Saturday, May 26, 2012

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில அனுபவங்கள்

ஐ.பி. எல் பைனல் நடக்கும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான் பார்த்த சில மேட்ச்கள் குறித்த அனுபவத்தை பகிர்கிறேன்:


இந்தியா நியூசிலாந்து டெஸ்ட் மேட்ச் வருடம் : 1995

திருச்சியில் என் நண்பன், அங்கு நடக்கும் டிஸ்டிரிக்ட் மேட்ச்களுக்கு அம்பயர் ஆக இருப்பார். இத்தகைய அம்பயர்களுக்கு சென்னையில் நடக்கும் மேட்ச்க்கு ஒரு டிக்கெட் இலவசமாக கிடைக்கும். அவர் போக முடியாத போது அந்த மேட்ச் டிக்கெட்டை நமக்கு தந்து விடுவார். இப்படி தான் துவக்கத்தில் நிறைய மேட்ச்கள் இலவசமாக பார்த்தேன்.

இந்த டெஸ்ட் மேட்சில் பெரிய காமெடி மேட்ச் ஆரம்பிக்க சில நாள் முன் மழை பெய்தது. அதனால் கடைசி நாள் வரை மேட்ச் நடக்கவே இல்லை. அப்புறம் என்ன விசேஷம் என்கிறீர்களா? மேட்ச் நடக்குதோ இல்லையோ ஒவ்வொரு நாளும் காலை அங்கு ஒரு விசிட் அடிப்பேன். என்னை போல் சில நூறு ரசிகர்கள் மட்டும் கிரவுண்ட் வருவார்கள்.

அம்பயர் டிக்கெட் என்பது விளையாட்டு வீரர்கள் இருக்கும் அறைக்கு மிக அருகில் ! எனவே தினம் அனைத்து இந்திய வீரர்களையும் பார்க்கலாம். பார்ப்பது மட்டுமல்ல கூட்டம் மிக குறைவு என்பதால் அனைவரிடமும் நன்கு பேசலாம்.

அப்போது அசார் கேப்டன் ! அசார், கும்ப்ளே, ஸ்ரீநாத், வேங்கடபதி ராஜு, காம்ப்ளி என பலரிடுமும் மிக சாதாரணமாக பேசி, ஆட்டோ கிராப் வாங்கினேன். பேச முடியாத, ஆட்டோ கிராப் வாங்க முடியாத ஒரே நபர் சச்சின் தான் ! சச்சினை அருகில் பார்த்திருக்கிறேன். ஆனால் கிட்டே போய் பேச முடியாது. அப்போதே இந்தியாவில் மிக அதிக பாபுலர் ஆன வீரர் அவர் தான். கூட்டம் அவரை பார்க்க தான் மோதும். கூட்டம் பார்த்தாலே சச்சின் ஓடி விடுவார்.

எனக்கு வீரர்களை அருகில் பார்த்து பேசியதில் கிடைத்த ஆச்சரியம் : கும்பிளே மற்றும் ஸ்ரீநாத் சுத்த தமிழில் பேசியது தான். அதுவும் ஸ்ரீநாத் பேசும் தமிழ் நம் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த மாதிரி அவ்வளவு சுத்தம் !

ஐந்தாவது நாள் மதியம் மேட்ச் ஆரம்பித்தது. அரை நாள் இந்தியா பேட் செய்தது. சச்சின் ஒரு அரை சதம் அடித்தார். அந்த அரை நாள் டெஸ்டுக்கு மேன் ஆப் தி மேட்ச்-ம் அவர் தான். ஐந்து நாளும் சுத்தமாய் மழை இல்லா விட்டாலும் பிச் சரியால்லாமல் மேட்ச் இப்படி ஆனது ! ஒரு காலத்தில் சென்னை கிரவுண்டில் அவ்வளவு லட்சணமா மழை நீர் வடியும் வசதி (drainage facility) இருந்திருக்கு !

ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து உலக கோப்பை 1996

பகல் இரவாக நேரில் பார்த்த முதல் மேட்ச் இது. அடடா ! முதல் முறை அந்த சூழலை நேரில் பார்த்து அசந்து போனேன். மதிய நேரம் மேட்ச் ஆரம்பிக்கும். அப்போது சாதாரண சூரிய ஒளியில் ஆடுவார்கள். முதல் பேட்டிங் முடிய ஆறு மணி ஆகும். அப்போது ஒளி விளக்குகள் முழுதும் எரியும். ஆட்ட சுவாரஸ்யத்தில் எப்போது அந்த விளக்குகள் எரிய ஆரம்பித்தது என தெரியாமல் விழிப்போம். இதனாலேயே தான் ஐ. பி. எல் முதல் முறை பார்க்க போகும் நண்பர்கள் மாலை நான்கு மணி மேட்ச் பார்ப்பது சிறந்தது. நிஜ சூரிய ஒளியில் முதலிலும் பின் விளக்குகள் சூழ இரவிலும் பார்ப்பது அருமையான அனுபவம்.

சரி குறிப்பிட்ட மேட்சுக்கு வருவோம். உலக கோப்பை யில் கால் இறுதி ஒரு ஆட்டம் மட்டுமே சென்னையில் நடந்தது. அது ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து மேட்ச். முதலில் ஆடிய நியூசிலாந்து 290 ரன்கள் எடுத்தது. பின் ஆடிய ஆஸ்திரேலியா அதனை அடிக்காது என்றே நினைத்தோம். ஆனால் மிக எளிதாக அதனை அடித்து ஜெயித்தது. மார்க் வா செஞ்சுரி மற்றும் மேன் ஆப் தி மேட்ச்.

இந்த மேட்சில் மறக்க முடியாத நபர் ஷேன் வார்ன். அலுவலக நண்பர்கள் சிலர் சேர்ந்து சென்றிருந்தோம். முதலில் ஆடிய நியூசிலாந்து நன்கு அடிக்கவும், பவுண்டரி லைனில் எங்கள் அருகில் பீல்டிங் செய்த ஷேன் வார்னை கூப்பிட்டு " வார்னே ஆஸ்திரேலியா " என்று கூறி விட்டு தோற்று விடும் என்பதற்கு அடையாளமாக கட்டை விரலை தரை நோக்கி கீழே காட்டினோம். ஆனால் வார்னே " நோ நோ " என கூறி தன் கட்டை விரலை மேலே காட்டினார். எங்களிடம் இப்படி சொல்லி அடுத்த ஓவர் வார்னே வீசினார். அப்போது நன்கு ஆடிய நபரை அவுட் செய்ததுடன் மெய்டன் ஓவர் போட்டு விட்டு, எங்கள் அருகில் மீண்டும் பீல்ட் செய்ய வந்தார். இப்போது நாங்கள் அவரை பாராட்டி கை தட்ட, செம குஷி ஆகி தன் தொப்பியை மடக்கி உடலை வளைத்து எங்களுக்கு நன்றி சொன்னார்

இந்தியா Vs பாகிஸ்தான் : பெப்சி இண்டிபெண்டன்ஸ் கப் - ஒரு நாள் போட்டி - 1997

இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருடங்கள் முடிந்ததை ஒட்டி நடந்த இண்டிபெண்டன்ஸ் கோப்பை இது. இந்தியா இந்த மேட்சில் தோற்றாலும் மறக்க முடியாத ஒரு மேட்ச் அதற்கு சில காரணம் இருக்கிறது.

என் மாமா ஒருவர் மூலம் வி.ஐ.பி டிக்கெட் கிடைத்தது. அது ஒரு பாக்ஸ் டிக்கெட். சினிமா தியேட்டரில் உள்ளது போல் ஒரு கண்ணாடி அறைக்குள் சில நூறு பேர் தான் இருப்பார்கள். அங்கு பெரிய டிவி திரையும் உண்டு. டிவியில் நீங்கள் பார்க்கும் மேட்ச் அதில் முழுதும் ஒளி பரப்பாகும். ஒவ்வொரு பந்தையும் நேரில் பார்ப்பதோடு, அந்த பந்து முடிந்ததும் டிவியிலும் பார்ப்பார்கள் அனைவரும் !!

பாகிஸ்தான் முதலில் பேட் செய்து அடி அடி என அடித்தது. பேட்டிங்கில் அதுவரை கபில் அடித்த 175 தான் உலக சாதனையாக பல ஆண்டுகளுக்கு இருந்தது. அதை முறியடித்து சயீத் அன்வர் 194 ரன் இந்த மேட்சில் எடுத்தார். பாதி நேரத்துக்கும் மேல் அவருக்கு பை ரன்னர் இருந்தது குறிப்பிடத்தக்கது. முதலில் இரட்டை சதம் எடுக்கும் வீரராக அவர் ஆவோரோ என பேசி கொண்டோம். 194 ரன்னில் அவர் அவுட் ஆகி வரும் போது, மைதானத்தில் இருந்த ஒவ்வொருவரும் எழுந்து நின்று அவர் உள்ளே சென்று சேரும் வரை கை தட்டினர் ! அது தான் சென்னை மக்கள் ! சயீத் அன்வர் சொந்த ஊரில் ஆடி இந்த சாதனை செய்து விட்டு அவுட் ஆனால், எப்படி கை தட்டி ஆரவாரம் செய்வார்களோ அப்படி இருந்தது இந்த பாராட்டு !

இந்த மேட்சுக்கு காப்டன் சச்சின் ! சச்சின் காப்டன்சியை நேரில் பார்த்து வெறுத்து போனது அன்று தான் ! பவுலர் பாட்டுக்கு பவுலிங் போட இவர் பாட்டுக்கு பீல்டிங் செட் செய்கிறார். பவுலர் நடந்து வரும் போதோ, அல்லது பந்து வீச ஓட ஆரம்பித்த பிறகோ கூட, சச்சின் பீல்டருடன் பேசி கொண்டும், மாற்றி கொண்டும் இருப்பார் !

இந்தியா மிக மோசமாக இந்த மேட்சில் தோற்றது. யாரும் ஜெயிக்கும் என எதிர்பார்க்கலை. டிராவிட் அந்த மேட்சில் அதிரடியாய் ஆடி சதம் அடித்தது ஆச்சரியம்.

ஒரு உலக சாதனை நடந்த மேட்சை நேரில் பார்த்தேன் என்பதை பெருமையாக நீண்ட நாள் சொல்லும் படி இருந்தது இந்த மேட்ச் !

இந்தியா Vs பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் வருடம் : 1999

அனைவரும் அறிந்த மேட்ச். நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு டூர் வந்திருந்தது பாகிஸ்தான். முதல் டெஸ்டே சென்னையில் தான். வாசிம் அக்ரம் மிக அருமையாக பந்து வீசிய காலம். ஷோயப் அக்தர் அந்த சீரிஸில் தான் அறிமுகம்.

சென்னை டெஸ்ட் நான் ஒரு நாள் மட்டும் தான் பார்த்தேன். அன்று சிறப்பாய் ஏதுமில்லை. அடுத்த நாள் டிக்கெட் இருந்தது. ஆனால் அந்த மேட்ச் முழுக்கவே பாகிஸ்தான் இருந்ததால் வெறுத்து போய் போகலை.

கடைசி நாள் டிராமாக்களை டிவியில் பார்த்து மனம் நொந்தேன். சச்சின் மிக அருமையாக ஆடி வெற்றி கோட்டின் அருகே கொண்டு சென்று விட்டு பேக் ஸ்பாசம் காரணமாக அவுட் ஆக, அடுத்து பத்து ரன் எடுக்க முடியாமல் நான்கு விக்கட்டை இழந்து ஒரு டெஸ்ட் தோற்றோம். டிபிகல் இந்தியன் பேட்டிங் !

இதன் பின் சில ஐ. பி. எல் மேட்ச்கள் பார்த்திருக்கிறேன். எட்டு மணி மேட்சுக்கு ஆறு மணிக்கெல்லாம் உள்ளே சென்றால் தான் நல்ல சீட் கிடைக்கும். மாலை ஆறு முதல் ஏழரை வரை சிறந்த பின்னணி பாடகர்கள் துள்ளலுடன் கூடிய பாடல்களை பாட மைதானம் களை கட்டும். மேட்ச் நடக்கும் போது எழும் சத்தம், கூட்டமாய் எழுப்பும் அலை எல்லாம் பார்ப்பது ஒரு தனி அனுபவம் !

நீங்கள் இதுவரை சென்னை சேப்பாக்கத்தில் மேட்ச் பார்க்க வில்லையெனில் வாழ்க்கையில் ஒரு நல்ல அனுபவத்தை தவற விடுகிறீர்கள் என்று அர்த்தம்.

12 comments:

  1. நேரிடையாக மேட்ச் பார்க்கும் அனுபவமே தனிதான்.நானும் ஒரு சில மேட்ச்சுகள் பார்த்திருக்கிறேன்.சார்ட்டில் எழுதிவைத்துக் காட்டி அதை டி.வி. இல் பார்த்து மகிழ்ந்ததும் உண்டு.
    கிரிக்கெட்டை விரும்பாதவர்கள் கூட மாட்ச் பார்க்கத் தூண்டும் வண்ணம் எழுதி இருக்கிறீர்கள். நன்று. .

    ReplyDelete
  2. உங்க அனுபவமே தனிதான்...இது வரைக்கும் நான் நேரில் பார்த்ததே இல்லைங்க..

    ReplyDelete
  3. எதை எடுத்தாலும் கண்ணில் காட்சியாக மாறும் அளவுக்கு எழுத்தில் கொண்டு வந்து விடுறீங்க.

    ReplyDelete
  4. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. As usual an excellent post.
    Now a days, it is for watching , events other than the match we have to visit the stadium.
    What with so many scandals, one has lost interest.

    ReplyDelete
  6. நேற்று வாங்கிய 30 2 2012 ஆனந்த விகடனின் 'என் விகடனின்' வலையோசையில் உங்கள் வலைப்பூவைப்பார்க்கப் புரட்டினால் ஒரு ஆச்சரியம். அதில் பா. ராஜாராம் என்பவரின் வலைப்பூ ' கருவேல நிழல்' என்பதைப் பற்றி வந்திருக்கிறது! http://karuvelanizhal.blogspot.in

    இது எப்படி என்று புரியவில்லை? இது உங்களுக்குத் தெரியுமா?

    ReplyDelete
  7. முரளி: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  8. கோவை நேரம் சார்: நன்றி சென்னை வரும்போது ஒரு முறை மேட்ச் பார்க்க முயற்சி பண்ணுங்க

    ReplyDelete
  9. ஜோதிஜி: உங்கள் வார்த்தைகள் மிக மகிழ்ச்சி தருகிறது நன்றி

    ReplyDelete
  10. நன்றி ரத்னவேல் ஐயா

    ReplyDelete
  11. வெற்றிமகள் மேடம்: உண்மை தான் நன்றி

    ReplyDelete
  12. மனோ மேடம்: என் விகடன் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பதிப்பு. என்னை பற்றிய தகவல் திருச்சி , தஞ்சை பதிப்பில் மட்டும் வந்துள்ளது. இணையத்தில் விகடன் வாசித்தால் அனைத்து ஊர்களின் என் விகடனும் வாசிக்கலாம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...