Monday, June 27, 2011

கிளிஞ்சல்கள் பறக்கின்றன : பதிவர்கள் புத்தகவிமர்சனம்

கிளிஞ்சல்கள் பறக்கின்றன என்கிற கவிதை தொகுப்பு வித்யாசமான ஒன்று. இணையத்தில் எழுதி வரும் ஐம்பது கவிஞர்களின் கவிதைகள் ஜே. மாதவராஜ் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளி வந்திருக்கிறது. வம்சி பதிப்பக வெளியீடான இப்புத்தகத்தின் அட்டையில் வலைப்பூக்களிலிருந்து நூறு கவிதைகள் என சொல்லப்பட்டிருந்தாலும், உள்ளே இருப்பது ஐம்பது கவிதைகள் தான். (சிறு தவறு.. ஆயினும் தவிர்த்திருக்கலாம்). இந்த தொகுப்பில் உள்ள சில கவிதைகள் பற்றிய பார்வை இந்த பதிவில்..

தான் படித்த துவக்கப்பள்ளி ஒவ்வொருவர் மனதிலும் ஆழ பதிந்து விடுகிறது போலும். நீண்ட காலம் கழித்து அங்கே சென்று சில துளி கண்ணீர் விட்ட அனுபவத்தை பாலாஜி மற்றும் ஹேமா என இருவர் கவிதையாக்கியிருக்கிறார்கள்.

மழை பற்றிய பொன். வாசுதேவன் கவிதை அழகு. மழையை சிறுவர், பெண்கள், வாகன ஓட்டிகள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்று சொல்லி சென்று கடைசியில் ஒரு புன்னகையுடன் முடிக்கிறார்.

நிறைய வித்யாசமான பார்வையும் அனுபவங்களும கவிதையாகியிருக்கின்றன.

"காளை" கள் பற்றிய வடகரை வேலன் கவிதை
நகர வாழ்வும் மேலாளர் மனமும் பேசம் செல்வேந்திரன் கவிதை
"திண்ணை" குறித்த அமுதாவின் கவிதை
"காலை நேர சத்தங்கள்" பற்றிய அமிர்தவர்ஷிணி அம்மா கவிதை

இப்படி கவிதைகள் பல தளத்தில் இயங்குகின்றன.

வீட்டை விட்டு ஓடிப்போன நண்பன் திரும்ப வந்ததும் குடும்பம் மகிழ்கிறது. கவிதை எழுதும் நண்பரோ (விநாயக பெருமாள்) குறும்புடன் " நிதானமாக விசாரிக்க வேண்டும் பாதி புத்தனை" என்கிறார்.

ரயில் பயணம் குறித்தே இரு கவிதைகள் ! ரயிலின் கூட்ட நெரிசலில் வரும் வியர்வை நாற்றம் பாலமுருகன் கவிதையில் தெரிகிறது. நந்தாவின் கவிதை வார இறுதியில் வெளியூர் சென்று விட்டு திங்கள் காலை வேலைக்கு வரும் இளைஞன் ரயில் சத்தத்துடன் அலாரம் வைத்து எழுகிற அலுப்பை சொல்கிறது.

கம்பியூட்டர் இஞ்சினியர்களின் தனிமை மற்றும் வெறுமை உணர்வை எளிமையாய் பதிவு செய்கிறது ஜோ ஆனந்தின் "குகைகளில் முடியும் கனவுகள்"

ராஜாராமின் மாஜி காதலி பற்றிய "மூன்று காலங்கள்" கவிதை துவக்கத்தில் புன்னகையும் முடிவில் பெருமூச்சும் வர வைக்கிறது.

இலங்கை தமிழர் படுகொலை குறித்த ஜே. மாதவராஜ் மற்றும் தண்டோராவின் கவிதைகள் மனதை கனக்க செய்கின்றன.

தொகுப்பில் என்னை பெரிதும் கவர்ந்த கவிதைகளுள் ஒன்று யாத்ராவின் " திருவினை". தற்கொலை செய்து கொள்ள துணிந்தவனின் மன நிலையும், அவனது அந்த நேரத்து பார்வையையும் மிக சிறப்பாக வெளிப்படுத்துகிறது. கவிதையின் இறுதியில் அந்த முடிவை அவன் தொடரவில்லை என்று உணர்கிறோம்.

சில கவிதைகள் புரிபட சற்று சிரமமாகவே உள்ளது. "நினைவின் அடுக்கு" , " ஓல ரீங்காரம்" " உடையும் குமிழ்கள்" போன்ற வார்த்தைகளால் ஜல்லி அடிக்காமல் அனுபத்தை நேரே பகிர்ந்தாலே கவிஞர்களுக்கு புண்ணியமாய் போகும் !!

நிச்சயம் இந்த தொகுப்பு ஒரு வித்யாசமான அனுபவத்தை நமக்கு தருகிறது. ஒரு கவிஞரின் புத்தகம் எனில் அதில் அவரது பார்வையில் குறிப்பிட்ட அளவு விஷயங்களும் பாடுபொருள்களும் தான் இருக்க முடியும். ஐம்பது கவிஞர்கள் எனும்போது, பல விஷயங்களை வெவ்வேறு பாணியில் நாம் வாசிக்க/ ரசிக்க முடிகிறது. தொகுப்பிற்கு ஒப்புக்கொண்ட கவிஞர்களும், தொகுத்து வெளியிட்ட ஜே. மாதவராஜும், வம்சி பதிப்பகத்தாரும் அவசியம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

வல்லமை இணைய இதழில்  மே  9, 2011  அன்று வெளியான கட்டுரை

8 comments:

  1. நீங்கள் விவரித்திருக்கும் பாங்கே படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.. விரைவில் படிக்கிறேன்.

    கவிதை காதலன்

    ReplyDelete
  2. //ஐம்பது கவிஞர்கள் எனும்போது, பல விஷயங்களை வெவ்வேறு பாணியில் நாம் வாசிக்க/ ரசிக்க முடிகிறது.//

    ஆம் நிச்சயம் சுவாரஸ்யமான வாசிப்பனுபவமாக இருந்திருக்கும். பகிர்வுக்கு நன்றி மோகன் குமார்.

    ReplyDelete
  3. அன்பு மோகன்குமார்,

    என்னோட கவிதையை பத்தி சொல்லலையே நீங்க? பிடிச்ச கவிதைன்னு சொன்னதாலே... விடுபட்டிருக்கும்ணு நினைக்கிறேன்...

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  4. நல்ல விஷயத்தை எங்களுக்கு தெரிய படுத்தியமைக்கு நன்றி. நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  5. கவிதைகளில் அவ்வளவாக எனக்கு ஆர்வம் இல்லை.

    //நிதானமாக விசாரிக்க வேண்டும் பாதி புத்தனை//

    ஆனால் சற்று குறும்புத்தனம் நிறைந்திருக்கும் இந்த வரி பிடித்திருந்தது.

    ReplyDelete
  6. நல்ல பதிவு , முடிந்தால் உங்கள் பதிவை இங்கேயும் இணையுங்கள்



    www.tamil10.com
    நன்றி

    ReplyDelete
  7. நன்றி கவிதை காதலன். அவசியம் வாசியுங்கள்
    **
    நன்றி ராமலட்சுமி
    **
    ராகவன்: நன்றி. எல்லா கவிதைகளையும் ஒரே நேரத்தில் பகிர முடியாதல்லவா நண்பா? இப்பதிவின் மூலம் உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி
    **

    ReplyDelete
  8. நன்றி அமைதி அப்பா
    **
    ரகு: என்னது கவிதையில் ஆர்வம் இல்லையா? என்ன யூத், பதிவர், இளைஞர், சாப்ட்வேர் இஞ்சினீர் நீங்கள் கவிதை பிடிக்காதுன்னு சொல்லலாமா? ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...