிசர்வ் வங்கி சென்னை பிரான்ச் சமீபத்தில் இரண்டு நாள் எக்சிபிஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அவர்களின் சட்ட திட்டங்கள், விதிகள் பற்றிய விளக்கமும், அது பற்றிய சந்தேகமும் விளக்கப்பட்டன. சேத்துபட்டில் பெரியதொரு மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் இரண்டு நாளும் ஆயிரக்கணக்கில் கூட்டம். மதிய சாப்பாடு, தேநீர், குடிநீர் என அனைவருக்கும் ரிசர்வ் வங்கி அருமையாக ஏற்பாடு செய்திருந்தது. என்னை பெரிதும் கவர்ந்தது மாணவர்களின் பங்கெடுப்பு தான். ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். மேலும் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அங்கேயே ஒரு குவிஸ் நடத்தப்பட்டு பரிசுகள் தரப்பட்டன. கல்லூரி மாணவர்கள், வேலையில் இருப்போர் அனைவரும் பங்கேற்றாலும் இந்த பரிசுகளை பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே பெற்றனர். நிறுவனங்களில் பணி புரிவோருக்கு தங்கள் நிறுவனம் சார்ந்த சந்தேகங்களை தீர்க்க இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.

ஒரு கேள்வி இரு பதில் 

கேள்வி: தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் தனித்தனியே கல்வி கட்டணம் அறிவித்துள்ளதே இது ஏன்? இந்த முறை சரியா?

பதிவர் ஆர். கே. சதீஷ்குமார் (நல்ல நேரம்) 


இதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...கிராமப்புறத்தில் இருக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு நிர்வாக செலவுகள் குறைவு.நகர்புறத்தில் இருக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு நிர்வாக செலவுகள் மிக அதிகம்.இதை அனுசரித்தும்,பள்ளி நிர்வாகம் சில வசதிகளை மாணவர்களுக்கு அதிகப்படியாக தரலாம்...அல்லது நல்ல தேர்ச்சி விகிதம் கொடுத்து அந்த பகுதியில் பிரபலமான பள்ளியாக இருக்கலாம்.மாணவர்களின் கல்வி தரம் உயர இன்னும் பல சலுகைகளை அந்த பள்ளி கொடுப்பதால் கல்வி கட்டணத்தில் சில வித்தியாசங்களை அரசு நிர்ணயிப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்..நம்முடைய கவலையெல்லாம் அரசு விதித்த கல்வி கட்டணத்தை இந்த பள்ளிகள் சரிவர பின்பற்றுவதில்லையே என்றுதான்...இத்தனைக்கும் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்ததை விட,ரவிராஜன் கமிட்டி 40 சதவீதம் கட்டணத்தை அதிகப்படுத்தி மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு சலுகைகளையே செய்திருக்கிறது...ஆனாலும் இவர்கள் பள்ளி அறிவிப்புபலகையில் கூட அதை வெளியிடுவதில்லை..பெரும்பாலான பள்ளிகள் எப்போதும் போலவே கட்டணம் வசூல் செய்கின்றன...அரசின் கட்டண நிர்ணயம் பெற்றோருக்கு பாதியளவு பொருளாதார சுமையை குறைக்கும்படியே உள்ளது..இதை உறுதியாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் மகிழ்ச்சி.

பதிவர் புதுகை அப்துல்லா 


முதலில் கல்வியில் தனியார் என்ற முறையையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் அடிப்படைக் கல்வி என்பது ஒருவரின் பிறப்புரிமை. அதை அளிக்க வேண்டியது அரசின் கடமை. மக்களிடையே உயர்வு,தாழ்வு நிலைகளை உருவாக்கும் பல வாரியப் பாடத் திட்டமே கூடாது எனும்போது பள்ளிகளுக்கு இடையே கட்டண வேறுபாடு மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும்? ஒவ்வோரு பள்ளிக்கும் ஒவ்வோரு கட்டணம் என்பதை பள்ளிகளில் அளிக்கும் வசதிக்குத் தக்கவாறு அதாவது சிலபள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்,இ லேனிங் போன்றவற்றின் மூலம் பாடம் நடத்துவதால் ஏற்படும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் முகமாக பள்ளிகளிடையே தனித்தனி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர். இதுவும் சரியான ஒருமுறை இல்லை.

மாநகராட்சிகள், நகராட்சிகள்,பேரூராட்சிகள்,பஞ்சாயத்துகள் என்ற அளவில் பள்ளிகள் இருக்கும் பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு இவற்றிற்குத் தனித்தனி கட்டணம் அறிமுகம் செய்வது மட்டுமே நியாயம். ஒரு மாநராட்சியில் உள்ள அனைத்து பள்ளிக்கும் ஒரே அளவிலான கட்டணம் நிர்ணயம் செய்யும்போது குறைவான வசதியைத் தரும் பள்ளி நல்ல வசதியைச் செய்துதர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும். அப்படி செய்யாவிடின் அந்தப் பள்ளி பெற்றோர்களால் புறக்கணிக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் வித்யாசம் இன்றி அனைத்து வசதிகளும் இருப்பதற்காகவாவது பொது கட்டணம் அறிமுகம் செய்யப்பட வேண்டும். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இன்றும் எந்த பாடதிட்டம்? அரசா?தனியாரா? கட்டணம்? என்றெல்லாம் பேசிகொண்டு இருப்பது நம் அனைவருக்கும் வெட்கக்கேடு. பள்ளிக்கல்வி அளவில் தனியார்களை முற்றிலும் ஒழித்து அரசே நடத்த வேண்டும் என்ற கொள்கையை மனதில் வைத்து அதை நோக்கி மக்கள் நகர வேண்டும் என்பதே என் விருப்பம்.

Sunday, June 19, 2011

அவன் இவன் விமர்சனம் By தேவகுமார்


பாலாவின் படங்களில் அனாயசமான கிண்டல் (எங்கள் ஊர் மொழியில் "கிரித்துருவம்") விரவி இருக்கும் ("தமிழ் நாட்டுல தமிழ தப்பு தப்பா பேசுனா ஜனங்க நம்புறாங்க, நான் என்ன பண்ணட்டும்?" என்பது மாதிரியான கிண்டல்கள்). அது இந்த படத்தில் அதிகமாய் இருக்கும் என எண்ணி போனது என் தவறு என நினைகிறேன். ஓரிரண்டு இடங்களை தவிர, யாராலும் சிரிக்க முடியவில்லை. பாலா ஒரு சிறந்த இயக்குனர் என்பது அவர் ஓரிரண்டு இடங்களில் அசால்டாய் ஆடியதில் தெரிகறதே தவிர, பல இடங்களில் அவர் சறுக்கி இருக்கிறார். 

விஷாலும் (வால்ட்டர் வணங்காமுடி) ஆர்யாவும் (கும்புடறேன் சாமி) அண்ணன் தம்பிகள் (ஒரு அப்பா இரண்டு அம்மா). அப்பா தேர்வு ஆச்சரியம் - சூப்பர் சிங்கரில் பாடகர்களுக்கு குரல் பயிற்சி தந்தவர்! வால்ட்டர் கொஞ்சம் பெண் தன்மையோடு, தெற்று பல்லோடு, மாறு கண்ணோடு இருக்கிறார், கும்புடறேன் சாமி ஒரு ஜாலி டைப். (பிதாமகன் விக்ரம், சூர்யாவை நினைக்காமல் இருக்கமுடியவில்லை). இவர்கள் கள்ளதொழில் செய்கிற குடும்பத்தை சேர்த்தவர்கள் (திருடலேன்னா சாமி குத்தம் ஆயிடும்!). வால்டருக்கு திருட வரவில்லை, அவர் நாட்டமெல்லாம் கலைத்துறையில்... கும்புடறேன் சாமி ஒரு கைதேர்ந்த திருடன். இவர்கள் கமுதி கோட்டை ஜமிந்தரோடு (RK. குமார்) நெருக்கமாய் இருக்கிறார்கள். அவரை ஒருவன் கொன்று விட அவனை விஷாலும் ஆர்யாவும் பழி வாங்குவதாய் கதை முடிகிறது. 

படத்தின் அழகான விஷயங்கள் என்றால் - விஷாலின் நடிப்பு. விஷால் நிஜமாகவே அசத்தி இருக்கிறார் . அவர் திருடியதை போலீஸ் கான்ஸ்டபில் (அவர் விஷாலின் காதலியா என கடைசி வரை புரியாத புதிராக!) மயக்கி பேசி வாங்கி செல்லும்போது விஷால் காட்டும் முக பாவம் அழகு. அவரது உடை வித்தியாசம், அதை அவர் கையாளும் விதமும் அருமை. விஷால் போடும் சண்டை அசத்தல். இசை இன்னொரு அழகான விஷயம். அம்பிகா இன்னொரு ஆச்சர்யம் (அம்மாவா ஒரு ரவுண்டு வருவாரோ?!?). ஜமிந்தாரக வரும் RK. குமார் (his 'Highness') நடிப்பது மாதிரியே இல்லை, இவர் படத்தின் முக்கிய பலம்.

பெண் போலீஸ் கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரை அண்ணா என அழைப்பது, இப்படி சில இடங்களை சொல்லலாம். நிற்க. சில இடங்களில் நகைச்சுவை very subtle and super. "என்னடா பேரு, கும்புடறேன் சாமி" - "நாங்க மட்டும்தான் உங்களை கும்புடறேன் சாமின்னு சொல்லனுமா, நீங்களும் சொல்லணும்தான் இந்த பேரை வச்சி இருக்கேன்!",

இந்த படத்தில் மிக பெரிய குறை, கதை இல்லாததுதான். காட்சிகள் கறிக்கடையில் தொங்குகிற கறித்துண்டுகள் மாதிரி தொங்குகிறது. திடீர் என்று சூர்யா வருகிறார். ஏன் வந்தார் எதற்கு வந்தார், கதைக்கும் அவர் வந்ததுக்கும் என்ன சம்பந்தம், புரியவில்லை. Highness - இடம் இருந்து அவரது சொத்துகளை ஒருவர் ஏமாற்றியதை அடிக்கடி சொன்னாலும் அதை பற்றி தெளிவாய் சொல்லுகிற மாதிரி ஒரு காட்சியும் இல்லை. அடி மாடுகளை ஒருவன் வாங்கி விற்பதை Highness போலீசிடம் சொல்வதும் அவனை போலீஸ் அரெஸ்ட் செய்வதும் குழப்பமாய் இருக்கிறது - அவன் செய்த தவறென்ன? மாடுகளை அவன் வதைப்பது மாதிரி தெரியவில்லை; பரந்த புல்வெளியில் மாடுகள் இருக்கின்றன, சண்டையின் போது தவிடு பறக்கிறது, அப்படி என்றால் அவன் மாடுகளை ஒழுங்காகத்தான் வைத்திருக்கிறான். மாடுகளை வாங்கி அடிமாடுகளாய் விற்பதற்கு லைசென்ஸ் தேவை இல்லை, அப்படி இருக்கையில் எப்படி போலீஸ் அவனை கைது செய்தது? இந்த விஷயம் தான் பிற்பாதியின் அடிப்படை காட்சி, இதில் எப்படி பாலா சறுக்கினார்?

பாலாவின் படங்களில் பெண் பாத்திரங்கள் வலிமை ஆனவை. ஆனால் இந்த படத்தில் பெண் பாத்திரங்கள் வலிமை அற்றவை என்பதை தாண்டி, கதாநாயகிகள் கதை நடக்கும் இடத்திற்கு அந்நியமாய் தெரிகிறார்கள். அம்பிகா போன்ற பாத்திரங்களும் வசை பாடுபவையாய் இருக்கின்றன. இன்னொரு முக்கிய விஷயம், சில இடங்களில் வசனங்கள் அருவருப்பை உண்டாக்குகின்றன. அவை கதைக்கு தேவையென சால்ஜாப்பு சொல்ல முடியாது, அவற்றை தவிர்த்தும் நல்ல விதமாய் எழுதி இருக்கலாம் (கனி இருப்ப?). போலீசை கிண்டல் அடிப்பது ஆண்டாண்டு காலமாய் தமிழ் சினிமாவில் நடக்கிறது, அதை பாலாவும் செய்திருப்பது கொடுமை...

முதல் மதிப்பெண் வாங்குகிற மாணவன் திமிராய் படிக்காமல் தேர்வுக்குப்போய் just pass mark வாங்கியது மாதிரி இருக்கிறது இந்த படம். இயக்குனருக்கு தேவை அதிக பொறுப்புணர்ச்சி. இந்த படத்தை பொறுத்தவரை பாலாவிடம் அது குறைந்து இருப்பது தெரிகிறது. நீங்கள் இந்த படத்தை "தமிழ் தொலைகாட்சிகளில் முதல் முறையாக" வரும்போது பார்ப்பது நலம்.

இவன் அவன் (பாலா) இல்லை!!

விமர்சனம்: தேவ குமார்

Wednesday, June 15, 2011

மாமல்லபுரம் பயணக்கட்டுரை :படங்களுடன்

திருச்சி சட்ட கல்லூரியில் தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஒன்றாக படித்த நண்பர்கள் நாங்கள். சட்ட கல்லூரி மாணவர்கள் என்ற வார்த்தையை கேட்டதுமே உங்களுக்கு என்ன தோன்றுமோ அதற்கு நேர் எதிர் விதமானவர்கள். கல்லூரியில் படித்த காலத்திலேயே எங்கள் குழு எப்போதுமே தனித்து தெரியும். படிப்பு, பேச்சு போட்டி, கிரிக்கெட்,நாடகங்கள் இப்படி எதை எடுத்து கொண்டாலும் அதில் எங்கள் குருப் கலக்கி கொண்டிருக்கும். குறிப்பாய் அப்போது துவங்கி இன்றைக்கு வரை எந்த நல்ல காரியங்களுக்கும் எங்களால் முடிந்த பங்களிப்பை இணைந்து செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதி தான் வருடா வருடம் எங்கள் நண்பன் லட்சுமணன் நினைவாக அடையாறு பார்வை இழந்த சிறுவர் பள்ளியில் நாங்கள் நடத்தும் பேச்சு மற்றும் பாட்டு போட்டிகள்.
நாங்கள் தங்கிய காட்டேஜ் முன்பு இனியா

கல்லூரியை விட்டு வந்த பிறகும், குடும்ப நண்பர்களாக வருடத்திற்கு சில முறை எங்கள் சந்திப்பு நடக்கும். திருச்சி சட்ட கல்லூரி மாணவர்களுக்க்கென தனியாக ஒரு யாஹூ குழுமம் உள்ளது. அதில் இத்தகைய பயணங்கள் முடிந்ததும் அவரவரும் தாங்கள் எடுத்த புகை படங்களை போடுவோம். டூர் சென்று வந்த நினைவுகளை எழுதும் பொறுப்பு என்னிடம் விடப்படும் (இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புது !!) இந்த முறை டூர் சென்ற போது பந்தாவாக, " இந்த பயணத்தை நேரே ப்ளாகில் எழுதி விடுகிறேன். அப்புறம் உங்களுக்கு லிங்க் தருகிறேன். அதிலே படிச்சிக்குங்க " என சொல்லி விட்டு வந்தேன். நாங்கள் இந்த டூர் சென்று வந்து ஐந்து மாதத்திற்கு மேலாகி விட்டது. இதோ இப்போது தான் அதனை எழுத வாய்க்கிறது.

நாங்கள் இந்த டூர் சென்ற பிப்ரவரி மாத சனி, ஞாயிறுக்கு அடுத்த நாள் தான் எனது தமிழ்மண நட்சத்திர வாரம் துவங்கியது. ஏற்கனவே தயாரான பதிவுகளை அந்த ஒரு வாரம் முழுதும் எழுதி, அடுத்த சில வாரம் ஓய்வு எடுத்து விட்டேன். என்றாலும் ஐந்து மாதம் கழித்து எழுதுவது சற்று ஓவர் தான். எழுதாமலே போய் விடுவதை விட, இவற்றை பதிவு செய்வது நினைவுகளை திரும்பி பார்க்க உதவும். எனவே டூர் வந்த நண்பர்கள் அடியேனை மன்னித்து, மேலே வாசிக்க.
*************
எங்களுடன் படித்த செல்வராஜ், ராமலிங்கம் என்கிற நண்பர்களின் தொடர்பு இப்போது தான் கிடைத்தது. அரியலூர் கோர்ட்டில் வழக்கறிஞர்களாக உள்ள அவர்களை சென்னைக்கு வர சொல்லி அனைவரும் மாமல்லபுரத்தில் சந்தித்தோம். 

நாங்கள் தங்கிய ரிசார்ட்டில் பெரும்பாலும் வெளி நாட்டவர் தான் தங்கி இருந்தனர். ( மாமல்லபுரம் முழுவதுமே சுற்றுலா பயணிகளில் வெளி நாட்டவர் எண்ணிக்கை அதிகம் தான்).  நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட நிறைய இடம் இருந்தது. மேலும் பீச்சிற்கு நேர் எதிரே அறைகள். காலை எழுந்து அறையிலிருந்தே பீச்சையும், சூர்ய உதயத்தையும் பார்க்க முடிந்தது. 

முதல் நாள் சென்று இறங்கியதுமே புட்பாலில் இறங்கி விட்டோம். பெரியவர்களும் சிறியவர்களுமாய் சேர்ந்து இரண்டு அணியாக பிரிந்து ஆடினோம். ஒவ்வொருவரும் தன் அணி தான் ஜெயிக்கணும் என வெறியோடு ஆடியதால் ஆட்டம் செம இன்டரஸ்டிங் ஆக இருந்தது.



பின் நீச்சல் குளத்தில் சென்று குளித்தோம். அருமையான, பெரிய குளம் இது. நீச்சல் தெரியாத சிறுவர்களுக்கு தனியாக நிறைய இடம். தண்ணீர் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. முதல் நாள் மதியமும், மாலையும், மறு நாளும் என மூன்று முறை அனைவரும் ஆசை தீருமளவு குளித்தோம். ஆண்களும், குட்டி பசங்களும் உள்ளே இறங்க, பெண்கள் வெளியிலிருந்து ஆதரவு தந்து கொண்டிருந்தனர். 




நண்பன் பாலாவிடம் தண்ணீருக்கடியில் சென்று எடுக்க கூடிய கேமரா இருந்தது. அதன் மூலம் எடுக்கப்பட்ட போட்டோ இதோ. எனது தோள் மீது கை போட்டிருப்பது வழக்கறிஞர்/ நண்பர் பாலா


நீச்சல் குள குளியல் போதாதென்று மாலை பீச்சில் சென்று ஒரு முறை குளித்தோம். குட்டி பசங்க செமையாக என்ஜாய் செய்தனர்.




இரவு கேம்ப் பையருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுவர்களுக்கு என சில போட்டிகளும், கணவன் மனைவிக்கு ஜோடி பொருத்தம் போட்டியும் நடத்தப்பட்டது. ஜோடி பொருத்தம் எப்போது நடத்தினாலும் கிண்டலும், கேலியுமாக இருக்கும். யார் வெல்கிறார்கள் என்பது முக்கியமல்ல, அனைவரும் சிரித்து மகிழவே நடத்தப்படும். இம்முறையும் செம ரகளையாக இருந்தது.

ஜோடி பொருத்தத்தில் திரு. / திருமதி ப்ரேம்

எந்த டூர் சென்றாலும், இரவு எவ்வளவு நேரம் விழித்து கொண்டு அரட்டை அடித்தாலும், நண்பர்கள் கூட்டம் மறு நாள் காலை அந்த ஊரை சுற்றி வாக்கிங் போவது வழக்கம். தூங்குபவர்களை போன் அடித்தோ, காலிங் பெல் அடித்தோ எழுப்பி கூட்டி கொண்டு போவார்கள். இம்முறை இருந்தது பீச் அருகில் என்பதால் காலை சூர்யோதயம் பார்க்க கிளம்பி விட்டோம். அற்புதமாக இருந்தது இந்த அனுபவம்.

  

சூர்ய உதயத்தின் போது நண்பர்கள் : பிரபு, மோகன்குமார், பிரேம், சங்கர்
காட்டேஜ் முன்பு.... இடப்புறம் முதலில் இருப்பவர்கள் ராமலிங்கம், செல்வராஜ் ;  வலப்புறம் முன்னாள் இருப்பவர்கள் பிரேம் மற்றும் ரவி


கோயிலுக்கு அருகேயே தங்கினாலும் சென்னை வாசிகள் ஏற்கனவே பல முறை சென்றதால் அங்கே போகலை. வெளியூரில் இருந்து வந்த நண்பர்கள் மட்டும் சென்று வந்தனர்.

படகு சவாரி 

சிறு படகில் பீச்சின் உள்ளே அழைத்து சென்று காட்டுகிறார்கள். செம த்ரில்லிங் அனுபவம் இது. பத்து பேர் ஏறினால் ஆயிரம் ருபாய் வாங்குகிறார்கள் என நினைக்கிறேன். மூன்று அல்லது நான்கு பேர் உள்ள  குழுவாக சென்றால் அவர்களே இந்த முழு பணமும் கொடுத்து செல்ல வேண்டும். 

சிறு படகு. அலைகளை கிழித்து கொண்டு உள்ளே செல்லும் போது அருமையாக உள்ளது. முதல் சில நிமிடங்கள் தான் செம ஜாலி ஆக உள்ளது. இந்த நேரத்தில் அலைகள் நம் மீது தண்ணீரை வாரி இறைக்கும். சற்று தூரம் போனபின் அலைகள் தெரியாமல் கடல் அமைதியாக உள்ளது. இப்போது ஏரியில் பயணிப்பது போல் தான் உள்ளது. ஒரு சில மைல்கள் கூட்டி சென்று அங்கு நீரில் புதையுண்ட கோயிலின் ஒரு பகுதியை காட்டி விட்டு திரும்ப கூட்டி வருகிறார்கள். இப்போதுள்ள கோயிலும் நீரில் மூழ்கி இருக்க வேண்டியது ! தொல் பொருள் துறை/ மத்திய அரசு இதனை எடுத்து கொண்டதால் கோயிலை சுற்றி மிக உயரமான அளவில் கற்கள் போட்டு கோயில் காப்பற்றப்பட்டுள்ளது




எப்போதும் போனும்,கையுமாய் இருக்கும் அப்பா ப்ரேமை தேடி ஓடும் இனியா

தனது மகன்களை போட்டோ எடுக்கும் அப்பா (சாலை மாறன் )

ஞாயிறு மதியம் ரூம் காலி செய்து விட்டு கிளம்பினோம்.

மாமல்லபுரம் பார்க்க பல நல்ல இடங்கள் உள்ள ஊர். இதுவரை செல்லா விடில் நீங்களும் அவசியம் ஒரு முறை சென்று ஒரு நாளாவது தங்கி சுற்றி பார்த்து விட்டு வரலாம்.

Monday, June 13, 2011

வானவில்- அவன் இவன்/ கிங் ஆப் காமெடி

அவன் இவன் பாட்டும் படமும்

அவன் இவன் படத்தில் " டிய்யோ டிய்யோ" என ஆரம்பிக்கும் பாட்டில் இசையும் மெட்டும் அட்டகாசம். பெண் குரலில் ஒலிக்கும் இந்த பாட்டில் "டிய்யோ டிய்யோ டோலே" என்பதை தவிர வேறு வார்த்தைகளே இல்லை. கிராமங்களில் ஒலிக்கும் வித்தியாசமான வாத்தியங்களை உபயோகித்துள்ளார் யுவன். கேட்பவர்களை ஆட வைக்கும் விதத்தில் உள்ள இந்த பாட்டும், படத்தின் டிரைலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாவிடமிருந்து முதன் முறையாக ஒரு காமெடி படம்!! வரும் வெள்ளியன்று ரிசல்ட் தெரிந்து விடும்.

சி.சி.எல் கிரிக்கெட்

சினிமா நட்சத்திரங்கள் ஆடும் சி.சி.எல் கிரிக்கெட் பார்க்க ஜாலியாக தான் உள்ளது. அதிக பயிற்சியின்றி விளையாடுபவர்கள் பந்தை ஸ்டம்ப்க்கு நேரே போடுவதே பெரிய விஷயம் தான். ரொம்ப நாள் கழித்து பந்து வீசினால் பந்து எங்கெங்கோ போகும். சென்னை டீமில் விஷ்ணு (வெண்ணிலா கபடி குழு நாயகன்) நன்கு பேட்டிங் செய்தார். விக்ராந்த் பவுலிங் & பேட்டிங்கில் பிரகாசித்தார். தமிழில் கமெண்டரி உடன் கிரிக்கட் பார்க்க ஜாலியாக இருந்தது. என்ன ஒன்று கமெண்டரி சொன்னவர்கள் "Having said that " என்று மறுபடி மறுபடி சொல்லி நம்மை ஒருவழியாக்கினார்கள். பைனலில் சென்னை அசத்தலான வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்ததும் என் பெண் சொன்னது: "இந்த சம்மர் லீவில் நம்ம டீம் எல்லாமே கிரிக்கெட்டில் ஜெயிச்சிடுச்சு. வேல்ட் கப் இந்தியா ஜெயிச்சுது. ஐ.பி.எல் சென்னை ஜெயிச்சுது. இப்போ சி.சி.எல் சென்னை டீம் ஜெயிச்சிடுச்சு !" அதானே ! எப்படி அத்தனை முறையும் நம்ம டீம்களே ஜெயித்தது ! அதிர்ஷ்டமா... என்ன?

பதிவர் கேள்வி பதில்

கேள்வி : நமது கல்வி முறையில் என்னென்ன மாறுதல்கள் வேண்டும் ?

பதில்: அமுதா கிருஷ்ணா

எனக்கு பிடிக்காதது இந்த மெட்ரிக்குலேஷன் முறைதான். ஆசிரியர்கள் மாணவர்களுடன் பேசி கொள்ள கூட நேரம் இன்றி தினம் பாடம் நடத்துதல்,அதை எழுதி போடுதல்,அதை திருத்துதல், உடனே மாதம் மாதம் வரும் பரீட்சைகள் அதன் மதீப்பீடு என்று ஒரே மெக்கானிக்கா ஒரு முறை தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது. தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மத்தளம் போல், ஒரு பக்கம் மேனேஜ்மெண்ட்,மறுபக்கம் பெற்றோர்கள். தன்னிச்சையாய் தான் நினைப்பதை நிறைவேற்றவே முடியாத நிலை தான் மெட்ரிக் ஆசிரியர்களுக்கு. குறிப்பிட்ட காலத்திற்குள் அதிக பாடங்களை நடத்தும் கட்டாயம்.

இந்தியா முழுவதும் ஒரே பயிற்றுவிக்கும் முறை அமுலுக்கு வரவேண்டும். சி.பி.எஸ்.ஈ முறையில் உள்ளது போல் உணர்ந்து படிக்கும் முறைக்கு மாற்ற வேண்டும். மனப்பாடம் செய்து மார்க் எடுப்பதை ஒழிக்க வேண்டும்.

ஒரு மொழியும் முழுமையாய் தெரிந்து கொள்ளாமல் தான் பெரும்பான்மையான மாணவர்கள் தங்கள் பள்ளிகளை விட்டு வெளியில் வருகின்றனர்.

ஒரு எம்.காம் படித்து ஆசிரியாராய் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியருக்கு பி.காம்,எம்.காம்-தவிர காமர்ஸ் படிக்கும் ஒரு மாணவன் என்னவெல்லாம் படிக்கலாம் என்று அவனின் பள்ளி இறுதியில் சரியான வழிக்காட்டல் கிடையாது. பள்ளிகளில் தேவையில்லாத சப்ஜெக்ட் வைத்து குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக..காமர்ஸ் குரூப்பில், காமர்ஸ்,எக்கனாமிக்ஸ்,அக்கவுண்டன்சி,பிசினஸ் மேத்ஸ் இருப்பின் கல்லூரியில் பி.காம் சேர அது பயன்படும்.நிறைய பள்ளிகள் இந்த பிசினஸ் மேத்ஸிற்கு பதிலாய் கம்ப்யூட்டர் வைத்து உள்ளனர். ஃபீஸ் நிறைய வாங்குவதற்கு மட்டுமே அந்த கம்ப்யூட்டர் பாடம் அந்த பள்ளிக்கு பயன்படுகிறது. இந்த குரூப் படித்தவர்களுக்கு பி.காம் சீட் கிடைப்பது என்பது மிக கஷ்டம்.அதுவுமில்லாமல்,அதன் பிறகு என்ன படிக்க வேண்டும் என்ற ஒரு அறிவுரை மெத்த படித்த அந்த ஆசிரியர்களுக்கே தெரிவதில்லை.

அனைத்து அரசு ஊழியர்களின் குழந்தைகளும் கட்டாயம் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரவேண்டும். அப்போது தான் அரசு பள்ளிகளின் தரம் உயரும்.தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களின் ஊதியத்தினையும் அரசு நிர்ணயம் செய்யவேண்டும்.

முதல் குரூப் எடுத்தால் மட்டுமே வாழ்க்கை என்ற மக்களின் போக்கும் மாற வேண்டும்.இஞ்சினியரிங்,மருத்துவம் படித்தால் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணமும் நமக்கு மாற வேண்டும்.

QUOTE HANGER

Hatred never ceases by hatred in this world. By love alone it ceases.

டிவி பக்கம்

விஜய் டிவியில் கிங்க்ஸ் ஆப் காமெடி என புது நிகழ்ச்சி துவங்கி உள்ளனர். கலக்க போவது யாரு டைப் நிகழ்ச்சி தான். (தற்போது அது சண் டிவியில் வருவதில்லை போலும்). கார்த்திகேயன் தொகுப்பாளராகவும் சின்னி ஜெயந்த் மற்றும் பேராசிரியர் ஞான சம்பந்தம் நடுவர்களாகவும் உள்ளனர். வழக்கம் போல் இன்னொரு சினிமா புள்ளியை நடுவராக அழைக்கிறார்கள். இரு அணிகள் (ஒவ்வொன்றிலும் நான்கைந்து பேர்கள்) அடுத்தடுத்து ஏதேனும் காமெடி செய்கிறார்கள். "இரு அணிக்கும் போட்டி, போட்டி" என அடிக்கடி அவர்கள் சொன்னாலும் இறுதியில் யாரும் வென்றதாய், அல்லது அன்று சிறந்த பெர்பாமன்ஸ் செய்ததாய் கூட யாருக்கும் சிறு பரிசு தராமல் திடீரென நிகழ்ச்சியை முடிக்கிறார்கள். இவையெல்லாம் இருந்தாலும் காமெடி செய்பவர்கள் வித்தியாச சிந்தனையால் சிரிக்க வைக்கிறார்கள். இந்த வாரம் ஒருவர் நடிகர்களை மிருகங்களாக மேஜிக் செய்து மாற்றி விட்டால், எப்படி பேசுவார்கள் என வார்த்தைகள் இன்றி, சத்தத்தை வைத்தே நடிகர்கள் போல் செய்து அசத்தினார். எம். ஜி.ஆர் மற்றும் நம்பியார் படத்தில் கவுண்ட மணி இருந்தால் எப்படி இருக்கும் என இன்னொரு கலக்கல். எம். ஜி.ஆர் , நம்பியார் இருவருக்கும் கவுண்ட மணி தரும் கவுண்டர்கள் செம சிரிப்பு வெள்ளி இரவு 10 முதல் 11 வரை வருகிறது. பார்த்து சிரியுங்கள் !

ஆல் டைம் பாபுலர் பதிவு

சென்ற வானவில் பதிவு அதிகம் மெனக்கெடாமல் ஒரு மணி நேரம் மட்டுமே செலவழித்து எழுதியது. அது "ஆல் டைம் பாபுலர்" பதிவாகி விட்டது ரொம்ப ஆச்சரியம் !! பொதுவாக, புதிதாய் எழுதும் பதிவுகள் அந்த மாதத்தின் டாப் - 5-ல் வருகிறதா என்று மட்டும் பார்ப்பேன். எழுதுவதில் சில பதிவுகள் மட்டும் ஐந்தாம் இடத்தில் நுழைந்து, பின் கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி செல்வதை பார்ப்பது ஒரு பொழுது போக்கு.  ஆனால் அவை எதுவும் அந்த மாத டாப் 5- ல் தான்   இருக்குமே ஒழிய, ஆல் டைம் பாபுலருக்குள் உள்ளே நுழைவதே கஷ்டம்!!

வெறும் ஒரு மணி நேரத்தில் எழுதிய பதிவு ஆல் டைம் பாபுலர் ஆனது ஆச்சரியமா தான் இருக்கு. மக்களுக்கு எது பிடிக்கும் என்பதை இன்னும் புரிஞ்சிக்க முடியலை !!

சென்னை ஸ்பெஷல் முருகன் ஜிகிர்தண்டா

தி. நகர் முருகன் இட்லி கடை கடை வழியே வரும்போது, நம்ம கேபிள் சங்கர், முருகன் இட்லி கடையில் இட்லி சரியில்லாத அனுபவம் எழுதியதை நினைத்தவாறே வர, கடைக்கு வெளியே செம கூட்டம். சற்று நிறுத்தி பார்க்க, ஜிகிர்தண்டா கடை வெளியே வைத்திருப்பதும் அதற்கு தான் இத்தனை கூட்டமென்றும் தெரிந்தது. ஜிகிர்தண்டா மதுரையில் புகழ் பெற்ற பானம். இதுவரை சாப்பிட்டதில்லை. சரி முயற்சித்து பார்க்கலாமே என சென்றேன். சாதா ஜிகிர்தண்டா 25 ரூபாய் என்றும், ஸ்பெஷல் ஜிகிர்தண்டா 35 ரூபாய் என்றும் சொன்னார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என கேட்டபோது (எல்லாம் உங்களுக்கு இங்கே விளக்கி சொல்றதுக்குத்தான்) " ஸ்பெஷலில் பாசந்தி போடுவோம்" என்றார்கள். இருக்கிற வெயிட்டே போதும்; பாசந்தி வேற வேண்டாம் என சாதா வாங்கி சாப்பிட்டேன். ஜிகிர்தண்டா எதிலே செய்வது என அடுத்த கேள்வி கேட்க, என்னை வித்தியாச ஜந்து போல பார்த்து விட்டு பாலில் செய்வது என்றார். சொல்ல தெரியாத கலரில் ஜிகிர்தண்டா இருந்தது. மேலே ஐஸ் கிரீம் உருளை ( ஒரு skoop ) மிதந்தது. உள்ளே ஜெல்லி வடிவில் தண்ணீர் இருந்தது. அந்த ஐஸ் கிரீம் உடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீரை குடித்தால் தான் கடைசி வரை நன்றாக இருக்கும் என புரிந்தது. எவ்வளவோ ஜாக்கிரதை ஆக சாப்பிட்டாலும் பாதி வழியிலேயே ஐஸ் கிரீம் கரைந்தோ, காணாமலோ போய் விடுகிறது. அது வரை இருந்த டேஸ்ட் ஆஹா !! அந்த ஐஸ் கிரீம் காலி ஆன பின் வெறும் கலர் தண்ணீர் குடிக்கும் போது சற்று ஏமாற்றம். ஆயினும் கடைசி மிடக்கில் எங்கிருந்தோ ஒரு ஐஸ் கிரீம் கட்டி கீழே போய் கிடந்தது பேரானந்தம் தருகிறது. இன்னொன்று குடிக்கலாமா என்ற ஆவலை புறந்தள்ளியவாறு .. விடு ஜூட் ! முருகன் ஜிகிர்தண்டா ஒரு முறை குடித்து பாருங்கள் .. ஒரு வித்தியாச அனுபவத்திற்காக !

Wednesday, June 8, 2011

ஷாரூக்கானின் 3 சூப்பர் ஹிட் இந்தி படங்கள் விமர்சனம்


மை நேம் இஸ் கான் 

ஷாருக் மற்றும் கஜோல் நடித்த மிக பிரபலமான படம் . அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் முஸ்லீம்கள் படும் வேதனையை பின்னணியாக கொண்டது. டிஸ்லெக்சியாவால் பாதிக்க பட்ட ஷாருக், ஏற்கனவே மணமாகி விவாகரத்தான கஜோலை மிக வற்புறுத்தி மணக்கிறார். கஜோலுக்கு ஏற்கனவே ஒரு பையன் உண்டு. ஷாரூக் -கஜோல் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது. திடீர் சோகமாக கஜோல் பையன் பள்ளியில் வேறு ஒரு சிறுவனால் தாக்கப்பட்டு இறக்கிறான். ஷாருக் ஒரு முஸ்லிம் என்பதால்தான் இது நடந்தது என கஜோல் கோபித்து கொண்டு பிரிகிறார். ஷாருக் அமெரிக்க ஜனாதிபதியை பார்த்து " நான் தீவிர வாதி" இல்லை என சொல்வேன்" என்று கூறி அவரை பார்க்க முயல்கிறார். இறுதியில் அவர் எப்படி பார்த்தார் என்பதை நெகிழ்வுடன் கூறுகிறார்கள். ஷாருக் எத்தனை அற்புத நடிகர் என்பதை படம் முழுதும் உணர்த்துகிறார். கஜோலும் சரியான தேர்வு. மனதை நெகிழ்த்தும் பல காட்சிகள் உண்டு. குறிப்பாய் வெள்ளம் வரும் போது அந்த ஊருக்கு ஷாருக் தேடி கொண்டு போவதும், வெள்ளம் வடிய அவர் எடுக்கும் முயற்சிகளும்..!! இந்தி சினிமா இத்தகைய வித்தியாச படங்களால் தலை நிமிர்ந்து நிற்கிறது.  

ஓம் சாந்தி ஓம்

நெஞ்சம் மறப்பதில்லை டைப் கதை. முன் ஜென்மத்தில் காதலர்களை கொல்கிறார் வில்லன். மறு பிறவியிலும் அதே நபர்கள் காதலர்களாக ! வில்லன் இன்னும் உயிரோடு..!! (நெஞ்சம் மறப்பதில்லையுடன் உள்ள ஒற்றுமை இங்குமுடிகிறது). ஷாரூக் இறந்த நாயகியின் ஆவி வந்து மிரட்டுவதாக வில்லனை பயமுறுத்துகிறார். வில்லன் எப்படி பழி வாங்கப்படுகிறார் என்பது மீதி கதை.

இந்தி சினிமா கிளிஷேக்களை கிண்டல் செய்து நிறைய காட்சிகள் எடுத்துள்ளனர். அவை இந்தி சினிமா நன்கு புரிந்தவர்களுக்கு தான் புரிய முடியும். நகைச்சுவை நம்மை அதிகம் சிரிக்க வைக்க வில்லை.

தீபிகா படுகோனேக்கு அறிமுக படம். அழகாய் இருப்பதோடு நடிக்கவும் செய்கிறார். ஷாரூக் வழக்கம் போல்.

மொத்தத்தில் இந்தி சினிமா உலகை அறிந்தவர்களால் தான் நன்கு என்ஜாய் செய்ய கூடிய படம். நமக்கு சற்று அன்னியமாக தான் உள்ளது.

சக் தே இந்தியா

ஷாரூக் ஹாக்கி பயிற்சியாளராக நடித்த அற்புதமான படம் .

துவக்க காட்சியில் ஷாருக் உலக கோப்பை ஹாக்கியில் இந்தியாவிற்காக ஆடி தோற்கிறார். இதனால் அவமான படுத்தப்பட்டு வீட்டையை மாற்றி கொண்டு வேறு இடம் செல்கிறார்.சில ஆண்டுகள் கழித்து பெண்கள் ஹாக்கிக்கு பயிற்சியாளராகிறார். பல்வேறு குணமுள்ள இந்த பெண்கள் முதலில் ஷாருக்கை வெறுக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் ஒற்றுமையை கொண்டு வந்து, பின் வெற்றி பெரும் அணியாகவும் மாற்றுகிறார்.

படத்தில் பல இடங்கள் அருமை. ஷாருக் இனி கோச்சாக இருக்க வில்லை என்று கூறி விட்டு அந்த பெண்களை கடைசியாக சாப்பிட வெளியே அழைத்து செல்கிறார். அங்கு சில ஆண்கள் அவர்களை கிண்டல் செய்ய, பெண்கள் சேர்ந்து அவர்களை அடித்து நொறுக்குகிறார்கள். ஹீரோ ஷாருக் அந்த இடத்தில் இருந்தும் அவர் நகரவோ, சண்டையில் பங்கேற்கவோ இல்லை. இது தான் அந்த பெண்கள் ஒற்றுமையாக வைக்கிறது. இதன் பின் ஷாருக் மனம் மாறி பயிற்சியாளராக தொடர்கிறார்.

பெண்கள் அணியை உலக கோப்பைக்கு அனுப்பனுமா என்று கேள்வி வர, தேசிய ஆண்கள் ஹாக்கி அணியுடன் விளையாடி ஜெயித்தால் போகலாம் என்கிறார்கள். ஆண்கள் அணியுடன் ஆடி ஜெயிப்பது எப்படி என்று கேள்வி இருந்தாலும் அந்த நேரத்தில் வேறு வழியின்றி ஒப்பு கொள்கிறார்கள். அந்த ஆட்டத்தில் துரதிஷ்ட வசமாக பெண்கள் தோற்றாலும், அவர்கள் ஆடிய விதம் பார்த்து அசந்து போய் உலக கோப்பைக்கு அனுப்ப தேர்வு குழு ஒப்பு கொள்கிறது.

அணியிலேயே அனுபவம் அதிகமான பெண் மிக திமிராய் இருக்க, ஷாருக் முதலில் எல்லா மேட்சுகளிலும் அவளை தேர்வு செய்யவில்லை. ஒரு முக்கிய கட்டத்தில் அவள் அனுபவம் தேவைப்பட, ஷாருக் பேசி அவள் களம் இறங்குகிறாள். அதன் பின் கடைசி வரை அவள் ஆட்டம் அதிரடி தான். போலவே திருமணம் நிச்சயமான ஒரு பெண் தனக்கென்று identity வேண்டுமென வருங்கால கணவனிடம் போராடி அணியில் ஆடுகிறாள். இவள் தான் அணியில் கேப்டன். இவள் கேப்டன் ஆவதற்கு பெரும் எதிர்ப்பு இருந்தாலும் தன் ஆட்டத்தால் தன்னை நிரூபிக்கிறாள்.

மேட்ச்களிலும் பல நெகிழ்வான சம்பவங்கள். படம் முடிவில் ஷாரூக் தன் சொந்த வீட்டுக்கு செல்லும் போது இம்முறை ஊரே வாழ்த்தி வரவேற்கிறது. இதுவரை பார்க்கா விடில் அவசியம் பாருங்கள். தவற விட கூடாத படம் இது.

Monday, June 6, 2011

தரையில் இறங்கும் விமானங்கள்: விமர்சனம்

"தரையில் இறங்கும் விமானங்கள்" கல்லூரி காலத்தில் வாசித்த நாவல். மீண்டும் ஒரு முறை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.முதன் முதலாக வாசித்த இந்துமதியின் நாவல் இது தான். பின் கொஞ்ச நாள் இந்துமதி எழுத்துக்களை தேடி தேடி வாசிக்கும் அளவு இந்த புத்தகம் ஈர்த்தது. பிற கதைகள் படித்ததும், அவை இந்த புத்தகம் அளவு இல்லாது போனதாக உணர்ந்தேன். .

தரையில் இறங்கும் விமானங்கள் : கதை


விஸ்வம் ஒரு பட்ட தாரி இளைஞன். கொஞ்சம் அறிவு ஜீவி. தனக்கு பிடித்த மாதிரி இலக்கியம் வாசித்து கொண்டும், எழுதி கொண்டும், வருமானம் இன்றி காலம் கழிக்கிறான். இவன் அண்ணன் பரசு. சராசரி இளைஞன். பரசுவிற்கு திருமணம் நடக்கிறது. ருக்மணி என்ற அழகான, அறிவான மனைவி. ருக்மணி தன் கணவரின் தம்பியான விஸ்வத்துடன் இலக்கியம் குறித்து விவாதம் செய்யும் அளவு புத்திசாலி. விஸ்வத்துக்கு ஒரு காதலி உண்டு. (அவள் கதையில் மிக குறைவாகவே வருகிறாள்).

இலக்கியம், நண்பர்களுடன் அரட்டை என்று இருக்கும் விஸ்வம் தன் அண்ணன்- அண்ணி மூலம் வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்து கொண்டு தனக்கு பிடிக்காவிடினும் ஒரு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான். இத்துடன் கதை முடிகிறது.

கதை உங்களுக்கு எந்த படத்தையாவது நினைவு படுத்துகிறதா? அஜித் நடித்த "முகவரி" கிட்ட தட்ட இந்த கதை தான்.

தரையில் இறங்கும் விமானங்கள் பிடிக்க மிக முக்கிய காரணம் அதை வாசித்த வயது. விஸ்வம் பாத்திரத்துடன் வாசிக்கும் பழக்கமுள்ள நம்மை போன்ற யாரும் பொறுத்தி பார்க்க முடியும் ! காரை பெயர்ந்த சுவர்களில் தெரியும் உருவங்களையும், தூரத்தில் செல்லும் மாட்டு வண்டிகளின் சிம்னி வெளிச்சத்தையும் ரசிப்பவனாக, ஒரு நல்ல ரசிகனாக இருக்கிறான் அவன்.
கதையில் விஸ்வம் தன அண்ணன் பரசுவுடன் உரையாடும் இடம் ஒன்று அற்புதமாக இருக்கும். போலவே விஸ்வம் தன் அண்ணியுடன் உரையாடும் பல இடங்கள் மிக அருமை !. கதையை எழுதிய விதத்திலும், இயல்பான உரையாடல்களிலும்தான் வெகுவாக கவர்ந்தார் இந்துமதி.

உதாரணத்திற்கு சில உரையாடல்கள் :

" நம்ம எல்லாருக்கும் எத்தனையோ ஆசை இருக்கு. எப்படியெல்லாமோ இருக்கணும்னு நினைக்கிறோம். ஆனா எது எதுவோ நடந்து போயிடுது. இதையெல்லாம் பார்க்கிற போது பலமான ஏதோ ஒண்ணு நம்மை வழி நடத்திட்டு போகிறதுன்னு தெரியுது. அது வழியிலே நாம போய்த்தான் ஆகணும்னு புரியுது"

" ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை ஒவ்வொருவர்கள்!!"

" எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறது நல்ல நினைப்பு தான். ஆனா தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறோம்! தெரிஞ்சுகிட்டவங்க எல்லாம் என்ன பண்றாங்க? நாம பண்ணறதைத்தான் பண்றாங்க. அதுக்காக தெரிஞ்சிக்கிறதே அவசியம் இல்லைன்னு சொல்லலை. தெரியாததாலே தப்பு இல்லைன்னு சொல்ல வர்றேன்"

"உங்க புத்திசாலித்தனத்தை நுழைச்சு எல்லாரையும் துருவி பார்க்கிறதை நீங்க விட்டுடனும். எல்லாரையும் அப்படியே ஏத்துக்கணும். நிறை குறைகளோட ஏத்துக்கணும். ஏத்துக்குட்டு சந்தோஷமா இருக்க தெரியனும். அவங்களையும் சந்தோஷ படுத்த தெரியணும்"

****
நண்பர் நிலா ரசிகன் சிறுகதை புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் இந்து மதியை சந்திக்க நேர்ந்தது. அப்போதும் இந்த புத்தகம் பற்றி தான் அவரிடம் நான் சிலாகித்து பேசினேன். (மனதுக்குள் இந்த புத்தகம் பற்றி எத்தனைபேர் தான் இவரிடம் பேசியிருப்பார்கள் என்று ஓர் எண்ணம்). இனிமையாக பேசினார். அருகிலிருந்த கணவரை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த ஒரு நாவல் மூலம் இந்துமதிக்கு கிடைத்த பெயர் மற்ற அனைத்து நாவல்களையும் சேர்த்து கூட கிடைக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆயினும் ஒரு எழுத்தாளர் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு புத்தகம் மூலமாவது ஏராளமான மனிதர்களின் மனங்களை தொட்டார் என்றால் அதுவே போதுமே! அந்த விதத்தில் தரையில் இறங்கும் விமானங்கள் என்றும் மனதில் நிற்கிறது.

திண்ணை இணைய இதழில் ஏப்ரல் 17 தேதியிட்ட இதழில் பிரசுரமானது .

பின் குறிப்பு: கிழக்கின் அதிரடி புத்தக திருவிழா தி. நகரில் நடக்கிறது. புத்தகங்கள் நிஜ விலையிலிருந்து நான்கில் ஒரு பங்கு விலைக்கு (சில நேரம் இன்னும் குறைவு) கிடைக்கின்றன. இரண்டு முறை சென்று ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அள்ளி கொண்டு வந்திருக்கிறேன். சென்னை வாசிகள் தவற விட வேண்டாம் !!
Related Posts Plugin for WordPress, Blogger...