Tuesday, January 22, 2013

தஞ்சை விவசாயி வாழ்க்கை -பேட்டி -படங்கள்

மீபமாய் தஞ்சைக்கு மிக அடிக்கடி செல்ல நேர்கிறது. உடல் நலமில்லாத அம்மா, உறவினர் விழாக்கள் என தஞ்சை மட்டுமின்றி மன்னார்குடி, வடுவூர், கோட்டூர் என பல ஊர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் பயணம் செய்துள்ளேன் . டிசம்பர், ஜனவரி மாதங்களில் வயல்கள் சற்று பசுமையாய், செழிப்பாய் இருப்பதாய்த் தான் தோன்றியது. ஆனால் கோட்டூர் அருகே உள்ள ஊரில் விவசாயி ஒருவரிடம் பேசியபோது விவசாயம் பற்றி மிக வருத்தத்துடன் பேசினார். அவர்கள் பேசியதில் இருந்து சில பகுதிகள் :



என்னோட பேர் ராமமூர்த்தி. நாப்பது வருஷமா விவசாயம் பண்றேன் 

தஞ்சை, நாகை அதை சுற்றியுள்ள இடங்கள் விவசாயத்துக்குன்னு புகழ் பெற்ற இடங்களா ஒரு காலத்தில் இருந்தது இங்கு மூன்று போகம் அறுவடை செய்த காலம் ஒன்று உண்டு. அப்புறம் அது இரண்டு போகம் ஆச்சு. இப்போ சம்பான்னு ஒரு போகம் தான் அறுவடை நடக்குது. ("போகம் என்றால் என்ன" என்று தெரியாதவர்களுக்கு மட்டும் : ஒரு முறை நடவு நட்டு, நான்கு மாதம் கழித்து அறுவடை செய்வது தான் ஒரு போகம் . இப்படி வருடத்துக்கு மூன்று முறை அமோகமாய் அறுவடை செய்த நிலை மாறி, வருடத்துக்கு ஒரே முறை தான் அறுவடை செய்கிறார்களாம் பல விவசாயிகள் !)

சில பேர் இப்போ ரெண்டாம் போகமா உளுந்து போடுறாங்க.. உளுந்து போடணும்னா, மார்கழி ஆரம்பத்தில் (டிசம்பர் இறுதிக்குள் ) நெல் அறுவடை முடிச்சிட்டு, மார்கழி கடைசிக்குள் போட்டா தான் உண்டு. இல்லாட்டி சரியா வராது. தை மாசம் நெல் அறுவடை செய்பவர்கள் உளுந்து போட முடியாது.

" இப்போதெல்லாம் ஆள் வச்சு வேலை வாங்க முடியலை. ஒரு ஆள் சம்பளம் குறைஞ்சது 300 ரூபா ஆகுது. நாள் முழுசும் வேலையும் இருக்காது. ஆனா இந்த அளவாவது பணம் குடுத்தா தான் அவங்களால் வரமுடியும். ஏன்னா ஒரு நாளைக்கு இங்கு வந்துட்டா அப்புறம் மதியத்துக்கு மேலே வேற எங்கும் அவங்க வேலைக்கு போக முடியாது இல்லையா? "

இப்போ எல்லாம் எல்லா வேலைக்கும் மெஷின் வந்துடுச்சு. விதையை தெளிக்க மட்டும் ஒரு ஆள் இருந்தா போதும். அதை முழுக்க நிரவி விட மெஷின் இருக்கு. அப்புறம் களை இருந்தா எடுக்க ஆள் வேணும். அவ்ளோ தான். உரம் தூவுறது எப்பவுமே ஒரு ஆள் செய்ற வேலை தான். அறுவடைக்கே மெஷின் வந்துடுச்சு. கதிரை அறுத்து நெல்லை தனியா மெஷின் பிரிச்சு கொடுத்துடும்.

ஆளுங்களை வச்சு வேலை வாங்குறதை விட மெஷினில் வேலையை முடிக்கிறது ஈசியாவும், செலவு கம்மியாவும் ஆகுது . இதனால் மனுஷனை வச்சு வேலை வாங்கறது ரொம்ப குறைஞ்சிடுச்சு. விவசாய வேலையை மட்டுமே நம்பி அவங்களால் வருஷம் முழுக்க இருக்க முடியாது. இப்ப விவசாயமே நாலஞ்சு மாதம் மட்டும் தானே நடக்குது ! அதனால் பல பேரு மெட்ராசு, திருப்பூர் இப்படி ஊர்களுக்கு வேலைக்கு போயிடுறாங்க. சொந்த நிலமும் இல்லாம, இங்கேயே விவசாய வேலை மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கிற ஆட்கள் மிக குறைவு தான்
அந்த ஊரில் உள்ள சிறு பாலம் மற்றும் ஆறு
"எல்லா நேரமும் நெல் மட்டும் தான் பயிர் செய்யணுமா? கரும்பு போடக்கூடாதா? " என்று கேட்க, " இங்கு களிமண் பூமியாக இருப்பதால் கரும்பு அவ்வளவு நல்லா வராது. வந்தால் கூட, அதை விற்பதற்குள் போதும் போதும்னு ஆகிடும். ஏதாவது சர்க்கரை ஆலையிடம் தான் கரும்பை வாங்கி கொள்ள சொல்லி கேட்கணும். அவர்கள் கட்டிங் ஆர்டர் தரணும் (கரும்பை எப்போது வெட்டலாம் என்கிற ஆர்டர் சர்க்கரை ஆலை காரர்கள் தான் சொல்வார்களாம் ! இது தான் கட்டிங் ஆர்டர் ) 

கமிஷன் வாங்கணும்குற எண்ணத்தில் வேணும்னு கட்டிங் ஆர்டர் தாமதம் பண்ணுவாங்க. இதெல்லாம் ஒரு முறை பார்த்தா வெறுத்து போயி அப்புறம் கரும்பு சாகுபடி பண்ணவே தோணாது “

"நெல் சாகுபடி பண்ற வங்களை பொறுத்தவரை, கொஞ்சம் நிலம் இருக்கவங்க பாடு தான் ரொம்ப கஷ்டம். அஞ்சு, பத்து ஏக்கர் வெவ்வேறு இடத்தில் இருந்தா ஒரு இடத்தில் சரியா விளையாட்டியும், தண்ணி இல்லாட்டியும் இன்னொரு இடத்தில் நல்லா விளைஞ்சிடும் அதனால் நஷ்டம் வராம தப்பிச்சுடுவாங்க"

"அறுவடை முடிஞ்சவுடன் அவங்கவங்க வீட்டுக்கு தேவையான அளவு நெல்லை எடுத்துக்கிட்டு, மீதியை அரசாங்கமே அதுக்குன்னு வச்சிருக்கும் கடை மூலமா விப்போம். நெல் மூட்டை வரிசையா அங்கு அடுக்கி கிடக்கும். நெல்லில் ஈரம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு அதுக்கு தகுந்த படி விலை நிர்ணயம் செய்யும். வேண்டாத ஆளு அல்லது அப்பாவி மனுஷன்னா அதிக ஈரம்னு சொல்லி கம்மி விலைக்கு எடுத்துக்குவாங்க"
நடுவில் சாலை.. இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வயல்வெளிகள் 
"சாதாரண விவசாயிக்கு மிக முக்கிய பிரச்சனை ஆற்றில் தண்ணி இல்லாதது தான். நிறைய விவசாயிகள் ஆத்து நீரை தான் நம்பியிருக்கோம். நிறைய நிலம் வச்சிருக்க ஆளுங்க தான் போர்வெல் போட முடியும். அதுக்கு அம்பதாயிரம் பணம் செலவாகிடும். சாதாரண ஆட்களால் இவ்ளோ செலவு பண்ணி போர்வெல் போட முடியாது. "

"மேட்டூர் அணை எப்ப திறப்பாங்கன்னு பொறுத்து தான் நாங்க வயலுக்கு தண்ணி பாய்ச்ச முடியும். இப்ப கூட நாலு நாளில் மேட்டர் அணை திறப்பாங்கன்னு ரேடியோ நியூசில் சொன்னாங்க. கதிர் நல்லா வர்ற வரை ஒவ்வொரு ஸ்டேஜிலும் பயிருக்கு நல்லா தண்ணி தேவை".

"மழையும் இப்போல்லாம் ரொம்ப குறைஞ்சுடுச்சு அதுவும் இந்த வருஷம் மிக மோசம். மழை அதிகம் இருந்தா கூட பயிர் தப்பிச்சுக்கும். சாயாது. ரொம்ப பெரிய புயலா இருந்தா தான் பயிர் சாயும். ஆனா தண்ணி இல்லாம படுற கஷ்டம் தான் பெரும் கஷ்டமா இருக்கு. யாரை குத்தம் சொல்றது ? அரசாங்கத்து கிட்டே தண்ணி இல்லை. இருந்தா திறந்து விடுவாங்க. காவிரியில் நமக்கு வேண்டிய தண்ணியை கர்நாடகா காரங்க திறந்து விட மாட்டேங்கு ங்குறாங்க. அதை விட்டா கூட இவ்ளோ பிரச்சனை இருக்காது"

வெறும் விவசாயத்தை நம்பி இருக்க முடியாதுன்னு ஆகிடுச்சு. இதோ இவர் இப்போ ஒரு பெட்டி கடை வச்சிருக்கார் நான் கோவில் வேலை செய்றேன்

விவசாயத்தில் லாபம் இல்லைன்னு தெரிஞ்சு தான் எல்லாரும் நிலத்தை பிளாட் போட்டு விக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்படியே போனா பெரிய ஆளுங்க மட்டும் தான் நம்ம தமிழ் நாட்டில் விவசாயம் செய்வாங்க. ஏற்கனவே அரிசி ஆந்திரா மாதிரி பல மாநிலத்தில் இருந்து வருது இது இன்னும் அதிகம் ஆகிடும்

"அடுத்தடுத்த தலைமுறையில் யாரும் விவசாயம் செய்யப்போறதில்லை மத்த தொழில் மாதிரி இல்லையே இது. வேற சின்ன தொழில் அழிஞ்சா, அது அழிஞ்சதுன்னு வருத்தம் மட்டும் தான் இருக்கும் ஆனா விவசாயம் அழிஞ்சா அது எல்லாரையும் தானே பாதிக்கும் ? "

என்று கேள்வியுடனே தன் பேச்சை முடித்தார்.

அவரிடம் பேசி முடித்து விட்டு திரும்ப வரும்போது நெல்லை ஜெயந்தாவின் இந்த கவிதை திரும்ப திரும்ப மனதில் ஓடி கொண்டிருந்தது.

தஞ்சையில் நஞ்சை உண்டு
சாகுபடி ஆனது

தஞ்சையில் நஞ்சை உண்டு
சாகும்படி ஆனது !


******
அதீதம் ஜனவரி 15, 2013 பொங்கல் சிறப்பிதழில் வெளியான கட்டுரை 

32 comments:

  1. இன்றைய டெல்ட விவசாயியின் நிலைய
    மிகத் தெளிவாகச் சொல்லிப் போகும் பதிவு
    மனம் தொட்டது என்பதை விட மனம் சுட்டது
    என்பதுதான் மிகஸ் சரியான வாசகமாக இருக்கும்
    அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விவசாயிகளின் இன்றைய நிலையையும் வேதனையையும் உணர வைக்கிற பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலட்சுமி மேடம்

      Delete
  3. விவசாயிகளின் இன்றைய வேதனையான நிலையை உங்கள் கட்டுரையும் கடைசியில் பகிர்ந்த கவிதை அப்படியே சொன்னது.

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் வணக்கம்

      Delete
  4. விவசாயிகளின் நிலை வேதனையை தருகிறது.

    ReplyDelete
  5. கோட்டூர் பகுதியில் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதையும் சொல்லி இருக்கலாமே..?

    ReplyDelete
    Replies
    1. ஆம். குறித்திருக்கலாம் !

      Delete
  6. இதுவரை நீங்க எடுத்த பேட்டிகளிலேயே இதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது, அருமை.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நன்றி அமைதி சாரல்

      Delete
  7. விவசாயம் தான் வாழ்கையின் முக்கிய ஆதாரமான தொழில். அதுவே நலிந்து போகிறது!! இது மிக கொடுமை.. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, பயிர் தொழிலுக்கான மேம்பாட்டையும் கவனிக்கவேண்டும்!!!

    போகம் - எனக்கு இன்று தான் முழுமையான அர்த்தம் புரிந்தது.. நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. //தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, பயிர் தொழிலுக்கான மேம்பாட்டையும் கவனிக்கவேண்டும்!!! //

      Very true !!

      Delete
  8. periya vethanai sir
    romba azhahana pathivu

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாவா ஷெரிப்

      Delete
  9. விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வரும் அவலம் வேதனைக்குரியது. இந்த அவலம் திருச்சி மாவட்டம், நொச்சியம் முதல் மணச்சநல்லூர் வரை இருக்கும் காவிரி பாசன விளைநிலங்கள் வேகமாக வீட்டு மனைகளாக மாறிவருகின்றன. மீண்டும் ஒரு தாது பஞ்சம் வந்து விடுமோ என்ற அச்சம் வருகிறது.

    ReplyDelete
  10. விவசாயிகளின் இன்றைய சூழலை சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்! இறுதியில் கவிதைவரிகள் கலங்க வைத்தன! அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
  11. முப்போகமும் நன்றாக விளைந்தாலே உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது என்பார்கள்...தற்போது ஒரே போகம் என்றால்...வேதனைதான்.

    யாரை குற்றம் சொல்ல?

    நஷ்டமான தொழிலில் விவசாயம் எப்போதோ சேர்ந்து விட்டது. அதனால் தான் பாரம்பரியமாக விவசாயம் பார்த்த எங்கள் குடும்பம் எல்லாம் அதை விட்டு விட்டு தற்போது கடையில் அரிசி வாங்கி தற்போது சாப்பிடுகிறோம்.

    ReplyDelete
  12. நெல்வயல்களை பார்க்கும்போது பசுமையாக மகிழ்ச்சியாக இருக்கின்றது. இனிமேல் இவற்றை எங்கு காண்போம் என்ற ஏக்கம்தான் வருகின்றது.

    விவசாயிகளின் நிலையை நினைத்தால் அதைவிடக் கொடுமை. :(

    ReplyDelete
  13. விவசாயிகளின் நிலையை தெள்ளத் தெளிவாக விளக்கி சொல்லியிருக்கிறார். இறுதி கவிதை மனதை கனக்க வைத்தது. நானும் தற்போது படித்து கொண்டிருக்கும் புத்தகத்தின் கருப்பொருளும் விவசாயிகளின் நிலை தான்....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ரோஷினி அம்மா? நன்றி

      Delete
  14. //அடுத்தடுத்த தலைமுறையில் யாரும் விவசாயம் செய்யப்போறதில்லை மத்த தொழில் மாதிரி இல்லையே இது. வேற சின்ன தொழில் அழிஞ்சா, அது அழிஞ்சதுன்னு வருத்தம் மட்டும் தான் இருக்கும் ஆனா விவசாயம் அழிஞ்சா அது எல்லாரையும் தானே பாதிக்கும் ? "//
    நிச்சயமான உண்மை இதை அரசாங்கம் மட்டுமல்ல பொது மக்களும் உணரவேண்டும் இனிமேல் எவ்வளவு சலுகை தந்தாலும் விவசாயம் செய்வாராகளா என்பது சந்தேகமே.

    ReplyDelete
  15. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. நேரமில்லை. இரவு தனித்தனியே பதில் சொல்கிறேன்

    ReplyDelete

  16. தஞ்சை விவசாயி வாழ்க்கை -பேட்டி -படங்கள்

    அருமையான பதிவு. நன்றி திரு மோகன் குமார். எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வேதனையான நிலைமை. நேற்று இதே விஷயத்தை திருமதி Krithika Tharan எழுதியிருந்தார். அவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். கால்வாய் சீரமைப்பு பற்றி அவர் விவரமாக எழுதியிருந்தார். அரசாங்கமும், ஆண்டவனும் கண் திறக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

      Delete
  17. அருமையான இதயம் தொட்ட பேட்டி,, இறுதிக்கவிதை பதிவின் மகுடம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி உமா மேடம்

      Delete
  18. நன்றி சார்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...