Wednesday, September 2, 2015

வானவில் - Wangs Kitchen & சென்னை அமிர்தா - ஒரு பார்வை. ..

குறைந்த ரத்த அழுத்தம் எனும் எமன்

பொதுவாக எல்லோரும் உயர் ரத்த அழுத்தம் குறித்தே பயம் கொள்வர். சொல்ல போனால் குறைந்த ரத்த அழுத்தத்திற்கு மாத்திரைகளே கிடையாது. சாப்பாட்டில் நீங்கள் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்; காய்கறி நிறைய சாப்பிட வேண்டும் என சில உணவு முறை மாற்றங்கள் மட்டுமே..

ஆனால் குறைந்த ரத்த அழுத்தத்தில் பெரும் பிரச்சனை - மயக்கம் அடைவது தான்.. அலுவலக நண்பரின் உறவினர் இத்தகைய மயக்கத்தால் அடைந்த பாதிப்பு மிக பெரிது !

காலை நேரம் கழிப்பறை சென்றவர் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கமுற்றிருக்கிறார். கீழே விழுந்து மண்டையில் நல்ல அடி.. நிறைய ரத்த போக்கு..

சில மணி நேரம் கழித்தே பிறர் பார்த்து மருத்துவமனை கொண்டு செல்ல, அதற்குள் உயிர் பிரிந்து விட்டது..

இங்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உயிர் பிரிய வில்லை.. அது தந்த மயக்கம்.. அப்போது தலையில் பட்ட காயம் இவையே காரணம்... எனினும்.. யாரும் இல்லாத போது மயக்கம் அடைவதும் துன்பம் தானே?

குறைந்த ரத்த அழுத்தத்தை அலட்சியம் செய்யாமல் தேவையான சில எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது !

வேங்க்ஸ் கிச்சன் பில்லிங்... 

அண்மையில் Wangs Kitchen ஹோட்டல் சென்றபோது சாப்பிடுகிற ஐட்டம் ஒவ்வொன்றும் 100 முதல் 150 ரூபாய் போல் இருந்தது. சாப்பிட்டு முடித்து Bill பார்த்ததும் செம ஷாக். குறைந்தது 25 % பில் அதிகமாய் இருந்தது.  எப்படி  என கவனித்தால், செர்வீஸ் டேக்ஸ், சேல்ஸ் டேக்ஸ் போட்டு பின் சர்வீஸ் சார்ஜ் என நூறு ரூபாய்க்கும் மேல்  போட்டிருந்தனர்.இவை மட்டுமே 200 ரூபாய் தாண்டி விட்டது. சர்வீஸ் சார்ஜ் என தனியே வசூலிப்பது தான் கொடுமை ! சில இடங்களில் பார்சல் எனில் - பேக்கிங் சார்ஜ் வாங்குவர்.. அது கூட இந்த அளவு வசூலிக்க மாட்டார்கள்.. நமக்கு காட்டப்படும் விலைக்கு மேல் 2 டேக்ஸ் , சர்வீஸ் சார்ஜ், டிப்ஸ்.. இப்படி சேர்த்தால் எங்கேயோ போய் நிற்கிறது..

என்ன ஆர்கியூ செய்ய முடியும் !! இனி இந்த ஹோட்டல் பக்கம் வரவே கூடாது என்ற முடிவை மட்டும் எடுத்து விட்டு வெளியில் வந்தேன் !

ரசித்த கவிதை 

புலியைப்  போல் பயமுறுத்துகிறது
முதுமை
விரோதியைப்  போல்
உடலைத் தாக்குகிறது வியாதி

உடைந்த பானையிலிருந்து வழியும் நீர் போல்
ஒழுகுகிறது ஆயுள்.

இருந்தும் மனிதன்
நற்செயல்கள் செய்யாதிருக்கிறான்
இது அதிசயமே !  - அயல் நாட்டு கவிதை (தமிழில் மதுமிதா)

கவிதை பற்றி சில வரிகள்..

முதுமை நம்மை தொடர்ந்து விரட்டுகிறது.. எவ்வளவு நாள் இருக்க போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது; இருந்தும் கூட இருக்கும் வரை நல்லது செய்வோம் என ஏன் மனிதர்கள் நினைப்பதில்லை என கேள்வி எழுப்புகிறது இக்கவிதை.. இது சொல்லும் இந்த செய்திக்கு அடுத்து ரொம்ப பிடித்த விஷயம்... " உடைந்த பானையிலிருந்து வழியும் நீர் போல்ஒழுகுகிறது ஆயுள்" என்ற கற்பனை !

ஹெல்த் கார்னர்

நொறுக்கு தீனி என்பது உடல் எடைக்கு மிக பெரும் எதிரி. என்னை போன்ற ஆட்கள் வெயிட் போட இந்த நொறுக்கு  தீனியும் ஒரு முக்கிய காரணம். உடல் பயிற்சி செய்யாத காலங்களில் உடல் நலம் பற்றிய பிரக்ஞை இன்றி நன்கு சாப்பிடும் கெட்ட பழக்கம் வேறு ஒட்டி கொள்ளும். மாறாக தினம் ஏதேனும் ஒரு வொர்க் அவுட் செய்யும் போது இந்த நொறுக்கு தீனி சமாசாரங்களை கண்டால், ஒரு பக்கம் எடை குறைய எவ்வளவு போராடுகிறோம்; அப்புறம் இதை வேறு உண்பதா என்று சற்று தள்ளி நிற்போம்.

அலுவலகம் செல்வோர் மாலை நேரம் - நண்பர்களுடன் காண்டீன் சென்று சாப்பிடாத பட்சம் - வார நாட்களில் நொறுக்கு தீனி சாப்பிடாமலே தள்ளி விடலாம். சனி, ஞாயிறு தான் எல்லோரும் உணவுகள் - சற்று அளவுக்கதிகமாக சாப்பிடுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. வார இறுதியில் நொறுக்கு தீனி சாப்பிடுவது ஓகே. ஆனால் சற்று அளவோடு இருந்தால் நலம் !

நான் தற்போதெல்லாம் அலுவலகம் செல்லும் போதே மாலை நேரம் சாப்பிட கேரட், வெள்ளரி அல்லது கொய்யா பழம் எடுத்து சென்று விடுகிறேன். நம்மை மாதிரி 7- 8 வரை அலுவலத்தில் இருப்போர் மாலை இதை சாப்பிட்டால் இரவு வரை பசி எடுப்பதில்லை !



சென்னை அமிர்தா

சமீபத்து ரயில் பிரயாணம் ஒன்றில் இளைஞர் ஒருவர் அருகில் பயணித்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது - சென்னை அமிர்தாவில் - சைதாப்பேட்டையில் படிப்பதாக  தெரிந்தது. தனது கல்லூரியில் பல விதமான கோர்ஸ் இருப்பதாகவும் - படித்து முடித்த பின் 10,000 ரூபாய் முதல் 50,000 வரை பலருக்கும் வேலை கிடைப்பதாகவும்  கூறினார்.

சற்று நேரம் பேசிய பின் அவரது கல்லூரி பற்றி சமீபத்தில் நிறைய சர்ச்சைக்குரிய விஷயங்கள் வெளியாகிறதே என்று கேட்க, " கல்லூரி மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். அதற்கு பீஸ் கேட்டு கல்லூரி டார்ச்சர் செய்தது தான் காரணம் என செய்தி வெளியானது. ஆனால் அவனது வகுப்பு நண்பர்களே அது காரணம் இல்லை; அவனது குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தான் காரணம் என கூறுகின்றனர்" என்றார்.

செங்கல்பட்டு தாண்டி சிறு கிராமத்தில் இருக்கும் இந்த 18 வயது இளைஞர் 2 வருட படிப்பிற்கு பின் 10,000 அல்லது அதற்கும் அதிக சம்பளத்தில் வேலை  என்பதை மதிப்பு மிக்கதாய் கருதுவதில் ஆச்சரியம் இல்லை !

கிரிக்கெட் பக்கம் 

விராத் கோலி தலைமையில் இந்திய அணி இலங்கையை 2-1 என்ற அளவில் ஜெயித்தது மகிழ்ச்சிக்குரிய விஷயம். மிக எளிதில் 3-0 என நாம் வென்றிருக்க முடியும்.. முதல் டெஸ்ட் 170 ரன்னை அடிக்க முடியாமல் தோற்றது இன்னும் உறுத்துகிறது. அதை தாண்டி வந்து அடுத்த 2 டெஸ்ட் வெளிநாட்டு மண்ணில் வென்றது நல்ல விஷயம் தான்..

அஷ்வின்- மிஸ்ரா பவுலிங் காம்போ - ஓரளவு நன்றாக செட் ஆனது..

இஷாந்த் ஷர்மாவின் வெறியுடன் கூடிய பந்து வீச்சு

பேட்டிங் ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் அடித்தது.. இப்படி நிறைய பாசிடிவ்-கள்

இந்திய அணி இனியாவது புஜாராவை அவசியம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.. டெஸ்ட் மேட்ச்சில் டிராப் செய்யும் அளவு மோசமான வீரர் இல்லை. மும்பை அணியை சேர்ந்தோருக்கு ஒரு அளவுகோலும், பிறருக்கு இன்னொரு அளவு கோலும் இருப்பது அணிக்கு நல்லதல்ல..

அழகு கார்னர் 





கீர்த்தி சுரேஷ்.. இது என்ன மாயம் - என்ற பெயரில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி தியேட்டரை விட்டு 2 நாளில் மாயமாய் மறைந்த படத்து ஹீரோயின்.. அடுத்தடுத்து படங்களில் அம்மணி ரொம்ப பிசி... குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் ..

முன்னாள் நடிகை மேனகாவின் மகள் (நெற்றிக்கண்.. ராமனின் மோகனம் பாடல் நினைவிருக்கா??) மலையாள பக்கத்திலிருந்து இங்கு கரை ஒதுங்கும் இன்னொரு புது வரவு..

2 comments:

  1. இந்த பதிவு மிகவும் விறு விறு.

    ReplyDelete
  2. அருமையான பதிவு..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...