Saturday, December 28, 2013

2013 - சிறந்த 10 தமிழ் பட பாடல்கள்

ருட இறுதி வந்தாலே கை குறுகுறு என்கிறது.

பயம் வேண்டாம்.. சென்ற வருடங்கள் போல அதிக பதிவுகள் வராது; ஒரே ஒரு காரணம், நேரமில்லை !

இன்று வெளியூர் பயணம் துவங்குகிறது. பார்த்தவற்றில் சிறந்த 10 தமிழ் படங்கள் பற்றி பின்னர் எழுத எண்ணம் (நேரமிருப்பின்...)

ப்ளாகை அதிகம் வாசிக்காத மகள் பாட்டு என்றதும் - என்னோடு அமர்ந்து - இந்த 10 பாடல் லிஸ்ட்டை இறுதி செய்து கொடுத்தாள் ..:)

இவ்வருடத்தில் அதிகம் ரசித்த 10 பாடல்கள் இங்கு..
**********
கடல் - மூங்கில் தோட்டம்

டாப் 10 பாடல்களில் மற்ற பாடல்களுக்கு ரேன்க் இல்லை.  ஆனால் நம்பர் ஒன் மட்டும் இப்பாடல் தான். ... வருடம் முழுக்க - கேட்க கேட்க தெவிட்டவே இல்லை !



பியூர் ரகுமான் மேஜிக்....!  மெலடிக்கு  Definition இப்பாடல்.

அற்புதமான பாடல்களை சினிமா இயக்குனர்கள் படமாக்கும்போது கொடுமைப்படுத்துவது புதிதல்ல. மணிரத்னம் இப்பாடலை எப்படி சிதைத்தார் என இங்கு பார்க்கலாம்



ராஜா ராணி - சில்லென ஒரு மழை துளி

ராஜா ராணியில் பல பாடல்கள் அட்டகாசம் என்றாலும் இப்பாடலை தேர்ந்தெடுத்தது.... படமாக்கதிற்காக !

இப்பாடலின் பல இடங்கள் சென்னையில் தான் படமாக்கியதாக சொல்கிறார்கள். சென்னையில் இவ்வளவு அழகான இடங்களா என ஆச்சரியமாக இருக்கிறது !

சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் பாட்டு முழுதும் தெரியும்... பாரில் தண்ணி அடித்த பெண்ணை,  பெண் பார்க்க போகும் போது பார்ப்பது, திரும்பி கொண்டே பலூன் வெடிக்கும் சீக்ரெட் இப்படி...



வருத்தபடாத வாலிபர் சங்கம் - பாக்காதே பாக்காதே

மூங்கில் தோட்டத்திற்கு அடுத்து இவ்வருடம் அதிகம் ரசித்த பாடல் இதுவே . அப்பாடலை விட அதிக முறை இதன் வீடியோ வடிவத்தை பார்த்திருப்பேன்.. காரணம்..

1. என்னை மிக கவர்ந்த ஹீரோ மற்றும் ஹீரோயின்  .........

2. பாடல் கேட்க + பார்க்க செம சுவாரஸ்யம் !



" இந்த ஒரு பார்வையாலே தானே நானும் பாழானேன் " இந்த வரிகள் ஸ்ரீ திவ்யாவிற்கு அற்புதமாய் பொருந்துகிறது !சின்ன சின்ன முகபாவமாகட்டும் சிரிப்பாகட்டும் ஆண்களை கிளீன் போல்டாக்கி விடுகிறது.

பாட்டை அதன் அழகு கெடாமல் ரசனையுடன் படமாக்கிய இயக்குனருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

அழகாகவும் இருந்து நன்கு  நடிக்கவும் செய்யும் நடிகைகள் கிடைப்பது மிக அரிது. ஸ்ரீ திவ்யா இன்னும் 10 வருஷமாவது தமிழில் நடித்து நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கட்டும் !



தலைவா - யார் இந்த சாலையோரம்

தலைவா படம் படு தோல்வியுற்றாலும் இந்த பாடல் ரசிக்கும்படி இருந்தது. விஜயை கிண்டல் செய்ய எத்தனையோ விஷயம் உண்டு; ஆனால்  டான்ஸ்சில் அசத்தி விடுகிறார்...அசத்தி  !



தங்க மீன்கள் - ஆனந்த யாழை மீட்டுகிறாய்

தந்தை - மகளின் நட்பைச் சொல்லும் இப்பாடல் ஒரே ஒரு மகளை பெற்ற எனக்கு பிடிப்பதில் ஆச்சரியமில்லை தான் !

இந்த பாட்டை பார்க்கும்போதெல்லாம் நானும், மகளும் தான் தெரிகிறோம்.. மகள்களை பெற்ற எத்தனை அப்பாக்களுக்கு இதே மாதிரி உணர்வு இருக்கிறதோ தெரிய வில்லை !



ஒவ்வொரு தந்தையும் உலகின் அத்தனை சந்தோஷங்களும் தன் மகளுக்கு கிடைக்க வேண்டுமென்று நினைக்கிறான்.. போலவே துயரத்தின் நிழல் கூட தன் மகள் மேல் படக்கூடாது என இளவரசி போல் வளர்க்கிறான். .(வாழ்க்கை அவளுக்கு பின்னர் வேறு வித முகத்தை காட்டுவது தனிக்கதை.....)

ஸ்ரீராம் பார்த்தசாரதியின் அற்புத குரல், முத்துகுமாரின் வரிகள்.. கேட்டு ரசியுங்கள்




விஸ்வரூபம் - உன்னை காணாத நான் இங்கு

பாடல் வரிகள் தெளிவாக புரியும் படி இருப்பதும், சங்கர் மகாதேவன் மிக நன்றாக பாடியிருப்பதும், ஆண்ட்ரியா மற்றும் பிற பெண்களும்  கியூட்



மரியான் - இன்னும் கொஞ்ச நேரம்

அற்புதமான மெட்டு மற்றும் இசையால் நம் மனதை மயக்குவது ரகுமானுக்கு கை வந்த கலை..அந்த வரிசையில் இன்னொரு மெலடி இது.

தனுஷ்- பார்வதி இருவரின் நடிப்பும் எப்படி மிளிர்கிறது..! படம் சொதப்பலாக அமைந்ததில் சற்று வருத்தமே .



பரதேசி - அவத்த பையா 

பரதேசி படம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது; ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல கிராமிய பாடல்... அவத்த பையா



எதிர் நீச்சல் - பூமி என்னை சுத்துதே 

மீண்டும் இன்னொரு சிவகார்த்திகேயன் பாட்டு. பாண்டிச்சேரியின் அழகான தெருக்கள்..ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் போன்ற வரிகள் என பாடல் என்னை மட்டுமல்ல பலரையும் ஈர்த்து விட்டது.

இப்படத்தில் வரும் " எதிர் நீச்சலடி " பாடலும் எனக்கு இதே அளவு பிடித்த இன்னொரு பாடல் !



நேரம் - பிஸ்தா

மெலடி மீது தான் இயல்பாக மோகம் என்றாலும், இப்படி ஜாலியான பாட்டை கேட்டால் வீட்டிலேயே குத்தாட்டம் போடுவதுண்டு...  பலரையும்  இவ்வருடம் ஈர்த்த இன்னொரு ஸ்பீட் பாடல் காசு .. பணம் .. துட்டு.. மணி ..

அர்த்தமே இல்லாமல் .. அதே சமயம் கேட்க செம ஜாலியாய் இருப்பதால் இந்த பாடல் ரொம்பவே பிடித்து விட்டது !



**********
டாப் - 10 பரிசீலனையில் இருந்த மற்ற சில பாடல்கள்...

இவன் வேற மாதிரி - லவ்வுலே லவ்வுலே 



வத்திக்குச்சி - குறுகுறு கண்ணாலே 



******************
சென்ற வருட சிறந்த பாடல்கள் லிஸ்ட் ...

2009- சிறந்த 10 பாடல்கள் : இங்கு 

2010- சிறந்த 10 பாடல்கள் : இங்கு 

2011- சிறந்த 10 பாடல்கள் : இங்கு 

2012- சிறந்த 10 பாடல்கள் : இங்கு 

Wednesday, December 25, 2013

வானவில் - இரண்டாம் உலகம் - மாஸ் - பொன்மாலை பொழுது

பார்க்காத படம் - இரண்டாம் உலகம்

என்னதான் பல நண்பர்கள் இப்படத்தை பற்றி நெகடிவ் ஆக எழுதினாலும், " செல்வராகவன் படம் ....  எப்படி பார்க்காமல் இருப்பது?"  என அற்புதமான, நல்ல பிரிண்ட் வந்ததும் பொறுமையாக DVD வாங்கி வந்தேன்.

ஒரு வெள்ளியன்று மாலை படம் போட்டு பார்க்க துவங்க, சற்று நேரத்தில் " அப்பா, தூங்காதே ; எழுந்திரு " என மகள் எழுப்பினாள் . 3 முறை இதே கதை நடந்தது. !



கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் - எனது மனைவி மற்றும் மகளும் தூங்கி விட்டனர். சரி வாங்க படுக்க போகலாம் என்று படத்தை ஆப் செய்து விட்டு தூங்க சென்று விட்டோம்

மறுநாள் விடாகண்டர்களாக எனது மனைவி மற்றும் மகள் - பகல் நேரத்திலேயே படத்தை போட்டு பார்க்க - இம்முறையும் கால் வாசி படத்தில் இருவரும் தூங்கி விட்டனர்..

இதற்கு மேல் ரிஸ்க் எடுத்து கரன்ட் பில்லை  அதிக படுதிக்குற மாதிரி இல்லை !

தூக்கம் சரியே வராமல் பாதிக்கப்பட்டவர்கள் இப்படத்தின் நல்லதொரு பிரிண்ட் வாங்கி தினம் இரவில் பார்த்து இன்புறலாம் !

மாஸ் ஹோட்டல் ஆதம்பாக்கம்

பதிவர் நண்பர் - மயில் ராவணன் இந்த ஹோட்டல் பற்றி அவ்வப்போது சொல்லியிருக்கிறார். பல முறை இந்த ஹோட்டல் வழியே செல்ல நேர்ந்தாலும் உண்ண முடிந்ததில்லை.

அண்மையில் நண்பன் நந்து சென்னை வந்திருந்த போது அவனது மகனுடன் நாங்கள் இருவரும் சென்றிருந்தோம்.

இங்கு ஸ்பெஷல் - புரோட்டா தான் ! சாப்ட் ஆக - டெலிசியஸ் புரோட்டா மற்றும் சுவையான குருமா - தற்போது மாடியில் ஏசி அறையும்  இயங்குகிறது ! டிவியில் கிரிக்கெட் பார்த்தவாறு - ஜாலியான அரட்டையுடன் பரோட்டாவை  சுவைத்து மகிழ்ந்தோம்

விமர்சன பாணியில் சொல்லணும்னா , மாஸ் ஹோட்டல் - மரண மாஸ் ! டோன்ட் மிஸ் இட் !

இடம் - ஆதம்பாக்கம், வண்டிக்காரன் தெரு மிக அருகில் !

படித்ததில் பிடித்தது 

Plan while others are Playing,
Listen while others are Talking,
Study while others are Sleeping,
Decide while others are Delaying,
Prepare while others are Daydreaming,
Act while others are Thinking,
Begin while others are Procrastinating, and
Persist while others are Quitting.

கிரிக்கெட் கார்னர்

அண்மையில் இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே நடந்த முதல் டெஸ்ட் பல சுவாரஸ்யங்களை தந்தது.

* இந்திய பேட்ஸ்மேன்கள் வேக பந்துக்கு திணறுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, கோலி மற்றும் புஜாரா ஆட்டம் - அசத்தி விட்டது !

புஜாரா - ட்ராவிடுக்கு சரியான replacement   ! அதற்குள் எப்படி சொல்லலாம் என்பவர்கள் புஜாராவின் ஆவரேஜ் 70 என்பதை அறிக !

புஜாரா விரைவில் ஒரு நாள் போட்டிகளிலும் இடம் பெற வேண்டும். அடுத்த உலக கோப்பை வெளிநாட்டில் நடக்க உள்ளதால் - புஜாராவும் ஒரு நாள் அணியில் இடம் பெறுவது அவசியம் !

கோலி - இரண்டாம் இன்னிங்க்சில் செஞ்சுரி தவற விட்டது சிறு வருத்தமே.

மற்றபடி இளம் வீரகளில் தனது determination  மற்றும் aggressiveness- ஆல் பெரிதும் கவர்கிறார் கோலி !

இறுதி நாளில் அவ்வளவு பெரிய ஸ்கோர் அடிக்கவே முடியாது என்று நினைத்ததை பொய்யாக்கி டீ  வில்லியர்ஸ்  மற்றும் டூ ப்ளஸ்சி ஆடிய ஆட்டம் இந்திய பார்வையாளர்களை டென்ஷன் ஆக்கி விட்டது

இருவரும் அவுட் ஆனதால் ஜஸ்ட் எஸ்கேப் !

அடுத்த ஆட்டத்தில் இன்னும் பவுன்சி பிட்ச் இந்தியர்களை எதிர் நோக்கும் என தோன்றுகிறது !

தொல்லை காட்சி என்ன ஆச்சு ?

திங்கள் அன்று தொடர்ந்து வெளியாகிய தொல்லை காட்சி மிக அதிகம் பேர் வாசிக்கும் ஒரு பதிவாக இருந்து வந்தது

இப்போதெல்லாம் பதிவு எழுதுவதே குறைந்து விட்டது என்றாலும் டிவி பார்ப்பது அநேகமாய் நின்று விட்டது.

மகள் 10 ஆம் வகுப்பு படிக்கிறார். எனவே  கேபிள் கட் செய்ய பட்டு விட்டது !

குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் மட்டும் கணினி மூலம் அனைவரும் பார்த்து கொள்கிறோம்

டிவி இல்லாமல் இருப்பதால் அனைவரும் நிறையவே பேசி கொள்கிறோம். இதில் நல்லதும் இருக்கு.. கெட்டதும் இருக்கு...

நல்லது சரி என்ன கேட்டது என்கிறீர்களா ? நிறைய பேசினால் கடைசியில் சண்டையில் போய் சில நேரம் முடிந்து விடுகிறது... !

என்னா பாட்டுடே 

தமிழின் மிகச் சிறந்த 100 பாடல்கள் என பட்டியலிட்டால், அதில் இடம் பிடிக்கத் தக்க பாடல் இது ! (ஆடியோ வடிவத்தை சொல்கிறேன் )

வைரமுத்து எழுதிய முதல் பாடல் இது என்பதுடன், இன்னும் ஏராள சம்பவங்கள் இக்கதை பற்றி சொல்லுவர். வைரமுத்து மனைவி பெயர் பொன்மணி என்பதால் - "பொன் " என்று துவங்கும் படி தனது முதல் பாடல் அமைத்ததாகவும், இப்பாடல் ரிக்கார்டிங் நடந்த அன்று தான் வைரமுத்து- பொன்மணி தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்ததாம் !

பல வரிகள் அற்புதம் என்றாலும் ...

"வானம் எனக்கொரு போதி மரம்;
நாளும் எனக்கது சேதி தரும் " என்ற வரிகளும்

" வான மகள் நானுகிறாள்; வேறு உடை பூணுகிறாள் " என்ற வரிகளும் இன்றைக்கும் ரசிக்க வைக்கிறது  !

பாடலில் நடிக்கும் ராஜசேகர் பின்னாளில்  ராபர்- ராஜசேகர் என ஒளிப்பதிவாளர் - இயக்குனர் ஆனார். இன்று சரவணன் - மீனாட்சியில் குயிலி கணவராக நடிப்பவர் இவரே !

80 களில் சென்னை ட்ராபிக் மற்றும் பேருந்துகள் பாடலில் காண காமெடியாக உள்ளது

வயலின் மற்றும் ப்ளூட் விளையாடும் இப்பாடலை கேட்டு ரசியுங்கள் !



நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்த்துமஸ் நல் வாழ்த்துகள் !

Tuesday, December 24, 2013

என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் கதையா என்று  அலுக்க வைக்காமல் சுவாரஸ்யமாக செல்லும் படம் என்றென்றும் புன்னகை !

தமிழ் சினிமாவில்  " ஒரு டிபரண்ட் ஆன லவ் ஸ்டோரி " என அடிக்கடி சொல்வார்கள். இப்படம் மெய்யாலுமே அத்தகைய ஒரு கேட்டகரி தான் !

கதை 

தனது அம்மா  - அப்பாவை விட்டு ஓடி போனதால் பெண்களை வெறுக்கிறார் ஜீவா. நெருங்கிய நண்பர்கள் வினய் மற்றும் சந்தானம் ! இவர்கள் மூவரும் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன் என " மொட்டை பசங்களாக" சுற்றி வர, வினய் மற்றும் சந்தானம் திடீரென ஒரு நாள் கல்யாணம் செய்து கொள்கிறோம் என கிளம்பி விடுகிறார்கள். நண்பர்களை பிரிந்த ஜீவா - திருமணம் செய்து கொண்டாரா என்பதை சொல்கிறது இரண்டாம் பாதி.

பிடித்தது - 

த்ரிஷா !

அம்மணி 15 வருஷத்துக்கு மேலா நடிக்கிறார். இப்படத்தில் செம கியூட் !  நாள் ஆக - ஆக தான் நடிப்பில் மெச்சுரிட்டி கூடுது . வெரி குட் பெர்பார்மான்ஸ் !




ஜீவா - செம வித்யாசமான பாத்திரம். வில்லனே இல்லாத இக்கதையில் நெகடிவ் பாத்திரம் என்றால் - அது ஜீவா மட்டும் தான். ஈகோ-வின் extreme -ஐ  ஜீவா பாத்திரம் வழியே காண்பிதுள்ளார் இயக்குனர்.

கோபம் வர வைக்கும் ஜீவா பாத்திரம் மீது - இறுதி கட்டங்களில் நமக்கு இரக்கம் வர - இயக்குனர் ஜெயித்து விட்டார் !

சந்தானம் - சிறு இடைவெளிக்கு பின் சிரிக்க வைத்துள்ளார். ( சில பழைய ஜோக் மற்றும் சில அசிங்க காமெடியை குறைவான அளவென்பதால் மன்னிக்கலாம் !)

தண்ணி அடித்து விட்டு வந்து மனைவி முன் சந்தானம் அடிக்கும் லூட்டி - 5 நிமிடம் நம்மை விடாமல் சிரிக்க வைத்தது



அழகு ஆண்ட்ரியா ! நடிகையாகவே  வந்து போகிறார்.

இடைவேளைக்கு பின் த்ரிஷா - ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகள் - அவர்கள் நட்பு +  சண்டையை மிக இயல்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருப்பது ! இருவருமே அனுபவம் வாய்ந்த நடிகர்கள் என்பதால் இக்காட்சிகளை மிக ரசிக்க முடிகிறது !

பிடிக்காதது 

இசை - "ப்ரியா - ப்ரியா" தவிர மற்ற பாட்டுகள் ரொம்ப சுமார். காதல் கதைக்கு பாடல்கள் ரொம்ப முக்கியம். ஹாரிஸ் சொதப்பிட்டார்

படம் எந்த அவசரமும் இன்றி நிதானமாக நகர்கிறது - இது தொய்வு விழுந்த உணவர்வை சற்று தருகிறது

***********
மொத்தத்தில்

நிச்சயம் பார்க்க கூடிய டீசண்ட் படம்;

காமெடி மற்றும் ஜீவா -த்ரிஷாவுக்காக ஒரு முறை பார்க்கலாம் !

Wednesday, December 18, 2013

நவீன சரஸ்வதி சபதம், இன்சிடஸ் -2 & மெமரீஸ் - விமர்சனம்

ண்மையில் கண்ட ஒரு ஆங்கிலம், ஒரு தமிழ் மற்றும் ஒரு மலையாள படம் பற்றிய சுருக்கமான விமர்சனம் இது:

இன்சிடஸ் -2  (ஆங்கிலம்) 

பொதுவாய் மிரட்ட வைக்கும் பேய் படங்களை சுத்தமாய் பார்க்காத ஆள் நான். சின்ன வயதிலிருந்தே  அப்படியே வளர்ந்தாச்சு. இனிமேயா மாற்றி கொள்ள முடியும் ?

ஆனா நம்ம வீட்டம்மாவுக்கு பேய் (படங்கள்) என்றால் உசிரு.! :)



பெண் வேறு இந்த படத்தை பார்த்தே ஆகணும் என அடம் பிடிக்க, ஒரு நள்ளிரவில் DVD -ல் பார்க்க துவங்கினோம்.

ஆங்கில படத்துக்கு ஆங்கில சப் டைட்டில் இருந்தும் கூட படத்தை புரிந்து கொள்வது மிக கடினமாக இருந்தது. ஒரு மாதிரி குன்சாக கலந்து பேசி தான் கதையை புரிந்து கொள்ள வேண்டியிருந்தது

கதை பற்றி எது சொன்னாலும் சுவாரஸ்யம் குறைந்து விடும்.

வீடுதிரும்பல் பரிந்துரை - பேய் மற்றும் ஹாரர் பட பிரியர் என்றால் பாருங்கள். 2 நிமிடத்துக்கு ஒரு முறை அலற/ திடுக்கிட வைக்கிறார்கள்.

நவீன சரஸ்வதி சபதம் 

ரொம்ப மாடர்ன் ஆன சிவலோகம். கணினியில் ஜாலியாக விளையாடும் சிவன். ஆங்கிலம் பேசும் பார்வதி என ஆரம்பம் நல்லா தான் இருந்துச்சு. Plot கூட சுவாரஸ்யமே. ஆனால் இடைவேளைக்கு மேல் உட்கார முடியலை ! பாதி படத்துக்கு பின் ரம்பம்னா ரம்பம் - கழுத்து அறுந்து போச்சு.

ஹீரோயின் நிவேதா தாமஸ் ஓரளவு நல்லா இருந்தார். அவரும் பாதி படத்துக்கு மேலே வர வாய்ப்பு இல்லாம போயிடுது.



வீடுதிரும்பல் பரிந்துரை - டிவியில் போடும்போது முதல் பாதி மட்டும் பார்க்கலாம் !

மெமரீஸ் ( மலையாளம்)

படம்னா இது படம் ! அட்டகாசம் !

க்ரிப்பிங்  ஆன ஒரு கதை. சுவாரஸ்யமான திரைக்கதை. நகம் கடிக்க வைக்கும் காட்சிகள். புத்திசாலி தனமான கிளைமாக்ஸ் என எல்லா விதத்திலும் கவர்கிறது படம்.



பிரிதிவி ராஜ் - ரொம்ப இயல்பா நடிச்சிருக்கார். மற்ற பாத்திரங்களும் Very apt !

மனைவியை இழந்து வாடும் ஒரு போலிஸ் காரர் கதை என்ற விதத்தில் வேட்டையாடு விளையாடு வாசம் இருந்தாலும் - அந்த ஒரு வரியுடன் ஒற்றுமை நின்று விடுகிறது ! இது டோட்டலி வேற விதமான படம் !

வீடுதிரும்பல் பரிந்துரை -   அவசியம் பாருங்கள் இந்த மலையாள படத்தை !

Wednesday, December 11, 2013

வானவில் 11-12-13

பார்த்த படம் 1- வில்லா - பீட்சா - 2

சற்று வித்யாசமான கதை களம் தான். ஆனால் அமானுஷ்ய காட்சிகள் இதோ வருது, அதோ வருது என சொல்லி சொல்லி கடைசியில் தூக்கம் தான் வந்தது.

ஒரே வீட்டுக்குள் நடக்கும் சம்பவம் என்பதால் பீட்சா - 2 என்று விளம்பரம் செய்தனர் போலும். ஆனால் பீட்சா -வின் செய்நேர்த்தி இங்கு மிஸ்ஸிங்.

கதை பற்றி என்ன சொன்னாலும் சுவாரஸ்யம் குறைந்து விடும். ஒரு முறை பார்க்க தக்க படம் தான் ! நேரமிருந்தால் காணுங்கள் !

பார்த்த படம் -2 - ஜன்னல் ஓரம் 

விமல், பார்த்திபன், விதார்த் நடித்த மலையாள ரீ மேக்.



மலை பகுதியில் பயணிக்கும் பேருந்தும், அதை ஒட்டிய நகைச்சுவையும் சற்று கிச்சு கிச்சு மூட்டியது. ஆனால் பின் க்ரைம் த்ரில்லர் போல சென்று எங்கோ திசை மாறி விட்டது

நடிகர்கள் விஜய், சூர்யா துவங்கி பலரும் நடிக்க வந்த போது மிக சுமாராகவும், பின் நடனம், சண்டை, நடிப்பு என எல்லா டிபார்ட்மெண்ட்டிலும் சிறிது சிறிதாக வளர்ச்சி அடைவது வழக்கம். ஆனால் விமல் சற்றே வித்யாசமாக - ஆரம்ப படங்கள் ( பசங்க மற்றும் களவாணி)  ஓரளவு நன்கு நடித்தவர் அதன் பின் ஒரே வித நடிப்பில் அலுப்பூட்டுகிறார்.

இதே படத்தில் நடித்துள்ள விதார்த் எவ்வளவு அனாயசமாக நடிக்கிறார் ! விமல் தம்பி நடிப்பில் கற்று கொள்ள நிறைய இருக்கு !

ஒரு சுமாரான மலையாள படம் - அதை ரீ மேக் செய்து இன்னும் சோதித்து விட்டனர்.

ரொம்ப ரொம்ப சுமார் !

அய்யாசாமி கார்னர் 

" எப்ப கார் வாங்க போறே ?" - 1998

" டேய் .. ஒரு கார் வாங்குடா " - 2003

" ஏண்டா கார் வாங்க மாட்டேங்குறே ? என்ன தாண்டா உனக்கு பிரச்சனை ?" - 2008

" அப்பா.. இந்த வருஷத்துக்குள்ளே ஒரு கார் வாங்கிடு ... இல்லாட்டி அவ்ளோ தான். உன்கூட நான் பேசவே மாட்டேன் " - 2013

அண்ணன், அக்கா, நெருங்கிய நண்பர்கள் என பலரும் 15 வருடத்துக்கும் மேலாய் திட்டி தீர்த்து விட்டனர். அப்போதெல்லாம் மசியாத அய்யாசாமி மகளின் பேச்சுக்கு மட்டும் கட்டுப்பட்டு விட்டார்...

ஆம். நேற்றைய தினம் அய்யாசாமி ஒரு கார் புக் செய்துள்ளார். தனது 42 ஆவது வயதில் - இன்று காலை முதல் சின்சியர் சிகாமணியாக கார் டிரைவிங் க்ளாஸ்ம் செல்ல துவங்கி விட்டார்.

ஆகவே - மடிப்பாக்கம் மற்றும் வேளச்சேரியில் - நடந்தோ - டூ வீலரிலோ பயணிக்கும் மக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்

தவளை கதை 

ஓரிடத்தில் மலை ஏறும் போட்டி நடக்கிறது. அதில் கலந்து கொள்ள நிறைய தவளைகள் தயாராக இருக்கின்றன.

அது செங்குத்தான மலை என்பதால் " இதில் எப்படி ஏறுவது?" என்கிறது ஒரு தவளை. இன்னொரு தவளை யோ  "இதில் யாரும் ஏறவே முடியாது" என்கிறது.

" இதில் ஏறுபவர்கள் யாரும் உயிரோடு இருப்பதில்லை" என்கிறது மூன்றாவது தவளை

இப்படியே ஆளுக்காள் சொல்ல ஏறும் முன்பே தவளைகள் துவண்டு போகின்றன.

போட்டி ஆரம்பித்து சில தவளைகள் ஏற முயன்றும் கூட அந்த காமன்ட்கள் ஏற்படுத்திய பயத்தில் அவையும் கீழே விழுந்து விடுகின்றன

இதில் ஒரே யொரு தவளை மட்டும் எப்படியோ தட்டு தடுமாறி எப்படியோ உச்சிக்கு போய் பரிசும் வாங்கி விட்டது

அப்புறம் தான் தெரிந்தது பரிசு பெற்ற அந்த தவளைக்கு காத்து கேட்காது என்கிற விஷயம் !

நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களில் நாமும் காது கேட்காதவர்கள் போல் நடந்து கொண்டால் நாமும் நம் இலக்கை ஜெயித்த அந்த தவளை போல் அடையலாம்"  இந்த கதையை ஒரு விழாவில் சொன்னது சூப்பர் ஸ்டார் ரஜினி !

என்னா பாட்டுடே 

இன்றைய தேதியை கவனித்தீர்களா?

11-12-13 !  வித்யாசமான நாள் இல்லை ?

டிசம்பர் 11- பாரதியார் பிறந்த நாள். டேப் ரிக்கார்டர் இருந்த கல்லூரி காலத்தில் ஒரு கேசட் முழுதும் பாரதியார் பாடல்களை ரிக்கார்ட் செய்து கேட்டு கொண்டிருப்பேன்.



நிற்பதுவே நடப்பதுவே - ராஜாவின் இசையில், ஹரீஷ் ராகவேந்திராவின் இனிய குரலில்...




போஸ்டர் கார்னர்


முகநூலில் கிறுக்கியவை

எந்த ஒரு செயலையும் தொடங்குவது தான் கடினம். தொடங்கிய பின் மற்றவை தானாகவே நடக்கிறது. நம்மில் பலரும் எத்தனையோ விஷயங்களை "அப்புறம் செய்யணும்" என்றே துவங்காமல் இருந்து விடுகிறோம்.

போலவே தொடங்கிய ஒரு நல்ல விஷயத்தை சரியாக முடிப்பது இன்னொரு பெரிய சாலஞ்ச். (மாடிக்கு ஒரு பீரோவை தூக்கி செல்லும்போது கடைசி சில படிகளில் நிரம்ப திணறுவோம்.. நினைவிருக்கா? எந்த ஒரு போட்டி ஓட்டத்திலும் கடைசி சில நிமிடம் இழுத்து பிடித்து ஓடுவது தான் மிக பெரிய சவால் !)

எப்படி தொடங்குவது, எங்கே சரியாக முடிப்பது இதை சரியாக செய்ய துவங்கினால் - நினைத்த எதையும் அடையலாம் !

எதையும்.. எதையும்.. எதையும்... !

இதையே வடிவேலு பாணியில் சொல்லணும்னா " எதையும் ப்ளான் பண்ணி செய்யணும்... ஓகே?"

************
அருமையான (!!??) சிந்தனையெல்லாம் வண்டி ஓட்டும் போது மனதில் வந்து, வண்டியை நிறுத்தும்போது மறைந்து போகிறது.

நம்ம முகநூல் பிரபலங்கள் எல்லாம் எப்படித்தான் நினைவில் வச்சு போடுறாங்களோ ?

Friday, December 6, 2013

வேலை செய்யும் நிறுவனத்தை இணையத்தில் திட்டலாமா?

ன்றைக்கு இணையத்தில் எழுதுவோரில் பெரும்பாலானோர் இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ - ஏதோ ஒரு நிறுவனத்தில் பொட்டி தட்டுவோர் தான். சொந்த தொழில் புரிந்தவாறே தொடர்ந்து எழுதும் சிலர் உண்டெனினும் அவர்களை விரல் விட்டு எண்ணி  விடலாம் !

எந்த ஒரு நிறுவனமும் "அற்புதமான ஒன்று " என சொல்லி விட முடியாது .. எந்த மனிதரிடம் தான் குறைகளே இல்லை..நிறுவனமும் மனிதர்களால் ஆனது தானே ?

நான்கு பேர் எங்கு ஒன்றாய் சேர்ந்தாலும் -  பாலிடிக்ஸ்-சும் சேர்வது இயல்பு. நிறுவனமும் விதி விலக்கல்ல. "வல்லான் வைத்ததே சட்டம்" என்பது  எங்கும் பொருந்தும் !

முஸ்தீபுகள் போதும். விஷயத்துக்கு வருவோம்..

Blog- பேஸ்புக் - கூகிள் பிளஸ் - டுவிட்டர் என இணையத்தின் பல இடங்களிலும் நமது கருத்துக்களை, வருத்தங்களை, சந்தோஷத்தை, ஏமாற்றத்தை பகிர்ந்த வண்ணம் இருக்கிறோம். இதில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தில் நமக்கு கிடைக்கும் கசப்பான அனுபவம் பற்றி எழுதலாமா என்பது பற்றி சில கருத்துக்கள் இங்கு ......
***************
னக்கு தெரிந்து இணையத்தில் எழுதுவோரில் 90 % க்கும் அதிகமானோர் தங்கள் நிறுவனத்தின் குறைகளை பற்றி மூச்சு விடுவதில்லை .. ஆனால் ஒரு சிலர் அவ்வப்போது தங்கள் மேனேஜர் மீதும், நிறுவனம் மீதும் சில வருத்தங்களை பதிவு செய்யவே செய்கிறார்கள். இப்பதிவு அவர்களுக்காக தான் !

வள வளா என்று இழுக்காமல் நேரடியே சொல்லி விடுகிறேன் - என்னை பொறுத்த வரை - நாம் வேலை செய்யும் நிறுவனம் - அல்லது அங்கு கிடைக்கும் கசப்பான அனுபவம் அல்லது மனிதர்கள் பற்றி  எழுதுவதை முழுதும் தவிர்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன் ! இதனை ஒரு பதிவராக மட்டுமல்லாது - ஒரு நிறுவனத்தின் சட்ட விஷயங்களை நிர்வகிக்கும் மனிதராகவும் சொல்கிறேன் என்பதை அறிக !

ஏன் நிறுவனம் பற்றி  எழுத கூடாது?

சட்ட ரீதியான விஷயங்களுக்கு முன் தார்மீக ரீதியில் சில விஷயங்கள் :

வீடோ, அலுவலகமோ - எல்லா இடங்களிலும் பிரச்சனைகளும்,  புரிந்து  கொள்ளாமையும் இருக்கவே செய்யும். அதற்காக வாயை மூடி கொண்டிருக்க வேண்டுமென்று இல்லை. அந்தந்த பிரச்சனைகளை அங்கங்கே சந்திக்க வேண்டும்.

எனக்கும் நிறுவனங்களில் பல முறை கருத்து வேறுபாடுகள் வருவதுண்டு. அவற்றை அங்கேயே சர்வ நிச்சயமாக பேசி விடுவேன். எதையும் உள்ளுக்குள் வைத்து கொண்டு குமுறுவது ரத்த அழுத்தத்தை தான் அதிகரிக்கும்.

ஆனால் கருத்து வேறுபாட்டை முடிந்த வரை எவ்வளவு மென்மையாக சொல்ல முடியுமோ அவ்வளவு மென்மையாக சொல்ல முற்படுவேன். சில நேரங்களில் நம் பேச்சு எடுபடும். பல நேரங்களில் படாது. சின்ன விஷயம் என்றால் வடிவேலு மாதிரி "ரைட்டு விடு " என போய் விடுவேன்.

நமது எண்ணங்களுக்கு மாறான - சில அடிப்படை விஷயங்களில் கருத்து வேறுபாடு எனில் - அவற்றுக்காக வேலையை உதறிய சம்பவம் 3 முறை எனக்கு நடந்திருக்கிறது. அந்த ஒவ்வொரு நிகழ்விலும்  எனக்கு உடன்பாடில்லாத விஷயங்கள் தொடர்வதால் - பொறுமையாக ஓரிரு மாதத்தில் வேறு வேலை பார்த்து கொண்டு வெளியில் வந்திருக்கிறேன்.

அத்தகைய நிகழ்வுகளின் போது எனது குடும்பம் மற்றும் மிக நெருங்கிய ஒரு சில நண்பர்கள் தவிர மற்ற யாரிடமும் (குறிப்பாக புதிதாக இண்டர்வியூ செல்லும் இடத்தில்) ஏற்கனவே வேலை செய்த நிறுவனத்தின் குறைகளை பற்றி பேசியது கிடையாது. காரணம் ரொம்ப சிம்பிள் -  வேற கம்பனியை பற்றி தவறாய் பேசுபவன் நாளை நம் கம்பனி பற்றியும் இப்படி பேசுவான் என இன்டர்வியூவில் உள்ளவர்கள் நினைப்பார்கள் என்ற லாஜிக் தான் !

எனது அனுபவம் சொல்வது - இதனை எழுத எனக்கு தகுதி இருக்கிறது என்பதற்காக மட்டுமே. மற்றபடி எனது சுய பெருமை பேச அல்ல !

ஆக - தார்மீக ரீதியில் சொல்ல வேண்டுமென்றால் - நிறுவனத்தின் நடவடிக்கைகள் பிடிக்கலை என்றால் பேசி பார்க்கலாம் - அப்போதும் அவர்கள் மாறலை என்றால் - பொறுமையாய் அடுத்த கடை பார்த்து விட்டு நடையை கட்டலாம்.(அதுக்குன்னு வருஷத்துக்கு ரெண்டு மூணு கம்பனி மாற சொல்லலை தம்ப்ப்ப்ரி )

சரி இப்போது சட்ட மற்றும் தனிப்பட்ட விஷயங்களுக்கு வருவோம் :

1. நாம் இணையத்தில் நிறுவனம் பற்றி எழுதியதை - தனது பாஸ் அல்லது HR படித்தால் என்ன நினைப்பார்கள்- என்ன ஆக்ஷன் எடுப்பார்கள் என்ற எண்ணம் இருப்பதால் தான் பலரும் எழுதுவதில்லை.

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை "- உண்மையில் மேலே சொன்ன பயம் நல்லது !

இது பற்றிய கவலையில்லாதோர் தான் நிறுவனம் பற்றிய தங்கள் மனக்குமுறலை இணையத்தில் எழுதுகிறார்கள்.

நீங்கள் வேலைக்கு சேரும்போது பல்வேறு டாக்குமென்டுகளில் கையெழுதிட்டிருப்பீர்கள். அவற்றில் ஒன்று "Non Disclosure Agreement". இதில்
நிறுவனம் குறித்த எந்த ஒரு ரகசியத்தையும் வெளியில் சொல்ல மாட்டீர்கள் என்ற ஒரு வரி சர்வ நிச்சயமாக இருக்கும். கூடவே அப்படி சொன்னால் - அதற்கு என்ன தண்டனை என்பதுவும் கூட லேசாக சொல்லப்பட்டிருக்கும்.

நீங்கள் நிறுவனம் பற்றி எழுதுவதை அவர்களே பார்த்தால் -  முதலில் இதனைத்தான்  ("Non Disclosure Agreement") கையில் எடுப்பார்கள்.


நாம் சொல்கிற எந்த பதிலும் எடுபடாது. சில நேரங்களில் முதல் முறையே நாம் வெளியேற நேரிடலாம். சில நேரம் வார்னிங் தந்து பின் நமது இணைய நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்கலாம்

இணையத்தில் நிறுவனம் குறித்த நமது கோபத்தை பதிவு செய்வதை நாம் வேலை செய்யும் எந்த நிறுவனமும் விரும்புவதில்லை - பொறுத்து கொள்வதில்லை என்பதை அறிக !

2. புதிதாக ஊழியர்கள் வேலைக்கு வரும்போது, இணையத்தில் (குறிப்பாக முகநூல்) அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்வையிடுவது பல்வேறு நிறுவனங்களில் pre induction -ன் ஒரு முக்கிய அங்கமாக மாறி கொண்டிருக்கிறது. என்னை போல நிறுவனத்தில் லீகல் வேலைகளை கவனிக்கும் நண்பர்கள் பலரும் இத்தகைய சம்பவங்களை பகிர்கிறார்கள்.

அரசியல் சார்ந்தோ, அல்லது சதா சர்வ காலம் முகநூலில் புழங்குபவராகவோ, தான் வேலை செய்யும் நிறுவனத்துக்கு எதிராய் எழுதுபவராகவோ இருந்தால் எடுத்தவுடன் நிராகரித்து "ஆபர் லெட்டர் " வழங்குவதையே நிறுத்தலாம்.

சில நிறுவனங்கள் இதை வேறு விதமாக அணுகுவர். பொய்யான எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிபிகேட் அல்லது இணைய புழக்கம் அதிகம் உள்ள மனிதர்கள் வேலைக்கு வந்து விட்டால் சரி கொஞ்ச நாள் போகட்டும் என அவர்கள் வேலையில் எப்படி இருக்கிறார்கள் என பார்ப்பார்கள். வேலையில் பிரச்சனை என்றால் - அதை சொல்லி அனுப்பாமல் மேலே சொன்ன இரண்டு காரணங்களில் ஒன்றை சொல்லி வெளியே அனுப்புவார்கள்.

"ஒரு கம்பனியில் வேலை இல்லாவிட்டால் இன்னொரு கம்பனி " என்று எளிதாக சொல்லலாம். ஆனால் " முன்பு வேலை செய்த நிறுவனம் பற்றி தவறாக எழுதிய நபர் புதிதாக வேலைக்கு சேரும் நம் நிறுவனம் பற்றியும் எழுத மாட்டார் என்பது என்ன நிச்சயம்?"  என எந்த நிறுவனமும் யோசிக்கும். இதனை நினைவில் கொள்க !

******************
ஏற்கனவே சொன்ன விஷயம் தான் - நிறுவனத்தில் ஒரு விஷயம் பிடிக்கா விடில் அங்கேயே பேசி விடுதல் உத்தமம் ! இணையத்தில் அல்ல !

நன்றி !

Friday, November 29, 2013

இப்படியும் சில இளைஞர்கள்...

ஜூனியர் அச்சீவர் .. இது ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் பெயர்.. (Website: http://www.jaindia.org/)

இவர்கள் செய்து வரும் அற்புதமான காரியம் - ஒவ்வொரு  வார இறுதியிலும் அரசு பள்ளி மாணவர்களுடன் ஒரு நாள் முழுவதும்  செலவிட்டு - பல்வேறு வித படிப்புகள் குறித்த விழிப்புணர்வை வர வைப்பது ...

கடந்த 4 ஆண்டுகளாக எங்கள் வீட்டருகே உள்ள புழுதிவாக்கம் தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியில் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதில் எனக்கு பெரும் மன நிறைவு கிடைக்கிறது.

ஒரு காலத்தில் என்னை போன்ற நடுத்தர மக்களும் படித்தது இத்தகைய பள்ளிகளில் தான் ! இன்றோ - இந்த பள்ளியில் படிப்போர் அநேகமாய் -  கூலி வேலை அல்லது வீட்டில் வேலை செய்வோரின் குழந்தைகளே. அவர்களுக்கு இவ்வளவு படிப்புகள் இருக்கிறது என்பதே தெரியாது ! ஒரு தோழன்/ தோழி போல  ஏழெட்டு மணி நேரம் அவர்களுடன் செலவழித்து - அவர்களுக்கு எந்த  துறையில் அதிக ஆர்வம் இருக்கிறது என்பதையும் கண்டறிந்து - அது சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்வார்கள் இந்த நிறுவனத்தினர்.

ஜூனியர் அச்சீவர் என்பது ஒரு மிக பெரும் அமைப்பு . அதனுடன் காக்னிசன்ட் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து இந்த நற்செயல்களை செய்கின்றன.



தொடர்ந்து நான்காவது ஆண்டாக நாளை  சனிக்கிழமை காக்னிசன்ட் நிறுவனத்தை சேர்ந்த 14 வாலண்டியர்கள் தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியில் - 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் - படிப்புகள், வேலை வாய்ப்பு பற்றி  - உரையாட உள்ளனர். மட்டுமல்ல - தங்களது தொலை பேசி மற்றும் மெயில் முகவரி தந்து - அவர்களுக்கு படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் எந்த குழப்பம் இருப்பினும் தொடர்பு கொள்ளுமாறு கூறுவர் இவர்கள் !

செய்தி ஊடகம் என்றாலே - நெகடிவ் செயல்களை அதிகம் பேசும் - இருப்பினும் சத்தமின்றி இப்படி நடக்கும் நற்செயல்களையும் பாராட்டுவோம். பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

நான் செய்வது என் வீட்டுருகே உள்ள ஒரே ஒரு பள்ளிக்கு மட்டுமே. ஆனால் 22 வயது முதல் 25 வயது வரை உள்ள ஏராள இளைஞர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் இப்படி எதோ ஒரு பள்ளியில் தங்கள் வார இறுதியை செலவிடுகிறார்கள். இவர்களால் சமூகத்தில் ஒரு சிறு மாறுதலை உண்மையில் விளைவிக்க முடிகிறது... பாசிடிவ் ஆன மாறுதல் !

இதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். 

தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் - மிகுந்த முயற்சி எடுத்து - சென்னையை சேர்ந்த ஹிந்துஸ்தான் இஞ்சினியரிங் கல்லூரியில்   4 இலவச சீட்டுகள் (கல்லூரி பீஸ் முதல் பஸ் சார்ஜ் வரை அனைத்தும் இலவசம்!) பெற்றுள்ளனர். ஆனால் இந்த 4 இலவச சீட்டுகளில் சேரக்கூட மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியது இல்லை. யாரேனும் ஒரே ஒருவர் - ஓரிரு வருடத்துக்கு ஒரு முறை தான் அந்த சலுகையை பயன்படுத்தி சேருவர். 

ஆனால் கடந்த 2 வருடங்களாக நிலைமை மாறி விட்டது. இப்போது ஒவ்வொரு வருடமும் 4 மாணவர் அல்லது மாணவி அந்த இலவச சீட்டை பயன்படுத்தி சேர்கிறார். 

இப்போது எங்கள் முன் இருப்பது வேறு விதமான சாலஞ்ச். அப்படி சேரும் மாணவர்கள் பலர் ஆங்கில மீடியமில் இஞ்சினியரிங் படிக்க திணறுகிறார்கள். படிப்பை நிறுத்தி விடலாமா என்றும் பலர் புலம்புகிறார்கள். 

இது போன்ற பிரச்சனை வராமல் தடுக்க 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் (Spoken  & Written English ) பள்ளிக்கு வெளியிலிருந்து ஒரு நண்பர் வந்து இலவசமாய் பாடம் சொல்லி தர ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் - தினம் காலை ஒரு மணி நேரம் மற்றும் சனிக்க்ழமைகளில் முழு நாளும் இவர்களுக்கு  ஆங்கிலம் சொல்லி  தருகிறார்.ஓரிரு வருடத்தில் இப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்திலும் நல்ல பேசும் மற்றும் எழுதும் திறன் பெறுவார்கள் என நம்புகிறோம் !

இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் என்ன செய்யலாம் ?

1. ஜூனியர் அச்சீவர்-ல் ஒரு வாலண்டியராக உங்களை இணைத்து கொள்ளலாம். அவர்கள் தரும் சிறு ட்ரைனிங்கிற்கு பிறகு - அனைத்து சனிக்கிழமைகளில் இல்லையென்றாலும் வருடத்தில் சில சனிக்கிழமையாவது இத்தகைய பள்ளி மாணவ மாணவிகளிடம் உங்கள் கருத்தை/அனுபவத்தை பகிரலாம்.



2. உங்கள் வீட்டருகே உள்ள பள்ளி அல்லது நீங்கள் படித்த பள்ளியில் இந்த நிகழ்வை நடத்த   வேண்டுமெனில் - குறிப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது குறிப்பிட்ட பொறுப்பு ஆசிரியர்  தொலை பேசி  எண் தந்தால் - அப்பள்ளி மாணவர்களுக்கும்  இத்தகைய  ஒரு நாள் பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் !

சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த மூலை, முடுக்கில் இருக்கும் பள்ளிக்கும் வந்த இந்நிகழ்வை நடத்த முடியும். பள்ளியிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. அவர்கள் தர வேண்டியது அனுமதி மட்டுமே !

3. மடிப்பாக்கம் அல்லது புழுதிவாக்கம் அருகில் நீங்கள் இருந்தால் - நாளை காலை 9.30 முதல் மதியம் 3.30 வரை நடக்கும் இந்த நிகழ்வை நீங்கள் நேரில் வந்து பார்வையிடலாம் ! நேரில் வந்து பார்த்தால் நீங்கள் நெகிழ்ந்து போவீர்கள் என்பது மட்டும் உறுதி !

4. இந்த தகவலை உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்தால்- அவர்களில் ஆர்வம் இருப்போர் வாலண்டியர் ஆகலாம். அல்லது குறைந்த பட்சம் தங்களுக்கு தெரிந்த அல்லது தாங்கள் படித்த பள்ளியில் இந்த பயனுள்ள நிகழ்வு நடக்க ஏற்பாடு செய்யலாம்

********************
சென்ற ஆண்டுகளில் நடத்திய இதே நிகழ்வு குறித்த படங்கள் மற்றும் வீடியோக்கள் இங்கு காணலாம் :

http://veeduthirumbal.blogspot.com/2011/08/blog-post.html
**************
தொடர்புடைய பிற பதிவுகள் :

அரசு பள்ளியில் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி 

சொந்த காசில் அரசு பள்ளி விழா நடத்தும் பெரியவர்கள் 

யுவகிருஷ்ணா - அதிஷா- மோகன் குமார் 

புழுதிவாக்கம் பள்ளியில் ஒரு விழா 

Wednesday, November 27, 2013

இணையப் பித்து !

ண்பர்  வா. மணிகண்டன் தினம் ப்ளாக்  எழுதுவது பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்

இது என்னுள் நிறைய எண்ணங்களை கிளறி விட்டது ....

*************

"தினம் பதிவு எழுதுவது பெரிய நேர விரயம் ; அதனால் பத்து பைசா பிரயோஜனம் இல்லை என்பதை எத்தனையோ நண்பர்கள் சொல்வார்கள் .. (எனக்கும் சொன்னார்கள்); சிலர் " எங்க காலம் மாதிரி வருமா ? இப்பலாம் யார் நல்லா எழுதுறாங்க சொல்லு"  என்று சொல்வார்கள் :) அது ஒருவித ராகிங் என்றும் கொள்ளலாம் !

*************

சிற்சில மக்கள் பதிவு எழுதுவது வேஸ்ட் என்று சொல்லும்போது " பொறாமையில் சொல்கிறார்கள்; அவர்களுக்கு சரக்கு தீர்ந்துடுச்சு ; அதனால் தான்  அப்படி சொல்கிறார்கள் " என்றெல்லாம் நினைத்தேன்

தினம் எழுதுவதும் அதன் ஊடாக நான்கைந்து கமண்ட் மற்றும் பத்து பன்னிரண்டு லைக் வாங்குவதும் பெரிய போதை. இதில் மிக பெரிய கொடுமை அடிக்கடி நமக்கு எத்தனை லைக் மற்றும் கமண்ட் வந்திருக்கிறது என்று எட்டி பார்ப்பது தான். அப்படி அடிக்கடி பார்ப்பது நமக்கே பிடிக்காது. ஆனாலும் அப்படி செய்வதை தடுக்க முடியாது. பதிவு போட்டு விட்டு  - கணினியில் அமராமல் வேறு வேலையை பார்க்கும் ஆசாமி என்றால் லைக் மற்றும் கமண்ட்டுக்கு எட்டி பார்க்கும் பிரச்சனை இல்லை. நாமோ கணினியிலேயே அமரும் ஆட்கள். எட்டி பார்க்க தான் தோன்றும். கூடவே இப்படி பார்க்கிறோமே என்ற குற்ற உணர்வும் தலை தூக்கும்

*************
நூறு பேர் சொல்லும்போது - தினம் பதிவு எழுதுவது - முட்டாள் தனம் என்று தெரியாது - அதை நாமே உணர ஒரே ஒரு வழி தான்.

பல்லை கடித்து கொண்டு சில வாரங்களோ, சில மாதங்களோ பதிவு எழுதாமல் இருப்பது மட்டுமே - தினம் பதிவு எழுதுவது எத்தனை பெரிய முட்டாள் தனம் என்று உணர ஒரே ஒரு வழி. இதற்கு குறைவான விலையில் இந்த தெளிவை அடைய முடியாது. முடியவே முடியாது !

இந்த காலத்தில் - நாம் தொடர்ந்து பதிவு எழுதிய போது செய்த முட்டாள் தனங்கள் - போட்ட அனாவசிய சண்டைகள் எல்லாம் வரிசை கட்டி மனதில் வந்து போகும்; பாராட்டு / அங்கீகாரம் என்கிற விஷயத்துக்காக எவ்வளவு கூத்தடித்துள்ளோம் என்று நம்மை நினைத்து நமக்கே சிரிப்பு வரும்

எனக்கும் இது நிகழ்ந்தது ;

*************
ஒரு நேரத்தில் " இனி இணையத்தில் புழங்குவதை குறைப்போம் " என முடிவெடுத்து - Dashboard -ல் 30 க்கும் மேல் பதிவுகள் இருக்க, எப்படியோ தினம் பதிவு போடுவதை நிறுத்தினேன்

சந்தேகமே இல்லை - தினம் பதிவு எழுதுவதும், அதன் விளைவாய் -  இணையமே கதியாய் கிடப்பதும்  ஒரு போதை தான்.

இணையம் மூலம் நல்ல நட்புகள்  கிடைக்கின்றன. உண்மை. ஆனால் ஒரு அளவுக்கு மேல் - நம் குடும்பத்தாரை விட - இணைய மக்களே நம்மை அதிகம் புரிந்து கொள்கிறார்கள் - பாராட்டுகிறார்கள் என்று நம் மனது நினைக்க ஆரம்பிக்கும் அபாயமும் இருக்கிறது

*************
சிகரெட் பழக்கத்தை நிறுத்தும் சிலர் - அதை நிறுத்தும் போது பாக்கு போடும் பழக்கத்தை துவங்குவர்; அப்படித்தான் சிலர் ப்ளாக் எழுதுவதை நிறுத்தி விட்டு கையோடு கையாக - முகநூல் அல்லது கூகிள் பிளஸ்சில் சென்று ஐக்கியமாகி விடுகிறார்கள்

இதுவும் நான்  செய்தேன்

பின் அதுவும் குறைந்தது

*************
இங்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்தி விடுகிறேன். தொடர்ந்து பதிவு எழுதிய காலத்திலும் எனது அலுவலக வேலையில் எந்த சிறு  குறையும் வைத்தது இல்லை. ஒன்று சொல்லட்டுமா ? அந்த இரு வருடங்களும் -Annual appraisal -ல் அதிக இன்க்ரீமென்ட் வாங்கிய வெகு சிலரில் நானும் ஒருவன்...

*************
பதிவு எழுதிய கடந்த சில வருடங்களில் ஓய்வு நேரம் முழுக்க என்ன பதிவு எழுதுவது என்று யோசித்தது போக - இப்போது அதே நேரத்தை - பாடல் கேட்கவும், எனது துறை சார்ந்து படிக்கவும், எழுதவும், எதிர் கால திட்டமிடல் மற்றும் அது சார்ந்த உழைப்புக்கும் செலவழிக்கிறேன்.

ப்ளாகில் எழுதவே மாட்டேன் என்றில்லை. அது பாட்டுக்கு ஓரமாய் இருக்கட்டும். வேண்டும்போது எழுதலாம் அவ்வளவே ; ப்ளாகின் பெரிய பிளஸ் வேண்டிய போது எழுதலாம் என்பதே. என்ன ஒன்று தினம் பதிவு போட்ட போது அதிக பட்சமாக 3000 - 3500 பேர் தினம்  வந்தனர். எப்போதேனும் ஒரு நாள் பதிவு எழுதினால் 1000- 2000 பேர் மட்டும் படிப்பர் ; இருந்து விட்டு போகட்டும் !

சுபம் !

Thursday, November 14, 2013

சச்சின் அசத்திய 5 டெஸ்ட் இன்னிங்சுகள்

வாழ்க்கை எத்தகைய மாறுதல்களை எல்லாம் தந்து விடுகிறது !↑

சச்சினின் ரசிகனாக இருந்தது ஒரு காலம். கடைசி சில வருடங்களில் " போதும் ; கெளம்பு ; காத்து வரட்டும் " என்று சொன்ன மனிதர்களில் ஒருவனாக மாறிப்போனேன்.

ஆனால் - இன்றைக்கு நிஜமாகவே சச்சின் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதை அறிந்தால் ஏனோ இனம் புரியாத சோகம் மனதை சூழ்கிறது

இனி அந்த ஸ்ட்ரைட் டிரைவ் பார்க்கவே முடியாதா ?

எப்போதேனும் பந்து வீச வரும்போது சட்டையை மடித்து கொண்டு சின்ன பையனின் குதூகலத்துடன் ஓடி வரும் அந்த சிரிப்பு .....

பீல்டிங்கில் நின்று கொண்டு அவர் செய்யும் சின்ன சின்ன குறும்பு தனங்கள்

இப்படி டிவி யில் பார்த்த நாமே நிறைய மிஸ் செய்ய போகிறோம் என்றால் - உடன் இருந்த - அவரை பல விதங்களிலும் குருவாக மதித்த Team Players  நிறையவே மிஸ் செய்வார்கள் !

சச்சினை Good கிரிக்கெட்டர் என்பதை விட ஒரு சிறந்த மனிதனாக - ஒரு Idol  ஆக நினைக்கும் பலரில் நானும் ஒருவன் !

எவ்வளவு உயரம் போனாலும் எளிமை; பெண்கள் போன்ற விஷயங்களில் சிக்காத  தன்மை ; தன் மீது சிறு கருப்பு புள்ளி கூட இல்லாத படி மிக ஜெண்டில் ஆக நடந்து கொண்ட விதம் ; மனைவிக்கும் குடும்பத்துக்கும் தரும் முக்கியத்துவம் இப்படி எத்தனையோ சொல்லலாம் !

சச்சின் இந்த மேட்சில் ஒரு செஞ்சுரி அடிப்பார் என்பது பலரை போல எனது எதிர்பார்ப்பும்....

சச்சினின் இறுதி டெஸ்ட் துவங்கும் இந்த நேரத்தில் அவரது சிறந்த 5 இன்னிங்க்ஸ் கள் - ஒரு மீள் பதிவாக...

*******
சச்சினின் ஐந்து சிறந்த டெஸ்ட் ஆட்டங்கள் இதோ:
 
இங்கிலாந்துக்கு எதிராக முதல் செஞ்சுரி : 1990 : சச்சின் 119 ரன்கள் Not out

முதலாவது செஞ்சுரி என்பது மறக்க முடியாத ஒன்று.. முதல் காதலை போல !




தன் பதினேழாவது வயதில் சச்சின் தன் முதல் செஞ்சுரி அடித்தார். ஐந்தாம் நாள் ஆட்டத்தில் மிக மோசமான பிட்சில் இந்தியா தோற்காமல் மேட்சை காக்க வேண்டிய நிலையில் அவரது இந்த ஆட்டம் அமைந்தது. அதற்கு முன் நியூசிலாந்தில் 88 ரன் எடுத்து அவுட் ஆனார். அந்த மேட்ச் தான் சச்சின் என்கிற சிறுவன் செஞ்சுரி அடிப்பானா என அனைவரையும் ஆர்வத்துடன் பார்க்க வைத்தது.



அடுத்த சில மாதங்களில் இந்த மேட்ச். பிரேசர், மால்கம், கிரிஸ் லூயிஸ் போன்ற வேக பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு சச்சின் அடித்த முதல் செஞ்சுரி நமக்கு மட்டுமல்ல அவருக்கும் மறக்க முடியாத ஒன்று !


இந்தியா Vs ஆஸ்திரேலியா பெர்த் மைதானம், 1991,  சச்சின் 114  ரன்கள்

பதினெட்டு வயது சிறுவனாக சச்சின். இந்தியா ஆஸ்திரேலியா உடன் மிக வேகமான மைதானம் என்று சொல்லப்படுகிற பெர்த்தில் ஆடியது. ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவின் வேக பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருக்க, மறு முனையில் சச்சின் மட்டும் 114 ரன்கள் எடுத்தார். இந்தியா எடுத்த மொத்த ஸ்கோர் 240 மட்டுமே ! இந்த மேட்ச் வர்ணனையாளர்கள் "இப்படி ஒரு ஆட்டத்தை கடைசியாக யார் ஆடி எப்போது பார்த்தோம் என நினைவில்லை" என வியந்தார்கள். பத்தாயிரம் ரன்களுக்கு மேல் எடுத்து டெஸ்டில் மிக அதிக ரன்கள் சேர்த்த அலான் பார்டரை பார்த்து மெர்வ் ஹியூக்ஸ் இப்படி சொன்னாராம்: "இந்த சின்ன பையன் நீ எடுத்த ரன்களை மிஞ்ச போகிறான் பாருங்கள் " A champion was in the making !

It can be watched here:

http://www.youtube.com/watch?v=1Aj6EINaDXc

பாகிஸ்தானுக்கு எதிராக சென்னை டெஸ்ட் செஞ்சுரி 1998 (சச்சின் 136 ரன்கள் )

கடினமான சூழலில், அற்புதமான பந்து வீச்சை தனி ஆளாக நின்று ஆடி இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்ற மேட்ச் இது. இந்த மேட்ச் நான் சில நாட்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நேரிலும் பார்த்து, இந்தியா தோற்ற போது மனம் நொந்து போனேன். முதல் இன்னிங்க்சில் சச்சின் 0-க்கு அவுட். இந்தியா ரெண்டாவது இன்னிங்க்சில் 271 ரன் அடுத்தால் வெற்றி என்கிற இலக்கு. இம்ரான், சக்குலைன் முஷ்டாக் ஆகியோர் மிக அற்புதமாக பந்து வீசி கொண்டிருந்தனர். ஒரு புறம் விக்கட்டுகள் சரிந்து விட, நயன் மோங்கியாவை வைத்து கொண்டு சச்சின் 250 ரன் வரை வந்து விட்டார். முதுகு பிடிப்பு வந்து விட, சச்சினால் ஆடவே முடிய வில்லை. வேறு வழியின்றி அனைத்து பந்துகளையும் அடித்து ஆடி அவுட் ஆகி விட்டார். அதன் பின் இருபது ரன் எடுக்க முடியாமல் மீதம் நான்கு விக்கட்டுகள் வீழ்ந்தன. அன்று மேட்ச் முடிந்த போது அழுதவாறே இருந்த சச்சினுக்கு இந்திய வீரர்கள் யாருமே ஆறுதல் சொல்ல அருகில் கூட போக வில்லையாம் ! பயம் !!



காமெண்டரி தந்து கொண்டிருந்த கவாஸ்கர் டிவியில் கோபமாய் பேசியது இன்னும் நினைவிருக்கிறது : " Don't trust others and leave the result to them. You have to be there till the end to win the match for India !!"

சோகமான மலையாள படங்கள் போல இந்த மேட்சின் முடிவு வருத்தமானாலும், கடைசி நாள் பிட்சில் தனி ஆளாக சச்சின் ஆட்டம் மறக்க முடியாத ஒன்று !

இந்தியா vs  ஆஸ்திரேலியா சென்னை சேப்பாக்கம் 1998: சச்சின் 155 ரன்கள் :

முதல் இன்னிங்க்சில் சச்சின், வார்னே பந்தில் நான்கு ரன்னுக்கு அவுட் ஆகி விட்டார். இந்தியா ஆஸ்திரேலியாவை விட முதல் இன்னிங்க்சில் 70 ரன்கள் குறைவாக எடுத்தது. இதனால் இரண்டாவது இன்னிங்க்சில் இந்தியா வேகமாகவும் அதிகமாகவும் ரன் எடுக்க வேண்டிய சூழ்நிலை.



சச்சின் Vs ஷேன் வார்ன். ஸ்பின்னுக்கு பெயர் போன சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம். சச்சின் வார்னேயை உரித்து எடுத்து விட்டார். லெக் ஸ்டம்புக்கு வெளியே தூக்கி வீச, வீச, அவற்றை இறங்கி இறங்கி நான்கும் ஆறுமாக அடித்தார். வார்னே மிரண்டு போனார். அந்த சீரீஸ் முடிந்த போது சச்சினிடம் ஆட்டோ கிராப் வாங்கினார் வார்னே !

இந்தியா vs  இங்கிலாந்து  சென்னை சேப்பாக்கம் 2008: சச்சின் 103 ரன்கள் Not out :

சச்சின் இரண்டாவது இன்னிங்க்சில் செஞ்சுரி அடித்து இந்தியாவை ஜெயிக்க வைத்ததில்லை என்று ஒரு சாரார் கூறி கொண்டிருந்தனர். இதற்கு பதில் தருமாறு அமைந்தது சச்சின் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ஆட்டம். நான்காவது இன்னிங்க்சில் இந்தியா 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கு நிர்ணயம் செய்ய பட்டது. ஷேவாக் வழக்கம் போல் ஒரு விளாசு விளாசிட்டு போயிட்டார். அடுத்த சில விக்கெட்டுகள் விழுந்து விட்டன. யுவராஜ் வரும் போது இந்தியா மோசமான நிலைமையில் இருந்தது. ஆனால் சச்சினும் யுவராஜும் பின் விக்கெட் இழக்காமல் கடைசி வரை ஆடி இந்தியாவை ஜெயிக்க வைத்தனர். வின்னிங் ஷாட் சச்சினின் செஞ்சுரி ஆக அமைந்தது.



வார நாளில் மேட்ச் நடந்ததால் அப்போது எங்கள் அலுவலகம் இருந்த காம்ப்ளக்ஸ்சில் உள்ள ஒரு கடையில் நூற்று கணக்கானோர் மேட்ச் பார்த்து கொண்டிருந்தோம். சச்சின் வின்னிங் ஷாட் and செஞ்சுரி அடித்ததும் எழுந்த சத்தம் ! அப்பப்பா ! அனைவரும் தாங்கள் செஞ்சுரி அடித்தது போல் மகிழ்ந்தனர். மும்பையில் தீவிர வாதிகள் தாக்குதலுக்கு பின் நடந்த மேட்ச் இது. சச்சின் இந்த ஆட்டம் வருத்தத்தில் உள்ள மும்பை மக்களுக்கு சற்று மன மாற்றம் தந்தால், அது தான் சிறந்த பரிசு என சொன்னார் . அது தான் சச்சின் !!
*********

சென்ற பதிவு: சச்சினின் சிறந்த ஐந்து ஒரு நாள் ஆட்டங்கள்

Friday, November 8, 2013

வானவில் -ஆல் இன் ஆல் அழகுராஜாவும் - ஸ்ரீ திவ்யாவும்

முன் குறிப்பு: இங்கு எழுதப்படும்  சில தகவல்கள் ஏற்கனவே முகநூலில் பகிரப்பட்டவை

வாக்கிங் அனுபவம் - 1


கடந்த 3 வாரங்களாக ஹவுஸ் பாசும் நானும் காலையில் வாக்கிங் செல்கிறோம். அவரவர் அலுவலகக் கதைகள், இரு குடும்ப அக்கப்போர்கள் என பலவும் பேசிக்கொண்டு 45 நிமிடம் ஒன்றாக நடப்பது செம ஜாலியாக உள்ளது.

எனக்கு ஏராள நண்பர்கள் உண்டு; எனினும் First & best friend எப்பவும் மனைவி தான் ! ஒரு மனிதனுக்கு மனைவி மிகச் சிறந்த தோழியாய் இருந்தால் மட்டும் போதும்..... வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனையையும் எளிதில் சமாளிக்கலாம் ! சமாளிக்கிறோம்

இருவராக வாக்கிங் செல்வதில் உள்ள சௌகரியம் ஒருவர் சோம்பேறித்தனமாய் இருந்தாலும் - மற்றவர் " ம் கிளம்பு " என இழுத்துக் கொண்டு கிளம்பி விடுவது தான்.. தனி நபர் எனில் தினமும் விடாமல் வாக்கிங் செல்ல ஏராள செல்ப் மோடிவேஷன் வேண்டும் !

இன்றைய வாக்கிங்கில் இரண்டு விபத்துகளை கண்டோம். ஒன்று மிக பெரிது. ஏறக்குறைய உயிர் போக வேண்டிய நிலை. இரண்டிலுமே பார்த்து விட்டு அப்படியே கடந்து போக முடியவில்லை ...

முதலில் உதவ சென்றது நான் என்றாலும் அடுத்து வந்த ஹவுஸ் பாஸ் நமக்கு மேலே பிரச்சனையில் இன்வால்வ் ஆகிட்டார்

"சினிமாவில் வர்ற விசு மாதிரி சோசியல் செர்வீசில் இறங்கிட்டோம். வீட்டுக்கு போவோம் - பொண்ணு ஸ்கூலுக்கு போகணும்" என இழுத்து கொண்டு வர வேண்டியதாய் போயிற்று

அந்த விபத்து

விபத்தில் என்ன நடந்தது என முகநூலில் விரிவாய் எழுதவில்லை இங்கு எழுதிவிடலாம்.

200 அடி சாலைக்கு நடுவே இருக்கும் டிவைடரை அவசரமாய் தாண்டி குதித்து கடந்தார் ஒரு இளைஞர். மிக வேகமாய் பைக்கில் வந்த இன்னொரு இளைஞர் இவர் க்ராஸ் செய்வதை எதிர்பார்க்கவே இல்லை. பைக் நேராக அவர் மீது மோத, இருவரும் சாலையில் உருண்டனர். பைக்குடன் சேர்த்து இருவரும் சாலையில் தேய்த்து கொண்டு போயினர். நானும் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்த இடத்திற்கு மிக மிக அருகில் எங்கள் கண் முன் இது நடந்தது.

அடுத்த நொடி பைக் ஓட்டி முகமெல்லாம் ரத்தமாக எழுந்து நின்றார். சாலையை கடந்த இளைஞர் பிரக்ஞை இன்றி விழுந்து கிடந்தார்

எங்கிருந்தோ நான்கைந்து பேர் வந்து இருவரையும் சாலை ஓரம் தூக்கி வந்தனர் ( மிக அதிக வாகனங்கள் வேகமாய் செல்லும் 200 அடி சாலை அது)

க்ராஸ் செய்தவர் மீது தான் முக்கிய தவறு எனினும் எல்லோரும் அவரையே பார்த்தோம். காரணம் - அவர் பேச்சு மூச்சின்றி இருந்தார். இதய துடிப்பு இருக்கிறதா என பார்த்து, முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை சற்று உலுக்கிய பின் லேசாக அசைந்தார். சில நிமிடங்கள் கழித்து விழித்து பார்த்து மெதுவாக நடந்து சில அடிகள் நடந்து பின் அமர்ந்தார்

பைக் ஓட்டி - ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பினார் ! இல்லா விடில் அவர் வந்து விழுந்த வேகத்துக்கு மண்டை பிளந்திருக்கும். உள்ளி மூக்கு உடைந்து ரத்தம் கொட்டி கொண்டிருந்தது. இரண்டு பற்கள் உடைந்து விட்டது. அவரை ஒரு ஆட்டோ பிடித்து காமாட்சி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தோம்

சாலையை க்ராஸ் செய்தவர் - வட இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தொழிலாளி. அவரால் காமாட்சி மருத்துவமனை போன்ற இடத்தில் மருத்துவம் பார்க்க முடியாது. ஏதேனும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் தான் உண்டு. அருகில் தான் குடியிருப்பார் போலும். அவருடன் வசிக்கும் நண்பர்கள் வந்து அவரை கூட்டி சென்றனர்

ஒவ்வொரு சாலை விபத்திலும் - அநேகமாய் இளைஞர்கள் தான் உதவுவதை காண முடிகிறது.

என்னை போன்ற 40 வயது ஆசாமிகள் - 30 - 40 கிலோ மீட்டர் ஸ்பீடில் பைக்கில் செல்வோம். பலரும் சிரிப்பார்கள். ஆனால் எதையோ யோசித்து கொண்டே வண்டி ஓட்டும் எம்மை போன்றோருக்கு இப்படி மெதுவாக வண்டி ஓட்டுவதால் விபத்துகள் நடப்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு.

அழகு கார்னர் 

படத்திலுள்ள அம்மணியை அடையாளம் தெரிகிறதா? வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா !


இவரை ஏன் பிடிக்கிறது - எதற்கு பிடிக்கிறது என்று சொல்ல தெரியலை....ஆனால் ரொம்பவே பிடிக்கிறது.

தமிழில் அடுத்து என்ன படம் நடிக்கிறார் என்று தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே !

ரீ யூனியன்

நேற்று இன்று நாளை - மூன்று நாளும் சென்னை ITC க்ராண்ட் சோழா ஹோட்டலில் கம்பனி செகரட்டரி இன்ஸ்டிடியூட்டின் வருடாந்திர மாநாடு நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் நடக்கும் இவ்விழா 8 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இம்முறை நடக்கிறது 

போனிலும் மெயிலிலும் மட்டுமே பேசிய - ஏராள நண்பர்களை இந்த 3 நாட்களில் நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு ...கூடவே ஒவ்வொரு மாதமும் சந்திக்கும் சென்னை நண்பர்கள் குழு வேறு.. காலேஜ் ரீ யூனியன் போல செம செம ஜாலியாக உள்ளது. 

ஹோட்டல் பற்றி முடிந்தால் சுருக்கமாய் பின்னர் எழுதுகிறேன் 

பார்த்த படம் - அழகு ராஜா

"பார்த்த படம்" எனபதற்கு பதில் ஒரு மணி நேரம் (மட்டும் ) பார்த்த படம் என எழுதியிருக்கணும் !

கொடுமை ! இதற்கு மேல் வேறு எந்த வார்த்தையும் சொல்ல தோணலை ! ஓகே ஓகே போன்ற படங்களை இயக்கிய ராஜேஷா இப்படி ஒரு மொக்கை போட்டது ? பெரும்பாலான நேரம் சிரிப்பே வரலை . கார்த்தி தொடர் வெற்றிக்கு பின் தொடர் தோல்வியாக தந்து கொண்டிருக்கிறார் :(

போஸ்டர் கார்னர்
முகநூலில் நண்பரால் பகிரப்பட்ட இந்த போட்டோ வேறு பல சிந்தனைகளை என்னுள் விளைவித்தது ←

42 வருட வாழ்வில் "பணம் வாழ்வின் 80 % பிரச்சனைகளை சரிய செய்ய வல்லது என்று உணர்ந்துள்ளேன் (பணம் இருந்து அதை செலவு செய்ய- நீங்கள் தயாராகவும் இருக்க வேண்டும் ! இது முக்கியம் !)

ஆனால் பணத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகளும் ஏராளம் உண்டு.←

அவற்றில் பலவற்றை கூட அன்பு, முயற்சி, பொறுமை - அனைத்துக்கும் மேலாக நேரம் போன்றவை சரி செய்யும் என்று நினைக்கிறேன் 


அய்யாசாமி தத்துவம்

ஒரு மனிதன் வளரத்துவங்கும் போது அவன் மீது கற்கள் வீசப்பட்டே தீரும். அந்த கற்களில் சில நட்பின்/ உரிமையின் பாற்பட்டு; சில பொறாமையில்; இன்னும் சில சென்ற சண்டையின் சொச்ச மிச்சம் .

இப்படி வீசப்படும் கற்களை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது நபருக்கு நபர் மாறுபடும்.

வீசப்படும் கற்களுக்கு மௌனமே சிறந்த பதில் என்று மிகத் தாமதமாய் உணர்ந்துள்ளேன்; இந்த தெளிவாவது தொடர்ந்து நீடிக்கட்டும்

ஆமென் !

Tuesday, October 29, 2013

ஜஸ்ட் டயல் மற்றும் ஜீ எலக்ட்ரானிக்ஸ், போரூர் ,,, ஒரு அனுபவம்

ரு மாதங்களுக்கு முன் வீட்டில் LG டிவி ரிப்பேர் ஆனது. LG டிவி ஆதரைஸ்ட் செர்விஸ் டீலர் கேட்டு ஜஸ்ட் டயல்க்கு போன் செய்தோம். அவர்கள் சில எண் தந்தனர் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று நாம் இருக்க - நமது தேவையை வேறு ஒரு நிறுவனத்துக்கு தந்து விட்டனர் ஜஸ்ட் டயல் காரர்கள்.

பின் போரூர் ஜீ எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து தாங்களே  போன் செய்து " உங்க டிவி நாங்க சரி செய்து தருகிறோம் " என்று கூறினர். சரி என்றதும் அன்றே வந்து பார்த்து விட்டு "பிக்ச்சர் டியூப் மாற்ற வேண்டும்" என்று கூற ஒரு சில நாள் யோசனைக்கு பின் "சரி மாற்றிடுங்க " என்று சொன்னோம்.

ஒரு நாள்  மாலை வந்து பிக்ச்சர் டியூப் மாற்றி விட்டு சில ஆயிரம் பணம் வாங்கி கொண்டு கிளம்பினார் அந்த நிறுவனத்தை சேர்ந்த அராபத் என்கிற இளைஞர்

அடுத்த சில மாதங்களில் மீண்டும் டிவி ரிப்பேர். இப்போது அவருக்கு போன் செய்தால் " சனிக்கிழமை வருகிறோம் " என்றார். சனிக்கிழமை காலை, மதியம் மாலை என மருந்து சாப்பிடுற மாதிரி 3 வேளை போன்  செய்தால்  " அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருப்போம் " என்றார். வரவில்லை

ஞாயிறு காலை - மீண்டும் படையெடுப்பு. காலை, மதியம், மாலை " அங்கே தான் சார் வந்து கிட்டே இருக்கேன் ; பெரிய கேட் இருக்குமே அந்த வீடு தானே? நீங்க வீட்டுலே தான் இருக்கீங்க ?"

சனி, ஞாயிறு - இரண்டு நாள் எங்கும் போகாமல் காத்திருந்தால் வரவே இல்லை.

மீண்டும் திங்கள் மதியத்துக்கு மேல் போன் செய்தால் " சார் உங்களுக்கு டைம் நமக்கு செட் ஆவாது ; நீங்க வேலைக்கு போறீங்க வேற ஆள் வச்சு பாத்துக்குங்க" என்றார்

"கண்டிப்பா வர்றீங்கன்னா வார நாளா இருந்தா கூட போன் செய்யுங்க; எனக்கு வீட்டுக்கும் ஆபிசுக்கும் பக்கம் தான்; நான் ஆபிசில் இருந்து கிளம்பி வந்துடுறேன் "

" இல்லீங்க; நீங்க வேற ஆள் வச்சு பாத்துக்குங்க "

"தம்பி நீங்க பார்த்த வேலை - இப்போ மறுபடி ரிப்பேர். " என்றால்

" டிவி சுத்தமா ஆப் ஆகுதுன்னா போர்ட் ப்ராப்ளம் சார் ;  பிக்ச்சர் டியூப் ப்ராப்ளம் இல்லை; அது என் பிரச்சனை இல்லை; என்னால வர முடியாது" என்றார்


" ஏம்பா இதை சனிக்கிழமை காலையிலே நான் முதல்லே சொல்லும்போதே சொல்ல வேண்டியது தானே ? 2 நாளு இதோ வர்றேன் ; அதோ வர்ரேன்னு சொல்லிட்டு இப்ப இப்படி சொன்னா என்ன அர்த்தம் ? " என்றால் - படக்கென்று போனை கட் செய்தார்

கடை எண்ணை பிடித்து அவர் ஓனருக்கு போன் செய்தால் " நான் டெக்னிசியன் கிட்டே பேசிட்டு சொல்றேன் " என்றவர்

மறுநாள் போன் செய்து " சார் அது எங்க ப்ராப்ளம் இல்லை ; நாங்க வர முடியாது ; நீங்க வேற ஆள் வச்சு பாத்துக்குங்க " என்றார்

" சார் நீங்க பார்த்த வேலை- இன்னொரு ஆள் கிட்டே ஏன் சார் போகணும் ? " என்றால் பதிலே இல்லை.

" சார் பிசினஸ் செய்றீங்க ; ஒரு வேலையை ஒத்துகிட்டு ஏன் சார் பாதியில் மாட்டேன்னு சொல்லணும் ? நீங்க பண்ண வேலை - இப்ப ஏன் வேற ஆள் கிட்டே போகணும்? போர்ட் பிரச்சனைன்னா நான் பணம் தர்றேன்னு சொல்றேனே "

ஊஹூம் .. நோ ரெஸ்பான்ஸ்

எனது கேள்விகள் :

1. தானாகவே போன் செய்து " நாங்க செர்விஸ் செய்து தருகிறோம் " என்று வந்து விட்டு, பல ஆயிரங்கள் கறந்து எதோ ஒரு மாதிரி செட் செய்து விட்டு - பின் மறுபடி ரிப்பேர் என்றதும் " இதோ வர்றேன் - அதோ வர்றேன் " என இழுத்தடித்து பின் வரவே மாட்டேன் என்று சொல்லும் இத்தகைய மனிதர்களை (??) என்ன செய்வது ?

2. ஒரு கமிட்மென்ட் என்று சொன்னால் - அதை செய்ய முடியாதவர்கள் - குறைந்த பட்சம் " சார் இன்னிக்கு வர முடியலை - நாளை வருகிறேன் " என்று சொல்ல முடியாதவர்கள் பிசினசில் எப்படி வெற்றியடைய முடியும் ?

3. வீட்டுக்கு வராமலே - மறுபடி எங்கள் டிவியை பார்க்காமலே - உங்கள் டிவி யில் உள்ள பிரச்சனை எங்களால் வந்தது அல்ல என்று சொல்லும் வித்தை எப்படி சாத்தியமாகிறது ?

4. முதலில் பிக்சர் டியூப் பிரச்சனை என்றபோது அன்றே ஓடி வந்தவர்கள் (காசு வருதுல்லே !) - ரிப்பேர் என்றதும் இழுத்தடிக்கும் நிலையை எந்த கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து, எத்தனை நாள் கோர்ட் பின்னே அலைவது ?

கேட்டால் கிடைக்கும் குழும நபர் போல போராடி போராடி அலுத்து விட்டேன்

இனி நான் செய்ய கூடியது  -

டிவி யை லோக்கல் மெக்கானிக்  மூலம் சரி பார்க்கலாம்

ஜீ எலக்ட்ரானிக்ஸ் போரூர் - உடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களிடம் புலம்பி - உங்களையாவது இத்தகைய நிறுவனங்களுடன் எச்சரிக்கையாக இருக்க சொல்லலாம்

அவ்ளோ தான் !

வானவில் - முகநூலில் கிறுக்கியவை

முகநூலில் கிறுக்கியவை 

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. ஆனா எங்கே போனாலும்- கிளம்பும் போது கையைப் பிடிச்சு குலுக்கி " ஹாப்பி தீவாளி" அப்படின்னு சொல்றாங்க.

## சென்னை மரபு
************
Some become arrogant on achieving a small success.
Only great people can remain humble even on achieving big success.

*************
கவிதை (மாதிரி)


விதைத்தது அறுப்போம்...
அன்றே அல்ல .......
காலம் கனிந்து
*************
அய்யாசாமி கார்னர்

பீனிக்ஸ் மால் சென்று தீபாவளி ஷாப்பிங் செய்து திரும்பிய அய்யாசாமியின் புகைப்படம் இதோ....

என்னா பாட்டுடே !

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் தூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது

***********
வெற்றிக்கோடு - வாசிப்பாளர் கடிதம் 
(வாசகர் கடிதம்னு சொல்ல மனசு வரலை பாஸ்  ..!)

Dear Sir,
I read your book Vetrikodu . Its truly a great work by you, which gives us glimpse of learning experience suitable for today's competitive world. This book will be a great reference point for every youngster who wants to taste the fruit called success and develop successful traits in life.

The contents in the book are very simple and easily understandable.

I wish , you will come out with many more books like this in future .

With regards

J Manikandan (manij14@gmail.com)

வெளம்பரம் 

அகநாழிகை பதிப்பகத்தில் விழாக்கால சிறப்பு சலுகை 25 % சலுகை விலையில் புத்தகங்கள் கிடைக்கிறது

மோகன் குமார் எழுதிய "வெற்றிக்கோடு" - புத்தகமும் (அகவொளி பதிப்பக வெளியீடு ) - 25 % டிஸ்கவுன்ட்டில் கடையில் கிடைக்கிறது. நண்பர்கள் ஆன்லைனில் வாங்க aganazhigai@gmail.com என்ற மெயில் ஐ. டி க்கு மெயிலோ அல்லது 9994541010 என்ற எண்ணுக்கு தொலை பேசியில் அழைக்கவோ செய்யலாம்.


பிறந்த நாள் கொண்டாட்டம்

எனது பெண் சிநேகாவிற்கு மட்டுமல்ல, கல்லூரி கால நண்பன் தேவாவிற்கும் அக்டோபர் 17- தான் பிறந்த நாள். (எம். ஜி ஆர் அவர்கள் அ. தி. மு. க வை துவக்கிய நாளும் இதுவே )

8 ராசியில்லாத எண் என்று சொல்வோருக்கு அக்டோபர் 17-ல் பிறந்த தேவாவை அறிமுகம் செய்து வைக்கலாம். திருச்சிக்கருகே உள்ள முருங்கப்பட்டி என்ற சிறு கிராமத்தில் பிறந்து இன்று அவன் அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது

சிறு வயதில் " 8 ராசியில்லாத நம்பரா அப்பா?" என்று மகள் வினவும் போது, தேவாவின் வாழ்வை உதாரணம் காட்டுவது வழக்கம்.கூடவே இந்த குறளையும் ....

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்
வருத்தக் கூலி தரும் !

இவ்வருடம் அக்டோபர் 17 அன்று தேவா குடும்பமும் எங்கள் குடும்பமும் வேளச்சேரியிலுள்ள ஒரு ஹோட்டலில் ஒன்றாக சந்தித்தோம். ஸ்னேஹா மற்றும் தேவா இருவரும் சேர்ந்து கேக் வெட்டினர். 2 மணி நேரத்துக்கும் மேல் மனம் விட்டு பேசி சிரித்து கொண்டிருந்தோம். ஒரு தேர்ந்த ஆர்கெஸ்ட்ரா பிசிறின்றி இசைப்பது போல இருந்தது நாங்கள் பேசிக்கொண்டிருந்தது...

தேவாவின் மனைவி ப்ரியா - தேவா போலவே செம interesting பெர்சனாலிட்டி. ஸ்பெஷல் Children -க்கு கவுன்சலிங் மூலம் உதவும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டுள்ளார். மதுரையிலுள்ள ஒரு பள்ளிக்கு அடிக்கடி சென்று அங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி தந்து வருகிறார். ஸ்பெஷல் Children -க்கான பள்ளி ஒன்றை துவங்கவும் அவருக்கு கனவு உண்டு. நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறோம். வாழ்த்துவோம் !

Friday, October 25, 2013

கறை நல்லது...........

காலை வழக்கம் போல மூவரும் வெளியே கிளம்பும் அவசரத்தில் - சண்டை. கோபமாய் வண்டியை உதைத்து கிளம்பினேன். சற்று நேரத்தில் கோபம் தணிந்து பள்ளிக்கரணை நூறடி ரோடை அடைய - காமாட்சி மருத்துவமனை சாலையில் ஒரு விபத்து அப்போது தான் நடந்து முடிந்திருந்தது.

வலது உள்ளங்கை முழுதும் ரத்தத்துடன் - உள்ளங்கையில் தோல் கிழிந்து கையைப்  பிடித்தவாறு ஒரு இளைஞன் நிற்க இன்னொரு இளைஞன் தனது கார் பின்னே பைக் மோதிய   கோபத்தில் நின்று கொண்டிருந்தான்

அருகிலுள்ள பெட்டிக்  கடையில் ஒருவர் மினரல் வாட்டர் வாங்கி அடிபட்டவன் கையை கழுவி கொண்டிருந்தார். இன்னொருவர் பைக்கை எடுத்து ஓரமாய் விட்டார். ஒரு மனிதர் ஓடி வந்து - தனது பைக் துடைக்கும் அழுக்கு துணியை தந்து " அவரது கையில் இதை கட்டுங்க " என்றார். அருகில் நின்றிருந்த எனக்கு அந்த துணியை அடிபட்டவர் கட்டினால் இன்னும் இன்பெ க்ஷன் ஆகும் என தோன்ற, எனது வெள்ளை கர்சீப் தந்து இதில் துடையுங்கள் என்றேன்;  ஒரு மனிதர் அந்த கர்சீப் கொண்டு கர்ம சிரத்தையாக அடிபட்டவர் கையை துடைத்து விட்டார் -

அவ்விடத்தில் 4 பேர் அடிபட்டவருக்கு உதவ, 20 பேருக்கும் மேல் நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்  கொண்டிருந்தனர்

கார் ஓட்டி - நின்று கொண்டிருந்த தன்  வாகனம் மீது பைக் மோதிய கோபத்தில் " பாஸ் என்ன இவ்ளோ வேகத்தில் வர்றீங்க? வாங்க போலிஸ் ஸ்டேஷன் போகலாம் ; ரொம்ப டேமேஜ் ஆகிடுச்சு - நீங்க பணம் தர வேண்டியிருக்கும் " என்ற ரீதியில் பேசலானார்

அருகிலிருந்த நான் " ஏன் சார்  இன்சூரன்ஸ் தான் வருமே; அப்புறம் எதுக்கு இவர் பணம் தரனும் ?" என்று கேட்க " முழு பணம் வாராது சார் ; மீதி இவர் தான் தரனும் " என்றார்

நான் சில நொடி தயக்கத்துக்கு பின் " முதலில் எங்கே போகணும் சார் ... ஆஸ்பத்திரிக்கா ? போலிஸ் ஸ்டேஷனுக்கா ?" என்று கேட்க

அடிபட்டவரின் கையை பார்த்தவாறே " ஆஸ்பத்திரிக்கு" என்றார் கார் ஓட்டி

"நீங்களே அவரை ஆஸ்பத்திரி கூட்டி போங்க; அவரால் இப்ப பைக் ஓட்ட முடியாது; அப்புறம் போலிஸ் ஸ்டேஷன் கூட்டி போங்க " என்றேன்

" காரை இங்கிருந்து எடுக்க கூடாதுங்க; Valuer  வந்து பார்க்கும் வரை இங்கு தான் இருக்கணும் " என்றார் கார் ஓட்டி .

இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று நான் கிளம்ப எத்தனிக்க - அடிபட்டவர் உரிமையாய் வந்து எனது வண்டி பின்னே அமர்ந்து " சார் காமாட்சி ஆஸ்பத்திரி வாசலில் என்னை இறக்கி விட்டுடுங்க " என்றார்

ஒரு வண்டியில் நானும், அடிபட்டவரும் - இன்னொரு பைக்கில் கார் ஓட்டியும்       பயணமானோம்.

அடிபட்டவரிடம் " என்ன சார் உங்க மேலே தான் தப்பு போல" என கேட்க

" சார் ஒரு Estilo கார் திடீர்னு ப்ரேக் அடிச்சான். அதான் நான் வண்டியை ரைட் லே திருப்புனேன். அவர் கார் மேலே மோதிடுச்சு. ப்ச் நேரமே சரியில்லை சார் " என்றார்

அவரை ஆஸ்பத்திரி வாசலில் இறக்கி விட்டேன். கார் ஓட்டி - பைக் ஓட்டுனருக்கு First aid  தர     உள்ளே கூட்டிச் செல்ல, நான் ஆபிஸ் கிளம்பினேன்

எனது புத்தம் புது பிங்க் சட்டை - வலது பக்க பின் புறத்தில் ஆங்காங்கு ரத்தக்கறை ஒட்டியிருந்தது.

வீட்டுக்கு போனதும் மனைவி மற்றும் மகள் சட்டை பார்த்து நிச்சயம் திட்டுவார்கள் என்று நினைத்தேன்.  வந்தவுடன் கவனித்து கேட்கவே செய்தார்கள். மேற்சொன்ன நிகழ்வை கேட்டதும் - வேறு எதுவும் சொல்ல வில்லை..

சட்டையை இப்போது பார்க்கும் போது தோன்றுகிறது .. "கறை படுறதால, நல்ல விஷயம் நடந்தா - கறை  நல்லது " :)

Wednesday, October 23, 2013

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவுவார்களா ?

நான் வாழ்வில் கொஞ்சமேனும் வளர்ந்திருந்தால் அதற்கு முக்கிய காரணம் - இதோ இப்படத்திலிருப்போர் தான்.



அதிகம் படிக்காத அம்மா - அப்பா செல்லம் மட்டுமே கொடுத்து வளர்த்தனர். பெற்றோர் படிக்க சொன்னதும் இல்லை; அடித்ததும் திட்டியதும் இல்லை.

ஆனால் அவர்கள் பங்கையும் சேர்த்து - சிறு வயதில் என்னை ரவுண்டு கட்டி அடித்தவர்கள் இவர்கள் தான்.

சின்ன அண்ணன் (புகைப்படத்தில் எனக்கு இடப்புறம் அமர்ந்திருப்பவர்) அதிகம் அடிக்க மாட்டார். மொத்தம் 2 முறை தான் அடித்துள்ளார். அந்த இரு முறையும் தவறு என் மீது தான் என்று அவர் அடித்த பின் உணர்ந்திருக்கிறேன். அதனால் அவர் அடித்தால் - எனக்கு கோபம் வராது - நம் மேல் தான் தப்பு - அதான் அடிக்கிறார் என்று அந்த சின்ன வயதில் நினைப்பேன் (சின்ன அண்ணன் - தற்போது பெங்களூரில் ஒரு மருந்து கம்பனியில் ஜெனரல் மேனேஜர் ஆக உள்ளார் ); என்னை சட்டம் படிக்க சொன்னதும், பின் ACS படிக்க சொல்லி பணம் கட்டி சேர்த்து விட்டதும் இவரே. பொறுமையின் சிகரம். ஏ..........ராள   நண்பர்கள் இவருக்கு.

அக்கா தற்போது திருச்சியில் அரசு துறையில் மருத்துவராக உள்ளார். எனக்கு முன்னர் அக்கா பிறந்ததால் - முதல் இருவர் (அண்ணன்கள்) மிக நெருக்கமாகவும், நானும் அக்காவும் ரொம்ப தோஸ்த் ஆகவும் இருப்போம். ஆயினும் அக்கா - மாலை நேரம் நான் விளையாட போய் விட்டு ஆறு மணிக்கு மேல் தாமதமாய் வந்தால் - ஒரு நிமிடத்துக்கு ஒரு அடி என ஸ்கேலால் கையில் அடிக்கும் ! மருந்து கடை வைத்திருந்த அப்பா -அண்ணன்கள் இருவரையும் மருத்துவர் ஆக்க ஆசைப்பட்டார். ஆனால் மருத்துவம் படித்தது அக்கா மட்டும் தான்.

வலது ஓரம் அமர்ந்திருக்கும் பெரிய அண்ணன் தான் எங்கள் மொத்த குடும்பத்தின் தலைவர். முன் ஏர் போகிற வழியே பின் ஏர் போகும் என்கிற மாதிரி குடும்பத்தில் இவர் முதலில் படித்ததால் தான்  அதன் பின் உள்ள அனைவரும் படித்தோம். சின்ன வயதில் எங்களுக்கு இவரை கண்டால் டெர்ரர் ஆக இருக்கும். இவரிடம் நான் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல - விதம் விதமாய்  அடி வாங்கியிருக்கிறேன். பள்ளி காலத்தில் இவரை மிக அதிகம் வெறுத்திருக்கிறேன்.

எங்கள் குடும்பத்தில் ஒரு பழக்கம் உண்டு. பள்ளி இறுதி ஆண்டு முடிக்கிற வரை தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர் ஆக இருப்பார்கள். கல்லூரி சேர்ந்ததுமே " தோளுக்கு மிஞ்சினால் தோழன் " என்ற பழமொழியை உதிர்த்து விட்டு - ரொம்ப ப்ரீ ஆக விட்டு விடுவார்கள். அதன் பின்  அண்ணன்களும் கூட சிறந்த நண்பர்கள் ஆகி போனார்கள்

சிறு வயதில் இவர்கள் என்னை அடித்தது கொஞ்சம் கூட சரியல்ல - இதனை வளர்ந்த பின்- அண்ணன்களுக்கு சொல்லி புரிய வைத்தேன். அவர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்காமல் தான் வளர்த்து வருகிறார்கள் :)

இன்று உடன் பிறந்தோர் அனை வரும் திருமணம் ஆகி ஒவ்வொரு பக்கம் இருக்கிறோம். எங்கள் பெற்றோர் பெரிய அண்ணன் குடும்பத்துடன் தஞ்சையில் இருக்கிறார்கள்

ஒரு காலத்தில் ஒவ்வொரு வருட தீபாவளி, பொங்கல், தமிழ் வருட பிறப்பு மூன்று பண்டிகைக்கும்  எங்கள் குடும்பங்கள் அனைத்தும் ஒன்று கூடுவோம். எங்களுக்குள் பல கேம்ஸ் ஷோக்கள் நாங்களே நடத்துவோம்

காலப்போக்கில் பண்டிகைகள் அவரவர் இல்லத்தில் கொண்டாட துவங்கி விட்டோம்

பல ஆண்டுகள் கழித்து இந்த தீபாவளிக்கு மீண்டும் எல்லா குடும்பங்களும் ஒன்று கூடுகிறோம்.. நினைத்தாலே மகிழ்ச்சியாய் இருக்கிறது !

கடவுள் எப்போதும் எனது தகுதிக்கு மீறிய மகிழ்ச்சியையும், நல்ல குடும்பம் மற்றும் நண்பர்களையும் உடன் இருக்கும் படி பார்த்து கொள்கிறார் !

Tuesday, October 22, 2013

ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார் !


நல்ல மனம் வாழ்க !

இது போன்ற மனிதர்களால் தான் நாட்டில் மழை பெய்யுது !

***************
டெனால்டு ராபர்ட் originally shared:

ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார்"

படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக்கொடுக்கு றவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமா ஒரு கட்டடம் கட்டியிருக்காங்க. ஆனா, அந்த ஏழை மளிகைக் கடைக்காரர் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்.”


அந்த மளிகைக் கடைக்காரர் பாலசுப்பிர மணியன். அவரை அறிந்தவர்களுக்கு பாலுஜி. பள்ளிக்கூடத்தின் பெயர் ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’. 300-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழைச் சிறார்கள்.

விசேஷம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள். ஆகையால், எல்லாப் பள்ளிக்கூடங்களும் இயங்கும் நேரத்தில் இந்தப் பள்ளி இயங்காது. காலை 6 மணி முதல் 8 மணி வரை. மாலை 6 மணி முதல் 9 மணி வரை. இந்த இரு நேரங்களில் சௌகரியமான நேரத்தில் மாணவ -மாணவியர் வருகிறார்கள். பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களும் இப்படித்தான். வேலைக்குச் சென்றுகொண்டே கல்விச் சேவை தருபவர்கள். 38 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி அளித்து அனுப்பியிருக்கிறார் பாலுஜி.

“அப்போ நான் எட்டாவது படிச்சுக்கிட்டுருந்தேன். வகுப்புல நான்தான் படிப்பில் முதல் மாணவன். அப்பா போய்ட்டார். வீட்டுக்கு நான்தான் மூத்த பையன். ரெண்டு தம்பிங்க. ஒரு தங்கச்சி எனக்குக் கீழே இருந்தாங்க. படிப்பைவிட்டுட்டு மளிகைக் கடை வேலைக்குப் போனேன். வேலைக்குப் போய்ட்டேனே தவிர, படிப்பு ஆசை விடலை. பிரைவேட்டாவே 10-வது, 12-வது எழுதினேன், பி.ஏ. பண்ணினேன், எம்.ஏ. முடிச்சேன். இந்தியும் படிச்சேன்.

இந்தப் பகுதி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. ஏழ்மை காரணமா நிறைய குழந்தைங்க படிக்க முடியாத சூழல். கடைக்கு வரும்போது அவங்களைப் பார்க்க அத்தனை சங்கடமா இருக்கும். ஏதாவது செய்யணுமேனு தோணும். கொஞ்ச நாள் கழிச்சு நானே சின்னதா கடை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயுங்கால நேரத்தை இவங்களுக்கு ஒதுக்குவோம்னு முடிவெடுத்தேன். என்னை மாதிரியே நல்லெண்ணம் உள்ள - படிச்சுக்கிட்டு இருக்குற சில பசங்களைச் சேர்த்துக்கிட்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழக’த்தைத் தொடங்கினேன். யாருக்கும் யாரும் காசு தர வேண்டாம். அன்னைக்கு எல்லாம் இருந்த பெரிய செலவு கட்டடத்துக்கு வாடகை தர்றதுதான். மாசம் அம்பது ரூபா. ஒருகட்டத்துல இங்கே படிச்சு வெளியே வேலைக்குப் போன பிள்ளைங்களே இங்கே சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. கழகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டினாங்க. இன்னைக்கு ஆலமரம் மாதிரி ஆயிடுச்சு கழகம். விழுதுகள் தாங்குது”


*******
நன்றி: கூகிள் பிளஸ்சில் இச்செய்தியைப் பகிர்ந்த டெனால்டு ராபர்ட் &  ஜோதிஜி

Friday, October 18, 2013

யுவக்ரிஷ்ணா - அதிஷா

மோகன்குமாரின் டயரி குறிப்பு 

இன்று வாழ்வில் ஒரு மறக்க முடியாத நாள்.

புழுதிவாக்கம் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் TN  முரளி தரன் - லட்சுமணன் பற்றி பேசிய போது மேடையில் அமர்ந்த படியே கண் கலங்கி விட்டேன். பல மாணவர்களும் அழுகிற என்னையே பார்ப்பதால் கூச்சத்தில் நெளிய, ஆசிரியர் ரவி  குடிதண்ணீர் தந்து அனுப்பி என்னை ஆசுவாசப்படுத்தினார் .

போலவே நான் பேசும்போது லட்சுமணன் பற்றி கொஞ்சம் பேசதுவங்கியதுமே - பேச முடியாமல் தொண்டை கமறி நின்று விட்டேன். பின் எப்படியோ பேசி சமாளித்தேன்.

விழாவில் பேசிய யுவகிருஷ்ணா (எமோஷனல் மற்றும் உண்மையான பேச்சு- அற்புதம்!) , முத்து குமாரசாமி (சிறிய சிறப்பான பேச்சு) , TN முரளி தரன் (சார்.. நீங்க இவ்ளோ நல்லா பேசுவீங்களா ?) பேசிய ஒவ்வொரு வரியையும் வீடியோ எடுத்து பகிர்ந்திருந்தால் பார்க்கும் பலரும் நெகிழ்ந்திருப்பர்.

எப்போதும் பப்ளிசிட்டிக்கு அலைகிறான் என்று சொல்லும் நல்லவர்களுக்கு பயந்தே இன்று காமிரா எடுத்து செல்ல வில்லை.. யுவகிருஷ்ணா மன்னிக்க !

இந்தியா என்றால் லஞ்சம், ஊழல் - அடுத்தவனுடன் ஓடி போன பொண்டாட்டி போன்ற நெகடிவ் செய்திகளை தவிர்த்து - நம் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களையும் எழுத வேண்டும்; படிப்போருக்கு ஏழைகள் சில பேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே வீடுதிரும்பலில் எங்கள் நண்பர்கள் செய்யும் உதவிகள் பற்றி அவ்வப்போது எழுதுகிறோம்.. இங்கு எழுதுவதை தவிர்த்தும்  பல நல்ல விஷயங்களை - உங்களுக்கு பரிச்சயமான சில நண்பர்கள் குழுக்களுடன் இணைந்து செய்து வருகிறோம்.... காலப்போக்கில் அவையும் தெரிய வரும்போது உங்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன !

தூற்றுவோர் தூற்றினாலும், போற்றுவோர் போற்றா விட்டாலும் - வருடா வருடம் புழுதிவாக்கம் பள்ளியில் 10th, 11th, 12th - முதல் மூன்று மதிப்பெண் பெறுவோருக்கு இணைந்து பரிசுகள் வழங்க - திரு. முத்துக் குமாரசாமியும் நானும் முடிவு செய்துள்ளோம்...

மனமிருந்தால், நண்பர்கள் சேர்ந்து முயன்றால் -  நம்மால் சமூகத்தில் ஒரு சிறு நல்ல மாறுதலை விளைவிக்க முடியும்......

நாம் இணைந்து பணியாற்ற வேண்டிய ஒரே இடம் - ஏழை மாணவர்கள் கல்விக்காக மட்டுமே !

எப்போதெல்லாம் - தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு உதவி வேண்டுமோ அப்போதெல்லாம் இனி வீடுதிரும்பலில் எழுதுவேன். விருப்பமும், மனமும் இருப்போர்   நேரடியாக அவர்களுக்கு உதவலாம்.
******************
இனி இன்றைய விழா பற்றி யுவக்ரிஷ்ணா மற்றும் மோகன் குமார் முகநூலில் எழுதியதன் சுருக்கம் இதோ

யுவகிருஷ்ணா எழுதியது : 



இன்று ஒரு நெகிழ்ச்சியான நாள்.

நான் படித்த பள்ளியில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டேன். பள்ளிக்காலத்தில் எனக்கு யூனிஃபார்ம் உடையாக இருந்த வெள்ளைச்சட்டை, காக்கி பேண்ட் அணிந்துச் சென்றேன்.

“இவரை மாதிரி நீங்களும் வரணும்” என்று தலைமையாசிரியர் சொல்லும்போது கூச்சத்தில் நெளிந்தேன்.

தொழிலதிபர் முத்துக்குமாரசாமி மற்றும் தோழர் வழக்கறிஞர் Mohan Kumar ஏற்பாட்டில் நடந்த விழா இது.

எங்கள் பகுதியில் எங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வளர்ந்து இன்று கல்வித்துறையில் உயரதிகாரியாய் பணியாற்றும் அண்ணன் டி.என்.முரளிதரன் அவர்களோடு மேடையில் அமர்ந்திருந்தேன்.

இருபது ஆண்டு காலத்தில் என்னுடைய பள்ளி பெற்றிருக்கும் சிறப்புகளை காணும்போது கிடைத்த உணர்வுகள் கலவையானது. நாங்கள் வைத்த மரங்கள் இன்று பெரிதாய் வளர்ந்து பள்ளி வளாகம் முழுமைக்கும் நிழல் தருகிறது. பள்ளியை ஒட்டி அச்சுறுத்திக்கொண்டிருந்த மரணக்குட்டை இப்போதில்லை. நானெல்லாம் எட்டாவது வரைக்கும் டவுசர்தான். இப்போது ஆறாம் வகுப்பு மாணவனே டீசண்டாக பேண்ட் போட்டு, டக் இன் செய்து ஐடி கார்ட் மாட்டி பளிச்சென்று இருக்கிறான். எல்லாருக்கும் பெஞ்ச், டேபிள் வசதி இருக்கிறது. நாங்களெல்லாம் தரையில் உட்கார்ந்து படித்தோம்.

ஆறாங்கிளாஸ் படிக்கும்போது என்னுடைய வகுப்பில் 106 பேர் இருந்தார்கள். இப்போது பள்ளியின் ஒட்டுமொத்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கையே 800க்குள்தான். அப்போதெல்லாம் இறுதித்தேர்வில் 300 தாண்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். இப்போது அசால்டாக 400 தாண்டுகிறார்கள். போன ஆண்டு முதல் மதிப்பெண் 490ஆம்.

நம்மை நமக்கு அடுத்தத்தடுத்த தலைமுறை தாண்டி புலிப்பாய்ச்சலாக ஓடிக்கொண்டிருப்பதை காண்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது. மீண்டும் இன்று என்னை தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப்பள்ளியின் (இப்போது மேனிலை) வாண்டுப்பையனாக உணரச்செய்த தோழர் மோகன்குமாருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
*********
மோகன் குமார் எழுதியது 

முகம் பார்க்காமலே - சண்டை போட்டு விட்டு, நேரில் சந்தித்த பின் நட்பாவது இணையத்தில் மட்டும் தான் சாத்தியம் என நினைக்கிறேன்.

யுவகிருஷ்ணாவுடனான பழக்கம் முதலில் எனக்கு சண்டையில் தான் துவங்கியது - பின் சில காலம் கழித்து கேபிள் சங்கர் இல்ல விழா ஒன்றில் எனதருகருகில் அமர்ந்து பேசியவாறே யுவகிருஷ்ணா சாப்பிடும் போது அவரது பேச்சில் அவர் மனதை ஓரளவு புரிந்து கொள்ளமுடிந்தது. அதன் பின் துளசி மேடம் இல்ல திருமண விழா அல்லது வேறு எங்கு சந்தித்தாலும் ப்ளாகில் சீனியர் என்ற முறையில் நிறைய அறிவுரை சொல்வார்...

வழக்கறிஞர் நண்பன் லட்சுமணன் நினைவாக நடந்த இந்த விழாவிற்கு அதிஷாவையும் வரவைக்க முயன்றேன். காலை நேரம் என்பதால் - அவரால் வரமுடியவில்லை என்று நினைக்கிறேன்.

நட்பின் பெருமை சொன்ன இன்றைய விழாவிற்கு அதிஷா வந்திருந்தால் விழா முடிந்ததும் - நிச்சயம் லக்கியை கட்டியணைத்திருப்பார்.

இப்படிக்கு

லக்கி- அதிஷாவை மறுபடிவிழாக்களில் ஒன்றாக பார்க்க விரும்பும் ஒருவன். .....

Thursday, October 17, 2013

இலட்சுமணன் நினைவு பரிசளிப்பு விழா - சிறப்பு அழைப்பாளர் யுவகிருஷ்ணா

ண்பன் இலட்சுமணன் ... எங்களுடன் சட்டக்கல்லூரியில் படித்த நண்பன். அரிதான, அற்புதமான மனிதனான எங்கள் இலட்சுமணன் ஹீமோபீலியா நோயால் 25 வயதில் மரணமடைந்தான்.

1996-ல் இலட்சுமணன் மறைவுக்குப் பிறகு, ஓராண்டு இடைவெளியில் (1997) அவன் கவிதைகளைத் தொகுத்து சட்டக்கல்லூரி நண்பர்கள் - புத்தகமாக வெளியிட்டோம்.  அந்தக் கவிதை தொகுப்பின் பெயர் வீடுதிரும்பல் ! (அதன் நினைவாகவே நமது ப்ளாகிற்கும் அப்பெயர் வைக்கப்பட்டது )

1997- ல் இலட்சுமணன் கவிதைத் தொகுப்பு வெளியான பின் - கடந்த 16 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் அவன் நினைவாக ஏதேனுமோர் நற்காரியம்  நண்பர்கள் செய்து வருகிறோம்

பல வருடங்கள் அடையார் செயின்ட் லூயிஸ் விழியிழந்தோர் பள்ளியில் பேச்சு போட்டி மற்றும் போட்டி நடக்கும் (இலட்சுமணன் ஒரு மிகச் சிறந்த பேச்சாளர்; விகடனில் மாணவ நிருபர்; கவிஞர் என பன்முக தன்மை கொண்டவன்- விழி இழந்த சிறுவர்கள் என்பதால் - பேச்சு மற்றும் பாட்டு போட்டிகள் மட்டுமே அவர்களுக்கு நடத்த இயலும் )

புகைப்படத்தில் - வழக்கறிஞர் ரவி, வழக்கறிஞர் அமிழ்து மற்றும் வழக்கறிஞர் டெய்சியின் தாயார் - அடையார் விழி இழந்தோர் பள்ளியில் நடந்த விழா ஒன்றில் நடுவர்களாக ....
சிற்சில காரணங்களால் அடையார் செயின்ட் லூயிஸ் பள்ளியில் விழா நடத்த இரண்டு வருடங்களாக அனுமதி கிடைக்க வில்லை. ஆகவே புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப்  பள்ளியில் - 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளில் - முதல் மூன்று இடம் பிடித்த   மாணவ மாணவிகளுக்கு கடந்த இரு ஆண்டுகளாக பரிசுகள் வழங்குகிறோம்.

இவ்வருடம் மாணவர்களுக்கு பரிசுகள் தந்து பேச இருப்போர் இருவர்

முதலாமவர் நண்பர் ஜாக்கி சேகர் மூலம் அறிமுகமான இளம் தொழிலதிபர் -திரு. முத்துக்  குமாரசாமி. இந்த விழாவிற்கான பரிசுகள் இவர் தான் வழங்குகிறார்.

இரண்டாமவர் உங்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான நண்பர் - யுவகிருஷ்ணா !

இதே பள்ளியில் படித்து  - இன்று ஒரு நிருபராக - சைபர் கிரைம் மற்றும் விஜயகாந்த் குறித்து இரு புத்தகங்கள் எழுதிய - எழுத்தாளராக வளர்ந்து நிற்பவர்.

மிக ஏழ்மை நிலையில் இருந்தும் உயர முடியும் என்பதற்கும் - படிப்பை மட்டுமே சார்ந்ததல்ல ஒருவனின் வளர்ச்சி என்பதற்கும் யுவகிருஷ்ணா மற்றும் முத்துக்  குமாரசாமி ஆகியோர் எடுத்து காட்டு.

வாய்ப்பு இருப்பின் நாளை காலை நடக்க இருக்கும் இந்த எளிய விழாவில் நீங்களும் பார்வையாளராக கலந்து கொள்ளலாம்.

விழா விபரங்கள் :

நாள் - 18 அக்டோபர் 2013

நேரம் - காலை மிகச் சரியாக 9.10 மணிக்கு

முகவரி -

அரசு மேல்நிலைப்பள்ளி
(மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் மற்றும் மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளி அருகில் )
புழுதிவாக்கம்.

**********
தொடர்புடைய பதிவு :

இலட்சுமணன் என்கிற மனிதன் 

Sunday, October 6, 2013

ராஜா ராணி- ஷார்ட் ரிவியூ

நேற்று ராஜா ராணி ( மௌன ராகம் பார்ட் டூ) பார்த்தோம். சுருக்கமான ஒரு ரீவியூ :

ஜெய் - நயன்தாரா போர்ஷன் செம சுவாரஸ்யமா இருந்துச்சு

சந்தானம் குறைவாய் வந்தாலும் சிரிக்க முடிகிறது



சில்லுன்னு ஒரு மழைத்துளி பாட்டு அட்டகாச மெலடி ; படமாக்கம் கூட அழகு . ( எல்லா பாட்டுமே சூப்பர் என சொல்லி கொண்டிருக்கிறாள் மகள்)



ரீ ரிக்கார்டிங் - ஜீவி பிரகாஷ் குமார் சில இடங்கள் அசத்தினால், சில இடம் சுத்தமாய் பொருந்தலை

ஆர்யா - வுக்கு சும்மா வந்துட்டு போவது தான் அண்டர் பிளே என யாரோ சொல்லி கொடுத்திருக்காங்க ; முடியலை !


இவ்ளோ குட்டி விமர்சனத்துக்கு 2 போட்டோவா ??
நஸ்ரியா போர்ஷன் மனதில் பதியவே இல்லை. போலவே பிளாஷ் பேக் காதல்கள் இரண்டிலுமே எந்த அழுத்தமும் இல்லை; அதனால் காதல் தோல்வி(கள் ) பார்வையாளர் மனதில் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தாமல் போகிறது

நயன் பொதுவாய் எனக்கு அதிகம் பிடிக்காது. அதிசயமாய் இப்படத்தில் அவர் நடிப்பு (மட்டும் ) பிடித்திருந்தது

சத்யராஜ் - நயன் (அப்பா- மகள்) உறவு - சினிமாவில் தான் பார்க்க முடியும் (சத்யராஜ் நடிப்பு குட் )

இளம் இயக்குனர் அட்லி படத்தை மிக ரசித்து , ஜாலியாக எடுத்திருக்கார்

நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் ! 

Sunday, September 22, 2013

ஆனந்த யாழை மீட்டும் -மகள்களின் தினம்- சில நினைவுகள்

இன்று மகள்களின் தினம் என்று முகநூலில் வாசித்தேன் ......

எனது மகள் குறித்த நினைவுகளை அவளது இரண்டு வயது வரை ஒரு தனி டயரி குறிப்பாக எழுதி வைத்திருந்தேன். அதிலிருந்து மிக சிறிய பகுதி இங்கு.......

பிறந்த நாள் 

முதல் நாள் இரவு முதலே மனைவிக்கு Uneasy ஆக இருந்தது. ஆனால் பிரசவம் என சொல்ல தெரியவில்லை. டாக்டர் குறித்து கொடுத்திருந்த நாளுக்கு நிறையவே நேரம் இருந்தது. முதல் பிரசவம் என்பதால் இருவருக்கும் அனுபவம் இன்றி பிரசவ வலி கூட சரியாக உணர முடியாமல் போகும் ! எங்களுக்கும் அப்படியே நடந்தது

எந்த நேரமும் பிரசவ வலி வரலாம் என்று தெரிந்து காருக்கு சொல்லி வைத்திருந்தாலும், அந்த தினம் பிரசவ வலி என்று தெரியாமல் எனது அப்போதைய TVS Champ வண்டியிலேயே ஈக்காட்டுதாங்கல் முதல் தாம்பரம் வரை பயணமானோம்

மருத்துவரிடம் சென்று பார்த்ததும் அவர் இன்று மதியம் டெலிவரி ஆகிடும் என்றதும் நம்பவே முடியவில்லை. "இன்னும் 10 - 15 நாள் இருக்கே " என புலம்பி கொண்டிருந்தேன் (உள்ளுக்குள் பிரசவத்துக்கு TVS சாம்ப் வண்டியில் அழைத்து வந்த குற்ற உணர்ச்சி )

அன்று மாலை - மகளை முதன்முறை பார்த்த நிமிடம் இன்னும் பசுமையாய் நெஞ்சுக்குள்.....

ரோஸ் நிறத்தில் - பிரிந்து உரியும் தோலுடன் ....குறைந்த முடியுடன் - என் மூக்கு சாயலில் நர்ஸ் கையிலிருந்த ஸ்நேகாவை பார்த்தேன். இன்று வரை அந்த நாளை விட மகிழ்ச்சியான நாள் வாழ்நாளில் இருக்க முடியாது !

முதல் நாள் இரவு வலியில் சுத்தமாய் தூங்காத மனைவி - குழந்தை பிறந்த நாளன்று (நார்மல் டெலிவரி!) அந்த மகிழ்ச்சியிலேயே இரவு முழுதும் அவளை பார்த்தவாறு சுத்தமாய் தூங்க வில்லை !

எட்டு மாதம் 

ஸ்நேகாவை அழைத்து கொண்டு அப்போது நாங்கள் குடியிருந்த காலனி கிரவுண்டில் ஜாக்கிங் செல்ல சில முறை முயற்சித்ததுண்டு. அவளை ஓரமாய் அமர வைத்து விட்டு ஓடினால் " அப்பா நம்மை விட்டுட்டு எங்கேயோ போகிறார்" என்கிற மாதிரி பெரிதாய் அழ ஆரம்பித்து விடுவாள். பின் அவள் அம்மாவிடம் தந்து விட்டு ஓடினாலும் அழுகை தான்.....

இதே மைதானத்தில் இருக்கும் கொடிக்கம்பம் அவளுக்கு மிக பிடித்தமான ஒன்று. சுதந்திர தினம் போன்ற நேரங்களில் கொடியேற்றவே இந்த கம்பம் இருக்கும். இதற்கு கொடிக்கம்பத்திற்கு ஸ்னேஹா வைத்த பெயர் "இந்தியா ". காலை அல்லது இரவு சாப்பிட வைக்க பல முறை இந்த இந்தியாவிற்கு அழைத்து வருவது வழக்கம். ஒரு கையால் கம்பத்தை பிடித்தவாறு சுற்றி சுற்றி வருவாள்...

தாய்ப்பால் குடிப்பது ஒரு புறமென்றால். பாட்டிலில் பால் குடிப்பதும் ரொம்ப பிடிக்கும். பாட்டில் கண்ணில் பட்டாலே " பாயி.. பாயி.. " என்பாள் (பால்..பால்!) . இரவில் முழுதும் சாப்பிட்டு விட்டாலும், பால் பாட்டிலை பார்த்தால், " பாயி.. பாயி.. " என குடித்து விட்டு தான் -  விடுவாள். சில நேரம் நிறைய குடித்து வாந்தி எடுத்து விடுவதும் உண்டு. இதனால் இரவில் பால் பாட்டிலை கண்ணில் படாமல் ஒளித்து வைத்து விடுவோம்

ஒரு வயது 

டேப் ரிக்கார்டர் வால்யூமை அதிகப்படுத்தி அலற வைத்து விட்டு எப்படி குறைப்பது என்று தெரியாமல் அங்கிருந்து ஓடி விடுவாள் !

காய்கறி வாங்கி வந்தால் தக்காளியை எடுத்து " பப்பாளி, பப்பாளி" என்றபடி அதனை போட்டு அமுக்கி ஒரு வழி செய்து விடுவாள்

ஒரு பிஸ்கட் தந்தால் கொஞ்சம் கொஞ்சமாய் வாய்க்குள் ஊற வைத்து சாப்பிடுவாள். ஒரு பிஸ்கட் சாப்பிட 15 நிமிடத்துக்கு மேலாகும். ...ஆனாலும் கீழே போடவே மாட்டாள். இந்த 15 நிமிடத்தில் எங்கெங்கோ போவது வருவது என்று என்ன அட்டகாசம் செய்தாலும் பிஸ்கட் மட்டும் பத்திரமாக கையில் இருக்கும் !

குழந்தை பயந்த மாதிரி இருந்ததால் தர்க்கா கூட்டி சென்று சொல்ல சிலர் பரிந்துரைத்தனர். மாலை 6.30 க்கு தர்க்காவில் பிரார்த்தனை முடித்து விட்டு - பின் அங்கு காத்திருக்கும் குழந்தைகளுக்கு காதில் ஓதுவார்கள். " ஊ ஊ " என ஓதுவதால் அவர்களுக்கு ஊ தாத்தா என பெயர் வைத்து விட்டாள் சிநேகா. தர்க்காவில் பிரார்த்தனை நடக்கும் சத்தம் கேட்டால் " ஊ தாத்தா .. ஊ தாத்தா " என்று சொல்வாள்.

பச்சை மற்றும் சிகப்பு நிறத்தில் இரண்டு பந்துகள் இருந்தன. அதை கையில் எடுத்து கொண்டு சிறிது தூரம் நடந்து பின் ஷார்ட்புட் போல தூக்கி எறிவாள். கட்டிலுக்கு கீழே அல்லது பிரிட்ஜ் கீழே பந்து சென்று விட்டால், எடுக்க முடியாமல் அழுகை தொடரும்.... நாம் மறுபடி மறுபடி எடுத்து தந்தால் கவலையே படமால் மறுபடி தூக்கி எறிவாள். ஒரு அளவுக்கு மேல் பொறுமை இன்றி நாம் பந்தை ஒளித்து வைக்க வேண்டும்.

ஏதாவது ஒன்று பிடித்து விட்டால், " அகாருக்கே " (அழகாருக்கே !) என்று ரசித்து சொல்வாள்

எல்லா பொருளையும் தன்னுடையது என்று நினைக்கும் குணம் இந்த ஒரு வயதில்... எந்த பொருளாக இருந்தாலும் " என்னோது ; தம்ம மாட்டேன் " (என்னோடது; தர மாட்டேன் )

எனது நண்பன் ஸ்ரீதர் மற்றும் அவன் மனைவி ஒரு முறை நெற்றியில் பல பொட்டுகள் வைத்து கண்ணாடியில் பார்க்கும் பழக்கும் ஏற்படுத்தி விட - அது தொடர்கதையாகி விட்டது. கண்ணாடியில் ஒட்டியிருக்கும் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்து கொள்வதும், சில கீழே விழுந்தால், சில நேரம் பசை இல்லாத பக்கத்தை எடுத்து வைக்க முயன்று - தோற்பாள். சில நேரம் நம் முகத்திலும் பல பொட்டுகள் வைத்து விடுவாள்.

************
எல்லோரும் ஒரே விதமான வாழ்க்கை தான் வாழ்கிறோம் என தல சுஜாதா சொன்னது போல் இதே விதமான சில குறும்புகளை உங்கள் மகளும் செய்திருக்கலாம் ! 
************
அந்த நோட்டில் இன்னும் நிறையவே இருக்கிறது.. ஞாயிறு கணினியில் நீண்ட நேரம் அமர்ந்தால் - மகளிடமிருந்து அடி விழும்.. 

அதனால் 

மீ எஸ்கேப் !

Friday, September 20, 2013

வீடு திரும்பல்' மோகன்குமாரின் "வெற்றிக்கோடுகள்" : ஒரு விமர்சன‌ பார்வை



டிகளின் உயரம் எப்போதும் அளவோடு இருத்தல் வேண்டும். உயரம் அதிகமாக இருந்தால் ஏறுவதை தவிர்த்துவிடுவோம், குறைவாக இருக்கும் பட்சத்தில் தாண்டிச்சென்றுவிடுவோம். மோகன்குமார் வெற்றிக்கோடுகள் புத்தகத்தின் படிகளை சரியாகவே நிர்ணயத்திருக்கிறார்.

ப‌டித்து முடிக்காம‌ல் வைத்திருக்கும் புத்த‌க‌ங்க‌ளை முடித்த‌ பிற‌கே புது புத்த‌க‌ங்க‌ள் வாங்க‌ வேண்டும் என்ற‌ விர‌த‌த்தை சற்றே த‌ள‌ர்த்த‌ வைத்த‌து மோக‌ன்குமாரும், சுரேகாவும். அடைமழையில் டிஸ்க‌வ‌ரி சென்று மோக‌னையும் சுரேகாவையும் பையில் அடைத்த‌பிற‌கும் ம‌ன‌சு அலைபாய‌,ஏ.கே.செட்டியாரும், சு.காவும், சு.ராவும்,க‌.நா.சுவும்,வ‌ண்ண‌நில‌வ‌னும் இட‌ம் பிடித்துக்கொண்டார்கள்.

[Picture+002.jpg]

வீடு திரும்பியதும் கையில் எடுத்தது "வீடு திரும்பலின்" வெற்றிக்கோடு புத்த‌க‌த்தை. அதைப்ப‌ற்றி கொஞ்ச‌ம்....

புத்தக விபரம் :
வெற்றிக்கோடு
'வீடு திரும்பல்' மோகன்குமார்
அகவொளி பதிப்பகம்
விலை : 80 ரூ.

85 ப‌க்க‌ங்க‌ள் (முன்னுரை ம‌ற்றும் முடிவுரை த‌விர்த்து). 19 க‌ட்டுரைக‌ள். ச‌ட்டென்று ஆர‌ம்பித்து ச‌டுதியில் முடியும் எழுத்து ந‌டை.

"உன‌க்கு புத்திம‌தி சொல்லுற‌ அள‌வுக்கு நான் பெரிய‌ அப்பாட‌க்கர் இல்லை, என‌க்கு ந‌ட‌ந்த‌தை,நான் பின்ப‌ற்றுவ‌தை எழுத்தாக்கியிருக்கிறேன், இஷ்ட‌மிருந்தா ப‌டி, இல்லாட்டி போயி புள்ள‌குட்டிக‌ள‌ ப‌டிக்க‌ வை" என்று முன்னுரையிலேயே முத்தாய்ப்பு வைத்திருக்கிறார்.(மோக‌னின் மைண்ட் வாய்ஸ் : நாங்க‌ள்ளாம் எவ்வ‌ள‌வு பாத்திருக்கோம்!!!!!!!)

பெரும்பாலான க‌ட்டுரைகள் ந‌ம்முடைய‌ வாழ்க்கையை இடுப்பில் கேமிராவைக்க‌ட்டிக்கொண்டு ப‌ட‌ம்பிடித்தது போல‌ இய‌ல்பாய்...

வெள்ளிக்கிழ‌மை போட்டுக்கிற‌ ச‌ட்டையை ( வியாழ‌க்கிமை மழை வ‌ந்துட்டா என்ன‌ ப‌ண்ணுற‌து??) புத‌ன்கிழ‌மையே சுவைச்சி ரெடி ப‌ண்ணி வைக்கிற‌ முன் ஜாக்கிற‌தை முத்த‌ண்ணா பார்ட்டி நான், சில‌ கட்டுரைகளை படிக்கையில் சிரிப்ப‌தை த‌விர்க்க‌ முடிவ‌தில்லை.

புத்த‌க‌த்தில் பிடித்த‌ சில‌ ப‌குதிக‌ள் :

"உங்க‌ள் வாழ்க்கையின் சில‌ ப‌குதிக‌ளை நீங்க‌ள் திரும்பி பார்க்க‌வும், உங்க‌ள் வாழ்க்கைக்கு தேவையான‌ ஒரு சில‌ விஷ‌ய‌ங்க‌ள் க‌ற்றுத்த‌ர‌வும் செய்யுமானால் இந்த‌ புத்த‌க‌ம் த‌ன் க‌ட‌மையை செய்துவிட்ட‌து என்று அர்த்த‌ம்".

"முத‌லில் ஒருவர் செய்த‌ க‌ண்டுபிடிப்பை அடுத்து மெருகேற்றிய‌வர் முத‌லாம் நப‌ரைவிட‌ அதிக‌ பிர‌ப‌ல‌ம் ஆன‌து ந‌ட‌ந்துதான் உள்ள‌து".

படிக்கையில் ச‌த்துண‌வு திட்ட‌த்தை அமுல்ப‌டுத்திய‌ காம‌ராஜ‌ரும், அத‌னை பிர‌ப‌ல‌ப்ப‌டுத்திய‌ எம்.ஜி.யாரும் நினைவுக்கு வ‌ருகிறார்க‌ள்.

"முக்கிய‌ பொருள்க‌ளை எப்போதும் குறிப்பிட்ட‌ இட‌த்தில் வைப்ப‌தும் அங்கிருந்து தேவையான‌ போது உட‌னே எடுப்ப‌தும் மிக‌ச்சிறிய‌, ஆனால் ந‌ம் நேர‌த்தை நிறைய‌ சேமிக்கிற‌ விஷ‌ய‌ம்".


நான் சிர‌த்தையுட‌ன் க‌டைபிடிக்கும் விஷ‌ய‌ம் இது. 'பேக்கப் & கிளீனிங் ப்ராசஸ்' அலுவ‌க‌த்துக்கு ம‌ட்டும‌ல்ல‌,வீட்டுக்கும் சேர்த்துதான்.

நிறைமாத கர்ப்பிணி‍‍‍‍‍‍‍‍‍‍ போல‌ எப்போதும் காட்சிய‌ளிக்கும் பர்ஸிலுள்ள தேவையில்லாத விஷயங்களை நாம் கடைசியாக பிரித்தெடுத்த‌து எப்போது???

"மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் உடல் கஷ்டத்தோடு இந்த பிரச்சினை முடியும் ( நான் இன்சூரன்ஸ் ஏஜன்ட் இல்லை என்பதறிக..)" "உனக்கேன் இவ்வளவு அக்கறை" என்று நாம் யாரும் கேட்டுவிடக்கூடாதல்லவா?

"வெற்றி பெற‌,முன்னேற‌,ம‌கிழ்ச்சி கொள்ள‌ ஒவ்வொரு ம‌னித‌னுக்கும் உரிமை உண்டு.அது ந‌ம‌க்கு ம‌ட்டுமே ந‌ட‌க்க‌ வேண்டும் என‌ நினைப்ப‌து மூட‌த்த‌ன‌ம்.வாழ்க்கையும், வாய்ப்புக‌ளும் அனைவ‌ருக்கும் போது."

"உங்க‌ள் குடும்ப‌த்தார் வ‌லி,க‌ண்ணீர் உண‌ராது நீங்க‌ள் இம‌ய‌மே தொட்டாலும் அதில் எந்த‌ ப‌ய‌னுமில்லை."

"க‌ட‌வுளாலும் முடியாத‌ விஷ‌ய‌ம் ஒன்று உண்டு. ந‌டந்ததை மாற்ற அவராலும் முடியாது! "

சில சிறு குறைகள் :

செல்ல‌ அம்மாவிற்க்கு ச‌ம‌ர்ப்ப‌ண‌ம் செய்த‌வ‌ர், தாயாரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.

"பதிவு" என்ற வார்த்தையை "கட்டுரை" என்று மாற்றியிருக்கலாம், பதிவர் அல்லாதவர்கள் புத்தகத்தை படிக்கும்போது சிறு குழப்பம் ஏற்படுகிறது. என்னிடமே மேற்கண்ட கேள்வி இருவரால் கேட்கப்பட்டது.

ஒரு சில எழுத்து பிழைகள் இருப்பினும் கட்டுரைகளின் சாராம்சம் அப்பிழைகளை புறந்தள்ளிவிடுகிறது.
*************************************************************
நீடாமங்கலத்துக்காரரின் மனதில் நீங்கா நினைவாய் நீண்ட நாட்களுக்கு நிலைக்கப்போகிறது இந்த (வெற்றி) கோடு.

சக பதிவராக‌, சக சோழமண்டலத்துக்காரனாக மோகனை வாழ்த்துவதில் ஒரு தன்னிறைவு ஏற்படுகிறது...

இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள் நண்பரே....

*************************************************************

"வெற்றிக்கோடு" - செட்டியார்கடை தேன்மிட்டாய்.

*************************************************************
வெற்றிக்கோடு புத்தகம் சென்னை சென்னை அகநாழிகை புத்தக கடையிலும், டிஸ்கவரி புக் பேலஸிலும் கிடைக்கிறது.

அகநாழிகை மூலம் புத்தகம் வாங்க - வாசுதேவன் - 9994541010

டிஸ்கவரி புத்தக கடையில் நேரிலும், ஆன்லைன் மூலமாகவும் வெற்றிக்கோடு புத்தகத்தை வாங்கலாம் !

நாகரத்னா பதிப்பகம் மூலம் வெற்றிக்கோடு புத்தகம் ஆன்லைனில் பெறலாம் ! 


By
Related Posts Plugin for WordPress, Blogger...